Home Blog Page 7

விடை தெரியாத கேள்விகள் அழகானவை, உரையாடலுக்கு வழிவகுப்பவை

இந்தக் கட்டுரை ‘விஸ்வரூபம்’ பிரச்னை உச்சத்தில் இருந்தபோது ஒரு வாரத்திற்கு முன் தோழர் கவின்மலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதினேன். இப்போது ‘இந்தியா டுடே’யில் வெளிவந்துள்ளது. இக்கட்டுரையின் இறுதியில் நான் சொல்லியுள்ளது போலவும் எதிர்பார்த்தது போலவும் பிரச்னை முடிந்து நாளை படம் திரையிடப்பட இருப்பதாக அறிகிறோம். மகிழ்ச்சி.

கமல்ஹாசன் ஒரு படம் எடுத்தார். தொடர்ச்சியாக இதுபோன்ற படங்களால் துயர்தரும் வாழ்வனுபவங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கும் ஒரு சிறுபான்மைச் சமூகம் இப்படமும் தங்களுக்கு எதிரானதாக இருப்பதைக் கண்டு அச்சம் தெரிவித்தது. அரசு தலையிட்டது. பேச்சுவார்த்தைகள் நடந்தன. எல்லோருக்கும் தெரியும். படம் எப்படியும் வெளிவரும் என. அரசுக்கும் தெரியும். கமல்ஹாசனுக்கும் தெரியும். ஏன் முஸ்லிம்களுக்கும் தெரியும்.
இடையே மிக விரிவான விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதம் நிச்சயமாக சமூகத்தின் இது குறித்த கருத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. இருதரப்பு விட்டுக் கொடுத்தல்களுக்குப் பின் படம் இப்போது திரையிடப்பட்டுள்ளது. இதுதான் ஜனநாயகம். எதுவுமே இல்லாமல் இப்படியான படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு, எவ்விதப் பிரச்னையுமின்றி திரையிடப்படுமானால் அது எப்படிச் சரியாக இருக்கும்? மத்திய சென்சார் போர்ட் அனுமதித்துவிட்டால் அப்புறம் யாரும் வாய்திறக்கக்கூடாது என ஆள்காட்டி விரலை உதட்டில் வைத்து முஸ்லிம்களை நோக்கிக் கறார் பேசுபவர்களை என்னென்பது?

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இன்னொருவரை அடையாளம் காண உதவியது இந்த விவாதத்தின் இன்னொரு பலன். கமல்ஹாசன் ஆதரவாளர்கள் எல்லோரும் சொன்ன ஒரு கருத்து, “இந்த எதிர்ப்பின் மூலம் முஸ்லிம்கள் குறித்த முரட்டுத்தனமானவர்கள் என்கிற பிம்பம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது” என்பது. அப்படியான கருத்தைச் சொல்கிறவர்கள் எல்லாம் இந்தப் பிரச்சினை தொடங்குவதற்கு முதல் நாள் வரை இப்படி இன்று சொல்பவர்கள் எல்லோரும் ஏதோ முஸ்லிம்கள் என்றால் அமைதியானவர்கள் எனக் கருதிக்கொண்டிருந்தது போலவும், இந்த எதிர்ப்பிற்குப் பின்பே முஸ்லிம்கள் பற்றி இப்படி ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டதாகவும் சொல்வது எத்தனை அபத்தம்.

முஸ்லிம்களின் பிரச்னைகள் குறித்த எந்தப் பிரக்ஞையும் அற்று அவர்கள் குறித்த எதிர்மறைக் கருத்தை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் சுமந்திருந்தவர்கள் தங்கள் வெறுப்பைக் காட்டிக்கொள்ள இந்த வாய்ப்பை இன்னும் ஒரு முறை பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே உண்மை.

‘இந்தியா டுடே’யில் வெளியாகியுள்ள கட்டுரை கீழே:

‘விஸ்வரூபம்’ திரைப்படம் தமிழகத்தில் எதிர்கொள்ளபட்ட விதம் இன்று கருத்துரிமை குறித்த விவாதத்தை மீண்டும் மேலெழுப்பியுள்ளது. மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான மோதலாகவும் இது மாறியுள்ளது. தான் தணிக்கை செய்து அனுமதித்துவிட்டால் பின் மாநில அரசு என்ன பிரச்னை வந்தாலும் அந்தப் படத்தைத் திரையிட்டே ஆகவேண்டும் என்கிற அளவில் இருக்கும் சட்டத்தை மத்திய அரசு திருத்தத் துணிந்துள்ளது.

இன்னொருபக்கம் அறிவுஜீவிகள் முழுமையான கருத்துச் சுதந்திரம், அதிலும் கலைப் படைப்புகளுக்குத் தடையற்ற கருத்துச் சுதந்திரம் கோருகின்றனர்.

கலைஞர்களுக்கு மட்டுமல்ல, சாதாரணக் குடிமக்களுக்கும் கூடத் தடையற்ற கருத்துச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதை ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள யார்தான் மறுக்க முடியும்? அதே நேரத்தில் ஒருவருடைய கருத்துச் சுதந்திரம் தனது வாழ்வுரிமையைப் பறிக்கிறது என இன்னொருவர் குரல் எழுப்பும்போதுதான் பிரச்னை எழுகிறது. அரசுகள் இதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு உள்ளே நுழைகின்றன.

இப்படியான நிலை வரும்போது தடையற்ற கருத்துச் சுதந்திரத்தின் எல்லை எதுவென்ற இதுவரைக்கும் விடை கண்டுபிடிக்க இயலாத கேள்வி மீண்டும் மேலெழுகிறது. பல்வேறு கருத்துகளும் நம்பிக்கைகளும் அடையாளங்களும் பண்பாடுகளும் சஞ்சரிக்கும் களமாகச் சமூகம் விளங்குகையில் இதுபோன்ற விடை தெரியாத கேள்விகளும் இருக்கத்தான் செய்யும் என்பதை நாம் முதலில் ஏற்கவேண்டும். இறுதி விடை என ‘இது’ அல்லது ‘அதை’ முன்வைக்காத வரைதான் அங்கு ஜனநாயகம் நிலவ முடியும். ஏதொன்றையும் இறுதித் தீர்வாக முன்வைக்கும்போது அது ஏதோ ஒருவரின் உரிமையை ஒடுக்குவதாகவே அமையும்.

தமிழக அரசு விஸ்வரூபத்திற்கு விதித்துள்ள தடை கலைப் படைப்பின் முழுமையான கருத்துச் சுதந்திரத்தை மறுக்கிறது என்கிற குரலை இன்று வலிமையாய் ஒலிப்பவர்கள் அனைவரும் ஓரம்சத்தில் இறுக்கமான மௌனம் கடைப்பிடிப்பதை கவனிக்கலாம். முஸ்லிம்கள் இதுபோன்ற சூழல்களில் வெளிப்படுத்தும் அச்சத்தில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதுதான் அது. கூர்ந்து கவனித்தால் அது நியாயம் இல்லை, அப்படியான ஒரு பிரச்னையே அவர்களுக்கு இல்லை, அவர்கள் முரட்டுத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் எதிர்ப்புக் காட்டுகின்றனர் என்பதே அவர்களின் கருத்தாக இருப்பதைக் காணலாம்.

முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என பக்கத்தில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமையும் ஐயத்துடன் நோக்கக்கூடிய நிலை தொண்ணூறுகளுக்குப் பின் இங்கு உருவாகியுள்ளதை யார் மறுக்க இயலும்? அப்படியானதற்கு பால்தாக்கரேக்களும் பிரவீன் தொகாடியாக்களும் உமிழ்ந்த வெறுப்புப் பேச்சுகள் மட்டுமா காரணம்? சொல்லப்போனால் அவர்களின் பேச்சுகள் அவர்களது இயக்கத்தைத் தாண்டிப் பெரிய அளவில் பொதுப்புத்தியில் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. பொதுப்புத்தியில் முஸ்லிம்கள் குறித்த எதிர்மறைப் பிம்பம் ஏற்படுத்தப்பட்டிருப்பதில் ஊடகங்களுக்குத்தான் பெரிய பங்குள்ளது. குறிப்பாகத் தொண்ணூறுகளுக்குப் பின் வெளிவந்து கொண்டுள்ள திரைப்படங்களுக்கு மிக முக்கியமான பங்குள்ளது.

அற்புதமான ஆக்கங்கள் உள்ளிட்ட எந்தக் கலைப்படைப்பிற்கும் ஒரு பிரச்சார மதிப்பும் உண்டு என்பதை நாம் மறந்துவிடலாகாது. மனிதருள் பொதிந்துள்ள மேன்மையான பண்புகளைத் தட்டி எழுப்புபவைதான் உன்னதக் கலைப்படைப்புகள். அற்ப உணர்வுகளை உசுப்பிவிட்டுக் காசு பார்க்கும் வணிகத் திரைப்படங்கள் இன்னும் ஆபத்தானவை என்பதை மறந்து விடக்கூடாது. ‘ரோஜா’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்தவர்கள் திரையரங்கு வாசலில் பாகிஸ்தான் தேசியக் கொடியை எரித்துச் செய்த வன்முறையும் இன்று விஸ்வரூபம் திரைப்படத்தில் திருக்குர்ஆனை ஓதித் தொழுதுவிட்டுச் சென்று பயங்கரவாதச் செயல்களைச் செய்பவர்களைக் கமல்ஹாசன் துவம்சம் செய்யும்போது திரையரங்கினுள் எழும் ஆர்ப்பாட்டங்களும் எதைக் காட்டுகின்றன? இப்படியாகக் கட்டமைக்கப்படும் வெறுப்பு யார்மீது கவியப் போகிறது?

முஸ்லிம்களின் அச்சம் நூறு சதம் நியாயமானது என்பதை நாம் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். எத்தனை முறை அவர்கள் பொறுத்துப் பொறுத்துப் போயுள்ளனர். ஒரு பெரும்பான்மைச் சமூகத்தின் பெயரால் எழுப்பப்படும் கருத்தியல் வன்முறையை கருத்தியலாலேயே எதிர்கொள்ளுங்கள் என ஒரு சிறுபான்மைச் சமூகத்திற்கு அறிவுரை சொல்பவர்களுக்கு நெஞ்சில் ஈரமுண்டு என நாம் நம்ப இயலுமா? வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மத வன்முறைத் தடுப்புச்சட்டம் முதலான சிறப்புச் சட்டங்கள் பெரும்பான்மையினரின் சில அடிப்படை உரிமைகளை மறுக்கின்றன என அவற்றை ஒழிக்க வேண்டும் எனச் சொல்ல முடியுமா?

சொல்லுவார்கள். ராமதாஸ்கள் சொல்லத்தானே செய்கிறார்கள்.

இன்று உருவாகியுள்ளது போன்ற ஒரு முரண் எழும்போது அதில் தலையிட வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு உருவாவதை எப்படி மறுக்க இயலும். அந்தத் தலையீடு என்பது தன்னிச்சையான நிரந்தரத் தடை என்பதாகவன்றி இன்னும் ஒரு விரிந்த சிந்தனையாளர்கள், நடுநிலையாளர்கள், வல்லுநர்கள் அடங்கிய குழுவின் ஆலோசனையைக் கேட்டல் என்பதுபோல சில திருத்தங்களை வேண்டுமானால் முன்மொழியலாம். எப்படியானபோதிலும் அரசுத் தலையீடு என்பதில் அதிகாரத்தின் நலனே முன்நிற்கும் என்பது உண்மைதான். ஜனநாயகம் என்பது என்றைக்குமே மக்களுக்கு முழுமையாகக் கையளிக்கப்பட்டுவிடுகிற ஒன்றல்ல. ஜனநாயகம் என்பது ஜனநாயகத்திற்கான போராட்டம்தானே.

ஏதோ சில பேச்சுவார்த்தைகள், விட்டுக்கொடுத்தல்கள் ஆகியவற்றின் விளைவாக சற்றுக் காலதாமதமாகியேனும் விஸ்வரூபம் திரைக்கு வரும் என்றுதான் நம்புகிறேன். ஆனால் இந்த எழுச்சி எதிர்காலத்தில் கமல்ஹாசன்களுக்கும் மணிரத்தினங்களுக்கும் ஒரு பாடமாக அமையும், அமையவேண்டும்.

நன்றி: இந்தியா டுடே.

சிதம்பரம் கோவில் – உச்சநீதிமன்ற தீர்ப்பும் ஊடக அவதானிப்பும்

சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் “கோவில்களை அரசின் கட்டுபாட்டில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்” என்ற தலைப்பில் ஹிந்து தலையங்க பகுதியில் வெளிவந்துள்ள சுப்ரமணியசாமியின் கட்டுரை முன்வைக்கும் இரண்டு முக்கிய பிரச்சனைகள்:

1. அரசு நிர்வாகத்தின் ஊழல் காரணமாக கோயில் சொத்துக்கள் , பொக்கிஷங்கள், அதிகாரிகள் அரசியல்வாதிகளால் கொள்ளையாடிக்கப்படுகின்றது. அதனால் அரசு நிர்வாகத்திடம் இருந்து கோவில்களை மீட்க வேண்டும்

2. இந்து கோவில்களை இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் கொண்டு வந்தது போல் தேவாலயங்களையும் மசூதிகளையும் ஏன் அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரவில்லை? அங்கெல்லாம் ஊழல் இல்லையா?

பார்க்க: Freeing temples from state control

இந்த பிரச்சனைக்கு தீர்வாக அரசு கட்டுபாட்டில் உள்ள அணைத்து கோவில்களையும் மீட்டெடுக்கப் போகிறேன் என்று சூளுரைத்துள்ளார் சுப்ரமணிய சாமி.

முதல் பிரச்சனையான தமிழக அரசின் ‘இந்து சமய அறநிலைய துறை’ நிர்வாக சீர்கேடு, ஊழல் குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில் கோவில் நிலங்களின் வாடகை வசூல் செய்வதில் உள்ள சிக்கல், சம்பள குளறுபடி என சில உதாரணங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

நமக்கு எழும் கேள்வி ரூ.304 கோடி வாடகை வசூலிக்கவேண்டிய அரசு நிர்வாகம் லஞ்ச சீர்கேட்டில் சிக்கி வெறும் ரூ. 36 கோடிதான் வசூலிக்கிறது என சுட்டிக்காட்டும் சு.சாமி, சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் நிர்வாகத்தில் இருந்தபோது கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.37,000 என தாக்கல் செய்த நிலையில் அது அரசு நிர்வாகத்திற்கு சென்ற பிறகு ஒரு கோடியைத் தாண்டியது என்பதை ஏன் மறைக்க வேண்டும்?

சு. சாமியின் உண்மையான அக்கறை அரசு நிர்வாக சீர்கேட்டால் வருவாய் இழப்பு, நன்கொடையில் வரும் வருமானம் மடைமாற்றப்படுகிறது, கோயில் சொத்துக்கள் கொள்ளையடிக்கபடுகிறது, என்பதாக இருந்தால் அதை சீர்செய்ய இந்து சமய அறநிலைய துறைக்கு எதிராக வழக்குத் தொடுதிருக்கலாமே. ஏன் அதைச் செய்யவில்லை?

கட்டுரையில் ஓர் இடத்தில்கூட கோவில் தீட்சிதர்களின் நிர்வாகத்தில் இருந்தபோது தீட்சிதர் அல்லாதவர் / தமிழில் தேவாரம் பாட அனுமதி மறுக்கப்படுவதைக் குறித்தோ, அணைத்து தரப்பு பக்தர்களுக்கும் ஆலயத்தில் சமஉரிமை மறுக்கபடுவது குறித்தோ இதை தீட்சிதர் நிர்வாகம் எப்படி சரிசெய்யும் என்று எந்த பதிவும் இல்லை.

சிதம்பரம் கோயிலை மீட்க 2009ல் சு.சாமி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனு அரசியல் சாசன பிரிவு 26 மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் பகுதி 107 தீக்சிதர்களின் வாரிசுகளுக்கு கோவில் நிர்வாக உரிமையில் தலையிட அரசுக்கு உரிமை இல்லை என்கிற சட்ட அடிப்படையில் தீட்சிதர்களுக்கு சாதகமாக இந்த தீர்ப்பு வந்துள்ளது.

ஆட்சியைப் பொருத்து காட்சி மாறும் என்பதற்கு உதாரணமாக அணைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற 2006ல் திமுக அரசின் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் மெத்தனப் போக்கு காரணமாகவே தீட்சிதர்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளது. இதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் உச்சநீதிமன்றத்தினுடைய இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசின் கட்டுபாட்டில் உள்ள ஏனைய கோவில்களை மீட்பேன் என சு.சாமி சூளுரை இடுகிறார்.

திராவிட இயக்கம் தோன்றிய காலத்தில் அதன் தலைவர்கள் நடராஜர் கோவில் பீரங்கியால் தகர்க்கப்படும் என்று அறிவித்ததாகவும், ஆனால் அது கடந்த 20 ஆண்டுகளில் இளைஞர்கள் மத்தியில் இந்து மதத்தின் மீது எழுந்துள்ள செல்வாக்கின் மூலம் தடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்டுரையில் ஒரு பத்தி வருகிறது.

“இந்தியா ஒளிர்கிறது, குஜராத் மிளிர்கிறது, இளைஞர்கள் மத்தியில் மோடி அலைவிசுகிறது” என இது போன்ற எண்ணிக்கை அடிப்படையில் அளவிடப்படாத வாசகங்களை சு.சாமி மேடையில் பேசலாம். ஆனால் ஹிந்து பத்திரிக்கை தன் தலையங்கப் பகுதியில் இதுபோன்ற பரப்புரைகளை அனுமதிக்கலாமா?

கோவில் பொக்கிஷங்களான கல்வெட்டுகள், சிலைகளுக்கு வர்ணம் பூசுவது போன்ற சீரமைப்பு பணிகளில் போதிய அனுபவம் வாய்ந்தவர்கள் ஈடுபடுத்தபடுவதில்லை என்ற குற்றச்சாட்டில் உள்ள உண்மையை நாம் ஏற்கிறோம்.

