’ஜன நாயகன்’ Vs சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ – தமிழ்நாட்டின் ‘Barbenheimer’ சூழல்! – ர. முகமது இல்யாஸ்

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ மற்றும் மற்றொரு பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிரேட்டா கெர்விக்கின் ‘பார்பீ’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகி, சர்வதேச அளவில் பெரும் கலாச்சார உரையாடல்களை உற்பத்தி செய்தன. இரு திரைப்படங்களின் தலைப்பையும் கலந்து ‘Barbenheimer’ என்ற சொல் உருவாக்கப்பட்டு இணையத்தில் ஒரு கலாச்சார நிகழ்வாக கருதப்பட்டது. அடிப்படையில் இரு நேரெதிர் அரசியல், கலாச்சாரப் பிரதிகள் ஒரே நாளில் வெளியாகி மோதிக் கொள்வதும், அவை சமூக ஊடகங்களில் பெரும் சாராரின் பங்கேற்பை உருவாக்கியதும் இந்த நிகழ்வின் மையமாகக் கொள்ளப்பட்டது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு வெகுமக்களைத் திரையரங்கங்களை நோக்கி வரவழைக்கும் உத்தியாகவும் இந்த நிகழ்வு பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

கிரேட்டா கெர்விக்கின் ‘பார்பீ’ நவதாராளமயத்தின் காலகட்டத்தில் ஆணாதிக்கம், பெண்மை, நுகர்வுக் கலாச்சாரம் முதலான பண்புகள் இயங்கும் விதத்தைப் பகடி செய்திருந்தது. கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதல் உருவாக்கிய குற்றவுணர்வின் நீட்சியாக, விஞ்ஞானி ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவின் கலாச்சார வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ’பார்பீ’ பொம்மையை முதலாளித்துவத்தின் அதீதமாகவும், நுகர்வுக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாகவும் விமர்சனம் செய்தது ‘பார்பீ’. அதிகாரத்தின் கருவியாக அறிவியல் இயங்குவதும், அறிவியலை முன்வைக்கும் விஞ்ஞானிகள் அதிகார மையங்களிடம் வீழ்ந்து போவதையும் கடுமையாக முன்வைத்திருந்தது ’ஓப்பன்ஹெய்மர்.’

இரண்டு திரைப்படங்களும் அடிப்படையில் வெவ்வேறான விவகாரங்களைப் பேசின. ‘பார்பீ’ கையாண்ட திரை அழகியல் அதீதமான பிங்க் நிறத்தில் உருவாக்கப்பட்டதோடு, அது குழந்தைகள் விளையாடும் பொம்மையின் கதையாக, அது சார்ந்த அழகியல் பண்புகளோடு முன்வைக்கப்பட்டது. ’ஓப்பன்ஹெய்மர்’ அணு ஆயுதத்தைப் பற்றிய கதையாக இருண்ட அழகியல்களைக் கையாண்டதோடு, ‘பார்பீ’ முன்வைத்த கொண்டாட்ட அழகியலுக்கு மாற்றாக குற்றவுணர்வை முன்வைத்தது. இந்த வேறுபாடுகளைத் தாண்டி இரண்டு திரைப்படங்களும் அமெரிக்காவின் அதிகாரம், பாலினம், தேசிய அடையாளம் முதலான பண்புகளைக் கடுமையாக விமர்சிப்பதில் ஒற்றுமையாக இருந்தன. இது Barbenheimer moment என வர்ணிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் வரும் 2026ஆம் ஆண்டின் பொங்கல் வெளியீடுகளாக வரும் ‘ஜன நாயகன்’ மற்றும் சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ ஆகிய இரு திரைப்படங்களும் இத்தகைய Barbenheimer சூழலைத் தமிழ்மயப்படுத்தியிருக்கின்றன. நடிகர் விஜய் இன்று தமிழ்நாட்டு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் இடத்தை அடைந்திருக்கிறார். அதில் இருக்கும் சாதக, பாதகங்களை விரிவாக வேறொரு தளத்தில் பேசி வருகிறோம். அப்படியான சூழலில் அவரது ‘ஜன நாயகன்’ திரைப்படம் அவரது இறுதித் திரைப்படமாக இருக்கப் போவதாக சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ‘ஜன நாயகன்’ படம் முழுவதும் விஜய் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இருக்கப் போவது உறுதி என்றாலும், ஒரு அரசியல் கலாச்சாரப் பொருள் என்ற வகையில், ‘ஜன நாயகன்’ விஜயைத் தமிழ்ச் சமூகத்தின் ஒப்பற்ற மீட்பர் என்பதாக முன்வைக்கப் போகிறது. கதைக்களம், இதுவரை வெளியான பாடல்கள் ஆகியவற்றில் இவை தொடர்ந்து இடம்பெற்றிருக்கின்றன. ஏற்கனவே திரை ரசிகர்களைத் தனது அரசியல் கட்சியின் தொண்டர்களாக மாற்றுவதில் வெற்றி பெற்றிருக்கிறார் விஜய்; அடுத்ததாக, அவர்களை வாக்காளர்களாக மாற்றுவதற்கான பணிகளை இந்தத் திரைப்படம் மேற்கொள்ளும்.

