‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்ற சொல்லாடல் மீதான விமர்சனம்! – மு. அப்துல்லா

    ‘மால்கம் எக்ஸ் ஒரு விபச்சாரத் தரகனாக, கொகைன் அடிமையாக, இரக்கமற்ற கிளர்ச்சி செய்பவனாக இருந்து வந்திருக்கிறார். அவரது செய்தி என்பது வெறுப்பு. ‘உங்கள் சிறிய குழந்தைகளுக்குப் போலியோ வரும்’ என்று ‘வெள்ளை பேய்களை’ பார்த்து சாபம் கொடுத்திருக்கிறார். ‘வாக்குச் சாவடி கைகொடுக்காவிட்டால், துப்பாக்கி கைகொடுக்கும்’ என்றார். வன்முறையே அவரது கோட்பாடு. ஆனால், தோட்டா துளைத்த அவரது உடல் புதைவதற்குள், அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். நீக்ரோ* தலைவர்கள் அவரை சிறந்த சிந்தனைவாதி என்பார்கள். அவர் சமீபத்தில் இலகுவானார் என்று சமாளிப்பார்கள். ‘வெள்ளை அதிகார கட்டமைப்பே’ படுகொலைக்குக் காரணம் என்பார்கள். அவ்வாறே, ‘எதிர்ப்பாளர்களுக்குப் படுகொலை மூலம் பதில் சொல்லும் நோயுண்ட சமூகம்’ என்றார் மாட்டின் லூதர் கிங்.’

    அமெரிக்கக் கறுப்பினத் தலைவர் மால்கம் எக்ஸ் படுகொலையைத் தொடர்ந்து, பிரபல ‘டைம் இதழ்’ (மார்ச் 5, 1965) இவ்வாறு அவர் இறப்பைப் பதிவு செய்தது. கட்டுரைக்கு அவர்கள் வைத்த தலைப்பு ‘மரணம் மற்றும் மடைமாற்றம்’ (Death and Transfiguration). கட்டுரையின் இந்தத் தொடக்கத்தைத் தாண்டி, ஒவ்வொரு துணைத் தலைப்புகளும், பேசுபொருளும் அவரைக் ‘கீழ்த்தரமான வன்முறையாளர்’ என்று நிறுவுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இன்றும், கறுப்பின மக்களின் அரசியல் போராட்டத்தில் முதன்மை அடையாளங்களுள் ஒருவர் மால்கம் எக்ஸ். ‘அவரின் உண்மை முகம் இதுதான்’ என்ற டைம் இதழின் சித்தரிப்பிற்குப் பின், செய்தியோ, புதிய தகவல்களோ ஏதும் இல்லை. மாறாக, அமெரிக்க நிலத்திற்கே உரிய வெள்ளை நிறவாதம், அதை உற்பத்தி செய்து, அதன்வழி அமைந்த பொருளாதார மற்றும் கலாச்சார சுரண்டல்களின் வெளிப்பாடு இருந்தது.

    ‘கறுப்பர்கள் இயல்பாக கிரிமினல்கள், அசிங்கமானவர்கள் என்ற பொது மனநிலை உள்ளது. அதற்கு ஏற்றதுபோல்தான் போலிஸ் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், இன ஒதுக்கல், நிற வெறுப்பு, பாகுபாடு ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் கறுப்பின மக்களுக்கு எதிரான கொடூரமான வன்முறைகளைச் சாதாரண வெள்ளையர்கள் கூட இயல்பாக நினைக்கிறார்கள். கறுப்பர்களுக்கு எதிரான எத்தகைய வன்முறைக்கும் இங்கு பொது ஆதரவு உள்ளது’ என்று கொலை செய்யப்படுவதற்கு சில நாட்கள் முன்பு தனது லண்டன் பயண உரையில் குறிப்பிட்டார் மால்கம் எக்ஸ்.

    இயல்பான வெள்ளை சமூகத்தின் அழுக்காய், வன்முறையாய் கறுப்பர்கள் இருக்கிறார்கள். ஆதலால், இங்கு போலிஸ் அமைப்பு எந்த நிலையையும் சாராத நடுநிலையாக இல்லாமல், கறுப்பர்கள் மேல் சிறப்புக் கவனம் செலுத்தும் இனமயப்பட்டதாகவே இருக்கிறது. எனவே, கறுப்பர்கள் மீதான தீவிர எச்சரிக்கை உணர்வும், அதற்காக போலிஸ் அமைப்பு கைக்கொள்ளும் நடவடிக்கைகளும் வரலாற்று நிலையிலிருந்து தொடர்ந்து வருகிறது. ஜார்ஜ் ஃபிளாய்ட் (George Floyd) படுகொலை, இந்த வன்முறையைக் காட்சிகளில் அம்பலப்படுத்தியது. இது, வெள்ளை பொது மனநிலையைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்கியது. இல்லையென்றால், அது அன்றாட குறிப்புகளில், சிறிய திரட்சிகளில் கடந்து செல்லப்பட்டிருக்கும்.