இரண்டாவதாக ஒரு சமத்துவ அரசு தேவாலயங்களையும் பள்ளிவாசல்களையும் விட்டுவிட்டு ஏன் இந்துக் கோவில்களை மட்டும் நிர்வகிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார். இது, முஸ்லிம் மாணவர்களுக்கு உதவித்தொகை கொடுப்பதுபோல் மேல் சாதி இந்து மாணவர்களுக்கும் கொடு என்பது போன்ற தட்டையான வாதம்.

சு. சாமி முன்வைக்கும் ஊழல் குற்றசாட்டின் யதார்த்த நிலைமை என்ன? நடைமுறையில் நிலங்களை குத்தகை எடுத்த உரிமையாளர்கள் அதை உள்குத்தகைக்கு விடுகிறார்கள். கோவில் நில பத்திரங்களோ, சான்று ஆவணமோ அசல் பயனாளர்கள் பெயரில் இல்லாத சூழ்நிலையில் நிலத்தை மேம்படுத்த வங்கி கடன் அவர்களுக்கு கிடைப்பதில்லை. அதே போல், சிறுபான்மையினர் மத நிறுவனங்களை அரசின் கட்டுபாட்டில் உள்ள வக்ஃப் வாரியம் நிர்வகித்து வருகிறது.

சிறுபான்மையினரின் மதச் சுதந்திரத்தில் அரசு நிர்வாகம் தலையிடாதவாறு அரசியல் சாசனம் உறுதி செய்திருப்பது சு.சாமிக்குத் தெரியாததா என்ன? இருந்தும் முறைகேடாகச் செயல்படும் சிறுபான்மை மத நிறுவனங்களை நீதிமன்றம் முன் கொண்டு வருவதன் மூலம் சமதர்மவாதிகளின் முகத்திரை கிழியும் என்று கட்டுரை முடிகிறது. நிர்வாக சீர்கேடு என்னும் துருப்புச் சீட்டைப் பயன்படுத்தி எல்லா இந்து கோயில் உரிமையையும் குறிப்பிட்ட ஆதிக்க சாதியின் கீழ் கொண்டு வருவேன் என்ற உள்நோக்க விஷமக் கருத்தை வெளியிட்டு இருப்பதன் மூலம் தி ஹிந்து புதிய editorialன் முகத்திரை கிழிகிறது.

சில வருடம் முன்பு இந்து நாளிதழை நிர்வகிப்பதில் ராம் – ரவி இடையே குடும்பச் சண்டை உச்சகட்டத்துக்குப் போக அதை சாமாளிக்க சித்தார்த் வரதராஜன் அவர்களுக்குத் தேவைப்பட்டார். செய்திகளை முந்தி தருவதில் தொலைக்காட்சி ஊடகங்களின் கடும் போட்டியைச் சமாளிக்க வாசகர்களை ஈர்க்கும் வண்ணம் நாளிதழ் வடிவமைப்பு மாற்றம், opinion, feature, உள்ளூர்ச் செய்திகள், தேர்தலுக்கு விளம்பரப்படுத்தும் வகையில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்களைத் தவிர்ப்பது, கட்டுரையாளர் தேர்வில் பன்முகத்தன்மை என பல்வேறு மாற்றங்களை சித்தார்த் வரதராஜன் செய்தார்.

குடும்பச் சண்டை தீர்ந்த பிறகு சித்தார்த் வரதராஜனை வெளியேற்ற ராம் – ரவி சகோதரர்களுக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது. தி ஹிந்துவின் editorial கொள்கைக்கு விரோதமாகச் செயல்பட்டார், நரேந்திர மோடியின் புகைப்படத்தை முதல் பக்கச் செய்திகளில் வெளியிட சித்தார்த் மறுக்கிறார் என்ற குற்றச்சாட்டை கூறி பதவி விலக வைத்துவிட்டு எடிட்டரும் நாமே பதிப்பாளர், உரிமையாளரும் நாமே என அக்டோபர் 2013ல் மாற்றம் கொண்டு வந்தனர்.

கடந்த 3 மாதங்களில் தி ஹிந்துவில் வெளியான செய்திகளைக் கவனிக்கும்போது மோடி, பாஜக, தெஹல்கா தேஜ்பால் தொடர்பான செய்திகளில் முதல் பக்க முக்கியத்துவம் பெறுவதைப் பார்க்க முடிகிறது. சங்கராச்சாரியார் விடுதலை ஆன மறுநாள் ஹிந்து முழுபக்க அளவில் கேள்வி பதில் விளம்பரப் பேட்டியை வெளியிட்டது. சங்கரமட விளம்பரத்தின் தலைப்பு, “Dharma has prevailed; Truth has won”. தலையங்கத்தின் தலைப்பு “A complete vindication”.

சங்கரராமன் கொலை வழக்கில் குற்றவாளி யார் என்று கண்டறியப்படாத நிலையில் “தர்மம் ஓங்கியது; உண்மை வென்றது”. “நேர்மை முழுமையாக நிலைநாட்டப்பட்டது” என்று தலையங்கம் வெளியிடலாமா? ஒரு கேள்விகூட பிறழ் சாட்சி பற்றியோ, நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான CD பற்றியோ இல்லாமல் மக்களை persuade செய்யும் வகையில் இருந்த அந்தப் பேட்டியை வெளிடுவதுதான் புதிய editorial கொள்கையா என்று ராம் – ரவி தான் விளக்க வேண்டும்.

தீர்ப்பு வெளியான தினம் பெரியவர் மௌன விரதம் என பத்திரிக்கையாளர்களின் சங்கடமானக் கேள்விகளைத் தவிர்க்க இந்தப் பேட்டி எப்போது எடுக்கப்பட்டது என்பது மர்மமாக உள்ளது. ஒரு வேலை தீர்ப்பு தங்களுக்குத்தான் சாதகமாக வரும் என முன்னரே தயார் செய்த பேட்டியா என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

சித்தார்த் தலைமை நிர்வாகியாக இருந்த காலத்தில் சு.சாமி தனக்கு coverage கொடுக்க மறுக்கிறார் என்ற காரணத்திற்காக அவர் இந்தியக் குடியுரிமை அல்லாத வெளிநாட்டவர் எடிட்டராக இருக்க முடியாது என்ற பொதுநல வழக்குத் தொடர்ந்ததையும், எடிட்டராகச் செயல்பட இந்தியாவில் வசித்தால் போதும் குடிமகனாக இருக்க அவசியம் இல்லை என அந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டத்தையும் சித்தார்த் தி ஹிந்துவில் இருந்து விலகிய பிறகு தேஹல்காவுக்கு அளித்த பேட்டியில் சுட்டிக்காட்டுவது இங்கு நினைவு கூரத்தக்கது.

பார்க்க: Yes, There Is Bitterness. ‘The Hindu’ Was On The Cusp Of Something Great: Varadarajan

தீக்கதிர்

தீக்கதிர் நாளேடு “சிதம்பரம் கோவிலுக்குள் நீதியும் நுழைய முடியாதா?” என்ற தலைப்பில் வெளியிட்ட தலையங்கம் அந்த வழக்கை அ.தி.மு.க. அரசு எவ்வாறு நடத்தியது என்பது பற்றியோ, அரசு வழக்கறிஞர் எவ்வாறு செயல்பட்டார் என்பது பற்றியோ, அந்தத் தலையங்கத்தில் குற்றமாகக் கூறாமல், வழக்கை நடத்துவதில் தமிழக அரசு உரிய அக்கறை காட்டவில்லை என்று பொத்தாம் பொதுவாக குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதன் மூலம் நீதியையும், சமூக நீதியையும் நிலைநாட்ட முன் வரவேண்டும் என்று தலையங்கத்தை முடித்திருக்கிறது.

சன் நியூஸ்

அடுத்து தொலைக்காட்சி ஊடகங்களில் இந்த பிரச்னை எப்படி கையாளப்பட்டது என்று சுருக்கமாக பார்ப்போம். தீர்ப்பு வெளியான அன்று சன் நியூஸ் ‘விவாத மேடை’ நிகழ்ச்சியில் தீட்சிதர் தரப்பில் பேசிய பாஜக பிரமுகர் நடராஜர் கோவில் சொத்தின் முழு உரிமை தீட்சிதர்களுடையது, அது உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

எதிர் தரப்பில் பேசிய திருமாவளவன், கோவிலில் பூஜை செய்யும் உரிமை தீட்சிதர்களின் வாரிசுகளுக்கு இருப்பதை வேண்டுமானால் ஏற்கலாம், கோவிலின் வழிப்பாட்டு உரிமையில் நாங்கள் தலையிடவில்லை. ஆனால் கோவில் சொத்துக்களை நிர்வகிக்க தீட்சிதர்கள் உரிமை கோர முடியாது. அது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்று வாதிட்டார்.

திருமாவளவனின் கருத்து மத வழிப்பாட்டு உரிமையில் அரசு தலையிடக் கூடாது என்ற இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 26 மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் பகுதி 107 உறுதிசெய்யும் வகையில் உள்ளது. அதே நேரத்தில் அனைவருக்குமான சமத்துவ உரிமையையும், கோவில் வரவு செலவுகளைக் கண்காணிக்க உறுதி செய்யும் முக்கியக் கருத்தை பதிவு செய்தார்.

புதியதலைமுறை

‘சென்ற மாதம் புதியதலைமுறை தொலைக்கட்சி ‘நேர்படப் பேசு’ விவாத நிகழ்ச்சியில் கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக பங்கேற்றவர்கள் வருமாறு.

செந்தில்நாதன் – தமிழக அரசு வழக்கறிஞர்
சத்திவேல்முருகன் – ஆகம அறிஞர்
ராமசுப்ரமணியன் – சமூக ஆர்வலர்
ராமமூர்த்தி – பாஜக வழக்கறிஞர்

நேரடி விவாத நிகழ்ச்சிகள் மக்களை ஈர்க்க முக்கியக் காரணம் இருதரப்பினருக்குமான கருத்து மக்களைச் சென்றடைகிறது, கருத்தில் உள்ள உண்மையைப் பங்கேற்பாளரின் உடல்மொழி காட்டிகொடுத்து விடுகிறது. அதே நேரத்தில் விருந்தினர்கள் வாதிடும் கருத்துக்களின் நம்பகத்தன்மையை உறுதிசெய்வதில் சிக்கல்கள் உள்ளது.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்போது வாதாடிய செந்தில்நாதன், தீட்சிதர்களின் தொடர் முறைகேடு காரணமாகவே 1987ல் எம்.ஜி.ஆர். சிதம்பரம் கோவிலுக்கு அரசு சார்பில் நிர்வாக அதிகாரியை நியமித்தார் என வாதிட்டார். மேலும் ஆகம அறிஞர் சத்திவேல்முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய தங்க ஆபரங்களை தீட்சிதர்கள் உருக்கி முறைகேடு செய்த குற்றச்சாட்டுக்கு சமூக ஆர்வலர் ராமசுப்ரமணியத்திடம் முறையான பதில் இல்லை.

அந்த வகையில் பாஜக ராமமூர்த்தி HRCE ஊழலுக்கு மாற்றாக தீட்சிதர்கள் நிர்வகிக்கும் கோவில் சொத்துக்களை யார் தணிக்கை செய்வது என்ற கேள்விக்கும் பதில் இல்லை. சமூக ஆர்வலர் என அடையாளப்படுத்தபடும் ராமசுப்ரமணியன், கோவில் தீட்சிதர் கையில் போவதால் ஏற்படும் சமஉரிமை மறுப்பு, பற்றி கருத்து முன்வைக்காமல் எந்த ஊடக நெறியும் இல்லாமல் ஆகம அறிஞர் சத்திவேல்முருகனை பேசவிடாமல் தொடர்ந்து இடைமறித்து அவரும் பாஜக பிரமுகரைப் போல பேசி இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

ஒரு மணிநேர விவாத நிகழ்ச்சியில், ராமசுப்ரமணியன் முதல் 20 நிமிடங்கள் ஊழல், நிர்வாக குளறுபடி பற்றி விவாதிக்காமல் நிரூபிக்க முடியாத புராண கட்டுக்கதைகளை முன்வைத்து கோவில் தீட்சிதர்களுக்கே சொந்தம் என வாதிட்டார். பாஜக வழக்கறிஞர் ராமமூர்த்தியும் சு.சாமியைப் போலவே HRCE ஊழல் ஆயுதத்தை கையில் எடுத்து பேசினார். ஊழலை முன்னிறுத்தி ஆம் ஆத்மி மக்கள் செல்வாக்கை பெற்றது போல ஊடகங்களில் ஊழலை முன்னிறுத்தி மற்ற சமூக நீதி உரிமைகளை புறம்தள்ளிவிடலாம் என்று பாஜக கணக்குப் போடுகிறது போலும்.

விஸ்வரூபம், கருத்துச் சுதந்திரம், தனிமைப்படுத்தப்படும் முஸ்லிம்கள்

“முஸ்லிம்களை யார் தனிமைப்படுத்துகிறார்கள், அவர்களாகத்தான் தனிமைப்பட்டுக் கொள்கிறார்கள்” என ஏகப்பட்ட பேர் பின்னூட்டமிடத் தயாராக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேதான் இதை எழுதத் துணிகிறேன்..

தொடங்கு முன் நினைவுக்கு வரும் சில சம்பவங்கள்:

  1. தோழர் ரெனி அய்லின் கேரளத்தில் நன்கு அறியப்பட்ட ஒரு மனித உரிமைச் செயலாளி. பிறப்பால் கிறிஸ்தவர். சென்ற ஆண்டு திருச்சியில் ஒரு கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டோம். எப்போது வந்தீர்கள் என்றேன்? “இரவு 12 மணிக்கு திருச்சி சந்திப்பில் இறங்கினேன். ஒரு லாட்ஜிலும் ரூம் தர மறுத்து விட்டார்கள். அடையாள அட்டையைக் காட்டியும் பயனில்லை. அவர்கள் என்னை முஸ்லிம் எனச் சந்தேகப்பட்டார்கள்” என்று பதிலுரைத்தார். ரெனி ஒல்லியாய் உயரமாய் முகத்தில் தாடியுடன் நீண்ட குர்தா வேறு அணிந்திருப்பார். கேட்க வேண்டுமா?
  2. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது. இப்போது அந்த முஸ்லிம் நண்பர் ஒரு தொலைக்காட்சியில் முக்கிய செய்தியாளராக உள்ளார். எனவே பெயரைக் குறிப்பிடவில்லை. அப்போது அவர் ஒரு இளம் பத்திரிக்கையாளர். ஏதோ ஒரு வேலையாக இருவரும் என் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். இரவு கவியக் கவிய அவர் அவசரப்பட்டார். வேலை முடியவில்லை. முடித்த பின் போகலாமே என்றேன். “இல்லை சார், நேரமாகிவிட்டது. வினாயகர் ஊர்வலம் அது இதுன்னு நான் ரூமுக்குப் போற வழியில்…… நான் தாடி வேற வச்சிருக்கேனா….. நாளைக்கு சீக்கிரம் ஆஃபீஸ் முடிஞ்சவுடன் வந்துடறேன்” எனச் சொல்லி நகர்ந்தார். அப்போது அவர் ராயப்பேட்டைக்கு அருகில் தங்கியிருந்தார்.

நான் மிகைப்படுத்திச் சொல்கிறேன் எனப் பல நண்பர்கள் நினைக்கக் கூடும். ஆனால் இவை இரண்டு மட்டுமல்ல இதைப்போல ஏகப்பட்ட நிகழ்வுகள், அனுபவங்கள் என்னிடம் உண்டு. உங்களுக்கெல்லாம் தெரிந்த ஒன்றை நினைவூட்டுகிறேன். அவர் இந்திய இளைஞர்கள் பலரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர். இந்த நாட்டின் மிக உயரிய பதவியில் இருந்தவர். அவர் பெயர் ஒன்று போதுமானதாக இருந்தது, அவரை நிர்வாணமாக்கிச் சோதனை இடுவதற்கு. இல்லையா?

“என்னை முஸ்லிம் எனச் சந்தேகப்பட்டார்கள்…..”

இது என்ன கொடுமை? என்ன வேதனை? ஒரு தலித் அனுபவிக்கும் இழிவையும், ஒரு முஸ்லிம் அனுபவிக்கும் இந்த வெறுப்பையும் ஒரு தலித்தாகவும், முஸ்லிமாகவும் இருந்துதான் புரிந்து கொள்ள இயலும். ஒரு முஸ்லிமாக இருந்து சென்னை, மும்பை போன்ற நகரங்களில் வீடு தேடிச் சலித்த அனுபவங்கள் நம்மில் எத்தனை பேருக்கு உண்டு? ரயிலில் பிரயாணம் செய்யும்போது ஒரு முஸ்லிம் தாடி, தொப்பி சகிதம் கையில் ஒரு சூட் கேசுடன் பக்கத்தில் ஏறி அமர்ந்தால் நம்மில் எத்தனை பேர் துணுக்குறுகிறோம்? டிசம்பர் 6ஐ ஒட்டிப் பல முஸ்லிம்கள் ரயில், விமானப் பயணம் செய்வதில்லை தெரியுமா? அக்டோபர் மாதம் வந்தால் போதும் முத்துப்பேட்டை போன்ற ஊர்களில் வசிக்கும் முஸ்லிம்கள் அந்த மாதம் நல்லபடியாய்க் கழிய வேண்டுமே என ஏங்கிக் கிடப்பதை நான் அறிவேன்.

இப்படியான ஒரு சூழல் உருவாகியுள்ளதில் இங்கு மேலெழுந்துள்ள இந்துத்துவ வலதுசாரி பாசிசத்திற்கு பெரும் பங்குண்டு என்பதில் ஐயமில்லை. ஆனால் இத்தகைய கருத்துகள் அந்த அமைப்புகளைத் தாண்டி சாதாரண மக்கள் மனத்தின் அடியாழத்திலும் போய்ப் படிந்துள்ளதில் அந்த விஷமப் பிரச்சாரங்களைக் காட்டிலும் நமது அச்சு, காட்சி மற்றும் திடைப்பட ஊடகங்களுக்கு அதிகப் பங்குண்டு.