மறுபக்கம், திமுக ஆதரவுத் திரைப்படமாக, அதன் தலைமைக் குடும்பத்தைச் சேர்ந்த இன்பன் உதயநிதி வழங்குவதாக உருவாகியிருக்கிறது சுதா கொங்கராவின் ‘பராசக்தி’. இந்தத் திரைப்படத்தை ஒவ்வொரு முறையும் சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ எனச் சுட்டிக்காட்டுவதன் காரணம், அதன் தலைப்பு நவீன தமிழ்ச் சமூகம் திரை என்னும் கலையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்த கலைஞர் கருணாநிதியின் ‘பராசக்தி’ திரைப்படத்தின் தலைப்பை சமகால அரசியல் நலன்களுக்காகவும், திமுகவின் தலைமைக் குடும்பத்தின் பொருளாதார நலன்களுக்காகவும் சுரண்டுகிறது என்பதற்காகவே.

சுதா கொங்கரா பிரபல இந்தியத் தேசிய சார்பு / திராவிட எதிர்ப்புக் கருத்தியல் இயக்குநர் மணி ரத்னத்தின் பட்டறையில் இருந்து வந்தவர். அவர் இந்தி திணிப்புக்கு எதிரான 1965ஆம் ஆண்டின் மொழிப் போரைத் திரைப்படமாக இயக்குவது என்பதே அடிப்படையில் முரணானது. திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மறைந்த ஆலடி அருணா எழுதிய ‘இந்தி ஏகாதிபத்தியம்’ நூலில் 1965 மொழிப் போரைக் குறித்துப் பேசும் போது, ‘1938ல் பெரியாரைத் தமிழர்களின் நாயகனாக்கிய வரலாறு, 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது எதிரி முகாமில் திரைக்குப் பின்னால் இருந்து செயல்பட்டவராக அவரை மாற்றியது. 1938 ஆம் ஆண்டு ராஜாஜியை துரோகியாக அடையாளம் காட்டிய அதே வரலாறு, 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் நாயகனாக அவரை மாற்றியது.’ என்று குறிப்பிடுகிறார். இப்படியான நுட்பமான, சிக்கலான வரலாற்றுக் காலகட்டத்தை சுதா கொங்கரா போன்ற பார்ப்பன சார்பு கொண்ட இயக்குநர் எவ்வாறு கையாளப் போகிறார்?

மணி ரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. அடிப்படையில் திராவிட இயக்கத்திற்கு எதிரான திரைப்படம் ’ஆயுத எழுத்து’. அதே பாணியில் அவரின் ‘பராசக்தி’ திராவிட இயக்கத்திற்கு ஆதரவாக வெளிவருவதைவிட மிகப்பெரிய நகைச்சுவை எதுவாக இருக்கும் எனத் தெரியவில்லை. தூயத்தமிழ் பேசும் செல்வ நாயகம் (பாரதிராஜா) என்னும் அரசியல்வாதி, நவதாராளமயத்தால் மக்கள் பணியில் இருந்து விலக்கப்பட்ட இளைஞன் அர்ஜுன் (சித்தார்த்), திராவிட அரசியல் மீதான அதிருப்தியில் மாற்று அரசியலை முன்வைக்கும் மைக்கேல் (சூர்யா), திராவிட அரசியலால் தொடர்ந்து சுரண்டப்படும் ஒடுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்த இன்பசேகர் (மாதவன்) ஆகியோர் இடையிலான கதையாக இது அமைக்கப்பட்டிருந்தது.

