‘கூலி!’ – ஒரு புரட்சிகர சொல்லை அரசியல் நீக்கம் செய்தல் – ர. முகமது இல்யாஸ்

ஒரு காலம் இருந்தது. ‘கூலி’ என்ற சொல் தொழிலாளர் ஒற்றுமை, வியர்வை, வர்க்கப் போராட்டம் முதலானவற்றைத் தாங்கியிருந்த காலம் அது. உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு, ஆளும் வர்க்கத்திற்கு எதிராக உரிமைகளைக் கேட்கும் குரல்களைக் குறிக்கும் சொல்லாக இருந்த ‘கூலி’, எண்பதுகளின் இந்திய சினிமாவின் முதன்மை ஹீரோக்களுக்கான அடையாளமாக இருந்தது. அமிதாப் பச்சன் நடித்த ‘கூலி’ (1983) மட்டுமின்றி, அவர் ஏற்று நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்கள் அன்றைய இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பையும், இந்திய அரசும், ஆளும் வர்க்கமும் அவர்களை ஏமாற்றியதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றன. அமிதாப் பச்சனின் பெரும்பாலான திரைப்படங்களைத் தமிழில் ரீமேக் செய்து, அதே போன்றவொரு இமேஜைக் கட்டியெழுப்பியவர் ரஜினிகாந்த். ‘முள்ளும் மலரும்’, ‘தீ’, ‘உழைப்பாளி’, ’மன்னன்’ முதலான பல்வேறு திரைப்படங்களில் சாமான்ய தொழிலாளர்களின் குரலாக ஒலித்திருப்பார் ரஜினி.

’கூலி’ (2025) தற்போது வெளியாகியிருக்கிறது. ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்திருப்பதோடு, பல கோடிகள் மூலதனமாகக் கொட்டப்பட்டும் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தாலும், ரஜினியின் ‘தொழிலாளி’ இமேஜ் என்பது வெறும் நாஸ்டால்ஜியாவுக்காகவும், ரஜினியைப் பார்த்து, ரசித்து வளர்ந்திருக்கும் சமகால இளைய தலைமுறையின் பொழுதுபோக்கு நேரத்தை டிக்கெட் கட்டணத்தின் வடிவில் சுரண்டுவதற்காகவும் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. ’கூலி’ என்ற சொல் அன்றாடம் உழைக்கும் ஒரு தொழிலாளியிடம் இருந்து திருடப்பட்டு, அதன் உழைப்புச் சக்தி தூக்கியெறியப்பட்டு, அரசியல் பண்பு முழுவதுமாக நீக்கப்பட்டு, கேளிக்கை சந்தையில் ரஜினியின் பெயரால் விற்பனை செய்யப்படும் ஒரு விளைபொருளாக மாறியிருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு இடையில் நிகழ்ந்திருக்கும் இந்த மாற்றம், வெறும் ஒரு சொல்லுக்கு மட்டுமே நிகழ்ந்திருப்பதாக சுருக்கிவிட முடியாது; இது திராவிட நிலத்தின் சினிமா, அரசியல் முதலானவை உருமாறியிருப்பதையும், நவதாரளமய காலத்தில் உழைக்கும் வர்க்கத்தின் சின்னங்கள் சந்தைப் பொருள்களாக மாற்றப்படுவதையும் சுட்டிக் காட்டுகின்றது.