நாடகம், திரைப்படம் ஆகியவற்றுக்கு ஒரு கலைப் படைப்பு என்பதற்கு அப்பால் அவற்றிற்கு ஒரு பிரச்சார மதிப்பும் உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவை மிகப் பெரிய அரசியல் மாற்றங்களுக்குக் காரணமான வரலாறுகளும் உண்டு.

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் நான் மிகவும் மதிக்கும் தெஹெல்கா இதழின் நிர்வாக ஆசிரியை ஷோமா சவுத்ரி, கருத்துச் சுதந்திரத்திற்கு “நியாயமான கெடுபிடிகளை” (reasonable restrictions) விதிக்கும் நமது அரசியல் சட்டத்தின் 19(2) பிரிவில் மாற்றங்கள் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். அரசியல் சட்டம் புனிதமான ஒன்றல்ல. மாற்றங்கள் தேவைப்படும்போது செய்துகொள்ளப் படவேண்டும்தான். “நியாயமான கெடுபிடிகள்” என்ற பெயரில் கெடுபிடிகளை மேற்கொள்ளும் அதிகாரத்தை நாம் அரசின் கைகளில் கொடுத்துவிட இயலாதுதான். அரசின் கைகளில் இருக்கும் கெடுபிடி அதிகாரம் என்றைக்கும் மக்களுக்கு ஆபத்தானதுதான். அந்த வகையில் எனக்கு ஷோமாவின் கருத்தைக் கண்மூடி ஆதரிக்கத்தான் விருப்பம். “அதுவும் கலைப்படைப்புகளுக்கு எவ்விதக் கருத்துச் சுதந்திரத் தடையும் இருக்கக் கூடாது” என ஷோமா அடுத்து இதை வெளிப்படையாகச் சொல்லியுள்ளார். விஸ்வரூபத் திரைப்படப் பிரச்னையில் கருத்துச் சுதந்திரத்தையும் கமலஹாசனையும் தீவிரமாக ஆதரிப்பவர்கள் பலரும், “கலைப் படைப்புகளுக்குத் தணிக்கை கூடாது; கருத்துச் சுதந்திரத் தடை கூடாது” எனக் கூறுகிற கருத்துடன் இது ஒத்துப் போகிறது.

ஆனால் நமது தீவிரக் கருத்துச் சுதந்திர ஆதரவு நண்பர்கள் அத்தோடு நிறுத்திக் கொள்கின்றனர். ஷோமா இந்தியத் துணைக் கண்டத்து மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் பலவற்றையும் கூர்ந்து கவனித்து வரும் ஒரு இதழாளரும் கூட. அவரால் அத்தோடு நிறுத்திக் கொண்டு போய்விட இயலவில்லை. “ஆனால் மேடைப் பேச்சு போன்ற பொதுச் சொல்லாடல்களில் முழுமையான கருத்துச் சுதந்திரம் என்பதற்கு இடமில்லை” என்றார். தொகாடியா, உமாபாரதி வகையறாக்களின் மேடைப் பேச்சுக்களின் உடனடி விளைவுகளை ஒரு இதழாசிரியரால் எப்படி மறக்க இயலும்?

பார்வையாளருள் ஒருவராக இருந்த திரைப் பாடலாசிரியரும் கவிஞருமான ஜாவேத் அக்தார், “கருத்துச் சுதந்திரத்திற்கான எல்லையை எவ்வாறு வரையறுப்பது? பொதுப் பேச்சுக்களில் கருத்துச் சுதந்திரத்திற்கு எல்லை விதிக்கலாம் என்றால் பின், முழுமையான கருத்துச் சுதந்திரத்திற்கு இடமில்லை என்கிற இடத்திற்குத்தானே திரும்பி வருகிறோம்?” என்று கேட்டபோது ஷோமா இப்படிப் பதிலளித்தார், “தகவல் அடிப்படையில் பொய்யாக இருக்கிற, வன்முறைகளைத் தூண்டுகிற கருத்து வெளிப்பாட்டு முறைகளை நாம் எளிதில் அடையாளம் காண இயலும்”.

அதாவது மேடைப் பேச்சு முதலியவற்றில் பொதிந்துள்ள இத்தகைய வன்முறைகள் உடனடி விளைவை ஏற்படுத்திவிடும் என ஷோமா கருதுவது புரிகிறது. அவர் அடுத்துச் சொல்லியுள்ள எடுத்துக்காட்டு அதை உறுதிப்படுத்துகிறது. சமீபத்தில் இணையத்தளம் மற்றும் பிற தொடர்பூடகச் சாதனங்களின் மூலம் பரப்பப்பட்ட தவறான தகவல்களின் விளைவாக அசாமிலிருந்தும் பிற வட மாநிலங்களிலிருந்தும் வந்து பிற மாநிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தோர் ஓட நேர்ந்ததை அவர் எடுத்துக் காட்டினார்.

ஆக இதுபோன்ற ‘உடனடி’ வன்முறைகளைத் தூண்டக் கூடிய வெளிப்பாடுகள் அவை எந்த ஊடகமாக இருந்தபோதிலும், அவை கலைப் படைப்பு என்கிற போர்வைக்குள்ளிருந்து வெளிப்பட்டபோதிலும் அவற்றிற்கு முழுச் சுதந்திரத்தை அளித்துவிட இயலாது என்பதுதான் அவரது கருத்து என்றே நாம் புரிந்து கொள்கிறோம். கலைப்படைப்புகள் இப்படி உடனடி வன்முறைக்கு வித்திடாது என அவர் நம்புகிறார்.

சரி அப்படி ‘உடனடி’ வன்முறைகளுக்கு வித்திடாமல், தொலை நோக்கில் நிரந்தரமான ஒரு வெறுப்பையும் சந்தேகத்தையும் பிறர் மீது உருவாக்கும் வெளிப்பாடுகளை முழுமையான கருத்துச் சுதந்திரம் என விட்டுவிட இயலுமா? நான் தொடக்கத்தில் குறிப்பிட்ட அனுபவங்கள் எல்லாம் இப்படியான வெறுப்பூட்டல்களின் விளைவுதானே?

ஷோமா அத்தோடு நிறுத்தவில்லை. முத்தாய்ப்பாக இப்படிச் சொல்லியுள்ளார்: “பிறரைக் காயப்படுத்தும் உரிமையைச் சமூகம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. பொதுமக்கள் கருத்து அல்லது அரசியல் கறார்த் தன்மை என்கிற பெயரில் இந்த உரிமையை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது”.

“பிறரைக் காயப்படுத்தும் உரிமை..”- ஆகா, ஷோமா நம் சிந்தனைக்கு மிகப் பெரிய ஒரு கருப்பொருள் ஒன்றைக் கையளித்துச் சென்றுவிட்டார். நம் சிந்தனைத் திறனை முழுமையாகக் கசக்கிப் பிழிந்து யோசிக்க வேண்டியதுதான்.

“காயப்படுத்தும் உரிமை” (right to offend others) என்பதன் மூலம் அவர் கருத்து ரீதியான காயப்படுத்தலைத்தான் சொல்கிறார். ஆனால் “பிறர்” என்பதன் மூலம் நாம் என்ன பொருள் கொள்வது. “பிறரது” எல்லாக் கருத்துக்கள் மீதும் நமக்கு விமர்சிப்பதற்கு உரிமை உண்டு என்கிற அளவில் மட்டுமே நாம் இதை ஏற்றுக்கொள்ள இயலும். எந்த ஒரு ஜனநாயக அமைப்பிலும் பெரும்பான்மையையும் சிறுபான்மையையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்பதையும், சிறுபான்மைக்குச் சில சிறப்புப் பாதுகாப்புகள் அளிக்கப்படவேண்டும் என்பதையும் நாம் மறந்துவிட இயலாது.

ஆக, ஷோமா இறுக்கமாகவும் தெளிவாகவும் கருத்துச் சுதந்திரம் பற்றிய தனது கருத்தைக் கூறியிருப்பதுபோல மேலோட்டமாகத் தோன்றினாலும், ஒரு பத்திரிக்கையாளர் என்கிற வகையில் இன்றைய எதார்த்ததின் நியாயங்களிலிருந்து அவரால் தப்ப இயலவில்லை என்பதுதான் உண்மை. பாசிசம் தலையெடுக்கும் சூழலில் முழுமையான கருத்துச் சுதந்திரம் என்பது எந்த அளவிற்குப் ‘புரட்சிகரமான’ கருத்தாக இருக்கும் என எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. இந்த விஷயத்தில் புரியவில்லை எனச் சொல்வதில் எனக்கு வெட்கமுமில்லை.

கருத்துச் சுதந்திரம் குறித்த இந்த விவாதம் புதிதான ஒன்றில்லை. நீண்ட வரலாறுடைய விவாதங்களில் ஒன்று இது. இந்த விவாதத்தில் இப்படி அல்லது அப்படி என இதுவரை முடிவு வந்ததுமில்லை.

இன்று முழுமையான கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசுகிற நண்பர்கள் பலரும் இப்படியான பிரச்னைகள் வரும்போது எப்படி எதிர்கொண்டார்கள் என்பதையும் யோசித்துப் பார்க்கிறேன். இன்று விஸ்வரூபம் பிரச்னையில் முழுக் கருத்துச் சுதந்திரம் குறித்து முழங்கியுள்ள ஒருவர் ஆறேழு ஆண்டுகளுக்கு முன் அவரது மாத இதழில் நான் எழுதி வந்தபோது ஒரு கட்டுரையில் சுஜாதா குறித்து எழுதிய சில வரிகளை என்னைக் கேட்காமலேயே வெட்டியவர். செய்தியறிந்த நான் அக்கட்டுரையைத் தணிக்கை செய்து வெளியிடுவதை மறுத்துத் திரும்பப் பெற்றதோடு அதில் எழுதுவதையும் நிறுத்திக் கொண்டேன். முழு வணிகரான அவர் இன்று முழுக் கருத்துச் சுதந்திரம் குறித்துக் கதையாடும்போது சிரிக்காமல் என்ன செய்வது?

ஒரு நண்பர் ஒரு கதை அல்லது ஒரு கவிதை எழுதுகிறார். அது அவரது கருத்துச் சுதந்திரம். அது என்னைப் பாதிக்கிறது என நான் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது எனது கருத்துச் சுதந்திரம். இதை நாம் ஏற்க வேண்டும். ஆனால் இன்று கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் முன்வைக்கப்படும் கருத்துகள் யாவும் அரசின் தடையை எதிர்ப்பதாக இருப்பதைக் காட்டிலும் முஸ்லிம்களின் எதிர்ப்பை விமர்சிப்பதாகவே இருப்பதைக் கவனிக்க வேண்டும். அந்த வகையில் முஸ்லிம்கள் இன்று தனிமைப் படுத்தப்பட்டுள்ள நிலை மிகவும் கவலை அளிக்கிறது.

இறுதியாக:

சரி, இப்படியான சூழலில் அரசுக்குத் தலையிடும் உரிமை உள்ளதா இல்லையா? இல்லை எனச் சொல்லி நான் என்னை எளிதாகப் புரட்சியாளனாகக் காட்டிக்கொள்ள முடியவில்லை. இன்றைய சூழலில் அரசுக்கு ஒரு பொறுப்பு உண்டு என்றுதான் நினைக்கிறேன். ஆனால், அரசு இப்படியான பிரச்னைகளில் முற்று முழுதான அதிகாரமாக அதைக் கைக் கொள்ளாமல் இன்னும் விசாலமான சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் அடங்கிய குழுவிடம் கையளிக்க வேண்டும். அந்தக் குழு மட்டும் சரியாகச் செயல்பட்டுவிடுமா? அரசால் அமைக்கப்படும் அந்தக் குழுவே அரசின் கைப்பாவையாகத் தானே இருக்க முடியும்? என்கிற கேள்விகள் இயல்புதான். அப்படியாகும் வாய்ப்பு நிச்சயம் உண்டு. அதையும் எதிர்த்துப் போராடித்தான் ஆகவேண்டும். போராட்டங்களுக்கு முடிவு ஏது? தெரிதா சொன்னதுபோல ஜனநாயகம் என்பது என்றைக்கும் வந்து முடிந்துவிடுகிற விஷயமல்ல. ஜனநாயகம் என்பது ஜனநாயகத்திற்கான போராட்டம் மட்டுமே. ஒரு தேவதூதனின் வருகைக்காகக் காத்திருப்பதுபோல நாம் ஜனநாயகத்திற்காகவும் காத்திருந்துதான் ஆகவேண்டும். அந்தக் காத்திருப்பின் வடிவம் கையாலாகாத்தனமல்ல. போராட்டம்தான்.

அடுத்த கேள்வி, இப்படியான எதிர்ப்பை இனி இந்துத்துவ சக்திகளும் கலைப் படைப்புகளுக்கு எதிராக மேற்கொள்வார்கள் தானே? “இனி” என்ன, இப்போதும் நடந்து கொண்டுதானே உள்ளது. நேரடியாக எதிர்த்து முடக்குவது என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் இந்துத்துவ எதிர்ப்பைக் கருத்திற்கொண்டு எல்லோரும் சுய தணிக்கையுடன்தானே தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

பெர்னாட்ஷா (பெர்னாட்ஷா தானே?) ஒருமுறை சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. “நீ உன் கைத்தடியைத் தெருவில் நின்றுகொண்டு சுழற்றுவதற்கு உனக்கு எல்லா உரிமையும் உண்டு. ஆனால் அந்த உரிமை என் மூக்கு நுனி வரைதான் என்பதை நினைவிற் கொள்”.

ஷிண்டேவின் கருத்தும் ஊடகங்களின் இந்துத்துவச் சார்பும்

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தனை அமர்வு’ சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அமர்வில் இன்னொரு விவாதத்திற்குரிய அம்சமாக உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேச்சு அமைந்தது.

பாரதிய ஜனதா கட்சியும் அதன் தாய் நிறுவனமாகிய ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்க (ஆர்.எஸ்.எஸ்) அமைப்பும் அவற்றின் பயிற்சி முகாம்களில் ஹிந்து தீவிரவாதிகளை உருவாக்கி வருகின்றன என்றும் காவி தீவிரவாதத்தைப் பரப்புகின்றன என்றும் அவர் கூறினார். மேலும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு, மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு ஆகியவற்றில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள் என்றும் இந்தக் குற்றங்களுக்காக சிறுபான்மையினர் மீது அவர்கள் பழிபோடுகிறார்கள் என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் கடும் எதிர்ப்பிற்குக் காரணமாகிய இந்தக் குற்றச்சாட்டு ஊடகங்களின் பரவலான கவனத்தைப் பெற்றது. ஷிண்டே நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் ; சோனியா, மன்மோகன்சிங் ஆகியோர் வருத்தம் தெரிவிப்பதோடு ஷிண்டேவை பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்றெல்லாம் இந்துத்துவ அமைப்புகள் முன்வைத்த நிபந்தனைகள் முக்கியச் செய்திகளாக நாளிதழ்களில் இடம்பெற்றன.

நாட்டின் உள்துறை அமைச்சர், தனக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சில கருத்துக்களை முன்வைப்பதற்குத் தடையில்லை என்றபோதும், தனக்கே உரித்தான பொறுப்போடும் நிதானத்தோடும் உண்மைகளை அவர் வெளிப்படுத்த வேண்டியது அவசியம். மேற்கூறிய குண்டு வெடிப்பு வழக்குகளில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் தொடர்புடையவர்களாக இருப்பதும் இந்தச் சதிச்செயல்கள் அவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருப்பதும் வெளிப்படையாக அறியப்பட்ட உண்மைகள் தான். ஆனால், இவற்றின் அடிப்படையில் அந்த இயக்கங்களின் மீது எந்த நடவடிக்கையும் தற்போது தொடங்கியிராத நிலையில், ‘காவி தீவிரவாதம்’ பரவுவதாக மேடையில் மட்டும் எச்சரித்தது விமர்சனத்திற்குரியது என்பதில் ஐயமில்லை. எனினும், இந்த அம்சத்தை மட்டும் பூதாகரப்படுத்தி அமைச்சரின் எச்சரிக்கையை முற்றிலுமாய் புறந்தள்ளிவிட முடியாது என்பதற்கு வரலாறு சாட்சி. பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பலமுறை விசாரணைக்கு உள்ளானதும் தடைசெய்யப்பட்டதும் நினைவிற்குரியது.ஆனால் ‘நடுநிலை’ என்ற போர்வையில் இயங்கும் நமது செய்தி ஊடகங்களில் சில தமக்கான பொறுப்புணர்வுகளையும் சமூக அக்கறைகளையும் குறித்து சற்றேனும் கவலைப்படாமல், தமது ‘இந்துத்துவ’ அரசியல் பற்றை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டுள்ளன.

சனவரி 22 ஆம் தேதி தினமணியிலும் இந்தியன் எக்ஸ்பிரசிலும் எழுதப்பட்ட தலையங்கம் கிட்டத்தட்ட ஒரே கருத்தையே வலியுறுத்தி ஷிண்டேவின் பேச்சை வன்மையாகக் கண்டித்தன.‘ஷிண்டே இவ்வாறு பேசியிருப்பது மிகப்பெரும் தவறு’ ‘தனது பதவிக்கே களங்கம் ஏற்படுத்திவிட்டார்’ ‘ஓட்டுக்காக நாட்டையே பலிகொடுத்துவிட்டார்’ என்றெல்லாம் கொந்தளித்த தினமணி, ஷிண்டேவின் கூற்று உண்மையென்றால் அந்த அமைப்புகளை ஏன் தடை செய்யவில்லை என்றும் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும் போது அதுகுறித்துப் பேசி நீதிமன்றத்தை அவமதித்திருக்கிறார் என்றும் குற்றம் சாட்டியது. மேலும்,

“பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ தொய்பா இந்தியாவுக்கு எதிராகத் தீவிரவாதிகளை அனுப்புகிறது என்றுதான் இந்திய அரசு கூறிவருகிறதே தவிர, முஸ்லீம் தீவிரவாதிகளை அனுப்புகிறது என்று தவறிக்கூட கூறியதில்லை. இந்தியப் பத்திரிக்கைகளும் கூட தீவிரவாதிகள் கைது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்றுதான் எழுதுகின்றனவே தவிர அவர்களது பெயர்களைக் கொண்டு அவர்களை முஸ்லீம் தீவிரவாதிகள் என்று எழுதுவது இல்லை” என்று ஆதங்கப்பட்டது.

