Home Blog

தமிழ்நாடு, பாப்புலிசம் மற்றும் ’போஸ்ட் ட்ரூத்’! – யூட்யூப் கண்டெண்ட் க்ரியேட்டர்களும் தமிழ்ச் சமூகமும்!

’மார்ஸ் தமிழ்’ என்ற புதிய யூட்யூப் சேனல் மூலமாக ‘ஸ்டிங் ஆபரேஷன்’ ஒன்றை நடத்தி, அதில் தமிழக பாஜகவுக்கும் யூட்யூப் கண்டெண்ட் க்ரியேட்டர்களுக்கும் இடையிலான பேரங்களை அம்பலப்படுத்தியிருக்கின்றனர் மதன் ரவிச்சந்திரன் – வெண்பா கீதாயன் ஆகிய இருவர். இந்த இருவரின் கடந்த கால வரலாறும் அப்படியொன்றும் நேர்மையானது இல்லையென்ற போதிலும், அதனை வைத்து மட்டுமே இந்த மொத்த விவகாரத்தையும் அணுகிவிட முடியாது. அரசல் புரசலாக கேள்விப்பட்ட விவகாரங்களை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருக்கிறது இந்தக் குழு.

தேர்தல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் முதலானோரை மிரட்டுவது, அவர்களின் தொழில்முறை எதிரிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களைப் பற்றி அவதூறு பரப்புவது, தேர்தல் கட்சிகளுக்கான நரேட்டிவ் உருவாக்கி வெகு மக்களிடையே பரப்புவது ஆகிய பணிகளைச் செய்து வந்தவர்களுள் சிலர் தற்போது அம்பலப்பட்டிருக்கின்றனர். இந்தப் பழக்கம் ஏற்கனவே அச்சு ஊடகம், காட்சி ஊடகம் ஆகியவற்றில் தொடர்ந்து இருந்து வந்தாலும், தற்போது மாற்று ஊடகம் என மக்களின் நன்மதிப்பைப் பெற்று இருக்கும் யூட்யூப் சேனல்கள் இதில் சிக்கியுள்ளன. யூட்யூப் மூலமாக செய்தி வெளியிடும் நபர்கள் செய்தியாளர்கள் அல்ல; அவர்கள் கண்டெண்ட் உருவாக்குபவர்கள் மட்டுமே. இந்த விவகாரம் பூதாகரமாகியிருப்பது தமிழ்நாட்டின் இதழியல் சூழல் உண்மைக்குப் பிந்தைய நிலையை அடைந்திருப்பதாக, அதாவது Post-truth என அழைக்கப்படும் காலகட்டத்தை அதிகாரப்பூர்வமாக அடைந்திருப்பதை உறுதி செய்கிறது.

பணம் பெற்றுக் கொண்டு செய்திகள் வெளியிடுவது, போலிச் செய்திகளைப் பரப்புவது, தனது விருப்பத்திற்குரிய அரசியல் தலைவர் குறித்து மக்களிடையே செய்திகளின் மூலமாக பிரசாரம் செய்வது முதலானவை செய்தி ஊடகங்கள் தொடங்கப்பட்ட காலம் முதலே இருந்து வருகின்றன. ஆனால் முன்பு எப்போதும் இல்லாததை விட தற்போதைய இணைய சூழலில் செய்திகளை (அரசியல், சினிமா, ஸ்போர்ட்ஸ், லைஃப்ஸ்டைல் முதலான அனைத்தும்) வெகுமக்கள் அதிகளவில் நுகரத் தொடங்கியுள்ளனர், மேலும், இணையம் உருவாக்கியிருக்கும் வெளி என்பது அனைவரையும் கண்டெண்ட் உருவாக்குபவர்களாக மாற்றியிருக்கிறது. இதில் எத்தனையோ சாதக அம்சங்கள் இருக்கின்றன. வெகுஜன மெயின்ஸ்ட்ரீம் ஊடகங்களால் வெளியிட முடியாத செய்திகள் பலவற்றை இணைய ஊடகங்கள் வெளியிட்டன. ஆனால் காலப்போக்கில் அவற்றிலும் பெரியளவிலான மாற்றங்கள் ஏற்பட்டு, தற்போது நாம் காணும் இந்த இடத்தில் வந்து நிற்கின்றன. இங்கு உண்மைக்குப் பிந்தைய நிலை – ’போஸ்ட் ட்ரூத்’ – என்பதை போலிச் செய்திகளைப் பரப்புவதோடு மட்டும் சுருக்கிவிட முடியாது. பாதி உண்மைகள், மாறுபட்ட தகவல்கள், பொய் எனத் தெரிந்தே பார்வையாளர்களின் விருப்பு, வெறுப்பை மட்டுமே நம்பி அவர்களின் உணர்ச்சியைத் தூண்டும் தகவல்கள் முதலானவை மூலமாக பொது மக்களிடையே ஒத்திசைவை ஏற்படுத்துவதே ‘உண்மைக்குப் பிந்தைய நிலை’ எனக் கணிக்கப்படுகிறது.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான மக்களின் ஆதரவைப் பெற்றது முதலான சர்வதேச விவகாரங்களில் இந்த ‘உண்மைக்குப் பிந்தைய நிலை’ பெரும் பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. உதாரணமாக இந்தியாவிலும் கறுப்பு பணத்தை ஒழிப்பதாகக் கூறிய பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பணமதிப்பு நீக்கத்தை அமல்படுத்தி கறுப்புப் பணத்தை ஒழித்ததாகக் கூறியதையும், அதனை ஊடகங்கள் தொடங்கி, பிரபலங்கள் வரை ‘நரேட்டிவ்’ ஒன்றை உருவாக்கி ’எது உண்மை?’ என்ற கேள்வியே எழாமல் செய்ததையும் பார்க்க முடியும்.

தற்போது மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள ‘ஸ்டிங் ஆபரேஷன்’ வீடியோக்களில் சிக்கியுள்ள நபர்களில் முக்கியமானவர்கள் பாஜகவின் பொறுப்பாளர்களாக இருக்கின்றனர்; கிஷோர் கே சுவாமி, ’ஆதன் தமிழ்’ மாதேஷ், சவுக்கு சங்கர், ரவீந்திரன் துரைசாமி முதலான நபர்கள் தமிழ்நாட்டின் அரசியலில் தற்போதைய நிலை குறித்த ‘நரேட்டிவ்’ உருவாக்குவதில் முதன்மை நபர்களாக இருக்கின்றனர். அய்யப்பன் ராமசாமி, முக்தார் போன்ற நபர்கள் நேரடியாக நேர்காணல்கள் மூலமாக தங்களைப் பிரபலப்படுத்துவதையும், எதிரில் அமர்ந்திருப்போரை ‘மாட்டி விடுவதையும்’ தாண்டி எந்தக் கொள்கையையும், மக்கள் அரசியலைப் பேசும் நபர்களாகவும் இருப்பதில்லை. உமா மகேஷ்வரன் போன்ற நபர்கள் தாம் ஒரு கட்சியின் ஆதரவாளரைப் போல காட்டிக்கொண்டே, இன்சைடர்களாக இருந்தபடி, இந்த அரசியல் கிசுகிசுகளுக்கு கண்டெண்ட் தருவதற்குக் காசு பெறுகிறார்கள்.

அரசியல் களம் என்பது கொள்கை என்பதைக் கடந்து ’பாப்புலிசம்’ எனப்படும் தனிநபர் வழிபாட்டை மையமாகக் கொண்ட ஜனரஞ்சகவாதமாக உருவெடுத்துள்ள காலகட்டத்தில், பாப்புலிசத்தை மக்களிடையே வளர்க்கவும், தனிநபர் வழிபாட்டிற்கான வெகுமக்களின் இசைவைப் பெறுவதற்கும் இத்தகைய ‘உண்மைக்குப் பிந்தைய நிலை’ செய்திகள் பெரிதும் பயன்படுகின்றன. ஒரே கட்சிக்குள் இருக்கும் நபர்கள் தம்மைப் பிறரை விட முன்னிறுத்திக் கொள்ள செய்யும் உள்கட்சி அரசியல், எதிர்க்கட்சி மீதான போலி பிம்பம் உருவாக செய்யும் அரசியல், தனது இமேஜை வளர்க்க அரசியல்வாதிகள் பரப்பும் தகவல்கள் முதலான பல்வேறு வகையிலான ‘செய்திகள்’ இந்த வகைமையின் கீழ் இடம்பெறுகின்றன. ’இதுதான் யதார்த்தம்; இப்படித்தான் அரசியல் செய்ய முடியும்’ என்று இதனை ஆதரிப்பவர்களை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இந்த உரையாடலில் மக்களுக்கான இடம் என்பதே இல்லை. மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகள் இதில் பேசுபொருளாக மாறாமல் ’எதிரிகள்’ உருவாக்கப்படவும், மக்களைக் காக்கும் ‘ரட்சகர்கள்’ தோன்றுவதற்கும் மட்டுமே இங்கு நரேட்டிவ் உருவாக்கப்படுகின்றது. இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. மதன் ரவிச்சந்திரனின் வீடியோக்களில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நிழல் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, நாம் தமிழர் கட்சியின் சீமான் முதலானோர் இத்தகைய ஒத்திசைவு ஏற்பட மேற்கொண்ட பணப்பரிமாற்றங்கள் அம்பலப்பட்டிருக்கின்றன.

ஆளுங்கட்சியான திமுக இதில் இடம்பெறவில்லை என்ற போதும், இன்று ’நரேட்டிவ்’ உருவாக்குபவர்களுள் அம்பலப்பட்டிருப்பவர்கள் பெரும்பாலும் திமுக எதிர்ப்பை ’நடுநிலை’ என்ற பெயரில் பேசியவர்கள். இடதுசாரி ஊடகங்கள் தங்களை ‘மாற்று’ எனவும், காட்சி ஊடகங்களில் பாஜக அழுத்தம் இருப்பதை அம்பலப்படுத்தி அவற்றில் இருந்து வெளியேறி தனியாக யூட்யூப் சேனல்கள் தொடங்கியோரும் தொடர்ச்சியாக ‘பாஜக எதிர்ப்பு – திமுக ஆதரவு’ என்ற நிலையில் மட்டுமே நிற்பதைப் பயன்படுத்தி, மக்களின் இசைவை அறுவடை செய்து கொண்ட நபர்கள் சவுக்கு சங்கர், ரவீந்திரன் துரைசாமி போன்றோர். திமுகவின் மூத்த தலைவர்களின் ஆதரவாளர்கள் மோதிக் கொண்ட விவகாரம், பொன்முடி முதலான மூத்த அமைச்சர்களின் சாதி ஆணவப் பேச்சுகள், வேங்கைவயல் விவகாரத்தைத் திமுக அரசு அணுகிய விதம் முதலான சில செய்திகளை உதாரணங்களாகக் கொண்டு, இந்த ‘மாற்று’ ஊடகங்களின் வெளியான செய்திகளின் எண்ணிக்கையைத் தேடினால் சொற்பமாகவே இடம்பெற்றிருக்கின்றன. இந்த வெற்றிடத்தையே இத்தகைய ‘போலி அரசியல் விமர்சகர்கள்’ பயன்படுத்திக் கொள்கின்றனர். இடதுசாரி மாற்று ஊடகங்கள் பாப்புலிசத்திற்கும், வாரிசு அரசியலுக்கும் ஊதுகுழல்களாக செயல்படத் தொடங்கியதும், பாஜக மட்டுமே தற்போதைய பிரச்னை என்ற நிலைப்பாட்டின் வழியாக மக்களின் அரசியலை மறந்ததும் நம் காலத்தின் துயரம். போஸ்ட் ட்ரூத் யுகமாக நம் முன் நிற்கும் சாபம்.

அரசியல் கிசுகிசு தகவல்களின் வழியாக நரேட்டிவ்களை உருவாக்குபவர்கள் சமகால புதிய இணைய ஊடகங்கள் மட்டுமல்ல. பாரம்பரியமாக தமிழ்நாட்டில் பெரும் ஊடக நிறுவனங்களாக, அச்சு ஊடகத்தில் இருந்து வந்த நிறுவனங்கள் கூட இந்தப் பணியை லாவகமாக செய்கின்றன. சவுக்கு சங்கர், ரவீந்திரன் துரைசாமி போன்றோரின் நேர்காணல்களைப் ‘போலி’ எனத் தெரிந்தே, தங்கள் பிராண்ட் பெயரைப் பாழாகவும் கூடாது என்றும், அதே வேளையில் லாபமும் வேண்டும் என்றும் வெவ்வேறு பெயர்களில் இயங்கும் பாரம்பரிய ஊடகங்களும் இருக்கின்றன. பாரம்பரியத்திற்கு ஒரு சேனல், பொய் மூலமாக லாபத்திற்கு ஒரு சேனல் என்று வைத்துக் கொண்டாலும் வீடியோவின் பின்னணியில் பேக் கிரவுண்ட் கூட மாற்றாமல் இருக்கும் இத்தகைய சேனல்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டியவை. அவை குறித்தும் விரைவில் ‘ஸ்டிங் ஆபரேஷன்’ வெளிவரலாம்.

நேர்காணல்களை எடுக்கும் அய்யப்பன் ராமசாமி, முக்தார் போன்றோரின் தொனியே மக்களின் அரசியலையோ, கருத்துகளைப் பிரதிபலிப்பதாக இல்லை. உதாரணமாக, அர்ஜூன் சம்பத் போன்ற பாசிஸ்ட்களை நாம் கடுமையாக எதிர்க்கிறோம் என்ற சூழலில், அவர்களுக்கு மேடை அமைத்து கொடுக்கிறார் அய்யப்பன் ராமசாமி. ‘எங்கள் மனம் புண்படுகிறது’ என்று எதற்காகவோ சொல்லும் அர்ஜூன் சம்பத்திடம், ‘புண்படுவது நெஞ்சா.. இல்ல…?’ என்கிறார். இன்ஸ்டாகிராம் தளத்தில் தன்னை விட அதிக ஃபாலோவர்களைக் கொண்ட ‘செலிபிரிட்டி’களைக் குறிவைக்கிறார். முக்தார் போன்றோரின் லட்சணங்களை நாம் பேச வேண்டியதே இல்லை. ’டெவில்ஸ் அட்வகேட்’ என்ற பாணியில் பேசுவதாக நினைத்துக் கொண்டு, தன் மேதமையை நிரூபிப்பது, மக்களுக்கான இதழியல் என்பதில் இருந்து விலகி தனிநபர் ஆராதனையை முன்னிறுத்துவது ஆகியவற்றை மேற்கொண்டு வருவதோடு,. இதன் மூலமாக ஓர் அஜெண்டாவை உருவாக்குவதும், அது தற்போது அம்பலப்பட்டிருப்பதும் கண்கூடு.

ஸ்டிங் ஆபரேஷன் குறித்த வெவ்வேறு வகையிலான நிலைப்பாடுகள் ஊடக உலகிலேயே இருக்கிறது. அந்த விவாதம் தற்போதைய விவகாரத்திற்குப் பொருந்தாது என்றே கருதுகிறேன். எனினும், இதனை வெளியிட்டிருக்கும் மதன் – வெண்பா ஆகிய இருவரும் இதே வீடியோவில் சவுக்கு சங்கரை ‘சாதாரண குமாஸ்தாவின் மகன்’ என்றும், தாங்கள் இருவரும் காவல்துறையின் அதிகாரிகளின் குழந்தைகள் என்றும் பெருமிதத்துடன் கூறிக் கொள்வதும் கவனத்திற்குரியது. இது அதிகார வர்க்கத்தினரிடையிலான பிரச்னையின் மூலமாக உருவாகியிருக்கலாம்; சவுக்கு சங்கர் இந்த விவகாரத்தை பாஜகவிற்குள் அண்ணாமலை எதிர்ப்பாளரான வினோஜ் செல்வம் ஏவியிருப்பதாகவும், மாதேஷ் சிக்கிக் கொண்டதாகவும் கூறி, தம்மைத் தாமே விடுவித்துக் கொள்கிறார். எனினும், அவரது யோக்கியதை அனைவருக்கும் தெரிந்ததே.

தமிழ் ஊடகச் சூழல் பொது மக்களிடையே இசைவை ஏற்படுத்த தவறான தகவல்களைப் பரப்புவதும், பாப்புலிச அரசியல் – (மோடி முதல் உதயநிதி வரை யாரும் விதிவிலக்கல்ல) உண்மைக்குப் பிந்தைய நிலை (போஸ்ட் ட்ரூத்) இங்கு உருவாகியிருப்பதையும் இந்த வீடியோக்கள் உறுதிசெய்திருந்தாலும், இவை மூழ்கியிருக்கும் பெரும் பனிப்பாறையின் முனை மட்டுமே.. இன்னும் வெளிவர வேண்டியவை ஏராளம் இருக்கின்றன.

  • ர. முகமது இல்யாஸ்.

‘சுவாசிக்கும் அனைத்து உயிர்களுக்கும்!’ – ஆஸ்கர் தவறவிட்ட இந்தியப் பொக்கிஷம்!

