சங்கரபுரமும், வணத்தியும்: ’இட்லி கடை’ மற்றும் ’பைசன்’ திரைப்படங்கள் கட்டமைக்கும் ’கிராமம்’ எனும் வெளி! – அருண் பிரகாஷ் ராஜ்

தலித்திய நோக்கில் இருந்து காந்தியின் மீது முன் வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று, அவர் காலனியம் அறிமுகம் செய்த நவீனத்திற்கு மாற்றாக இந்திய கிராமங்களின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புகளையே தான் உருவாக்க விரும்பும் ராம ராஜ்ஜியத்திற்கு முன் மாதிரியாகக் கொண்டிருந்தார் என்பது. கிராமங்களைப் பற்றிய இத்தகைய கண்ணோட்டத்தை இந்தியாவைச் சுற்றி பல முறை மேற்கொண்ட பயணங்களில் இருந்து மட்டும் காந்தியார் உருவாக்கிக் கொள்ளவில்லை. மாறாக, கிராமங்களை இந்தியாவின் ‘ஆன்மா’வாகவும், அவை பல நூற்றாண்டுகளாக எந்த மாற்றங்களையும் சந்திக்காத, கலப்படமற்ற வெளியாகவும் கற்பனை செய்திருந்த பல கீழைத்தேயவாதிகளின் (orientalists) கருத்துக்களும் காந்தியைப் பாதித்திருந்தன. எனவேதான், தன்னுடைய தென்-ஆப்பிரிக்கா நாட்களில் இருந்தே இந்திய கிராமங்களைப் பற்றி உயர்வான மதிப்பீடுகளை முன் வைத்தார் காந்தி. 

கிராமங்கள் பற்றிய காந்தியின் புரிதலுக்கு நேர் எதிரானது அம்பேத்கரின் பார்வை. பண்பாடு, கலாச்சாரம், ஊர்க் கட்டுப்பாடு போன்ற பெயர்களில் தலித்துகளை உரிமைகளற்றவர்களாக, தீண்டப்படாதவர்களாக நீடிக்க செய்து, அன்றாடம் அவர்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தும் வெளியாகவே அவர் கிராமங்களைக் கருதினார். எனவேதான், அரசியலமைப்பு நிர்ணய சபை விவாதத்தின்போது இவ்வாறு அம்பேத்கர் பேசினார்:

“நான் கூறுவது, இந்தக் கிராமக் குடியரசுகள் தான் இந்தியாவின் அழிவுக்குக் காரணம். எது கிராமம்? அது ஒரு உள்ளூர்ச்சிந்தனையின் கழிவுநிலம்; அறிவிலியின் குடில்; குறுகிய மனப்பான்மையும், சமூகவெறியும் தங்குமிடம் அல்லவா?”

தமிழ் சினிமாவானது, கிராமம் குறித்தான இவ்விரு முரண்பட்ட பார்வைகளையுமே திரையில் பிரதிபலித்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும். அமைதியான வாழ்க்கை, இன்பமான கூட்டுக் குடும்ப அமைப்பு, இயற்கை வளம், தற்சார்புப் பொருளாதாரம் முதலிய அம்சங்கள் நிறைந்ததாக கிராமங்களும், இதற்கு முற்றிலும் நேரெதிரான குணாதிசயங்கள் கொண்டதாக நகரங்களையும் பல திரைப்படங்கள் சித்தரித்திருக்கின்றன. இதற்கு ’பட்டிக்காடா பட்டினமா’ (1972), ‘சகலாகலா வல்லவன்’ (1982), ’தம்பிக்கு எந்த ஊரு’ (1984), ’வள்ளி’ (1993), ‘மகாநதி’ (1994), ’கடைக்குட்டி சிங்கம்’ (2018), ’கடைசி விவசாயி’ (2021), ‘பறந்து போ’ (2025) முதலான திரைப்படங்கள் உதாரணம். கிராமம் குறித்தான இத்தகைய உயர்வான சித்திரத்தையும் மதிப்பீட்டையும் கேள்விக்கு உட்படுத்துகிற வகையிலும், ’அலைகள் ஓய்வதில்லை’ (1981), ’தேவர் மகன்’ (1992), ’கருத்தம்மா’ (1994), ’வின்னர்’ (2003), விருமாண்டி (2004), காதல் (2004), போன்ற படங்களும் அவ்வவப்போது வெளியாக தவறுவதில்லை. (’காதல்’ திரைப்படத்தின் கதை மதுரையில் நடந்தாலும், கிராமத்தின் இயல்பு கொண்டதாக மதுரை நகரம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது)