இந்திய சினிமா வரலாற்றில் எண்பதுகளுக்கு அதிமுக்கிய இடமுண்டு. ‘Angry Young Man’ திரைப்படங்கள் என்று அழைக்கப்பட்ட அமிதாப் பச்சன் படங்கள் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்தியாவில் பிரித்தானிய அரசு வெளியேறி, அதிகாரப் பரிமாற்றம் ஏற்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, எந்த வளர்ச்சியும் அடையாத கோபத்தை வெளிப்படுத்தும் ஹீரோவின் முகமாக உயர்ந்தார் அமிதாப் பச்சன். தமிழ்நாட்டில் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எம்ஜிஆரின் ஆட்சியிலும் மக்கள் நினைத்த வளர்ச்சியை அடையவில்லை என்பதால், அமிதாப் பச்சனின் தமிழ் ரீமேக் திரைப்படங்கள் வரவேற்பைப் பெற்றன. ரஜினியின் பெரும்பாலான தொடக்க கால வெற்றித் திரைப்படங்கள் அமிதாப் பச்சனின் திரைப்படங்கள் தாம். இந்தப் பின்னணியில் உருவானது தான் ‘கூலி’ என்னும் ஹீரோயிச வகையினம். சிவப்பு அல்லது நீலம் முதலான வண்ணங்கள் தாங்கிய உடை, எண் பொறிக்கப்பட்ட பேட்ஜ் போன்ற அலங்காரங்களுடன் தோற்றம் கொண்ட கூலி நாயகன், அன்றைய காலகட்டத்தின் நிறுவனமயப்பட்ட சமூகத் தோல்வியின் சின்னமாக இருந்தான்; அவனது கோபம் உழைப்புச் சுரண்டலுக்கும், ஊழலுக்கும் எதிராக இருந்தது. தொழிற்சங்கத்தின் பிரதிநிதியாக சித்தரிக்கப்பட்ட கூலி ஹீரோவின் வசனங்கள் திரையைத் தாண்டி, அன்றாடம் உழைக்கும் மக்களின் குரலாக ஒலித்தன. இதன் பொருள், Angry Young Man திரைப்படங்கள் பெரியளவிலான புரட்சிகர அரசியல் பேசிய திரைப்படங்கள் என்பதல்ல; மாறாக, மக்களின் குரல்களை, ஏக்கங்களைத் திரையில் பிரதிபலித்தவை என்பது. இந்த நாயக பிம்பம் இன்று ஒரு நடிகரின் திரைப்படத்தை விற்பனை செய்வதற்கான நாஸ்டால்ஜியாவுக்காக பயன்படுத்த சுருக்கப்பட்டிருக்கிறது.

முன்பு ரஜினி அணிந்திருந்த கூலி சீருடையை தற்போது மீண்டும் அணிந்திருக்கிறார். ஆனால் அதில் இருந்து தொழிற்சங்கங்களும், இடதுசாரி அரசியலும், முழக்கங்களும், இன்னமும் சொல்லப் போனால் உழைப்பாளியின் வியர்வையும் கூட நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. ‘தீ’ படத்தில் ரஜினியின் கூலி எண்ணாக ‘786’ கொடுக்கப்பட்டிருக்கும்; அது அப்போதைய காலகட்டத்தின் மத நல்லுறவின் பிரதிபலிப்பாகவும் இருந்தது. தற்போதைய ‘கூலி’ எல்லா விதமான அரசியல் குறியீடுகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டுள்ளது.

மக்களிடையே வர்க்கப் போராட்டங்கள் குறித்து பேசுவதோ, அதுகுறித்த சிந்தனையோ இல்லாமல், ‘கூலி’ ஒரு சந்தைப் பொருளாக மாறி, ரஜினிகாந்த் என்னும் மற்றொரு சந்தைப் பொருளின் வழியாக, தன்னை ஒரு நாஸ்டால்ஜியாவை உற்பத்தி செய்து, சுமார் மூன்று மணி நேரக் கேளிக்கையை உறுதிசெய்வதாகவே தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. நவதாரளமயக் காலகட்டத்தில் தமிழ் சினிமா அடைந்திருக்கும் பரிணாமத்தை இவை நமக்கு உணர்த்துகின்றன. ’கூலி’ என்ற சொல்லை, ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் இருவரும் திரைப்பிரதிக்குள் அரசியல் நீக்கம் செய்திருக்கிறார்கள் என்றால், மறுபக்கம், திரைக்கு வெளியில், இந்தத் திரைப்படத்தோடு தம்மை தொடர்புபடுத்தி, அதே அரசியல் நீக்கப் பணியைச் செய்திருப்பவர்கள், தமிழ்நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும், அவரது மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினும்.

