Home Blog Page 7

2ஜி ஊழல்: பார்ப்பனக் கும்பலின் இரட்டை நாக்கு!

கருப்புப் பண விவகாரத்தில் மோடி அரசு அடித்த பல்டியை முட்டுக் கொடுக்க முன்வந்த துக்ளக் சோ, “இவ்விவகாரத்தில் முந்தைய காங்கிரசு அரசு கூறியதையெல்லாம் நம்பாமல், அக்கட்சிக்கு நாம் அநீதி இழைத்துவிட்டதாக”த் தனது ஏட்டில் தலையங்கமே எழுதி முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார். இதேபோல நரேந்திர மோடியின் ஊதுகுழல்களுள் ஒன்றான இந்தியா டுடே இதழ், 2ஜி, நிலக்கரி ஊழல்களையும், கருப்புப் பண விவகாரத்தையும் ஆர்வக்கோளாறின் காரணமாக ஊடகங்கள் ஊதிப்பெருக்கிவிட்டதாகக் குறிப்பிட்டு கட்டுரையொன்றை வெளியிட்டிருக்கிறது. பார்ப்பன-பாசிச கும்பல் தனது சுயநலனுக்காக எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் பேசும் தன்மையும் வரலாறும் கொண்டது என்பதற்கு இவை மற்றுமொரு ஆதாரமாக அமைந்துவிட்டன.

காங்கிரசு தலைமையில் நடந்துவந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கே.ஜி. எண்ணெய் வயல் முறைகேடு, ஏர்-இந்தியா ஊழல், டெல்லி விமான நிலைய ஊழல், 2ஜி முறைகேடு, நிலக்கரி வயல் முறைகேடு உள்ளிட்டுப் பல முறைகேடுகளும் ஊழல்களும் நடந்திருந்தபோதும், பார்ப்பன ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலும் 2ஜி அலைக்கற்றை முறைகேடை மட்டுமே உள்நோக்கத்தோடு உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டன. அலைக்கற்றை ஊழலை தி.மு.க.வைத் தாக்கித் தனிமைப்படுத்துவதற்குக் கிடைத்த ஆயுதமாகக் கண்ட அக்கும்பல், இதனை மற்ற ஊழல்களைவிடப் பிரம்மாண்டமானதாக ஊதிப் பெருக்கியது. அதனாலேயே, சி.ஏ.ஜி. அறிக்கையில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழப்பு குறித்து மூன்றுவிதமான மதிப்பீடுகள் சொல்லப்பட்டிருந்தாலும், 1.76 இலட்சம் கோடி ரூபாயை முன்வைத்துப் பிரச்சாரம் நடத்தியது.

மன்மோகன் சிங்கின் பரிசுத்த பிம்பத்தை உடைப்பதற்கு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளைக் கையில் எடுத்துக் கொண்ட பா.ஜ.க., இந்த ஒதுக்கீடு குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என மைய ஊழல் கண்காணிப்பு கமிஷனரிடம் புகார் கொடுத்தது. மேலும், மன்மோகன் சிங் அரசு பதவி விலக வேண்டும் என்றும் கோரி, தொடர்ந்து 13 நாட்களுக்கு நாடாளுமன்றத்தை முடக்கியது.

2ஜி ஊழலை ஊடகங்களை ஊதிப் பெருக்கி விட்டதாக ஒப்புக் கொண்டுள்ள இந்தியா டுடே குழுமத்தின் துணைத்தலைவர் சேகர் குப்தா : காலங்கடந்த ஞானோதயத்தின் காரணமென்னவோ?

2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப் பட்ட அத்வானி, கருப்புப் பண விவகாரத்தை முன்வைத்து இரத யாத்திரை நடத்தினார். அத்தேர்தல் சமயத்தில் பா.ஜ.க. சார்பாக அமைக்கப்பட்ட பொருளாதார வல்லுநர் குழு, இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் குறித்து அறிக்கையொன்றை தயாரித்து வெளியிட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தல்களின்பொழுது கருப்புப் பணத்தை மீட்கும் கதாநாயகனாக மோடி முன்னிறுத்தப்பட்டார். ஊழலுக்கு எதிராகவும் கருப்புப் பணத்தை மீட்பது தொடர்பாகவும் அவரும் பா.ஜ.க.வும் அடித்த பஞ்ச் டயலாக்குகள், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களைக்கூட கூச வைத்தன.

பா.ஜ.க. மற்றும் மோடியின் இந்த ஊழல் எதிர்ப்பு, கருப்புப் பண மீட்பு சவடால்களெல்லாம் ஓட்டுப் பொறுக்கும் சுயநல உள்நோக்கத்திற்கு அப்பாற்பட்டு, வேறு எதையும் சாதிக்காது எனப் புரட்சியாளர்களும் ஜனநாயக சக்திகளும் அம்பலப்படுத்தினாலும், மோடிக்காக கார்ப்பரேட் ஊடகங்கள் முனைந்து நடத்திய மிருகத்தனமான பிரச்சாரத்தின் மூலம் இவையெல்லாம் அமுக்கப்பட்டன.

எனினும், கார்ப்பரேட் ஊடகங்களால் மோடிக்குப் பூசப்பட்ட அரிதாரமெல்லாம் ஆறே மாதங்களில் கலைந்துபோனது. கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரசே கேலிபேசும் அளவிற்கு மோடி கும்பல் படுகேவலமான பல்டி அடித்திருக்கிறது. நிலக்கரிச் சுரங்க விவகாரமோ விநோதமான முடிவை எட்டிவிட்டது. வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட சுரங்கங்களையும் உள்ளிட்டு 214 சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த மறுநிமிடமே, அச்சுரங்கங்களை உடனடியாக மறுஏலம் நடத்தித் தனியாருக்கு கைமாற்றிவிடுவதற்கு ஏதுவாகப் புதிய சட்டமொன்றையே இயற்றிவிட்டது, மோடி அரசு. பா.ஜ.க. மட்டுமல்ல, 2ஜி, சுரங்க வயல் ஒதுக்கீடுகளில் நடந்த முறைகேடுகள் மற்றும் கருப்புப் பண விவகாரத்தை முன்வைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியைக் கிழிகிழியென கிழித்துவந்த ஊடகங்களும் தட்டைத் திருப்பிப் போட்டு தட்டத் தொடங்கிவிட்டன.

அன்னா ஹசாரே தலைமையில் நடத்தப்பட்ட ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தைத் தயாரித்து வழங்கியதில் ஆர்.எஸ்.எஸ்.-க்கு இணையான பங்கு கார்ப்பரேட் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கும் உண்டு. அந்த நாடகத்திற்கு மிகப்பெரும் விளம்பரத்தை அளித்த ஊடகங்களுள் ஒன்றான இந்தியா டுடே குழுமம், காங்கிரசு ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை ஆர்வக்கோளாறு காரணமாக ஊடகங்கள் மிகைப்படுத்திவிட்டதாக இப்பொழுது ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.-இன் அதிகாரபூர்வமற்ற பத்திரிகையாகச் செயல்பட்டுவரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முன்னாள் தலைமை ஆசிரியரும், இந்தியா டுடே குழுமத்தின் துணைத் தலைவருமான சேகர் குப்தா இந்த ஊழல்களை தற்பொழுது இப்படி மதிப்பீடு செய்கிறார்:

“2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.ஏ.ஜி. ரூ.57,000 கோடி முதல் ரூ.1.76 இலட்சம் கோடி வரை பல்வேறு எண்ணிக்கையை, ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பாகக் குறிப்பிட்டபோது, எல்லோரும் அதிகபட்ச தொகையைத் தேர்வு செய்தனர். மீடியா இதிலிருந்து கொஞ்சம் விடுபடத் தொடங்கிவிட்டது.” (இந்தியாடுடே, நவ.12)

பூஜ்யங்களின் எண்ணிக்கையைக் காட்டியே 2ஜி ஊழலைப் பரபரப்பூட்டும் செய்தியாக்கின ஊடகங்கள்.

ஆ.ராசா பதவி விலகிய பிறகு நடந்த அலைக்கற்றை ஏலங்களின் மூலம் அரசுக்குக் கிடைத்த வருமானமே, மீடியாக்கள் அலைக்கற்றை ஊழல் குறித்து உருவாக்கி வைத்திருந்த 1.76 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு என்ற அனுமான பூதத்தை அடித்து நொறுக்கிவிட்டது. ஆனாலும், ஊடகங்கள் தங்களது குட்டு உடைந்து போனதை கமுக்கமாக மூடிமறைத்ததோடு, 2ஜி ஒதுக்கீடில் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டதைப் போலவே நாடாளுமன்றத் தேர்தல்கள் முடியும் வரை பிரச்சாரம் செய்துவிட்டு, இப்பொழுது யோக்கியவானைப் போல, “2007-ல் ரூ.1.76 இலட்சம் கோடி என்பது ஜிடிபியில் 4.4 சதவீதம். சிறிய அளவு ஸ்பெக்ட்ரம்மின் மதிப்பு இந்த அளவுக்கு இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள்” என எழுதுகின்றன.

இந்தியா டுடேயின் இந்த திடீர் ஞானோதயம் 2ஜி-யோடு மட்டும் நின்றுவிடவில்லை. நிலக்கரியும் நல்ல உதாரணம். “2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் போட்டிகள் மற்றும் இதர விசயங்களில் நடந்தது போல நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிலும் ஐ.மு.கூ. அரசில் ஊழல் இருந்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு ஒதுக்கீடும் முறைகேடானதா? மீண்டும் கொஞ்சம் பூஜ்யங்களைச் சேர்த்துக் கொள்வதால் என்ன தப்பு என்பது போல சி.ஏ.ஜி. சொன்ன சில இலட்சம் கோடி தொகை கற்பனையானதா? தே.ஜ.கூ., குறிப்பாக பா.ஜ.க. அதிகபட்ச தொகையைத் தேர்வு செய்தது. இதன் விளைவாக, நிலக்கரி வயல் ஒதுக்கீடு வழக்கில் 1993 முதல் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படுவதைச் செய்வதறியாமல் பார்த்துக் கொண்டிருந்தது” என பிலாக்கணம் பாடுகிறார், சேகர் குப்தா.(இந்தியா டுடே, நவ.12)

ஊழல் விவகாரம் போலவே கருப்புப் பண விவகாரமும் மிகைப்படுத்தப்பட்டதாக ஒப்புக் கொண்டுள்ள சேகர் குப்தா, “கருப்புப் பணம் தொடர்பான எண்ணிக்கையை நடைமுறை சாத்தியம் எனும் சோதனைக்கு (யாரும்) உட்படுத்தவில்லை. இது ஜிடிபியைவிட பல மடங்கு அதிகமானது என்றும், சுவிஸ் வங்கியில் இவை முடங்கிக் கிடக்கிறது என்றும் பாபா ராம்தேவ் மட்டுமே கூறமுடியும். இதைத் தனது தேர்தல் பிரச்சாரத்தின் மையமாக்குவதற்கு முன்பாக, ஆட்சிக்கு வரும் வாப்பு உண்மையில் இருக்கிறது என்றும், இது உருவாக்கிய பூதத்தை சமாளித்தாக வேண்டிய நிலை ஏற்படும் என்றும்நினைவில் கொள்ள யாரேனும் பா.ஜ.க.விற்கு அறிவுறுத்தியிருக்கலாம். உங்கள் சொந்த கற்பனையில் சிக்கித் தவிப்பதைவிட தர்மசங்கடமானது வேறில்லை” என அடக்கி எழுதுகிறார்.

கருப்புப் பண விவகாரத்தில் சேகர் குப்தாவைவிட துக்ளக் சோவின் மழுப்பல்கள், மோடியின் ‘தர்மசங்கடத்தை’ நமக்கு இன்னும் தெளிவாக விளங்க வைக்கின்றன.

“கருப்புப் பணத்தை அயல்நாட்டு வங்கிகளில் வைத்திருப்போரின் பட்டியலை மத்திய காங்கிரஸ் அரசு பெற்றும்கூட, அதை வெளியிடாமல் இருந்ததற்குச் சில காரணங்களை அந்த அரசு கூறியது. அவை பொய்கள் என்று தீர்மானித்து, அந்த அடிப்படையில் அப்போது மத்திய அரசை விமர்சனம் செய்தவர்களில் நாமும் அடங்குகிறோம்.

“கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரசு மீது வீணாகச் சந்தேகப்பட்டு, அதற்கு அநீதி இழைத்து விட்டோம்” எனக் கூறி பா.ஜ.க.வின் பல்டியை நியாயப்படுத்துகிறார், துக்ளக் சோ

இப்போது அந்தக் காரணங்களில் சிலவற்றை பா.ஜ.க. அரசும் கூறுகிறபோது – இன்றைய சூழ்நிலையில் நமக்கு அந்தக் காரணங்களை ஏற்கத் தோன்றுகிறது. காங்கிரஸ் சரியாக விளக்காததாலோ, விவரங்கள் சரியாக வெளியாகாததாலோ, காங்கிரஸ் கூறுகிற எதுவுமே நிஜமாக இருக்காது என்ற நமது சந்தேகத்தினாலோ – அன்று காங்கிரஸ் கூறிய காரணங்களை நாம் நிராகரித்தோம். அந்தப் பட்டியலில் காங்கிரஸுக்கு வேண்டியவர்கள் – காங்கிரஸ்காரர்களேகூட – இருக்கலாம்; ஆனால் அதனுடன் கூடவே அயல்நாட்டு ஒப்பந்தங்கள் என்ற சிக்கலும் இருந்திருக்கிறது. அதைக் காங்கிரஸ் கூறுகிற நொண்டிச் சாக்காக நினைத்து ஒதுக்கியது நமது தவறு; நம்மால் காங்கிரஸுக்கும், அன்றைய மத்திய அரசுக்கும் இழைக்கப்பட்ட அநீதி அது.”

(துக்ளக், 12.11.2014)

“காங்கிரசு சரியாக விளக்கவில்லையாம், விவரங்கள் சரியாக வெளியாகவில்லையாம்” – ராமஸ்வாமி அய்யர் எப்படியெல்லாம் நாக்கூசாமல் பொய் சொல்கிறார் பாருங்கள். கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரசுக்கு இழைக்கப்பட்ட அநீதி கிடக்கட்டும். இதில் மக்களுக்குச் சாத்தப்பட்ட பட்டை நாமத்தைப் பற்றியல்லவா யோக்கியவான் சோ ராமஸ்வாமி பேசியிருக்க வேண்டும்; மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும். மாறாக, கருப்புப் பண விவகாரத்தில் இரட்டை வரி விதிப்பு போன்ற நடைமுறை ‘சிக்கல்கள் ’ இருப்பது இப்பொழுதுதான் தெரியவந்தது போல நடிக்கிறார்கள்.

முன்னாள் தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராய்தான், 2ஜி விவகாரம் குறித்து பேட்டிகள் அளித்து, அதனை பா.ஜ.க.விற்கும் ஊடகங்களுக்கும் பெருந்தீனியாகக் கொடுத்தார். இதற்குக் கைமாறாக பா.ஜ.க.வும் ஊடகங்களும் விநோத் ராயை ஊழலை ஒழிக்க வந்த ஹீரோவாகத் தூக்கி வைத்துக் கொண்டாடின. அப்படிபட்ட ஊடக வெளிச்சத்தில் மிதந்த விநோத் ராய், “தணிக்கை துறை பல முறைகேடுகள் குறித்து அறிக்கை அளித்திருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள்தான் திட்டமிட்ட நோக்கத்தோடு ஒன்றிரண்டை மட்டும் எடுத்துக்கொண்டு பெரிதுபடுத்துகின்றன” என சம்பந்தமில்லாத மூன்றாவது நபர் போல இப்பொழுது 2ஜி குறித்து கருத்துத் தெரிவிக்கிறார். (என்.டி.டிவி பேட்டி)

2ஜி ஒதுக்கீட்டு விவகாரத்தில் மன்மோகன் சிங்கை ஆ.ராசா ஏமாற்றி விட்டதைப் போல அவதூறு செய்து ஊடகங்கள் வெளியிட்ட கேலிச்சித்திரப் படத்தின் ஒரு வகை மாதிரி.

நிதியமைச்சர் நாற்காலியைப் பிடித்துவிட்ட அருண் ஜேட்லி, “கணக்கு தணிக்கை அதிகாரிகள் கணக்குகளை மட்டுமே தணிக்கை செய்ய வேண்டும். அவை பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளிவர வேண்டும் என்பதற்கு முயற்சிக்கக் கூடாது” என இப்பொழுது எச்சரிக்கிறார். (துக்ளக், 19.11.2014)

இந்தப் பித்தலாட்டத்தனங்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “நாம் ஆட்சிக்கு வந்தால் இந்தப் பிரச்சினையில் என்ன அணுகுமுறையைக் கையாள்வோம் என யோசித்துவைத்துக் கொண்டா ஒரு எதிர்க்கட்சி செயல்படுகிறது. இது எல்லா ஜனநாயக நாடுகளிலும் நடக்கிற தமாஷ்தான்” எனப் பதில் அளிக்கிறார், துக்ளக் சோ. (துக்ளக், 19.11.2014)

“அரசியலில் ஓரளவு மிகைப்படுத்தலை, அதிலும் குறிப்பாக தேர்தல் நேரத்தில் இந்தச் செயலை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இவை நினைத்துப் பார்க்க முடியாத அளவை அடையும்போதுதான் சிக்கல் வருகிறது” எனத் தந்திரமாக எழுதி, ஊடகங்களையும் பா.ஜ.க.வையும் விடுவிக்க முயலுகிறார், சேகர் குப்தா. (இந்தியா டுடே, நவ.12)

முன்பு தாங்கள் சொன்னவற்றுக்கு, நடந்து கொண்டதற்குப் பொறுப்பெடுத்துக் கொள்ளாமல், அதனைத் தமாஷாகப் பார்க்க வேண்டும் என அத்துவிட்டுப் பேசுவதற்கு எத்துணை கொழுப்பு இருக்க வேண்டும்! இப்படிபட்ட இரட்டை நாக்கு கொண்ட பார்ப்பனக் கும்பல், தம்மை தார்மீகப் பொறுப்பின் காவலனாகச் சித்திரித்துக்கொண்டு ஊருக்கு உபதேசம் செய்வதுதான் உண்மையிலேயே தமாஷானது. ஆட்சியைப் பிடித்த பிறகு ஊழல், கருப்புப் பணம் என்பனவற்றையெல்லாம் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமுமில்லை. கார்ப்பரேட் முதலாளி வர்க்கமும் அதனை விரும்பப் போவதில்லை என்பதால்தான் சோவும், சேகர் குப்தாவும் அவை குறித்து புதிய பொழிப்புரையை எழுதுகிறார்கள். ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்கவந்த மாவீரனைப் போலக் காட்டப்பட்ட மோடியும், அவரது பரிவாரங்களும் அடிப்படையிலேயே நாணயமற்றவர்கள்; இரட்டை நாக்குப் பேர்வழிகள் என்பதுதான் இந்தப் பொழிப்புரையிலிருந்து ஓட்டுப்போட்ட பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டிய விடயமாகும்.

– திப்பு

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014

(நன்றி: வினவு)

காவி மோடியின் பணியில் கார்ப்பரேட் மீடியா

தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஊடகங்கள் என்றைக்குமே தங்களது முதலாளிகளின் விருப்பத்தின்பேரில்தான் செயல்படுகின்றன. அவை ஒரு நாளும் நடுநிலைமையோடு செயல்பட்டதில்லை. இதுநாள்வரை நாம் கூறியபோதெல்லாம் ஏற்காதவர்களுக்கு இந்த உண்மையை ஆம் ஆத்மி கட்சியினர் தமது பிரச்சாரத்தின் மூலம் விளக்கி வருகின்றனர்.

சி.என்.என்.– ஐ.பி.என். ஆங்கிலத் தொலைக்காட்சியில் எரிவாயு விலை உயர்வு தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில், கோதாவரி எண்ணெய் வயலில் இருந்து எடுக்கப்படும் எரிவாயுவின் விலையை அம்பானிக்கு உயர்த்திக் கொடுத்திருக்கும் காங்கிரசு அரசின் முடிவை நியாயப்படுத்திப் பேசினார் ஒரு வல்லுநர். அந்த விவாதத்தில் பங்கேற்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், மேற்படி வல்லுநருக்குப் படியளப்பவர் முகேஷ் அம்பானி என்ற உண்மையை அம்பலப்படுத்தி னார். “உங்கள் தொலைக்காட்சியே அம்பானிக்குச் சோந்தமானதுதானே, பிறகு உங்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்” என்று பிரசாந்த் பூஷண் கூற, அதுவரை நடுநிலையாகப் பேசுவது போல பாவ்லா காட்டி வந்த பிரபல ஊடகவியலாளர் கரண் தாப்பர், ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகளின் பாணியில் கூச்சல் போட்டு பிரசாந்த் பூஷணைப் பேசவிடாமல் தடுக்க வேண்டியதாயிற்று.

அதேபோல சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருக்கும் பத்திரிக்கையாளர் ஆசிஷ் கேத்தான், “எனக்கு பத்திரிகைத் துறையைப் பற்றித் தெரியாதா? உங்கள் தொலைக்காட்சி நடுநிலையாக நடந்து கொள்ளும் என்று என்று என்னை எப்படி நம்பச் சொல்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்.

“தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை ஊடகங்கள் தங்களை இருட்டடிப்பு செய்கின்றன, மோடியை பிரதமராக்கத் திட்டமிட்டு விளம்பரப்படுத்துகின்றன” என்று குற்றஞ் சாட்டித் தான் ஆம் ஆத்மி கட்சியினர் தற்போது ஊடகங்களைத் தோலுரித்து வருகின்றனர். தனியார்மயத்தின் ஆதரவாளரான கேஜ்ரிவால், தேர்தல் பிரச்சார உத்தியாகத்தான் இதனைச் செய்கிறார் என்ற போதிலும், ஆம் ஆத்மி கட்சியினர் முன்வைக்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஊடகங்களால் முடியவில்லை. “உங்களை இருட்டடிப்பு செய்வதாகக் கூறுகிறீர்களே, நாங்கள் உங்களைப் பிரபலப்படுத்தாவிட்டால், நீங்கள் இன்றைக்கு ஆளாகியிருக்க முடியுமா? உங்களைப் புகழ்ந்தால் இனிக்கிறது, விமர்சனம் செய்தால் வலிக்கிறதா” என்று எதிர்க்கேள்வி எழுப்புகின்றன ஊடகங்கள். ஊடகங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

அன்னா ஹசாரேயும், அர்விந்த் கேஜ்ரிவாலும் அவர்களது ஊழல் ஒழிப்பு இயக்கமும் கார்ப்பரேட் முதலாளிகளின் ஊடகங்களால்தான் திட்டமிட்டே ஊதிப் பெருக்கிக் காட்டப்பட்டன. வேறு செய்தியே கிடையாது என்பது போலவும், இதைத்தவிர நாட்டில் வேறு மக்கள் போராட்டங்களே நடக்கவில்லை என்பது போலவும் அன்று ஊடகங்களால் நடத்தப்பட்ட இந்த ஆபாசக் கூத்துதான் இன்று அரவிந்த் கேஜ்ரிவால் பிரபலமாவதற்குக் காரணமாக அமைந்தது என்பது மறுக்கவியலாத உண்மை.

அரவிந்த் கேஜ்ரிவாலையும் அன்னா ஹசாரேவையும் ஆளும் வர்க்க ஊடகங்கள் அன்று விளம்பரப்படுத்தியதற்கு ஒரு நோக்கம் இருந்தது.

அன்று மத்திய இந்தியா முழுவதும் ஒரு அறிவிக்கப்படாத போரை இந்திய அரசு நடத்தி வந்த காலகட்டமாகும். கார்ப்பரேட் முதலாளிகளின் கனிமவளக் கொள்ளைக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கத்தான் மாவோயிஸ்டுகள் மீதான தாக்குதலை அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது என்பது பரவலாக அம்பலமாகியிருந்தது.

அதேசமயம், காமன்வெல்த் ஊழல், 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் எனத் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக ஊழல்களும் அம்பலமானதுடன், இந்த ஊழல்களில் கார்ப்பரேட் முதலாளிகளின் பாத்திரத்தை நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் பதிவுகள் அம்பலமாக்கின.

(கடிகாரச் சுற்றுப்படி) மோடிக்கு ஆதரவாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக தி இந்து நாளிதழிலிருந்து வெளியேற்றப்பட்ட சித்தார்த் வரதராஜன்; ஓபன் மேகசின் பத்திரிகையிலிருந்து நீக்கப்பட்ட அர்தோஷ் சிங் பால்; சன் டி.வி.யால் ஓரங்கட்டப்பட்டுள்ள வீரபாண்டியன்; சி.என்.என் ஐ.பி.என் நிர்வாகத்தால் கண்டிக்கப்பட்ட நிகில் வாக்லே.

இந்தச் சூழலில்தான் குறிப்பான எந்த ஊழலைப் பற்றியோ, அதில் சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் முதலாளிகள் பற்றியோ பேசாமல், தனியார்மயக் கொள்கைக்கும் ஊழலுக்கும் இடையிலான நேரடி உறவு பற்றியும் பேசாமல் பொதுவாக ஊழல் எதிர்ப்பு பேசிய அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு நாடகம், மிகப்பெரிய மக்கள் எழுச்சியாக கார்ப்பரேட் ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டது. அதிகார வர்க்க ஊழலால் அன்றாடம் பாதிக்கப்படும் ஆம் ஆத்மியையும் (எளிய மனிதனையும்) ஊழலின் ஊற்றுக்கண்ணான முதலாளி வர்க்கத்தையும் ஒரே தரப்பாக நிறுத்தி, இருவருமே ஊழலால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்கி, ஊழலை வர்க்கத்துக்கு அப்பாற்பட்ட பிரச்சினையாக காட்டிய இந்தத் தந்திரம் கேஜ்ரிவாலின் சொந்த சரக்கு அல்ல; உலக வங்கி தந்த சரக்கு.

பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகளால் மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுவது, காடுகள், நிலங்கள் பறிக்கப்படுவது மற்றும் விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரச்சினைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரசியல்வாதிகளின் ஊழல் ஒழிக்கப்பட்டு விட்டால் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் மக்களுக்குச் சொர்க்கத்தைக் கொண்டு வந்துவிடும் என்ற பிரமையை சிவில் சொசைட்டி அமைப்புகள் என்றழைக்கப்படும் ஏகாதிபத்தியத் தொண்டு நிறுவனங்கள் மூலம் உலக வங்கி பரப்பி வந்தது. களத்தில் இறக்கப்பட்ட பல தன்னார்வக் குழுவினரில் அரவிந்த் கேஜ்ரிவாலும் ஒருவர். இதன் காரணமாகத்தான் அன்னாவின் ஊழல் ஒழிப்பு இயக்கத்துக்கு இந்திய கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் பேராதரவு வழங்கி, தனது ஊடகங்கள் மூலம் அதனை ஊதி ஊதிப் பெரிதாக்கி காட்டியது. அன்று கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் கேஜ்ரிவாலை விளம்பரப்படுத்தியதற்கான காரணம் இதுதான்.

வெறும் ஊழல் ஒழிப்பு முழக்கம் ஓட்டுக்களைப் பெற்றுத்தராது என்று புரிந்திருந்த கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கிய பின், மக்களின் ஆதரவைப் பெறும் பொருட்டு டெல்லியின் மின் கட்டண உயர்வையும், தண்ணீர் கட்டணத்தையும் எதிர்த்த நடவடிக்கைகளில் இறங்கினார். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் போலீசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராகத் தெருவிலிறங்கினார். கேஜ்ரிவாலின் இந்த நடவடிக்கைகளின் நோக்கம் தேர்தல் அரசியலில் செல்வாக்கு பெறுவதுதான் என்ற போதிலும், இத்தகைய ‘வரம்பு மீறிய’ நடவடிக்கைகளைச் சகித்துக் கொள்ள ஆளும் வர்க்கங்கள் தயாராக இல்லை என்பதால் கேஜ்ரிவாலை அராஜகவாதி என்று சித்தரிக்கத் தொடங்கின ஊடகங்கள்.

ஊழல் ஒழிப்பு, சிறந்த அரசாளுமை என்பது உலக வங்கியின் முழக்கம்தான் என்ற போதிலும், ஊழல் ஒழிப்பு நாடகத்துக்கு கேஜ்ரிவாலைப் பயன்படுத்திக் கொண்ட ஆளும் வர்க்கங்கள், சிறந்த அரசாளுமைக்கு மோடியை ஒருமனதாகத் தெரிவு செய்து வைத்திருந்தன. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க ஊடகங்கள் தங்களது முதலாளிகளின் விருப்பத்தை மென்மேலும் பிரதிபலிக்க ஆரம்பித்தன. மோடிக்கெதிரான செய்திகளை எழுதக் கூடாது என கிட்டத்தட்ட அனைத்து முன்னணி பத்திரிகைகளும் தங்களது செய்தியாளர்களுக்கு வாய்மொழி உத்தரவே போட்டன. இதனை மீறிய மூத்த பத்திரிக்கையாளர்கள் பலர், தயவு தாட்சண்யமின்றித் துரத்தியடிக்கப்பட்டனர்.

‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த சித்தார்த் வரதராஜன், அதிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஊர்ஊராகச் சென்று மோடி நடத்திரும் ‘ஆவி எழுப்புதல் கூட்டங்கள்’ குறித்த செய்திகளை முதல் பக்கத்தில் வெளியிட மறுத்தது, சுப்பிரமணிய சாமியின் அறிக்கைகளைப் பிரசுரிக்க மறுத்தது, முகேஷ் அம்பானி குறித்த ஒரு அம்பலப்படுத்தலை வெளியிடத் திட்டமிட்டிருந்தது என்பன போன்ற காரணங்களுக்காக அவர் பதவி பறிக்கப்பட்டது. அதேபோல மோடியை அம்பலப்படுத்திச் செய்திகளை வெளியிட்ட’ ஓபன் மேகசின்’ பத்திரிகையின் அரசியல் பிரிவு ஆசிரியரான அர்தோஷ் சிங் பால், பத்திரிகையின் உரிமையாளர்களான கோயங்கா குழுமத்தினரால் நீக்கப்பட்டிருக்கிறார்.

மோடியை அம்பலப்படுத்திப் பேசுவதைக் கைவிடவேண்டும் என சி.என்.என். – ஐ.பி.என். தொலைக்காட்சியின் துணை ஆசிரியர் சகாரிகா கோஷுக்கும், அதே நிறுவனத்தின் மராத்திய சேனலின் ஆசிரியரான நிகில் வாக்லேவுக்கும் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். அவ்வளவு தூரம் போவானேன், மோடியை எதிர்மறையாக சித்தரித்த காரணத்துக்காக, வீரபாண்டியன் நடத்திவந்த “நேருக்கு நேர்” நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டது சன் தொலைகாட்சி.

மோடியை பிரதமராக்க வேண்டும் என்பது தற்போது இந்திய ஆளும் வர்க்கம் கொண்டிருக்கும் கருத்து. பொதுச்சொத்துகளையும் இயற்கை வளங்களையும் சூறையாடும் தங்களது வெறிக்கும் தாராளமயக் கொள்கைகளைத் திணிக்கும் அவசரத்துக்கும் பொருத்தமான ஒரு பாசிஸ்ட் என்ற முறையில் அவர்கள் மோடியை முன்தள்ளுகிறார்கள். ‘திறமைசாலி’ என்று சொல்லி பத்தாண்டுகளுக்கு முன்னர் மன்மோகன் சிங்கை மார்க்கெட்டிங் செய்த அதே உத்திதான்.

கார்ப்பரேட்டும் பாசிஸ்ட்டும் இணைந்த இந்தக் கூட்டணி நடுநிலை முகச்சாயங்களைக் களைந்து விட்டு, தங்கள் நோக்கத்துக்கு ஒத்து வராத பத்திரிகையாளரை உடனே வெளியேற்றி விடுகிறது. இந்திய ஊடகத்துறையைப் பொருத்தவரை, அதனைக் கட்டுப்படுத்தும் தரகு முதலாளிகளில் முக்கியமானவர் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் 30-க்கும் அதிகமான தொலைக்காட்சி அலைவரிசைகளைக் கட்டுப்படுத்துகிறது. இதில் சி.என்.என். – ஐ.பி.என்., சி.என்.பி.சி., டிவி18 மற்றும் ஐ.பி.என். 7 உள்ளிட்ட மிகப் பிரபலமான 17 செய்தி ஊடகங்களும் அடக்கம்.

2008-ம் ஆண்டில் ஒ.எஸ். ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல்வராக இருந்தபோது தெலுங்கு தேச கட்சியின் தீவிர ஆதரவாளரான ராமோஜி ராவுக்குச் சொந்தமான ஈநாடு(ஈ.டி.வி.) தொலைக்காட்சியில் சுமார் 2600 கோடி ரூபாயை முகேஷ் அம்பானி முதலீடு செய்தார். இதன் மூலம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநில மொழிகளில் ஒளிபரப்பாகும் 12 ஈ.டிவி அலைவரிசைகளை ரிலையன்ஸ் இந்தியா நிறுவனம் மறைமுகமாகக் கட்டுப்படுத்தத் துவங்கியது.

பின்னர் 2012-ம் ஆண்டில் ராகவ் பாலின் நெட்வொர்க் 18 நிறுவனத்தில் 4000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ததன் மூலம் இரண்டு டஜன் முன்னணி ஆங்கில, இந்தித் தொலைக்காட்சி நிலையங்களை, அம்பானி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு முகேஷ் அம்பானி உதவுவதாக வாக்களித்திருந்த விசயம் நீரா ராடியாவின் தொலைபேசிப் பதிவுகளின் மூலம் அம்பலமானது.

நிதி நிறுவன வலைப்பின்னல்கள் மூலம் அடையாளம் தெரியாத முறையில் முதலீடு செய்வது சட்டபூர்வமாக்கப்பட்டிருப்பதால், அம்பானி போன்ற தரகு முதலாளிகளோ, பன்னாட்டு நிறுவனங்களோ எந்தெந்த ஊடகங்களில் எத்தனை பங்குகளை வைத்திருக்கிறார்கள் என்ற உண்மை யாருக்கும் தெரிவதில்லை. எடுத்துக்காட்டாக, தெகல்கா வார இதழின் முதலீட்டாளர்களில் இரண்டு நிறுவனங்களைத் தவிர, மீதமுள்ள 4 முதலீட்டாளர்கள் யார் என்றே தெரியவில்லை. 10 ரூபாய் முகமதிப்புள்ள பங்குகளை 13,189 ரூபாய் கொடுத்து அவர்கள் வாங்கியிருக்கின்றனர். முன்னர் குஜராத் இனப்படுகொலை குறித்த புலனாய்வுக் கட்டுரைகள் பலவற்றை வெளியிட்ட தெகல்காவிடம், ஒரு பெண்ணை உளவு பார்ப்பதற்கு மோடி தனது உளவுத்துறை அதிகாரிகளைத் தவறாகப் பயன்படுத்தியது குறித்த தொலைபேசிப் பதிவுகள் தரப்பட்ட பின்னரும், அது அவற்றை வெளியிடவில்லை. பின்னர் கோப்ரா போஸ்ட் என்ற இணையப் பத்திரிகை மூலம்தான் மோடியின் அந்த முறைகேடு அம்பலமானது.

மோடி எதிர்ப்பாளராக அறியப்பட்ட ஒரு பத்திரிகையிலேயே இத்தகைய திரைமறைவு வேலைகள் நடக்குமென்றால், மற்ற பத்திரிகைகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. மோடியின் உளவுத்துறை பெண்ணைத் துரத்திய இந்த விவகாரம் குறித்தோ, குஜராத் வளர்ச்சி என்ற பித்தலாட்டம் குறித்தோ, மோடியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களுக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்பது குறித்தோ, ஊடகங்கள் எதுவும் ஒரு வார்த்தை பேசாமல் மவுனம் சாதிப்பதன் மூலம் மோடி அலையை திட்டமிட்டே உருவாக்குகின்றனர்.

சுரங்கம், மின் நிலையங்கள், ஐ.டி. துறை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த முதலாளிகள், பல்வேறு ஊடகங்களிலும் பங்குகளை வாங்கிப் போட்டு வைத்துக் கொள்வதன் மூலம், தங்கள் முறைகேடுகள் – கொள்ளைகள் குறித்த செய்திகளே வெளிவராமல் தடுத்து விடுகின்றனர். கெயில் குழாய் எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு தொடங்கி தனியார் கல்விக் கொள்ளைக்கெதிரான போராட்டங்கள் வரையிலானவை இப்படித்தான் இருட்டடிப்பு செயப்படுகின்றன.

இது மட்டுமின்றி, கனிமவளக் கொள்ளை உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்கள், பல்வேறு ஊடகங்களுக்கும் தங்கள் நிறுவனத்தின் பங்குகளை வழங்கி ‘பிரைவேட் டிரீட்டி’ என்றழைக்கப்படும் தனிப்பட்ட ஒப்பந்தங்களைப் போட்டுக் கொள்கின்றனர். தங்களுக்கு எதிரான செய்திகள் வெளிவராமல் தடுப்பது மட்டுமின்றி, இந்த ஊடகப் பங்குதாரர்கள் மூலம் பொய் – புனைசுருட்டுகளைப் பரப்பி, பங்குச்சந்தையில் தமது பங்குகளின் மதிப்பை இவர்கள் உயர்த்திக் கொள்கின்றனர் என்பது செபி அமைப்பாலேயே நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டு.

வேட்பாளர்கள் பத்திரிகைகளில் வெளியிடும் விளம்பரங்களுக்கு மக்களிடம் மதிப்பிருக்காது என்பதால், ஊடகங்களுக்குப் பணத்தைக் கொடுத்து, வெளியிட வேண்டிய செய்தியையும் எழுதிக் கொடுத்து, அவற்றை செய்தி போல வெளியிட வைக்கும் ‘பெய்டு நியூஸ்’ என்ற மோசடியினை 2009-ல் சாநாத் அம்பலமாக்கினார். அதன் பின்னர் பிரஸ் கவுன்சில் நடத்திய விசாரணையில் பிரபல ஊடகங்கள் அனைத்தும் சிக்கின. ஆனால், குற்றவாளிகளின் பெயர்களை வெளியிட பிரஸ் கவுன்சில் இந்தக் கணம் வரை மறுத்து வருகிறது. இது மட்டுமல்ல, இனி காசு வாங்கிக் கொண்டு செய்தி போடமாட்டோம் என்று ஒரு உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுத் தருவதற்குக்கூட பெரும்பான்மையான பத்திரிகை முதலாளிகள் தயாராக இல்லை என்று சமீபத்தில் தனது வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறார் ராஜ்தீப் சர்தேசாய் (சி.என்.என். – ஐ.பி.என்.) .

தூர்தர்சன் தொலைக்காட்சியை ஆளும் கட்சிகள் தமது பிரச்சார சாதனமாக மாற்றிக் கொள்ளும் நிலையைத் தாராளமயக் கொள்கை மாற்றிவிடும் என்றும், தனியார் தொலைக்காட்சிகளிடையேயான போட்டி கருத்துலகில் ஜனநாயகத்தை நிலைநாட்டிவிடும் என்று கூறினார்கள் ஆளும் வர்க்க அறிவுத்துறையினர். பிறகு சன், ஜெயா போன்ற தொலைக்காட்சிகள் கட்சி சார்பானவை என்றும் மற்ற தொலைக்காட்சிகள்தான் நடுநிலையாளர்கள் என்றும் பசப்பினார்கள்.

கட்சித் தொலைக்காட்சிகளின் பக்கச்சார்பு மக்கள் அனைவருக்கும் தெரியும். நடுநிலையாளர்கள் என்று தமக்குத்தாமே பெயர் சூட்டிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகையினர்தான் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்கள் ஆளும் வர்க்க கருத்துகளைப் பிரதிபலிப்பதில் கண்டிப்பான கற்பு நெறியாளர்களாக இருப்பதுடன், தங்கள் வாயிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு சொல்லுக்கும், தங்கள் வர்க்கத்தினரிடமிருந்தே ரேட்டு பேசி காசு வசூலிக்கும் விலை மாந்தர்களாகவும் இருக்கிறார்கள். இந்திய ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் நான்காவது தூணின் யோக்கியதை இதுதான்.

– கதிர்

(நன்றி: வினவு)

தெகல்காவின் மறுபக்கம்!

ராமன் கிர்பால். ‘தெகல்கா’வின் முன்னாள் செய்தியாளர். 2011-ம் ஆண்டு வரையிலும் அதில் பணிபுரிந்தவர். 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோவா இரும்பு தாது ஊழல் குறித்து ராமன் கிர்பால் எழுதிய புலனாய்வுக் கட்டுரையை தெகல்கா வெளியிட மறுத்தது. இதைக் கண்டித்து வெளியேறிய அவர் www.firstpost.com என்ற இணையதளத்தில் இணைந்தார். அங்கு அந்தக் கட்டுரை வெளியிடப்பட்டது. இது ராமன் கிர்பாலின் பின்னணி.

மாறாக, ராமன் கிர்பால் அம்பலப்படுத்தும் தெகல்காவின் கார்ப்பரேட் தொடர்புகள் குறித்த செய்திகள் விளிம்பில் கிடக்கின்றன. இத்தனைக்கும் அவர் ஒன்றும் தனது முன்னாள் நிறுவனம் குறித்த காழ்ப்பில் கதையளக்கவில்லை. ஆதாரங்களுடன், ஆவணங்களுடன் எழுதுகிறார். பெண் செய்தியாளர் மீதான பாலியல் வன்முறை நடந்த ‘கோவா திங்– 2013′ விழாவின் அழைப்பிதழைப் பார்த்தாலே… தெகல்காவின் நன்கொடையாளர்கள் யார் என்பதை புரிந்து கொள்ளலாம். கோகோ கோலா முதல் மோடியின் டார்லிங் நிறுவனமான அதானி வரை அனைவரும் தெகல்காவின் புரவலர்கள். ராமன் கிர்பால் தனது கட்டுரைகளில் இவற்றை வெளிப்படுத்துகிறார். தெகல்கா என்ற நிறுவனம் எவ்வாறு, ‘மொரீசியஸ்’ பாணியிலான போலி நிறுவனங்களை உருவாக்கி, நிதி மோசடியில் ஈடுபட்டது என்பதை புள்ளி விவரங்களுடன் வெளிக் கொண்டு வருகிறார். அது தெகல்கா என்னும் கார மிளகாயின் நமத்துப் போன மறு முனையாக இருக்கிறது.

தெகல்காவின் வீழ்ச்சியில் ஆதாயம் அடையத் துடிப்பது யார் என்பது வெளிப்படையானது. அது ஆதாயமா, இல்லையா என்பது பிறகு. முதலில் இது பழிவாங்குதல். ‘இந்து’ மனம் முதல், ‘தி இந்து’ இதழ் வரை தேஜ்பால் மீது பாய்ந்து குதறுவது இதனால்தான். அவர்கள் தெகல்காவின் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை பின்னோக்கி விரிவுபடுத்தி, பங்காரு லட்சுமணன் லஞ்சம் வாங்கியது முதல் குஜராத் கொலையாளிகளின் வாக்குமூலம் வரை தெகல்காவின் அனைத்து புலனாய்வுகளும் பொய்யானவை என்று நிறுவ முயல்வார்கள். அல்லது, ‘தெகல்காவே ஒரு கிரிமினல். இவங்க என்ன எங்களை குற்றம் சொல்றது?’ என்று பந்தை இந்தப் பக்கம் தள்ளி விட்டு விட்டு சந்தேகத்தின் பலனை அவர்கள் அறுவடை செய்வார்கள். இவை எல்லாம் எதிர்மறை சாத்தியங்கள். நேர்மறையில்… இந்த இந்துத்துவவாதிகளும் கூட, தெகல்காவின் மீதான கார்ப்பரேட் குற்றச்சாட்டுகள் குறித்து வாய் திறக்க மறுக்கின்றனர். இந்த கோணத்தில் ராமன் கிர்பாலின் குற்றச்சாட்டுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஃபர்ஸ்ட்போஸ்ட்.காமில் அவர் எழுதிய கட்டுரையை தழுவி மொழியாக்கம் செய்யப்பட்ட கட்டுரை கீழே:

*********

இனிவரும் நாட்களில் தருண் தேஜ்பால் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் மட்டுமே தெகல்காவின் கவலையாக இருக்காது. ஏனெனில் தருண் தேஜ்பாலும், ஷோமா சௌத்ரியும் மேற்கொண்ட பல சந்தேகத்திற்குரிய பண பரிவர்த்தனைகள் அவர்களை துரத்தப் போகின்றன. இவர்கள் தங்களிடம் இருந்த, தங்கள் நிறுவனத்தின் பங்குகளை, தங்களின் மற்றொரு நிறுவனத்திற்கு கற்பனை செய்ய முடியாத லாப விகிதத்தில் விற்பனை செய்து பெரும் லாபம் ஈட்டியிருக்கின்றனர்.