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டும் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. முத்தாய்ப்பாக இந்திய சினிமா சார்பில் இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெறப்பட்டிருப்பது செய்திகளிலும், இணையப் பகிர்வுகளிலும் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. சிறந்த ஆவணக் குறும்படங்களின் பிரிவில் The Elephant Whisperers படமும், சிறந்த பாடல் பிரிவில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலும் ஆஸ்கர் விருதுகளை வென்றிருப்பது இந்தியாவின் பெருமிதம் எனக் கொண்டாடப்படுகின்றன.

ஆஸ்கர் விருதுகள் நீண்ட காலமாகவே கறுப்பினத்தவர்கள், பெண்கள் உள்ளிட்டோரைப் புறக்கணிப்பதாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன. இந்த விமர்சனங்கள் ஒவ்வொரு ஆண்டும் முன்வைக்கப்படுகின்றன. தற்போதைய முற்போக்கு முலாம் பூசப்பட்ட முதலாளித்துவ காலகட்டத்தில், இந்த விமர்சனங்களுக்கு இடமளிக்காமல் இருக்கவும், சமகாலத்தில் தம் இருப்பை நிலைநாட்டவும் சற்றே அனைவரையும் உள்ளடக்கிய அரசியலைப் பேச முன் வந்திருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக, ‘பாராசைட்’ ஆஸ்கர் விருதுகளை வென்றது; இன்று ‘நாட்டு நாட்டு’ வென்றிருக்கிறது.

ஆஸ்கர் 2023 – இந்தியாவைச் சேர்ந்த வெற்றியாளர்கள்

’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ் கருத்தியலை முன்வைக்கும் ஒன்று. அதில் இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்கான பாவனை இருந்தாலும், சாவர்க்கர் போன்ற இந்துத் தேசியவாதிகள் இந்திய சுதந்திரப் போரில் கடைப்பிடித்த ‘தந்திர’ உத்தியின் நியாயத்தைப் பேசுகிறது; வெளிப்படையாகவே பழங்குடிகளை இந்து மதத்தின் பிரிவினராக சித்தரிக்கிறது. ராமாயணத்தை முன்வைத்து பார்ப்பனர்கள் – பழங்குடிகள் இடையிலான ஒற்றுமையைக் கோருகிறது. இந்திய சுதந்திரம் பற்றிய ஒரு திரைப்படத்தில் வெளிப்படையாகவே காந்தி, நேரு ஆகியோரைப் புறக்கணித்ததோடு, இந்து தேசியத்தைத் தீர்வாக முன்வைக்கிறது. இந்த காரணங்களுக்காகவே ‘ஆர்.ஆர்.ஆர்’ ஓர் வலதுசாரி திரைப்படம் எனத் தெளிவாக வாதிடலாம்.

அதே வேளையில் உலகளவில் அதிக திரைப்படங்களை உருவாக்கும் நாடாக இந்தியா இருந்து வந்தாலும், சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெயர் இப்போது தான் ஒலித்திருக்கிறது என்று இந்திய சினிமா ஆர்வலர்கள் கூறுவதிலும் உண்மைத்தன்மை இருக்கிறது. இந்திய வெகுஜன சினிமா தொடர்ந்து பல ஆண்டுகளாக சர்வதேச அரங்குகளில் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஹாலிவுட் உடனான ஒப்பீட்டளவில், இந்திய சினிமாவில் ‘மியூசிக்கல்’ பாணியில் சேர்க்கப்படும் பாடல்களைக் காலாவதியான வடிவங்களாக மேற்கத்திய திரைமேதைகள் பலரும் கருதுகின்றனர். எனினும், இந்தியாவின் சமகால முக்கிய இயக்குநர்களுள் ஒருவரான அனுராக் காஷ்யப் போன்றோர் இந்திய சினிமாவின் பலமே பாடல்கள் தான் என்று பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார். அந்தத் தொடர்ச்சியில் பார்க்கையில், ‘நாட்டு நாட்டு’ பெற்றிருக்கும் அங்கீகாரம் முக்கியமானது. ஆனால் அதற்கு இந்தப் பாடல் தகுதி பெற்றதுதானா என்பது விவாதத்திற்குரியது.

நாட்டு நாட்டு பாடல் – ஆர்.ஆர்.ஆர்.

ஆவணக் குறும்படப் பிரிவில் வெற்றி பெற்றிருக்கும் The Elephant Whisperers அடிப்படையில் அழகியலைச் சார்ந்து உருவாக்கப்பட்டிருக்கும் ஒன்று. மனித – விலங்கு உறவுகள் என்பது சர்வதேச அளவில் பார்வையாளர்களைப் பரிவுடன் ஈர்க்கக்கூடியவை என்பதாலும், அதில் இடம்பெற்றிருந்த கதை மாந்தர்களின் அப்பாவித்தனம், யானைகளையே பார்த்திராத அமெரிக்காவின் ஆஸ்கர் விருதுக் குழுவினரின் ஆச்சர்யங்கள் முதலானவை இந்த விருது பெறுவதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.

காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் – உதாரணமாக மதுரையில் காட்டுநாயக்கன் பழங்குடிகளிடையே இந்து முன்னணி போன்ற அமைப்புகள் மேற்கொள்ளும் பணிகளால் அவர்களின் வாழ்க்கையில் நிகழும் சமூக மாற்றங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை எதிர்கொள்ளும் சூழலியல் மாற்றங்கள், மசினகுடி போன்ற யானை வழித்தடங்கள் மீதான பெரு நிறுவனங்களின் பார்வை, யானை வாழ்விடங்கள் நிறுவன ரீதியாக அழிக்கப்படுவது முதலான எந்த அரசியலுக்குள்ளும் செல்லாமல் பழங்குடி தம்பதியின் வாழ்க்கையை முதலாக மாற்றி பெருமிதம் ஈட்டியிருக்கிறது இந்த ஆவணப்படக்குழு. இந்த விருதுகளால் ஆவணப்படத்தை இயக்கியவர்களுக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் மட்டுமே ஆதாயம் சேரும் என்பதை மறுக்க முடியாது. ஆஸ்கர் விருது பெற்றவுடன் The Elephant Whisperers ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்காவின் நன்றி தெரிவிக்கும் பதிவில், இந்தப் படத்தில் காட்டப்பட்டிருந்த பொம்மன், பெள்ளீ ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. மேலும், அவர்கள் இருவரும் இந்த ஆவணப்படத்தைப் பார்வையிட்டார்களா என்ற ஒரு சர்ச்சையும் உருவாகியிருக்கிறது.

The Elephant Whisperers

ஆஸ்கர் விருதுகளைப் பெரிதாக எண்ணாத திரைமேதைகள் பலரும் பிரான்ஸ் நாட்டின் கான் விழாவைக் கொண்டாடுவார்கள். தற்போதைய சூழலில், கான் விழாவும் தீவிர முதலாளித்துவக் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டாலும், இந்தியாவின் சத்யஜித் ரே, பிமல் ராய், வி. சாந்தாராம், ராஜ் கபூர், மிரிணாள் சென், நந்திதா தாஸ், அனுராக் காஷ்யப், நீரஜ் கய்வான் ஆகியோரின் படைப்புகள் கான் விழாவில் கௌரவிக்கப்பட்டிருக்கின்றன. தற்போதைய ஆஸ்கர் விருதுகளின் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருந்த போதும், விருது பெறாமல் போன ஆவணப்படம் ‘All That Breathes’ கடந்த ஆண்டு கான் விழாவின் விருதுகளைப் பெற்றிருந்தது.

சிறந்த ஆவணப்படப் பிரிவில் பரிந்துரையில் இருந்த ‘All That Breathes’ படம் இந்தியாவின் சமகால அரசியலை மறைமுகமாகப் பேசும் முக்கியமான படைப்பு. டெல்லியின் நகர்ப்புறமயமாக்கலால் ஏற்படும் சூழலியல் மாற்றங்கள், காற்று மாசு முதலான பிரச்னைகள் பருந்துகளின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும், உடல் நலிவுற்று வானில் இருந்து விழும் பருந்துகளுக்கு சிகிச்சை அளிக்கும் மூன்று முஸ்லிம் சகோதரர்களின் வாழ்க்கையையும் ஆவணப்படுத்தியிருக்கிறது இந்தப் படம்.

சூழலியல் பிரச்னைகளைப் பேசும் படமாக, மீண்டும் விருது விழாக்களைக் குறிவைக்கும் மனித – விலங்கு உறவு குறித்த படமாக இது உருவாக்கப்பட்டாலும், படப்பிடிப்பின் நடுவே குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டம், டெல்லியில் முஸ்லிம்கள் மீதான வெறியாட்டம் முதலானவை அதே காலகட்டத்தில் நிகழ்ந்ததால், அவையும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுக் கொண்டன. ‘இந்த ஆவணப்படத்தில் அரசியல் இடம்பெற்றது தவிர்க்க இயலாத ஒன்றாகி போய்விட்டது. இதில் காட்சிப்படுத்தப்படும் சகோதரர்கள் அரசியல் ஈடுபாடு இல்லாத தனிநபர்கள். இதை ஒரு சூழலியல் படமாகவும், இரண்டு சகோதரர்களின் மனப் போராட்டத்தின் கதையாகவும் மட்டுமே அடையாளப்படுத்த விரும்புகிறேன். ஆனால் இந்தியாவின் அரசியல் சூழல் அவர்களின் வாழ்க்கையின் மீது படிந்துவிட்டது’ எனக் கூறுகிறார் இதன் இயக்குநர் ஷௌமிக் சென்.

All That Breathes

பெருநகரங்களில் வாழும் எலிகள், ஆமைகள், ஆந்தைகள், பருந்துகள் என வெவ்வேறு உயிரினங்களைக் காட்சிப்படுத்தியுள்ள இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிமொழி வழக்கமான ஆவணப்படச் சட்டகங்களுக்கு அப்பாற்பட்டது. ஏற்கனவே இந்தியாவில் Supermen of Malegaon, Khatiyabaaz, The World before Her முதலான ஆவணப்படங்கள் இதே பாணியில் உருவாகியிருக்கின்றன. நிபுணர்களின் பேட்டி, பின்னணி குரல்களின் மூலமாக கதை சொல்வது முதலான பழைய பாணியை உடைத்து, புனைவுக் கதைகளில் எழும் சுவாரஸ்யத்தைப் போலவே ஆவணப்படத்திலும் எழுமாறு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது All That Breathes. புனைவுத் திரைப்படங்களே ஆவணப்படங்களைப் போல உபதேசம் செய்பவையாக கற்பனை வறட்சியில் உருவாக்கப்படும் சமகால சூழலில் இந்த ஆவணப்படத்தின் திரைமொழி மிக முக்கியமானது.

பருந்துகளுக்கு உணவளிப்பதையும், சிகிச்சை தருவதையும் தாம் சார்ந்திருக்கும் இஸ்லாமிய மதத்தின் போதனைகளில் இருந்து எடுத்துக் கொள்வதாகக் கூறும் இந்தச் சகோதரர்களுள் ஒருவர், ஷாஹீன்பாக் போராட்டத்தில் கலந்துகொள்ள தன் மனைவி அழைக்கும் போது அவரை மட்டும் அனுப்பி வைப்பதும், தான் செய்யும் பணியைத் தன்னை விட்டால் யாரும் செய்ய மாட்டார்கள் என்றும் கூறுகிறார். ’சுவாசிக்கும் அனைத்து உயிர்களுக்கும்’ என்று பொருள்படும் இந்தப் படத்தின் தலைப்பு, டெல்லியின் காற்று மாசு காரணமாக பாதிக்கப்படும் பருந்துகளைக் குறித்தாலும், சமகால தேச அரசுகள் சிறுபான்மையினரின் குடியுரிமை மீது நிகழ்த்தும் தாக்குதலையும் சூசகமாக குறிக்கிறது. படத்தின் இறுதியில், டெல்லியின் காற்று மாசு நிலையும், சமூக அரசியல் சூழலும் ஏறத்தாழ ஒன்றாக இருப்பதைப் போலவும், தினம் நூற்றுக்கணக்கில் நோய்வாய்ப்பட்டு விழும் பருந்துகளும், சிறுபான்மை முஸ்லிம் சமூகமும் ஏறத்தாழ ஒரே போல இருப்பதாகவும் பதிவு செய்திருக்கிறது ‘All That Breathes’ ஆவணப்படம்.

ஆஸ்கர் விருதுகளில் சிறந்த ஆவணப்படமாக ‘நவல்னி’ வெற்றி பெற்றிருக்கிறது. ரஷ்ய அதிபர் புடினின் அதிதீவிர விமர்சகரும், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருமான அலெக்ஸி நவல்னி மீதான கொலை முயற்சி பற்றிய ஆவணப்படம் இது. ரஷ்யா – உக்ரைன் போர் உச்சகட்டத்தில் இருக்கும் சூழலில் இந்த ஆவணப்படத்திற்கான அங்கீகாரம் என்பது அமெரிக்காவின் மெசெஜாக இருக்கிறது. இந்தக் காரணத்திற்காகவே ‘All That Breathes’ ஆவணப்படம் விருது பெறாமல் போயுள்ளது. ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘The Elephant Whisperers’ ஆகியவற்றின் வெற்றிக் களிப்பில், ‘All That Breathes’ பேசுபொருளாகாமல் போனது வருத்தம். மேலும், இது இந்தியாவில் இன்னும் வெளியாகததால் பலருக்கும் சென்றடையாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ‘All That Breathes’ ஆவணப்படத்தைத் தரவிறக்கம் செய்து மட்டுமே பார்க்க முடியும்.

– ர. முகமது இல்யாஸ்

  • ‘RRR’ திரைப்படம் ஹாட்ஸ்டார், Zee5, நெட்ஃப்ளிக்ஸ் ஆகிய தளங்களில் கிடைக்கிறது.
  • ‘The Elephant Whisperers’ ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கிடைக்கிறது.
  • ‘All That Breathes’ ஆவணப்படம் HBOMax தளத்தில் கிடைக்கிறது.

‘ரத்த சாட்சி’ – இடதுசாரி சாகசவாத நாயகனும், காவல்துறை அதிகாரியின் குற்றவுணர்வும்!

ஜெயமோகன் எழுதிய ‘கைதிகள்’ சிறுகதையின் தழுவலாக உருவாக்கப்பட்டிருக்கிறது ‘ரத்த சாட்சி’. ‘கைதிகள்’ கதை இந்தத் திரைப்படத்தின் இறுதி 20 நிமிடங்கள் மட்டுமே வந்தாலும், அதன் தொடக்கமாக சுமார் 100 நிமிடங்களுக்கும் மேலாக முன்கதை விரிவாக திரைக்கதையாக சேர்க்கப்பட்டுள்ளது. அராஜக பண்ணையார்களுக்கு எதிராக தொழிலாளர்களை கம்யூனிஸ்ட்கள் திரட்டுவது, நக்சலைட்கள் மீதான காவல்துறை அடக்குமுறை, நக்சலைட் ஒழிப்பில் எம்ஜிஆர் காட்டிய தீவிர முனைப்பு முதலான காட்சிகள் ‘ரத்த சாட்சி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நேர்மையான காட்சியமைப்புகள். இதனைக் கழித்து பார்த்தால், இது மற்றொரு Woke Cinema Genreல் இடம்பெறும் திரைப்படமாகவே இருக்கிறது.

தொடர்ந்து பொழுதுபோக்கு அம்சங்களையும், பாடாவதி பூமர் புராணங்களையும் முன்வைத்து வந்த தமிழ் சினிமாவில் சமூகம், அரசியல் சார்ந்து பேசும் திரைப்படங்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்த வளர்ச்சியை நம்மால் காண முடியும். முன்பு கலை திரைப்படங்களில் ஏதேனும் திரைப்பட விழாக்களில் மட்டுமே காண முடிந்த கதைகள் இன்று வெகுஜன மக்களிடையே லாபம் ஈட்டும் சந்தைப் பொருளாக மாறிவிட்டன. இதன் தொடர்ச்சியாக, ரஜினிகாந்த், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கள் அரசியல் கறார்தன்மை கொண்ட திரைப்படங்களை ஏற்று நடிக்க தொடங்கினர்; கலைப்புலி தாணு போன்ற தயாரிப்பாளர்களும் இந்த சந்தை உத்தியைத் தெரிந்தே வியாபாரம் செய்து வருகின்றனர். புதிதாக வளர்ந்திருக்கும் இந்த சந்தையில் பல்வேறு நன்மைகளும் நிகழ்ந்திருக்கின்றன. பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், கோபி நயினார், லெனின் பாரதி முதலான இயக்குநர்கள் புதிதாக உருவாகியதோடு, வெற்றிமாறன், வெங்கட் பிரபு போன்றோர் முன்பை விட வெளிப்படையாக அரசியல் பேசும் வெகுஜன திரைப்படங்களை உருவாக்கியிருக்கின்றனர். அவர்கள் பேசும் அரசியலில் மாற்றுக் கருத்து இருக்கலாம்; அது அவரவர் அரசியல் தேர்வு. ஆனால் இப்படியான ஒரு சந்தை உருவாகியிருப்பது மறுக்க முடியாது.