    அமெரிக்காவின் கட்டமைப்பு ரீதியான வெறுப்பு அரசியலை மால்கம் எக்ஸ் கேள்வி எழுப்பினார். இவற்றைக் காக்கும் பிரதான விஷயங்களில் ஊடக பிரச்சாரம் இருப்பதாகத் தொடர்ந்து வலியுறுத்தினார். அவர் இறப்பை ஒட்டிய ‘டைம் இதழ்’ கட்டுரையும் அதை மீண்டும் உறுதிப்படுத்தியது. அதில், மால்கம் எக்ஸ் பற்றித் தெரியாத கருத்து ஒன்றும் இல்லை. அவரின் ஆரம்பக்கால வாழ்க்கை பற்றி, அவரே பல இடங்களில் பதிவு செய்துள்ளார். கறுப்பின போராட்டத்தின் தொடக்கத்தில் இருந்த கறுப்பு தேசியம், வெள்ளை இனத்திற்கு எதிரான தூய்மைவாதம் போன்ற கருத்துகளிலிருந்து, பின்னாட்களில் அவர் வந்தடைந்த நிலைப்பாடுகள் வரை பல்வேறு பரிணாமங்களின் வளர்ச்சியாகவே அவர் வாழ்க்கை இருந்துள்ளது.

    இதில், காலகட்ட ரீதியாகக் கவனம் செலுத்தி, நேர்மையாக ஒரு வரையறையை டைம் இதழ் மேற்கொள்ளவில்லை. மாறாக, மொத்தமாக சேற்றை வாரி இறைத்தது. பின்பு, இதற்காக மன்னிப்பு கேட்டார்கள் என்பது வேறு விஷயம். குடியேற்றக் காலனியான (Apartheid Colonialism) அமெரிக்கா, இன அழிப்பு என்ற வன்முறையோடு தொடங்கியது. அதற்கு, அது சொல்லும் நியாயம் மக்கள் நாகரிகமடைய (civilized) வேண்டிய தேவை உள்ளது என்பதாகும். நாகரிகமடையாதவர்கள் என்று சொல்லப்படும் மக்களை ஆள்வதன் அல்லது அழித்தொழிப்பதன் மூலம் நாகரிகமான நவீன அரசியல் தொடங்குகிறது. உலகம் முழுக்க மறுமலர்ச்சி, புத்தொளி என்றெல்லாம் சொல்லப்பட்டு உருவான அரசியலின் பிரதான பண்புகளாக இவை இருந்தன. பொருத்தமாக, அமெரிக்க மண்ணில் இதைக் கேள்வியெழுப்பிய மால்கம் X-யிடமிருந்து தனது ‘பின்காலனிய நினைவேக்கம்’ நூலைத் தொடங்குகிறார் நிஷாந்த்.

    ‘நாம் வாழும் காலத்தைப் புரிந்துகொள்வது’ என்று பரவலாக விவாதித்துக் கொண்டிருப்போம். நாம் வாழும் காலத்தின் சமூக-பொருளாதார சூழல் எவ்வாறு உள்ளது? அதில், ‘பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், வர்க்க வேறுபாட்டால் அமைந்த சுரண்டல்கள், பகுத்தறிவுக்கு எதிரான மதங்கள், அதுவழியில் அமைந்த மூடநம்பிக்கைகள், இனங்களின் உரிமையை மறித்து நிற்கும் ‘மேலாதிக்க கற்பிதங்கள்’ ஆகியவை செயற்பட்டு வருகின்றன.’ இவ்வாறு, ஒவ்வொருவரும் அவரது சிந்தனை அல்லது அரசியல் இயக்க செயற்பாடுகளுக்கு ஏற்ப விளக்குவார்கள்.

    ‘மரபார்ந்த ‘பிற்போக்குத்தனங்களிலிருந்து’ மாறுபட்டு, அரசியல் வளர்ச்சியடைந்துள்ள, அறிவியல் முன்னேற்றம் கண்டுள்ள காலத்தில் நாம் வாழ்கிறோம். இந்த உறுதியோடு, தொழிலாளர் சுரண்டல், அடிமை முறை, உலகப் போர்கள், இன அழிப்பு வன்முறைகள், குடிபெயர்வுகள், பெண்கள், மத மற்றும் இன சிறுபான்மையினருக்கு எதிரான நிரந்தர வன்முறைகள் ஆகியவை இந்த மறுமலர்ச்சிக் காலத்தின் அவமானங்களாக உள்ளன. நாம் வாழும் சூழலின் கரும்புள்ளிகள். நாகரிக காலத்தில் நடக்கும் நாகரிகமற்ற செயல்கள்’ என்று கருதுகிறோம். இவ்வாறு, நாம் பார்ப்பது இரண்டு நிலைகளுக்கு இட்டுச் செல்கிறது. ஒன்று, இன்று நம்மை நிர்வகிக்கும் உலக ஒழுங்கிற்கு ஒரு தாராள இடம் கொடுக்கிறோம். ஆதலால், இரண்டாவதாக அதில் நிகழ்ந்துகொண்டிருக்கும் வன்முறைகளை யதேச்சையான நிகழ்வாக, துரதிஷ்டவசமான சம்பவமாகப் பார்க்கிறோம்.