10 ரூபாய் மதிப்புடைய தெகல்காவின் பங்குகள் 13,189 ரூபாய்க்கு கை மாற்றப்பட்டுள்ளன. தெகல்காவின் நிறுவன பங்குதாரர்கள், தங்கள் வசமிருந்த பங்குகளை அவசர, அவசரமாக இந்த விலைக்கு விற்றுள்ளனர். அப்படி விற்கப்பட்ட சமயத்தில் தெகல்காவின் நிறுவனமான அக்னி மீடியா பிரைவேட் லிமிட்டெட்டின் (தற்போது, ஆனந்த் மீடியா பிரைவேட் லிமிட்டெட்) மொத்த சொத்து மதிப்பு ‘நெகட்டிவ்’வில் இருந்தது. ஆனால் பங்கு விலை மட்டும் ‘எப்படியோ’ அதிகமாக இருந்தது. இப்படி 10 ரூபாய் பங்கை 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் அளவுக்கு கம்பெனி வெற்றி முகட்டில் சென்று கொண்டிருந்த போதுதான், தெகல்கா தன் ஊழியர்களுக்கு 2 மாதம் தாமதமாக ஊதியம் வழங்கியது என்கிறார் தெகல்காவில் ‘பீரோ சீஃப்’ ஆக பணிபுரிந்த ஹர்தோஷ் சிங்பால்.

தெகல்காவின் நிறுவனமான ஆனந்த் மீடியா பிரைவேட் லிமிட்டெடின் பெரும்பான்மையான பங்குகளை தருண் தேஜ்பாலின் குடும்பத்தினரே வைத்திருந்தனர். குறைந்த அளவு பங்குகள் வேறு சிலரது பெயரில் இருக்கின்றன. அந்த வேறு சிலர் யார்? ராம்ஜெத் மலானி (165 பங்குகள்), கபில் சிபல் (80 பங்குகள்), லண்டன் தொழிலதிபர் பிரியங்கா கில்லி (4,242 பங்குகள்) போன்றோர். ஆனால் கபில் சிபிலுக்கு தனது பெயரில் பங்குகள் இருப்பது அவருக்கேத் தெரியவில்லை.

‘‘தருண் தேஜ்பால், என் பெயரில் பங்குகளை விநியோகித்திருப்பது எனக்கே இதுவரை தெரியாது. நான் தெகல்காவுக்கு 5 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்தேன். மற்றபடி பங்குகள் வாங்குவதற்காக எந்த விண்ணப்பங்களையும் பூர்த்தி செய்து தரவில்லை” என்கிறார் கபில்சிபல். எனில், அவரது பெயரில் பங்குகள் எப்படி வந்தன? அவரது கையெழுத்தை போட்டது யார்? 2005–ஆம் ஆண்டில் இருந்து கபில்சிபில் பெயரில் 80 பங்குகள் இருக்கின்றன. ராம்ஜெத்மலானி பெயரில் உள்ள பங்குகளுக்கும் இதே கதைதான்.

வாங்கவே இல்லை. ஆனால் இவர்கள் பெயரில் பங்குகள் இருக்கின்றன. எப்படி? 2005-க்கு முன்பு, தெகல்காவை இணைய இதழில் இருந்து அச்சு இதழாக கொண்டு வர முயற்சித்த சமயத்தில், பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் நன்கொடைகள் பெற்றார் தேஜ்பால். வெளிப்படையான அறிவிப்பு ஒன்றையும் இதற்காக வெளியிட்டிருந்தார். அமீர்கான், நந்திதா தாஸ் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களிடம் இருந்து ஆளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் நன்கொடை பெற்று 2 கோடி ரூபாய் வரை நிதி சேகரித்துள்ளதாக அப்போது தேஜ்பால் அறிவித்தார். அந்த சமயத்தில் தெகல்காவுக்கு இருந்த நன்மதிப்பு, மற்றும் மாற்று ஊடகத்தின் தேவையை கருத்தில் கொண்டு பலரும் நிதி அளித்தனர்.

அதன் பிறகே தெகல்காவின் சந்தேகத்திற்குரிய பண பரிவர்த்தனைகள் துவங்கின. இந்த தெகல்கா கதையில் ஆறு முக்கிய முதலீட்டாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். பக்ருதீன் தஹிர்பாய் கொராக்கிவாலா, ஏ.கே. குர்து ஹோல்டிங், என்லைட்டன்டு கன்சல்டன்சி சர்வீசஸ், வெல்டன் பாலிமர்ஸ், ராஜஸ்தான் பத்ரிகா மற்றும் ராயல் பில்டிங்ஸ் அன்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆகிய ஆறு நிறுவனங்கள், தெகல்காவில் பெரும் பணத்தை முதலீடு செய்திருந்தன.

இப்போது ராஜஸ்தான் பத்ரிகா, கொராக்கிவாலா ஆகிய இரு நிறுவனங்களைத் தவிர மற்றவற்றைக் காணவில்லை. அவை எங்கே போயின? ஃபர்ஸ்ட் போஸ்ட் இணைய தளத்தின் விசாரணையில், இந்த நிறுவனங்கள் அனைத்தும் போலியானவை என்று தெரிய வந்திருக்கிறது. இந்த நிறுவனங்கள் செயல்படும் இடம், யூகிக்க முடியாத மர்மப் பிரதேசங்களாக உள்ளன. பொதுவாக தெகல்காவின் முதலீட்டு நிறுவனங்கள், முதலீடு செய்ததில் இருந்து இரண்டு ஆண்டுகள் செயல்படும்; பிறகு நஷ்டக் கணக்குக் காட்டி விட்டு காட்சியில் இருந்து அகன்று விடும். இது பொதுப் பண்பாக இருக்கிறது. இதைத்தான் ‘மொரிசியஸ் வகை’ நிறுவனங்கள் என்று அழைக்கிறார்கள். அதாவது, பெயர் தெரியாத, முகம் தெரியாத முதலீட்டாளர்களின் பணத்தை கையாள்வதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் இவை.

இனி தெகல்காவின் சில பண பரிவர்த்தனைகளைப் பார்க்கலாம்…

தெகல்காவின் நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரிக்கு, ஆனந்த் மீடியா, 10 ரூபாய் முக மதிப்புடைய 1,500 பங்குகளை ஒதுக்கியது. 2006 ஜூன் 14-ம் தேதி, ஷோமா சௌத்ரி தன்னிடம் இருந்ததில் 500 பங்குகளை, ஏ.கே. குர்து ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு ஒரு பங்கு 13,189 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்தார். இதன்மூலம் அவருக்கு 66 லட்ச ரூபாய் கிடைத்தது. அதாவது 5 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பங்குகளை விற்று அவர் ஈட்டியது 66 லட்ச ரூபாய்.

தருண் தேஜ்பாலின் மனைவியான கீத்தன் பாத்ரா, தன்னிடம் இருந்த 2,000 பங்குகளை ஏ.கே.குர்து நிறுவனத்திற்கு ஒரு பங்கு 13,189 ரூபாய் வீதம், மொத்தம் 2.64 கோடி ரூபாய்க்கு விற்றார்.

தருண் தேஜ்பாலின் சகோதரர் மிண்டி குன்வார் 1,500 பங்குகளை 2 கோடி ரூபாய்க்கும், தேஜ்பாலின் அப்பா இந்திரஜித் தேஜ்பால் ஆயிரம் பங்குகளை 1.32 கோடி ரூபாய்க்கும், தேஜ்பாலின் அம்மா சகுந்தலா, ஆயிரம் பங்குகளை 1.32 கோடி ரூபாய்க்கும் விற்றார்கள்.

தருண் தேஜ்பாலின் சகோதரியும், தெகல்காவின் தலைமை செயல் அதிகாரியுமான நீனா டி சர்மா, 432 பங்குகளை அதே நிறுவனத்திற்கு, அதே விலையில் விற்றதில் 57 லட்சம் சம்பாதித்தார்.

தருண் தேஜ்பால் தன்னிடம் இருந்த பங்குகளை விற்பனை செய்யவில்லை. மாறாக, சங்கர் சர்மா, தேவினா மெஹ்ரா ஆகிய இருவரிடம் இருந்தும் 4,125 பங்குகளை வாங்கினார். இதில் சுவாரஷ்யமான விஷயம் என்னவெனில், தருண் தேஜ்பால் இவர்களிடம் இருந்து, ஒரு பங்கு 10 ரூபாய் வீதம் வாங்கினார். ஆனால் அதே நாளில் அதே நிறுவனத்தின் பங்குகளை தேஜ்பாலின் உறவினர்கள் 13,189 ரூபாய்க்கு விற்றார்கள். இந்த வியாபார அற்புதங்கள் அனைத்தும் நடந்த தேதி 2006 ஜூன் 14.

தேஜ்பாலின் ரத்த உறவினர்களைத் தவிர்த்து, தெகல்காவின் பங்குகளை அதிகம் வைத்திருந்தவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் பக்ருதின் ஷேக் தஹிர்பாய் கொராக்கிவாலா. 2005-ல் கோத்ரா புலனாய்வை வெளியிட்டு தெகல்கா பெரும் நெருக்கடியில் சிக்கியிருந்த சமயத்தில் கொராக்கிவாலா, தெகல்காவில் 4.65 கோடி ரூபாயை முதலீடு செய்தார். இதற்காக அவருக்கு 19,326 பங்குகள் ஒதுக்கப்பட்டன. ஆனந்த் மீடியாவின் ஆண்டு நிதியறிக்கையின்படி 2006-ம் ஆண்டு, கொராக்கிவாலா ஒரு பங்கின் விலை 13,189 ரூபாய் வீதம், தன்னிடம் இருந்த அனைத்து பங்குகளையும் மொத்தம் 25.49 கோடி ரூபாய்க்கு ஏ.கே.குர்துவிற்கு விற்றிருக்கிறார். கொராக்கிவாலா 2011-ம் ஆண்டு தனது 93-வது வயதில் இறந்துபோனார். அவரது ரத்த உறவினர்களிடம் விசாரித்ததில், 25 கோடி ரூபாய் பணத்தை அவர் இறுதிவரை பெறவில்லை என்கிறார்கள். எனில், அந்தப் பணம் தெகல்காவுக்கு வழங்கப்பட்ட நன்கொடை என்றே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

2006-ம் ஆண்டு தெகல்காவில் 40 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து அடுத்த ஓரிரு ஆண்டுகளில் திடீரென காணாமல் போய்விட்ட அந்த ஏ.கே.குர்து ஹோல்டிங்ஸ் நிறுவனம் யாருடையது? இந்திய நிறுவன விவகார அமைச்சகத்தின் (Ministry of Corporate Affairs) விவரங்களில் இப்படி ஒரு நிறுவனத்தையே காண முடியவில்லை. கூகுள் தேடலில் கூட Marg என்ற சென்னை நிறுவனத்தின் இயக்குநரான அருண்குமார் குர்து (Arun Kumar Gurtu) என்பவரின் பெயரை மட்டுமே காண முடிகிறது. இவருக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தெகல்கா பதிவுகளின்படி ஏ.கே.குர்து நிறுவனம் 22 ஜங்க்புரா ஏ, புது தில்லி என்ற முகவரியில் ஆரம்பத்தில் இயங்கி வந்தது. பிறகு எம்.ஜே ஷாப்பிங்க் சென்டர், 3 வீர் சாவார்க்கர் வளாகம், ஷகார்பூர், தில்லி-110092 என்ற முகவரிக்கு மாற்றப்பட்டது. ஃபர்ஸ்ட் போஸ்ட் இணைய இதழ் இந்த இரண்டு முகவரிகளையும் ஆய்வு செய்ததில் அங்கு இப்படி ஒரு நிறுவனமே இல்லை.

2007-ம் ஆண்டு ஏ.கே.குர்து நிறுவனம் தனது முதலீடுகளை என்லைட்டன்ட் கன்சல்டன்சி மற்றும் வெல்டன் பாலிமர்ஸ் நிறுவனங்களுக்கு நஷ்டத்துக்கு கை மாற்றியது. இதில் விநோதம் என்னவெனில் என்லைட்டன்ட் கன்சல்டன்சி நிறுவனமும் மேற்கண்ட அதே ஷகார்பூர் முகவரியில்தான் இயங்கியது. அதாவது விற்ற கம்பெனிக்கும், வாங்கிய கம்பெனிக்கு ஒரே முகவரி. இதில் இருந்து இரண்டு ஆண்டுகள் கழித்து 2009-ல் என்லைட்டன்ட் கன்சல்டன்சியின் செயல்பாடுகள் தெகல்காவுடன் இணைக்கப்பட்டன. பிறகு 17 கோடி ரூபாய் நஷ்டக் கணக்குக் காட்டி என்லைட்டன்ட் கன்சல்டன்ஸியும் தனது ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

திரிணாமுல் ராஜ்யசபா எம்.பி.யான கே.டி.சிங்கின் ராயல் பில்டிங்ஸ் நிறுவனம் இப்போது தெகல்காவின் 66 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறது. (மொத்த முதலீடு 32 கோடி ரூபாய்). தருண் தேஜ்பால் குடும்பத்தினரிடம் 22 சதவிகிதத்திற்கும் குறைவான பங்குகளே இருக்கின்றன. தற்போதைய சர்ச்சைகளுக்குப் பிறகு பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கும் கே.டி.சிங் எந்நேரமும் ஆனந்த் மீடியாவை விட்டு வெளியேறலாம். ஒருவேளை அப்படி நடந்தால், அது தெகல்காவின் மரணப்பாதையாக இருக்கும்!

தமிழில்: வளவன்

மேலும் படிக்க

Firstpost India Tehelka business: Murky deals, profits for Tejpal family, Shoma
How Goa’s illegal ore miners are in league with CM Kamat

(நன்றி: வினவு)

சொல்வதெல்லாம் பொய்! செய்வதெல்லாம் ஃபிராடு!!

‘சொல்வதெல்லாம் உண்மை’ – இந்த பெயரில் ஜீ (Zee) தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல வீடுகளில் இரவு நேரங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கும் இந்த நிகழ்ச்சியின் உள்ளடக்கம் ஒன்றும் புதியது அல்ல. ஏற்கெனவே விஜய் டி.வி.யில் ‘கதையல்ல நிஜம்’ என்ற பெயரில் நடிகை லஷ்மி தொகுத்து வழங்கிய அதே அக்கப்போர்தான். அன்றாட குடும்பப் பிரச்சினைகளில், உறவுச் சிக்கல்களில் சிக்கி, மீள வழியின்றி விழி பிதுங்கி நிற்கும் மக்களை ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்து ஒளி வெள்ளத்தில் கேமராவின் முன்பு நியாயம் கேட்டு குமுற வைக்கும் அதே பழைய மசாலா. கண்ணீர், கோபம், ஆவேசம், அடிதடி எல்லாம் இதிலும் உண்டு. விஜய் தொலைக்காட்சியில் லஷ்மி செய்த வேலையை ஜீ (Zee) தமிழில் இப்போது நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் செய்து வருகிறார். (முன்பு நிர்மலா பெரியசாமி செய்தார்). தாங்க முடியாத அருவருப்பும், ஏழை மக்களின் அந்தரங்க வாழ்கையை அம்பலமேற்றி காசு பண்ணும் வக்கிரமும் நிறைந்த இந்த நிகழ்ச்சி சமூக உளவியலில் பாரதூரமான விளைவுகளை உண்டு பண்ணக்கூடியது.

சொல்வதெல்லாம் உண்மைஅடுத்தவர்களின் அந்தரங்கத்தை தெரிந்துகொள்ளத் துடிக்கும் மனித மனதின் வக்கிரத்தை வளர்த்தெடுப்பதுதான் இதன் முதல் அபாயம். அரசல் புரசலாகவும், தாங்கள் ஒரு தவறிழைக்கிறோம் என்ற குற்றவுணர்வுடனும் புரணி பேசும் மக்களை, அந்த மனத் தயக்கத்தில் இருந்து இந்த நிகழ்ச்சி விடுவிக்கிறது. கள்ள உறவுகள், விடலைகளின் காதல் பஞ்சாயத்துகள், குடும்ப சிக்கல்கள்… இவற்றை தொடர்ந்து பார்க்கும் மக்களின் மனம் ‘தான் மட்டும் தவறிழைக்கவில்லை; ஊரே இப்படித்தான் இருக்கிறது’ என எண்ணுகிறது.

‘வீட்டுக்கு வீடு வாசல்படி’ என இதை எடுத்துக்கொள்வது ஒரு வகை. மாறாக, தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்களின் மனம் தன் கணவனை, தன் மனைவியை, உறவுகளை, சுற்றங்களை சந்தேகிக்கிறது. புதிய குடும்பச் சிக்கல்களை உருவாக்குகிறது. இந்த இரண்டு வகைகளையும் தாண்டி, ‘எல்லாரும் செய்யுறான்.நாமளும் செய்வோம்’ என எண்ண வைத்து ஒழுக்கக்கேட்டுக்கு ஓபன் பாஸ் கொடுக்கிறது.

முதலில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வரும் பங்கேற்பாளர்கள் யார்? பார்வையாளர்கள் யார்? தங்கள் சொந்தக் குடும்பப் பிரச்னையை பொதுவில் வைத்துப் பேசத் தயங்காத உழைக்கும் வர்க்கத்து ஆண்களும், பெண்களும்தான் இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள். போலி கவுரவத்தை காப்பாற்றுவதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட நடுத்தர வர்க்கத்தினர் இதன் பார்வையாளர்கள். தங்கள் வீட்டின் ரகசியங்கள் வாசல் வரையிலும் கூட சென்றுவிடக்கூடாது என அப்பார்ட்மென்டின் கதவுகளை இறுக மூடிக்கொண்டு முடைநாற்றத்தை அடைத்துக்கொள்ளும் நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகளின் வாழ்க்கைச் சிக்கல்களை இரவு நேர பொழுதுபோக்காக ரசித்துப் பார்க்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தீர்ப்பு வழங்கிய; வழங்கும் லஷ்மி, நிர்மலா பெரியசாமி, லஷ்மி ராமகிருஷ்ணன் போன்றோர்… இந்த இரண்டு வர்க்கங்களை சேர்ந்தவர்களும் அல்ல. அவர்கள் அசல் மேட்டுக்குடிகள். ஏழைகளின் வாழ்க்கைச் சிக்கல்களை அனுபவத்தில் அல்ல… கேள்வி ஞானத்தில் கூட அறிந்துகொள்ள விரும்பாத இவர்கள்தான் ஏழைக் குடும்பங்களின் பிரச்னைகளுக்கு தீர்ப்பு எழுதுகிறார்கள். அதுவும் அலசி ஆராய்ந்து அளிக்கப்படும் அறிவார்ந்த தீர்ப்பு அல்ல. ஏற்கெனவே நிலவும் ஆணாதிக்க மதிப்பீடுகளை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையிலேயே பேசுகின்றனர். ஏழைகளின் பிரச்னைகளை நடுத்தர வர்க்கம் பார்த்து ரசிக்க, மேட்டுக்குடிகள் தொகுத்து வழங்க, முதலாளிகள் கல்லா கட்டும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஒரே ஒரு பணக்காரக் குடும்பம் கூட கலந்துகொண்டது இல்லை.

ஆனால் தங்கள் சொந்தப் பிரச்னைகளை கேமராவின் முன்பு மக்கள் எப்படி கூச்சமின்றிப் பேசுகின்றனர்? நீங்களும், நானும் பேசுவோமா?ஆனால் இவர்கள் பேசுகிறார்களே, எப்படி? “அவங்க காசு வாங்கியிருப்பாங்க” என்றோ, “எல்லாம் செட்-அப்” என்றோ பார்ப்பவர்கள் நினைக்கிறார்கள். இதற்கு விடை காண ’சொல்வதெல்லாம் உண்மை’ எப்படி உருவாகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

சமாதானம், சண்டை, பேச்சுவார்த்தை, போலீஸ் புகார்… என பல வழிகளிலும் தங்கள் குடும்பச் சிக்கல்களுக்கு தீர்வு தேடி முயற்சித்து, எதிலும் தீர்வு கிடைக்காமல் உச்சக்கட்ட வெறுப்பில் இருக்கும் மக்கள்தான் இவர்களின் இலக்கு. ‘ஏதேனும் ஒரு வழியில் பிரச்னை தீராதா?’ என ஏங்கிக் கிடப்பவர்களை அணுகி, ‘உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்’ என ஆசைகாட்டி அழைத்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களை திறந்து, தங்களுக்கு டி.ஆர்.பி. தரக்கூடிய செய்திகளை கண்டறிவதுதான் இவர்களின் அதிகப்பட்ச ஆய்வுப்பணி. அடுத்த கட்டமாக அந்தந்த ஊரில் இருக்கும் அவர்களின் நிருபர், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து தேன் ஒழுகப் பேசுவார். மனைவியை மடக்கிவிட்டால் போதும், கணவனை அழைத்து வருவது எளிது.

‘ சொல்வதெல்லாம் உண்மையில் ‘ கலந்து கொண்ட ஒரு பெண் ! ஜீ டி.வி.யின் விற்பனைப் பொருள்.