இந்தக் கருத்துக்களோடு உடன்பட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ், மேலும் சில கருத்துக்களை முன்வைத்து ஆத்திரப்பட்டது. சம்ஜவுதா, மாலேகான், மெக்கா குண்டுவெடிப்பு வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன; குற்றவாளிகளை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும் என்று கூறியதோடு ஒரு அமைப்பில் யாரோ ஓரிருவர் செய்த குற்றத்திற்காக அந்த அமைப்பையே குற்றம் சாட்டுவது தவறானது மட்டுமின்றி நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தாது என்று அறிவுறுத்தியது.

23 ஆம் தேதி வெளிவந்த தினத்தந்தி தலையங்கம், ‘ஷிண்டேவின் பேச்சு வெறும் வாயை மென்றுகொண்டிருந்த பாகிஸ்தான் வாயில் அவல்போட்டது போல் ஆகிவிட்டது’ என்று கூறி தினமணி, எக்ஸ்பிரசோடு கைகோர்த்து.

ஒரு நாட்டின் உள்துறை அமைச்சர் தனக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கூறிய ஒரு எச்சரிக்கையை, ஏதோ அப்பழுக்கற்ற புனிதர்களின் மீது சுமத்தப்பட்ட அபாண்டப் பழி என்பதைப் போல இந்த ஊடகங்கள் ஆர்ப்பாட்டம் செய்வது ஏற்க இயலாதது. ஷிண்டே கூறிய இந்தக் கருத்து (குண்டுவெடிப்பில் தொடர்பு) ஏதோ சி.பி.ஐ விசாரணையில் கிடைத்த ரகசியத் தகவல் மட்டுமன்று ; மேற்கூறிய குண்டுவெடிப்பு வழக்குகள் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களால் திட்டமிடப்பட்டு, முஸ்லீம் மக்களைக் குறிவைத்துத் தாக்கிய ஒரு பயங்கரவாதச் செயல் என்பது இதுவரையிலுமான விசாரணைகளால் வெளிப்படையாக அறியப்பட்ட ஒன்று.

இந்த வன்முறைகள் குறித்து வாய்திறக்காமல், முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல், இந்தக் குற்றத்திற்கு ஆதாரம் இருக்கிறதா என்று மடக்குவதும் வழக்கு நிலுவையில் உள்ளபோது அதைக்குறித்து பேசுவது நீதிமன்ற அவமரியாதை என்று கதையளப்பதும் அபத்தமான ஊடகத்தந்திரம். அப்படிப் பார்த்தால், பாபர் மசூதி வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்தபோதே பா.ஜ.க ‘கரசேவகர்கள்’ மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கினார்களே அது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா? வழக்கு தொடரப்பட்டுள்ள போதும் அயோத்தியில் ‘ரெடிமேடாக’ ஒரு ராமர் கோவிலைத் தயாரித்து கண்காட்சி நடத்துகிறார்களே இது அவமதிப்பு இல்லையா? இவற்றையெல்லாம் கண்டித்து வைத்தியநாதன் என்றைக்கேனும் தலையங்கம் எழுதியிருக்கிறாரா??

அப்சல் குருவை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை? ஏன் இன்னும் சாகடிக்கவில்லை என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கிண்டிக்கொடுக்கும் தினமணி, நூற்றுக்கணக்கான முஸ்லீம்களையும் இந்துக்களையும் பலிவாங்கிய மும்பை கலவர வழக்கின் முதன்மைக் குற்றவாளி பால் தாக்கரே தான் என்று ஶ்ரீ கிருஷ்ணா கமிஷன் கூறியபின்பும், சாகும்வரை தாக்கரே கைது செய்யப்படாததைச் சுட்டிக்காட்டி, ஏன் இன்னும் கைது செய்யவில்லை? என்று ஒருநாளேனும் கேட்டிருக்குமா??

ஷிண்டேவின் வெறும் வாய் வார்த்தைக்கே வானத்திற்கும் பூமிக்குமாய் குதிக்கும் இந்த ஊடகங்கள், ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் இறப்பதற்கும் அகதிகளாய் அலைவதற்கும் பிஞ்சுக் குழந்தைகள் அனாதைகளாய் நிற்பதற்கும் காரணமான அத்வானி, மோடி வகையறாக்களின் மீது இப்படிக் கடுஞ்சொற்களை உதிர்த்துத் தலையங்கம் தீட்டியிருக்கின்றனவா?? இவர்களெல்லாம் நாட்டின் தலைவர்களா என்று இகழ்ந்திருக்கின்றவா??

மதத்தின் அடிப்படையில் ‘முஸ்லீம் தீவிரவாதம்’ என்று யாரும் சொல்வதில்லை, எனவே ‘இந்து தீவிரவாதம்’ என்று சொல்வது தவறு என்கிறது தினமணி. முஸ்லீம் தீவிரவாதம் என்று பேச்சளவில் கூறாமல் இருக்கலாம். ஆனால் தீவிரவாதிகள் எல்லாம் முஸ்லீம்கள் தான் என்ற கருத்து இந்திய அளவில் உருப்பெற்றிருப்பது மறுக்க முடியாதது. மேற்கூறிய குண்டுவெடிப்பு வழக்குகளில் எல்லாம் இந்துக்கள் தொடர்புடையவர்களாக இருந்தபோதும் அச்சம்பவம் நடந்தபோது கேட்பாரின்றி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். செய்யாத குற்றத்திற்கு சிறையில் அடைக்கப்பட்டார்கள். சித்திரவதை செய்யப்ப்பட்டார்கள்.

2007 ஆம் ஆண்டு சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன், விசாரணைக்கு முன்பாகவே இது பாகிஸ்தானின் சதிச்செயல் என்று ‘கண்டுபிடிக்கப்பட்டது’. ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு (2007) நிகழ்ந்தவுடன், இந்த சதிச்செயல் ‘ஹர்கத் – உல் – ஜிகாத் – இஸ்லாம்’ என்ற அமைப்பால் நடத்தப்பட்டது என்று ஹைதராபாத் போலிஸ் முன்முடிவெடுத்தது. 26 முஸ்லீம்களைக் கைது செய்து ஆறுமாத காவலில் வைத்து கட்டாயப்படுத்திக் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்தது. சி.பி.ஐ.யின் விசாரணைக்குப் பின்பு தான் இது இந்துத்துவ அமைப்புகளின் பயங்கரவாதச் செயல் என்பது கண்டறியப்பட்டது. இதேபோல் மாலேகான் குண்டுவெடிப்பு (2006) நடந்தபோதும், சம்பந்தமே இல்லாமல் ‘சிமி’ இயக்கத்தைச் சேர்ந்த முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள். உள்துறை அமைச்சரின் பேச்சிற்கு ஆதாரம் கேட்கும் ஊடகங்கள், முஸ்லீம்கள் மீதான கைது நடவடிக்கைகள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நடந்தன என்று இதுவரையிலும் கேள்வி எழுப்பியதுண்டா?

உண்மைச் செய்திகளை ஒளிவுமறைவின்றி வெளியிடுவதைப்போல காட்டிக்கொள்ளும் தினத்தந்தி, தினமலர், இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ்கள், ஷிண்டேவின் கருத்தை மட்டும் வெளியிட்டுவிட்டு, அவரது கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக ஆதாரத்தை வெளியிட்ட மத்திய உள்துறைச் செயலாளர் ஆர்.கே.சிங்.கின் பேட்டியை வெளியிடாமல் மூடிமறைத்தன. தனது பேட்டியில் குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடையவர்களாகவும் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களாகவும் இருந்த 10 பேரின் பெயரை அவர் வெளியிட்டிருந்தார். தினமணி, இந்து, டெக்கன் கிரானிக்கல் ஆகிய நாளிதழ்கள் இந்தச் செய்தியை முழுமையாக வெளியிட்டிருந்தன.

அறங்களையும் நடுநிலைத்தன்மைகளையும் கைவிட்டு இப்படி ஒருபக்கச் சார்பெடுக்கும் ஊடகங்களுக்கு மத்தியில் இந்து நாளிதழின் தலையங்கம் சற்று வேறுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. உள்துறை அமைச்சர் ஆதாரங்கள் இல்லாமல் இப்படி ஒட்டுமொத்தமாய் ஒரு அமைப்பைக் குற்றம் சாட்டுவதும் இதன்மீதான தீவிர நடவடிக்கைகள் எடுக்காமல் வாயளவில் பேசுவதும் தவறு என்று சுட்டிக்காட்டிய அத்தலையங்கம், ‘முஸ்லிம் தீவிரவாதம்’ என்ற சொல்லைப் போலவே ‘இந்து தீவிரவாதம்’ என்ற சொல்லும் ஏற்கமுடியாதது என்று கூறியது. மேற்கூறிய குண்டுவெடிப்பு வழக்குகளில் (மெக்கா, மாலேகான்) விசாரணைக்கு முன்பாக அப்பாவி முஸ்லீம் இளைஞர்களைச் சந்தேகித்துச் சிறையில் அடைத்து, சித்திரவதை செய்த காவல்துறை அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த குற்றவாளிகள் மீது விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லாமல், பிரச்சினையை இப்படி அரசியல் ஆக்குவதால் எந்தப் பலனும் இல்லை என்றும் சொல்லியிருந்தது.

அதேவேளை, பா.ஜ.க இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தவிட முடியாது என்றும் சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் தீவிரவாதப் படுகொலை என்பது இந்துத்துவக் கொள்கைகளால் வளர்க்கப்பட்ட நாதுராம் கோட்சே, காந்தியின் மீது நிகழ்த்தியதுதான் என்றும் எடுத்துரைத்தது. மேற்குறிப்பிட்ட நாளிதழ்கள், இந்துத்துவ அமைப்புகளின் மீது வெளிப்படையாக அறியப்பட்ட குற்றங்களைக் கூட ஏற்றுக்கொள்ளாமல், முழுக்க முழுக்க அவர்களுக்குச் சார்பாக நின்ற நிலையில், ஒப்பீட்டளவில் இந்து நாளிதழ் நடுநிலைத் தன்மையோடு விளங்குவது அறியத்தக்கது.

இதேபோல் டெக்கன் கிரானிக்கல் இதழின் செய்தியும் வேறுபட்டிருந்தது. ஷிண்டேவின் கருத்துக்கள் மீது எந்த விமர்சனமும் இல்லாமல் வெளிவந்திருந்த அச்செய்தி, ஷிண்டேவின் கருத்து உளவுத்துறையினரால் அளிக்கப்பட்ட உறுதியான ஆதாரம் என்று வலியுறுத்தியது. வெடிபொருட்கள் தயார் செய்வது, ஆயுதங்களைக் கையாள்வது உள்ளிட்ட பயிற்சிகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்று உளவுத்தகவல் கூறுவதாகவும் காவி பயங்கரவாதிகளிடமிருந்து வந்த மிரட்டல் முடிவடைந்துவிட்டது என்று யாரேனும் நினைத்தால் அது தவறானது என்று உளவு அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறியதாகவும் செய்தி வெளியிட்டது.

மேற்கூறியவற்றில் இருந்து, தினமணி, தினத்தந்தி, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய இதழ்கள் நடுநிலைப் போர்வையில் இந்துத்துவச் சார்பை வெளிப்படுத்துவதை அறியமுடிகிறது.

மேலும் பார்க்க

தேசத் துரோகம்!
Do not give terror a colour, fight the evil
Think before you talk

 

செய்தி ஊடகம் இந்து மதத்தை இழிவுபடுத்துகிறதாம்!

இன்று இந்துக்கலாச்சாரம், பண்பாடு, நம்பிக்கை, பாரம்பரியம், புனிதநூல்களைத் தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் கிண்டல் பண்ணுகிறார்கள். கிறித்தவ பாதிரிகள், முசுலீம் மௌல்விகள் என்றால் பெரிய மகாத்மா போலவும், கோயில் பூசாரிகள் – இந்துத் துறவிகள் கயவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். எனவே வானொலி, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் போன்றவற்றில் இந்துக்களை இழிவுபடுத்தும் எந்தக்கருத்தும் வராமல் தடை செய்ய வேண்டும். அதனைக் கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

– ‘இந்துக்களுக்கு உரிமை கிடையாதா?’, இந்து முன்னணி வெளியீடு.

இந்து தர்மம், பண்பாட்டை யாரும் வெளியிலிருந்து மெனக்கெட்டு கிண்டல் பண்ணத் தேவையில்லை; வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள், ஸ்ருதிகள், ஸ்தோத்திரங்கள் இவற்றையெல்லாம் இந்து முன்னணியே மலிவு விலையில் அச்சடித்து வெளியிட்டாலே போதும். கடவுளர்கள் உருவான கதை, ஊடல் –கூடல்–ஆபாசங்கள், தேவலோக அழகிகளான ரம்பா–ஊர்வசி–மேனகைகளிடம் கடவுள்களும், முனிவர்களும் மயங்கிய கதைகள், அய்யப்பன்–விநாயகர் பிறந்த கதைகள் இன்ன பிறவற்றையெல்லாம் மக்கள் தெரிந்து கொண்டு ‘ப்பூ இந்து தர்மம் இதுதானா’ என்று ஒதுக்கி விடுவாரகள். அப்படித் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்து மதவெறியர்களும் உபந்நியாசம் செய்பவர்களும் இந்து தர்மம –பண்பாடு பற்றி பூடகமாகவும் தமிழ்ச் சிறு பத்திரிகைகளின் புதுக்கவிதை பாணியில் புரியாமலும் பேசி வருகிறார்கள்.

“நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே, சுற்றி வந்து முணுமுணென்று சொல்லும் மந்திரம் ஏதடா, நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் ” என்று சித்தர்கள் அன்று கேட்டார்கள். புத்தர், மகாவீரர், சார்வாகர், நியாயவாதிகள், மீமாம்சவாதிகள், பூதவாதிகள் என்று பார்ப்பனியத்தை எதிர்த்துக் கிளம்பிய அனைவரும் ‘இந்து தர்மத்தை’ புரியும்படி மக்களிடம் விளக்கியதற்காகவே ஒடுக்கப்பட்டார்கள். அவர்களுடைய இலக்கியங்களும் பெருமளவு அழிக்கப்பட்டன.

தற்காலத்தில் அம்பேத்கரும், பெரியாரும் இதைச் செய்ததற்காகவே இந்து மதவெறியர்களால் கேவலமாக ஏசப்படுகிறார்கள். ”எல்லாம் இறைவன் செயல் என்றால் கொலை கொள்ளை எவன் செயல்?” என்ற திராவிடர் கழகப் பிரச்சாரத்திற்கு, ‘எல்லாம் மனிதச் செயல் என்றால் ஈ.வெ.ராவிற்கும் மணியம்மைக்கும் குழந்தையில்லையே ஏன்?’ என்று இந்து முன்னணி தனது வெளியீடு ஒன்றில் பதிலளித்திருக்கிறது. இதுபோக ‘பெரியாரைக் கொளுத்துவோம்’ என இராம.கோபாலன் பகிரங்கமாக அறிவிக்க முடிகிறது என்றால் அதன்பின்னே வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் டன் கணக்கில் உள்ளது.

ஆகவே, ‘இந்து தர்மத்தை’ அம்பலப்படுத்தும் அதாவது இழிவுபடுத்தும் அனைவரும் இன்றுவரை ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே வரலாறு காட்டும் உண்மை. ‘இந்து தர்மத்தை’ விமரிசிப்பதற்கெதிரான தடை ஏற்கனவே அமலில் இருக்கிறது. ஏதோ புதிதாக விதிக்க வேண்டும் என இந்து முன்னணி கோருவதன் பொருள் தண்டனையை அதிகப்படுத்த வேண்டும் என்பதுதான்.

அடுத்து வானொலி –வானொளியில் இந்து மதம் இழிவுபடுத்துப்படுகிறது என்பது உண்மையா? நிச்சயம் கிடையாது.

திப்புசுல்தான் வாள்இந்நாட்டு உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் பார்ப்பனியத்தின் புராணப் புரட்டுக்கள்தான் தொடர்ந்து ஒலி-ஒளி ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. இராமானந்த சாகரின் இராமாயணம், சோப்ராவின் மகாபாரதம், சாணக்கியன், ஸ்ரீகிருஷ்ணா, ஜெய் அனுமான், சிவமகாபுராணம் முதலான ஏராளமான புராணக் கதைகள் தூர்தர்சனிலும், தனியார் அலைவரிசைகளிலும், இந்தி மற்றும் தேசிய மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டும் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன. தீபாவளி, ஓணம், ஹோலி, ரக்சாபந்தன், விநாயகர் சதுர்த்தி, இராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, வருடப்பிறப்பு போன்ற இந்துப் பண்டிகை நாட்களில் சங்கராச்சாரி அருளுரையுடன் துவங்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏனைய மதப் பண்டிகைகளுக்குக் கிடையாது.