இந்த சந்தையை நம்பி ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ஒரு திரைப்படம் வெளியாகிறது. சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியின் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் விக்ரமன் போன்ற போட்டியாளர்களைக் களமிறக்கியிருப்பதும், அவருக்கு இணையத்தில் குவியும் பாராட்டுகளும், ஆதரவும் இந்த சந்தை இயங்குவதை உறுதிப்படுத்துகிறது. அப்படியாக இந்த சந்தையைக் குறிவைத்து வெளியிடப்பட்டிருக்கிறது ‘ரத்த சாட்சி’. தோழர் அப்புவின் கதையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம் நக்சலைட்கள் குறித்து எந்தப் புரிதலும் இல்லாமல், நக்சலைட் – காவல்துறை இருபக்கமும் பாதிப்புகள் இருந்தன என்ற ‘நடுநிலை’ வகித்து பேசியிருக்கிறது. ஜெயமோகன் எழுதிய கதையும் இதே பாணியிலானவை.

‘ரத்த சாட்சி’ படத்தின் போஸ்டரே ஒரு சாகச நாயகனைப் பற்றிய கதையாக வெளிவந்தது. இருளில் தீப்பற்றி எரியும் கரும்புத் தோட்டத்தின் நடுவில் யானை மீது முஷ்டியை உயர்த்தி, சிவப்புச் சட்டை அணிந்த நாயகன்; பின்னணியில் சுத்தியல், அரிவாள், நட்சத்திரம் ஆகியவற்றைக் காட்டியது. தொடக்க காட்சியில் ஒரு சாதிய வன்கொடுமை. காவல்துறை அதனை அலட்சியம் செய்கிறது. ‘இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா?’ என்ற ரீதியில் சில காட்சிகள். அடுத்ததாக கதாநாயகன் அப்பு யானையுடன் சென்று மக்களைத் தூண்டிவிடுகிறார்; மக்கள் வன்முறையில் இறங்குகிறார்கள். நக்சலைட் பாணியிலான ‘நீதி’ பெற்றுத் தரப்படுகிறது. எம்ஜிஆர் காலம் முதல் ‘நெஞ்சுக்கு நீதி’ வரை, தற்போது ‘ரத்த சாட்சி’ வரை இதே ஃபார்முலா தான். திரைக்கதையில் தோன்றும் மீட்பர்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களைப் போல காட்சிப்படுத்தப்பட்டாலும், அமைப்புகளால் கட்டுப்படுத்த முடியாவதவர்களாக, வழமையான சினிமாத்தனமான ஆண் மையவாத ‘மாஸ்’ சட்டகங்களுக்குள் உட்பட்டு (சமீப கால உதாரணங்களில் Nerd வகைமை ‘மாஸ்’ சட்டகத்திற்குள் சேர்க்கப்பட்டுவிட்டது; உபயம் – La Casa de Papel, Breaking Bad, Prison Break etc.) உருவாக்கப்படுகின்றனர்.

‘ரத்த சாட்சி’ வெளியான அதே நாளில், ‘விட்னெஸ்’ வெளியாகியிருக்கிறது; சமூகத்தில் நிகழ்த்தப்படும் ஒரு கொலையின் ‘சாட்சி’ என்ற அடிப்படையில் இரு திரைப்படங்கள் பேச முயன்றிருக்கும் தத்துவம் சற்றே ஒற்றுமை கொண்டது. ஆனால், ‘விட்னெஸ்’ ஒரு இடதுசாரி சினிமாவாக, மக்களின் பக்கம் நின்று சமகாலத்தில் நிலவும் பிரச்னைகளைப் பேசுகிறது. ’விட்னெஸ்’ பெத்துராஜு தோழர் கதாபாத்திரம் வழமையான ‘மீட்பர்’ சட்டகங்களுக்குள் நிற்காமல், தான் கைது செய்யப்பட்டாலும் ’அமைப்பு உங்களைக் கைவிடாது’ என்று பேசுகிறது. ’ரத்த சாட்சி’ அப்படியாக இல்லாமல் மக்களைத் தூண்டிவிடும் கதாபாத்திரமாக தோழர் அப்புவைச் சித்தரிக்கிறது. மற்றொரு ரவுடி கம்யூனிஸ்ட் கதாபாத்திரம் இருக்கிறது. இவர்களைப் பின்னால் இருந்து இயக்குபவராக பண்ணையார் கதாபாத்திரம் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் காவல்துறையையும், நக்சலைட்களையும் ஒரே தராசில் சமன்படுத்த சேர்க்கப்பட்டிருக்கும் செருகல்களாகவே தென்பட்டன. மேலும், தோழர் அப்பு தான் சார்ந்திருந்த கட்சி மீது அதிருப்தி கொண்டு, சண்டையிட்டு கிளம்பி சென்றதாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

ஒருபக்கம் இடதுசாரி அரசியல் பேசும் சாகசவாத நாயகனைக் கொண்டிருக்கும் ‘ரத்த சாட்சி’ திரைக்கதை, ‘கைதிகள்’ நாவலுக்குள் வரும் போது குற்றவுணர்வு கொண்ட காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தையும் காட்டுகிறது. காவல்துறையினர் அமைப்பாக மேற்கொள்ளும் வன்முறைகளைக் கண்டு குற்றவுணர்வு கொள்ளும் கதாபாத்திரங்களைச் சமீப ஆண்டுகளில் ‘விசாரணை’, ‘ரைட்டர்’ முதலான திரைப்படங்களில் கண்டோம். இதில் ‘ரைட்டர்’ படத்தின் கதை எடுத்துக் கொண்ட கதைக்களமே இந்த காவல்துறை அதிகாரியின் குற்றவுணர்வு தான். ஆனால் அது முன்னெடுத்த பாதை, காவல்துறையினருக்கு சங்கம் தேவை என்பதை மட்டும் பிரசாரப்படுத்தாமல் ஒரு பிரச்னையை முழுவதுமாக அலசி ஆராய்ந்து, இறுதியில் குற்றவுணர்வைத் தீர்த்துக் கொள்ள முன்னெடுக்கும் முயற்சியையும் தேடுகிறது. ‘ரத்த சாட்சி’ காவல்துறை – நக்சலைட் பிரச்னையை கட்டளையிடும் இடத்திற்கும், கட்டளை பெறும் இடத்திற்குமான பிரச்னையாக, இருதரப்பில் இருக்கும் தனிநபர்களின் சிக்கலாக மாற்றுகிறது. ஜெயமோகன் சிறுகதையில் இல்லாத புதிய முடிவொன்று ‘ரத்த சாட்சி’ திரைப்படத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அப்பு கதாபாத்திரம் மக்களைத் தூண்டும் காட்சிகள், இடதுசாரிகள் அமைப்பாக இல்லாமல் தனிநபர்களாக சித்தரிக்கப்பட்டிருப்பது, பண்ணையாரின் தலைமையில் பணியாற்றுவது தொடங்கி இறுதிக் காட்சி வரை, தோழர் அப்புவின் பெயரைப் பயன்படுத்தி நிகழ்ந்துள்ள அபத்தம் என்றே கருத முடியும்.

ஜெயமோகனின் ‘கைதிகள்’ சிறுகதையும் அப்படியான அபத்தமே என்ற போதும், அதனைத் திரைக்கதையாக மாற்றும் போது, அதனை நேர்மையான ஒன்றாக, மக்கள் அரசியலைப் பேசும் ஒன்றாக மாற்றுவதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருந்தன. மணி ரத்னம், வெற்றிமாறன் முதலானோர் படமாக்க விரும்பிய சிறுகதை இது. மணி ரத்னம் பாணியில், ‘ரத்த சாட்சி’ திரைப்படத்தை மேம்போக்கான அரசியல் பார்வையுடன் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில்.

ஜெயமோகனின் ‘துணைவன்’ கதையும் ஏறத்தாழ இதே கதைக்களம் தான்; வெற்றிமாறனின் ‘விடுதலை’ அதை எப்படி அணுகுகிறது என்பதைப் பொறுத்திருந்து காண வேண்டும்.

‘ரத்த சாட்சி’ Aha தளத்தில் வெளியாகியுள்ளது.

– ர. முகமது இல்யாஸ்.

‘விட்னெஸ்’ – சமூகத்தில் நிகழும் அன்றாட அவலங்களுக்கு யார் ‘சாட்சி’?

தமிழ் சினிமாவில் சென்னையைக் களமாகக் கொண்டு வெளியான திரைப்படங்கள் ஏராளம். அதே வேளையில் சென்னையில் வாழும் மனிதர்களின் அசலான வாழ்க்கை முறையைப் பதிவு செய்த திரைப்படங்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தக் குறையைப் போக்கும் திரைப்படமாக வெளியாகியிருக்கிறது ‘விட்னெஸ்’. முழு திரைப்படமும் சென்னை நகரத்தை ஒரு முன்னணிக் கதாபாத்திரமாக மாற்றியிருக்கிறது. இந்த நகரத்தின் மிக முக்கிய பிரச்னை ஒன்றை பல பரிமாணங்களில் அலசி ஆராய்ந்திருக்கிறது. அறிமுக இயக்குநர் தீபக் ‘விட்னெஸ்’ திரைப்படத்தின் மூலம் சமகால அரசியல் திரைப்பட இயக்குநர்களின் வரிசையில் புதுவரவாக இணைந்திருக்கிறார்.

சென்னையின் அடையாறு பகுதியின் அபார்ட்மெண்டில் ஒன்றில் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்க நிர்பந்திக்கப்பட்டு, கொல்லப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் தாயின் கதை ‘விட்னெஸ்’. இந்த ஒற்றை வரியில் அடையாறு அபார்ட்மெண்ட்களில் வாழ்பவர்கள் யார், இந்தப் பிரச்னை தொடர்பாக அவர்களின் நிலைப்பாடு என்ன, உயிரிழந்த இளைஞனின் வாழ்க்கை எப்படிப்பட்டது, நீதிகேட்கும் தாயின் அன்றாடம் எப்படியிருக்கிறது, நீதி கேட்கும் முறைகள் எப்படியிருக்கின்றன, நீதி கிடைத்ததா என அனைத்தையும் அலசி ஆராய்கிறது இந்தத் திரைப்படம். மகனை இழந்து அதிகாரத்தின் கதவைத் தட்டும் தாயாக தோழர் ரோஹிணி, அதே அபார்ட்மெண்டில் வாழ்பவரும், இறந்த இளைஞனுக்காக சாட்சி சொல்ல முன்வருபவருமாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், கம்யூனிஸ்ட் அமைப்பின் களச் செயற்பாட்டாளராக தோழர் செல்வா முதலானோர் முன்னணி நடிகர்களாக நடித்திருக்கின்றனர்.

ஒரு ஆவணப்படத்தைப் போல, மிகவும் இயல்பான ‘கேண்டிட்’ காட்சிகளாக ‘விட்னெஸ்’ இயக்கப்பட்டிருப்பது படத்தின் நம்பகத்தன்மையை அதிகரித்திருக்கிறது. வழக்கமான ’துன்பியல்’ காட்சிகளைச் சேர்ப்பதற்கும், மீட்பர் கதாபாத்திரங்களின் மூலமாக ’நீதி’ பெற்று தருவதற்கும் திரைக்கதையில் எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும் உண்மைக்கு மிக நெருக்கமாக பயணிக்கிறது ‘விட்னெஸ்’. வழக்கமான பாணி திரைப்படங்களைக் கடந்து, புனைவையும், யதார்த்தத்தையும் இணைக்கும் புள்ளியாக அமைக்கப்பட்டிருக்கும் படத்தின் இறுதிக் காட்சி இந்தப் படைப்பின் நேர்மைக்கு சான்று.

மக்கள் பிரச்னைகளைப் பேசும் பெரும்பாலான திரைப்படங்கள் தேர்தல் அரசியல் கட்சிகளையும், கட்சிகளைச் சேர்ந்த தனிநபர் வில்லன்களையும் முன்னிறுத்துவதோடு சுருங்கி விடுகின்றன. ‘விட்னெஸ்’ அந்த சட்டகங்களுக்குள் அடங்காமல் சாதிய அமைப்பைப் பாதுகாப்பதில் அரசுக்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலான உறவை அம்பலப்படுத்துகிறது. மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிவை நீக்க அரசுக் கட்டமைப்புக்கு இருக்கும் மெத்தனத்தை மிக ஆழமாக சாடுகிறது ‘விட்னெஸ்’. மேலும், துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை, அபார்ட்மெண்ட் அக்ரஹாரங்களில் வாழும் பார்ப்பனர் அல்லாதோர் மீதான பாகுபாடு, நகரங்களில் இருந்து விரட்டப்பட்டு நகரத்திற்கு வெளியே வாழ விதிக்கப்பட்ட மக்களின் நிலை, உழைக்கும் மக்களின் வாழ்வு குறித்து அரசுக் கட்டமைப்பிற்கு இருக்கும் அலட்சியப் போக்கு முதலானவற்றை அம்பலப்படுத்துகிறது இந்தத் திரைப்படம். இவை எதுவுமே பிரச்சாரத்தைப் போல சொல்லப்படாமல், கதையோட்டத்தின் வழியாக சொல்லப்படுவதால் படம் பேச முன்வந்துள்ள கருத்து நேரடியான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

திராவிட இயக்கங்களின் வரலாற்றுத் தேவை இன்றியமையாதது என்ற போதும், சமகால அரசியல் சினிமா இயக்குநர்களின் படைப்புகள் திராவிட அரசியலுக்கு அப்பால், தலித் மக்களின் உரிமைகள், நவதாராளமயத்தால் பாதிக்கப்படும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை முதலானவற்றைப் பேசுபொருளாக மாற்றி வருகின்றனர். எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் இந்தப் போக்கை ’பின் திராவிட சினிமா’ என்றழைக்கிறார். திராவிடக் கட்சிகளின் பெருநகரங்கள் குறித்த கொள்கை, கழிவுநீர், தூய்மைப் பணிகள் தொடர்பான தனியார்மயக் கொள்கைகள் முதலானவை நகரங்களின் தலித் மக்களையும், பிற உழைக்கும் சாதிகளைச் சேர்ந்த மக்களையும் கடுமையாக பாதித்திருக்கின்றன. இதனை நேரடியாக பேசாதிருந்தும், நம் சமூகத்தில் நிலவும் அரசுக் கட்டமைப்பைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது ‘விட்னெஸ்’. ’ஜெய் பீம்’ போன்ற திரைப்படங்கள் நீதித்துறையின் மீதான நம்பிக்கையை விதைத்திருந்த போதும், ‘விட்னெஸ்’ விமர்சனத்தில் நீதித்துறையும் தப்பவில்லை.

படத்தின் போஸ்டர்களில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் இடம்பெற்றிருந்தது, ட்ரைலர் உணர்த்திய கதை முதலானவற்றின் மூலமாக அவர் வழக்கின் சாட்சியாக இருப்பதால் படத்தின் தலைப்பு ‘விட்னெஸ்’ எனச் சூட்டப்பட்டிருப்பதாக தோன்றியது. படம் முடிந்த பிறகு, அதன் தலைப்பு உணர்த்தும் மற்றொரு செய்தி புலப்பட்டது. இந்த சமூகத்தின் அவலங்களைக் கண்டும் காணாமல் கடக்கும் சாட்சிகள் யார்?

நாமே தான்.

‘விட்னெஸ்’ திரைப்படம் டிசம்பர் 9 அன்று SonyLIV தளத்தில் வெளியாகிறது.

– ர. முகமது இல்யாஸ்.

வசூல் ராஜா, The Body Snatcher படங்களும் மனித சடலங்களும்! – 19ம் நூற்றாண்டு மருத்துவத்தின் இருண்ட பக்கம்!

‘வசூல்ராஜா’ படத்தில் ஒரு காட்சி உண்டு. கமல் ஏதேதோ தகிடுதத்தம் செய்து மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்துவிடுகிறார். ஒரு நாள் பயிற்சி வகுப்பில் ஒரு சடலத்தைச் சுற்றி மாணவர்கள் அனைவரும் குழுமியிருப்பர். ஆசிரியர் அவ்வுடலை அறுத்து மாணவர்களுக்கு உடலின் ஒவ்வொரு பகுதியையும் பற்றி விளக்குவார். கூட்டத்தைத் தாண்டிப் பார்க்க முயலும் கமல் “கூட்டமாக இருப்பதால் எதையும் பார்க்க முடியவில்லை” என்று சொல்ல, உடனே ஆசிரியர் “உனக்கு வேணும்னா நீ தனி ஒரு பாடிய கொண்டு வந்துக்கோ” என்று சொல்வார். கெத்தாக அந்த இடத்தை விட்டு நகரும் கமல் உடனே பிரபுவுக்கு ஃபோன் போட்டு தனக்கு ‘ஃபிரஷ்’ஷாக ஒரு சடலம் வேண்டும் என்று கேட்பார்.