‘உங்க மனைவி எங்கள் நிகழ்ச்சிக்கு வருகிறார். அவர் உங்களை பற்றி இப்படி எல்லாம் பேசுகிறார். நீங்கள் வந்து உங்கள் தரப்பு நியாயத்தை சொல்லவில்லை எனில் அவர் சொல்வது மட்டும்தான் வெளியே வரும். டி.வி. பார்ப்பவர்களுக்கு அதுதான் நியாயம் என்று தோன்றும்’ என்று தர்க்கப்பூர்வமாக மடக்குவார்கள். ‘எங்கள் நிகழ்ச்சியில் வந்து பேசிவிட்டால் உங்களுக்கு நீதி கிடைத்துவிடும். அதற்கு நாங்கள் உத்தரவாதம்’ என்று ஆசை காட்டுவார்கள். ‘படித்தவர்கள் ஏமாற்றமாட்டார்கள்’ என்று நம்பி வரும் ஏழைகளை திட்டமிட்டு உணர்ச்சிவசப்படச் செய்து, அறிவின் தந்திரத்தால் அழ வைத்து… அனைத்தையும் படம் பிடிப்பார்கள். நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இடைவேளையில், பங்கேற்பாளர்களின் நடவடிக்கை பகுப்பாய்வு செய்யப்பட்டு, நிகழ்ச்சித் தயாரிப்புக் குழுவினரால் உளவியல் உத்திகள் வகுக்கப்படும். குறைந்த பட்சம் கண்ணீர், அதிக பட்சம் அடிதடி… எதுவும் சிக்கவில்லையா? ஒரு சென்டிமெண்ட் டிராமாவுக்கு உத்திரவாதம் கிடைத்துவிட்டால் தயாரிப்புக் குழுவுக்கு நிம்மதி. அதன்பிறகு அந்த குடும்பம் சேர்ந்ததா, பிரிந்ததா, நடுத்தெருவில் நிற்கிறதா என்பதை பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.

பொதுவாக உங்கள் வீட்டில் யாராவது அடித்துக்கொண்டால் என்ன செய்வீர்கள்? உடனே ஓடிச்சென்று விலக்குவீர்கள். அதையும் மீறி சண்டை நடந்தாலும் ‘நாலு பேருக்குத் தெரிந்தால் அவமானம்’ என்று கண்டிப்பீர்கள். இது மனிதர்களின் பொதுப் பண்பு. ஆனால் இவர்களை பொருத்தவரை நிகழ்ச்சிக்கு வருபவர்கள் அடித்துக்கொண்டால் உற்சாகம் அடைகிறார்கள். முடிந்தவரை அதை உசுப்பேற்றி அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்கிறார்கள். ஏதேனும் ஒரு வகையில் பிரச்னையை தீர்த்துக் கொள்ளலாம் என நம்பி வருபவர்கள் நிகழ்ச்சி முடியும்போது பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர். இங்கு வருவதால் பிரச்னை தீர்வதில்லை; அதிகமாகிறது என்பதை அவர்கள் உணரும்போது நிலைமை கைமீறிச் சென்றுவிடுகிறது. கொட்டிய வார்த்தைகளும், அழுத கண்ணீரும் நாளை தொலைகாட்சியில் வரப்போகிறது என்ற எண்ணமே அவர்களை அச்சுறுத்துகிறது. தாங்கள் ஒரு சூழ்ச்சி வலையில் சிக்கியதைப் போல உணர்கிறார்கள். “சார், டி.வி.ல போட்றாதீங்க சார். பேசுன வரைக்கும் பேசுனதா இருக்கட்டும். இப்படியே விட்ருங்க சார்” என்று கெஞ்சிக் கதறினால் அதையும் படம் பிடிப்பார்களேத் தவிர நீதி கிடைக்காது. மாறாக நிகழ்ச்சிக்கு அழைத்து வரும்வரை கருணை முகம் காட்டியவர்களின் உண்மை முகம் அப்போதுதான் வெளியே வரும். இதுதான் “தி மேக்கிங் ஆஃப் சொல்வதெல்லாம் உண்மை”.

ஆனால் இவர்கள் சொல்வது எல்லாம் உண்மையா?

பஞ்சாயத்துக்கு வருகின்ற பிரச்சினைகள் ஒரே விதமாக இருந்தபோதும், பார்வையாளர்களைப் பார்க்க வைப்பது எப்படி என்பதே இவர்களது பிரச்சினை. எனவே, தனியே அழைத்துப் போய் உசுப்பேற்றிவிடுவதும், மோதலை உருவாக்குவதும் இத்தகைய நிகழ்ச்சிகளில் சர்வ சாதாரணமானது. இதை கேமராவுக்குப் பின்னே சென்று தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. நிகழ்ச்சியிலேயேப் பார்க்க முடியும். சமீபத்தில் ஒரு விடலைப் பையனும், பெண்ணும் காதல் பஞ்சாயத்துக்கு வந்திருந்தனர். பெண்ணின் அம்மா எதிரே அமர்ந்திருக்கிறார். தன் அம்மா ஒரு விபச்சாரி என்று பட்டவர்த்தனமாக அந்தப் பெண் குற்றம் சாட்டுகிறார். உடனே நிகழ்ச்சியை நடத்தும் லஷ்மி ராமகிருஷ்ணன், “இந்தப் பொண்ணு சொல்றது பொய்யா இருந்தா இந்நேரத்துக்கு எழுந்து அடிச்சிருப்பீங்க” என அந்தப் பெண்ணின் அம்மாவை உசுப்பேற்றிவிடுகிறார். சற்றுநேரத்தில் அந்த அம்மா, செருப்பை கழற்றி மகளை அடிக்கிறார். அனைத்தும் ஒளிபரப்பப்படுகிறது. இனி சாகும் வரையிலும் அந்த அம்மாவும், மகளும் சேரப் போவது இல்லை.

இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பவர்களின் வாழ்க்கைச் சிக்கல்கள், டி.வி-யில் ஒளிபரப்பான பிறகு என்னவாகிறது என்பதை யாரும் பேசுவதில்லை. என்.டி.டி.வி-யில். ’ராக்கி கா இன்சாப்’ என்ற பெயரில் இந்தி நடிகை ராக்கி சாவந்த் நடத்திய நிகழ்ச்சியில் ஒரு பெண், தன் கணவனை ஆண்மையற்றவன் என்று கூறியதால் பிறகு அவன் தற்கொலை செய்து கொண்டான். இதுபோன்ற உதாரணங்கள் ஏராளம்.

மேட்டுக்குடி நிர்மலா பெரியசாமி ஏழைகளின் கதைகளை விற்கிறார்!

இன்னொரு பக்கம் இந்த மேட்டுக்குடி பாப்பாத்திகள் நடத்தும் பஞ்சாயத்தின் மூலமாக, சாதாரண மக்கள் நெறிகெட்டவர்கள் போலவும், நாட்டாமை செய்யும் வர்க்கத்தினர் பெரிய ஒழுக்க சீலர்கள் போலவும் ஒரு தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. இதில் பார்வையாளர்கள் நீதிபதிகளாக செயல்படுகின்றனர். அதனால்தான் பல வீடுகளில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது, அதில் கலந்துகொள்ளும் மனிதர்களுடன் மக்கள் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்கின்றனர். ‘அவன் மேலதான் தப்பு’ என்றோ, ‘ஐயோ பாவம் இந்தப் பொண்ணு’ என்றோ திரையில் விரியும் காட்சிகளுக்காக உண்மையாகவே மனம் இறங்குகின்றனர். கற்பனைக் கதைகளே பார்வையாளர்களின் கருத்தையும், கண்ணோட்டத்தையும் பாதிக்கும் என்னும்போது ரியாலிட்டி ஷோக்கள் பற்றி சொல்லத்தேவையில்லை.

சித்தரிக்கப்பட்ட டி.வி. சீரியல் பாத்திரங்களுக்காக பாவப்படும் மக்களின் மனம், அதை விட கூடுதலாக இந்த நிகழ்ச்சிகளோடு தன்னை இணைத்துக்கொள்கிறது. காரணம், சீரியல்களில் குடும்பத்தில் சண்டை நடக்கும். இதில் குடும்பமே நேரடியாக வந்து சண்டை போடுகிறது. தன் கண்ணீரையும், இரக்கத்தையும், ரசனையையும் கோரும் ஒரு கதை, கற்பனையாய் இருப்பதை விட, உண்மையாய் இருப்பது பார்வையாளனின் ஈகோவை கூடுதலாக திருப்திப்படுத்துகிறது. சொல்வதெல்லாம் உண்மை மட்டுமல்ல, மானாட மயிலாட, சூப்பர் சிங்கர், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என அனைத்து ரியாலிட்டி ஷோக்களும் வெற்றி பெறுவதற்கான அடிப்படை மக்களின் இந்த மனநிலைதான்.

ஆனால், உண்மையான மனிதர்கள், உண்மையான பிரச்னைகள் என்பது வரைதான் இது உண்மை. அந்த உணர்ச்சிகள் உண்மையானவை அல்ல. அது நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு தூண்டப்பட்டு மிகையாக சித்தரிக்கப்படுகிறது. அந்த வகையில் இது ஒரு போர்னோகிராபி. இதைப் பார்க்கும் ரசனையும் சாவித்துவாரம் வழியே பார்க்கும் அதே ரசனைதான்.

பொதுவாக இத்தகைய நிகழ்ச்சிகளில் அப்பாவி ஏழைகளின் அந்தரங்கம் மட்டுமே அலசப்படுவதாக தெரியலாம். ஆனால் ஊடக வியாபாரத்தில் பணக்காரர்களின் அந்தரங்கமும் தப்புவதில்லை. பத்திரிகைகளின் சினிமா கிசுகிசு, மேற்குலகின் டயானா விவகாரம் போன்றவை இத்தகையவைதான்.

விஜய் டி.வி. ஷோக்கள்!

’ராக்கியின் சுயம்வரம்’ போன்ற நிகழ்ச்சிகள் அப்பட்டமாக ஒத்திகை பார்க்கப்பட்டு, திரைக்கதை எழுதப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன. பணத்துக்காக சினிமாவில் ஆடைகளை அவிழ்த்து ஆபாச நடனம் ஆடும் ராக்கி சாவந்த், தனது திருமணத் தெரிவையும் டி.வி.யில் லைவ் ஆக நடத்தினார். ‘யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்’ என்ற அறிவிப்பு பரபரப்பான செய்தியாக மாற்றப்பட்டதே தவிர அது ஒரு அப்பட்டமான விபச்சாரம் என்பதை யாரும் பேசவில்லை. சபலத்துடன் பலர் விண்ணப்பித்தார்கள். முடிவில் ராக்கி ஒரு கனடா தொழிலதிபரை தெரிவு செய்தார். திருமணம் தள்ளிப்போடப்பட்டு, கடைசியில் ‘நடிக்கக்கூடாது என்று சொன்னதால் திருமணம் ரத்து’ என்று அறிவிக்கப்பட்டது. அதற்குப்பின்னர் இது நாடகம் என்றும், இதில் பணத்துக்காக தானும், பிரபலத்துக்காக தொழிலதிபரும் நடித்ததாகவும் ராக்கி கூறினார். கோடிக் கணக்கான ரசிகர்களை ஏமாற்றிய குற்றத்துக்கு எந்த தண்டனையும் இல்லை. இதை வைத்து இவர்கள் கொள்ளையடித்த பணத்துக்கும் கணக்கில்லை.

2009-ம் ஆண்டு இந்தியத் தொலைகாட்சிகளின் மொத்த வருமானம் சுமார் 5.5 பில்லியன் டாலர். இதில் ரியாலிட்டி ஷோக்களின் வருமானம் கணிசமானது. இவர்களுக்கு 70 கோடி இந்திய செல்போன் வாடிக்கையாளர்கள்தான் முக்கிய இலக்கு. ‘உங்கள் மனம் விரும்பிய போட்டியாளர் இவர் என்றால் … என்று டைப் செய்து இந்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள்’ என்ற வேண்டுகோளுக்கு செவிசாய்த்து மக்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ்.ஸில் இருந்துதான் ரியாலிட்டி ஷோக்களின் 30 முதல் 40 சதவிகித வருமானம் வருகிறது. இந்த வருமானத்தின் அளவு குறைந்தால் ரியாலிட்டி ஷோக்களுக்காக இவர்கள் செய்யும் பித்தலாட்டங்களும் அதிகரிக்கும்.

மேற்கத்திய ரியாலிட்டி ஷோக்கள் ! உண்மையின் பெயரில் மலிவான ரசனை !!

இன்றைய நிலையில் தொழில்முறை ஆபாசப் படங்களைக் காட்டிலும் செல்போன்களில் எடுக்கப்பட்ட ‘கேண்டிட் வீடியோக்களுக்குதான்’ மவுசு அதிகம். யூ-டியூப் உள்ளிட்ட இணையதளங்களில் இத்தகைய ஒரிஜினல் 24 கேரட் வீடியோக்களுக்கான பார்வையாளர்கள் சர்வ சாதாரணமாக லட்சங்களைத் தொடுகிறார்கள். பள்ளி மாணவர்களின் செல்போன்களில் கூட இத்தகைய கேண்டிக் கேமரா காட்சிகள் இருக்கின்றன. இதற்கும் ’ரியாலிட்டி ஷோ’க்களுக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது.

எப்போதுமே, நிலவும் டிரெண்டை பயன்படுத்தி கல்லா கட்டும் நிறுவனங்கள் ‘உண்மையை’ விரும்பும் மக்களின் மனநிலையை மட்டும் விட்டுவைக்குமா? பல தொலைக்காட்சி விளம்பரங்கள் கேண்டிட் கேமராவால் எடுக்கப்பட்டதைப் போல திட்டமிட்டு எடுக்கப்படுகின்றன. பஞ்சாராஸ் அழகு சாதனப் பொருள், இந்துலேகா எண்ணெய், ஆரோக்கியா பால் உள்பட பல விளம்பரங்கள் இப்படி ஒளிபரப்பாவதை காணலாம். இதை ‘ஒரு விளம்பர யுத்தி’ என்றோ, சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகளை ‘ஒரு கிரியேட்டிவ் கான்செப்ட்’ என்றோ சிலர் சொல்லக்கூடும். ஆனால் உண்மை வேறு. டி.வி.யை நிறுத்தியதும், அதுவரை பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சி தோற்றுவித்த உணர்வு மறைந்துவிடுவது இல்லை. மாறாக, அது உங்களை பயிற்றுவிக்கிறது. குரூரத்தை ரசிப்பதற்கு, வக்கிரத்தை விரும்புவதற்கு கற்றுத்தருகிறது. அது உருவாக்கும் உணர்வுதான் ஒரு போரை பொழுதுபோக்காக; போலீஸ் அராஜகத்தை ஹீரோயிசமாக புரிந்துகொள்ள இட்டுச் செல்கிறது.

இவர்கள் இத்தனை தூரம் மெனக்கெட்டு செட் போட்டு, கான்செப்ட் பிடித்து ரியாலிட்டி ஷோ நடத்தத் தேவையில்லாமல் சொல்ல வேண்டிய நடைமுறை உண்மைகள் ஏராளமாக நாட்டுக்குள் இருக்கின்றன. சாதித் தீண்டாமை முதல் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வரை ‘உண்மைகளுக்கா’ பஞ்சம்? இவற்றை சொல்வதற்கு எந்த ரியாலிட்டி ஷோவிலும் இடம் இல்லை. எனில் இவற்றை ‘ரியாலிட்டி ஷோ’ என்ற சொல்லால் அழைப்பதே தவறானது. உண்மையில் இவற்றின் ஒவ்வொரு நொடியும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு திரைக்கதை எழுதப்படுகின்றன. வட இந்திய சேனல்களில் இது இன்னும் பச்சையாக நடக்கிறது.

பொதுவாக இந்த ரியாலிட்டி ஷோக்களில் சுற்றி உட்கார்ந்து கைதட்டிக்கொண்டே இருக்கிறார்களே… அவர்களை ரசிகர்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. அவர்கள் தினக்கூலி அடிப்படையில் ரசிகர்களாக நடிக்கிறார்கள். வியப்பதும், சிரிப்பதும், கை தட்டுவதும், பயப்படுவதும்தான் அவர்களின் வேலை. தமிழ் சேனல்களை பொருத்தவரை இந்த ரசிகர்களை பிடித்து வருவது அந்தந்த ரியாலிட்டி ஷோவின் புரடியூசரின் வேலை. வட இந்தியச் சேனல்களில் இத்தகைய பணி அவுட்சோர்ஸ் செய்யப்படுகிறது. அங்கு டி.வி. நிகழ்ச்சிகளுக்கான பார்வையாளர்களை சப்ளை செய்வதற்கு என்றே தனிப்பட்ட ஏஜென்ஸிகள் செயல்படுகின்றன.

இத்தகைய ஆடியன்ஸ் சப்ளை சர்வீஸில் ஆறு ஆண்டு கால அனுபவம் பெற்ற ராஜீ கபூர், “ரசிகர்களாக வருபவர்களுக்கு ஏன் சம்பளம் கொடுக்க வேண்டும்?” என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். ஓர் அறிவிப்பு வெளியிட்டால் கூட்டம் வரும்தான். ஆனால் ரியாலிட்டி ஷோக்களின் படப்பிடிப்பு நேரம் மிக, மிக அதிகம். சாதாரண பார்வையாளர்கள் அவ்வளவு நேரம் பொறுமையாக இருக்க மாட்டார்கள். எந்த நேரமும் எழுந்து சென்றுவிடுவார்கள். அதனால்தான் இப்படி பணம் கொடுத்து அழைத்து வருகிறோம். அது மிகக் குறைந்த தொகைதான் என்றபோதிலும், சிலிர்ப்புமிக்க ரசிகராக நடிப்பதற்கு அவர்களுக்கு அந்தத் பணம் கொடுக்கப்படுவதில் என்ன தவறு?” என்று கேட்கிறார்.

அதாவது நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்கள் எந்த இடத்தில் அழ வேண்டும், எங்கு சிரிக்க வேண்டும், எப்போது கை தட்ட வேண்டும் என்ற அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்படுகிறது. ஹிட்லர் காலத்தில் அவர் உரையாற்றும்போது, கூட்டத்தில் அமர்ந்திருக்கும் அவரது ஆட்கள் குறிப்பிட்ட இடத்தில் கை தட்டுவார்களாம். அதைப் பார்த்து மற்றவர்களும் தட்டவேண்டும்; தட்டுவார்கள். அதற்குப் பெயர் பாசிசம். இதற்குப் பெயர் கருத்து சுதந்திரமாம்!

(நன்றி: வினவு)

‘பரதேசி’ : பாலா மற்றும் நாஞ்சில் நாடனின் மனிதத் தன்மை பற்றி ஒரு குறிப்பு

இது திரைப்பட விமர்சனமில்லை. மனிதாபிமானமும் செயல்திறனும் மிக்க ஒரு மருத்துவரான பி.எச்.டேனியலின் ‘எரியும் பனிக்காடு’ (ஆங்கிலத்தில் Red Tea) நாவலை பாலாவும் நாஞ்சிலும் ‘பரதேசி’யாகப் படமாக்கியது பற்றி ஒரு குறிப்பு. ஒரு நாவலைத் திரைப்படமாக்கும்போது அவை முற்றிலும் ஒன்றுக்கொன்று ஒப்பிடமுடியாத அளவிற்கு வெவ்வேறு புதிய வார்ப்புகளாகி விடுகின்றன என்பது அறிந்ததே. இரண்டு ஊடகங்களின் இலக்கணங்களும் வேறு வேறு. ஒரு நல்ல நாவல் மோசமான திரைப்படமாகவும், ஒரு மோசமான நாவல் மிகச் சிறந்த திரைக்காவியமாகவும் அமையும் வாய்ப்புண்டு. நாவலைத் திரைக்கதை ஆக்கும்போது பல மாற்றங்கள் தவிர்க்க இயலாதது என்கிற அனைத்து அம்சங்களையும் ஏற்றுக் கொண்டு ஒரே ஒரு கேள்வியை மட்டும் பாலா-நாஞ்சில் கூட்டின் முன் வைக்கிறேன்.

இப்படத்திற்கு விமர்சனம் எழுத வந்த பலரும் சுட்டிக்காட்டும் ஓரம்சம் குறித்த கேள்விதான் அது. என்ன தேவைக்காக நாவலில் வருகிற மனிதாபிமானம் மிக்க ஒரு அற்புதமான மருத்துவக் கதாபாத்திரத்தை, ஒரு மதம் மாற்றும் கிறிஸ்தவக் கோமாளியாக மாற்றினீர்கள்? எல்லோராலும் கைவிடப்பட்ட அடிமைத் தோட்டத் தொழிலாளிகளின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் ஒரு பலசரக்குக் கடைக்காரனை (நாவலில் காளிச் செட்டி) ஒரு முஸ்லிமாகவும் மாற்றிச் சித்திரித்திருப்பது எதற்காக? இவற்றின் மூலம் கலாபூர்வமாகவோ அல்லது அறவியல் அடிப்படையிலோ என்ன சாதித்துள்ளீர்கள்?

நாவலில் அந்த டாக்டர் வேறு யாருமல்ல. பி.எச்.டானியல்தான் என்பதை வாசிக்கும் சிறு குழந்தையும் உணரும். 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் டாக்டராக, இயற்கையின்மீது தீராக் காதல் கொண்டவராக, சக ஊழியர்களுடன் சாதி, மத வேறுபாடு இல்லாமல் கனிந்து பழகுபவராக, தனது மருத்துவ ‘அதிகாரத்தை’ அதன் எல்லைக்குள் நின்று அப்பாவி மக்களின் நலனுக்குப் பயன்படுத்துபவராக, ஊழல் அதிகாரத்தின் முன் உண்மைகளைப் பேசும் மனசாட்சி உடைய மனிதராக, பெயர் ஒன்றைத் தவிர வேறு எந்த அம்சத்திலும் கிறிஸ்தவ அடையாளத்தைச் சுமக்காதவராக, இத்தனைக் கொடூரங்களுக்கும் மத்தியில் இன்னும் கூட மனிதத்தன்மை எஞ்சியுள்ளது என்பதன் அடையாளமாக நாவலில் வந்துபோகும் ஒரு பாத்திரத்தை இப்படி மாற்றுவதற்கு எப்படியடா உங்களுக்கு மனம் வந்தது?