மேலும் விநாயகர் ஊர்வலம் பம்பாயிலிருந்தும், கிருஷ்ண ஜெயந்தி மதுராவிலிருந்தும், தியாகய்யர் உற்சவம் திருவையாற்றிலிருந்தும், அமர்நாத் யாத்திரை ஜம்முவிலிருந்தும், ஜெகந்நாதரின் தேரோட்டம் பூரியிலிருந்தும், தசரா ஊர்வலம் மைசூரிலிருந்தும், காளி பூஜை கல்கத்தாவிலிருந்தும், சூரசம்ஹாரம் திருச்செந்தூரிலிருந்தும், ஓணம் ஊர்வலம் திருவனந்தபுரத்திலிருந்தும், மகர விளக்கு ஐயப்பன் கோவிலிலிருந்தும் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. குடமுழுக்கு, தேரோட்டம் போன்ற உள்ளூர் நிகழ்ச்சிகள் வானொலி மூலம் ஒலிபரப்பப்படுகின்றன. இவைகளுக்காகப் பலகோடி ரூபாய் மதிப்புள்ள முக்கிய ஒலி –ஒளிபரப்பு நேரங்கள் ஒதுக்கப்படுகின்றன. இத்தகைய சலுகை ஏனைய மதங்களுக்குக் கிடையாது. மேலும் ராமனைக் கசிந்துருகும் கர்நாடக சங்கீதக் கீர்த்தனைகளானாலும் சரி, மாணவர்களின் தமிழ்ப்பாட நூலின் கடவுள் வாழ்த்துப் பகுதியில் இடம் பெறும் திருவாசகமானாலும் சரி பார்ப்பனியத்திற்குத் தரப்படும் முக்கியத்துவத்தில் நூற்றிலொரு பங்கு கூட முசுலீம் –கிறித்தவ மதங்களுக்குக் கிடையாது.

காலனிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி உயிர் துறந்த இந்திய அரசர்களில் முதன்மையானவன் திப்பு. அவன் பிறப்பினால் ஒரு முசுலீம் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ். கும்பல் திப்புவைக் கட்டோடு வெறுக்கிறது. ‘திப்பு சுல்தான்’ தொடரை ஒளிபரப்பியதற்காக பல தூர்தர்சன் நிலையங்கள் இந்து மதவெறியர்களால் தாக்கப்பட்டன. அதன்பிறகு தொடருக்கு முன்னால் ”இது உண்மைக் கதையல்ல, கற்பனைச் சம்பவங்கள் நிறைந்தவை” என்ற அறிவிப்போடு பல சமரசங்களுடன்தான் திப்புவின் தொடர் ஒளிபரப்பானது. “திப்புவின் வரலாறு பொய், இராமாயணம் உண்மை” என்று வரலாற்றையே இந்த மதவெறியர்களால் புரட்டிப் போட முடிகிறது என்றால் இந்த முட்டாள்தனத்தை தாலிபான்களின் ஆட்சியில் கூடக் காண முடியாது.

‘47 பிரிவினையின் போது நடந்த இந்து –முசுலீம் கலவரப் பின்னணியை வைத்துத் தயாரிக்கப்பட்ட ‘தமஸ்’ தொடரையும் இந்துமத வெறியர்கள் எதிர்த்தனர். பார்ப்பன இந்து மதம் விதவைகளை எப்படிக் கேடாக நடத்துகிறது என்பதைக் கருவாகக் கொண்ட தீபாமேத்தாவின் ‘வாட்டர்’ படப்பிடிப்பையே ஆர்.எஸ்.எஸ். கும்பல் தடை செய்திருக்கிறது. சரஸ்வதியை உள்ளபடி நிர்வாணமாய் வரைந்தார் என்பதற்காக ஓவியர் எம்.எப். உசைனைத் தாக்கியதும் இவர்கள்தான்.

இந்தியாவின் திரையுலகமும் கூட பார்ப்பனியத்தின் பண்பாட்டு விழுமியங்களை ஏற்றுக்கொண்ட ஊதுகுழலாகத்தான் இருக்கின்றது.

இந்தித் திரையுலகைக் கட்டுப்படுத்துவது பால்தாக்கரேவின் சிவசேனா கும்பல்தான். ‘ரோஜா’ படத்தில் காசுமீர் முசுலீம் மக்களைக் கேவலப்படுத்திய மணிரத்தினம், ‘பம்பாய்’ படத்திலும் முசுலீம்களைக் கலவரக்காரர்களாக உண்மைக்கும் புறம்பாகச் சித்தரித்ததனாலேயே தாக்கரேயின் பாராட்டையும், அனுமதியையும் பெற்றார். மணிரத்தினத்தின் இத்தகைய படங்கள் தூர்தர்சனின் ஏதோ ஒரு அலைவரிசையால் மாதந்தோறும் இப்போதும் திரையிடப்படுகிறது. பாகிஸ்தான் எதிர்ப்பை வைத்து முசுலீம்களை பயங்கரவாதிகளாக –வில்லன்களாகக் காட்டும் படங்கள் தற்போது ஏராளம் வருகின்றன. முசுலீம்களையும், கம்யூனிஸ்டுகளையும் கேவலப்படுத்தி ஹாலிவுட்டில் 80-களில் வந்த படங்களின் போக்கிற்கு இணையானது இது.

விஜயகாந்த், அர்ஜுன் போன்றோரது ‘தேசபக்தி’ப் படங்களிலும், தெலுங்கின் மசாலாப் படங்களிலும், அவ்வளவு ஏன் கடவுளைக் கேலி செய்து வெளிவந்த வேலுபிரபாகரனின் ‘புரட்சிக்காரன்’ படத்திலும் ‘பின்லேடன்’தான் வில்லன். தாடியும், குர்தாவும், கண்களில் தெறிக்கும் வெறியும் கொண்ட முசுலீம் பயங்கரவாதிகளாய் இவர்கள் காட்டப்படுகிறார்கள். மேலும் முசுலீம் கிறித்தவப் பெயர் கொண்டவர்களே கடத்தல்காரர்களாகவும், சட்ட விரோதத் தொழில் செய்பவர்களாகவும் திரைப்படத்தில் தோன்றுவது இந்தியத் திரை மரபாகவே நிலைபெற்று விட்டது. பார்ப்பனியத்தின் பண்பாட்டை ஆதரிப்பவரே நல்ல முசுலீம் –கிறித்தவராகத் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகின்றனர்.

திராவிட இயக்கத்தின் தூண்டுதலில் வந்த எம்.ஆர்.இராதாவின் (பார்ப்பனியத்தின் சமூக விரோதத் தன்மையை எதிர்த்து வந்த) படங்களும், நாடகங்களும், கல்லடியும், சொல்லடியும் எதிர்கொண்டே மக்களிடம் சென்றன. இவரைத் தவிர்த்த ஏனைய கலைஞர்கள் அண்ணாவின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற சமரசத்திற்கிணங்க பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டவர்களாகி விட்டனர். தி.மு.க.வின் முன்னாள் கொ.ப.செ.யான ராஜேந்தர் தீவிரமான ஆஞ்சநேய பக்தர், பக்திப் படங்களை மாதம் ஒன்று என எடுத்துத் தள்ளும் இராம நாராயணன் தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

தன் மகனுக்கு ‘பிரபாகரன்’ என்று பெயரிட்டு மகிழ்ந்தவரும், தனது ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தை விடுதலைப் புலிகளின் தலைவர் பாராட்டியதைச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டவருமான நடிகர் விஜயகாந்த், ஒரு மாதிரி தேசியம் கலந்த தமிழ்ப் பற்றாளனாகக் காட்டிக் கொள்பவர். ‘கள்ளழகர்’ தொடங்கி பின்னர் வெளிவந்த ‘நரசிம்மா’ வரை இராம.கோபாலனுக்குப் போட்டியாகப் பேச ஆரம்பித்திருக்கிறார் விஜயகாந்த். ‘நரசிம்மா’ படத்தில் ”இந்தியாவில் ஒரு முசுலீம், ஜனாதிபதியாக, கிரிக்கெட் காப்டனாக மாறமுடியும், உங்க பாகிஸ்தானில் ஒரு இந்து வரமுடியுமா? இங்கே ஏராளம் மசூதிகள் கட்ட முடியும், உங்க பாகிஸ்தானில், இந்துக் கோவில்கள் கட்ட முடியுமா?” என்று ஒரு காசுமீர் முசுலீம் ‘தீவிரவாதியிடம்’ விஜயகாந்த் வாதிடுகிறார்.

எனவே, தமிழ்த் திரையுலகின் மணிரத்தினம், விசு, பாலசந்தர், ஜீ.வி., சங்கர், கமலஹாசன், பாலகுமாரன், சுஜாதா, வாலி போன்ற பார்ப்பனர்களானாலும், விஜய்காந்த், பாரதிராஜா, எஸ்.தாணு, இளையராஜா, வைரமுத்து போன்ற சூத்திர – பஞ்சமர்களானாலும் சரி, ஆர்.எஸ்.எஸ்.இன் இந்து தேசபக்த –பண்பாட்டு விழுமியங்களை ஏற்றுக்கொண்டவர்கள்தான். பிரபல பின்னணிப் பாடகியான சித்ரா சென்னை ஆர்.எஸ்.எஸ். குரு பூஜையில் வருடந்தோறும் பாட்டுப் பாடுகிறார். கௌதமி, எஸ்.வி.சேகர், விசு, விஜயசாந்தி, சத்ருகன்சின்ஹா, விக்டர் பானர்ஜி என இந்திய அளவில் திரை நட்சத்திரங்கள் பா.ஜ.க.வில் குவிந்து கிடக்கின்றனர். இராமாயணத் தொடரில் இராமன், சீதையாக நடித்த நடிகர்கள் கூட பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்களாக நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.

அரசியல் மற்றும் மக்களின் போராட்டங்களைப் பதிவு செய்யும் ‘டாக்குமென்டரி’ பட உலகிலும் இந்து மதவெறியர்களை எதிர்த்து ஏதும் செய்ய இயலாது.

அத்வானியின் ரத யாத்திரையை வைத்து இந்து மதவெறியர்கள் நடத்திய ‘ராமஜென்ம பூமி’க் கலவரங்களைப் பதிவு செய்து ‘கடவுளின் பெயரால்’ என்ற ஆவணப் படத்தின் மூலம் அம்பலப்படுத்தியவர் ஆனந்த் பட்வர்த்தன. அந்தப் படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பக்கூடாது என்ற அரசு உத்தரவை முறியடிக்க அவர் 8 ஆண்டுகள் நீதிமன்றத்தில் போராட வேண்டியிருந்தது. அதேபோல ரூப் கன்வர் என்ற இளம் பெண்ணை உடன்கட்டையேற்றிக் கொன்ற பார்ப்பனியத்தின் பயங்கரவாதத்தைப் பதிவு செய்து ஒரு குறும்படமாக்கிய 5 பெண் பத்திரிகையாளர்களுக்கும் அதே நிலைமைதான். போலீசு நடத்திய வெறியாட்டத்திற்குப் பிறகு, கொடியங்குளத்தின் அவலத்தை வீடியோவில் பதிவு செய்து தாழ்த்தப்பட்ட மக்களிடம் திரையிட்டது ‘புதிய தமிழகம்’ கட்சி. அதைக்கூட தடை செய்ய வேண்டும் என்று கூக்குரலிட்டவர் இந்து முன்னணி இராம.கோபாலன்.

இப்படி காட்சி ஊடகத்தில் மட்டுமல்ல, செய்தி ஊடகத்திலும் பார்ப்பனியமே தலைதூக்கித் துரத்துகிறது. இந்தியாவின் அநேக மாத, வார, நாளிதழ்கள் பார்ப்பன – மேல்சாதியினரிடமே இருப்பதால் இந்து மீட்புவாதத்திற்கும், பிற்போக்குத் தனங்களுக்கும் கோட்டையாக அவை விளங்குகின்றன. ஜாதகம், ஜோசியம், நல்ல நேரம், வார – மாத ராசி பலன்கள், சாமியார்களின் அருளுரைகள், கோவில் யாத்திரைகள் எல்லாம் இந்தப் பத்திரிகைகளில் நிரம்பி வழியும். எல்லா மதத்தினரும் வாங்கிப் படிக்கும் குமுதம், விகடன் வகையறாக்கள் தீபாவளிக்கு மூன்று புத்தகங்கள் வெளியிடும். ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்காக மூன்று பக்கங்களைக் கூட அதிகரிக்காது.

உள்நாட்டு – வெளிநாட்டு சினிமா கிசுகிசுக்கள் நிரம்பி வழியும் தினமலரின் வாரமலர் பக்கங்களில் கீழே ராமகிருஷ்ண பரமஹம்சரது பொன்மொழிகள் தவறாமல் இடம் பெறும். ‘பொய்யே உன் பெயர்தான் தினமலரா’ என்பதற்கேற்ப தமிழகம் முழுவதும் ஜெலட்டின் குச்சிகளும், ஐ.எஸ்.ஐ. உளவாளிகளும் நிரம்பி வழிவதாக இப்போதும் கூசாமல் எழுதுகிறது தினமலர். பா.ஜ.க.வின் அரசியலை ஆதரிப்பதற்குத் தனது தலையங்கப் பக்கத்தையே ஒதுக்கியுள்ளது தினமணி. தினமலர், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிந்து, இந்தியாடுடே போன்ற பத்திரிகைகளில் பணியாற்றுபவர்களில் பலர் ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்தவர்கள்தான்.

இந்து மதவெறியர்களுக்கு நேரடிப் புரவலராக இருக்கும் தினமலர், பார்ப்பனியத்தின் இலக்கியப் பத்திரிகையான காலச்சுவட்டிற்கும் புரவலராக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். தனது அலுவலகத்திலேயே பெருமையுடன் விற்பனை செய்யும் ஜெயமோகனின் ‘விஷ்ணு புரம்’ நாவலுக்கு பணஉதவி செய்தவர் பொள்ளாச்சி மகாலிங்கம். கோக் – பெப்சி முகவராக இருக்கும் மகாலிங்கத்தின் கல்லூரிகளில்தான் ஆர்.எஸ்.எஸ்.இன் பயிற்சி முகாம்கள் இன்றும் நடக்கின்றன. ”எங்கே பிராமணன், மகாபாரதம், இராமாயணம்” இவற்றை வைத்தே ‘அரசியல்’ பத்திரிகை நடத்தும் ‘சோ’ தனது பா.ஜ.க. விசுவாசத்திற்குப் பரிசாக ராஜ்ய சபா உறுப்பினர் பதவியைப் பெற்றார். இவரைப்போலவே இந்து மதவெறியரின் பத்திரிகையாளராக இருந்த அருண் சோரி இன்று அமைச்சர் பதவியையே பரிசாகப் பெற்றிருக்கிறார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா, எக்ஸ்பிரஸ் போன்ற ஆங்கில – இந்தி நாளேடுகள் பல பாபர் மசூதி இடிப்பிலும், மண்டல் கமிசன் பிரச்சினையிலும், பா.ஜ.க.வின் ஊதுகுழலாய்ச் செயல்பட்டன. முலாயம்சிங் முதலமைச்சராக இருந்தபோது 90-ஆம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற அயோத்தி கரசேவை கலவரத்தில் நூற்றுக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டதாகப் பொய்ச் செய்தி வெளியிட்ட ஆஜ், தைனிக் ஜாக்ரண், சுதந்திர சேத்னா, சுதந்திர பாரத் எனும் 4 இந்தி இதழ்கள் ‘இந்திய பிரஸ் கவுன்சிலினால்’ கடும் கண்டனம் செய்யப்பட்டன. இக்கண்டனத்தைக் கூட ஏனைய தேசியப் பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்து விட்டன.

சட்டரீதியில் மதச் சார்பின்மை என்று சொல்லிக் கொண்டாலும் செய்தி ஊடக நிறுவனங்களில் இயல்பாக உள்ள ‘இந்து’ ஆதிக்கம் சிறுபான்மை மக்களைத் தனிமைப்படுத்துகிறது. போட்டி மதவாதம் எழுவதற்கு இத்தகைய இந்து செய்தி நிறுவனங்களும் ஒரு காரணமாகின்றது.

மொத்தத்தில் நம் நாட்டின் காட்சி–செய்தி–பொழுதுபோக்கு ஊடகங்கள் அனைத்தும் பார்ப்பனமயமாக்கப்பட்டு இந்து மத வெறியின் பக்கவாத்தியங்களாகச் செயல்படுபவைதாம். இருப்பினும் பார்ப்பனியத்தின் சென்சார் கண்களில் சிக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழும் ஒன்றிரண்டு கலகக்குரல்களையும் நெரிக்க வேண்டும் என்பதுதான் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் விருப்பம். இட்லரின் இந்திய வாரிசுகள் வேறு எப்படி இருப்பார்கள்?

(நன்றி: வினவு)

ஆனந்த விகடன் எதிர்ப்பின் அரசியல்

ஆனந்த விகடனில் (7-11-12) வந்துள்ள ‘நேற்று… நான் விடுதலைப் போராளி! இன்று… பாலியல் தொழிலாளி’ என்கிற கட்டுரைக்கு எதிரான சமூக வலைத்தள நண்பர்களின் பலவீனமான எதிர்ப்பு குறித்து ஒரு மூன்று குறிப்புகள்:

1. ஆனந்த விகடன் (ஆ.வி.) எனும் பாரம்பரியமிக்க வார இதழ் சமீப காலங்களில் ஈழப் போராட்டதையும், குறிப்பாக விடுதலைப் புலிகளையும் மிகத் தீவிரமாக ஆதரித்த ஒன்று. என்னிடம் ஆ.வி.யிடமிருந்து எனக்கும் அதற்குமான உறவு குறித்து ஒரு கட்டுரை கேட்டபோது அந்த உறவு குறித்து நான் சிறப்பாக எழுதியபோதும், விடுதலைப் புலிகள் குறித்த அதன் விமர்சனமற்ற நிலைப்பாட்டை விமர்சித்திருந்தேன். அந்தக் கட்டுரையை அவர்கள் வெளியிடவில்லை. பிறகு நான் அதை என் சமூக வலைப் பக்கங்களில் வெளியிட்டேன்.

அந்த அளவிற்குத் தீவிரமாக விடுதலைப் புலிகளை ஆதரித்த ஆ.வி இதழ் இன்று வெளியிட்டுள்ள ஒரு கட்டுரைக்காக சமூக வலைத்தளங்களில் உள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களால் கடுமையாகத் தாக்கப்படுகிறது.