    இதன் மூலம், மறுமலர்ச்சிக்கு முந்தைய காலத்தில் பொன்னுலகம் இருந்தது என்ற கற்பனைக்காக இங்கு வாதாடவில்லை. மாறாக, நாம் வாழும் காலம், நாம் கொண்டாடும் முன்னேற்றம், வளர்ச்சி, அறிவு மயம் ஆகியவற்றோடு சேர்ந்தே இங்கு நிகழும் வன்முறைகள் தோன்றின. தொடர்ந்து வருகின்றன. ஒருவிதத்தில், இன்றைய முன்னெப்போதும் காணாத ‘முன்னேற்றத்திற்கு’ மேற்கூறிய வன்முறைகள் அடிப்படையாகவும், அவசியமாகவும் இருந்து வந்துள்ளன.

    எனவே, நம் காலத்தைப் புரிந்துகொள்வது என்பது, நாம் முகம் சுழிக்கும் செய்திகளைக் கண்டிப்பதோடு, குறைபட்டுக்கொள்வதோடு மட்டும் நின்றுவிடவில்லை. மேலாக, இனம், நிறம், மதம், தேசம், பண்பாடு, உரிமைகள் என நாம் நம்மை இங்கு உள்ளும் புறமுமாகப் பொருத்திக்கொண்டுள்ள பண்புகளைக் கேள்வி கேட்பதிலிருந்து, இன்றைய காலத்தில் அவை எவ்வாறு வினை புரிகின்றன என்பதை அறிவதிலிருந்து தொடங்குகிறது.

    ‘தேசம், தேசியம், அரசு’ (Nation, Nationalism and State) ஆகிய பண்புகள் அடிப்படையில் இன்றைய உலகம் சுழல்கிறது. ‘ஒரு தேச-அரசு எவ்வாறு செயற்படுகிறது?’ என்ற கேள்வியைப் பிரதானமாக முன்வைத்து தனது நூலில் உரையாடுகிறார் நிஷாந்த். வர்க்கங்களுக்கு முற்பட்ட காட்டுமிராண்டி** சமூகம், இனக்குழு குட்டி சமூகங்கள், வர்க்க இறுக்கம் உருவாதல், நிலவுடமை மற்றும் மதங்களின் ஆதிக்க சமூகங்கள் என்ற வரலாற்று மாற்றத்தின் வழித்தோன்றலாக, தேச-அரசு (Nation-State) அடிப்படையிலான இன்றைய சமூகம் இருக்கிறது. குறிப்பாக, இன்றைய தேச-அரசிற்கான முன் நிபந்தனையாக முற்பட்ட சமூகங்கள் இருந்து வந்துள்ளன என்கிற ‘கறார் இயங்கியல்’ பேசும் தோழர்கள் உண்டு.

    முந்தைய சமூகங்கள் அனைத்தும் சில பண்புகளை (நிஷாந்த் மொழியில் திணைகள்) கொண்டிருந்தன. அதேபோல், இன்றைய தேச-அரசு வடிவமும் அதற்குரிய பண்புகளைக் கொண்டுள்ளது. இதில், நாடு, எல்லைகள், குடிமக்கள், குடியுரிமை, குடியேறிகள், இறையாண்மை, சகிப்புத்தன்மை, மதச்சார்பின்மை (Secularism) என ஒரு தேசத்தின் உள்ளடக்கமாக இருக்கும் பொருண்மைகளை ஆய்வுக்கு உட்படுத்துகிறார் நிஷாந்த்.

    இதன் அடிப்படையிலான இன்றைய அரசியலை, கல்விப்புலங்களில் ‘அரசியல் நவீனம்’ (Political modernity) என்று அழைக்கிறார்கள். அதைவிட, நமது இலக்கியப் புலங்களிலும், சமூக வலைத்தள உரையாடல்களிலும் பிரபலமாக உள்ள ‘பின்நவீனம்’ (Postmodernity) என்ற சிந்தனை உரையாடுவதற்கு பேன்ஸியாக உள்ளது. பின்நவீனம் நவீனத்தின் தீமைகளைக் கேள்வி எழுப்பியது. ஆனால், அதன் இருப்பு மற்றும் தோற்றுவாய் என்ற விதத்தில் மவுனமாகத் தேங்கியது. தமிழ் இலக்கியச் சூழலில் எழுந்த நவீன அரசியல், பின்நவீன பாவனைகள் பற்றிய உரையாடல்களை இதனோடு ஒப்பிடலாம்.