1984ல் டெல்லியில் சீக்கிய மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்கொடுமைகளை நேரில் கண்ட எழுத்தாளர் அமிதவ்கோஷ் அந்த அனுபவம் குறித்து எழுதிய ஒரு கட்டுரையை முன்பொரு சந்தர்பத்தில் முகநூலில் எழுதியிருந்தேன். ஒரு எழுத்தாளன் என்கிற வகையில் அந்தக் கொடூரங்களுக்கெல்லாம் அப்பால் அங்கு சாதி, மதம் எல்லாவற்றையும் கடந்து கசிந்த மனிதாபிமானமே தன்னை ஈர்த்தது எனக் கூறிய அமிதவ் அது எவ்வாறு தனது அடுத்த நாவலில் வெளிப்பட்டது என்பதையும் குறிப்பிட்டிருப்பார். தன் கண் முன் எவ்வாறு இரு சீக்கியர்கள் கொலைக் கும்பல்களிடமிருந்து இந்துக்களால் காப்பாற்றப்பட்டனர் என அவர் விவரித்திருப்பதை வாசித்தபோது என் கண்கள் கலங்கின. ஆனால் நிச்சயமாகச் சொல்கிறேன் நாஞ்சில், பாலா நீங்கள் ஒருவேளை அதைப் படித்திருந்தாலும் கூட உங்களின் இரும்பு மனத்தில் நிச்சயம் அத்தகைய கசிவு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

இன்னும் எஞ்சியுள்ள மனிதத்தை உமது சாதி, மத அடையாளங்களிலிருந்தும், வெறுப்புகளிலிருந்தும் விடுபடாத மனங்கள் அடையாளம் காணாதது வியப்பில்லை. அடையாளம் காணாதது மட்டுமல்ல, உங்களின் வக்கிர மனம் அதை எப்படி எதிர்கொள்ளும் என்பதும் இங்கு வெளிப்பட்டுள்ளது. பாலாவின் அத்தனை படங்களிலும், நாஞ்சிலின் அத்தனை கதைகளிலும் இந்த வக்கிரத்தை அடையாளம் காட்ட இயலும்.

இத்தனைக்கும் அந்த நாவல் எந்த வகையிலும் கிறிஸ்தவத்தை உயர்த்திப் பிடிக்கும் நாவலல்ல. முழுக்க முழுக்க வெள்ளை ஏகாதிபத்தியச் சுரண்டலையும், அதற்கு உடன்பட்டு எடுபிடிகளாக இருந்து மேற்கொள்ளப்பட்ட கங்காணிக் கொடுமைகளையும் மனிதாபிமான நோக்கில் பதிவு செய்யும் ஒரு நாவல். பாலியல் சுரண்டல் உட்பட அத்தனை கொடுமைகளையும் செய்கிற வெள்ளை அதிகாரிகள் இருவரும் கிறிஸ்தவர்களே. சுரண்டப்படும் அப்பாவி அடிமைத் தொழிலாளிகள் அத்தனை பேரும் தலித்களே.

ஒரு நல்ல இயக்குநர், நல்ல எழுத்தாளர் என்பதெற்கெல்லாம் அப்பால் முதலில் நீங்கள் நல்ல மனிதர்கள்தானா என்பதுதான் இப்போது கேள்வி.

அப்சல் குருவின் தூக்குத் தண்டனை – ‘இந்து’ நாளிதழின் அணுகுமுறை

அப்சல் குருவிற்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதை ஒட்டித் தமிழகத்தின் முக்கிய நாளிதழ்களில் வெளியான செய்திகளுள் பெரும்பாலானவை நடுநிலை தவறியும் குறைந்தபட்ச மனிதநேயத்தைக் கூடக் கைவிட்டும் எவ்வாறு இந்துத்துவ அதிகாரத்தை உமிழ்ந்திருந்தன என்பதை முன்னர்க் கண்டோம். அந்த மதவாதச் சார்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, அப்சலின் வழக்கில் மூடிமறைக்கப்பட்ட சட்டச்சிக்கல்களையும் அத்துமீறப்பட்ட மனித உரிமைகளையும் பழியுணர்ச்சியைத் தூண்டும் மரணதண்டனைகளையும் கண்டித்து அவற்றின் மீது ஒரு முக்கிய கவன ஈர்ப்பை மட்டுமின்றி, கிட்டத்தட்ட ஒரு விழிப்புணர்வையே ஏற்படுத்தியிருந்தது ‘தி இந்து’ நாளிதழ்.

“அப்சல்குரு ரகசியமாகத் தூக்கிலிடப்பட்டார்” (Afsal Guru Hanged in Secrecy) என்ற தலைப்பில் முதல்பக்கச் செய்தியை வெளியிட்டிருந்த ‘இந்து’ நாளிதழ் மட்டும் தான் அப்சல் குருவிற்கு ‘தீவிரவாதி’ ‘பயங்கரவாதி’ என்ற பட்டங்களைக் கொடுக்காமல் அவர் சரணடைந்ததைக் கணக்கிலெடுத்து சகமனிதராக அவரை அடையாளம் கண்டது. வழக்கு குறித்து அரசுதரப்பு சொல்லிய செய்திகளை வெளியிட்டிருந்தாலும், தாமதமாகவேனும் தண்டனை நிறைவேற்றப்பட்டதைக் கண்டு மகிழ்ந்து வாயை மூடிக்கொள்ளுங்கள் என்றெல்லாம் நமக்கு அறிவுரை கூறாமல், இதற்கு மேல் பேசினால் நீங்களெல்லாம் ‘தேசத்துரோகிகள்’ என்று நம்மை எச்சரிக்காமல், இந்தத் தளத்தை மிக விரிவாக விவாதித்திருந்தது. அவற்றின் முக்கிய அம்சங்களை இங்கு பார்ப்போம். (10.2.13., 11.2.13, 12.2.13 ஆகிய மூன்றுநாள் இதழ்கள் இங்கு கவனிக்கப்பட்டுள்ளன)

“இந்நாளில் விடையளிக்கப்படாமல் எஞ்சி இருக்கும் கேள்விகள்” (Unanswered Questions are the Remains of the Day) என்ற தலைப்பில் அஞ்சலி மோடி எழுதிய கட்டுரை, அப்சல் குருவின் வழக்கு எப்படி ஒரு முறையற்ற நீதிவிசாரணையாக நடத்தப்பட்டது என்பதைக் குறித்து விவாதித்தது. அஞ்சலி மோடி, நாடாளுமன்ற வழக்கு விசாரணையின் செய்தியாளராக (2002) இந்து நாளிதழில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“விசாரணையின் போது காவல்துறையினர் முன்வைத்த ஆதாரங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருந்தன. அப்சல் குருவைக் கைது செய்யுமாறு டெல்லி போலிஸ் ஶ்ரீநகர் போலிசாருக்கு அறிவுறுத்தியதாகச் சொல்லப்பட்டது. ஆனால், டெல்லி போலிசார் அறிவுறுத்திய நேரத்திற்கு முன்பாகவே அப்சல் ஶ்ரீநகர் போலிசால் கைது செய்யப்பட்டிருந்ததை ஆவணங்கள் எடுத்துக்காட்டின. இதுகுறித்து நீதிமன்றத்திற்கு வெளியே கருத்துக்கூறிய அரசு வழக்கறிஞர், மத்திய புலனாய்வுத்துறை ஶ்ரீநகர் போலிசுக்கு முன்கூட்டியே தகவல் சொல்லியிருந்தார்கள் என்றார். ஆனால், ஏன் நீதிமன்றத்திற்குள் இது விவாதிக்கப்படவில்லை? இந்த விஷயத்தில் அரசு வழக்கறிஞர் பொய் சொல்கிறாரா? அல்லது அரசு உண்மைகளை மூடிமறைக்கிறதா?”எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

“கல்லறையில் தொழுகை நடத்த குடும்பத்தினர் அனுமதி கோரினர்” (family sought permission for prayers in jail) என்ற தலைப்பில் வெளிவந்த செய்தியில், நந்திதா ஹக்சர் முக்கிய உண்மைகளை வெளிச்சமிட்டுக்காட்டினார்.“இது ஒரு துயர் மிகுந்த நாள். அப்சலுக்கு மிக அதிக அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. அவர் ஒரு அடிப்படைவாதியோ ஜமாதியோ அல்லர். அவர் பாகிஸ்தானின் பிரிவினைவாதக் கொள்கைகளில் இருந்து விடுபட்டுத் திரும்பிவந்தவர். ஆனால் ஒருவரும் இதைக்கேட்கத் தயாராக இல்லை.” என்று வருந்திய ஹக்சர், அப்சலின் மரணத்தைக் கொண்டாடுவதன் பின்னுள்ள முரணை மிகச்சரியாக அடையாளம் காட்டினார்: “காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க இயலாத அங்கம் என்று சொல்லிக்கொள்ளும் “வலதுசாரிகள்” இன்னொருபக்கம், காஷ்மீர் மக்கள் எந்த துக்கத்திற்காக அழுதுகொண்டிருக்கிறார்களோ அந்த சோகத்தை கொண்டாடுவதற்கு அழைப்புவிடுக்கிறார்கள்” என்றார். இதன்மூலம், அகண்ட பாரதக் கூப்பாட்டில் உள்ள முரணை அவர் சுட்டிக்காட்டுவது கவனிக்கத்தக்கது. மேலும், இந்த தூக்கு தண்டனை அப்சலின் மகனிடமும் காஷ்மீர் மக்களிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.

கல்பனா கண்ணபிரான் எழுதிய “UPA Strays off Sonia’s Course” என்ற கட்டுரை, மரணதண்டனை நீதிக்கு உட்பட்டதாக அல்லாமல் அரசியலுக்கு உட்பட்டதாய் இயங்குகிறது என்பதை விளக்கியதோடு, ராஜீவ்காந்தி படுகொலையில் தூக்கு விதிக்கப்பட்டவர்களுக்காக அன்று சோனியாகாந்தி எப்படித் தனது சொந்த துக்கத்தையும் கோபத்தையும் ஒதுக்கிவிட்டு, அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனிடம் கருணை அளிக்கக் கோரி அறம் சார்ந்த அரசியலை முதன்மைப் படுத்தினாரோ அதே கொள்கையைத் இன்று பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

‘பழிவாங்கல் நீதி வழங்கலாகாது’ (Vengeance isn’t Justice) என்ற தலையங்கம், மரணதண்டனை என்பது ஒரே சீரான சட்டவரையறைகளுக்கு உட்பட்டதாக இல்லாமல் எப்படி நீதிபதிகளின் தனிப்பட்ட கருத்தியலைப் பொறுத்து அமைகிறது என்பதைச் சமீபத்திய நிகழ்வுகளினூடே கீழ்வருமாறு விளக்கியது.

சென்ற மாதம் நீதிமன்ற வழக்கு ஒன்றில் நீதிபதிகள் சதாசிவம் மற்றும் ஃபக்கீர் கலிஃபுல்லா ஆகியோர் மொஹிந்தர் சிங் என்ற குற்றவாளியின் தூக்கு தண்டனையைக் குறைத்தார்கள். மொஹிந்தர், ஒரு சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சிறைத்தண்டனையில் இருந்தபோது பரோலில் வெளியே சென்றுவிட்டு தனது சொந்த மகளையும் மனைவியையும் கொன்றவன். அவனது தண்டனைக் குறைப்பிற்கு நீதிபதிகள் சொன்ன காரணம், சமூக அமைதிக்கும் சமாதான வாழ்விற்கும் குந்தகம் விளைவிப்பவர்களுக்குத் தான் இந்தத் தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதே. ஒருவாரத்திற்குப் பின்பு, நீதிபதிகள் சதாசிவம் மற்றும் கேஹர் சிங் ஆகியோர் சுந்தர்ராஜன் என்பவருக்கு தூக்கு தண்டனை வழங்கினர். அவன் மீதான குற்றம் ஏழு வயதுச் சிறுவனைக் கடத்திச் சென்று கொலை செய்தான் என்பதுதான். இந்தக் குற்றத்திற்கு மரணதண்டனை வழங்க நீதிபதிகள் சொன்ன காரணம், பரம்பரையை நிலைநிறுத்தக் கூடிய ஒரு ஆண்மகனை இழந்து வாடும் அந்தக் குடும்பத்தினரின் வருத்தத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதுதான். இதிலிருக்கும் ஆணாதிக்கப் பார்வை என்பது ஒருபுறமிக்க, மரணதண்டனை என்பது எவ்வாறு வரையறுக்கப்படாத சட்டவிதிகளின் கீழ், நீதிபதிகளின் சொந்தக் கருத்தியலை வைத்து வழங்கப்படுகிறது என்பதை இந்து நாளிதழ் தெளிவாக எடுத்துக்காட்டியது.

“மக்களாட்சிக்கு ஓர் உயரிய நாள்” (A Perfect Day for Democracy) என்ற தலைப்பில் வெளியான அருந்ததிராயின் கட்டுரை, அப்சல் வழக்கில் இருந்த தில்லுமுல்லுகளை எல்லாம் நாடறிய அம்பலப்படுத்தியது.

நீதிமன்றம் கிலானியை விடுதலை செய்துவிட்டு அப்சலுக்கு மட்டும் தண்டனையைச் கொடுத்தது என்பதிலிருந்தே இவ்வழக்கு நடுநிலையாக நடைபெற்றிருக்கிறது என்பது புர்ர்யவில்லையா? என்று வாதிடும் ‘நடுநிலைவாதிகளின்’ முன் அருந்ததி மீண்டும் அந்த முக்கிய கேள்விகளை எழுப்பியிருந்தார். அந்த வழக்கிலுள்ள ஏராளமான குளறுபடிகளில் சிலவற்றைக் கோடிட்டுக் காட்டியிருந்தார்.

காவல்துறை கிலானியிடம் பெற்ற தகவல்களின் அடிப்படையிலேயே அப்சலைப் பற்றிக் கண்டுபிடிக்க முடிந்ததாகக் கூறியது. ஆனால், நீதிமன்ற ஆவணங்கள் கிலானியைக் கைது செய்வதற்கு முன்பே, அப்சலைக் கைது செய்வதற்கான உத்தரவு வழங்கப்பட்டதாகக் கூறுகின்றன. நீதிமன்றம் இதை ஆவண முரண்பாடு என்று கூறியது. ஆனால், எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்சல் கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து கைப்பேசியும் மடிக்கணிணியும் கைப்பற்றப்பட்டன. இப்படிப் பறிக்கப்பட்ட பின்பு அவரது மடிக்கணிணியை யாரோ பயன்படுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதேபோல, அப்சல் குருவிற்கு விற்கப்பட்ட – தீவிரவாதிகளுடன் தொடர்பு கொள்வதற்காகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட – சிம்கார்டு, அவருக்கு விற்கப்பட்ட நாளுக்கு முன்பிலிருந்தே பயன்பாட்டில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. நீதிமன்றம் இவை அனைத்தையும் கவனித்தது. ஆனால், காவல்துறையை இலேசாகக் கடிந்து கொண்டதோடு விட்டுவிட்டது என்று சொல்லி இந்த வழக்கின்ன் முறையற்ற விசாரணைகளை விளக்கிய அருந்ததி, இறுதியாக இப்படிச் சொன்னார் :

வழக்கமாக காஷ்மீரில் சரணடையும் போராளிகளைப் போலவே அப்சலும் இரையாகி விட்டார். அவர் சித்திரவதை செய்யப்பட்டார், மிரட்டப்பட்டார், மோசமாகத் துன்புறுத்தப்பட்டார். நடந்த சதித்திட்டங்களின் முன் அவர் ஒன்றுமே இல்லை. பாராளுமன்றத் தாக்குதலில் உண்மையை வெளிக்கொணர விரும்பும் யாரொருவருக்கும் ஏராளமான ஆதாரங்கள் இருந்தன. ஆனால் யாருமே உண்மையைக் கண்டறிய விரும்பவில்லை. இந்தச் சதித்திட்டத்தின் உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை ; விசாரிக்கப்படவில்லை. ஆனால், அப்சல் தூக்கிலிடப்பட்டுவிட்டார். இப்போது நமது கூட்டுமனசாட்சி திருப்தி அடைந்திருக்கும் என்று நினைக்கிறேன் அல்லது நமது கோப்பையில் பாதி இரத்தம் தான் நிரம்பியிருக்கிறதா?

அருந்ததிராயின் இந்தக் கட்டுரைக்கு எதிர்வினையாற்றிய, நாடறிந்த – முஸ்லிம் வெறுப்புப் – பத்தி எழுத்தாளர் ப்ரவீண்சாமியின் கட்டுரையையும் ‘இந்து’ நாளிதழ் வெளியிட்டிருந்தது. அருந்ததி ராயின் கருத்திற்கு மறுப்பாக எழுதப்பட்ட அக்கட்டுரை, ஆதாரமே இல்லாமல் மொண்ணையாக வார்த்தைகளைக் கொட்டியது.அருந்ததியின் குற்றச்சாட்டுகள் எல்லாம் விசாரிக்கப்படாதவை அல்ல. நீதிமன்றத்தால் “கவனத்தில் கொள்ளப்பட்டவை தான்” என்கிற மழுப்பலைத் தவிர வேறெந்த அறிவுப்பூர்வ விவாதமும் அவரது கட்டுரையில் இல்லை.

வழக்கமாக ‘விவாதம்’ எனத் தலைப்பிட்டு முதற் கட்டுரையாளரின் பதிலைப் பெற்று வெளியிடும் இந்து நாளிதழ் ப்ரவீண்சாமியின் கட்டுரைக்கு அருந்ததியிடமிருந்து பதில் எதையும் பெற்று வெளியிடவில்லை. ஒருவேளை இந்தச் சத்தற்ற கட்டுரைக்குப் பதில் ஏதும் தேவையில்லை என அருந்ததி பதில் எழுத மறுத்துவிட்டாரோ என்னவோ!. ப்ரவீனின் கட்டுரையில் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் நம்ம ஊர் ஜெயமோகனைப்போல அருந்ததி ராயைக் ‘குருவி மண்டை’ என்றெல்லாம் சகட்டுமேனிக்கு எழுதவில்லை என்பதுதான்.

11.2.12 அன்று வெளியான, “In tihar, officials feel ‘tingle of sorrow” என்ற கட்டுரை, அனைத்து நாளிதழ்களும் அப்சலை ஒரு தீவிரவாதியாக மட்டுமே அடையாளப்படுத்திய நிலையில் அவரது மறைக்கப்பட்ட முகத்தைத் துணிச்சலுடன் வெளிக்கொணர்ந்தது.

ஒரு பெயர் சொல்ல விரும்பாத சிறைச் சாலை ஊழியர் சொன்னதன் அடிப்படையில் அந்தச் செய்தி இப்படிப் பதிவு செய்யப்பட்டிருந்தது :
இந்தியாவின் உள்ள வெகுமக்கள் , இந்துத்துவ ஆதரவாளர்கள் அப்சல் குருவின் தூக்கை வெடிவைத்து கொண்டாடினாலும் , சிறைச்சாலை வளாகம் அமைதியாகவே காணப்பட்டது. சிறை ஊழியர்கள் பலரும் வருத்ததுடன் காணப்பட்டனர் . காரணம் அப்சல் குருவை தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும் போது அவர் எல்லோரையும் பெயரைச்சொல்லி அழைத்துத் தான் விடைபெறுவதை அறிவித்தபடி நகர்ந்தார்.

அவர் உண்மையாக தனது மார்க்கத்தை நேசிப்பவர் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்பவர் … பலரும் நினைப்பது போல் அப்சல் குருவின் தூக்கு தண்டனை நிறைவேற்றம் குறித்து அவருக்கு ஒரு நாள் முன்பு தெரிவிக்கப்படவில்லை . தண்டனை வழங்கப்பட்ட அன்று காலையில் தான் தெரிவிக்கப்பட்டது.

அன்று காலையில் அப்சல் குரு தேநீர் மட்டுமே அருந்தினார் . அவருக்கு உணவு வழங்கப் படவில்லை . குளித்துவிட்டு வெள்ளை ஆடை உடுத்தி தொழுகை நடத்தினார் …இது வரை திகார் சிறைச் சாலை 25 க்கும் மேற்பட்ட தூக்கு தண்டனைகளை நிறைவேற்றி உள்ளது . எங்கள் அனுபவத்தில் 10 நபர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றி உள்ளோம் . ஆனால் நாங்கள் அப்சல் குருவைப் போல் , மரணம் தனக்கு வருவதை அறிந்தும் இவ்வளவு அமைதியும் அடக்கத்தையும் கட்டிக் காத்த மனிதரை பார்த்ததில்லை.

கடைசி இரண்டு மணி நேரத்தில் அப்சல் குரு சிறைத் துறை அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்தார் . அவர் வாழ்வும் மரணமும் பற்றி அவருடை கருத்துகளை முன்வைத்தார். உலக சகோதரத்துவம் , ஒருமைப்பாடு , மனித நேயம் குறித்து பேசினார் . எந்த மனிதனும் தீயவன் அல்ல, எல்லா உயிர்களும் ஆண்டவனால் படைக்கப் படுகிறது . நாம் உண்மையின் பாதையை தேர்ந்தெடுத்து செல்ல வேண்டும் . அது தான் உண்மையான சாதனை என்றார் . ஒரு புத்தகத்தில் அவரது சிந்தனையை எழுதி தேதி குறிப்பிட்டு கையெழுத்தும் இட்டார் “ என்று விளக்கியதோடு, “இப்படி ஒரு மனிதரை இனி திகார் சிறை பார்ப்பது அரிதுதான்” என்றும் கண்கள் பனித்தது அந்தக் கட்டுரை.
“ஒரு இரகசியத் தூக்கின் ரகசியங்களை வெளிக்கொணர்தல்” (Unlocking the Secret’s of a Secret Execution) என்ற நித்யா ராமகிருஷ்ணனின் கட்டுரை, உச்சநீதிமன்றம் முன்னிறுத்திய “கூட்டு மனசாட்சி” என்பதன் மீது ஒரு விவாதத்தை முன்னெடுத்ததோடு காஷ்மீரிகள் இந்திய அமைப்புகளின் மீது நம்பிக்கை இழந்துகொண்டு வருவதையும் சுட்டிக்காட்டியது. மேலும், தீவிரவாதத் தாக்குதலில் இருந்து நாட்டின் இறையாண்மையைக் காப்பாற்றி விட்டதாக மார்தட்டிக்கொள்ளும் அரசியலமைப்புகளை நோக்கி இந்தக் கேள்வியையும் எழுப்பியது : “ஒரு தூக்குத் தண்டனைக்கைதி தனது குடும்பத்தைச் சந்திப்பதன் மூலமாகவும் அந்தக் குடும்பம் இறுதிச் சடங்கைச் செய்வதன் மூலமாகவும் தனது வலிமை தேய்ந்துவிடும் என்று அரசாங்கம் கருதினால், தீவிரவாதிகளிடம் இருந்து நாடாளுமன்றத்தைக் காப்பாற்றிவிட்டதற்காக அது எப்படி பெருமைப்பட்டுக் கொள்ளமுடியும்??”