அந்தக் கட்டுரையை நான் சற்றுமுன்தான் படித்தேன். அது ஒரு பெண் போராளியின் இன்றைய வாழ்வு பற்றிய ஒரு நேர்காணல் அடிப்படையிலான கட்டுரை. அது ஆ.வி.யின் வழக்கமான ஈழ ஆதரவு நிலைப்பாட்டை ஒட்டிய ஒரு கட்டுரைதான். அக்கட்டுரையின் முக்காற்பங்கு சிங்கள இராணுவத்தின் கொடூரமான மனித உரிமை மீறல்களைப் பட்டியலிடுகிறது. வாசிக்கும் யாருக்கும் சிங்கள இனவெறி இராணுவத்தின் பாலியல் வன்முறைகளின் மீது ஆத்திரம் விளைவது தவிர்க்க இயலாத வகையில் அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தவிரவும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்தும் மிகச் சிறப்பாகவே அப்பேட்டிக் கட்டுரை பேசுகிறது.

எனினும் நமது முகநூலிலுள்ள விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் இந்த ஆ.வி இதழை எரிக்கும் அளவிற்குப் போனதன் பின்னணி என்ன? அக்கட்டுரையின் இறுதிப் பகுதியில் சொல்லப்பட்ட செய்திகள்தான் அவர்களின் எரிச்சலுக்குக் காரணம். அந்தப் போராளிப் பெண் இன்று பாலியல் தொழிலில் ஈடுபட்டுத் தன் குழந்தைகளைக் காப்பாற்ற நேர்ந்துள்ளது என்பது ஒன்று. மற்றது, நமது தமிழ் நாட்டுப் புலி ஆதரவு அரசியல் சக்திகள், இன்றைய ஈழத் தமிழர்களின் மனநிலையையும் அரசியல் எதிர்பார்ப்புகளையும் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல், தங்களது சுய அரசியல் லாபத்திற்காக இன்னும் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் எனப் பேசி இன்னொரு போரையும் அதன் தாங்கவொண்ணா வலிகளையும் ஈழத் தமிழர்கள் மீது திணிக்க முயலுவது குறித்து அந்தப் பெண் போராளியின் வாயிலான கண்டனம்.

இதில் நண்பர்கள் கவனத்தில் ஏற்க வேண்டிய அம்சம் இதுதான். ஆ.வி. தொடர்ந்து விடுதலைப் புலிகளை மிகத் தீவிரமாக ஆதரித்து வந்த ஒரு இதழ், இதிலும் அந்த நிலையிலிருந்து விலகாமல், போர்த் தோல்வியை ஒட்டி அந்த இனவாத அரசு மேற்கொண்டுள்ள அத்துமீறல்களைத்தான் அதிகம் பேசுகிறது. இருந்தும், இன்றும் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும், இன்னொரு ஈழப் போர் ஒன்றின் மூலமே விடிவு சாத்தியம் என்றும் கூறாமல் இன்றைய உடனடிப் பிரச்னைகளின்பால் கவனத்தைத் திருப்புவதைத்தான் இவர்களால் சகிக்க முடியவில்லை.

இவர்கள் எதிர்பார்ப்பது என்ன? இவர்கள் பேசுகிற அதே வார்த்தைகளை வரி பிசகாமல் மற்றவர்களும் பேச வேண்டும். இம்மி விலகினாலும் இவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். நான் சொல்வதை அப்படியே வரிக்குவரி வழிமொழிய வேண்டும். இல்லாவிட்டல் நீ என் எதிரி என்கிற ஜார்ஜ் புஷ்ஷின் ஆணவத்திலிருந்து இது எந்த அம்சத்தில் வேறுபடுகிறது? ஆ.வி. என்ன இவர்களின் கட்சிப் பத்திரிக்கையா? ஒரு பத்திரிக்கையில் எல்லாக் கருத்துகளுக்கும் இடமுண்டு என்பதை ஏற்காத அரசியலைப் பாசிசம் என்பதைத் தவிர வேறு எந்தச் சொல்லால் குறிப்பிட இயலும்?

பொதுப்புலத்தில் உலவும் ஒரு இதழைத் தன் கட்சிப் பத்திரிக்கை போல எழுத வேண்டும், இம்மி விலகினாலும் அதை எரிப்போம் எனக் கொக்கரிப்பதை என்னென்பது?

2. பேட்டிக் கட்டுரையில் அந்தப் பெண் போராளி சொல்லியுள்ள விஷயங்கள் குறித்து: இன்றைய நிலையை அந்தப் பெண் சரியாகவே சொல்லியுள்ளார். போருக்குப் பிந்திய ஈழத் தமிழர்கள் குறித்த எதார்த்தம் பற்றி இங்குள்ள புலி ஆதரவாளர்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. மறுவாழ்வுக்குச் சாத்தியமில்லாத நிலை, இன்னும் தமிழ்ப் பகுதிகளில் 16 சிங்கள இராணுவப் பிரிவுகள் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ள நிலை, ஆண் துணை இல்லாத ஏராளமான குடும்பங்கள், போராளிகளாக இருந்து திரும்பிச் சென்றோர் சமூகத்தில் ஒன்ற இயலாத சூழல் முதலியன இன்று வடக்கு மாநில ஈழத் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள பாரதூரமான விளைவுகளை நாம் கற்பனை செய்துகூடப் பார்க்க இயலாது. குற்ற நடவடிக்கைகளின் பெருக்கத்தையும் அங்கே உருவாகியுள்ள பண்பாட்டுச் சீரழிவுகளையும் போரின் கொடும் விளைவுகளில் ஒன்றாக நாம் புரிந்து கொள்ளல் அவசியம். இதை நாம் ஏற்றுக் கொண்டால்தான் இதற்கான சரியான தீர்வுகளை நாம் பேச முடியும். மாறாக ஈழப் போரை முன்னிறுத்தி இங்கு அரசியல் லாபம் சேர்க்கவும், இங்குள்ள பிரச்னைகளைப் பின்னுக்குத் தள்ளவும் முயல்வோர் இவற்றை மறைக்கவே முயல்வார்கள். அந்த முயற்சியில் அவர்கள் தோற்றும் போவார்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணி புரியும் ஈழப் பெண்மணி ஒருவர் இங்கு வந்திருந்தார். பலரும் அறிந்துள்ள பேராசிரியர் ஒருவரின் மனைவி அவர். அவரது தொண்டு நிறுவனம் இத்தகைய சீரழிவின் ஊடாக நோய்வாய்ப்பட்ட பெண்களுக்கு மருத்துவ உதவி செய்து மறுவாழ்வு அளிக்க முயற்சிக்கிறது. அதைத்தான் அவர்கள் செய்ய இயலுமே தவிர, இந்தக் கொடுமைகளை அவர்களால் அரசியலாக்க முடியாது. அவர் சொன்ன இன்னொரு செய்தி இன்னும் கொடுமையானது. இலங்கையின் முக்கிய வருமானங்களுள் ஒன்று மேலை நாடுகளுக்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்வது. அத்தகைய ஒரு நிறுவனம் (பெயரைக்கூட அவர் சொன்னார்), வேலைக்குப் பெண்கள் தேவை என விளம்பரம் செய்து, அதைக் கண்டு வரும் தமிழ்ப் பெண்களை பாலியல் தொழில்களில் ஈடுபடுத்துகிறது என்பதுதான் அது. குழந்தையோடும், நோயுடனும் திரும்பி வருவோருக்கு நிவாரணம் வழங்குகிற பணியை அவரது தொண்டு நிறுவனம் செய்து வருகிறது.

நண்பர்களே இதுதான் இன்றைய ஈழ எதார்த்தம். இந்த உண்மையை நாம் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையிலேயே நாம் இதற்கான தீர்வுகளை யோசிக்க இயலும். நம்முடைய அரசியல் நலன்களிலிருந்து ஈழப் பிரச்னையை நாம் அணுகக் கூடாது.

உண்மைகளின் ஆற்றல் மிகப் பெரிது. அவற்றை நம் இரு கரங்களால் மூடி மறைத்துவிட இயலாது. வேண்டுமானால் உண்மைகள் நம் கவனத்திற்கு வராமல் கண்களை மூடிக்கொள்ள அந்தக் கரங்களைப் பயன்படுத்தலாம்.

முள்ளிவாய்க்கால் மற்றும் புதுக்குடியிருப்பின் இன்றைய நிலை குறித்த நேரடி அனுபவத்தின் அடிப்படியிலான எனது கட்டுரைக்காக தாண்டிக் குதித்தவர்கள், இந்த இதழ் FRONTLINE இதழில் அட்டைப் படக் கட்டுரையாக அதே செய்திகளும் படங்களும் வந்துள்ளனவே என்ன செய்யப் போகிறீர்கள்?

3. ஆனந்த விகடனுக்கான எதிர்ப்பு ஏன் சமூக வலைத்தளங்கள் மட்டத்திலேயே முடங்கிவிடுகிறது? ஏன் வழக்கமான விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இதில் மௌனம் சாதிக்கின்றனர்? ஒரு பத்திரிக்கையை அப்படியே வரிக்கு வரி நம்மைப் போலவே எழுத வேண்டும் எனக் கட்டாயப்படுத்தக் கூடாது என்கிற அவர்களின் அரசியல் maturityயைக் காட்டுவதாகவே நான் இதைப் புரிந்துகொள்கிறேன்.

நாம் தகவல் தொழில்நுட்பம் வீச்சுடன் வளர்ந்துள்ள ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம் நண்பர்களே.

13 நக்சலைட்டுகள் கைது: நடுநிலை தவறும் ஊடகங்கள்

கடந்த இரண்டு நாட்களாகத் (7.10.12) (8.10.12) தமிழக நாளேடுகளால் பரபரப்பாக்கப்பட்ட செய்தி “சென்னையில் 13 நக்சலைட்டுகள் கைது” என்பதுதான். தமிழ், ஆங்கில நாளேடுகள் பலவும் இந்தச் செய்தியை இரண்டாம், மூன்றாம் பக்கங்களில் முக்கியத்துவப்படுத்தி வெளியிட்டிருந்தன. இவற்றையெல்லாம் விஞ்சிய தினகரன் (8.10.12), முதற்பக்கத்திலேயே “நள்ளிரவில் போலிஸ் சுற்றிவளைப்பு – சென்னையில் மூன்று நக்சலைட்டுகள் கைது” என்று கொட்டை எழுத்தில் அச்சிட்டு பீதி கிளப்பியது.

இச்செய்திகள் முன்னிறுத்தும் நிகழ்வைக் குறித்து நாம் இப்படியாகத்தான் அறிகிறோம் :

“மக்கள் சனநாயகக் குடியரசுக் கட்சி” என்கிற -சனநாயக, பாராளுமன்றப் பாதையைத் தேர்ந்தெடுத்த- மா-லெ குழுவின் முக்கிய பொறுப்பாளர்களும் உறுப்பினர்களுமான 13 பேர் ஒன்றுகூடி தமது கட்சியின் கொள்கை நிலைப்பாடுகள் குறித்து, சென்னையை அடுத்த குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளியொன்றில் விவாதித்துள்ளனர். கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவர்களுள் ஒருவரான பழனி, தனது குழந்தைகள் படிக்கும் பள்ளி என்ற வகையில் பள்ளித் தலைமை ஆசிரியர் வெற்றிச்செழியனைச் சந்தித்து அனுமதி பெற்றுள்ளார். சென்னை குன்றத்தூரில் உள்ள “பாவேந்தர் மழலையர் தொடக்கப்பள்ளி” ஒரு தமிழ் வழிக் கல்விச்சாலை என்பதும் தனித்தமிழ் ஆர்வலரான வெற்றிச்செழியன், கடும் நிதிநெருக்கடியில் கூட தனிவகுப்புகளை (Tuition) மாணவர்களுக்கு இலவசமாக நடத்திக் கல்விச்சேவை புரிந்துவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை காலையில் துவங்கிய குடியரசுக்கட்சியின் கூட்டம் மாலை 5 மணியளவில் – முடிவடையும் தருவாயில் கியூ பிரிவு போலிசார் அறைக்குள் நுழைந்துள்ளனர். 13 பேரிடமும் விசாரணை மேற்கொண்ட பின் அனைவரையும் குன்றத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அங்கே போலிசாரால் இப்படியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது : “கைது செய்யப்பட்ட அனைவரும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள். மாலை 7 மணியளவில் பள்ளியின் அறையைப் பூட்டிக்கொண்டு இருட்டில் ரகசியக்கூட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது”. பின்னர், கைது செய்யப்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணியளவில் ஶ்ரீபெரும்புதூர் நீதிபதியின் இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு ரிமான்ட் செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கியூ பிரிவு மற்றும் போலிசாரின் முக்கிய குற்றச்சாட்டுகள் இவைதான் :

1. இவர்களில் மூன்றுபேர் (துரைசிங்க வேலு, பழனி, பாஸ்கர்) 2002 ஆம் ஆண்டு ‘பொடா’ சட்டத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் (bail) வெளிவந்தவர்கள். நக்சலைட் அமைப்பைச் சேர்ந்தவர்கள். மற்ற அனைவரும் நக்சலைட் ஆதரவாளர்கள்.

2. கைது செய்யப்பட்ட 13 பேரும் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள்.

3. அனைவரும் ஒன்றுகூடி சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கியூ பிரிவு போலீஸ் ஏகப்பட்ட முரண்களுடன் முன்வைத்த இந்தச் செய்திகளைத்தான் எந்தக் கேள்விகளும் இன்றி தமிழக அச்சு ஊடகங்கள் பலவும் திரும்பத் திரும்ப ஒப்பித்துக்கொண்டிருந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்ட சில உண்மைகள் :

1. ‘பொடா’ சட்டத்தின் கீழ் கைதுச்செய்யப்பட்ட துரைசிங்க வேலு, பழனி, பாஸ்கர் ஆகிய மூவரும் மாவோயிஸ்ட் கட்சியோடு தொடர்புடைய நக்சலைட்டுகள் அல்லர். உண்மையில் மாவோயிஸ்ட் கட்சியின் கொள்கைகளோடு முரண்பட்டு அதிலிருந்து வெளியேறியவர்கள். பின்பு, ‘புதிய போராளி’ எனும் அமைப்பை நிறுவிச் செயல்பட்டு வந்தனர். தற்போது ”மக்கள் சனநாயகக் குடியரசுக் கட்சி” எனும் அமைப்பத் தொடங்கி இயங்கி வருகிறார்கள். கட்சியில் இருந்து வெளியேறிய வகையில் மாவோயிஸ்ட் அமைப்பினரால் இவர்கள் புறக்கணிக்கப்படுவதும் தாங்கள் பங்கேற்கும் கூட்டமைப்புகளில் இவர்கள் பங்கேற்கக் கூடாது என மாவோயிஸ்ட் அமைப்பினர் ஆட்சேபிப்பதும் பலரும் அறிந்த செய்தி. இப்படி இருக்கையில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் விவேக் கடந்த மேமாதம் கியூ பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்டதையும் அவர் மனைவி பத்மா தலைமறைவாக இருப்பதையும் இந்த 13 பேரின் கைது நடவடிக்கையோடு இணைத்து முடிச்சுப்போடும் செயலைக் கியூ பிரிவு திட்டமிட்டுச் செய்கிறது. இது குறித்தெல்லாம் கவலைப்படாத ‘தினமணி’ ‘Times of India’ நாளிதழ்கள் மாவோயிஸ்டின் கைதையும் அவர்களிலிருந்து பிரிந்தவர்களின் கைதுகளையும் இணைத்து முடிச்சுப்போட்டு செய்தி வெளியிடுகின்றன. தினமணி நாளிதழ் பத்மாவும் கைது செய்யப்பட்டுவிட்டதாகச் சொல்கிறது. அவர் கைது செய்யப்படவில்லை. தலைமறைவாகத் தான் இருக்கிறார். ‘தினகரன்’ இதனைக் கட்டச் செய்தியாக முக்கியப்படுத்தி, “அப்போது அவர், இப்போது இவர்கள்” என்கிற ரீதியில் குதூகலிக்கிறது.

2. கைது செய்யப்பட்ட 13 பேரும் தடைசெய்யப்பட்ட எந்த ஒரு அமைப்பின் உறுப்பினர்களும் அல்லர். இவர்கள் அனைவரும் ‘மக்கள் சனநாயகக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள். இது தடை செய்யப்பட்ட அமைப்பு அன்று. சமூக வலைத்தளமான முகப்புத்தகத்தில் ‘மக்கள் சனநாயகக் குடியரசுக் கட்சி’ என்ற பெயரில் ஒரு பக்கம் துவக்கப்பட்டிருப்பதும் அவர்களது கட்சி நடவடிக்கைகள் அவ்வப்போது அதில் வெளியிட்டு வருவதும் இரகசியமன்று.

3. பதின்மூன்று பேரும் கூடினார்கள் ,சதித்திட்டம் தீட்டினார்கள், நக்சலைட் பயிற்சி கொடுத்தார்கள் என்றெல்லாம் மிகைப்படுத்தப்படும் செய்திகள் அடிப்படை ஆதாரம் அற்றவை. தங்களது கட்சியின் கொள்கைகள் குறித்து உரையாடுவதற்காகத்தான் அவர்கள் கூடியிருக்கிறார்கள். (டெக்கான் கிரானிகல் இதழ் மட்டும் இதைக் குறிப்பிட்டிருந்தது. அதைப் பின்னர் பார்க்கலாம்.) பொடா வழக்கில் கைதானவர்கள் தவிர வேறு யார்மீதும் குற்றவழக்குகள் நிலுவையில் இல்லை.பொடாவில் கைதாகி பிணையில் விடுதலையாகிய (2006) மூவரும் கூட இன்றுவரை சட்டபூர்வமாக தமது வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார்கள்.

4. துரைசிங்க வேலு, பழனி, பாஸ்கர், செந்தில், புவியரசன், முகிலன் உள்ளிட்ட பலரும் பொது வெளிகளில் வெளிப்படையாக இயங்கிவந்தவர்கள். சமூக மற்றும் இலக்கியப் பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வருபவர்கள். தலைமறைவாகவோ, இரகசியமாகவோ இருந்தவர்கள் அல்லர்.

5. போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டு “கையும் களவுமாகப்” பிடிக்கப்பட்ட போதும் கைதானவர்களிடமிருந்து எந்த ஆயுதமோ, சதித்திட்டம் தீட்டியதற்கான ஆதாரமோ கிடைத்ததாக எந்தத் தகவலும் இல்லை. அப்படியிருக்க, குடியிருப்புகள் சூழ்ந்த ஒரு பொது இடமான பள்ளிக்கட்டிடத்தில் கூடியவர்களை ஏதோ எவரெஸ்டின் உச்சிக்கே போய் ரகசிய திட்டம் தீட்டியதைப் போல் கியூ பிரிவு முன்வைக்கும் செய்திகள் மீது ஒரு சிறிய ஐயத்தை கூட எழுப்பாத ஊடகங்கள், கியூ பிரிவின் வார்த்தைகளை அப்படியே வழித்தெடுத்துச் செய்திகளாக வார்த்துள்ளன. கியூ பிரிவு சொன்னவற்றைக் காட்டிலும் ஊடகங்கள் அதை ஊதிப் பெருக்கியதுதான் அச்சமூட்டுபவையாக உள்ளது. அவற்றில் சில:

தினகரன்

“நள்ளிரவில் ரகசியக்கூட்டம் நடத்திகொண்டிருந்த 3 நக்சலைட்டுகள் உட்பட 13 பேரை போலிஸ் அதிரடியாக சுற்றிவளைத்தது” என்று தினகரன் செய்தி வெளியிட்டு உள்ளது (08.10.12). போலிசார் மாலை 5 மணியளவில் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர். நீண்ட விசாரணைக்குப் பின் குன்றத்தூர் போலீசில் ஒப்படைக்கப்பட்ட அவர்கள் அங்கு இடப்பற்றாக்குறை காரணமாக மாங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்துசெல்லப்பட்டு இரவு அங்கேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். உண்மை இப்படி இருக்க, ‘நள்ளிரவில் கைது’ என்று பச்சைப் பொய்யை கூசாமல் உதிர்க்கிறது தினகரன்.

‘கும்பலின் தலைவன் யார் ?’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பெட்டிச் செய்தியில் கைதுசெய்யப்பட்ட துரைசிங்க வேலு கூட்டத்திற்கு மூளையாக செயல்பட்டுள்ளார் என்றும் 12 வயதில் அவர் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார் என்றும் எழுதியுள்ளது.’கும்பல்’, ‘மூளை’, ‘ஓட்டம்பிடித்தல்’ போன்ற சொல்லாடல்கள் மூலம் கட்சியினர் மீது எதிர்மறை பிம்பத்தை உற்பவிப்பதும், கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லும்போது முழக்கமிடுபவர்களை ஏதோ அடிதடிக்குக் களமிறங்குபவர்களைப்போல் படமாக்கி வெளியிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. அ.தி.மு.க ஆட்சிகாலத்தில் பயங்கரவாதம், நக்சலைட் தீவிரவாதம் எல்லாம் கட்டவிழ்ந்து கிடப்பதாக ஒரு பிம்பத்தை கட்டமைக்க வேண்டிய கடமை தினகரனுக்கு ஏற்பட்டிருப்பதை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது.

தினமலர்

‘நக்சலைட் இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பு -ரகசிய கூட்டத்தின் பகிர் பின்னணி’ என்ற தலைப்பில் பதற்றத்தை கிளப்பிய தினமலர், ”தமிழகத்தில் நக்சல் இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பதற்க்காக அவ்வப்போது இவர்கள் ரகசிய கூட்டம் நடத்துவதாகவும் தெரியவந்தது” (08.10.2012) என்று கூறியது. ஆனால் இந்த “பகீர் பின்னணி” என்பது வழக்கம்போல கியூ பிரிவு போலிஸ் கூறிய செய்தியாகத்தான் இருந்தது.

காலைக்கதிர்

கியூ பிரிவு போலிசார் கூறியதாக வெளியிட்டுள்ள செய்தி :”கைதான 13 பேரும் 2002 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்ட மலைப்பகுதிகளில், பல இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்தனர். அப்போது கியூ பிரிவு போலிசார், ஊத்தங்கரை மலைப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி துரைசிங்கவேல் ,பழனிமாணிக்கம் உள்ளிட்ட பலரை கைது செய்தனர்.” 13 பேரும் ஆயுதப்பயிற்சி அளித்தனர் என்று கியூ பிரிவு கூறிய செய்தியை ‘காலைக்கதிர்’ சொல்லியபடியே பதிவாக்கியிருக்கிறது. தினமலரிலும் கூட கியூபிரிவு கூறியதாக இதே செய்தி வெளியாகியிருந்தது. உண்மையில் இந்தப் 13 பேரில் ஊத்தங்கரையில் கைதானவர்கள் மூவர் மட்டுமே.

தினத்தந்தி

கியூ பிரிவு போலிசாரின் செய்தியையே தினத்தந்தியும் வெளியிட்டிருந்தபோதும், மற்ற நாளிதழ்களால் பொருட்படுத்தாது விடப்பட்ட கைது செய்யப்பட்டவர்களின் குரலை அது வெளிக்கொணர்ந்தது குறிப்பிடத்தக்கது. “நாங்கள் மக்கள் விரோத, அரசுக்கு எதிரான செயல் எதிலும் ஈடுபடவில்லை. பாராளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்தோம். எங்கள் மீது ஏற்கனவே போடப்பட்ட வழக்கைக் கோர்ட்டில் சட்டரீதியாகச் சந்திக்கிறோம். நாங்கள் நக்சலைட்டுகள் அல்ல” என்று துரைசிங்கவேலு வாக்குமூலம் அளித்ததாகப் போலிசார் கூறிய செய்தியை தினத்தந்தி மட்டுமே வெளியிட்டிருந்தது.

மாலைமலர்

“சென்னையில் நக்சலைட் இயக்கத்தினர் ஆதரவாளர்களை திரட்டி கூட்டம் நடத்தி இருப்பது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி என்ற பெயரில் இயங்கி வரும் இவர்கள் சென்னையில் வலுவாக காலூன்ற திட்டமிட்டது முளையிலேயே கிள்ளி எறியப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில் நக்சலைட் ஆதரவாளர்கள் காய் நகர்த்தி வந்துள்ளனர். இவர்களது கட்சியின் சார்பில் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட கிளை இயக்கங்களை தொடங்கவும் முடிவு செய்து, அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதையெல்லாம் பார்க்கும்போது சென்னை மற்றும் புறநகரில் நக்சலைட் இயக்கத்தினர், இளைஞர் களை மூளைச்சலவை செய்து ரகசியமாக ஆட்களை திரட்டி இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். குன்றத்தூரில் நடந்த கூட்டத்தில் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த நக்சலைட் ஆதரவாளர்களும் பங்கேற்றதால், இந்த மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு நக்சலைட் ஆதரவாளர்களை பிடிக்க விடிய விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்துக்கிடமாக சிக்கியவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” (8.10.12)
என மாலைமலர் செய்தி வெளியிட்டது. பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது, தொழிற்சங்கக் கிளைகளை அமைப்பது முதலிய செயற்பாடுகள் ஏன் “போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது?” என மாலைமலர் கேட்கவில்லை. நக்சலைட் அமைப்புக்கள் ஆயுதப் பாதையை கைவிட்டு பாராளுமன்றப் பாதைக்குத் திரும்பவேண்டும் என்பதுதானே அரசு மற்றும் காவல்துறையின் நோக்கம்? அது நிறைவேறும் தருவாயில் ஏன் கைது நடவடிக்கை என்றுச் பொறுப்புமிக்க ஊடகம் கேள்வி எழுப்பிடிருக்க வேண்டும் அல்லவா?

Times of India

13 பேரிடமும் நடத்திய விசாரணையில் தடைசெய்யப்பட்ட பல்வேறு அமைப்பினருக்கு மாவோயிஸ்டுகள் பயிற்சி அளிப்பதும் நகர்ப்பகுதியில் தமக்கான தளத்தை அமைக்கத் திட்டமிட்டிருப்பதும் தெரியவந்ததாக TOI கூறியது. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் போலீஸ் இதைச் சொல்கிறது, கைதானவர்கள் எல்லோரும் பிறருக்குப் பயிற்சி அளிக்கும் அளவிற்கு Hard Core Naxalite களா? என்கிற கேள்வியை TOI எழுப்பத் தயாராக இல்லை.

New Indian Express

நக்சலைட்டுகளின் இந்த ரகசியக் கூட்டத்தில் 2014 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டதாகப் போலிஸ் தரப்பு கூறிய செய்தியை வெளியிட்டிருந்தது. இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை என எக்ஸ்பிரசும் போலிசிடம் கேட்கவில்லை.

The Hindu

சாந்தி என்கிற தமது கட்சி உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்குவதற்காக இந்தக் கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறிய செய்தியை இந்து நாளிதழ் வெளியிட்டிருந்தது. இந்தச் சாந்தி குறித்து அதற்குப் பின் வேறெந்தச் செய்தியும் இல்லை. தடை செய்யப்படாத ஒரு இயக்கம் அதன் உறுப்பினர் ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பதற்காகக் கூடக் கூட்டம் போடக்கூடாதா எனக் கேட்கத்தான் நமது ஊடகத்தினருக்கு மனமில்லை.

Deccan Chronicle

ஆயுதப் பயிற்சி, ஆள் சேர்ப்பு, நக்சலைட் பரவல் என்றெல்லாம் ஊடகங்கள் பூதாகரப்படுத்திய சூழலில், அந்தப் பள்ளியில் நடைபெற்ற சம்பவம் குறித்து வேறெந்த நாளேடும் வெளியிடாத ஒரு செய்தியை D.C வெளியிட்டிருந்தது. சென்னைப் பள்ளியில் ஆயுதப்பயிற்சி எதுவும் நடைபெறவில்லை என்றும் போலிசார் உள்ளே நுழைந்தபோது அங்கு கொள்கை விளக்க வகுப்பு (idealogical orientation class) மட்டுமே நடந்துகொண்டு இருந்ததாகவும் அங்கிருந்த 8 ஆண்கள் அதைக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்ததாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறிய செய்தியை அது பதிவாக்கியிருந்தது.

முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்கள்

நாளேடுகளில் வெளியான செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருப்பது மட்டுமின்றி தனக்குள்ளேயே முரண்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மக்கள் சனநாயகக் குடியரசுக் கட்சியினரின் சந்திப்பு குறித்து போலிசார் தகவல் அறிந்ததையும் அவர்கள் கைது செய்த சூழலையும் குறித்து ஒவ்வொன்றும் ஒரு ஒரு கதையைச் சொல்லியுள்ளன.

தினமணி

7.10.12 அன்று வெளியான செய்தியில், தமிழகக் கியூ பிரிவு போலிஸ் எஸ்.பி.சம்பத்குமாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததன் அடிப்படையில் பள்ளியை ரகசியமாகக் கண்காணித்து வந்ததாகவும் அவர் தலைமையிலான போலிசார் அதிரடியாக நுழைந்து அங்கு பயிற்சி பெற்ற 13 பேரையும் பிடித்து விசாரித்ததாகவும் கூறப்பட்டது.

8.10.12 அன்று வெளியான செய்தியில், மக்கள் ஜனநாயக குடியுரிமை கட்சி என்ற பெயரில் இயக்கம் நடத்தும் நிர்வாகிகள் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாக குன்றத்தூர் போலிஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்ததாகவும் அதையடுத்து ரகசியக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு இரவு விசாரிக்கப்பட்டனர் என்றும் சொல்லப்பட்டது.

தினமலர்

7.10.12 இல் வெளியான செய்தியில், கியூ பிரிவு எஸ்.பி.சம்பத்துக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அந்தப் பள்ளி ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டதாகவும் சனிக்கிழமை மாலை எஸ்.பி.சம்பத் தலைமையிலான போலிசார் அதிரடியாக நுழைந்து அங்கு “பதுங்கியிருந்த” பொடா சுரேஷ் (?) உட்பட 13 பேரை மடக்கிப்பிடித்து விசாரணை செய்ததாகவும் பின்னர் குன்றத்தூர் போலிசில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

8.10.12 அன்று வெளியான செய்தியில், தனது 3 நண்பர்களுடன் முக்கிய விஷயம் குறித்துத் தனியாகப் பேசவேண்டும் என தலைமை ஆசிரியரிடம் துரைசிங்கவேலு அனுமதி கேட்டதாகவும் 3 நண்பர்கள் பேசுவதாகக் கூறிவிட்டு 13 பேர் வந்ததோடு ஒரு பெண்ணும் வந்ததால் சந்தேகம் அடைந்த தலைமை ஆசிரியர் குன்றத்தூர் போலிசுக்குத் தகவல் அளித்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் 13 பேரையும் விசாரித்த சட்டம் ஒழுங்கு போலிசார் பின்னர் இவர்களை கியூ பிராஞ்ச் போலிசிடம் ஒப்படைத்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதே செய்தியை பதிவாக்கியுள்ள தினகரன், குன்றத்தூர் போலிசாரின் விசாரணையில் 13 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்ததால் அவர்களைப் போலிசார் கைது செய்ததாகவும் இதற்கிடையே கியூ பிரிவு போலிசாரும் தகவல் அறிந்து அங்குவந்து விசாரணையில் இறங்கியதாகவும் சொல்கிறது.

தினத்தந்தி

7.10.12 அன்று வெளியான செய்தியில், பள்ளிக்கூடத்தின் மொட்டைமாடியில் சிலர் திடீரென ரகசியக்கூட்டம் நடத்திக்கொண்டிருந்ததைப் பற்றி அருகில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளர் போலிசுக்குத் தகவல் கொடுத்ததாகவும் அதன்பேரில் கியூ பிரிவு போலிஸ் இரவில் அங்கு சென்று ரகசியக் கூட்டம் நடத்திக்கொண்டிருந்த 9 பேரையும் குன்றத்தூர் போலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தியதாகவும் கூறுகிறது.

8.10.12 அன்று வெளியான செய்திக்குறிப்பில், கியூ பிரிவு போலிசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்ததன் அடிப்படையில், கியூ பிரிவு போலிசார், உள்ளூர் போலிசார் உதவியுடன் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டதாகவும் இந்த முற்றுகை வேட்டையில் ஒரு அறையில் ஆலோசனை நடத்திய 13 பேர் சிக்கியதாகவும் கூறப்பட்டது.

4. கியூ பிரிவு போலிசுக்கு ரகசியத்தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அவர்கள் சென்றதாக காலைக்கதிர், The Hindu இதழ்கள் தெரிவிக்கின்றன. 10 ஆண்டுகளாகத் தேடப்படும் பெண் நக்சலைட் பாரதி, அந்தப் பள்ளிக்கு வரவிருப்பதாகக் கியூ பிரிவு போலிசாருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அங்கு போலிசார் விரைந்து சென்றதாகவும் அவரைப் பிடிக்கச் சென்றபோது தான் இந்தப் 13 பேரும் சிக்கினார்கள் என்றும் மாலைமலர் (8.10.12) Deccan Chronicle, Indian Express ஆகிய நாளிதழ்கள் கூறுகின்றன. 7.10.12 அன்று வெளியான மாலைமலர் செய்தியில்,சந்தேகத்திற்கிடமாக சிலர் ரகசியக் கூட்டம் நடத்துவது பற்றி கியூ பிரிவு போலிசாருக்குத் தகவல் கிடைத்ததாகவும் போலிசார் விரைந்து சென்று 13 பேரையும் பிடித்ததாகவும் கூறப்பட்டிருந்தது.

தொகுத்துப் பார்க்கையில்,

(i) கூடிப் பேசியது குறித்த இரகசியத் தகவல்கள் கிடைத்துக் கண்காணித்துக் கைது செய்தோம்.

(ii) இரகசியக் கூட்டம் நடப்பது குறித்து அருகிலுள்ள ஒரு வீட்டுக்காரர் சொன்ன தகவலின் அடிப்படையில் வந்து கைது செய்தோம்.

iii) மூன்று பேருக்கு அனுமதி கேட்டுப் பதின்மூன்று பேர் வந்ததால் கலக்கமுற்று பள்ளித் தலைமை ஆசிரியரே புகாரளித்ததால் வந்து கைது செய்தோம்.

(iv) பல ஆண்டுகளாகத் தலைமறைவாக உள்ள பாரதி என்பவரைத் தேடி வந்து இவர்களைக் கைது செய்தோம் என முன்னுக்குப் பின் முரணான செய்திகளைக் காவல்துறையினர் கூறியுள்ளனர். இது குறித்து எந்தக் கேள்வியையும் எழுப்பாமல் ஊடகங்கள் முரண்களை அப்படியே வெளிப்படுத்தியுள்ளன. ஒரே இதழ் முதல் நாள் ஒரு மாதிரியாகவும் மறுநாள் வேறு மாதிரியாகவும் செய்தி வெளியிடுவதற்கும் தயங்கவில்லை. தலைமை ஆசிரியர் தான் அனுமதி அளித்தே கூட்டம் நடந்ததாகவும், தான் புகார் ஏதும் செய்யவில்லை எனவும் சொன்னதாக ஒரு தகவல் முகநூலில் பதிவாகியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஊடகங்களின் ஒருசார்புத் தன்மை

கியூ பிரிவு போலிஸாரின் செய்திகளை ஐயத்திற்கிடமின்றி வெளியிடும் ஊடகங்கள் கைது செய்யப்பட்டவர்கள் தரப்பு உண்மைகளை வெளிக்கொணர்வதில் ஒருசிறிதும் அக்கறை செலுத்தவில்லை. தேர்ந்து, தெளிந்து ஆராய்ந்த உண்மைகளை மட்டுமே ஊடகங்கள் செய்திகளாக வெளியிடவேண்டும் என்று நாம் வலியுறுத்தவில்லை. அது உடனடிச் சாத்தியம் இல்லை என்பதையும் நாம் உணர்கிறோம். ஆனால் ஒரு நிகழ்வைக் குறித்த இருவேறு தரப்பினரின் கருத்துகளையும் நடுநிலை நின்று நேர்மையோடு வெளிப்படுத்த வேண்டியது ஊடகங்களின் இன்றியமையாத கடமை. அதேபோல ஒன்றுக்கொன்று முரணான செய்திகளை போலீசார் கூறும்போது அதைச் சுட்டிக்காட்டி விளக்கம் கேட்டு வெளியிடுவதும் ஊடகங்களின் கடமை. இந்தக் கடமையிலிருந்து தவறும் போது ஊடக அறம் என்பது கேலிக்கூத்தாகிறது.