எனினும், இத்திரைப்படங்களைக் காட்டிலும், இவ்வருடம் வெளியான ‘இட்லி கடை’ மற்றும் ‘பைசன்’ படங்கள், கிராமங்கள் குறித்து காந்தியும் அம்பேத்கரும் கொண்டிருந்த இரு முரண்பாடான பார்வைகளை மிக நுட்பமாக திரை வெளியில் கட்டமைத்திருக்கின்றன. 

தனுஷின் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளியான ‘இட்லி கடை’ மிக வெளிப்படையாகவே காந்தியின் லட்சிய கிராம வாழ்க்கையை சித்தரிக்க முயல்கிறது. மதுரைக்கு அருகில் இருக்கும் சங்கரபுரத்தில் இட்லி கடை நடத்தும் சிவநேசன், அகிம்சை கொள்கையைப் பின்பற்றும் ஒரு காந்தியவாதி. தன்னுடைய உணவகத்தில் கிரைண்டர், மிக்சி போன்ற ‘நவீன’ உபகரணங்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு, அம்மியிலேயே இட்லி மாவையும், சட்னியையும் அரைப்பார். எந்த இயந்திரங்களும் இன்றி, பாரம்பரிய முறையில் சமைப்பதுதான் தன்னுடைய உணவின் அற்புத சுவைக்கு காரணம் என சிவநேசனும், கிராமத்து மக்களும் நம்புகிறார்கள். 

தந்தையின் சமையல் கலையின் மீது ஈர்ப்பிருந்தாலும், சிவநேசனின் மகன் முருகன், பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என ஆசைப்படுகிறான். எனவே, படித்துவிட்டு, வெளிநாட்டில் உள்ள ஒரு பெருநிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறான்.  பிறகு, அந்நிறுவன முதலாளியின் மகளையே காதலித்து, திருமணமும் செய்துக் கொள்ளவிருக்கிறான். திருமணத்திற்கு சில வாரங்கள் முன்பாக அவனது பெற்றோர்கள் இறந்து விடுகிறார்கள். ஊருக்குத் திரும்பும் முருகன், தன்னுடைய திருமணத்தை நிறுத்திவிட்டு, வெளிநாட்டு வேலையையும் உதறிவிட்டு, தந்தையின் இட்லி கடையைத் தானே எடுத்து நடத்த முடிவெடுக்கிறான். இம்முயற்சியில் எதிர்படும் வெவ்வேறு சவால்களைக் கடந்து, எவ்வாறு முருகன் தனது இட்லி கடையை வெற்றிகரமாக நடத்தினான் என்பதே இப்படத்தின் கதை.

அகிம்சை, நவீன உபகரணங்களை நிராகரித்தல், தற்சார்ப்பு பொருளாதாரம், பாரம்பரிய மீட்டெடுப்பு போன்ற பரவலாக அறியப்படும் காந்தியக் கொள்கைகளை, மிக மேலோட்டமாக பேசியிருப்பதோடு, காந்திய வழியில் கிராமத்தைப் பொன்னுலகமாக கற்பனை செய்துள்ளது ‘இட்லி கடை.’ இந்தக் கிராமத்தில் வசிக்கும் அனைத்து மக்களுமே உள்ளூரைவிட்டு வெளியேற விருப்பமற்றவர்கள். எனவேதான், சம்பாதிக்க வெளிநாடு சென்ற முருகனை, தொடக்கத்தில் கிராமத்தார்கள்  வெறுத்தார்கள். ஆனால், தனது தந்தையின்  கடையை அவன் மீட்டெடுப்பதைக் கவனித்ததும், அவர்கள் முருகனை அரவணைத்துக் கொண்டாடுகிறார்கள். வெளிநாட்டு முதலாளியால் அவன் பாதிக்கப்படுகையில், அவனுக்கு ஆதரவாக திரள்கிறார்கள். முருகனும், சுதந்திரமற்ற நிறைவற்ற வெளிநாட்டு வாழ்க்கையை விட, உள்ளூரில் இட்லி கடை நடத்தும் வாழ்க்கையே உயர்வானது என உறுதியாக நம்புகிறான். இவ்வாறு, மாற்றத்தையும், வளர்ச்சியையும் நிகழ்த்திட விரும்பாத, கடந்த காலத்தில் உறைந்துப் போன அதிசய கிராமமான சங்கரபுரத்தில் சாதியும் கிடையாது என்பது மற்றொரு வியப்பு.