12.2.13 அன்று வெளியான “இரகசியத் தூக்கிலிடுதலின் அநாகரிகம்” (The Indecency of a Secret Execution) என்ற தலையங்கம், 24 வருடங்களுக்கு முன்பு இந்திராகாந்தி படுகொலையில் தூக்கிலிடப்பட்ட சத்வந்த் சிங், கேஹார் சிங் ஆகியோரது மரணதண்டனைச் செயல்முறையை நினைவுகூர்ந்தது. அன்றைய காங்கிரஸ் அரசால் கருணை மனு நிராகரிப்பட்ட போது, அது எப்படி வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது என்பதையும், குற்றவாளிகளுக்கு மேல்முறையீட்டிற்கான இறுதிவாய்ப்பும் மறுக்காமல் அளிக்கப்பட்டது என்பதையும் இருவரின் குடும்பத்தாரும் (முப்பத்து மூன்று பேர்) கைதிகளை இறுதியாக சந்திக்க அனுமதிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி, இன்று நிறைவேற்றப்பட்டுள்ள இரகசியத் தூக்கின் மூலம், இந்த 24 வருட இடைவெளியில் இந்தியாவின் கூட்டு அறம் வீழ்ந்துபோயிருப்பதை அறிவுறுத்தியது.

“சட்ட ஒழுங்கு மீறல்” (lawlessness and disorder) என்ற தலைப்பில் வெளியான இன்னொரு தலையங்கம் குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையது அலி ஷா அவர்களின் மகளும், மருமகனும் பத்திரிக்கையாளருமான இப்திகார் கிலானியும் அவர்களது இரண்டு குழந்தைகளும் – அப்சலை தூக்கிலிட்ட உடனேயே – எந்தக் காரணங்களும் சொல்லப்படாமல் சில மணிநேரம் வீட்டுக்காவலில் அடைத்து வைக்கப்பட்டனர். இந்த காவல்துறை அராஜகத்தை எதிர்த்து பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அந்தக் காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.ஒரு பத்திரிக்கையாளரின் மீதான இந்த சட்டமீறலைக் கூட பெரும்பாலான நாளிதழ்கள் கண்டுகொள்ளாத நிலையில், கட்சுவின் அறிக்கையை முன்வைத்து, இந்த சட்ட ஒழுங்கு மீறலைக் கண்டித்தது ‘இந்து’ நாளிதழ் மேற்கூறிய தலையங்கத்தை எழுதியிருந்தது.

மார்க்கண்டேய கட்சுவின் இதே அறிக்கையை முன்வைத்து ‘காக்கியும் ஈரமும்’ என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டிய தினமணி, ஏதோ இப்திகார் கிலானிக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதாகக் காட்டிக்கொண்டு, பிறகு இது கிலானிக்கு மட்டும் ஏற்படுவதல்ல, இங்கே எல்லாருக்குமே அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது என்பதாக எழுதி இப்திகார் மீதான காவல்துறை அராஜகத்தை நீர்த்துப் போகச் செய்தது.

“அண்மையில் சென்னை மயிலாப்பூரில் ஒரு சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு தப்பியோடிய இளைஞருக்காக, அவருடைய தம்பியரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துவிட்டனர். இவர்களின் தாய் கஸ்தூரி என்பவர் காவல்நிலையத்துக்குபோய், குற்றம் செய்யாத தனது குழந்தைகளை விட்டுவிடுங்கள் என்று கேட்டுள்ளார். காவல்துறை வழக்கமான மிரட்டல், அசிங்கமான வார்த்தையோடு, உன் மகன் வந்தால்தான் இந்தச் சிறுவர்களை அனுப்புவோம் என்று கூறியதால் மனம்வெறுத்த அந்தத் தாய், வீடுவந்து தூக்கில் தொங்கி இறந்தார். இப்திகார் கிலானிக்கு குரல் கொடுக்க பத்திரிகைகள் இருந்தன. ஆனால்,பாவம் கஸ்தூரிக்காக பரிதாபப்படக்கூட யாருமில்லை.”

என்று உச்சுக்கொட்டி, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு முஸ்லீம்கள் மீதான தன் வன்மத்தைத் தீர்த்துக்கொண்டது.

மொத்தமாக தொகுத்துப் பார்க்கையில், பெரும்பாலான செய்தி இதழ்கள் எல்லாம், ‘தண்டனை நிறைவேற்றப்பட்டது’ ‘இதோடு நிறுத்திக்கொள்ளலாம்’ ‘இதை விமர்சனமாக்காதீர்கள்’ ‘இதை அரசியலாக்காதீர்கள்’ என்று சிந்தனையை முடக்கிய வேளையில் ‘இந்து’ நாளிதழ், இது பற்றிய பலதரப்புக் கேள்விகளை முன்னிறுத்தி வெகுமக்களிடம் ஒரு அரசியல் விவாதத்தைத் தூண்டியிருப்பதை அறியமுடிகிறது. ’இந்து’ நாளிதழின் இந்த பொறுப்புமிக்க அணுகுமுறையும் அறமும் பாராட்டத்தக்கது.

மேலும் பார்க்க

A perfect day for democracy
Vengeance isn’t justice
The indecency of a secret execution
Lawlessness and disorder
காக்கியும் ஈரமும்…

குமுதம் ரிப்போர்ட்டரின் பழிதீர்க்கும் படலம்

‘குமுதம் ரிப்போர்ட்டர்’ 21.2.13 நாளிட்ட வார இதழில், “இன்னொரு மணியம்மை” என்ற தலைப்பில் ஒரு அவதூறுக் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. திமுக தலைவர் கருணாநிதியையும் அக்கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்புவையும் பாலியல் ரீதியாக இணைத்துக் கொச்சைப்படுத்தப்பட்ட அக்கட்டுரையில், ‘பெரியார்’ திரைப்படத்தில் மணியம்மையாக நடித்த குஷ்புவின் புகைப்படமும் கறுப்புச்சட்டை அணிந்துகொண்டிருக்கும் கருணாநிதியின் புகைப்படமும் கிராஃபிக்ஸில் இணைத்து அருகருகில் இருக்கும்படி வெளியிடப்பட்டிருந்தது. இந்த கிராஃபிக்ஸ் படமும் கட்டுரைத் தலைப்பும் அன்றைய இதழின் முன் அட்டையிலேயே அச்சிடப்பட்டு முக்கியத்துவமளிக்கப்பட்டது.

கட்டுரை இப்படித் தொடங்குகிறது : “திமுக-வில் நடக்கும் வாரிசுப் போரில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ‘குஷ்பு மீது தாக்குதல் நடத்தியவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் வரையில் அறிவாலயம் வரமாட்டேன்’ என்று கருணாநிதி பிடிவாதம் காட்ட, ‘இன்னொரு மணியம்மை’யாக குஷ்பு உருவாகிவிடுவாரோ என்ற அச்சம் கருணாநிதி குடும்பத்தினருக்கு எழுந்துள்ளது. இதையடுத்து, அவரின் குடும்ப உறவுகள் கொந்தளித்துப் போயுள்ளனர்.”

இந்த ஆறேழு வரிகளைப் பிரச்சாரப்படுத்த, மூன்று பக்கங்களுக்கு நீட்டி முழக்கப்பட்டிருந்த அக்கட்டுரை, இரண்டு தனிநபர்களின் சொந்த விஷயத்தை இரண்டு தனிப்பட்ட குடும்பங்களின் விஷயத்தை முழுக்க முழுக்க ஊகத்தின் அடிப்படையிலும் புறம் பேசியவர்களின் கூற்றின் அடிப்படையிலும் மட்டுமே கட்டியமைத்திருந்தது.

இந்த இதழிற்கு முந்தைய இதழிலேயே (17.2.2013) இதற்கான தூபம் போடப்பட்டிருந்தது. “குடும்பத்தைப் பிரிக்கும் சூனியக்காரி” என்று அட்டைப்படத் தலைப்பாகவே வெளியிடப்பட்ட அந்தச் செய்தியில், குஷ்புவிற்கு முக்கியத்துவம் அளிக்காத தனது குடும்பப் பெண்களை, “குடும்பத்தைப் பிரிக்க வந்த சூனியக்காரி, கோயில், பூஜைன்னு அலையுறா, மந்திரவாதிகளோடு பேசிக்கிட்டு இருக்கிறா?” என்று ஏக வசனத்தில் கருணாநிதி பேசியதாகவும் இதை பெரிதுபடுத்தினால், “குஷ்பு தான் எனது அரசியல் வாரிசு” என அறிவித்துவிடப் போகிறார் என்று குடும்பப் பெண்கள் வருத்தப்படுவதாகவும் செய்தி வெளியிட்டு, “குஷ்பு மீது அவ்வளவு பாசமோ” என்று நக்கலடித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாகவே ‘இன்னொரு மணியம்மை’ கட்டுரை வெளிவந்துள்ளது. இது கருணாநிதியையும் குஷ்புவையும் மட்டுமன்றி, சந்தடி சாக்கில் பெரியார் – மணியம்மை உறவைக் கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளது. கருணாநிதியின் திமுக அரசியலையும் குஷ்புவின் அரசியல் செயல்பாடுகளையும் நேரடியாக விமர்சிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் இவர்களின் தனிப்பட்ட வாழ்வை, அவர்களின் குடும்பப் பிரச்னைகளை ஏதோ தமிழகத்தின் அதிமுக்கிய பிரச்சினையைப் போல உளவுப் பிரிவை அமைத்துக் கண்டுபிடித்து வெளியிட்டிருப்பதன் நோக்கம் திமுக தலைவரை இழிவுபடுத்த வேண்டும் என்பது மட்டும்தான். ஜெயலலிதா அரசின் மக்கள் விரோதப் போக்குகள் குறித்துப் பெரிதாக அலட்டிக்கொள்ளாத ‘ரிப்போர்ட்டர்’ இதழ், திமுக-வையும் கலைஞரையும் தொடர்ந்து அவதூறு செய்வதும் கடுமையாக விமர்சிப்பதும் ஏன் என்ற பின்புலம் குறித்து யோசித்துப் பார்த்தால் இது ரிப்போர்ட்டரின் பழி தீர்க்கும் படலம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

குமுதம் இதழின் நிறுவனர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவரது மகன் ஜவஹர் பழனியப்பனுக்கும் குமுதத்தில் முக்கிய பொறுப்பு வகித்திருந்த பி.வி.பார்த்தசாரதி மகன் பா.வரதராஜனுக்கும் இடையே ஏற்பட்ட குமுதம் இதழ் மீதான உரிமைப் போட்டி, அரசாங்கம் தலையிடும் அளவிற்குப் பெரிதானது. தனது நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் வரை வரதராஜன் மோசடி செய்துவிட்டதாக ஜவஹர் பழனியப்பன் காவல்துறையில் புகார் கொடுத்தார். இந்த விஷயத்தில் தலையிட்ட அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, ஜவஹர் பழனியப்பனுக்குச் சாதகமாய் இருந்து, வரதராஜனை கைது செய்ய உத்தரவிட்டார். கைது நடவடிக்கையின் போது, இந்து ராம், விகடன் சீனிவாசன் எனப் பல ஊடகத்துறையினரும் கமிஷனர் அலுவலகத்திற்கே வந்து வரதராஜனை மீட்டுச் சென்றனர்.

அதன் பின்னர், ஊடகத்துறையில் வெளிநாடுவாழ் நபர்கள் 41 சதவிதத்திற்கு மேல் பங்கு வைத்திருக்கக் கூடாது என்ற அரசியல் விதிகளை எல்லாம் பயன்படுத்தி குமுதத்தைத் தனக்கே உரித்தாக்கினார் வரதராஜன். அவர் நிர்வாகப் பொறுப்பு ஏற்றதில் இருந்து தனது பழைய பகைக்கு வஞ்சம் தீர்க்கும் வகையில், ‘ரிப்போர்ட்டர்’ திமுக-வை படுமோசமாக விமர்சித்து வருகிறது. அதன் உச்சமாக, ‘இன்னொரு மணியம்மை’ கட்டுரையை வெளியிட்டு தனது ஊடக பலத்தை எவ்வளவு தரம் தாழ்ந்து வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நிறுவியிருக்கிறது.

மக்களுக்கு உண்மைச் செய்திகளை நடுநிலையோடு அளிக்க வேண்டிய ஊடகம் இப்படி நான்கு சுவர்களை எட்டிப்பார்த்து செய்தி வெளியிடுவதும் தனது பகையைத் தீர்த்துக் கொள்ள தனது ஊடக பலத்தைப் பயன்படுத்துவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இனிவரும் காலங்களிலாவது திருந்தவேண்டும்.

அப்சல்குரு தூக்குத் தண்டனை குறித்த வார இதழ்களின் பதிவு

தமிழின் முக்கிய வார இதழ்களான ஜூனியர் விகடன், புதிய தலைமுறை, நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் ஆகியவற்றில் அப்சல் குருவின் மரணதண்டனை குறித்த செய்திகள் வெளியாகியிருந்தன. வார இதழ்களில் இந்த நிகழ்வு பெரிய முக்கியத்துவத்தைப் பெறவில்லையென்றாலும் ஓரிரு கட்டுரைகளை வெளியிட்டு செய்தி அளித்திருந்தன.

17.2.13 குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளிவந்த, “நேற்று அஜ்மல் கசாப் இன்று அப்சல் குரு” என்னும் கட்டுரை, ஏதோ அப்சலின் ரகசியத் தூக்கிற்குக் கண்டனம் தெரிவிக்கும் தோரணையில் ஆரம்பித்தாலும், இறுதியாக அப்சலை ‘நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கின் மூளை’ என்பதாகவே அடையாளம் காட்டியது.

21.2.13 குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளிவந்த பாலபாரதியின், “தூக்கு தண்டனைக்கு தூக்கா? துணையா?” என்னும் கட்டுரை, மரணதண்டனை என்னும் மனித உரிமை மீறல் எப்படி அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை சுருங்கச்சொல்லி சிறப்பாக விளக்கியது. மரணதண்டனை குற்றங்களைத் தடுக்கும் என்றால், சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில், 2004 ஆம் ஆண்டு தனஞ்செய் சாட்டர்ஜி தூக்கிலேற்றப்பட்ட பின்பும் அந்தக் குற்றம் நாட்டில் இன்னும் குறையவில்லையே என்ற கேள்வியை முன்னிறுத்தியதோடு, போபால் விஷவாயுக் கசிவில், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொல்வதற்கும் வருங்காலத் தலைமுறையையே சிதைப்பதற்கும் காரணமாக இருந்த, அந்நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சனுக்கு இந்திய அரசு தூக்கு தண்டனை விதித்ததா? அமெரிக்காவுக்குத் தப்பி ஓட உதவி செய்ததே! என்பதையும் நினைவுபடுத்தி, மரணதண்டனை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது அவசியம் என்றும் சொல்லியது.

நக்கீரன் இதழில், மனுஷ்யபுத்திரன் எழுதிய ‘ அப்சல் குரு : கூட்டு மனசாட்சிக்கு இன்னொரு குருதிப்பலி” என்னும் கட்டுரை அப்சல் குரு விஷயத்தில் பெரும்பாலான ஊடகங்களால் மூடிமறைக்கப்படும் பல முக்கிய அம்சங்களையும் மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கருத்துக்களையும் தொகுத்தளித்தது. போலிஸ் தரப்பில் அப்சலுக்கு நிகழ்த்தப்பட்ட சித்திரவதை, நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அவர் திட்டமிட்டு சிக்கவைக்கப்பட்டது ஆகிய தகவல்களையும் கொடுத்து, அப்சல் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டதை விரிவாக விளக்கியது.

புதிய தலைமுறை வார இதழில் (21.2.13), “எல்லாவற்றிலும் அரசியலா?” என்ற தலைப்பில் எழுதப்பட்ட தலையங்கம், இந்த தண்டனையை விமர்சிப்பவர்களுக்கு இப்படிப் பதிலளித்தது: “இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் ஜிலானி, சவ்கத் ஹூசைன் குரு, அப்சல்(ன்) குரு ஆகிய மூவரையும் போதிய சாட்சியங்கள் இல்லை என உச்சநீதிமன்றம் விடுதலை செய்துவிட்டதையும் கவனிக்க வேண்டும். அவர்களை விடுதலை செய்துவிட்டு அப்சல் குருவை மாத்திரம் தண்டிக்க, உச்சநீதிமன்றத்திற்கு அவர் மீது தனிப்பட்ட காழ்ப்பு ஏதும் இல்லை.”

புதியதலைமுறை அளிக்கும் இந்தச் செய்தி தவறானது. குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுவிக்கும்போது அவர் யாராக இருந்தாலும் போதிய ஆதாரங்களோடு குற்றம் நிறுவப்படவில்லை என்கிற அடிப்படையிலேயே விடுவிக்கப்படுகின்றனர். கிலானிக்கும் அப்படித்தான் நடந்தது. சவுகத் குரு தகவலை மறைத்தார் என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு, அதை அனுபவித்துவிட்டு 2010 டிசம்பர் மாதம் தான் விடுதலையாகி வெளியே வந்தார். சவுகத்தின் மனைவியும் ஓராண்டிற்குப் பிறகே விடுதலை செய்யப்பட்டார். இதற்கு முரணாக மூவரையும் உச்சநீதிமன்றம் ஒன்றாக விடுவித்துவிட்டதைப் போல புதியதலைமுறை எழுதியிருக்கிறது. மாலன், செய்தித்தாள்களை எல்லாம் புரட்டுவதில்லையா? அல்லது தனது வாசகர்கள் ‘புதிய தலைமுறையைத்’ தாண்டி வேறெதையும் படிப்பதில்லை என்று நம்பிக்கொண்டிருக்கிறாரா?

மேலும், “இன்று அப்சல் குருவின் தண்டனையைக் கண்டிப்பவர்கள் அந்த அப்பாவிக் காவலர்களையும் அந்தத் தோட்டக்காரர் குடும்பத்தினரையும் சற்றேனும் எண்ணிப்பார்க்கவில்லை” என்று வருத்தப்பட்டதோடு, “கொலையிற் கொடியாரை” என்னும் திருக்குறளை எடுத்துக்காட்டி, “கொலை செய்யும் பாதகர்களை அரசன் அகற்றி விடுவது, பயிர்களைக் காக்க களையெடுப்பதப் போன்றது. களை செழிக்க வேண்டும் என்பவர்கள் எதை வேண்டுமானாலும் பேசட்டும், நாம் பயிர் செழிக்கப் பாடுபடுவோம்” என்று தன்னை நியாயப்படுத்தியது.

மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும் யாருமே, உயிர்ப்பலி வாங்கும் இப்படியான தீவிரவாதத் தாக்குதல்களை ஆதரிக்கவில்லை. உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக அப்சல் குரு போன்ற அப்பாவிகளைக் காவு கொடுப்பதைப் பற்றித்தான் இங்கு முதன்மையாக விமர்சிக்கிறார்கள். இந்த அம்சத்தைத் திட்டமிட்டு மறைக்கும் ‘புதிய தலைமுறை’ மனித உரிமை ஆர்வலர்கள் எல்லாம் ஏதோ தீவிரவாதத்தைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதைப் போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது. புதிய தலைமுறையின் இன்றைய ஆசிரியர் மாலன் குமுதத்தில் ஆசிரியராக இருந்தபோது ராஜிவ் கொலை வழக்கில் மரண தண்டனைகள் விதிக்கப்பட்டதைக் கேட்டுக் குதூகலித்து ‘தூக்கு மரத்தின் லீவர் இழுபடும் கிளிக் சத்தம் விரைவில் கேட்கும்’ என்கிற ரீதியில் எழுதிய கட்டுரை கடுமையான விமர்சனத்திற்குள்ளானது எண்ணத்தக்கது.

ஜூனியர் விகடன் இதழில் (17.2.13) வெளிவந்த, “தொழுகை, டீ, சிரிப்பு” என்ற கட்டுரை, அப்சல் குருவைத் தீவிரவாதியாக முன்னிறுத்தி, “பழ வியாபாரி வேடத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் தங்க வீடு ஏற்பாடு செய்து கொடுத்தார். ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் காஷ்மீரில் இருந்து கொண்டுவந்து அவர்களுக்கு உதவி செய்திருக்கிறார்” என்று காவல்துறைச் செய்திகளை மட்டுமே சொல்லி இந்த தூக்கு தண்டனையை ஆதரித்தது.

ஆக, அப்சல் குறித்த முழு உண்மைகளை அறிய விரும்பாமல் அல்லது அறிவிக்க விரும்பாமல், நடுநிலையில் இருந்து நழுவியே பெரும்பாலான வாரப் பத்திரிக்கைகளும் இயங்குகின்றன என்பதை மேற்கூறியவற்றிலிருந்து அறியமுடிகிறது. இந்த ஆபத்தான ஊடகப்போக்கு வருந்தத்தக்கது; கண்டிக்கத்தக்கது.

அப்சல் குரு: இரண்டாவது முறை தூக்கிலிட்ட நாளிதழ்கள்

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகமது அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து 9.2.13 அன்று காலை 8 மணியளவில் திகார் சிறையில் ரகசியமாக அவர் தூக்கிலிடப்பட்டார். பரவலான ஊடக கவனத்தைப் பெற்ற இந்நிகழ்வு, அனைத்து நாளிதழ்களிலும் (10.2.13) முதன்மைச் செய்தியாக வெளிவந்தது.

