ஊரடங்கு: கோவில் பூசாரியை முஸ்லிம் எஸ்.பி தாக்கினாரா?

மத்தியப் பிரதேசத்திலுள்ள ஒரு கோவிலில் ராமநவமி நாளென்று தனியாக வழிபாடு செய்துவந்த பூசாரி உபேந்திர குமார் பாண்டே என்பவரை ரேவா எஸ்.பி ஆபித்கான் கொடூரமாகத் தாக்கியதாக வடமாநில வட்டாரங்களில் ஒரு செய்தி வைரலாக உலாவிக்கொண்டிருக்கிறது. இதற்காக ட்விட்டரில் #aabid_khan_ko_barkhast_karo (ஆபித்கானை பணிநீக்கம் செய்) என்ற ஹேஷ்டேக் மூலம் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இச்செய்தி உண்மைக்குப் புறம்பானது என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஊரடங்கின்போது ராஜ்குமார் மிஷ்ரா எனும் காவல் ஆய்வாளரே பூசாரியைத் தாக்கியுள்ளார்.

பூசாரியைத் தாக்கும் ராஜ்குமார் மிஷ்ரா [படம்: விஜய்குமார்]

இச்செய்தியிலுள்ள பொய்கள்:

1. ராமநவமி விழாவிற்கு பூசாரி தனியாக வழிபாடு செய்ய வந்தார்.
2. திடீரென்று காவல்துறையினர் அவரைத் தாக்கத் தொடங்கினர்.
3. பூஜை செய்யும் இடத்துக்கு காவலர்கள் காலனிகளுடன் வந்து அவமதித்தனர்.
4. இதற்கெல்லாம் உத்தரவிட்டவர் ரேவா எஸ்.பி. அபித்கான்.

ரேவாவின் ஐ.ஜி. சஞ்சல் சேகருடன் விசாரித்து இந்த விஷயங்களை லல்லண்டாப் தளம் வெளிக்கொண்டு வந்துள்ளது.

கோவிலில் கூடியிருந்த பெண்கள் [படம்: விஜய்குமார்]

உண்மை இதுதான்:

1. படத்தில் இருக்கும் நபர் ரேவாவின் எஸ்.பி. அபித்கான் அல்ல. அவர் அந்த இடத்திற்கே செல்லவில்லை.
2. புகைப்படத்தில் இருப்பவர் சிவில் லைன் காவல்நிலைய ஆய்வாளர் ராஜ்குமார் மிஷ்ரா.
3. பூசாரி கோவிலில் தனியாக இல்லை. பெண்கள் கூட்டம் கூடியிருந்தது எனத் தெரியவந்துள்ளது.

ரேவாவில் ஆஜ்தக் பத்திரிகையாளர் விஜய்குமார் கூறும்போது, இந்தக் கோவில் தேகா, பத்மதர் காலனியில் அமைந்துள்ளது. முன்பே மூன்று முறை கூட்டத்தைத் திரட்டக்கூடாது என பூசாரி உபேந்திர குமார் பாண்டேவிடம் போலீசார் அறிவுறுத்தினர். இந்நிலையில்தான், ஏப்ரல் 1ம் தேதி இந்த நிகழ்வு நடத்தப்பது தெரிகிறது என்றார்.

ரேவா நகரின் ஐ.ஜி. கூறும்போது, தற்போது இந்தக் கட்டுப்பாடு அனைத்து மத வழிபாட்டு இடங்களிலும் பின்பற்றப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், மற்ற மத இடங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் தெரிவித்தார். கோகர் மற்றும் பிச்சியாவின் இரண்டு மசூதிகளிலும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். அங்கே 40-50 பேர் தொழுகைக்காக கூடியதற்காக 188 வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எஸ்.பி ஆபித்கான் தலைமையில் மசூதியில் இருந்து 36 பேரும், கல்லறையிலிருந்து 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களின் வெளியான செய்திகள் மூலம் அறிய முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.