சங்கரபுரம் போன்ற சாதியற்ற கிராமம் இதுவரை தமிழ் சினிமா  பார்த்திருக்குமா என தெரியவில்லை. சாதியை தனது நேரடி பேசுபொருளாக கொண்டிருக்காத பிற கிராமத்து திரைப்படங்கள்கூட, வெளிப்படையாகவோ, குறியீட்டு ரீதியாகவோ கதாநாயகன் அல்லது பிற முக்கிய கதாப்பாத்திரங்களின் சாதியை சுட்டிக்காட்டுவதுண்டு. ஆனால், சாதி பற்றிய எந்தவொரு சிறிய  குறிப்பையும் தவிர்த்துள்ள ‘இட்லி கடை’, சாதியற்ற அல்லது சாதி நீக்கம் செய்யப்பட்ட சங்கரபுரத்தையே திரையில் உருவாக்கியிருக்கிறது. இங்கிருக்கும் மனிதர்கள் யாரிடமும் எந்த சாதிய அடையாளமும் கிடையாது. சாதி பற்றி எந்த கவலையும் இல்லாதவர்களாகவே சங்கரபுரத்துக்காரர்கள் இருக்கிறார்கள். இவ்வகையில் தான், எதார்த்ததோடு தொடர்பற்ற, காந்தியின் கற்பனாவாத (utopian) கிராம சுயராஜ்ஜியத்திற்கு இணக்கமாக இருக்கிறது சங்கரபுரம். 

’இட்லி கடை’யை, கமல் ஹாசனின் ‘தேவர் மகன்’ திரைப்படத்தோடு ஒப்பிட்டு பார்ப்பதையும் தவிர்க்க முடியவில்லை. இரண்டு படங்களுக்கும் நிறைய ஒற்றுமைகளும், மாறுபாடுகளும் இருக்கின்றன. ’இட்லி கடை’யின் முருகனை போலவே, தேவர் மகனான சக்தி வேலும், வெளிநாட்டில் இருந்து சொந்த கிராமத்திற்கு வந்து, சூழ்நிலை காரணமாக உள்ளூரிலேயே நிரந்தரமாக தங்கிவிடுகிறான். தன்னுடைய நவீன பழக்க வழக்கத்தை முற்றிலுமாக மாற்றிக் கொண்டு, மரபை/பண்பாட்டை முழுமையாக அரவணைத்துக் கொள்கிறான்.  முருகனைப் போலவே, சக்தி வேலும் தான் காதலிக்கும் நகரந்த  ’நவீன’ பெண்ணுடனான உறவை முறித்துக் கொண்டு, சொந்த சாதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்கிறான். இத்தகைய ஒற்றுமைகள், இரு படங்களுக்கு இருந்தாலும் சில துள்ளியமான வேறுபாடுகளையும் நம்மால் கவனிக்க முடிகிறது. ’தேவர் மகன்’ திரைப்படத்தில் களமான தூவலூர் கிராமம் காந்திய இலக்கணப்படி அத்தனை அமைதியானது அல்ல. தேவர் சமூகத்தை சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான மோதல் தூவலூர் ஜனங்களை அன்றாடம் பாதித்துக் கொண்டிருக்கிறது. குடும்ப/குல கௌரவத்தைக்  காப்பாற்ற மோதிக் கொண்டு, ஒருவரையொருவர் கொல்ல வேண்டாம், கல்வி எனும் நவீனத்தை தழுவங்கள் என தேவர் மகன் உபதேசிக்கிறது. எனினும், சுயசாதி பெருமிதம், தேவர் சமூகத்திற்கு உள்ளேயே உள்ளூரில் நிலவும் சமூகநிலை அடுக்குகள், நிலப்பிரபுத்துவ மனநிலை – இத்தகைய விசயங்களை கொண்டாடி, தான் சொல்ல வந்த மைய கருத்தை சிதைத்திருக்கிறது தேவர் மகனின் திரைக்கதை. ஆனால், ’இட்லி கடை’யிலோ சாதி மட்டும் மறைக்கப்படவில்லை. அது சித்தரிக்கும் சங்கரபுரத்தில், வேறு எவ்விதமான சமூக – பொருளாதார ஏற்ற தாழ்வுகளும் காணப்படவில்லை. ஒருபடித்தாயிருக்கும் (homogenized) சமூக அமைப்பே அந்த அதிசய கிராமத்தில் நிலவிகிறது. 

