தனியுரிமை மீறலும், பொதுநலனுக்காக வாதாடுதலும்! – விஜய்-சங்கீதா மணமுறிவு மீதான சமஸ் கட்டுரையை முன்வைத்து… – ர. முகமது இல்யாஸ்

பத்திரிகையாளர் சமஸ் ‘சிந்தை’ தளத்தில் “விஜய் விவாகரத்து விவகாரம் ஏன் தனிநபர் பிரச்சினை அல்ல?” என்னும் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதன் வழியாக, அவர் சார்ந்திருக்கும் ஊடகங்கள் தனிநபர்களின் நீதிமன்ற மனுக்களைப் பயன்படுத்தி நிகழ்த்தி வரும் ஊடக குறுக்கு விசாரணை (Media trial) முறையை நியாயப்படுத்தியிருக்கிறார். அவர் எழுப்பும் தனிநபர் – பொது வாழ்க்கை குறித்த கேள்விகளை ஆராய்வது எனது நோக்கம் அல்ல. ஆனால் சமஸ் தான் சார்ந்திருக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊடகமும், இன்ன பிற ஊடகங்களும் விஜய் – சங்கீதா மணமுறிவு விவகாரத்தில் நிகழ்த்தி வரும் ஊடக குறுக்கு விசாரணை முறைகளை விமர்சிப்பது ஒரு ஊடகவியல் ஆய்வாளனாக எனது கடமை எனக் கருதுகிறேன்.

என்ன நடந்தது?

சங்கீதா விஜய்யுடனான மணமுறிவுக்காக நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்றம் என்பது சட்டவிதிமுறைகளும், பாதுகாப்பும் அளிக்கும் ஒரு நவீன வெளி. நீதிமன்றத்தில் நாம் ஒரு மனுவைத் தாக்கல் செய்யும் போது, அதுவும் குறிப்பாக மணமுறிவு சார்ந்த வழக்குகளில் நமது அந்தரங்கத் தகவல்களை நீதிமன்றத்தின் பாதுகாப்பை நம்பி அளிக்க நேர்கிறது. சங்கீதா தாக்கல் செய்திருக்கும் மனுவில் பொதுவில் எந்த மனிதரும் பேசத் தயங்குகிற இல்லற வாழ்க்கை, திருமண உறவு, பொருளாதாரச் சூழல் முதலானவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார். நீதிமன்றம் தனக்கு பாதுகாப்பு அளிக்கும் என்ற நம்பிக்கையில் அவர் தனது மனுவில் இத்தகைய தனிப்பட்ட தகவல்களைக் குறிப்பிட்டிருக்கிறார்.

அத்தகைய ஆவணத்தை யாரோ ரகசியமாக திருடியிருக்கிறார்கள். மிகச் சரியான திட்டமிடலுடன் ஒவ்வொரு வார இறுதியிலும் ஊடகங்களில் வெளியிட்டு, பொது விவாதங்களைக் கட்டமைக்கிறார்கள். இதுதான் இந்த விவகாரத்தின் தொடக்கப்புள்ளி.

விஜயின் தனிப்பட்ட குணம், அவரது அரசியல் தகுதி, அவரது தனிப்பட்ட உறவுகள், ஒரு கணவராக அவரின் நடத்தை முதலான எதையும் பேசுவதற்கு முன்பு, இந்த விவகாரத்தில் நாம் எதைப் பேசுபொருளாக்கி இருக்க வேண்டும்? ஒரு பெண் தன்னுடைய அந்தரங்க வாழ்க்கையை நீதிமன்றத்தில் முறையிடுகிறார்; மூடிய அறை விசாரணை (In-camera proceedings) கேட்டிருக்கிறார்; ஊடகங்கள் தமது தனிப்பட்ட விவகாரத்தை விவாதிக்க தடை கோரியிருக்கிறார். அப்படியும் அவரது அந்த தனிப்பட்ட சட்ட ஆவணம் கசியவிடப்படுகிறது. ஊடகங்களும் அதனைப் பேசுபொருளாக்கியிருக்கின்றன. ஏதோவொரு செய்தியாக அல்லாமல், அது எத்தகைய செய்திகளாக/Contentகளாக மாறியது என்பது அனைவருக்கும் தெரிந்தது.

சரி, இங்கு சமஸ் என்ன சொல்கிறார்?

சமஸ் தனது கட்டுரையில் சங்கீதா தனது தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கோரியதைக் குறிப்பிடுகிறார். ஊடக விசாரணை செய்யக் கூடாது என்ற அவரது கோரிக்கையையும் ஆமோதிக்கிறார். ஆனால் தொடர்ந்து, இந்த விவகாரம் தனியுரிமையின் எல்லையைக் கடந்துவிட்டதாகக் கூறி, அதனை நியாயப்படுத்த விஜய் அரசியல் தலைவர் என்ற வாதத்தையும் முன்வைத்திருக்கீறார். அதே போல, விஜய் கட்சியைச் சேர்ந்தவர் இணையத் தாக்குதலில் இறங்கியதையும் குறிப்பிடுகிறார். அவற்றை விமர்சிப்பதில் நிச்சயம் ஆதரவு உண்டு. ஆனால் இவற்றின் வழியாக அவர் கட்டமைக்கும் கருத்து அத்தகைய நியாயமானது அல்ல.