‘ஏழை இந்தியா’வைப் படம் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு ஜப்பான் இளைஞரைப் பார்த்தவுடன், “அண்ணே. இம்போர்டட் பாடி” என்று அவரை அடித்துத் தூக்கிக் கொண்டு வருவார் பிரபு. நல்ல வேளை, காமெடிப் படம் என்பதால் பார்த்து ஏதோ சிரிக்க முடிகிறது. சும்மா அடித்து மட்டும் தூக்கிக் கொண்டுவரப்படும் அந்த ஜப்பானியர் மருத்துவமனையில் திடீரென விழித்து அனைவரையும் துரத்திக் கொண்டு ஒரு களேபரத்தை ஏற்படுத்த, படத்தில் அப்பகுதி சுபமாக முடிகிறது.

Vasool Raja MBBS (2004)

நாம் எளிதாகக் கடந்துபோன இக்காட்சியும் அதன் உள்ளடக்கமும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் பல்வேறு கொடூரக் கொலைகளுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக அந்தக் காலகட்டத்தையே கலக்கியது, பர்க் மற்றும் ஹேரின் கொலைகள். இக்கொலைகளுக்குச் செல்லும் முன் ஐரோப்பாவில் நிகழ்ந்த கலை, அறிவியல் ஆகிய துறைகளின் வளர்ச்சி பற்றியும், அவற்றிற்குத் தடையாக அமைந்த நிறுவன மதங்கள், நம்பிக்கைகள் ஆகியவை பற்றியும் அறிவது அவசியம்.

ஐரோப்பியக் கலை பற்றிப் பேசும்போதெல்லாம் மறுமலர்ச்சிக் காலத்து ஓவியங்களும் சிற்பங்களும் நம் மனக்கண் முன் எழும். மைக்கலேஞ்சலோ, ரஃபேல், டாவின்சி போன்றோர் பெரும்புகழ் பெற்று பல துறை வித்தகர்களாகத் திகழ்ந்தவர்கள்; இவர்கள் அக்காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுமைகள் ஆவர். அவர்களது படைப்புகள் விதந்தோதப்படுவதற்கு முக்கியக் காரணம் அதுவரை இருந்த ஓவியங்களிலும் சிற்பங்களிலும் காணப்பெறாத முப்பரிமாணத்தை இவர்களது கலைப் படைப்புகள் வெளிக்கொண்டு வந்தன.

முப்பரிமாண உலகை இரு பரிமாணச் சட்டகமான ஓவியத்தில் கொண்டு வரும் முயற்சியில் அதுவரை காணப்பெறாத ஆழம் என்னும் அம்சத்தை மறுமலர்ச்சிக் காலத்து ஓவியங்களில் காணலாம் (Depth Effect – கோம்பிரிச்சின் நூலும் ஜான் பெர்கரின் ‘Ways of Seeing’ என்னும் ஆவணப்படமும் இது பற்றி மிகத் தெளிவாக விளக்கும்). மேலும் மனித உடல்களை மிகச் சரியான அளவைகளோடு முதன்முதலில் சித்தரித்தவைகளாக இப்படைப்புகள் முன்னிறுத்தப்படுகின்றன. மைக்கலேஞ்சலோவின் சிற்பங்களில் மனித உடல்கள் அதன் அத்தனை அம்சங்களுடனும் நுணுக்கங்களுடனும் திகழ்வது பற்றி கலை விமர்சகர்களும் அவரது இரசிகர்களும் குறிப்பிடுவர்.

Anatomy Lesson by Dr. Willen van der Meer (1617) by Michael Jansz Van Mierevelt

15, 16-ம் நூற்றாண்டுகளில் மருத்துவத் துறை கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கியது. மனித உடல்கள் மீது நிகழ்த்தப்பெற்ற சோதனைகள் இந்த வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தன. உடற்கூறியல் (Anatomy) துறை அதிவேகமாக வளர்ச்சிபெற்றது. புனிதமும் தீமையும் (Sacred and Evil) ஒன்றுடன் ஒன்று இணைந்தது. சாத்தான் அல்லது லூசிபர் வீழ்ச்சியுற்ற ஒரு தேவதை எனும் உருவாக்கத்தை இதன் பின்னணியில் புரிந்து கொள்ளலாம். பிதாவின் செல்லப் பிள்ளை புனிதமற்ற எல்லாவற்றையும் உருவகித்து நிற்கிறான். அதுபோல உயிர் நீங்கிய உடல் ஒரே நேரத்தில் புனிதத்தின் குறியீடாகவும் தீமையின் உருவகமாகவும் பார்க்கப்படுகிறது. அதனால்தான் கல்லறைகளின் புனிதம் மற்றும் புனிதமற்ற தன்மை காப்பாற்றப்பட்டுக்கொண்டே வருகிறது.

இறந்த பிறகு மனித உடல்கள் கிறித்தவ மதகுருமார்களால் ஆசீர்வதிக்கப்படுகின்றன. வேறொரு உலகத்துக்கு அவ்வுடலைத் தாங்கியோர் செல்ல இதன்மூலம் வழியேற்படுத்தப்படுகிறது. உடல் பற்றிய இந்தப் புனிதத்தை மறுமலர்ச்சி காலக் கலைஞர்களும் அறிவியலாளர்களும் மீறுகின்றனர். உடற்கூறியல் என்ற துறை கொஞ்சம் கொஞ்சமாக இக்காலத்தில் வளர்ச்சி பெறுகிறது. மிருகங்களின் உடல்களில் அதுவரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் போதவில்லை என்று மருத்துவ அறிஞர்கள் மனித சடலங்களில் ஆய்வு செய்தனர். மனித சடலங்களின் மீது ஆய்வு செய்ய கிறித்தவம் அனுமதிக்காததால் அவர்கள் கல்லறைக்குச் சென்று அங்கு புதைக்கப்பட்டிருக்கும் உடலைத் தோண்டியெடுத்து அவற்றை ஆய்வு செய்யத் தொடங்குகின்றனர். இதனால் மருத்துவத் துறையில் பல்வேறு வகையான முன்னேற்றங்கள் ஏற்படுகின்றன. மறுமலர்ச்சிக் கால ஓவியங்களும் சிற்பங்களும் மனித உடல்களைத் தெளிவாகச் சித்தரிப்பதற்கு ஏதுவாக அமைந்த பின்னணி இதுவே. மைக்கலேஞ்சலோவும் டாவின்சியும் மருத்துவர்களைப் போலவே கல்லறைகளைச் சிதைத்து உடல்களைத் திருடி அதில் ஆய்வு செய்து தங்களது கலையை அமைத்தனர் என்று கலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்லறையைச் சிதைத்து உடல்களைத் திருடும் இந்தப் போக்கு மக்களுக்கும் மதத்துக்கும் அரசுக்கும் பேரச்சம் விளைப்பதாய் இருந்தது. அக்காலத்தில் மதங்களும் அரசுகளும் சந்தித்த சவால்கள் எண்ணிறந்தவை. சீர்திருத்தக் கிறித்தவத்தின் வருகையால் கத்தோலிக்கம் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம். போர்களால் அரசுகள் கலக்கமுற்றிருந்த காலம். இந்தப் போக்கினால் கலக்கமடைந்த பல ஐரோப்பிய அரசுகள் மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்வதற்காக ஏழை எளியோர், ஆதரவற்றோர், ஏதிலிகள், தற்கொலை செய்தோர், சிறையில் மரித்தோர் என்று கேட்க ஆளில்லாதவர்களது உடல்களை வழங்கின. உடல்கள் மீதும் உயிர்கள் மீதும் அரசு கொண்டுள்ள உரிமையின் அடிப்படையிலேயே அதன் இறையாண்மை கட்டமைக்கப்படுகிறது. அறிவியல் மருத்துவத் துறைகளின் வளர்ச்சிக்கு அரசு அளிக்கும் இந்த ‘தான’த்தில் அதன் இறையாண்மை வெளிப்படுகிறது. ஆனாலும் இந்த ‘தானம்’ வளர்ந்து வந்த மருத்துவத் துறைக்குப் போதவில்லை. அதனால் பல வண்டியோட்டிகளிடம் மருத்துவர்கள் இரகசிய ஒப்பந்தங்களில் ஈடுபட்டனர். புதிதாகப் புதைக்கப்பட்ட பிணத்தை இரவோடு இரவாக தோண்டியெடுத்துக் கொண்டு வர வேண்டும். அதற்குத் தகுந்த சன்மானத்தை மருத்துவர்கள் இவ்வண்டியோட்டிகளுக்கு வழங்குவர். இவர்கள் Body Snatchers என்றும் Resurrection Men என்றும் அழைக்கப்பட்டனர். இதனால் கலக்கமடைந்த மக்கள் கல்லறைகளைச் சுற்றிப் பாதுகாப்பு வளையங்களையும் கல்லறைகளைக் கண்காணிப்பதற்கு காவலர்களையும் நியமித்தனர். அதற்கு வசதியில்லாத மக்களுக்கு வேறு வழியில்லை. அப்படியே விட்டுவிட வேண்டியதுதான். இதில் இனக்குழுவும் வர்க்கமும் ஆற்றிய பங்கு முக்கியமானது. அமெரிக்காவில் கறுப்பினத்தோரின் கல்லறைகளும் பூர்விக அமெரிக்கர்களின் (Native Americans – செவ்விந்தியர் / பழங்குடி இந்தியர் / பூர்விக இந்தியர் என்றும் அழைக்கப்படுகின்றனர்) கல்லறைகளுமே அதிகம் சிதைக்கப்பட்டன. வெள்ளை இனத்தோரின் கல்லறைகள் கொள்ளையடிக்கப்பட்டால் அது பெரும்பாலும் வசதியற்ற ஏழை உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தோரின் கல்லறைகளே சிதைக்கப்பட்டன. காரணம் அக்காலத்தில் வெவ்வேறு இனத்தோருக்கு தனித்தனிக் கல்லறைகள் அமைக்கப்பட்டதுதான். நம்மூரில் சாதிக்கொரு கல்லறை என்பது போல ஐரோப்பிய அமெரிக்க கண்டங்களிலும் வசிப்பிடமும் கல்லறைகளும் காலம் காலமாகப் பிரித்துவைக்கப்பட்டே வந்தன.

Original caption: Picture shows body snatchers stealing a corpse from the grave. Undated engraving. BPA2# 1023. — Image by © Corbis

நிற்க. இது ஒரு புறம். நவீன காலத்துக்கு வருவோம். 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பர்க்கில்தான் நமது கதை நிகழ்கிறது. ஏற்கனவே சொன்னதுபோல உடல்களுக்கான தட்டுப்பாட்டால் கல்லறையைச் சிதைத்து உடல்களைத் திருடுதல் மிக முக்கிய வணிகமாக வளர்ச்சி பெற்றது. இராபர்ட் நாக்ஸ் (Robert Knox 1791-1862) என்னும் மருத்துவர் ஹாரி மற்றும் பர்க் ஆகிய இரண்டு நபர்களிடம் சடலங்களைப் பெற்றுக்கொண்டு வந்தார். ஹேர் ஒரு தங்கும் விடுதி நடத்தி வந்தார். அங்கு இறந்த சிலரை நண்பரான பர்க் உதவியுடன் நாக்ஸின் மருத்துவ நிலையத்துக்குக் கொண்டு சென்று விற்றார். இந்த வணிகத்தின் மூலம் அவர்கள் ஈட்டிய வருவாயினால் உந்தப்பெற்ற பின்னர் எளிய மக்களைக் கொலை செய்யத் தொடங்கினர். கிட்டத்தட்ட பதினாறு பேரைக் கொலை செய்துள்ளனர். இதில் ஒரு கிழவியும் அவளது சிறு பேரனும் அடக்கம். முதலில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் மனிதர்களை தனது வீட்டுக்குள் அழைத்துவந்து அவர்களுக்கு விஸ்கி ஊற்றித் தருவார்கள். அவர்களுக்கு நன்கு போதையேறிய பின்னர் பர்க் தனது கைகளால் அவர்களது மூக்கையும் வாயையும் பொத்திக் கொல்வார். இக்கொலைகள் நடந்த பிறகு உடல்களை நாக்ஸ் மருத்துவ நிலையத்துக்கு எடுத்துச் செல்வர். அங்கு அவ்வுடல்களை உருத்தெரியாமல் பகுதி பகுதியாக வெட்டி ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துவார் நாக்ஸ். இத்தனையிலும் நாக்ஸ் தமக்கு எதிலும் பங்கில்லாதது மாதிரியே இவர்களிடம் இந்தப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டார். ஒரு கொலையின்போது சந்தேகத்தின் அடிப்படையில் இவ்விருவரைக் கைது செய்த காவலர்கள் இவர்கள் கூறிய சம்பவங்களைக் கேட்டு உறைந்தனர். ஹேர் அப்ரூவராக மாறிவிட்டார். பர்க்குக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அக்காலத்தையே கலக்கிய மிகப்பெரும் சம்பவமாகவும் மிகப்பெரும் விசாரணையாகவும் இது இருந்தது. மரண தண்டனைக்குப் பின்னர் பர்க்கின் உடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவரது எலும்புக்கூடு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எடின்பர்க் மருத்துவக் கல்லூரியில் உடற்கூறியல் அருங்காட்சியகத்தில் இன்றும் பொதுப்பார்வைக்கு அவரது எலும்புக்கூடு கண்காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இராபர் நாக்ஸ் எவ்வித தண்டையையும் சந்திக்காமல் தப்பித்து விட்டார். அவரது பதவியும் புகழும் இக்கொடுங் குற்றத்தில் அவரது பங்கு நிரூபிக்கப்படாததாலும் அவர் எந்தவித தண்டனையுமின்றி விடுவிக்கப்பட்டார்.

இதன் அடிப்படையில் Treasure Island நாவல் புகழ் ஆர்.எல்.ஸ்டீவன்சன் (R.L.Stevenson) 1884-இல் ‘The Body Snatchers’ என்று ஒரு சிறுகதையை எழுதினார். அதில் ஒரு காட்சியில் இராபர் நாக்ஸ்-இன் மருத்துவ மாணவர்கள் இருவர் ஒரு மதுக்கூடத்துக்கு வந்து க்ரே என்பவருடன் பேசிக்கொண்டிருப்பர். அதில் ஒரு மாணவருக்கு க்ரே ஏற்கனவே பரிச்சயமானவர். அம்மாணவருக்கு க்ரேவைச் சுத்தமாகப் பிடிக்காது. அப்போது க்ரே ‘’Hear him! Did you ever see the lads play knife? He would like to do that all over my body’ என்று தன்னை வெறுக்கும் மாணவரைக் காட்டி இன்னொரு மாணவரிடம் சொல்வார். அதைப் பார்த்து சிரிக்கும் அந்த மற்றொரு மாணவர் ‘We medicals have a better way than that. When we dislike a dead friend of ours, we dissect him’ என்று சொல்வார். அதைப் பார்த்து அந்த மாணவர் பொருள் பொதிந்த பார்வையை வழங்குவார். ஒரு கட்டத்தில் அந்த சிறுகதை இயற்கைக்கு அப்பாற்பட்ட (supernatural) ஒரு கதையம்சத்தை எடுக்கும்.

The Body Snatcher (1945)

இக்கதையை சற்று உருமாற்றி The Body Snatchers என்ற ஒரு திரைப்படம் 1945ல் எடுக்கப்பட்டது. ஃப்ராங்கன்ஸ்டைனின் அரக்கனாக (Frankenstein’s Monster) நடித்துப் புகழ் பெற்ற போரிஸ் கர்லாஃப் இப்படத்தில் க்ரே கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். 1931ல் வெளிவந்த ஃப்ராங்கன்ஸ்டைன் படத்தைப் போலவே இப்படத்திலும் திகிலூட்டும் வண்ணம் ஒளியும் நிழலும் அமைக்கப்பெற்றிருக்கும். சிறுகதையிலும் சரி படத்திலும் சரி நாக்ஸ் கதையும் பர்க் மற்றும் ஹேர் கொலைகள் பற்றியும் மீண்டும் மீண்டும் குறிப்புகள் இடம்பெற்றிருக்கும். இராபர்ட் நாக்ஸ் Mr. K என்று கதைகளில் குறிக்கப்பெறுவார். ஆங்கிலத்தில் Burke என்றொரு வினைச்சொல் இந்தச் சம்பவங்களினால் உருவானது. மூச்சுத்திணற வைத்துக் கொலை செய்தல் என்பது அச்சொல்லின் பொருளாகும். ஒருவர் செய்த கொடுஞ்செயல் ஒரு வினையையே சுட்டி நிற்கும் நிலையை அடைந்திருக்கும் அளவு ஆங்கிலச் சமூகத்தில் இத்தாக்கம் நிலவியது. இச்சம்பவத்துக்குப் பின்னர் ஆங்கிலச் சட்டங்களில் பல்வேறு திருத்தங்கள் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவற்றுள் முதன்மையானது மருத்துவர்களுக்குத் தேவையான சடலங்கள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகும். பின்னர் கொடுஞ்செயல் செய்பவர்களுக்குத் தண்டனையாக அக்காலத்தில் வழங்கப்பெற்ற Dissection and Display – அதாவது இறந்த குற்றவாளி உடலில் அறுவை சிகிச்சை செய்து பின்னர் அவரது எலும்புக்கூடுகளைப் பொதுப்பார்வைக்கு விடுவது தவிர்க்கப்பட்டது.