சுதா கொங்கரா இயக்கிய ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தில் வெளிப்படையாகவே ஒடுக்கப்படும் மக்கள் கிறித்துவத்திற்கு பணத்திற்காக மதம் மாறுகின்றனர் என்று காட்சி வைத்திருந்தார். வடசென்னையைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை துளசி என்பவரின் கதையைத் திரைப்படமாக மாற்றியதோடு, அவருக்கு உரிய அங்கீகாரத்தை மறுத்திருக்கிறார் சுதா கொங்கரா என்பதை துளசி தன்னுடைய பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார். துளசி இன்று ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார். சுதா கொங்கரா ‘பராசக்தி’ இயக்கிக் கொண்டிருக்கிறார். கை ரிக்‌ஷாவுக்கு எதிராகவும், அபலைப் பெண்களுக்கு ஆதரவாகவும் ஆளும் வர்க்கத்தைக் கடுமையாக சாடிய அசலான ‘பராசக்தி’ தலைப்பை சுதா கொங்கரா பயன்படுத்தியிருப்பது மாபெரும் முரண்.

கேப்டன் கோபிநாத் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை பார்ப்பனிய நீக்கம் செய்து நெடுமாறன் ராஜாங்கம் என்ற திராவிட சார்பு பெயர் கொடுத்து தமிழ்நாட்டின் வெகுமக்களால் நுகரப்படும் பொருளாக ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை இயக்கினார் சுதா கொங்கரா. அதே திரைப்படத்தை, இந்தியில் இந்துத் தேசியத்தின் முகமாக அறியப்படும் அக்‌ஷய் குமாரை வைத்து ‘சர்ஃபிரா’ என்ற பெயரில் எடுத்தார். அதிலும் நாயகன் பார்ப்பன நீக்கம் செய்யப்பட்டவன். வெகுமக்கள் நுகர்வுக்காக கதாநாயகர்கள் பார்ப்பன நீக்கம் செய்யப்படுவதன் வழியாக, முதலாளித்துவத்தின் மீதும், இந்தியத் தேசிய நாயகர்களாக எவரும் உருவாக முடியும் என்ற போலிக் கற்பனையின் மீதும் நம்பிக்கையை உருவாக்கியபடி, லாபம் ஈட்டுவது சுதா கொங்கராவின் இந்தத் திரைப்படங்களின் தலையாயப் பணியாக இருந்திருக்கின்றன. எனினும் ’சர்ஃபிரா’ பெரும் தோல்வியடைந்தது.

’சர்ஃபிரா’ குறித்த நேர்காணல் ஒன்றில் புரட்சியாளர் ஜோதிபா பூலே குறித்த வரலாற்று நிகழ்வுகளை இந்துத் தேசியவாதி சாவர்க்கரின் வாழ்க்கையில் நிகழ்ந்ததாக பேசி சர்ச்சையில் சிக்கி, பிறகு அதே சாவர்க்கர் பாணியில் மன்னிப்பு கோரினார் சுதா கொங்கரா.

சுதா கொங்கரா மீதான இத்தகைய அரசியல் விமர்சனங்களை வரிசையிடுவதன் அடிப்படை காரணமே, இந்த நபர் எத்தகைய கொள்கையோடு தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட மாபெரும் புரட்சி ஒன்றைக் கையாளுவார் என்பதையும், ‘பராசக்தி’ என்ற தலைப்பை இவருக்குக் கொடுக்கப்பட்டதோடு, திமுகவின் வரலாற்றில் முக்கிய நிகழ்வு ஒன்றை இயக்க வாய்ப்பு பெற்றார் என்பதையும் கேள்வி எழுப்புவதற்காகவே. திராவிட அரசியலின் திரை மரபு இன்றடைந்திருக்கும் அவலநிலையின் வெளிப்படையான சான்று சுதா கொங்கராவின் ‘பராசக்தி’.

விஜயின் ‘ஜன நாயகன்’ நாயக வழிபாட்டின் வழியாக, சமகால அரசியல் மீட்பராக விஜயை முன்வைப்பதற்கு எதிராக, சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ மூன்று நாயகர்களைக் கொண்டிருக்கிறது; தனிநபர் அரசியலுக்கு எதிரானதாக சித்தரிக்கப்படுகிறது. இன்றைய இளைஞர்கள் விஜய் பக்கம் இருப்பதைக் கேள்வி எழுப்பும் விதமாக, தமிழ்நாட்டின் இளைஞர்கள் திமுகவின் தொடக்க காலத்தில் எத்தகைய அரசியல் உணர்வோடு இருந்தனர் என்பதை நேரெதிராக நிறுத்தி ‘Barbenheimer’ போன்ற சூழலைத் தமிழ் திரையில் உருவாக்க முயல்கிறது. எனினும், இதன் பின்னணியில் இருக்கும் போலித்தனங்களை அம்பலப்படுத்த வேண்டியது கடமையாகிறது.

சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ‘The World of Parasakthi’ கண்காட்சியை ஆய்வின் நிமித்தமாக பார்வையிட நேர்ந்தது. 1960களின் கலைப் பொருள்களை காட்சிப்படுத்தியிருந்ததன் வழியாக, வெகுமக்களால் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டிருந்தன. இதன்வழியாக, பொதுமக்கள் அந்த கண்காட்சியில் இருக்கும் பொருள்களோடு எடுக்கும் படங்களைப் பதிவிடுதன் வழியாக, படத்தின் விளம்பரதாரர்களாக அவர்களே மாறிக் கொள்கின்றனர். மேலும், சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ உலகத்திற்குள் வாழும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைக்கிறது. ஏறத்தாழ Disneyland, Squid Game பாணியிலான விளம்பரச் செயற்பாடு இது. இது கட்டணமில்லாமல் நிகழ்த்தப்பட்டாலும், ஏதோவொரு வகையில் திரைப்படத்தின் வருவாய்க்கு உதவும் அனுபவப் பொருளாதாரமாக (Experience economy) இயங்குகிறது.

‘தமிழ் வாழ்க’, ‘இருமொழிக் கொள்கை தேவை’ போன்ற பதாகைகளொடு பொதுமக்கள் படம் எடுத்துக் கொள்வது அரசியலாக அல்லாமல், திரை அழகியல், விளம்பர நோக்கங்களுக்காக அரசியல் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இறுதியாக, மொழிப்போர் தியாகிகளின் படங்களும், அவர்களை விட பெரிதாக நடிகர் சிவகார்த்திகேயனின் படமும் வைக்கப்பட்டிருந்தது. இவை அடிப்படையில் அவர்களுக்கான அஞ்சலியாக அல்லாமல், மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தையும், கலைஞரின் ‘பராசக்தி’ என்ற புரட்சிகர திரைப்படத்தின் நினைவலைகளையும் சமகால திரை வணிகத்திற்காக, சுதா கொங்கரா போன்ற திராவிட எதிர்ப்பு இயக்குநர்களின் வழியாக சுரண்டுவதாகவே இருக்கிறது. உதாரணமாக, 1965 மொழிப்போர் தியாகி ‘கீழப்பழுவூர்’ சின்னசாமி 1964ல் இந்தி ஆதிக்கத்திற்கு எதிராக தீக்குளித்து உயிரிழந்த முதல் தியாகி; இவரின் வாழ்நாள் காலத்தை 1915-1939 என்று குறிப்பிட்டிருக்கிறது சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ குழு. இதனை சரிசெய்ய யாரும் கேள்வி எழுப்பவில்லை என்பது நம் சமகால சமூகத்தின் அரசியல் நீக்க அவலநிலையைச் சுட்டிக்காட்டுகிறது.

’ஜன நாயகன்’, சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ தமிழ்ச் சமூகத்தின் சமகால கலாச்சார உரையாடல்களில் பெரும் பங்கை வகிக்கப் போகிறது. சுதா கொங்கராவின் பின்னணியைத் தெரிந்துகொண்டே திமுக ஆதரவுத் தரப்பு அறிவுஜீவிகள் அவரின் ‘பராசக்தி’ திரைப்படத்தை மாபெரும் புரட்சித் திரைப்படமாக அங்கீகரிப்பார்கள். வழக்கமாக ஒரு திரைப்படம் வெளியாகும் முன்பே அதுகுறித்த விமர்சனங்களை முன்வைப்பதை நான் எப்போதும் தவிர்த்தே வந்திருக்கிறேன். ஆனால், இது கலாச்சார மாற்றங்களை உருவாக்கும் நிகழ்வாக இருக்கப் போவதுடன், சுதா கொங்கரா போன்ற இயக்குநர்களின் தோள்களில் திராவிட இயக்கத்தின் அரும்பணிகளைக் கிடத்தும் செயல்பாடாக மாறிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு இதனைப் பேச வேண்டியதாக இருக்கிறது.

இந்தக் கட்டுரையின் அடுத்தடுத்த பாகங்களை இரு திரைப்படங்களும் வெளிவந்த பிறகு எழுதப்பட்டு வெளியிடப்படும். அதுவரை, சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ ரசிகர்கள் அவரது ‘The World of Parasakthi’ சென்று களிப்படையலாம். விஜய் ரசிகர்களும் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் உலகத்தை அனுபவிப்பதற்கான இடங்களாகத் தானே அவரின் அரசியல் பிரச்சாரக் கூட்டங்கள் ஏற்கனவே இருக்கின்றன?

இதுவே தமிழ்ச் சமூகத்தின் அரசியல், கலாச்சார வெளிகளின் சமகால நிலை.

  • ர. முகமது இல்யாஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.