கசியவிடப்பட்ட ஆவணம் ஒன்றின் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி, அவை பொதுவெளியில் விவாதிக்கப்பட வேண்டும் என அவர் பேசுவது அடிப்படையில் எல்லா வித ஊடக அறங்களுக்கும் எதிரானது. அந்த ஆவணம் யாரால் கசியவிடப்பட்டது? ஏன் கசிந்தது? அதனைப் பயன்படுத்த ஊடக நிறுவனங்களுக்கு தார்மிக உரிமை இருக்கிறதா? ஒரு நாகரிகமான உரையாடல் இவற்றில் அடிப்படையில் தானே கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும்?

அடுத்ததாக, கேரி ஹார்ட், பில் கிளிண்டன் ஒப்பீடு. இந்த ஒப்பீடே அடிப்படையில் தவறானது. 1987ல் அமெரிக்காவில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் இருந்தவர் கேரி ஹார்ட். அவரது திருமணம் கடந்த உறவின் காரணமாக, அரசியல் வாழ்க்கையை இழந்தவர். இதன்வழியாக, மேற்கத்திய சமூகங்கள் அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி அணுகுகின்றன என்பது அவரின் வாதம்.

ஆனால் உண்மையில் ஹார்ட் வழக்கில் என்ன நடந்தது?

வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பு, ஊடகவியலாளர்களிடம் அண்ணாமலை தனமாக சவால் விட்டுக் கொண்டிருந்தவர் கேரி ஹார்ட். ‘நான் ஏதேனும் தவறு செய்கிறேன் என நீங்கள் நினைத்தால், என்னைப் பின் தொடரலாம்’ என பகிரங்கமாக அறிவித்தார். தி மியாமி ஹெரால்ட் இதழ் அவரைப் பின் தொடர்ந்தது. விளைவு, டான்னா ரீஸ் என்ற பெண்ணுக்கும் அவருக்கும் இடையிலான உறவு அம்பலப்பட்டது. ஊடகவியலாளர்கள் தாங்களே இதனைக் கண்ணால் கண்டதால், ஹார்ட் அதனை நிராகரிக்கவில்லை.

இது ஊடகவியலின் அறத்திற்கு உட்பட்டது. பத்திரிகையாளர்கள் வெளியில் சென்றார்கள்; விசாரணை நடத்தினார்கள்; கவனித்தார்கள்; கண்டுபிடித்ததை மக்களிடம் சொன்னார்கள். நீதிமன்ற ஆவணம் எதையும் கைப்பற்றியோ, பிறரிடம் பெற்றோ அவர்கள் செய்தி வெளியிடவில்லை. தங்கள் உழைப்பால் தாங்கள் கண்டுபிடித்ததை அம்பலப்படுத்தினார்கள்.

கிளிண்டனின் விவகாரம் இன்னும் தெளிவானது. மோனிகா லெவின்ஸ்கி என்ற வெள்ளை மாளிகை பணிப்பெண்ணுடன் உறவில் இருந்தார் அதிபர் பில் கிளிண்டன். நீதித்துறை சார்பில் கென்னெத் ஸ்டார் என்பவரின் தலைமையில் அமெரிக்க அரசு அமைத்த குழு இந்த விவகாரத்தை விசாரணை செய்தது. மோனிகா லெவின்ஸ்கி வாக்குமூலம் அளித்தார். Starr Report சட்டப்பூர்வமாக வெளியிடப்பட்டது; இன்றும் அது பொதுவெளியில் இருக்கிறது. அதனை யாரும் பார்வையிட முடியும்.

இந்த இரண்டு விவகாரங்களிலும் சட்டப்பூர்வ, ஊடக அறங்களுக்கு உட்பட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கின்றன. பத்திரிகையாளர்களே செய்தியை விசாரித்து வெளியிட்டது முதலாவது செய்தி என்றால், சட்ட வழிமுறைகளின் வழியாக இரண்டாவது செய்தி வெளியானது. இரண்டிலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட நீதிமன்ற ஆவணம் ரகசியமாக கசியவிடப்படவில்லை. இந்த வேறுபாடு மிக முக்கியமானது.

இந்த உதாரணங்களின் வழியாக, பொது வாழ்க்கையில் இருப்பவர்களின் தனிப்பட்ட ஒழுக்கத் தகுதி விமர்சிக்கப்பட வேண்டும் என சமஸ் வாதிடுகிறார். அதன் சரி, தவறு என வரையறுப்பது இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல. மாறாக, இந்த உதாரணங்கள், அவர் செய்து கொண்டிருப்பவற்றிற்கு நேரெதிரானவற்றை நமக்கு வெளிக்காட்டுகின்றன. ஊடக அறம் பிறழ்ந்து இருப்பதை வாக்குமூலமாக சுட்டிக்காட்டியிருக்கின்றன.

இது ஏன் பேசப்பட வேண்டும்?