    அ. மார்க்ஸ், எஸ். வி. ராஜதுரை, வ. கீதா போன்ற முன்னோடி சிந்தனையாளர்களின் உரையாடல் தொடர்ச்சியே இந்த நூல். அதேநேரத்தில், வெவ்வேறு பொருள்கள், குறிப்பிட்ட எல்லைகள் என்ற அளவில் அடைபட்ட அவர்களின் பங்களிப்புகளை விசாலமாக்கியிறார் நிஷாந்த். அந்தவகையில், பின் நவீனம், பின் அமைப்பியல் போன்ற கிளைகளை விட, அதைத் தாங்கிக்கொண்டிருக்கும் ‘அரசியல் நவீனம்’ என்ற வேரிலிருந்து உரையாடலைத் தொடங்குகிறார். நவீன அரசியல், இன்றைய உலக நிலை, நாம் வாழும் காலம் போன்ற நம்முடைய உடனடி தேவைகளை புரிந்துகொள்ள, சிறந்த அறிமுகமாகவும், முழுமையான விளக்கம் தருவதாகவும் ‘பின்காலனிய நினைவேக்கம்’ நூல் இருக்கும்.

    தேசம், தேசியம், அரசு!

    இந்தியச் சூழலில், அந்நிய பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு எதிராகத் தோன்றிய சுதேசி மக்களின் எழுச்சியின் வடிவம் இந்தியத் தேசியம் என்று அறியப்படுகிறது. எனவே, தேசியம் என்ற நிலை புரட்சிகரமானதாக, விடுதலையை நோக்கியதாகப் பார்க்கப்படுகிறது. மேற்கத்தியச் சூழலில், மத ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, தனித்தனி விடுதலை அரசுகளாகத் தேசம் தோன்றியது. தேசத்தின் தவிர்க்க முடியாத அல்லது தவறிய விளைவால் காலனியம் தோன்றியது என்று பேசுவதுண்டு. எனவே, காலனியத்திற்குப் பின் தோன்றியதாக, காலனியத்திற்கு முன் தோன்றியதாகக் கருதும் இருசாராரும் தேசியத்தை ஒரு நவீன மற்றும் மாற்றத்திற்கான நிலையாகப் பார்க்கிறார்கள்.

    ஆனால், தேசம், தேசியம் என்ற நிலை காலனியத்திற்கு முற்பட்டதோ, பிற்பட்டதோ அல்லாமல் காலனியத்தோடு உடன்பட்டது என்று குறிப்பிடுகிறார் அரசியல் கோட்பாட்டாளர் மஹ்மூத் மம்தானி. தேசமும் காலனியமும் ஒன்றுக்கொன்று தங்களை உருவாக்கிக்கொண்டன என்கிறார். எனவே, காலனியம் அதிகாரமிக்கது, அதற்கு எதிரான தேசியம் அதிகார எதிர்ப்பு கொண்டது என்ற வகைமை வரலாற்றில் அர்த்தபூர்வமாக இருந்ததில்லை. ஒருவிதத்தில், ஆதிக்கத்திற்கு எதிரான தேசியம் என்ற நிலை, சமத்துவ சிந்தனையாளர்களைத் திசைதிருப்பப் பயன்பட்டிருக்கிறது. அது, மற்றொரு ஆதிக்கத்தை நிறுவ வழிவகுத்துள்ளது. தேசத்தின் பிறப்பு அதைத்தான் உணர்த்துகிறது.

    1492-ம் ஆண்டு, ஐபீரியப் பகுதியில் முஸ்லிம் கட்டுப்பாட்டில் இருந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது கிறிஸ்தவ கஸ்டிலிய முடியாட்சி. அந்த அரசு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, ஒரு நிலப்பகுதிக்குள் ஒற்றைப்படை மக்களை உருவாக்கும் திட்டத்தை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆதலால், முஸ்லிம்கள், யூதர்கள் போன்ற பிற கலாச்சார, இறையியல் நம்பிக்கை கொண்ட மக்களைக் கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம் செய்வதன் மூலமோ, அல்லது அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதன் மூலமோ, அழுக்குகளைப் போக்கி ‘தூய அரசை’ தோற்றுவித்தது. பின்னாளைய, அனைத்து தேச அரசுகளின் ஒரே பண்பாக இந்த ஒற்றைப்படை (Monolithic) மக்கள் குழுக்களை உருவாக்கும் நீண்டகால நோக்கம் இருந்தது. இங்கிருந்து தேச-அரசு தொடங்குகிறது என்கிற மம்தானி, என்ரிக் டஸ்ஸல் போன்ற காலனிய நீக்கச் சிந்தனையாளர்களின் கருத்தை வலியுறுத்துகிறார் நிஷாந்த்.