கிராமம் பற்றிய சித்தரிப்பில் ‘இடலி கடை’க்கு நேரெதிராக இருக்கிறது மாரி செல்வராஜின் ’பைசன்’. இன்னும் சரியாக கூற வேண்டுமானால், கிராமம் குறித்து எதார்த்ததையும், அம்பேத்கரின் பார்வையை உள்வாங்கியதாக ’பைசன்’ விளங்குகிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணத்தி எனும் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் எனும் அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரரின் வாழ்க்கையை அடிப்படையாகவும், அப்பகுதியில் தேவேந்திர குல வேளாளர் சாதியைச் சேர்ந்த பசுபதி பாண்டியனுக்கும், நாடார் சமூகத்தவரான வெங்கடேச பண்ணையாருக்கும் நடந்த மோதலைப் பின்னணியாகவும் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் ’பைசன்’. இத்திரைப்பிரதியில், மணத்தி கிராமம் வணத்தியாகும், கணேசன் கிட்டானாகவும் புனையப்பட்டுள்ளார்கள்.  

சிறு வயதில் இருந்தே கபடியின் மீது மோகம் கொண்ட கிட்டானின் திறமையை மேலும் வளர்த்தெடுக்கிறார் அவனது பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் சந்தனராஜ். ஆனால், கிட்டானின் தந்தை, தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கபடி வீரராக முயற்சிக்கையில் சந்திக்க நேரும் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு, அவனது கபடி ஆசைக்கு எதிராக நிற்கிறார். எனினும், தொடர்ந்து தன்னுடைய ஆசிரியர் மற்றும் அக்கா வழங்கும் ஊக்கத்தால் கபடியில் தொடர்ந்து ஈடுபடுகிறான் கிட்டான். திறமையானவனாக இருந்து, பல வெற்றிகளைப் பெற்றாலும், தொடர்ந்து கபடி விளையாடுவதில் அவன் பல சிக்கல்களையும், இடர்பாடுகளையும் எதிர்கொள்கிறான். அவற்றையெல்லாம் கடந்து, இந்திய கபடி அணிக்குத் தேர்வாகி எவ்வாறு கிட்டான் சாதிக்கிறான் என்பதே பைசனின் கதை. 

’இட்லி கடை’யானது முருகன் வெளிநாட்டில் இருந்து பூர்வீக கிராமத்திற்கு திரும்புவதைப் பற்றியதாக இருக்க, ’பைசன்’ திரைப்படமோ, கிராமத்தில் இருந்து கிட்டான் தப்பி செல்வதைப் பற்றியதாக இருக்கிறது. சங்கரபுரத்தைப் போன்ற சாதியற்ற, கற்பனாவாத ஊராக பைசனின் வணத்தியும், தூத்துக்குடியும் இல்லை. உணவகம், பேருந்து, மைதானம் என ஊரில் இருக்கும் எல்லா பொது-வெளிகளிலும் கிட்டானின் சாதி விசாரிக்கப்படுகிறது.  சாதிக்கேற்றவாறே அவன் மற்றவர்களால் நடத்தப்படுகிறான். நல்வாய்ப்பாக அவனது திறமையை அங்கீகரித்து, சிலர் அவனை சாதி கடந்தும் ஊக்குவிக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கும்கூட சாதியம் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. கிட்டானே, தன்னுடைய திறமையைக் கொண்டு முட்டி மோதி மேலெழுகிறான். 