சுமார் 13 நாள்களாக, சென்னை மாநகராட்சியின் ரிப்பன் பில்டிங்கிற்கு வெளியில் ஏறத்தாழ 1000 தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்திரம் கோரியும், தனியார்மய எதிர்ப்பையும் முன்வைத்துப் போராட்டம் நடத்தி வந்தனர். ஒரே இரவில் அவர்களை காவல்துறையினரை வைத்து பலவந்தமாக அப்புறப்படுத்தியிருக்கிறது திமுக அரசு. பொதுத் துறையைத் தனியார்மயப்படுத்துவது, ஆபத்தான சூழல்களின் பணி மேற்கொள்வது, தொழிலாளர் சட்ட உரிமைகளைப் படிப்படியாக இழப்பது முதலானவற்றை மையமாகக் கொண்டு இந்தப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில், சென்னை மாநகரத்தின் தூய்மைப் பணியாளர்களைக் காவல்துறையினர் எதிரிகளைப் போல தூக்கியெறிந்து கொண்டிருந்த போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘கூலி’ திரைப்படம் பார்த்துவிட்டு, அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் போட்டோவுக்குப் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். மறுபக்கம், 13 நாள்களாக தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தின் பக்கமே போகாத துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ’கூலி’ படத்தின் முதல் விமர்சனத்தைப் பதிவிட்டு மகிழ்ந்து கொண்டிருந்தார். இது நாம் வாழும் காலத்தின் முரணை உரக்கச் சொல்கிறது. அரசியல் நீக்கம் செய்யப்பட்டு திரையில் வெளிவரும் ‘கூலி’ அரசு ஆதரவைப் பெறும் அதே வேளையில், உரிமைக்காகக் குரல் கொடுக்கும் உண்மையான ‘கூலிகள்’ மீது காவல்துறை நடவடிக்கை பாய்கிறது.

முன்பு குறிப்பிட்டதைப் போல, ஒரு காலத்தில் ‘கூலி’ என்ற சொல் கடுமையாக சுரண்டப்பட்ட உழைப்பாளியின் பலத்தையும், போராட்ட குணத்தையும் குறித்தது. ஒருவரைக் ‘கூலி’ எனச் சுட்டுவது, அவரது உழைப்பையும், வர்க்கப் போராட்ட மனநிலையையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. இன்று சந்தையை இழந்து கொண்டிருக்கும் நடிகர் ஒருவரின் மிச்ச சொச்ச சந்தை மதிப்பையும் லாபமாக மாற்றுவதற்கான கருவியாக இந்த சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ‘கூலி’ என்ற போஸ்டர் இருக்கும் பெரும்பாலான மல்டிபிளக்ஸ் திரையரங்கங்களில் லுங்கி அணியும் உண்மையான கூலிக்களுக்கு அனுமதியில்லை. ’கூலி’ படத்தில் ரஜினி மீண்டும் கூலி சீருடை அணிந்திருக்கிறார் என்றாலும், அந்த சீருடையில் முன்பிருந்த அரசியல் இன்றில்லை; முழுவதுமாக நீக்கப்பட்டிருக்கிறது. இந்த அரசியல் நீக்கச் செயல்பாட்டில் அரசியல் இல்லாமல் இல்லை.

ஒரு அரசும், அதில் மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் பதவியேற்றிருப்பவர்களும் நிஜமான கூலிகளின் போராட்டத்தை ஒடுக்கிவிட்டு, மறுபக்கம் ‘கூலி’ என்ற திரைப்படத்திற்காக விளம்பரம் செய்வதே, ஒரு நவதாரளவாத அரசு எப்படிப்பட்ட தொழிலாளர் அரசியலைப் பொறுத்துக் கொள்ளும் என்பதை உணர்த்தும் செய்தியாக அளிக்கிறது. மக்கள் போராட்டங்களின் குறியீடுகளை விற்பனைப் பொருள்களாக மாற்றுவதும், மக்கள் போராட்டங்களை நசுக்குவதும் நவதாராளமயக் காலத்தின் கலாச்சார உற்பத்தியின் மூலக்கூறாக மாறியிருக்கிறது. திராவிட மூலதனமும், அதனைப் பாதுகாக்கும் முயற்சிகளும், இந்த இரண்டு வெவ்வேறு ‘கூலி’ தரப்புகளிடம் இருப்பதை மனதில் கொண்டு, இந்த விவரங்களைக் கணக்கிட வேண்டும்.

  • ர. முகமது இல்யாஸ்.

1 COMMENT

  1. சமகால அரசியலையும் திரைப்படத்தின் வாயிலாக திருடப்படும் வர்க்கப்பண்பாட்டையும் மிக நேர்த்தியான முறையில் விவரித்திருக்கும் முகமது இல்தியாஸ் அவர்களுக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்

Leave a Reply to Sellamuthu Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.