    சிலுவைப் போரை ஒட்டி போப்பாண்டவரின் ‘தூய ரத்தத்திற்கான அறைகூவல்’, பின்னாளைய இந்த முடிவுக்கு ஆதாரமாக இருக்கலாம் என்கிறார். ஐரோப்பா அல்லது கிறிஸ்தவ ஆதிக்கம் மேலோங்கிய நிலங்களில் யூதர்கள் வெறுக்கத்தக்கவர்களாக, வெளியேற்றப்பட வேண்டியவர்களாக இருந்தனர். இந்த மாதிரி கிறிஸ்தவ தேசங்களுக்கான மரபைக் கொண்டிருந்தது.

    1648-ம் ஆண்டு ஐரோப்பாவில் நிறைவேற்றப்பட்ட ‘வெஸ்ட்ஃபாலியா ஒப்பந்தம்’ (Peace of Westphalia) ஒரு தேசத்திற்கான முழு வடிவமைப்பைத் தருகிறது. ஒரு தேசம் என்பது நில அடிப்படையில் வரையறுக்கப்பட்டது. நிலத்தின் பெரும்பான்மை மக்கள் அந்த நிலத்திற்குச் சொந்தக்காரர்களாகவும், சிறுபான்மையினர் தேசத்திற்குப் பெயரளவுக்குச் சொந்தக்காரர்களாகவும் மாறினர். இதன் மூலம், ஒரு தேசத்தின் பூர்வீகர்கள் – அயலானோர் என்ற பொருளும் சேர்ந்துகொண்டது.

    ஒரு தேசம் அதன் பூர்வீகர்கள், பெரும்பான்மையினரின் முழுமுதல் உரிமைக்கு உரியது. இந்த ஒழுங்கை சிதைக்காத வண்ணம் தேச எல்லைகளும், கடின சட்டங்களும் தோன்றலாயின. ஒரு தேசத்திற்குள் உள்ள சிறுபான்மையினரைப் பெரும்பான்மையினர் சகித்துக்கொண்டு (Tolerance) போக வேண்டும் என்ற வாக்குறுதியை வெஸ்ட்ஃபாலியா ஒப்பந்தம் உறுதியளித்தது. சகிப்புத் தன்மை என்ற ‘அறப் பண்பை’ பெரும்பான்மையினர் கையில் கொடுத்தன் மூலம், அவர்கள் இயல்பாக அனைத்து உரிமைகளும் பெற்றவர்களாக மாறினர். சிறுபான்மையினர் அவர்களின் சகிப்புத்தன்மைக்குப் பாத்தியப்பட்டவர்களாக, உரிமைகளை இழந்து சலுகைகளுக்காகக் கையேந்தி நிற்பவர்களாக மாறினர்.

    சிறுபான்மையினர் மீது பெரும்பான்மையினர் காட்டும் சகிப்புத்தன்மைக்கு முன் நிபந்தனையாக, ஒரு தேசத்தின் பெரும்பான்மையினர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவ்வாறு சிறுபான்மையினர் நடந்துகொள்ள வேண்டும். இந்த இடத்தில் இறையாண்மை (Sovereignty) என்ற பண்பு தோன்றுகிறது. ஒரு தேசத்தின் பெரும்பான்மையினர், தான் அந்த தேசத்திற்கு உரியவர் என்ற தனது இறையாண்மையை, எங்கும் நிரூபிக்கத் தேவையில்லை. ஆனால், சிறுபான்மையினர் எல்லா இடத்திலும் தனது இறையாண்மையை நிரூபித்துத் தீர வேண்டும். ஒரு தேசத்தின் இந்த பொருண்மை பின்னாட்களில் நடந்த அனைத்து இன, மத, மொழி அடிப்படையிலான அரசியல் வன்முறைகளுக்கும் இட்டுச் செல்கிறது.

    இதன் ஒவ்வொன்றையும் பல்வேறு நிலங்களில் நடந்த உதாரணங்களோடு கோடிட்டுக் காட்டுகிறார் நிஷாந்த். ‘தேசம் என்பதை எந்த நிலையிலும் ஏற்க முடியாது, முற்போக்கு, பிற்போக்கு, இடது, வலது என அனைத்துவித தேசங்களும் ஆதிக்கத்தை மறு உற்பத்தி செய்கின்றனவே தவிர, மீட்சியைக் கோரவில்லை. காலனியம் மற்றும் ஆதிக்க தேசத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களை ஒரு தேசமாகக் கருதி, விடுதலை அரசியலை முன்னிறுத்துவது கூட நவீனத்துவ அதிகாரங்கள் தோற்றுவித்த தவறான பார்வையே தவிர, தீர்வு அல்ல. மொழி, இன தேசியங்கள் போன்றவை கூர்மையான சமத்துவ மரபை தங்களுக்கான அடையாளமாக முன்னிறுத்தினாலும், அது தேசம் என்ற வடிவில் மறு ஆதிக்கத்திற்கே வழி பார்க்கிறது.’ இவ்வாறு, நிஷாந்த் பேசும் அதிர்ச்சியான மதிப்பீடுகள் ஏராளம். அனைத்திற்கும் உரியக் காரணங்களை நூல் முழுக்க எடுத்துக்காட்டியுள்ளார்.