ஃபூக்கோ தனது Discipline and Punish-இல் கூறுவது போல் தண்டனைகள் மென்மையாக்கப்பட்டு ஒழுக்கவிதிகள் கூர்மையாக்கப்பட்டன. ஒழுக்கமே தண்டனையாகத் திரிந்தன. ’வசூல்ராஜா’ திரைப்படத்தில் நடந்த அந்த காமெடிக் காட்சி நமக்குப் பெரியளவிலான தாக்கத்தை உண்டாக்காததற்கு முக்கியக் காரணம், அவ்விடத்தில் சடலமாக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ‘மற்றமை’ என்னும் அடையாளத்தை ஏற்றிருப்பதாலேயே ஆகும். ஒருவேளை ‘ஏழை இந்தியா’வைப் படம் பிடிக்க வந்தவருக்குப் பதில் ‘ஏழை இந்தியா’வைச் சார்ந்தவர் யாரேனும் சடலமாக்குவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் நமது எதிர்வினை என்னவாக இருந்திருக்கும்?

இறந்த உடல் எப்போதும் மற்றமையாக்கப்பட்டே வந்துள்ளது. அதே சமயம், அந்த உடல் உயிருடன் இருக்கும்போதே மற்றமையாக்கப்படும் பட்சத்தில் அதனை மாய்ப்பதும் எளிமையாகிவிடுகிறது.

-மா.க.பாரதி
ஆய்வு மாணவர்,
அசோக பல்கலைக்கழகம்.

`தல்லுமாலா’ – இது வெறும் சண்டைப் படம் அல்ல!

’குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன்’ என்ற நபிமொழியை பூமி வெப்பமடைதலின் பின்னணியில் ஜும்ஆ பயானில் இமாம் பேசிக் கொண்டிருக்கிறார். பள்ளிவாசலின் ஹவுஸ் பகுதியில் ஒளு செய்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு மற்றொருவனுக்கும் கடுமையான சண்டை நிகழ்கிறது. பேசிக் கொண்டிருக்கும் இமாம் பள்ளிக்கு வெளியில் வந்து, இருவரையும் சமாதானம் செய்து ஒரே வாகனத்தில் அனுப்பி வைக்கிறார். இருவரும் நெருங்கிய நண்பர்களாகிறார்கள். இப்படியான ஒரு காட்சியோடு தொடங்குகிறது ’தல்லுமாலா’. (காட்சி இணைக்கப்பட்டுள்ளது)

’தல்லுமாலா’ என்பது ’சண்டைகளின் பாட்டு மாலை’ என்பதைக் குறிக்கிறது. பெரிதாக கதை என்று எதுவுமின்றி, வெறும் சண்டைகளால் மட்டுமே நிரம்பியிருந்தாலும், இந்தத் திரைப்படம் அது உருவாக்கப்பட்டிருக்கும் விதத்திற்காகவும், அதன் உள்ளடக்கத்திற்காகவும் பெரிதும் போற்றப்படுகிறது. மலையாள சினிமாவில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டும், இகழ்வானதாகவும் கருதப்பட்ட மேற்கு மலபார் பகுதிகளின் வட்டார மொழி, இசை முதலானவற்றை ஸ்டைலாக மாற்றி, சமகால இளைஞர்களின் விருப்பத் திரைப்படமாக, ’கல்ட்’ அந்தஸ்து பெற்றிருக்கிறது ’தல்லுமாலா’.

’தல்லுமாலா’ திரைக்கதையையும், சில பாடல்களையும் எழுதியுள்ள முஹ்சின் பெராரி ஏற்கனவே ’சூடானி ஃப்ரம் நைஜீரியா’, ’ஹலால் லவ் ஸ்டோரி’ முதலான திரைக்கதைகளை எழுதியவர். இதன் தொடர்ச்சியில் அணுகும் போது, ’தல்லுமாலா’ முஸ்லிம்களின் வாழ்க்கையைப் பற்றி பேசுவதாக அமைகிறது. இந்த மூன்று திரைப்படங்களுமே அடிப்படையில் வழக்கமாக சினிமாவில் தென்படும் முஸ்லிம்களின் சித்தரிப்புக்கு நேரெதிராகவும், முஸ்லிம் சமூகத்திற்கு உள்ளிருந்து எழும் குரல்களாகவும் வெளிப்பட்டுள்ளன. சமூக விரோதிகளாகவும், தீவிரவாதிகளாகவும், கடுங்கோட்பாட்டுவாதிகளாகவும் சித்தரிக்கப்பட்டு வந்த முஸ்லிம்களை மனிதாயப்படுத்தும் பணியை இந்தத் திரைப்படங்கள் சிறப்பாக செய்திருக்கின்றன.

’தல்லுமாலா’ படத்தின் முன்னணிக் கதாபாத்திரங்கள் முஸ்லிம்கள் என்ற போதும், ’மாமனிதன்’, ’நீர்ப்பறவை’ முதலான படத்தில் வரும் அப்பழுக்கற்ற பாத்திரங்கள் போலவோ, ’விஸ்வரூபம்’ தொடங்கி ’பீஸ்ட்’ வரையிலான தீவிரவாதிகளாகவோ இல்லாமல், சமகால இளைஞர்களைப் பிரதிபலிக்கின்றனர். சிகரெட் புகைப்பதும், மது அருந்துவது போன்ற இஸ்லாத்திற்கு விரோதமான செயல்களைச் செய்யும் இந்தக் கதாபாத்திரங்களை அதே திரைக்கதையில் இஸ்லாமிய அடிப்படையில் அறிவுறுத்தும் காட்சிகளும் இதில் உண்டு. மாட்டுக்கறியைப் போற்றுவது, இறைச்சிக்காக விற்கப்படும் எருமை மாட்டுக்குத் தேன் மிட்டாய் வழங்கி வருத்தம் கொள்வது என வழக்கமான இஸ்லாமியர் சித்தரிப்புகளை உடைத்து நொறுக்கியிருக்கிறது ’தல்லுமாலா’. தாயைத் தாக்கிய மகனை அடிக்கும் கதாநாயகனை ’இஸ்லாமிய அடிப்படைவாதி’ என்று விமர்சகர்கள் அழைத்தால் அதனை நிச்சயமாக வரவேற்கலாம்.

தல்லுமாலா

இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் பெரும்பாலும் வடக்கு கேரளாவின் இஸ்லாமிய மரபுவழி இசையை இணைத்து உருவாக்கப்பட்டிருக்கின்றன. பாடல் வரிகளிலும் இறைவனை வேண்டுவது, இறையை நினைவூட்டுவது, இஸ்லாமிய மரபுகளின் வழியாக நிகழ்வுகளை அணுகுவது முதலானவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. கேரளாவின் கலாச்சாரத்தில் வளைகுடா நாடுகளால் ஏற்பட்டுள்ள கலாச்சார மாற்றத்திற்கான சின்னங்களும் இந்தத் திரைப்படம் முழுவதும் நிறைந்துள்ளன.

சமீபத்தில் இந்தியில் இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே இயக்கிய ’ஜுண்ட்’, தமிழில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய ’நட்சத்திரம் நகர்கிறது’ முதலான திரைப்படங்களின் வரிசையில், இயக்குநர் காலித் ரஹ்மானின் ’தல்லுமாலா’ படத்தை வைக்க முடியும். நவதாராளவாதப் பொருளாதாரத்தின் காலகட்டத்தில் ஏறத்தாழ அனைத்து சமூகங்களைச் சேர்ந்த தற்போதைய இளைஞர்கள் தங்கள் உடைகள், பேச்சு, வாழ்க்கை முறை முதலானவற்றில் மேற்கின் அடிப்படையில் வாழ்கின்றனர். வழக்கமாக சினிமாவில் தலித்துகள், முஸ்லிம்கள் சித்தரிக்கப்படும் முறையில் இருந்து முழுமையாக மாறி, முதலாளித்துவம் ஏற்படுத்தியுள்ள கலாச்சார மாற்றங்களின் பிரதிநிதிகளாக, ’நவீனம்’ என்பதை முழுமையாக வாழ்க்கையில் கொண்டிருப்பவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். ’தல்லுமாலா’ முழுவதும் வண்ணங்களாலும், கொண்டாட்டங்களாலும் நிரம்பியிருக்கிறது. மலபாரின் பொன்னானியில் சமகால முஸ்லிம் இளைஞர்களின் வாழ்க்கை முறை இத்தனை கொண்டாட்டங்களோடு நிறைந்திருக்கும் என்பதை எந்தத் திரைப்படமும் பேசவில்லை.

Jhund (2022), Natchathiram Nagargirathu (2022) & Thallumaala (2022)

’தல்லுமாலா’ கதையின் இளைஞர்கள் நுகர்வுக் கலாச்சாரத்தை எதிர்கொள்பவர்கள்; வளைகுடா நாடுகளின் பாதிப்பும் அவர்களின் கலாச்சாரத்தில் இடம்பெறுகிறது. இதனோடு, தமிழ் சினிமா அவர்களின் வாழ்க்கையில் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. இத்தனை கலாச்சார மாற்றங்களுக்கு உட்பட்டாலும், தங்கள் கலாச்சாரத்தின் வேர்களை விட்டு நீங்காத பண்பையும் ’தல்லுமாலா’ காட்சிகளின் மூலமாகவும், இசையின் மூலமாகவும் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது.

திரைப்படத்தின் அரசியல் ஒருபக்கம் இருக்க, இப்படியொரு கதை எழுத்தாக மாறுவதும், அந்த எழுத்தைக் காட்சியாக மாற்றுவதும் மிக மிக சவாலானது. இருந்தும், மிக சுவாரஸ்யமான கதையாகவும், தொழில்நுட்ப ரீதியில் பெரும் பாய்ச்சலாகவும் உருவாகியிருக்கிறது ’தல்லுமாலா’. பள்ளிவாசலில் ஒளு செய்யும் போது வரும் சண்டைக் காட்சி, தியேட்டரில் நிகழும் பெரும் யுத்தம் போன்ற சண்டைக் காட்சி, நகரும் எஸ்.யூ.வி காருக்குள் நிகழும் சண்டைக் காட்சி, திருமணத்தில் மாப்பிள்ளையே இறங்கி அடிக்கும் சண்டைக் காட்சி என படம் முழுவதும் ’தல்லு’ மட்டுமே நிரம்பியிருந்தாலும், அனைத்து காட்சிகளுமே மலைக்க வைக்கின்றன.

1999ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் பிரபல இயக்குநர் டேவிட் ஃபின்சர் இயக்கத்தில் வெளியான ’ஃபைட் க்ளப்’ படத்தின் மையப்புள்ளியை ’தல்லுமாலா’ படத்திற்கும் பொருத்தலாம். சமகால ஆண்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள கலாச்சார மாற்றங்களின் விளைவாக உருவாகும் வெற்றிடத்தை நிரப்ப சண்டையிடுதல் என்பது பயன்படும். வீழும் ஆண்மையின் சின்னமாகவும் அது கருதப்படும். ’தல்லுமாலா’ அதே பாணியில், வடக்கு மலபாரின் இளைஞர்களின் கதையைப் பேசுகிறது; இறுதிக் காட்சியில், கதாநாயகன் கதாநாயகியிடம் தான் மேற்கொள்ளும் சண்டைகளுக்காக கெஞ்சுவதோடு, தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டுவதாக படம் முடிவடைகிறது. மேலும், தான் மேற்கொண்ட சண்டையால் புகழ்பெறும் கதாநாயகன் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில், எழுத்தாளர் ஒருவர் அவனை அவமானப்படுத்தும் போது, தற்கால இளைஞர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் உரை ஒன்றைப் பேசுவார். அதுவும் இந்த வெற்றிடத்தை வெளிப்படையாக காட்டும் இடங்களுள் ஒன்று.

Fight Club (1999)

’தல்லுமாலா’ முழுவதுமாக சண்டையும், வன்முறையும் இருந்தாலும் அவை அழகியலோடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வன்முறை பகையாக மாறாமல், தங்களுக்குள் அடித்துக் கொள்ளும் நபர்கள் அடுத்தடுத்த காட்சிகளிலேயே நண்பர்களாக மாறிவிடுகின்றனர். பெரும்பாலான சண்டைகள் சுயமரியாதைக்காகவே நிகழ்வதாக காட்சியமைக்கப்பட்டுள்ளன; ஆனால் இந்த சுயமரியாதை வெறும் வறட்டு கௌரவம் மட்டுமே என்பதைப் படத்தின் பெண் கதாபாத்திரங்கள் ஆங்காங்கே நினைவூட்டுகிறார்கள். தொழில்நுட்ப ரீதியாகவும், அது பேசும் பொருளுக்காகவும், ’தல்லுமாலா’ புதியதொரு பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. இந்தப் பாய்ச்சலின் பின்னணியில் இயக்குநர் காலித் ரஹ்மான் இருந்தாலும், அதன் மீதான பெரிய பங்கு, படத்தின் எழுத்தாளர் முஹ்சின் பெராரிக்கு இருக்கிறது. ’தல்லுமாலா’ உருவாக்கப்பட்டிருக்கும் விதம் படம் பார்க்கும் அனுபவத்தைப் பல மடங்கு பெருக்குகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தனக்குக் கிடைத்த தேசிய விருதைப் பெற மறுத்த முஹ்சின் பெராரி, தமிழில் இயக்குநர் பா.ரஞ்சித் கலைத்துறையில் செய்து கொண்டிருக்கும் கலகத்திற்கு நிகராக மலையாள சினிமாவில் கலகம் செய்து வருகிறார். ’தல்லுமாலா’ தந்திருக்கும் வெற்றியை அவரது அடுத்தடுத்த படைப்புகளும் அவருக்குத் தரட்டும்!

– ர. முகமது இல்யாஸ்

சீதா ராமம்: காதல் காவியம் அல்ல, காவி விஷம்!

sita ramam review tamil
sita ramam review tamil

அமீர் கான் நடிப்பில் வெளிவந்துள்ள லால் சிங் சத்தா திரைப்படத்தைப் பார்ப்பதற்காக ஒரு பத்திரிகையாள நண்பருடன் திரையரங்கு சென்றேன். டிக்கெட்டை வாங்கப்போகும்போதுதான் தெரிந்தது அந்தப் படம் இந்தியில் திரையிடப்படுகிறது என்பது. நாங்கள் சென்றது மாலைக் காட்சி. காலையில்தான் அது தமிழில் ஓடுவதாகச் சொன்னார்கள். புரியாத மொழியில் எப்படி படத்தைப் பார்ப்பது?! தமிழில் வேறென்ன படம் இருக்கிறது என்றோம். சீதா ராமம் படத்தைப் பரிந்துரைத்தார்கள். சரி என்று அதற்கான டிக்கெட்டைப் பெற்றோம்.

திரைப்படம் தொடங்கிய முதல் நொடியிலிருந்து பயங்கரவாதம், பாகிஸ்தான், கஷ்மீர், அல்லாஹு அக்பர், அஸ்ஸலாமு அலைக்கும் என்றே கதை நகர்ந்தது. கஷ்மீர் ஃபைல்ஸ் படம் கண்முன் வந்துபோனது. காட்சிகள்தோறும் இஸ்லாமிய வெறுப்பு விஷம் தோய்ந்திருந்தது. படம் என்ன இப்படியிருக்கிறது என்ற தொனியில் நானும் நண்பரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்.

இந்தியாவையும் இந்துக்களையும் வெறுக்கும் கதாபாத்திரமான அஃப்ரீன் (ராஷ்மிகா) முன்னாள் ராணுவ வீரரான தன் தாத்தாவைக் காண லண்டனில் இருந்து பாகிஸ்தான் வருகிறார். அப்போது அவர் இறந்துபோய்விட்டதாகவும், அஃப்ரீனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து சீதா மஹாலஷ்மியிடம் இதைச் சேர்த்துவிடும்படி தாத்தா சொல்லிச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. சீதாவைத் தேடி இந்தியாவுக்கு வரும் அவருக்கு சீதா ராமைக் காதலித்தது தெரிய வரவே அவரைத் தேடிச் செல்கிறார். அதைத் தொடர்ந்து, ராம் யார், சீதா யார், இந்தக் கடிதத்துக்கும் தனக்கும் என்ன தொடர்பு போன்ற மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்வதே இந்தப் படத்தின் கதையாக விரிகிறது.

கதாநாயகனான ராம் (துல்கர் சல்மான்) ஒரு ராணுவ வீரன். தொடக்க காட்சிகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகளும், அந்நாட்டு ராணுவமும் இணைந்து கஷ்மீரில் இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களைத் தூண்டிவிட சதி செய்கிறார்கள். கஷ்மீரைத் தன்வயப்படுத்துவது அவர்களின் நோக்கம். சில சிறுவர்களைத் தயார்செய்து கஷ்மீருக்கு அனுப்பி, மக்களோடு மக்களாகக் கலந்திருக்கும்படி சொல்கிறார்கள். பிறகு அதுகுறித்த தகவலை இந்திய ராணுவத்துக்குக் கசியவிட்டு அந்தச் சிறுவர்களைக் கொல்ல வைக்கிறார்கள்.