அப்சல் குருவின் மரணத்தையொட்டி இருவேறு தளங்களில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒருபுறம் அருந்ததிராய், நந்திதா ஹக்சர் உள்ளிட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அப்சல் குருவிற்கு இழைக்கப்பட்ட சட்டப்பூர்வமான அநீதியைக் கண்டித்துக் குரலெழுப்பியதோடு, இறுதிவரை விசாரணைக்கு உட்படுத்தாமல் மூடிமறைக்கப்பட்ட பல்வேறு ஐயங்கள் பற்றியும் அவை அனைத்தும் அப்சல்குருவின் குற்றமற்ற தன்மைக்கு சாட்சியங்களாக இருந்தது பற்றியும் விரிவாகப் பேசினர். இன்னொருபுறம், பா.ஜ.க., இந்து முன்னணி, பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்துத்துவக் கட்சிகள் பட்டாசு வெடித்தும் லட்டுகளைச் சுவைத்தும் அப்சல் குருவின் படத்தைத் தீ வைத்து எரித்தும் மரணதண்டனையைக் கொண்டாடினர். பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, சி.பி.எம் (சீதாராம் யெச்சூரி) ஆகிய கட்சியினர் காங்கிரஸின் ரகசியத் திட்டத்தை ஆதரித்து இந்துத்துவவாதிகளோடு கைகோர்த்தனர்.

பொதுவெளியில் நிகழ்ந்த இந்த இருவேறு விவாதங்களைத் தனது அரசியல் சார்புகளைக் கடந்து நடுநிலையோடு முன்வைத்து, அனைத்து தரப்புக் கருத்துக்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது ஊடகங்களின் இன்றியமையாத கடமை. ஆனால், தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்துத் தமிழகத்தின் முக்கிய நாளிதழ்களில் வெளியாகிய செய்திகள் பலவும் நடுநிலைத்தன்மைகளைக் கைவிட்டு முழுக்க முழுக்க அரசுத் தரப்பு மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் சார்பாக நின்று அப்சல் குருவின் மரணத்தைக் குதூகலித்துக் கொண்டாடின.

அப்சல் குருவின் குடும்பத்தினருக்குக் கூட அறிவிக்காமல் ரகசியமாகத் தூக்கிலேற்றியது, காஷ்மீரில் கைப்பேசி, இணையதள, செய்தித்தாள் சேவைகளை முடக்கியது, டில்லி பத்திரிக்கையாளர் இப்திகார் கிலானியை சட்டவிரோதமாக வீட்டுக்காவலில் வைத்தது உள்ளிட்ட மக்கள் விரோதச் செயல்களைக் குறைந்தபட்சம் ஓரிரு வரிகளில் கூடக் கண்டிக்காமல் அரசுத்தரப்பின் அறிக்கைகளை அப்படியே செய்திகளாக வெளியிட்டிருந்தன.

அப்சல் குருவிற்கு மரணதண்டனை உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்தே, ‘அப்சலைத் தூக்கிலிடாதே’ என்னும் முழக்கம் மனித உரிமை ஆர்வலர்களால் முன்வைக்கப்பட்டது மட்டுமின்றி, இந்த வழக்கில் அப்சல் மிகக்கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டார் என்பதையும் அவருக்கென நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் அப்சலை ஒருமுறை கூட நேரில் சந்திக்காமல் நீதி முறைகளை குழிதோண்டிப்புதைத்தார் என்பதையும் அரசு, காவல்துறை, நீதிமன்றங்கள், இந்துத்துவப் பாசிசம் எல்லாமாகச் சேர்ந்து திட்டமிட்டு அப்சல் மீது இந்த அபாண்டப் பழியைச் சுமத்தின என்பதையும் தெளிவாக ஆதாரங்களோடு முன்வைத்தனர். ஆனால், இவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதாத ஊடகங்கள், தமது ஒரு தலைபட்சக் கருத்துக்களையே செய்திகளாக வெளியிட்டுள்ளன. அப்சல் பாகிஸ்தானிலிருந்து திரும்பிவந்து காஷ்மீர் சிறப்பு காவல் படையினரிடம் சரணடைந்து அதற்கான சான்றிதழையும் பெற்றிருந்தவர் என்பதை வாய்தவறிக் கூடச் சொல்லிவிடாமல், அப்சலைப் பாகிஸ்தான் தீவிரவாதி என்றே கட்டமைத்தன.

மிகவும் அரிதாக ஒரே ஒரு நாளிதழ் மட்டுமே இவற்றைக் கேள்விக்குள்ளாக்கும் பல்வேறு கோணங்களைக் கொண்ட கட்டுரைகளை வெளியிட்டதோடு தனக்குரிய ஊடகப் பொறுப்பின் அடிப்படையில் இந்த ரகசிய தூக்கு தண்டனை மற்றும் மக்கள் விரோதச் செயல்களைக் கண்டித்து தலையங்களையும் எழுதியிருந்தது. 10.2.13., 11.2.13., 12.2.13 ஆகிய மூன்று நாட்களில் தமிழகத்தின் முக்கிய நாளிதழ்களில் வெளியான அந்தச் செய்திகளின் தொகுப்பு இங்கே :

தினமணி

“அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்” என்று தலைப்புச் செய்தி வெளியிட்ட தினமணி, அப்சல் குருவை ‘ஜெய்ஷ்–இ முகமது பயங்கரவாதி’ என்று முத்திரை குத்தியது. அவரின் வாழ்க்கைப் பாதையைக் குறித்து தினமணி விளக்கிய கதை, சிறப்பு அதிரடிப் படையினரின் அறிக்கைகளையும் மிஞ்சும் வகையில் இட்டுக்கட்டப்பட்டிருந்தது.
அதிக அளவு பணம் அளிப்பதாக பயங்கரவாதிகள் உறுதியளித்ததால், எல்லையைத் தாண்டி ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாதிகளுடன் அப்சல் இணைந்ததாகவும் அங்கு துப்பாக்கி, வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கையாள்வதற்கு அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் பின்னர் பயங்கரவாதிகளின் ஒரு குழுவிற்குத் தலைமையேற்று காஷ்மீருக்குத் திரும்பிய அப்சல், அங்கு பழங்களை வாங்கி விற்கும் கமிஷன் ஏஜெண்டாக தொழில் செய்து கொண்டே மறைமுகமாக பயங்கரவாதத்தின் ஏஜெண்டாக செயல்பட்டார் என்றும் இதற்காக தில்லிக்குப் பலமுறை பயணம் மேற்கொண்டார் என்றும் அந்தக் கதை தொடங்கியது.

மேலும், அப்சல் குருவின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளெல்லாம் பல்வேறு முறை அவரே ஒப்புக்கொண்ட உண்மைகள் தான், அப்சலின் குற்றம் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்ட ஒன்று, இந்தக் கூட்டுச் சதியில் அவர் முக்கிய பங்காற்றினார் என்றெல்லாம் ஒரு அரசுத் தரப்பு வழக்கறிஞராகவே நின்று விளக்கமளித்தது. நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டதால், டில்லி உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட (உச்சநீதிமன்றம் என தினமணி தவறுதலாகக் குறிப்பிட்டிருந்தது) பேராசிரியர் கிலானி அவர்களைப் பற்றிச் சொல்லும்போது, அவர் விடுவிக்கப்பட்டதற்குக் காரணம், அவரது குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லாதது தான் – அதாவது அவர் குற்றவாளி தான் என்னும் பொருளில் – கொஞ்சமும் நா கூசாமல் எழுதியது. குற்றம் சுமத்தப்பட்ட யாரை விடுதலை செய்யும்போதும் குற்றம் உறுதியாக நிறுவப்படவில்லை என்று சொல்லித்தான் விடுதலை செய்வார்கள். இதன் பொருள், அவர் மீது ஆதாரம் இல்லை என்பதன்று ; அவர் குற்றவாளியே இல்லை என்பதுதான். ஆனால், தினமணி குற்றத்தை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்று சொல்லி அதன்மீது வேறொரு பொருளைத் திட்டமிட்டுக் கட்டமைத்தது.

11.2.13 அன்று, “இதில் என்ன சர்ச்சை” என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் வெளியிட்டது. “பத்து ஆண்டுகள் தள்ளிப் போடப்பட்ட தண்டனையை திடீரென்று ஏன் நிறைவேற்ற வேண்டும் என்று கேள்வி எழுப்புவதும் தூக்கு தண்டனை மனிதாபிமானமற்ற செயல் என்று வாதம் செய்வதும் உடலை உறவினர்களிடம் தராமல் சிறை வளாகத்திலேலேயே அடக்கம் செய்திருக்கக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிப்பதும் தேவையற்றவை என்பது நமது கருத்து” என்று கூறிய அத்தலையங்கம், அப்சல் குரு போன்ற தீவிரவாதிகளின் குற்றத்திற்கு வலுவான ஆதாரம் கிடைப்பது அரிது, கிடைப்பதை வைத்துக்கொண்டு தான் தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லியதோடு இறுதியாக, “ரகசியமாக அப்சல் குருவைத் தூக்கில் போடுவானேன் என்பதை சர்ச்சையாக்கி ஒரு தீவிரவாதியைத் தியாகியாக்கிவிட வேண்டாம். அது தேசத் துரோகம் என்பதை அப்சல் குருவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் உணர்ந்தால் நல்லது. தீர்ப்பு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அத்துடன் நிறுத்திக்கொள்வோம்” என்று சொல்லி, இது தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகளையும் கருத்தொருமிப்புகளையும் மனிதாபிமான நோக்கில் நின்று விவாதிப்பதையே “தேசத்துரோகம்” என்று பீதியைக் கிளப்பி அடக்க முயற்சித்தது.

தீவிரவாதத்தை உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியாவிட்டாலும்,கிடைப்பவற்றை வைத்து அவர்களை ஒழித்துக்கட்டி தேசத்தைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்று தனது “தேசபக்தியை” வெளிக்காட்டும் இதே தினமணி, கொஞ்ச நாட்களுக்கு முன்பு, உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தனக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இந்து தீவிரவாதத்தைப் பரப்புகின்றன எனக் குற்றம் சாட்டியபோது, “நாட்டின் உள்துறை அமைச்சரான ஷிண்டே இவ்வாறு பேசியிருப்பது மிகப்பெரும் தவறு. பாரதிய ஜனதா கட்சியும், ஆர்எஸ்எஸ் இயக்கமும் ஹிந்துத் தீவிரவாதிகளை உருவாக்கும் அமைப்புகள் என்றால், தக்க ஆதாரங்களைக் காட்டி, அதனை முறைப்படி நிரூபித்து, மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுப்பதை யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆனால் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்கின்ற பேச்சாக மட்டுமே இருக்குமானால், ஷிண்டே இனியும் உள்துறை அமைச்சர் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்” என்று சொல்லி கொதித்தெழுந்தது நினைவிற்குரியது.

தினத்தந்தி

“பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு தூக்கில் போடப்பட்டார்” என்று தலைப்புச் செய்தியிலேயே அப்சலைத் தீவிரவாதியாய் அறிவித்த தினத்தந்தி, “யார் இந்த அப்சல் குரு” என்ற தலைப்பில் வெளியிட்ட முதல் பக்கக் கட்டச்செய்தியில் அப்சலின் வாழ்க்கைக் குறிப்பை இப்படிச் சித்தரித்தது : (புனிதப்போரில் பங்கெடுப்பதற்காகவும் பணத்திற்காகவும்) அப்சல் குரு, ஜம்மு – காஷ்மீர் விடுதலை முன்னணியில் சேர்ந்தார். எல்லை தாண்டிச் சென்று தீவிரவாதப் பயிற்சி பெற்றார். ஜெய்ஷ்–இ முகமது, லஷ்கர்–இ தொய்பா ஆகிய இரு தீவிரவாத இயக்கங்களும் இணைந்து நடத்திய பாராளுமன்ற தாக்குதல் சதித்திட்டத்தில் முக்கிய பங்காற்றினார். அதன் பலன் தான் மரணதண்டனை.”

12.2.13 அன்று, “நீதியின் நீண்ட பயணம்” என்ற தலைப்பில் வெளியிட்ட தலையங்கத்தில், 2001 ஆம் ஆண்டில் இருந்து 2013 ஆம் ஆண்டு வரை நீதிக்கான ஒரு நெடும் பயணத்தை நடத்திய இந்த வழக்கில் தற்போது தண்டனை அளிக்கப்பட்டதன் மூலம் நீதி கிடைத்திருப்பதாகவும் இந்த தண்டனையை ஒட்டி நாடு முழுவதும் தூக்கு தண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்ற சர்ச்சை கிளம்பி இருப்பதாகவும் கூறிய தினத்தந்தி, “தூக்கு தண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்பது பாராளுமன்றம் முடிவு செய்யவேண்டிய காரியமாகும். ஆகவே, இதற்கு உரிய விவாதத்தை பாராளுமன்றம் தான் மேற்கொள்ள வேண்டுமே தவிர காவல்துறையோ, நீதிமன்றமோ, ஏன் ஜனாதிபதியோ இதில் எதுவும் செய்ய முடியாத நிலைமை இருக்கிறது” என்று முடித்திருந்தது. ‘சனநாயகத்தின் நான்காவது தூண்’ என்று வர்ணிக்கப்படும் ஊடகங்கள், தமது அரசியல் சார்புகளுக்காக, ‘இதில் என்ன சர்ச்சை’ ‘இதன் மீது என்ன விவாதம்’ ‘பாராளுமன்றம் பார்த்துக் கொள்ளும்’ என்று சொல்லி மக்களின் வாயை அடைக்கும் அளவிற்கு அறமிழந்து போவதை என்னவென்று சொல்வது??

தினமலர்

“தூக்குல போட்டாச்சு” என்று தலைப்புச் செய்தியிலேயே நிம்மதிப் பெருமூச்சு விட்ட தினமலர், அரசுத் தரப்புச் செய்திகளை எந்த விமர்சனத்திற்கும் இடமில்லாமல் அச்சிட்டிருந்தது. இந்தத் தண்டனை இவ்வளவு தாமதமாய் நிறைவேற்றப்பட்டது என்பதற்கு அப்பால் தினமலர் இதழுக்கு இருந்த இன்னுமொரு பெரிய சோகம் அப்சலைக் கைது செய்த காவல் படை அதிகாரிகள் ராஜ்பீர் சிங்கும் மோகன்சந்த் சர்மாவும் இந்த மரண தண்டனையைப் பார்த்து புளகாங்கிதப்பட முடியவில்லை என்பதுதான். “2008 ஆம் ஆண்டு குர்காவ் நகரில் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டதில் ராஜ்பீர் சிங் இறந்தார். அதே ஆண்டு நடந்த டில்லி பத்லா ஹவுஸ் என்கவுண்டரில் இன்ஸ்பெக்டர் மோகன்சந்த் பலியானார்” என்பதைக் குறிப்பிட்டு, “அப்சலைக் கைது செய்த போலிஸ் அதிகாரிகள், தூக்கு பார்க்க முடியாத சோகம்” என்ற தலைப்பில் அரைப்பக்க அளவிற்கு வெளியிட்டது.அதில், 42 பேரை என்கவுன்டரில் சுட்டுத்தள்ளியுள்ள ராஜ்பீர் சிங்கிற்கு “என்கவுன்டர் கிங்” என்று பட்டமளித்தும் (10 ஆண்டுகளில்) 35 பேரை என்கவுன்டரில் போட்டுத்தள்ளிய மோகன்சந்த் சர்மாவை “புலனாய்வு நிபுணர்” என்று பெருமைப்படுத்தியும் அழகுபார்த்தது தினமலர். மேலும் இச்செய்திக்குறிப்பில் தாக்குதல் வழக்கு குறித்து விவரிக்கப்பட்ட ‘த்ரில்லிங்’ ஸ்டோரியானது, ‘தினமலர்னா சும்மாவா?’ என்கிற ரீதியில் தினமணி, தினத்தந்தியின் கதைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டது.

“தாக்குதல் நடத்துவதற்கு நோட்டம் பார்ப்பதற்காக ஒரு கறுப்பு பைக்கை 20 ஆயிரம் கொடுத்து அப்சல் வாங்கினான். அந்த பைக்கில் அப்சலும் சவுகத்தும் சென்று பார்லிமென்டை பலமுறை சுற்றி வந்து நோட்டம் விட்டனர். பின்னர் தீவிரவாதிகளுக்காக மொபைல் ஃபோன்கள், சிம்கார்டுகள், கார்கோ டிரவுசர்கள், டி – ஷர்ட்டுகள், ஷூக்கள்… வாங்கினர்.. 3 போலிஸ் சீருடைகளையும் வாங்கினர்.. வெள்ளை அம்பாசிடர் கார் வாங்கினர்.. 2001 டிசம்பர் 13 ஆம் தேதி காலை அப்சல், கிலானி, சவுகத், தீவிரவாதிகள் 5 பேர் ஆகிய 8 பேரும் சந்தித்துப் பேசினர். அப்போது அப்சலிடம் 10 இலட்சம் பணத்தையும் லேப்டாப்பையும் தீவிரவாதிகளின் தலைவன் முகமது கொடுத்தான். பணத்தை அப்சல் வைத்துக்கொள்ளலாம் என்றும் லேப்டாப்பைக் காசி பாபாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் முகமது கூறினான்…” என்று மனம் போன போக்கில் – முறையாக விசாரிக்கப்பட்டு நிரூபிக்கப்படாத போலிஸ் தரப்பு குற்றச்சாட்டுகளை – உண்மைச் செய்திகள் என்ற போர்வையில் வெளியிட்டது. கிலானி நிரபராதி என்ற அடிப்படையில் தான் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவரும் தீவிரவாதிகளோடு சதித்திட்டத்தில் பங்கெடுத்தார் என்று செய்தி வெளியிடுகிறது தினமலர். இதன்மூலம், ஒரு குற்றவாளி தவறுதலாக விடுதலை செய்யப்பட்டார் என்கிற பிம்பத்தை பொதுமக்களிடம் மிகத் தெளிவாகக் கட்டமைக்கிறது. நந்திதா ஹக்சர் உள்ளிட்ட கிலானியின் வழக்கறிஞர்கள், பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மிரட்டல்களுக்கும் அப்பால் உயிரைப் பணயம் வைத்து நிரூபித்த உண்மையை, மயிரளவும் பொருட்படுத்தாமல், கைக்கு வந்ததை எல்லாம் செய்தியாக்கி வெளியிடும் இந்த இதழியல் அராஜகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

போலிஸ் அதிகாரிகள் ராஜ்பீர் சிங்கும் மோகன் சந்த் சர்மாவும் அப்சலின் மரணத்தைப் பார்க்க உயிரோடு இல்லை என்பதை, மிகப்பெரிய அனுதாபத்தோடு வெளியிட்டிருக்கிற தினமலர் அவர்கள் இருவரையும் ஏதோ தேசத்தைக் காப்பாற்றிய தியாகிகளைப் போல முன்னிறுத்தியிருக்கிறது. ராஜ்பீர் சிங், மோகன்சந்த் சர்மா இருவரும் நாடாளுமன்ற வழக்கிற்காக காஷ்மீரில் வைத்து அப்சலைக் கைது செய்தவர்கள். ‘என்கவுன்டர் கிங்’காகிய ராஜ்பீர் சிங், பணத்திற்காக யாரையும் என்கவுன்டரில் போட்டுத் தள்ளுபவன். அதன்மூலம் வரும் வருமானத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தான். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டதில் செத்துப்போனான்.

‘பத்லா ஹவுஸ்’ என்கவுன்டர் என்பது, கைகளில் ஆயுதங்கள் ஏதுமில்லாத இரண்டு நிராயுதபாணியான இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட போலி என்கவுன்டர். இதில் மோகன்சந்த் சர்மா பலியானான் என்று சொல்வது அபத்தமானது. இன்னமும் விடையறியப்படாத அந்த வழக்கில், மோகன்சந்த் உள்முரண்பாடுகள் காரணமாக, சக காவல் துறையினராலேயே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற ஐயமும் இருக்கிறது.
காவல்துறையின் இந்த மறுபக்கங்களை எல்லாம் மூடிமறைத்து, நீதி விசாரணைகளின் ஒருபக்கச் சார்புகள் மீது எந்தக் கேள்விகளையும் எழுப்பாமல், தமது இந்துத்துவ அரசியலை ஊடகங்கள் இப்படி வெளிப்படையாகக் கக்கும் போக்கு ஆபத்தானது.

THE NEW INDIAN EXPRESS

‘13/12 முதன்மைக் குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டான்’ என்று தலைப்புச் செய்தி வெளியிட்ட எக்ஸ்பிரஸ், அப்சலை ஜெய்ஷ் – இ – முகமது தீவிரவாதியாக முன்னிறுத்தியது. தாக்குதலில் நேரடியாகப் பங்கேற்காதபோதும் அப்சலுக்குத் மரணதண்டனை விதிக்கப்பட்டதற்கான நியாயமான காரணங்களாகப் போலிஸ் தரப்பு சொல்லிய செய்திகளை அப்படியே ஒப்பித்திருந்தது. அந்த நியாயமான காரணங்களுள் ஒன்று, தீவிரவாதிகளுடனும் மற்ற குற்றவாளிகளான கிலானி, சவுகத் ஹூசைன், அப்சான் குரு ஆகியோருடனும் அப்சல் மட்டுமே தொடர்பில் இருந்தார் என்பது. கிலானியை மீண்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் விஷமத்தனத்தில் இவர்கள் அனைவரும் ஒன்றிணைவது கவனிக்கத்தக்கது.