    இனம், மதம், நாகரிகம்!

    ஒரு தேசத்தில் நடக்கும் இனங்களுக்கு இடையேயான பாகுபாடு, வன்முறைகள் என அனைத்தும் நவீனக்காலத்தில் ஒரு இனத்திற்கோ, மதத்திற்கோ முழு அதிகாரத்தை கொடுத்துள்ளது. அவை, அந்த தேசத்தில் உள்ள பெரும்பான்மை சமூகம், பூர்வீகத்தை உரிமை கோரும் மத, இனமாக இருக்கிறது. இதற்கு அர்த்தம், முற்காலங்களில் இன, மத மோதல்களே இல்லை என்று ஆகிவிடாது. மாறாக, இனங்கள் மற்றும் கலாச்சார வித்தியாசங்கள் எந்தளவிற்கு அரசியல் அதிகாரங்களாகக் கூர்மைப் பெறுகின்றன. அது, ஒரு நிலத்தின் குறிப்பிட்ட இன மற்றும் கலாச்சாரத்திற்கு முற்றதிகாரத்தை கொடுக்கின்றன என அதன் நவீன அரசியலின் பிறப்பிலிருந்து இந்த நூல் கவனப்படுத்துகிறது.

    ஒரு நிலத்தின் பூர்வீகர்கள் என்ற பொருளில் இல்லாமல், பூர்வீகர்கள் என்று கருதப்படுவோர் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையிலும் தேசங்கள் உருவாகியுள்ளன. அதுவே, அமெரிக்கா போன்ற குடியேற்ற நாடுகள். செவ்விந்தியர்களின் இன அழிப்பு தொடங்கி, கறுப்பின அடிமைமுறை, இனவெறுப்பு வன்முறைகள் என பல்வேறு வன்முறையோடு அமெரிக்கா உருவானது. அதற்கு அவர்கள் சொல்லும் நியாயமே நாகரிகம். ‘இன்றைய உலக ஒழுங்கு அனைத்திற்கும் வட அமெரிக்கத் தோற்றம் சிறந்த உதாரணம்’ என்பார் மம்தானி.

    கறுப்பின அடிமை முறை முதலாளித்துவ உழைப்பு சுரண்டலுக்காக ஏற்பட்ட உடலுழைப்பின் தேவையாக மட்டும் இருக்கவில்லை. மேலும், நவீனத்துவத்தின் இனமய வெறுப்பு அரசியலுக்கும், அதற்கு நியாயம் கற்பிக்கும் நாகரிகமயத்தின் விளைவாகவும் இருந்துள்ளது.

    ‘வர்ஜினியாவின் முதல் கறுப்பினத்தவர் ஒப்பந்தப்படி, ஐரோப்பாவிலிருந்து கொண்டுவரப்பட்ட வெள்ளை பணியாளர்களைப் போன்றே கறுப்பின பணியாளர்கள் இருந்தார்கள் என்று சில வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள். மிக வலுவான சாத்தியக்கூறு என்னவென்றால், அவர்கள் பணியாளர்களாகவே பட்டியலிடப்பட்டாலும் (மேற்கத்திய வழக்கப்படி மிகப் பரிச்சயமான வகைப்பாடு), அவர்கள் வெள்ளை பணியாளர்களிடமிருந்து வித்தியாசப்பட்டவர்கள். கறுப்பினத்தவர் வித்தியாசமாக அணுகப்பட்டனர். உண்மையில் அவர்கள் அடிமைகள். எதுவானாலும், புதிய உலகில் அடிமைமுறை என்பது ஒரு முறைப்படியான நிறுவனமாக மாறியது’ என்கிறார் அமெரிக்க மக்கள் வரலாறு எழுதிய ஹாவார்டு ஜின்.

