கொரோனா: வீழ்ச்சியின் புதிய உச்சத்தை எட்டும் ஊடகத்துறை!

    மற்ற எல்லா துறைகளைப் போலவும் ஊடகத்துறையும் கொரோனா விளைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அச்சு ஊடகம் ஏற்கெனவே தள்ளாட்டத்தில் இருந்தது. இப்போது அந்த வீழ்ச்சி ஒரு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.

    காட்சி ஊடகங்களைப் பொருத்தவரை டி.வி. பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், விளம்பர வருமானம் இல்லை. அதேபோலதான், டிஜிட்டல் மீடியாவிலும் பார்வையாளர் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் விளம்பர வருவாய் இல்லை. இந்த நிலைமையில், இந்தியாவில் புகழ்பெற்ற பல ஊடகங்கள் ஊதியவெட்டு, ஆட்குறைப்பு என்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

    தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய வெட்டின்படி, ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு சிக்கலில்லை. 5 முதல் 7.5 லட்சம் ஆண்டு சம்பளம் வாங்குவோருக்கு 10% சம்பள வெட்டு. 10 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 15% சம்பள வெட்டு. 20 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 20% சம்பள வெட்டு… என்று போகிறது.

    ’’தற்போதைய நிலைமையில் நாள் ஒன்றுக்கு 3.5 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக’’ குறிப்பிடும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு, ஆண்டு ஊதியம் 6 லட்சம் வரை வாங்குவோருக்கு சம்பள வெட்டு செய்யவில்லை. அதைவிட அதிக ஊதியம் வாங்குவோருக்கு 5% முதல் 15% சதவிகிதம் வரை ஊதியவெட்டை அறிவித்துள்ளது.
    News Nation Network நிறுவனம், தனது இங்கிலிஷ் டிஜிட்டல் டீம் 15 பேரை மொத்தமாக வேலையை விட்டு அனுப்பி, அந்த பிரிவையே கலைத்துவிட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் போலவோ, ஹிந்துஸ்தான் டைம்ஸ் போலவோ இவர்கள் அதிக ஊதியம் பெற்றவர்கள் அல்ல. பெரும்பாலும் 25 ஆயிரம், 30 ஆயிரம் சம்பளம் வாங்கியவர்கள். அந்த வேலையும் போய்விட்டது.

    புகழ்பெற்ற டிஜிட்டல் செய்தி ஊடகங்களில் ஒன்றான The Quint, தனது 45 ஊழியர்களை காலவரையற்ற; ஊதியமற்ற கட்டாய விடுப்பில் அனுப்பியிருக்கிறது. இவர்களுக்கு ஒரு மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. நிலைமை சரியான பிறகு மீண்டும் வேலை வழங்கப்படலாம். அது அப்போதைய சூழலை பொருந்தது. இப்போதைக்கு வேலை இல்லை.

    டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின், ஞாயிறு இணைப்புகளில் ஒன்றான The Life பிரிவில் பணிபுரிந்த 3 ஊழியர்கள் வேலையை விட்டு அனுப்பப்பட்டுள்ளனர். தி இந்து குழுமத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய வெட்டின்படி, ஆண்டு ஒன்றுக்கு 10 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 8%, 15 லட்சம் வரை சம்பளம் வாங்குவோருக்கு 12%, 25 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 16%, 35 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 20%, 35 லட்சத்துக்கும் அதிகமாக சம்பளம் வாங்குவோருக்கு 25% என்ற ஊதிய வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ் ஊடகங்களின் நிலைமை தெரியவில்லை. நிச்சயம் அங்கும் இத்தகைய கெட்டசெய்திகளை எதிர்பார்க்கலாம்.

    கூடுதல் தகவல்களுக்கு: Newslaundry

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.