அப்பாவிச் சிறுவர்களை இந்திய ராணுவம் கொன்றுவிட்டதாக செய்திப் பத்திரிகைகளில் பரவியதைத் தொடர்ந்து, கஷ்மீர் இந்துக்களை முஸ்லிம்கள் தேடித்தேடி வேட்டையாடுகிறார்கள். இந்த பாகிஸ்தான் சதியைப் புரிந்துகொண்ட கதாநாயகன் ஒருவழியாக அதை முறியடிக்கிறார்.

அதுகுறித்துப் பேட்டி காண வந்த பத்திரிகையாளரிடம் (ரோஹினி) தன்னை அநாதை என்று ராம் கூறுகிறார். மறுநாள் அந்தப் பத்திரிகையாளர் வானொலியில் ராமைப் பற்றி சொல்லி, அவர் அநாதையல்ல அவருக்கு அம்மா நான் இருக்கிறேன் என்கிறார். இதேபோல அவருக்குக் கடிதம் வழியாகத் தன் அன்பை வெளிப்படுத்தும்படியும் கோருகிறார். பிறகு நாடெங்கிலும் இருந்து ராமுக்குக் கடிதங்கள் மூட்டை மூட்டையாக வந்து குவிகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு உறவுமுறையைச் சொல்லி எழுதுகிறார்கள். ராம் உற்சாகமாக எல்லோரது கடிதங்களையும் படித்து, அனைத்துக்கும் பதில் எழுதுகிறார்.

“இதுவெல்லாம் உங்களுக்கே ஓவராக இல்லையா?!” என்று கேட்கத் தோன்றியது.

தன்னை மனைவி என்று அறிமுகப்படுத்தி சீதா மஹாலஷ்மி ராமுக்குத் தொடர்ச்சியாக மொட்டைக் கடுதாசிகள் எழுதுகிறார். அவர் மீது நாயகனுக்குள் தீவிரமான காதல் மலர்கிறது. இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். காதல் இன்னும் முற்றுகிறது. ஒருகட்டத்தில் சீதா ஒரு இளவரசி என்பதும், அவரின் உண்மையான பெயர் நூர் ஜஹான் என்பதும் பார்வையாளர்களான நமக்குத் தெரிய வரும். இருவரும் சேர்ந்தார்களா இல்லையா என்பதெல்லாம் படத்தின் மீதிக் கதையில்.

சீதா ராமம் போலவே பல திரைப்படங்களில் இந்துக் கதாநாயகன், முஸ்லிம் கதாநாயகி இருப்பதை நாம் பார்த்திருப்போம். இதை அப்படியே தலைகீழாக, முஸ்லிம் நாயகன், இந்து நாயகி என வைத்து ஏன் படம் எடுப்பதில்லை? அதிலுள்ள அரசியல்தான் என்ன?

ஒருவேளை அப்படி யாராவது எடுத்தால் லவ் ஜிஹாது படம் என்று சொல்லி அரசாங்கம் அதைத் தடை விதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

சீதா ராமம் திரைப்படத்தில் பல காட்சிகளில் முஸ்லிம் வெறுப்பு அப்பட்டமாக இடம்பெறுகிறது. அதை நைச்சியமாக முன்வைப்பதற்கெல்லாம் படக்குழுவினர் மெனக்கெடவே இல்லை. மிக வெளிப்படையாகவே முஸ்லிம் எதிரியைக் கட்டமைத்திருக்கிறார்கள். அதுபோல, தெலுங்குப் படத்துக்கே உரிய க்ரிஞ்சு அம்சங்கள் திரைப்படம் நெடுக இடம்பெறுகின்றன. ஆனால் யூடியூபில் பட விமர்சனம் தரும் பிரஷாந்த், ப்ளூ சட்டை போன்ற பலர் இதை ஆஹா, ஓஹோ எனப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். காதல் காவியம், திரை ஓவியம் என்ற ரேஞ்சுக்கு இதைப் பாராட்டியிருக்கிறார்கள்.

ஆரம்பக் காட்சி ஒன்றில் பாகிஸ்தானியரான அஃப்ரீன் இந்தியக் கொடி இருக்கும் நான்கு சக்கர வாகனத்தை எரிக்கிறார். அவர் இந்தியா மீதும், இந்துக்கள் மீதும் கொண்டுள்ள கண்மூடித்தனமான துவேஷம் அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளில் தொடர்ச்சியாகப் பதிவுசெய்யப்படுகின்றன. அந்த அஃப்ரீன் குழந்தையாக இருந்தபோது அவர் உயிரைக் காப்பாற்றிய மீட்பர் ராம் என்பது கடைசியில் தெரியவருகிறது.

எரியும் வீட்டில் சிக்கிக்கொண்ட அஃப்ரீனை நாயகன் தன் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றும் அந்த சாகசக் காட்சி கடும் அயற்சியைத் தருவதாக இருந்தது. இந்தப் படத்தின் முக்கியமான காட்சிகள் இப்படி எம்ஜிஆர் காலத்துத் திரைப்படங்கள் போலத்தான் இருக்கின்றன.

மற்றொரு காட்சியில், தீவிரவாதிகள் என்று நினைத்து சில கஷ்மீரிகளை இந்திய ராணுவம் கொல்ல முனையும்போது கதாநாயகன் ராம் அவர்களைக் காப்பாற்றுகிறார். அதற்காக அவர்கள் ராமுக்கு உணவெல்லாம் அளித்து அன்பைப் பரிமாறுகிறார்கள். ஆனால் ராம் காப்பாற்றிய அதே கஷ்மீரிகள்தாம் இந்துக்களுக்கு எதிரான கலவரத்திலும் முன்னணியில் இருக்கிறார்கள். முஸ்லிம் அச்சத்தை அனைவரிடமும் விதைக்கும் வகையில் இந்தக் காட்சி இருந்தது.

ஓரிடத்தில் இந்தியத் தூதரக அதிகாரி இன்ஷா அல்லாஹ் சொல்ல, பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஜெய் ஸ்ரீராம் என்கிறார். இருவரும் ஆரத்தழுவிக் கொள்கிறார்கள். ஆஹா என்னவொரு மத நல்லிணக்கம் என்று இதைச் சொல்ல வேண்டும் என்று இயக்குநர் எதிர்பார்த்திருப்பார் போலும். இப்படித்தான் இரண்டே முக்கால் மணி நேரம் வளவளவென்று ஓடியது படம்.

1960கள், 1980கள் என மாறிமாறி திரைக்கதை நகர்கிறது. அதற்குத் தேவையான கலை வேலைப்பாடுகள், கேமரா போன்றவற்றில் படக்குழுவினர் அசத்தியிருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தங்கக் கோப்பையில் விஷத்தைக் கொடுத்தால் குடிக்க முடியுமா என்ன! இந்து தேசியவாதத்துக்கும் ராமர் அரசியலுக்கும் வலுச்சேர்க்கும் திரைப்படம் சீதா ராமம்.

Forrest Gump Vs Laal Singh Chaddha… ஆதிக்கத்தின் அப்பாவித்தனமும், ஒடுக்கப்படுபவனின் அப்பாவித்தனமும் வேறானவை!

பிரபல ஹாலிவுட் கிளாசிக் திரைப்படமான ‘ஃபாரெஸ்ட் கம்ப்’ தன்னளவில் பல்வேறு அரசியல் கண்ணோட்டங்களைக் கொண்டது. பழமைவாத அமெரிக்கச் சிந்தனைகளை ஊக்குவிப்பதாக அதன்மீதான விமர்சனங்கள் ஒருபக்கம் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக போர் எதிர்ப்புத் திரைப்படமாக வரலாற்றில் இடம்பெற்றுக் கொண்டது ‘ஃபாரெஸ்ட் கம்ப்’. டாம் ஹேங்க்ஸ் நடிப்பு, திரைக்கதை வடிவம், அட்டகாசமான பின்னணி இசை, மென்சோகம் கொண்ட ட்ராமா காட்சிகள் என ஹாலிவுட்டின் நவீன காலத்து கிளாசிக் திரைப்படம் ஒன்றிற்கான அத்தனை மெனக்கெடல்களும் ‘ஃபாரெஸ்ட் கம்ப்’ திரைப்படத்தில் உண்டு. 1950களில் இருந்து 1980களின் தொடக்கம் வரையிலான அமெரிக்காவின் வரலாற்றை, சற்றே கற்றல் குறைபாடு கொண்ட ஃபாரெஸ்ட் கம்ப் என்ற மனிதனின் பார்வையில் பதிவுசெய்திருக்கும் இந்தத் திரைப்படம், பல்வேறு உண்மையான நிகழ்வுகளைக் கதையில் உள்ளடக்கியிருந்தது.

‘ஃபாரெஸ்ட் கம்ப்’ இந்தி மொழியில் ரீமேக் செய்யப்படுவதாக வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டபோதே ஆச்சரியமாக இருந்தது. இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழலில், மற்ற அரசியல் விவகாரங்களைக் கூட விட்டுவிடலாம், போர் எதிர்ப்பை ஆமிர் கான் என்ற முஸ்லிம் எவ்வாறு பேசப் போகிறார் என்ற கேள்வி முதலில் எழுந்தது. அடுத்ததாக ‘ஃபாரெஸ்ட் கம்ப்’ அடிப்படையில் அமெரிக்காவின் பழமைவாதச் சிந்தனைகளுக்கும், பழமைவாதிகளான குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் நாஸ்டால்ஜிக் திரைப்படமாக இன்றும் கருதப்படுகிறது. படத்தின் மையக் கதாபாத்திரம் வெள்ளையின ஆதிக்கவாதிகளான Ku Klux Klan அமைப்பின் நிறுவனரின் கொள்ளுப் பேரன். கதை நடைபெறும் களம், வெள்ளையின ஆதிக்கம் நிறைந்த அலாபாமா பகுதி. ஃபாரெஸ்ட் கம்பின் நண்பர்களாக அவரைப் போலவே சற்றே கற்றல் குறைபாடு கொண்ட பப்பா என்ற கறுப்பின நண்பர் வருகிறார்.

Forrest Gump (1994) & Laal Singh Chaddha (2022)

இந்தப் பின்னணியில் அமைந்திருக்கும் இக்கதையில் அலபாமா பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக கறுப்பின மாணவர்கள் நுழைந்தது, அதிபர் கென்னடி படுகொலை, எல்விஸ் பிரெஸ்லீ அமெரிக்கக் கலாச்சார சின்னத்தின் முகமாக மாறியதன் பின்னணி, வியட்நாம் யுத்தம், யுத்த எதிர்ப்புப் போராட்டங்கள், பிளாக் பேந்தர் கட்சி, வாட்டர்கேட் விவகாரம் என அமெரிக்காவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

‘ஃபாரெஸ்ட் கம்ப்’ அமெரிக்காவின் கலாச்சார, வரலாற்றைப் பதிவு செய்த டாப் 100 திரைப்படங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், அதன் ரீமேக்கான ‘லால் சிங் சத்தா’ எப்படியிருக்கப் போகிறது என்ற ஆர்வம் எழுவது இயல்பு. ‘லால் சிங் சத்தா’ சீக்கியக் கதாபாத்திரத்தை முன்னிறுத்துவதாக அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் காட்டப்பட்டபோது, அந்த ஆர்வம் அதிகரித்தது. அமெரிக்காவின் ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபரின் கதை, இந்தியாவில் ரீமேக் செய்யப்படும்போது ஒடுக்கப்படும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவரின் கதையாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆமிர் கானின் ‘பி.கே’ திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள், 2015ஆம் ஆண்டு அவர் அளித்த நேர்காணலில் சகிப்புத்தன்மை குறித்து அவர் பேசியது, ‘சத்யமேவ ஜெயதே’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பத்தாண்டுகளுக்கு முன்பு பேசியது என வெவ்வேறு காரணங்களைக் கூறி ஆமிர் கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தைப் புறக்கணிக்க சமூக வலைத்தளங்களில் சங் பரிவார் அமைப்பினர் பெரிய பிரசாரங்களை முன்னெடுத்திருந்தனர்.

ஆமிர் கான்

‘ஃபாரெஸ்ட் கம்ப்’ திரைப்படத்தின் கதாநாயகன் வெள்ளையின ஆதிக்கவாதிகளின் Ku Klux Klan அமைப்பை நிறுவியவரின் கொள்ளுப் பேரன். எனினும், தன் தாத்தா ஏன் அவ்வாறு இருந்தார் என்பது அவனுக்குத் தெரியாது. தன் கல்விக்காக அவனின் தாய் பள்ளியின் தலைமையாசிரியருடன் பாலியல் உறவு கொண்டது, தன் பால்ய காலத் தோழி ஜென்னியின் தந்தை அவளை ‘மிகுந்த அன்பு’ கொண்டு தொடுவதாக பாலியல் சீண்டல்களைக் கருதுவது என ஃபாரெஸ்ட் கம்பின் வாழ்க்கை அதீத அப்பாவித்தனங்களால் நிரம்பியது.

‘லால் சிங் சத்தா’ இதே கதையம்சத்தை பஞ்சாபிற்குப் பொருத்தினாலும், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த கதாநாயகனின் வம்சமே ஏதேனும் மன்னரிடமோ, அரசிடமோ ராணுவ வீரர்களாகப் பணியாற்றி, போரில் பலியானவர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.‘ஃபாரெஸ்ட் கம்ப்’ படத்தைப் போல அல்லாமல், ‘லால் சிங் சத்தா’ இந்தியப் பெண்ணைத் தாயாகக் காட்டுவதால் கண்ணியத்தோடு அவரின் கற்பைப் பாதுகாத்திருக்கிறார்கள். மேலும், இதில் கிறித்துவப் பாதிரியார் ஒருவர் முதலில் மறுத்தாலும், லாலின் தாயின் வேண்டுகோளை ஏற்று அவனைப் பள்ளியில் சேர்த்துக்கொள்கிறார். ஜென்னிக்குப் பதில், இதில் ரூபா.

Forrest Gump (1994)

ஜென்னியும் ரூபாவும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள். ஐம்பதுகளின் இறுதியில் வாழும் குழந்தை ஜென்னியின் பிரார்த்தனை, தன்னை ஓர் பறவையாக மாற்றிவிட வேண்டும் என்பதாக இருக்க, எழுபதுகளின் இறுதியில் வாழும் குழந்தை ரூபாவின் பிரார்த்தனை தான் பணக்காரராக வேண்டும் என்பதாக இருக்கிறது.

அமெரிக்காவின் வெள்ளையினக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஃபாரெஸ்டிற்கு, இந்தியாவின் சீக்கியச் சிறுவன் லாலை விட பல்வேறு சலுகைகள் இருக்கின்றன. அவனது பால்யம் ஜென்னியுடனான விளையாட்டுகளால் மட்டுமே நிரம்பியிருக்கிறது. அதே வேளையில், சிறுவன் லால் தன் பால்யத்தில் அம்ரித்சரில் ‘ஆபரேஷன் ப்ளூஸ்டார்’ நிகழ்வை எதிர்கொள்கிறான்; இந்திரா காந்தி படுகொலை, அதன் பின்னான சீக்கியர்கள்மீது நிகழ்த்தப்பட்ட வெறியாட்டம் முதலானவை நமக்குக் காட்டப்படுகின்றன. நீண்ட முடி வைத்திருக்கும் சிறுவன் லாலின் முடியை சாலையில் கிடக்கும் கண்ணாடித் துண்டைப் பயன்படுத்தி, கடவுளிடம் மன்னிப்புக் கேட்டு வெட்டிவிடுகிறார் லாலின் தாய். இவை பற்றிய எந்தப் புரிதலும் அப்பாவிச் சிறுவன் லாலுக்கு இருக்காது. ஒரு ஆதிக்கவாதியின் அப்பாவித்தனமும், ஒரு ஒடுக்கப்படுபவனின் அப்பாவித்தனமும் எப்படி வெவ்வேறானவை என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்தக் காட்சியைப் பார்க்க முடிந்தது.

அலபாமா பல்கலைக்கழகத்தில் கடந்த 1963ஆம் ஆண்டு கறுப்பின மாணவர்கள் இருவர் முதன்முதலாக அனுமதிக்கப்பட்ட போது, அதனை எதிர்த்து பல்கலைக்கழக வாசலில் வந்து தடுத்துநின்றார் அப்போதைய அலபாமா மாகாண ஆளுநர் ஜார்ஜ் வேலஸ். அந்தச் சம்பவத்தின் காட்சியில் அவருக்கு அருகில் நிற்கும் ஃபாரெஸ்ட், அடுத்த காட்சியில் முதன்முதலாக அலபாமா பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கப்பட்ட கறுப்பின மாணவியை `மேம்’ என்று அழைப்பதாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இதன் வேறுபாடுகளை உணராத கதாபாத்திரமாக இருந்தபோதிலும், ஃபாரெஸ்ட் கம்ப் தான் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டு, கறுப்பின மாணவர்கள் அனுமதிக்கப்படாதது குறித்த சிந்தனையைப் பார்வையாளர்களிடம் எழுப்புவதில்லை. மாறாக, இந்த நிகழ்வு மிகச் சாதாரணமாகக் கடந்து செல்லப்பட்டிருக்கும்.