    உழைப்புச் சுரண்டல், நிறவெறி, இன அழிப்பு போன்றவற்றிற்கான காரணமாக , ‘நாகரிகமடையாத மக்களை நாகரிகரிப்படுத்த வேண்டிய தேவை’ உள்ளது என்று சொல்லப்பட்டது. இதுவே, காலனியாதிக்கத்தின் முதன்மை தர்க்கமாக இருந்தது. ஒருவிதத்தில், காலனியத்திற்கு எதிராகத் தோன்றியதாகக் கருதப்படும் தேசியமும் இந்த தர்க்கத்திற்கு உடன்பட்டது. ‘சாதிய ஏற்றத்தாழ்வுகள், மோசமான வாழ்நிலை ஆகியவை இந்திய நிலத்திற்கு உரிய இயல்பு. அதை, ஐரோப்பாவின் சமத்துவ கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டியதில்லை. சொல்லப்போனால், சமத்துவம் என்ற நிலையை ஒற்றைப்படையாகப் பார்க்கக் கூடாது. இந்தியர்கள் வாழ்நிலையில் அவர்கள் விரும்பி ஏற்றுக்கொண்டு, அவர்கள் அளவில் சமத்துவத்திற்கான சமூகநிலையைக் கொண்டிருக்கிறார்கள்’ என்று ஓரியண்டலிஸ சிந்தனையாளர்கள் பேசினார்கள்.

    நாகரிகமடையாத மக்களை ஆள்வதை, காலனிய சிந்தனையாளர்கள் காலனிய அரசின் தாராளவாத குணம் என்ற அளவிற்குப் பிரச்சாரம் செய்தனர். ஒருவகையில், இதற்குப் படித்த உயர்சாதி சிந்தனையாளர்கள் கொண்ட பிரதிபலிப்பே இந்து சீர்திருத்த இயக்கத்திற்கும், இந்தியத் தேசியத்திற்கும் இட்டுச் சென்றது. ‘நாகரிகமான காலனியத்திற்கு முன் இந்துமதம் வலுவிழந்து இருக்கிறது. ஆனால், ஒருகாலத்தில் நமது வேத சமூகம் நாகரிக வளமும், அறிவு செழிப்பும் கொண்டிருந்தது. அது, இன்று பிரிட்டிஷ் நவீனத்திற்கும், சீர்திருத்தத்திற்கும் தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று முழுமுதலான இந்தியத் தேசியத்திற்கான வரைவை ராஜாராம் மோகன்ராய் கொடுத்தார்.

    ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்று அறைகூவல் எழுப்பிய மேற்குதான் காலனியத்தின் மூலம் ஆதிக்கம், உழைப்புச் சுரண்டல், அடக்குமுறை, அடிமைமுறையைத் தோற்றுவித்தது. இந்த முழக்கம் எழுந்த அதே பாரிஸிலிருந்து ‘நாகரிகத்திற்கான இயக்கம்’ (Civilizing mission) தோன்றி செயற்பட்டது. பிரிட்டனுக்கு இணையாக கொடும் காலனிய வன்முறைகளை பிரான்ஸ் நிகழ்த்திக் காட்டியது. இந்துமத சீர்திருத்தம் என்ற பெயரில் இந்து மீட்சியை மேற்கொண்ட இந்தியாவின் சிந்தனையாளர்கள், மேற்கின் அதே காலனிய, நவீன முறையைக் கொண்டு இந்தியத் தேசிய அரசைத் தோற்றுவித்தனர். அது, இந்து தேசியம் என்ற பெயரில் இன்று தனது முழு மேலாதிக்கத்தையும் நிறுவியுள்ளது. இந்த நூலில், ஐரோப்பாவிலேயே நாகரிகமடையாததாக கருதப்பட்ட சமூகங்கள் தொடங்கி உலகம் முழுக்க இருந்த அனுபவங்கள் விளக்கப்பட்டுள்ளது.

    ‘செக்யுலரிஸம்; அரசியல் நவீனத்துவத்தின் புனிதப் பசு’ என்ற அத்தியாயம், இந்த நூலில் மிக முக்கியமான, எனது மனம் கவர்ந்த ஒன்றாக இருக்கிறது. செக்யுலரிஸம் எனும் பொருளில் உள்ள விமர்சனமாக இதைப் பார்க்காமல், செக்யுலரிஸம் என்ற பெயரில் இதுவரை உலகில் நடந்த அரசியல் அதிகாரங்கள், வெறுப்பு அரசியல், சிறுபான்மையினர் பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரங்கள் ஆகியவற்றை விரிவாக விவாதிக்கிறார் ஆசிரியர். இந்தியச் சூழலில் சிலவற்றைச் சொல்லவேண்டும் என்றால், இந்தியத் தேசிய காங்கிரஸ் என்ற செக்யுலர் கட்சியின் தோற்றம், அதன் செயற்பாடு ஆகியவை நமக்கு முக்கிய உதாரணங்கள்.