கிட்டானின் பயணத்தில் சாதியம் மட்டும் தடையாக இருக்கவில்லை. அவனுடைய கிராமத்தில், சொந்தக்காரருடனான குடும்ப பிரச்சனையே, ஒரு கட்டம் வரை அவனை ஊர் கபடி அணியில் சேர விடமால் செய்கிறது. தனது காதலியை கரம் பிடிப்பதற்கும், அந்த குடும்பப் பிரச்சனையே தடையாகவும் இருக்கிறது. மேலும், அவனது சாதியைச் சேர்ந்த தலைவருக்கும்,  ஆதிக்க சாதியைச் சேர்ந்த மற்றொரு தலைவருக்குமான விரோதம் அப்பகுதியை மட்டுமின்றி, கிட்டானின் வாழ்க்கையையும் வெகுவாக பாதிக்கிறது. அவன், தேசிய அணிக்கு தேர்வாகிய தினத்தில் அவ்விரு தலைவர்களுக்கும் இடையிலான பிரச்சனை பெரும் கலவரமாக உருவெடுக்கிறது. அதிலிருந்து தப்பிப் பிழைப்பதாலேயே, கிட்டானால் வாழ்க்கையில் அடுத்த நிலை நோக்கி நகர முடிகிறது. 

மாரி செல்வராஜின் பிற திரைப்படங்களும் கிராமத்தில் இருந்து தப்பியோடுவதைப் பேசுபொருளாகக் கொண்டிருக்கின்றன. ‘மாமன்னன்’ திரைப்படத்தில் சிறுவனான அதிவீரன், கோயில் கிணற்றில் குளித்ததால் தனது நண்பர்கள் கொல்லப்படுவதைத் தொடர்ந்து, மலை மீதிருக்கும் சொந்த கிராமத்தில் இருந்து வெளியேறி, சேலம் நகரத்தில் தஞ்சமடைகிறான். அங்கு அவனுக்கு ஆதரவுக் கொடுத்து வளர்க்கும் பெரியரொருவர், அவனுக்கு தற்காப்பு கலைகள் கற்றுக்கொடுக்கிறார். அதே போலவே, ’கர்ணன்’ திரைப்படத்தின் நாயகன் இராணுவத்தில் சேர வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருப்பவன். எனினும், ஊரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக காவல்துறை அதிகாரி கண்ணப்பிரானைக் கொன்று, தனது கனவை பலி கொடுத்துவிட்டு, சிறை செல்கிறான். தவிர, ’கர்ணன்’ படத்தின் மைய கருவே, மேம்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு, சொந்த கிராமத்தில் இருந்து வெளியேறி நகரத்தை நோக்கி பயணப்பட உதவும் பேருந்து வசதிக்காக தலித்துகள் நடத்தும் போராட்டம்தான். இதற்கு முற்றிலும் மாறாக, கிராமத்தில் இருந்து வெளியேறுவதை மட்டுமல்ல, அனைத்துவித தொழில்நுட்பங்களும் பாரம்பரியத்தை ஊடுறுவி  சீரழிப்பதை சாடுகிறது ’இட்லி கடை.’

இவ்வாறுதான், கிராமங்களை சாதியற்ற, அரவணைக்கப்பட வேண்டிய ’ராமராஜ்ஜியம்’ போன்ற பொன்னுலகாக தனுஷின் ‘இட்லி கடை’ கட்டமைத்திருக்க, கிராமங்களை தலித்துகள் அவதிப்படும் வெளியாக கட்டமைத்து, அவற்றில் இருந்து விடுபடுவதையே விடுதலைக்கான வழியென்றும் கூறியிருக்கிறது மாரி செல்வராஜின் ‘பைசன்’. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.