Laal Singh Chaddha (2022)

‘லால் சிங் சத்தா’ படத்தில் லாலும் ரூபாவும் அத்வானியின் ரத யாத்திரையைக் காண்பதும், தொடர்ந்து ரூபா லாலிடம், ‘உன் பெயரும் லால்.. அவர் பெயரும் லால்.. லால் கிஷன் அத்வானி’ என்று சொல்வதுமாக மென்மை நோக்கில் தொடப்பட்டிருக்கிறது. அதே போல, மண்டல் எதிர்ப்புப் போராட்டங்கள், ரத யாத்திரை, பாபர் மசூதி இடிப்பு, தொடர்ந்து நாடு முழுவதும் நிகழ்ந்த கலவரங்கள், மும்பை குண்டுவெடிப்பு முதலான அனைத்து விவகாரங்களையும் ‘ஃபாரெஸ்ட் கம்ப்’ போல அல்லாமல், ‘லால் சிங் சத்தா’ படத்தில் கலவரத்திற்கு அச்சப்பட்டு `மலேரியா பரவுகிறது’ எனக் கூறி, விடுதி அறைக்குள் அடைந்துகொள்ளும் கதாபாத்திரமாக லால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுவும் ஒரு ஆதிக்கவாதியின் அப்பாவித்தனத்திற்கும், ஒரு ஒடுக்கப்படுபவனின் அப்பாவித்தனத்திற்கும் இடையிலான வேறுபாடாகவே அமைந்திருந்தது. எனினும், அனைத்து வன்முறைகளுமே ஒன்றுதான் என்ற பொருளை இரண்டு திரைப்படங்களுமே ஏற்படுத்தியுள்ளன என்பதை மறுத்துவிட முடியாது.

இந்தியாவின் தற்போதைய தேசியவாதச் சூழலில், அமெரிக்க வியட்நாம் போரின் விமர்சனங்களை இந்தியாவுக்குப் பொருத்த முடியாது. எனினும், ‘லால் சிங் சத்தா’ லாவகமாக கார்கில் போரைக் கையில் எடுத்துக் கொள்கிறது. ஃபாரெஸ்ட் அமெரிக்க ராணுவத்தில் இணைந்தபோது, அவனைப் போலவே இருக்கும் கறுப்பினத்தவரான ‘பப்பா’ என்ற நபரின் நட்பு கிடைக்கிறது. அதையே இங்கே தென்னிந்தியாவைச் சேர்ந்த ராணுவ வீரராக ‘பாலா’ என்ற கதாபாத்திரத்தில் நாக சைதன்யா நடித்திருக்கிறார்.

Forrest Gump (1994) & Laal Singh Chaddha (2022)

‘ஃபாரெஸ்ட் கம்ப்’ போரின் வலிகளையோ, வியட்நாம் மக்களின் பாதிப்பையோ பேசவில்லை. எனினும், ஃபாரெஸ்டின் அப்பாவித்தனம் போரை இழிவான செயலாக நமக்கு உணர்த்தும். அதே போல, இங்கு கார்கில் போரில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு நபரை அவர் எந்த பக்கத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியாமல் மீட்கிறான் லால்.

சுதந்திரத்திற்கு முந்தைய ஒருங்கிணைந்த இந்தியா குறித்து ஒப்பற்ற படைப்புகளை எழுதிய மண்ட்டோவின் ‘தோபா தேக் சிங்’ கதாபாத்திரத்தை நினைவுக்குக் கொண்டுவரும் காட்சியாக இது இருந்தது. ஒரு பைத்தியக்காரன் தன் தேசம் எது என்பது குறித்து எழுப்பும் கேள்விகளாக அமைக்கப்பட்டிருக்கும் அந்தக் கதையின் அதே கண்ணோட்டத்தை ‘லால் சிங் சத்தா’ கதையில் பொருத்த முடியும்.

‘லால் சிங் சத்தா’ படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களாக வரும் முஸ்லிம்கள் இருவர் மட்டுமே. ஒருவர் கார்கில் போரில் காப்பாற்றப்பட்ட பாகிஸ்தானி முஸ்லிம். இவர் மும்பை தாக்குதலுக்குப் பிறகு, தன் கிராமத்தைத் திருத்த பாகிஸ்தான் செல்வதாகக் காட்டப்படுகிறார். மற்றொருவர் ரூபாவின் கணவர். கொலைக் குற்றத்திற்காக அவர் மலேசியாவில் தலைமறைவாகியிருந்ததாகவும், கைது செய்யப்பட்டதாகவும் காட்டப்படுகிறார். பிற சமூக மக்களைப் போல அல்லாமல், முஸ்லிம் கதாபாத்திரங்களைக் ‘குற்றம்’ என்ற புள்ளியில் மட்டுமே பேசுகிறது ’லால் சிங் சத்தா’. எனினும், அதைக் கொஞ்சமாகத் தொட்டு மட்டுமே சென்றிருப்பதால், படத்தின் மையக் கருத்து பாதிப்பு ஏதும் இன்றி வெளிப்படுகிறது.

மண்ட்டோ

‘ஃபாரெஸ்ட் கம்ப்’ திரைப்படம் அடிப்படையில் காதலை மையப்புள்ளியாகக் கொண்டது. ஃபாரெஸ்ட் தன் பால்ய காலத் தோழியான ஜென்னியை தன் ஆயுளின் எல்லை வரை காதலிக்கிறான். ஃபாரெஸ்ட் அமெரிக்காவின் பழமைவாதச் சிந்தனையை தனக்குத் தெரியாமலேயே பின்பற்றுபவன். பழமைவாத வம்சப் பின்னணி, வியட்நாம் போரில் பங்கேற்றது, பிளாக் பேந்தர் கட்சியைச் சேர்ந்த தனது காதலனால் ஜென்னி தாக்கப்படும் போது அவளுடைய காதலனைத் தாக்குவது, முதலாளித்துவத்தின் மூலமாக தன் ‘திறமையை’ லாபமாக மாற்றியது, இறுதிவரை அமெரிக்காவில் எதிர்க் கலாச்சாரப் போராட்டங்கள் எதிலும் பங்கேற்காதது/புரிந்துகொள்ளாதது என முழுவதுமாக அமெரிக்கப் பழமைவாதத்தின் சின்னமாக ‘ஃபாரெஸ்ட் கம்ப்’ கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது.

அதே வேளையில், ஜென்னியின் தந்தை உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்; தன் மகள்களிடம் பாலியல் சீண்டல் செய்து சிறை சென்றவர். ஜென்னி அமெரிக்காவின் எதிர்க்கலாச்சாரங்களான ஹிப்பி இயக்கத்தில் பங்குகொள்கிறாள்; போதைப் பொருள்கள் பயன்படுத்துகிறாள்; போர் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்கிறாள். பிளாக் பேந்தர் அமைப்பினருடன் இணைந்து பணியாற்றுகிறாள். இறுதியில் சிங்கிள் மதராகத் தன் மகனை வளர்க்கிறாள். மீண்டும் ஃபாரெஸ்டைச் சந்தித்த பிறகு, மகன் குறித்தும், தனக்கு வந்திருக்கும் நோய் குறித்தும் கூறுகிறாள்; மரணமடைகிறாள். இதன் மூலமாக, அமெரிக்காவின் பழமைவாதக் கலாச்சாரத்தைப் பின்பற்றிய ஃபாரெஸ்ட் – எதிர்க் கலாச்சாரத்தின் பிரதிநிதியாக ஜென்னி என இருவரும் சித்தரிக்கப்பட்டு, ஃபாரெஸ்ட் உயர்ந்த எண்ணம் கொண்டவனாகக் காட்டப்படுகிறான்.

Forrest Gump (1994) & Laal Singh Chaddha (2022)

‘லால் சிங் சத்தா’ சீக்கியப் போர் வீரர்களின் வம்சாவளியைச் சேர்ந்தவன். இதிலும், காதலை மையப்புள்ளியாகக் கொண்ட கதையில், லாலின் பால்ய காலத் தோழி ரூபா காதலியாகவும் இருக்கிறாள். சீக்கியர்களுக்கு எதிரான இனப்படுகொலையில் மத அடையாளத்தைத் துறப்பது, கார்கில் போரில் தேசம், மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு காயமடைந்தவர்களைக் காப்பாற்றுவது, மத அடிப்படையிலான மோதல்களை ‘மலேரியா’ எனவும், மதம் காரணமாகவே ‘மலேரியா’ பரவுவதாகவும் கூறுவது, இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை மாற்றத்திற்குப் பிறகு முதலாளித்துவத்தால் முன்னேறுவது என லால் இந்தியாவின் சீக்கியச் சமூகத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற முகமாகக் காட்டப்படுகிறான்.

அதே வேளையில், ரூபா இந்தியாவில் உலகமயமாக்கல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு எளிதில் பணம் சம்பாதிக்க மாடலிங் துறையில் களமிறங்குவது, நிர்வாணப் புகைப்படம் காரணமாக பெரும் சர்ச்சைகளில் சிக்குவது, பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவரை பணத்திற்காகத் திருமணம் செய்துகொள்வது, தாவூத் இப்ராஹிம் போன்ற டான்களைச் சந்திப்பது, கொலை வழக்கில் சிக்கிக்கொள்வது என இந்தியாவில் உலகமயமாக்கலின் காரணமாக ‘தடம்புரண்ட’ பெண்ணாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது ரூபா கதாபாத்திரம்.

Forrest Gump (1994) & Laal Singh Chaddha (2022)

ஃபாரெஸ்ட் கம்ப் ஒடுக்குமுறையைத் தன்னைச் சேர்ந்தவர்கள் மேற்கொள்ளும் போதும், ‘காரணமே இல்லாமல் இவ்வாறு செய்கிறார்கள்’ என்று கூறும்போதும் வளைந்துகொள்ளும் வரலாறு, இந்தியாவின் சீக்கியனான லால் சிங் சத்தா சொல்லும்போது அவன் மத அடையாளத்தைக் காவு கேட்கிறது.

‘ஃபாரெஸ்ட் கம்ப் பார்த்த பிறகு, இந்த உலகை வேறு கண்களால் நீங்கள் பார்க்கலாம்’ என்று விளம்பரப்படுத்தப்பட்டது. ஃபாரெஸ்ட் கம்ப் தன்னைச் சுற்றி நிகழும் ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்படாத, ஒடுக்குமுறைகளை மேற்கொள்ளும் சமூகத்தின் பிரதிநிதி. அவனுக்குக் கண்ணை மூடிக்கொள்ளும் சலுகை உண்டு. லால் சிங் சத்தாக்களுக்கு அத்தகைய சலுகைகள் கிடையாது. இதனாலேயே ‘லால் சிங் சத்தா’ ஒப்பீட்டளவில் சிறப்பானதாக மாறுகிறது; ஆரத்தழுவிக் கொள்ளத் தோன்றுகிறது.

  • ர முகமது இல்யாஸ்.

ஃபேமிலி மேன் இரண்டாம் சீசனின் அபத்தங்களும் ஆபத்துகளும்

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் 2009ம் ஆண்டு முடிவுற்ற பிறகும் ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டில் அகதிகள் முகாம்களுக்கு உள்ளேயும் வெளியேயும் வசித்து வருகிறார்கள். அவர்கள் இலங்கைக்குத் திரும்பிச் செல்லாததற்கு அவர்களின் ஊர்களிலிருந்து ராணுவம் முழுமையாக அகற்றப்படாதது, வலுப்பெற்று வரும் வலதுசாரி அரசு, வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கு சரியான பொருளாதார வாய்ப்பின்மை எனப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இத்தனைக்கும் அவர்கள் தமிழ்நாட்டில் குறையற்ற வாழ்க்கையை ஒன்றும் பெற்றுவிடவில்லை. ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பிறகு இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகள் தீவிர நெருக்கடிக்கு உள்ளானார்கள். தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழ அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்போவதாக அறிவித்தார் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா. அவ்வாறு அவர்கள் வெளியேற்றப்படவில்லை என்றாலும், அதுவரையிலும் அவர்கள் இங்கு அனுபவித்த குறைந்தபட்ச சுதந்திரமும் சலுகைகளும் முற்றிலும் பறிக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் 115 அகதிகள் முகாம்கள் அமைந்திருக்கின்றன. அவை பெரும்பாலும் ஊருக்கு வெளியே, வாழத்தகுதியற்ற மோசமான நிலையில் இருக்கின்றன. அங்கு இருப்பவர்கள் காலையில் வேலைக்குக் கிளம்பினால் இரவு குறித்த நேரத்திற்குள் திரும்ப வேண்டும். ஒவ்வொரு முகாமில் இருக்கும் அகதிகளை எந்நேரமும் கண்காணிப்பதற்கு ’கியூ’ பிரிவு அதிகாரிகள் இருப்பார்கள். வெளியே சென்றவர்கள் சரியான நேரத்திற்குள் திரும்பவில்லையெனில் மறுநாளே தீவிர விசாரணை நடக்கும். முகாம்காரர்களை வெளியில் இருந்து உறவினர்களோ நண்பர்களோ பார்க்க வந்தால் உடனே கியூ பிரிவினரின் அறைக்கு அழைக்கப்படுவார்கள். முகாமில் வாழும் பெண்களுக்கும் எந்தப் பெரிய பாதுகாப்பும் இல்லை. பாலியல் சீண்டல்களை அவர்கள் அன்றாடம் உள்ளூர்க்காரர்களாலும் அரசு அதிகாரிகளாலும் அனுபவித்து வருகிறார்கள்.

முகாம்காரர்கள் அரிதாகவே பள்ளிப் படிப்பை முடித்தவர்களாக இருக்கிறார்கள். தப்பித்தவறி ஏதாவது சிறிய கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பு முடித்தாலும், கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அவர்களுக்கு இங்கே வழங்கப்படமாட்டாது. ஆண்களில் பெரும்பாலானோர் முகாம் அமைந்திருக்கும் ஊர்களிலும், அருகில் இருக்கும் பெரு நகரங்களிலும் கட்டட வேலைக்கும் கூலி வேலைகளுக்கும் போகிறார்கள். அதில் கிடைக்கும் சொற்பக் காசும் மதுபானக் கடைகளின் கல்லாவிற்குச் சென்று சேர்கிறது. இத்தகைய நெருக்கடி மிகுந்த வாழ்க்கையிலிருந்து தப்பிப்பதற்காக சிலர் ஆஸ்திரேலியாவுக்கும் ஏனைய முதலாம் உலக நாடுகளுக்கும் செல்வதற்கு முயற்சி எடுக்கிறார்கள். சிறிய மீன்பிடிக் கப்பல்களில் ஏறி பெருங்கடல்களைக் கடக்கும் முயற்சியில் அவர்களில் பலர் மூழ்கி இறந்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழ அகதிகளின் இத்தகைய வாழ்வியல் பிரச்னைகள் குறித்து தொ.பத்தினாதன், அ.சி.விஜிதரன் போன்றோர் எழுதியுள்ளனர்.

இந்தியக் குடியுரிமை தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது இங்கிருக்கும் தமிழ் அகதிகள் நெடுநாட்களாக எழுப்பிவரும் கோரிக்கை. 1983ல் இருந்தே இந்தியாவிற்கு இலங்கையில் இருந்து அகதிகள் வந்தவண்ணம் உள்ளனர். இவர்களில் ஒரு சாரர் தற்காலிக யுத்த நிறுத்தத்தின்போதெல்லாம் தாயகத்திற்குத் திரும்பிச் செல்வதுண்டு. ஆனால், பலரும் இங்கே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்கள். இவர்கள் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாகவே தமிழ்நாட்டில் அகதிகளாக வசிக்கின்றனர். இவர்களுடைய பிள்ளைகளும் இங்கு அகதிகளாகவே பிறக்கிறார்கள். அவர்கள் எவரும் இலங்கையை நேரில்கூட பார்த்திராதவர்கள். தங்கள் மொத்த வாழ்க்கையையும் இந்தியாவிலேயே செலவழித்தவர்கள். எனவே, பல வகைகளிலும் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் எனும் அவர்களது கோரிக்கை நியாயமானதுதான் என்றாலும், எந்தப் பிரதான அரசியல் கட்சிகளும் இவர்களின் இந்தக் கோரிக்கைக்கு முகம் கொடுக்கவில்லை.

இவ்வாறு அடிப்படை உரிமைகளற்று, அன்றாடம் பெரும் நெருக்கடிகளுக்கிடையில் வாழ்க்கையை நகர்த்தியபடி, இத்தேசத்தின் குடிகள் ஆவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் ஈழ அகதிகளைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்திருக்கும் சீரியல்தான் ஃபேமிலி மேன் 2.

அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள இந்த சீரியலின் கதைப்படி, இலங்கையில் செயல்பட்ட தீவிரவாத இயக்கமொன்றின் தலைவர் பாஸ்கரன்; லண்டனில் வசித்து வருகிறார். இவரும் இவரின் தோழர்களும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தைக் கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அதை இந்தியாவும் அங்கீகரிக்க வேண்டும் என்பது அவர்கள் எண்ணம். அந்தக் கோரிக்கையை இங்குள்ள அரசியல்வாதிகளிடம் முன்வைப்பதற்கு பாஸ்கரனின் தம்பி சென்னை வருகிறான். இலங்கையுடனான தன் நட்புறவை வளர்த்துக்கொள்வதற்கு, பாஸ்கரனின் தம்பியை இலங்கை அரசிற்குப் பிடித்துத்தர முடிவு செய்கிறார் இந்தியப் பிரதமர். சிறப்புப் புலனாய்வு அதிகாரிகள் அவனைக் கைது செய்கிறார்கள். ஆனால், சீக்கிரமே ஒரு குண்டு வெடிப்பில் கொல்லப்படுகிறான் அவன். இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கரன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, ISIS தீவிரவாத அமைப்பைச் சார்ந்த சமீர் என்பவரோடு இணைகிறான். அவர்கள் இருவரும் சேர்ந்து சென்னையில் இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரும் சந்தித்துக்கொள்ளும் நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்தத் திட்டமிடுகிறார்கள். அத்தாக்குதலை நடத்தவிருப்பவர்கள் தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் சில ஈழத் தமிழர்கள். அவர்கள் இலங்கையில் பாஸ்கரனின் இயக்கத்தில் தீவிரப் பயிற்சி பெற்ற போராளிகள் மட்டுமல்ல, தலைவரிடமிருந்து எப்போது உத்தரவு வந்தாலும் மனித வெடிகுண்டுகளாகவும் மாறக் காத்திருக்கும் ஸ்லீப்பர் செல்கள். பாஸ்கரனின் இத்திட்டம் குறித்து இந்தியப் புலனாய்வுத் துறைக்குத் தெரிய வருகிறது. எவ்வாறு பாஸ்கரனின் திட்டத்தை இந்தியப் புலனாய்வுத் துறை முறியடிக்கிறது எனபதுதான் ஃபேமிலி மேன் சீசன் 2வின் கதையும் திரைக்கதையும்.

தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போல, ராஜீவ் காந்தியின் மரணத்தைத் தொடர்ந்து இங்கு வசிக்கும் ஈழ அகதிகளின் அன்றாட வாழ்க்கை நெருக்கடிகள் மிகுந்ததாக மாற்றமடைந்தது. வீடு, வாசல், உறவு, நட்பு என அனைத்தையும் தாயகத்தில் விட்டுவிட்டு இந்தியப் பெருங்கடலைத் தோணியில் கடந்து ஏதுமற்றவர்களாய் இங்கு வந்துசேரும் இலங்கைத் தமிழர்கள் அனைவரையுமே இந்திய அரசு தீவிரவாதிகளாய்ப் பாவிக்கத் தொடங்கியது. எந்நேரமும் அவர்கள் துப்பாக்கியைக் கையிலேந்தலாம், முக்கிய அரசியல் தலைவர்களில் யாரை வேண்டுமானாலும் குண்டு வைத்துக் கொலை செய்யலாம் என்ற பார்வையை இந்திய அரசு வளர்த்தெடுத்துக்கொண்டது. எனவேதான் அவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறார்கள். அகதிகள் முகாம் எனும் திறந்தவெளி சிறைச்சாலையில் கைதிகளைப் போல நடத்தப்பட்டு வருகிறார்கள். இத்தகைய நிலை இலங்கையில் யுத்தம் முடிந்து 12 ஆண்டுகளாகியும் மாறவில்லை. இந்நிலையில், சென்னையில் வைத்து இந்தியப் பிரதமரை, இங்கு அகதிகளாக வாழும் ஈழ விடுதலைப் போராளிகள் கொல்ல முயற்சிப்பதைக் கதையாகக் கொண்டிருக்கும் ஃபேமிலி மேன் 2 சமூக அரசியல் தளத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பதை நினைக்கையில் அச்சம் மேலோங்குகிறது.

தமிழ் அகதிகள் இங்கே அனுபவிக்கும் அன்றாடத் துயரங்களைப் பற்றி எதையுமே பேசவில்லை இந்த சீரியல். தொடக்கக் காட்சிகளில் பெண் போராளியான ராஜி சென்னைப் பேருந்திலும் பணியிடத்திலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகச் சில காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. வர்க்க, சாதி, மத பேதமின்றி பெண்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையின் ஏதோ ஒரு தருணத்திலாவது இக்கொடுமைகளை அனுபவித்திருக்கிறார்கள் என்பது கசப்பான எதார்த்தம். மற்ற பெண்களுக்குச் சட்டம் எழுத்தளவில் தரும் குறைந்தபட்ச பாதுகாப்புகூட அகதிப் பெண்களுக்குக் கிடைப்பதில்லை என்பதும் எதார்த்தம்தான். ஆனால், ராஜி ஒரு அகதியாக இருப்பதால்தான் இவ்வாறு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுகிறாள் எனும் ரீதியில்கூட காட்சிகள் அமைந்திருக்கவில்லை. இப்படி இலங்கைத் தமிழ் அகதிகளின் துயரத்தைத் துளியும் பதிவு செய்யாமல், அவர்களைப் பற்றி அரசு கொண்டிருக்கும் மதிப்பீடுகளையும் கருத்தாக்கத்தையும் மறுஉற்பத்தி செய்யும் வேலையை மட்டுமே செய்கிறது ஃபேமிலி மேன் 2. அதிலும் இந்த சீரியலின் ஆறாவது எப்பிசோடில் ஒரு கடலோரக் கிராமமே ஈழ விடுதலைப் போராளிகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும், அவர்களைக் காப்பாற்றுவதற்காக அக்கிராமத்தார்கள் துப்பாக்கி ஏந்தி காவல் நிலையத்தை அழித்தொழிப்பதாகவும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அன்றும், இன்றும் ஈழ விடுதலைக்குத் தீவிர ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் இருப்பது உண்மைதான். ஆனால், எந்த ஆதரவாளர்களும் எந்தக் காவல் நிலையத்தையும் இங்கு அழித்ததில்லை. திரைமொழியில் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட இத்தகைய பல காட்சிகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது இந்த சீரியல். அவை ஈழ அகதிகள் பற்றியான பெரும் அச்சத்தைப் பொதுவெளியில் உருவாக்கும் பணியைச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில், உலகம் முழுவதுமே அகதிகள், புலம்பெயர்ந்தவர்கள்மீது வலதுசாரிகள் திட்டமிட்டு ஒவ்வாமையையும் எதிர்ப்பையும் உருவாக்கி வருகிறார்கள். இந்தியாவிலும், வட கிழக்கு மாநிலங்களில் தேர்தல் நடக்கும்போதெல்லாம் பாரதிய ஜனதா கட்சியும், பிராந்திய வலதுசாரிக் கட்சிகளும் வங்கதேசத்திலிருந்து வந்த அகதிகளை ஊடுருவிகளாகவும் தீவிரவாதிகளாகவும் முத்திரை குத்தும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது.

இந்த சீரியலின் முன்னோட்டம் (trailer) வெளியானதும் இணையதள தமிழ்ச் சமூகத்திடமிருந்து பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. பல அமைப்புகளும் கட்சிகளும் ஃபேமிலி மேன் தொடரைத் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பின. ஜூன் 5ம் தேதி இத்தொடர் வெளியானதையொட்டியும் காட்டமான விமர்சனங்கள் வந்தன. விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் இழிவாகச் சித்தரிக்கும் வகையில் பல காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக நாம் தமிழர் முதலான தமிழ்த் தேசிய அமைப்புகள் கருதினார்கள். ஈழப் போராளிகள் மது அருந்துவதாகவும் கெட்ட வார்த்தைகள் பேசுவதாகவும் காட்டியிருப்பது ஏற்புடையதாக இல்லை என்றார்கள். எனவே, ஃபேமிலி மேனைத் தடை செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை முன்னிறுத்தி அமேசானைப் புறக்கணிப்போம் (Boycott Amazon) எனும் பிரச்சாரம் ட்விட்டரில் முன்னெடுக்கப்பட்டது. இத்தகைய எதிர்ப்புகள் இருந்தாலும், தமிழ்ப் பார்வையாளர்கள் பலரும் ஈழப் போராளிகள் இத்தொடரில் கண்ணியமாகச் சித்தரிக்கப்பட்டதாகக் கருதினார்கள். அதையொட்டி அவுட்லுக் இணைய இதழ் “The Family Man 2 Silences its Tamil critics with Enough Pro-Tamil Sentiments” எனும் தலைப்பில் கட்டுரையொன்றைக்கூட வெளியிட்டிருக்கிறது.

இதில் மாபெரும் சிக்கல் என்னவென்றால், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதாரவான விஷயங்கள் இத்தொடரில் வெற்று வசனங்களாய் இடம்பெறுவதுதான். சினிமாவும் இத்தகு சீரியல்களும் காட்சி ஊடகங்கள். இதில் இடம்பெறும் வசனங்களைவிட சித்தரிக்கப்பட்டிருக்கும் காட்சிகளே பார்வையாளர்களிடம் அதிகத் தாக்கத்தைச் செலுத்தும் வல்லமையைப் பெற்றிருக்கின்றன. இந்த சீரியலில் ஈழப் போராளிகள் தங்கள் எதிரிகள் மீது நிகழ்த்தும் தாக்குதலும் வன்முறையும் மட்டும் நுட்பமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள்மீது சிங்கள அரசு நடத்திய பயங்கரவாதமோ வெறும் வசனங்களாகக் கடந்து போகிறது. எனவே, இலங்கை இன அழிப்பைக் குறித்து ஏதும் அறியாத பார்வையாளர் ஃபேமிலி மேன் தொடரைப் பார்க்கும்போது, இலங்கை அரசின் வன்முறையைக் காட்டிலும், ஈழ விடுதலைப் போராளிகளின் வன்முறைதான் பூதாகரமாகத் தெரியும். இதே சிக்கல் கமல் ஹாசனின் ’ஹே ராம்’ படத்திலும் இருந்தது. வங்கப் பகுதியில் பிரிவினையின்போது நடந்த ஹிந்து-முஸ்லிம் கலவரத்தை நேர்மையாகச் சித்தரிப்பதாகப் பறையசாற்றியது அப்படம். ஆனால், இந்துக்களின் மீது இஸ்லாமியர்கள் நிகழ்த்திய வன்முறையை மட்டும் அத்தனை விரிவாகவும் நுட்பமாகவும் காட்டிவிட்டு, இஸ்லாமியர்களை இந்துக்கள் கொல்லும் காட்சியை ரத்தினச் சுருக்கமாகவும் சின்னச் சின்ன வசனங்களில் புதைத்தும் வைத்திருப்பார் இயக்குநர்.

மேலும், இத்தொடர் முன்னிறுத்தும் தீவிர இந்திய தேசியவாதத்திற்கு எதிரான சில விமர்சனங்களும் உள்ளேயே பொதிந்துள்ளன. உதாரணமாக, கதையின் நாயகனான ஸ்ரீகாந்த் திவாரி இந்த சீசனின் தொடக்கத்தில் புலானாய்வு அமைப்பு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஐடி கம்பெனியொன்றில் பணிபுரியத் தொடங்குகிறான். காரணம், சென்ற சீசனில் துடிப்பான ஓர் இஸ்லாமிய இளைஞனை அவனும், அவன் குழுவும் தீவிரவாதியென நினைத்துக் கொன்றுவிடுகிறார்கள். அவன் தீவிரவாதி அல்ல என்பதற்கு ஆதாரம் கிடைத்தாலும், அது தேசத்திற்குக் களங்கம் ஏற்படுத்தும் என்பதால் ஸ்ரீகாந்தின் மேலதிகாரிகள் அதனை வெளியிட மறுக்கிறார்கள். இது கதாநாயகனுக்குக் குற்றவுணர்வைத் தந்து, புலானாய்வு வேலையை ராஜினாமா செய்வதற்கான காரணங்களில் ஒன்றாய் அமைகிறது. இதுபோலவே, அரசு மற்றும் அரசு இயந்திரங்களின் நியாயமற்ற போக்குகளை ஆங்காங்கே சுட்டிக்காட்டுகிறது ஃபேமிலி மேன். எனினும், அவையெல்லாம் இத்தேசப் பாதுகாப்பிற்குத் தேவையான Necessary Evil என்பது போன்ற சித்திரத்தையே நமக்கு இறுதியில் வழங்குகின்றன. ராணுவ பாஷையில் சொல்வதென்றால் போரில் வெற்றியடைய Collateral Damage தவிர்க்க முடியாதது.

இப்பிரச்னைகளைத் தவிர, ஃபேமிலி மேன் முதல் சீசன் முழுவதும் பரவிக்கிடந்த இஸ்லாமிய வெறுப்பு இதிலும் சிதறிக்கிடக்கிறது. இந்தியாவில் எந்தப் பிரச்னை நிகழ்ந்தாலும் அதில் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் பங்கு இருக்கும் எனும் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இரண்டாம் சீசன். சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்துத்துவவாதிகள் இஸ்லாமிய இளைஞர்கள் அனைவரும் ‘லவ் ஜிஹாது’ செய்கிறார்கள் எனும் அயோக்கியத்தனமான குற்றசாட்டை முன்வைத்தார்கள். தலித்துகள், மற்ற சாதிப் பெண்களை நாடகக் காதல் செய்கிறார்கள் என மருத்துவர் ராமதாஸ் சொன்னதைப் போல, முஸ்லிம்கள் இந்துப் பெண்களைப் பொய்யாகக் காதலித்து, திருமணம் முடித்து மதமாற்றம் செய்கிறார்கள் எனும் கருத்தைப் பரப்பினார்கள். இந்த சீரியலில் கதாநாயகனின் பதின் பருவ மகளை ஒரு இஸ்லாமியச் சிறுவன், கல்யாண் எனும் இந்துப் பெயரைச் சூட்டிக்கொண்டு காதலிக்கிறான். அந்தச் சிறுவன் சாதாரண இஸ்லாமியச் சிறுவனல்ல, தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவன். தன் பெற்றோரைக் கொன்ற கதாநாயகனைப் பழிவாங்கவே அவன் மகளைக் காதலித்து, கடத்துகிறான். அதுபோன்று இன்னும் பல அபத்தங்கள் ஃபேமிலி மேன் 2 முழுவதும் நிரம்பியுள்ளன. தேர்ந்த நடிப்பும் சுவாரசியமான திரைக்கதையும் இந்த சீரியலை கூடுதல் ஆபத்து மிக்கதாக மாற்றுகின்றன.

சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் இளம் பத்திரிகையாளருமான ஜாவித் உயிரிழப்பு

காஷ்மீரைச் சேர்ந்த இளம் பத்திரிகையாளரான ஜாவித் அஹமது, கடந்த வியாழக்கிழமை பாராமுல்லா மாவட்டம் ரஃபியாபாத் பகுதியிலிருக்கும் தன் வீட்டிலிருந்து ஸ்ரீநகரிலுள்ள தனது அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரிடம் இதுபற்றி விசாரித்தபோது, ஜாவித் தனது அலுவகத்திற்குச் செல்லும் வழியில் இவ்வாறு நடந்துவிட்டது எனவும், அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

‘தி ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகையில் நிருபராக பணியாற்றி வந்தவர் ஜாவித் அஹமது. அதற்கு முன்பு ஹஃபிங்டன் போஸ்ட், ஃபஸ்ட் போஸ்ட் முதலான பல பத்திரிக்கைகளுக்கு எழுதி வந்துள்ளார். தி ட்ரிபூன் (The Tribune) பத்திரிகையிலும் பணியாற்றியுள்ளார். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்ட மேற்படிப்பை 2016ல் நிறைவு செய்தார். அங்கு வகுப்பில் முதல் மாணவனாகத் தேர்வு செய்யப்பட்டு தங்கப் பதக்கம் பெற்ற இவரைப் பற்றி இதழியல் துறை பேராசிரியர் லியோ சாமுவேல் தனது முகநூல் பக்கத்தில் கூறுகையில், ஜாவித் மிகவும் மென்மையான குணம் உடையவர். அவருக்கு அதிகபட்சம் 30 வயதுதான் இருக்கும். சமீபத்தில்தான் அவருக்கு திருமணம்கூட நடந்தது. எனக்கு காஷ்மீரின் பல பக்கங்களை அறிமுகம் செய்தவர் ஜாவித். ‘வீ வில் மிஸ் யு ஜாவிட்..!’ என்று தனது மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

ரைசிங் காஷ்மீர் பத்திரிகை அதன் முதல் பக்கத்தில் ஜாவித் அஹமதுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.

‘ஜாவித் ஒரு துடிப்பு மிக்க இளம் பத்திக்கையாளர். ஸ்ரீநகர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது இழப்பு வருத்தமளிக்கிறது’ என தி ரைசிங் காஷ்மீர் தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. காஷ்மீரின் பல பத்திரிக்கையாளர்களும் அரசியல் பிரமுகர்களும் தங்கள் அனுதாபங்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.