11 ஆம் தேதி எழுதப்பட்ட, “தீவிரவாதம் எந்த நிறத்தில் இருந்தாலும் சமரசம் வேண்டாம்” (No Compromise on terror of any colour) என்ற தலையங்கத்தில், தேவையற்ற நீண்டகாலத் தாமதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட இந்த தண்டனையை, இந்த தேசமும் அரசியல் ரீதியாக வேறுபட்டிருப்பவர்களும் ஒன்றிணைந்து ஒரே குரலில் ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது. மனித உரிமைகள் என்கிற பெயரில் முதலைக்கண்ணீர் வடிப்பவர்கள், தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட மற்றும் காயமடைந்த அப்பாவி குடிமக்களின் உரிமைகளைப் பற்றி வசதியாக மறந்துவிடுகிறார்கள் என்று அங்கலாய்த்தது.
இறுதியாக, தீவிரவாதத்திற்கு இன்னும் வலிமையான செய்தியை அரசு சொல்ல விரும்பினால், தற்போது தூக்குத் தண்டனைக்காகக் காத்திருக்கும் மற்ற தீவிரவாதிகள் மீது எந்தவித பரிவோ, அச்சமோ இல்லாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் – அதாவது தாமதப்படுத்தாமல் தூக்கிலிடவேண்டும் என்று அடுத்து முழக்கங்களுக்குத் தூபம் போட்டது.

தலைமை ஆசிரியர் பிரபு சாவ்லா எழுதிய “Noose You Can Use : Shinde Takes On Opposition, One Hanging at a Time” என்னும் கட்டுரை, ஷிண்டேவின் பராக்கிரமங்களை எல்லாம் விதந்துரைத்து, அவரைப் புகழ்ந்து தள்ளியது. ஒரே ஒரு கையெழுத்தின் மூலம் பா.ஜ.க.வை நிராயுதபாணியாக்கிவிட்டார் என்றும் ஜெய்ப்பூர் மாநாட்டில் வாய்தவறி உளறிவிட்ட போதிலும் அப்சலைத் தூக்கிற்கு அனுப்பியதன் மூலம் ஒரு நடுநிலைத்தன்மையை நிலைநாட்டிவிட்டார் என்றெல்லாம் மெச்சிக்கொண்டது.

அப்சலின் வழக்கு பற்றி பேச வரும்போது, அவருடைய வழக்கு மட்டும் தான் ஆறு வருடங்களுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டு வந்தது என்று பச்சைப் பொய்யை பிரபு சாவ்லா உதிர்த்திருக்கிறார். சென்ற ஆண்டு குடியரசுத்தலைவராய் இருந்த பிரதிபா பாட்டில் 35 மரண தண்டனைக் கைதிகளுக்கு கருணை அளித்தார். அதில் 23 பேர் கருணை கோரிய ஆண்டு 1981. அப்சலுக்கு முன்னதாக – ராஜீவ்காந்தி வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் உட்பட – பலரது மனுக்கள் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கும் போது, ஏதோ அப்சல் குருவின் வழக்கு மட்டும் தான் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது என்பதாக ஒரு முன்னணிப் பத்திரிக்கையின் மூத்த ஆசிரியர் ஒருவரே எழுதுவது, பத்திரிகை அறம் எத்தனை கேலிக்கூத்தாக இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.

இதற்கும் மேலாக அக்கட்டுரையின் இறுதியில் இப்படிச் சொன்னார் : “கிடைத்திருக்கும் தகவல்களின்படி, ஷிண்டேவின் அடுத்த இலக்கு பல்வந்த் சிங் ரஜோனா, பஞ்சாப் முன்னாள் முதல்வர் பீண்ட் சிங்கைக் கொலை செய்ததற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டவர். அதேபோல, ராஜீவ்காந்தி வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்குத் தூக்கு தண்டனை வழங்குவதற்கான அரசியல் கருத்தொருமிப்பையும் அவர் உருவாக்கிவிட்டார். இவற்றில் அவர் வெற்றியை அடைந்தால், ஒரு உள்துறை அமைச்சராக மதம், சாதி, மாநிலம் என்கிற அடையாளங்களுக்கு அப்பால் பயங்கரவாதத்திற்கு எதிராக இயங்கியர் என்ற நம்பகத்தன்மையை நிறுவுவார்.”

அப்சலின் மரணத்தைக் கொண்டாடிய இதழ்களெல்லாம் குறைந்தபட்சம் வரவேற்பதோடு நிறுத்திக்கொண்டன. ஆனால் இதோடு திருப்தியுராத எக்ஸ்பிரஸ், அடுத்தகட்ட மரணச் சுவைக்காக நாவூறக் காத்திருப்பதும் அதை சாதி, மதம் கடந்த ‘நடுநிலைத்தன்மை’ எனப் பூரிப்பதும் அதன் வன்மத்தை வெளிப்படையாகக் காட்டுகிறது.

TIMES OF INDIA

“தீவிரவாதி அப்சல் குருவின் தூக்கு ஒரு அத்தியாயத்தை முடித்தது” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்ட டைம்ஸ் இதழ், பிற நாளிதழ்களைப் போலவே காவல்துறைத் தரப்புச் செய்திகளையே கொட்டியிருந்தது. அப்சலின் புகைப்படத்தின் கீழ் “தீவிரவாதத்தின் முகம்” (Face of terror) என்றும் அவரது வழக்கு விவரத்தின் தொகுப்பிற்கு “தீவிரவாதக் காலக்கோடு” (terror timeline) என்றும் தலைப்பிட்டு தனது பங்கைத் தீர்த்துக்கொண்டது.

11 ஆம் தேதி எழுதப்பட்ட, “தயவுசெய்து அரசியலாக்க வேண்டாம்” (No Politics Please) என்ற தலையங்கத்தில், அப்சல் குருவின் வழக்கு “அரிதினும் அரிதான” வகையைச் சார்ந்தது என்றும் இறுதிவரை முறையான நீதிவிசாரணை நடத்தப்பட்டது என்றும் சொல்லியதோடு, குடியரசுத்தலைவர் நிராகரித்த பின்பு, மரணதண்டனையை நிறைவேற்றுவதைத் தவிர அரசாங்கத்திடம் வேறெந்த வாய்ப்பும் இல்லை என்றும் பவ்யம் காட்டியது.

DECCAN CHRONICLE

“அப்சல் தூக்கிலிடப்பட்டான், உடல் திகார் சிறையில் புதைக்கப்பட்டது” என்ற தலைப்பில் முதன்மைச் செய்தி வெளியிட்ட டெக்கன் இதழ், “Afsal’s Hanging brings closure” என்று தலையங்கம் தீட்டியிருந்தது. அதில், இப்படியான குற்றத்திற்கு இந்த உச்சபட்ச தண்டனை தான் அளிக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. இதைஒட்டி காஷ்மீரிலோ அல்லது நாட்டின் வேறுபகுதிகளிலோ வன்முறைகள் நடைபெறலாம் ஆனால், அதை அரசாங்கம் பொருட்படுத்த வேண்டிதில்லை. இந்தியாவின் சனநாயகக் குறியீடான நாடாளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு இந்த தண்டனையை வழங்குவதைத் தவிர இந்தியாவிடம் வேறு எந்த வாய்ப்பும் இல்லை என்று சொல்லி இந்தத் தூக்கை நியாயப்படுத்தியது.

மொத்தத்தில் இதுவரை பார்த்த செய்திகளில் இருந்து, அப்சல் குரு போன்ற ஒரு காஷ்மீரியின் வாழ்க்கைப் பயணம் எத்தனை துயரம் நிறைந்தது என்பதையும் இந்திய சனநாயகம் அவருக்கு இழைத்த துரோகத்தையும் பின்னுக்குத் தள்ளி அவர் மீது ஒரு முழுமையான தீவிரவாத பிம்பத்தைக் கட்டமைக்க வேண்டும் என்பதே இந்த இதழ்களின் நோக்கமாக இருப்பதை வெளிப்படையாக அறிய முடிகிறது. இதழ்களின் தலையங்கம் என்பது அவைகளின் அரசியலைச் சார்ந்திருப்பது தவிர்க்க முடியாதது. ஆனால், செய்திக் குறிப்புகள் அப்படியானவை அல்ல. அவை நடந்த நிகழ்வுகளின் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை. நடுநிலையோடு வெளிப்படவேண்டியவை. ஆனால், மேலே கண்டவற்றில் தலையங்கத்திற்கும் செய்திக் குறிப்புகளுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லாமல், இரண்டுமே அந்தந்த இதழ்களின் அரசியல் சார்பைப் பொறுத்தே அமைந்துள்ளன. அப்சல் தரப்பு நியாயங்களாக மனித உரிமை அமைப்பினர் சொல்வதை அப்படியே ஊடகங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனச் சொல்லவில்லை. ஆனால் மாற்றுக் கருத்துக்களை முற்றிலுமாக மறைத்துவிட்டு புலனாய்வுத் துறையினரின் கருத்துக்களை மட்டுமே ‘நடந்த உண்மைகளாக’ எழுதுவதைத்தான் ஊடக அறமில்லை என்கிறோம்.

மேலும் தலையங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகளும் இடம்பெற்றுள்ளன. மரணதண்டனையை வரவேற்பதாகவே இருந்தாலும், குறைந்தபட்ச மனித அறம் அல்லது பத்திரிக்கை அறத்தோடு, அப்சலின் குடும்பத்தினருக்குக் கூட ஏன் தகவல் அளிக்கவில்லை? இறுதியாகச் சந்திக்கக் கூட ஏன் வாய்ப்பளிக்கவில்லை? என்பன போன்ற கேள்விகளைக் கூட இந்த இதழ்கள் எழுப்பவில்லை. ஆனால் இப்படியான சூழலில், இந்த ஆபத்தான போக்கிற்கு நடுவே, “தி இந்து” நாளிதழ் மட்டுமே நடுநிலையோடும், ஊடக அறம் மற்றும் பொறுப்புணர்ச்சியோடும் செய்திகளை வெளியிட்டிருந்தது. (இதைத் தனியே சற்று விரிவாகப் பார்ப்போம்)

அந்நாளிதழைத் தவிர்த்து, மற்ற செய்தி இதழ்கள் இந்துத்துவப் பார்வையில், நடுநிலை தவறி வெளியிட்ட காழ்ப்புகளை ‘கவனிக்கிறோம்’ சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஊடக நடுநிலைமை குறித்த அறிதலையும் விழிப்புணர்வையும் மேற்கூறிய தமிழக நாளிதழ்கள் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

மேலும் பார்க்க

இதில் என்ன சர்ச்சை?
No compromise on terror of any colour
No politics please: Afzal Guru’s execution must be seen through a legal prism alone

விடை தெரியாத கேள்விகள் அழகானவை, உரையாடலுக்கு வழிவகுப்பவை

இந்தக் கட்டுரை ‘விஸ்வரூபம்’ பிரச்னை உச்சத்தில் இருந்தபோது ஒரு வாரத்திற்கு முன் தோழர் கவின்மலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதினேன். இப்போது ‘இந்தியா டுடே’யில் வெளிவந்துள்ளது. இக்கட்டுரையின் இறுதியில் நான் சொல்லியுள்ளது போலவும் எதிர்பார்த்தது போலவும் பிரச்னை முடிந்து நாளை படம் திரையிடப்பட இருப்பதாக அறிகிறோம். மகிழ்ச்சி.

கமல்ஹாசன் ஒரு படம் எடுத்தார். தொடர்ச்சியாக இதுபோன்ற படங்களால் துயர்தரும் வாழ்வனுபவங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கும் ஒரு சிறுபான்மைச் சமூகம் இப்படமும் தங்களுக்கு எதிரானதாக இருப்பதைக் கண்டு அச்சம் தெரிவித்தது. அரசு தலையிட்டது. பேச்சுவார்த்தைகள் நடந்தன. எல்லோருக்கும் தெரியும். படம் எப்படியும் வெளிவரும் என. அரசுக்கும் தெரியும். கமல்ஹாசனுக்கும் தெரியும். ஏன் முஸ்லிம்களுக்கும் தெரியும்.
இடையே மிக விரிவான விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதம் நிச்சயமாக சமூகத்தின் இது குறித்த கருத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. இருதரப்பு விட்டுக் கொடுத்தல்களுக்குப் பின் படம் இப்போது திரையிடப்பட்டுள்ளது. இதுதான் ஜனநாயகம். எதுவுமே இல்லாமல் இப்படியான படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு, எவ்விதப் பிரச்னையுமின்றி திரையிடப்படுமானால் அது எப்படிச் சரியாக இருக்கும்? மத்திய சென்சார் போர்ட் அனுமதித்துவிட்டால் அப்புறம் யாரும் வாய்திறக்கக்கூடாது என ஆள்காட்டி விரலை உதட்டில் வைத்து முஸ்லிம்களை நோக்கிக் கறார் பேசுபவர்களை என்னென்பது?

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இன்னொருவரை அடையாளம் காண உதவியது இந்த விவாதத்தின் இன்னொரு பலன். கமல்ஹாசன் ஆதரவாளர்கள் எல்லோரும் சொன்ன ஒரு கருத்து, “இந்த எதிர்ப்பின் மூலம் முஸ்லிம்கள் குறித்த முரட்டுத்தனமானவர்கள் என்கிற பிம்பம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது” என்பது. அப்படியான கருத்தைச் சொல்கிறவர்கள் எல்லாம் இந்தப் பிரச்சினை தொடங்குவதற்கு முதல் நாள் வரை இப்படி இன்று சொல்பவர்கள் எல்லோரும் ஏதோ முஸ்லிம்கள் என்றால் அமைதியானவர்கள் எனக் கருதிக்கொண்டிருந்தது போலவும், இந்த எதிர்ப்பிற்குப் பின்பே முஸ்லிம்கள் பற்றி இப்படி ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டதாகவும் சொல்வது எத்தனை அபத்தம்.

முஸ்லிம்களின் பிரச்னைகள் குறித்த எந்தப் பிரக்ஞையும் அற்று அவர்கள் குறித்த எதிர்மறைக் கருத்தை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் சுமந்திருந்தவர்கள் தங்கள் வெறுப்பைக் காட்டிக்கொள்ள இந்த வாய்ப்பை இன்னும் ஒரு முறை பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே உண்மை.

‘இந்தியா டுடே’யில் வெளியாகியுள்ள கட்டுரை கீழே:

‘விஸ்வரூபம்’ திரைப்படம் தமிழகத்தில் எதிர்கொள்ளபட்ட விதம் இன்று கருத்துரிமை குறித்த விவாதத்தை மீண்டும் மேலெழுப்பியுள்ளது. மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான மோதலாகவும் இது மாறியுள்ளது. தான் தணிக்கை செய்து அனுமதித்துவிட்டால் பின் மாநில அரசு என்ன பிரச்னை வந்தாலும் அந்தப் படத்தைத் திரையிட்டே ஆகவேண்டும் என்கிற அளவில் இருக்கும் சட்டத்தை மத்திய அரசு திருத்தத் துணிந்துள்ளது.

இன்னொருபக்கம் அறிவுஜீவிகள் முழுமையான கருத்துச் சுதந்திரம், அதிலும் கலைப் படைப்புகளுக்குத் தடையற்ற கருத்துச் சுதந்திரம் கோருகின்றனர்.

கலைஞர்களுக்கு மட்டுமல்ல, சாதாரணக் குடிமக்களுக்கும் கூடத் தடையற்ற கருத்துச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதை ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள யார்தான் மறுக்க முடியும்? அதே நேரத்தில் ஒருவருடைய கருத்துச் சுதந்திரம் தனது வாழ்வுரிமையைப் பறிக்கிறது என இன்னொருவர் குரல் எழுப்பும்போதுதான் பிரச்னை எழுகிறது. அரசுகள் இதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு உள்ளே நுழைகின்றன.

இப்படியான நிலை வரும்போது தடையற்ற கருத்துச் சுதந்திரத்தின் எல்லை எதுவென்ற இதுவரைக்கும் விடை கண்டுபிடிக்க இயலாத கேள்வி மீண்டும் மேலெழுகிறது. பல்வேறு கருத்துகளும் நம்பிக்கைகளும் அடையாளங்களும் பண்பாடுகளும் சஞ்சரிக்கும் களமாகச் சமூகம் விளங்குகையில் இதுபோன்ற விடை தெரியாத கேள்விகளும் இருக்கத்தான் செய்யும் என்பதை நாம் முதலில் ஏற்கவேண்டும். இறுதி விடை என ‘இது’ அல்லது ‘அதை’ முன்வைக்காத வரைதான் அங்கு ஜனநாயகம் நிலவ முடியும். ஏதொன்றையும் இறுதித் தீர்வாக முன்வைக்கும்போது அது ஏதோ ஒருவரின் உரிமையை ஒடுக்குவதாகவே அமையும்.

தமிழக அரசு விஸ்வரூபத்திற்கு விதித்துள்ள தடை கலைப் படைப்பின் முழுமையான கருத்துச் சுதந்திரத்தை மறுக்கிறது என்கிற குரலை இன்று வலிமையாய் ஒலிப்பவர்கள் அனைவரும் ஓரம்சத்தில் இறுக்கமான மௌனம் கடைப்பிடிப்பதை கவனிக்கலாம். முஸ்லிம்கள் இதுபோன்ற சூழல்களில் வெளிப்படுத்தும் அச்சத்தில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதுதான் அது. கூர்ந்து கவனித்தால் அது நியாயம் இல்லை, அப்படியான ஒரு பிரச்னையே அவர்களுக்கு இல்லை, அவர்கள் முரட்டுத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் எதிர்ப்புக் காட்டுகின்றனர் என்பதே அவர்களின் கருத்தாக இருப்பதைக் காணலாம்.

முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என பக்கத்தில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமையும் ஐயத்துடன் நோக்கக்கூடிய நிலை தொண்ணூறுகளுக்குப் பின் இங்கு உருவாகியுள்ளதை யார் மறுக்க இயலும்? அப்படியானதற்கு பால்தாக்கரேக்களும் பிரவீன் தொகாடியாக்களும் உமிழ்ந்த வெறுப்புப் பேச்சுகள் மட்டுமா காரணம்? சொல்லப்போனால் அவர்களின் பேச்சுகள் அவர்களது இயக்கத்தைத் தாண்டிப் பெரிய அளவில் பொதுப்புத்தியில் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. பொதுப்புத்தியில் முஸ்லிம்கள் குறித்த எதிர்மறைப் பிம்பம் ஏற்படுத்தப்பட்டிருப்பதில் ஊடகங்களுக்குத்தான் பெரிய பங்குள்ளது. குறிப்பாகத் தொண்ணூறுகளுக்குப் பின் வெளிவந்து கொண்டுள்ள திரைப்படங்களுக்கு மிக முக்கியமான பங்குள்ளது.

அற்புதமான ஆக்கங்கள் உள்ளிட்ட எந்தக் கலைப்படைப்பிற்கும் ஒரு பிரச்சார மதிப்பும் உண்டு என்பதை நாம் மறந்துவிடலாகாது. மனிதருள் பொதிந்துள்ள மேன்மையான பண்புகளைத் தட்டி எழுப்புபவைதான் உன்னதக் கலைப்படைப்புகள். அற்ப உணர்வுகளை உசுப்பிவிட்டுக் காசு பார்க்கும் வணிகத் திரைப்படங்கள் இன்னும் ஆபத்தானவை என்பதை மறந்து விடக்கூடாது. ‘ரோஜா’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்தவர்கள் திரையரங்கு வாசலில் பாகிஸ்தான் தேசியக் கொடியை எரித்துச் செய்த வன்முறையும் இன்று விஸ்வரூபம் திரைப்படத்தில் திருக்குர்ஆனை ஓதித் தொழுதுவிட்டுச் சென்று பயங்கரவாதச் செயல்களைச் செய்பவர்களைக் கமல்ஹாசன் துவம்சம் செய்யும்போது திரையரங்கினுள் எழும் ஆர்ப்பாட்டங்களும் எதைக் காட்டுகின்றன? இப்படியாகக் கட்டமைக்கப்படும் வெறுப்பு யார்மீது கவியப் போகிறது?

முஸ்லிம்களின் அச்சம் நூறு சதம் நியாயமானது என்பதை நாம் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். எத்தனை முறை அவர்கள் பொறுத்துப் பொறுத்துப் போயுள்ளனர். ஒரு பெரும்பான்மைச் சமூகத்தின் பெயரால் எழுப்பப்படும் கருத்தியல் வன்முறையை கருத்தியலாலேயே எதிர்கொள்ளுங்கள் என ஒரு சிறுபான்மைச் சமூகத்திற்கு அறிவுரை சொல்பவர்களுக்கு நெஞ்சில் ஈரமுண்டு என நாம் நம்ப இயலுமா? வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மத வன்முறைத் தடுப்புச்சட்டம் முதலான சிறப்புச் சட்டங்கள் பெரும்பான்மையினரின் சில அடிப்படை உரிமைகளை மறுக்கின்றன என அவற்றை ஒழிக்க வேண்டும் எனச் சொல்ல முடியுமா?

சொல்லுவார்கள். ராமதாஸ்கள் சொல்லத்தானே செய்கிறார்கள்.

இன்று உருவாகியுள்ளது போன்ற ஒரு முரண் எழும்போது அதில் தலையிட வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு உருவாவதை எப்படி மறுக்க இயலும். அந்தத் தலையீடு என்பது தன்னிச்சையான நிரந்தரத் தடை என்பதாகவன்றி இன்னும் ஒரு விரிந்த சிந்தனையாளர்கள், நடுநிலையாளர்கள், வல்லுநர்கள் அடங்கிய குழுவின் ஆலோசனையைக் கேட்டல் என்பதுபோல சில திருத்தங்களை வேண்டுமானால் முன்மொழியலாம். எப்படியானபோதிலும் அரசுத் தலையீடு என்பதில் அதிகாரத்தின் நலனே முன்நிற்கும் என்பது உண்மைதான். ஜனநாயகம் என்பது என்றைக்குமே மக்களுக்கு முழுமையாகக் கையளிக்கப்பட்டுவிடுகிற ஒன்றல்ல. ஜனநாயகம் என்பது ஜனநாயகத்திற்கான போராட்டம்தானே.

ஏதோ சில பேச்சுவார்த்தைகள், விட்டுக்கொடுத்தல்கள் ஆகியவற்றின் விளைவாக சற்றுக் காலதாமதமாகியேனும் விஸ்வரூபம் திரைக்கு வரும் என்றுதான் நம்புகிறேன். ஆனால் இந்த எழுச்சி எதிர்காலத்தில் கமல்ஹாசன்களுக்கும் மணிரத்தினங்களுக்கும் ஒரு பாடமாக அமையும், அமையவேண்டும்.

நன்றி: இந்தியா டுடே.