பத்திரிகை சுதந்திரம் என்பது நேர்மையாகவும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தகவல்களைச் சேகரிக்க வேண்டும் என்னும் கருத்தியலின் அடிப்படையில் இயங்கும் ஒன்று. நீதிமன்றம் தனக்கான பாதுகாப்பான வெளி என ஒரு பெண் அணுகும் போதும், ஊடக விசாரணை வேண்டாம் என பகிரங்கமாக கோரிக்கை விடுத்த பிறகும், அத்தகைய விதிமீறலில் ஈடுபட்டுவிட்டு, அதற்கு நியாயம் கற்பித்திருக்கிறார் சமஸ். இன்னும் பல ஊடகங்கள் இன்னமும் அதனைக் கேலிக்குரியதாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். விஜயை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு, சங்கீதாவின் தனிப்பட்ட விவகாரங்களைத் தமது அரசியல் நியாயங்களுக்காக ஆயுதமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நியாயமாக, சமஸ் இந்த ஆவணம் எங்கே இருந்து வந்தது, இதனை வெளியிடுவதால் தமது தனியுரிமை பாதிக்கப்படும் என சங்கீதாவே முறையிட்ட பிறகும், யாருக்கு லாபம் அளிக்கப் போகிறது முதலான கேள்விகளை அல்லவா ஒரு செய்தி ஆசிரியராக எழுப்பியிருக்க வேண்டும்? ஆனால் இவற்றில் கனத்த மௌனத்தையே வெளிப்படுத்துவதோடு, ‘அடுத்த சில நாட்களில், நீதிமன்றத்தில் சங்கீதா மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தார்’ என அதே நாளில் தாக்கல் செய்த மனுவைக் குறிப்பிட்டு பேசுகிறார் சமஸ். ஒரு செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியராக அடிப்படை தகவல்களைக் கூட பிழை பார்க்காமல் இருப்பது எத்தகைய மோசமான அணுகுமுறை?

இவற்றின் பொருள், விஜய் குற்றமற்றவர் என வாதிடுவதோ, சங்கீதா முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் பொருளற்றவை எனத் தீர்ப்பளிப்பதோ அல்ல. பொதுவெளியில் அல்லாமல், தனது தனியுரிமையைப் பாதுகாக்க நீதிமன்றம் சென்ற சங்கீதாவைக் காப்பாற்றுகிறோம் என அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அரசியல் ஆயுதமாக மாற்றுவதே இந்தச் செய்தியின் பணி.

சங்கீதாவின் மனு கசியவிடப்படாமல், மேலோட்ட தகவலாக மட்டுமே வெளியாகியிருந்தால் இதே விதமான செய்தி உரையாடல்களை சமஸ் உள்ளிட்ட ஊடக நிறுவன ஆசிரியர்கள் வெளியிட்டிருப்பார்களா? இல்லை என்றால், இந்த ‘தனிநபர் பிரச்சினை அல்ல’ என்ற வாதமே கசியவிடப்பட்ட ஆவணத்தின் அடிப்படையிலானது; அதன் உண்மைத்தன்மையைக் கூட ஆராயாமல் வெளியிடப்பட்டது. ஆம் என்றால், பொது நலன் கருதி ஊடகங்களே அதனைக் கைப்பற்றி கசியவிடுகிறார்கள் என்றால் அது இதனைவிட சிக்கலானது. எப்படி பார்த்தாலும், இந்த செய்தி தொடர்பான அத்தனை உரையாடல்களும், குறிப்பாக ஊடக நிறுவனங்கள் மேற்கொள்பவை அனைத்தும், ஒரு பெண்ணின் அந்தரங்க விவகாரங்களை தனியுரிமைக்கான அவரின் சட்டபூர்வ கோரிக்கையையும் மீறி வெளியிடப்பட்டிருப்பவை.

இறுதியாக, மீண்டும் கூறுகிறேன். விஜய் குற்றமற்றவர் என வாதிடவே இல்லை. அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்வு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் வேறு, நான் இங்கே குறிப்பிட்டிருப்பது வேறு. ஒரு பெண்ணின் விருப்பத்தை மீறிக்கொண்டே அவரைக் காப்பாற்றப் போகிறேன் எனப் பேசுவதும் அபத்தம். நீங்கள் எங்கு தகவலைப் பெற்றீர்கள் என்பதை ஆராயாமல், பொறுப்புணர்வோடு பேசுவதாக நடிப்பது எந்த வகையிலும் ஊடக அறம் ஆகாது. அதே போல, இந்த விவகாரத்தில் கேரி ஹார்ட், பில் கிளிண்டன் உதாரணங்களை வைத்து, நேர்மையான ஊடகங்களைப் போல உங்களைக் காட்சிப்படுத்துவதும் அருவெறுப்பானது.

சங்கீதா எதில் இருந்து தான் பாதுகாக்கப்பட வேண்டும் என நீதிமன்றத்திடம் கோரினாரோ, அதுவே அவரைத் தாக்கியிருக்கிறது. இதைத் தான் நான் பேசியிருக்கிறேன். சமஸ் போன்றோர் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

  • ர. முகமது இல்யாஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.