    வங்கப் பிரிவினையின் போது, யார் உண்மையான வங்காளிகள் என்ற விஷயத்தில், ‘வங்காள இந்துக்களின் விருப்பத்திற்கும், அரசியல் ஈடுபாட்டிற்கும் முழுவதுமாக உடன்பட்டுப் போகிறவர்கள்’ என்றார் காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான சுரேந்திரநாத் பானர்ஜி. இந்துக்கள் இயல்பாக வங்காளிகள், அவர் எதிராக குறிப்பிட்டுப் பேசிய முஸ்லிம்கள் அதற்கு இணங்கும் விதத்தில் இங்கு சுமுகமான செக்யுலர் அரசியல் உறுதிப்படும்.

    ‘1940-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் செக்யுலரிஸ அரசியல் தீவிரமடைந்தது’ என்று இந்த நூலில் குறிப்பிடபட்டுள்ளது. முஸ்லிம் லீகின் அரசியல் திரட்சி முதல் தலித்துகள், தென்னிந்தியச் சூழலில் திராவிட அரசியல் குரல்கள் வரை எழுச்சிப் பெற்ற காலமாகவும் அது இருந்தது. ஒருவகையில், ஒருபடித்தான இந்தியத் தேசியத்திற்கு எதிராக ஏற்பட்ட அறைகூவலில், அதைக் காக்க காங்கிரஸின் சிறந்த கருவியாக செக்யுலரிஸம் இருந்துள்ளது. 1946-ம் ஆண்டு இடைக்கால அமைச்சரவையில், முஸ்லிம் லீகை சேர்ந்தவரும் நிதியமைச்சருமான லியாக்கத் அலிகான், நிலச் சீர்திருத்தச் சட்ட முன்வரைவை முன்மொழிந்த போது, ‘இந்தியாவின் பெரும்பான்மையாகவுள்ள இந்துக்களைப் பழிவாங்க இந்த சட்டத்தை லீக் கொண்டுவருகிறது’ என்று குற்றம் சுமத்தி, தொடர்ந்து, அமைச்சரவையைக் கலைக்கக் காரணமாகியது செக்யுலர் மற்றும் சோசலிஸ காங்கிரஸ். எனவே, செக்யுலர் என்பது பெரும்பான்மையினரின் அரசியல் அதிகாரம் மற்றும் நலனிற்கு உட்பட்ட மத நிர்வாகமே தவிர, மதநீக்கம் கொண்ட நிலையாக இருந்ததில்லை.

    தேசியம் என்ற நவீனத்திற்கு உடன்படாத முஸ்லிம் மதச் சாய்வாளர்களின் பழமைவாத எண்ணமே தேசத்தை மறுக்க வைக்கிறது, பாலஸ்தீனத்தின் விடுதலையை எவ்வாறு அளவிடுவீர்கள், சூழலைப் பொருத்தே போராட்டமும், தீர்வும் அமையும். நவீனக்காலத்தில் நவீன பிரச்சனைகளுக்கான தீர்வுகளை அதற்குள்தான் தேட வேண்டும், பார்ப்பனிய ஆதிக்கத்தை ஒப்பிடும்போது பிரிட்டிஷ் காலனியம் மீதான உடன்பாடு, தமிழரின் முற்கால அற வாழ்வியல், அனைத்து சமூகத்தின் ஒருங்கிணைவாகக் கோரும் ‘தமிழ் தேசியம்’, இந்தியா என்ற பார்ப்பனிய-பனியா ஆதிக்கத்திற்கு எதிரான தேசிய இனங்களின் விடுதலைப் போன்ற பல்வேறு பொருட்களுக்கான நேர்மறை, எதிர்மறை விடையை, விளக்கத்தை இந்நூல் உங்களுக்குத் தரும். நமது அரசியல் சூழல் பற்றிய புதிய அறிமுகத்தையும், ஒரு முழுமையான பார்வையும் அளிக்கும். முரண்பட, விவாதிக்க, விமர்சிக்க, பதில் அளிக்க என நீண்ட உரையாடலை ஏற்படுத்தும். ஆனால், அவை அனைத்தும் நாம் வாழும் சூழலிலிருந்து விலகளாக, உள்ளீடான தரிசனமாக, ஆழ்மன ஞானமாக அல்லாமல், நம் அன்றாட போக்கிலிருந்து நம்மை ஆட்படுத்தும்.

    • மு. அப்துல்லா

    பின்குறிப்புகள்

    *நீக்ரோ என்ற வெறுப்புச் சொல், டைம் இதழின் நேரடி மேற்கோள் எனும் விதத்தில் இந்த கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. டைம் இதழ் மீதான விமர்சனத்தின் ஒருபகுதியாக, அச்சொல் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது.

    **காட்டுமிராண்டி என்ற சொல் பொது மனநிலையின் பிரதிபலிப்பு எனும் அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நேரடி சொல்லாடலில் அவ்வாறு குறிப்பிடுவது கூட நவீன உலகின் மேட்டிமை பார்வையிலிருந்து வருகிறது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.