“நக்சலைட் இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பு” “நக்சலைடுகள் பள்ளிக்கூடத்தில் பயிற்சி” “நகர்ப்புறங்களில் தளம் அமைக்க நக்சலைட்டுகள் திட்டம்” என்றெல்லாம் காவல்துறைச் செய்திகளை அப்படியே வெளியிட்ட ஊடகங்கள் அதேவேளையில், கியூ பிரிவு மற்றும் போலிசாரின் கூற்றுகளில் உள்ள முரண்களைச் சுட்டிக்காட்டி, கைது செய்யப்பட்டவர் தரப்பு உண்மைகளை எடுத்துரைத்து, உடனடியாக அவர்களை விடுதலை செய்யக்கோரி, மனித உரிமை அமைப்பு சார்பில் அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன், எஸ்.வி.ராஜதுரை. பிரபா.கல்விமணி ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கையை முற்றாக ஒதுக்கித்தள்ளின. ‘தினமணி’, ‘Deccan Chronicle’ நாளிதழ்கள் மட்டுமே இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தன. தினமணி அறிக்கையை முழுமையாக வெளியிட்டிருந்த போதும் அமைப்புக்களின் பெயரைக் குறிப்பிடாமல் ‘மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம்’ என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி இருந்தது.
மொத்தத்தில், இந்த ஊடகச் செய்திகளை ஒப்பிட்டு நோக்கும் போது பெரும்பாலான ஊடகங்கள், உண்மைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதைவிடவும் போலிஸ்தரப்புச் செய்திகளுக்கே முக்கியத்துவம் அளித்துவருவதை அறியமுடிகிறது. ஊடகங்கள் தமது அறங்களை கைவிடும் இந்தப்போக்கு ஆபத்தானது. ஊடகவியலாளர்கள் சிந்திக்கவேண்டும்.

அமெரிக்காவும் ஒரு திரைப்படமும் முஸ்லிம்களும்

லிபியாவிலிருந்த தங்களின் தூதரகம் தாக்கப்பட்டு, தூதர் உட்பட நான்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டவுடன் ஹிலாரி கிளின்டன், “அய்யோ, இதென்ன? அவர்களின் விடுதலைக்கே நாம்தானே காரணமாக இருந்தோம். பெங்காஸியை அழிவிலிருந்து காப்பாற்றியவர்கள் நாம்தானே. அங்கா இப்படி நடந்துள்ளது?” என அதிர்ச்சியையும் வியப்பையும் ஒருங்கே காட்டியதாக ஏதோ ஒரு பத்திரிக்கையில் பார்த்தேன். அமெரிக்கர்கள் எல்லோரும் புத்திசாலிகள் என நம்ப வேண்டியதில்லை என்பதையும், அதிலும் குறிப்பாக பிற நாடுகள் குறித்து சராசரி அமெரிக்கர்கள் அறிந்துள்ளது ரொம்பச் சொற்பம் என்பதையும்  ஓரளவு அறிந்திருந்த போதிலும் கிளின்டனின் கூற்று எனக்குச் சற்று வியப்பை அளித்தது. கிளின்டன் சராசரி அமெரிக்கர் அல்ல. உலக நாடுகளையே தன் அதிகாரத்தால் ஆட்டிப் படைக்கும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர். அவர்களைப் போன்றோராலும் கூட இன்று அரபுலகிலும், உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ள இந்த அமெரிக்க வெறுப்பைப் புரிந்து கொள்ள இயலவில்லையா? இல்லை புரியாதது போல நடிக்கிறார்களா?

அமெரிக்க அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களை நாம் அவ்வளவு விவரம் தெரியாதவர்களாகக் கணிக்க வேண்டாம். புரிந்து வைத்துக் கொண்டு புரியாதது போல நடிக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இன்று அமெரிக்காவும் மேற்குலகும் மிகப் பெரிய பொருளியல் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டுள்ளன. இது சகல மட்டங்களிலும் பல்வேறு விதமான பிரச்னைகளைத் தோற்றுவித்துள்ளது. 1930களில் சமாளித்ததுபோல இன்று இந்தப் பிரச்னையைச் சமாளிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. எனவே முஸ்லிம் பயங்கரவாதம் பற்றிக் கதையாடுவதும், ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் முதலான உயர் மதிப்பீடுகளில் தோற்றுப்போன ஒருவகைக் “காட்டுமிராண்டிச் சமூகத்தை” அருகே நிறுத்தித் தங்களின் ‘மேன்மை’ குறித்த ஒரு புனைவை உருவாக்குவதும் அமெரிக்கர்களுக்கு அவசியமாகியுள்ளது. அந்த வகையில் உலக நாகரிக வரலாற்றில் ஆற்றவேண்டிய கடமை ஒன்று தங்களுக்கு இன்னும் இருக்கிருக்கிறது என்பதை நிறுவ வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர்.

ஆக மீண்டும் ஒருமுறை முஸ்லிம்கள் சகிப்புத் தன்மை அற்றவர்கள், மத வெறியர்கள், ஜிஹாதிகள் என நிறுவுவதற்கு இன்று இந்த ‘முஸ்லிம்களின் அப்பாவித்தனம்’ (Innocence of Muslims) படத்திற்கெதிரான போராட்டம் மேற்குலகிற்குப் பயன்படுகிறது. மேற்குலகிற்கு மட்டுமல்ல உலகெங்கிலுமுள்ள முஸ்லிம் வெறுப்பாளர்களுக்கெல்லாம் இது ஒரு வாய்ப்பாகிவிட்டது. தினமணி இதழ் முஸ்லிம்களின் இப்போராட்டத்தை, “தவறு.. தவறு.. தவறு” என மும்முறை கூவி தலையங்கம் எழுதுகிறது. அமெரிக்கர்களைப் பொருத்தமட்டில் இது தேர்தல் நேரம். லிபியாவில் அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டதற்குப் பழி வாங்குவது குறித்து யார் அதிகக் காட்டமாகப் பேசுகிறார்களோ அவர்களுக்குக் கூடுதலாகக் கொஞ்சம் வாக்குகள் கிடைக்க வாய்ப்புண்டு. ஒபாமா நிர்வாகம் இரு போர்க் கப்பல்களை மத்திய கிழக்கை நோக்கி நகர்த்திய செய்தி அடுத்தடுத்த நாள்களில் பத்திரிக்கைகளில் வந்தது. “உடனடியாக அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறக்கூடாது…இன்னும் ஆழமாக நமது படைகள் மத்திய கிழக்கிலும் வடஆப்பிரிக்காவிலும் ஊடுருவ வேண்டும்” என ‘தி எகானாமிஸ்ட்’ இதழ் எழுதுகிறது.

ஒரு திரைப்படத்திற்கு முஸ்லிம்கள் இத்தனை ஆர்பாட்டம் செய்ய வேண்டுமா என்கிற கேள்வி யாருக்கும் எழுவது இயல்புதான். ஆனால் இந்தச் சம்பவத்தை நாம் தனித்துப் பார்க்க இயலாது. சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் வசனங்கள்’ தொடங்கி, டேனிஷ் கார்டூன்கள், ஃப்ரான்ஸ் அரசு ஹிஜாப் அணிவதற்கு விதித்த தடை, சுவிட்சர்லாந்தில் மினாராக்கள் வைத்துப் பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை, மேலைச் சமூகங்களில் வளர்ந்து வருகிற இஸ்லாம்-வெறுப்பின் ஒரு சிறு அடையாளமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நார்வேயில் ஆந்த்ரே ப்ரெவிக் என்கிற கிறிஸ்தவ அடிப்படைவாதி சுமார் 70க்கும் மேற்பட்டோரைச் சுட்டுத் தள்ளிய காட்சி எல்லாம் சமீபத்திய நிகழ்வுகள். கடந்த பல நூறு ஆண்டுகளாக முஸ்லிம்களின் இறைத்தூதரை ஒரு எதிர்க் கிறிஸ்துவாகக் கட்டமைத்து இழிவு செய்து வந்துள்ளது குறித்து நான் மிக விரிவாக வேறு இடங்களில் எழுதியுள்ளேன். (பார்க்க: நான் புரிந்து கொண்ட நபிகள்).

எட்வர்ட் செய்த் சொன்னதுபோல மேலைச் சமூகத்தின் முன் அரபுலகில் தோன்றிய இஸ்லாம் முன்வைத்த சவாலை அது எதிர் கொண்ட விதம் இஸ்லாமைப் புரிந்து கொள்வது என்பதிலிருந்து தொடங்கவில்லை. மாறாக இஸ்லாமை இழிவு செய்வது, கொடூரத் தன்மையதாகக் காட்டுவது (demonise) என்பதாகவே இருந்தது.

பிற கிழக்கத்திய நாகரிகங்களை, குறிப்பாக இந்தியாவையும் சீனாவையும்  தோற்கடிக்கப்பட்டவையாகவும், தொலைதூரத்தில் உள்ளவையாகவும் அது கருதியது. எனவே அவற்றை மேலைச் சமூகம் ஒரு நிரந்தர, முக்கியப் பிரச்னையாகக் கருதவில்லை. இஸ்லாமை மட்டுமே அது என்றைக்கும் தனக்கு முழுமையாகப் பணிய வைக்க இயலாததாகக் கருதியது.
(Covering Islam)

அந்த வகையில் அது தொடர்ந்து இஸ்லாமை இழிவு செய்து வந்தது. அதன் ஓரங்கமாகவே இன்றைய இந்தத் திரைப்படத்தையும் நாம் காண வேண்டியுள்ளது.

கருத்துச் சுதந்திரம் என்பதை நாம் ரொம்பவும் abstract ஆகப் பார்த்துவிட இயலாது. கிறிஸ்தவ மதத்திற்குள் மத மரபுகளைக் கேலி செய்யும் ஒரு பாரம்பரியம் உண்டு. புனிதமான இறைத் துதிகளைக் கேலி செய்தல், Paschal Laughter, Christian Laughter, Easter Laughter, Monkish Prank என்கிற வடிவங்களில் மத நிறுவனங்களை மட்டுமின்றி ஆக உயர்ந்த மதத் தலைவரான போப்பாண்டவரையும் திருவிழாக் காலங்களில் (carnivals) கிண்டலடித்தல் என்கிற நிலை அங்கு அனுமதிக்கப்பட்ட ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன் நான் நெதர்லாந்த் சென்றிருந்தபோது, கத்தோலிக்கர்களால் பெரிதும் மதிக்கப்படுபவரும், அதற்குச் சில ஆண்டுகள் முன் மரித்தவருமான போப் இரண்டாம் பால் சுய இன்பம் செய்து கொண்டிருப்பதுபோல ஒரு ‘morphing’ செய்யப்பட்ட புகைப்படம் எல்லாக் கடைகளிலும் தொங்கிக் கொண்டிருந்தது.

ஆனால் பிற சமூகங்களில், குறிப்பாக இஸ்லாத்தில் இறைவனையோ இல்லை அவனது தூதரையோ சற்றும் கேலி செய்வதற்கு இடமில்லை. கேலி மட்டுமல்ல. அவர்களின் திரு உருவை வரைந்தோ, வடித்தோ காட்சிப்படுத்துவதற்கும் அங்கு இடமில்லை. ஆனால் பவுத்தத்திலோ புத்தனை ஆகப் பெரிதாக வடித்துக் காட்டுவது ஒரு போற்றற்குரிய மரபு. பாமியன் புத்தர் சிலைகளை நாம் அறிவோம். ஆக, நம்பிக்கைகளும் மரபுகளும் சமூகங்களுக்கிடையே பெரிதும் வேறுபடுகின்றன. நபிகள் நாயகம் என அழைக்கப்படும் முஸ்லிம்களின் இறைத்தூதர் முஹம்மது பின் அப்துல்லாஹ் ஒரு சாதாரண மனிதராகப் பிறந்து, சாதாரண மனிதராகவே வாழ்ந்து, முதுமை அடைந்து நோயுற்று மடிந்தவர். புத்தனுக்குப் போதி மரத்தடியில் விழிப்புணர்வு அருளப் பெற்றது என பவுத்தர்கள் நம்புவது போல, முகம்மதுக்கு திருக்குர்ஆன் இறையருளால் அருளப்பெற்றது என முஸ்லிம்கள் நம்புகின்றனர். இதொன்றைத் தவிர சாதாரண மனிதராகவே தோன்றி, வாழ்ந்து, மடிந்தவர் நபிகள் நாயகம். எனினும் உலகெங்கிலுமுள்ள 1.6 பில்லியன் முஸ்லிம்களும் அவரைத் தமக்கு ஒரு இலட்சிய முன்மாதிரியாகக் (ideal exemplar) கொள்கின்றனர். அவர் மீதான எந்த ஒரு தாக்குதலையும் அவர்கள் தங்களது ஒட்டுமொத்தமான சமூக அடையாளத்தின் மீதான (collective identity) தாக்குதலாகவே கருதுகின்றனர்.

கலாச்சார விஷயங்களில் பொது அளவுகோல்கள் கிடையாது. கிறிஸ்தவ மரபிலுள்ள ஒன்றை அளவுகோலாக்கி, அதனடிப்படையில் முஸ்லிம் மத நம்பிக்கை அல்லாது மரபை நாம் அளந்துவிட இயலாது. உம்பர்டோ ஈகோ ஒரு முறை சொன்னதுபோல நரமாமிசம் சாப்பிடக் கூடிய கலாச்சாரத்தை உடைய ஒரு சமூகத்திடம் போய் இது இழிவு, நர மாமிசம் சாப்பிடாத எங்கள் பண்புதான் உயந்தது என நான் சொல்லிக் கொண்டிருக்க மாட்டேன். ஆக அதிகபட்சமாக நான் அங்கே சொல்லக் கூடியது என்னவெனில், “ஐயா, நான் புள்ளை குட்டிக்காரன். என்னைச் சாப்பிட்டு விடதீர்கள்” என்று வேண்டிக் கொள்வது மட்டுமே. ஆக, கலாச்சார விஷயங்களில் கருத்துச் சுதந்திரம், நல்ல பண்பாடு, கண்டிக்கப்பட வேண்டிய பண்பாடு என்பதற்கெல்லாம் ஒரே ஒரு அளவுகோல்தான் உண்டு. அது, ஒருவரது பண்பாடு மற்றவர்களுக்கு இடையூராக இருக்கக் கூடாது, மற்றவர்களோடு சேர்ந்து வாழ்தலுக்குத் தடையாக  இருக்கக் கூடாது என்பது மட்டுமே. பலரும் சேர்ந்து வாழ்கிற ஒரு சமூகத்தில் ஒருவர் பசு மாமிசத்தையும், மற்றவர் பன்றிக் கறியையும் சாப்பிட மாட்டோம், அது எங்களுக்க்குத் தடை செய்யப்பட்டது என்றால் அது அவர்கள் உரிமை. அதை அனைவரும் மதிக்க வேண்டும். ஆனால் இவர்கள் மற்றவர்களை நோக்கி நீ பசு மாமிசத்தைச் சாப்பிடக் கூடாது என்றோ, பன்றிக் கறியைத் தடை செய்ய வேண்டுமென்றோ சொல்ல முடியாது.

மேலைச் சமூகத்திலும் எல்லை இல்லாத கருத்துச் சுதந்திரம் இருப்பதாகச் சொல்ல இயலாது.  சமீபத்தில் பிரிட்டிஷ் இளவரசனின் மனைவி கேட் மிட்டில்டன் (Dutchess of Cambridge) தன் கணவருடன் மார்பில் ஆடையின்றி உல்லாசமாக இருந்த படம் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டபோது அரச குடும்பம் கொதித்தெழுந்து கண்டித்ததை நாம் அறிவோம். கடற்கரையில் மார்பில் துணியின்றி இருந்த ஒரு பெண்ணின் படத்தை அவரது அனுமதியின்றிப் போட்டதைச் சரி என நான் சொல்லவில்லை. ஆனால் அது அச்சமூகத்தில் சகஜம் என்பதும், கண்டிக்கப்பட்டது மார்பில் துணி இல்லாத பெண் ஒருவரின் படத்தைப் போட்டதற்காக அல்ல, அது பிரிட்டிஷ் இளவரசியாக இருந்தது என்பதற்காக மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல சில நாட்களுக்கு முன் யார்க்‌ஷையரைச் சேர்ந்த அசார் அகமது என்கிற 19 வயதுப் பையன் ஒருவன் ஆஃப்கானிஸ்தானிலுள்ள பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புப் படையினர் கொல்லப்படுவதை நியாயப்படுத்தி எழுதியமைக்காகத் தண்டிக்கப்பட்டதும் நினைவிற்குரியது.

கலாச்சார விஷயத்தில் நாம் இன்னொன்றையும் கவனத்தில் நிறுத்த வேண்டும். ஒரே நம்பிக்கையை ஏற்றுக் கொண்ட ஒரு சமூகமாயினும் அதற்குள்ளும் ஒளிரும் பன்மைத் தன்மைதான் அது. உலகெங்கிலுமுள்ள 1.6 பில்லியன் முஸ்லிம்களும் இன்று பல்வேறு இன, மொழி, புவியியல், பண்பாட்டு வேறுபாடுகள் மிக்க நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கின்றனர். இவர்கள் எல்லோரையும் ஒரு படித்தான கலாச்சாரங்களையும் மரபுகளையும் கொண்டவர்களாகக் கருதுவது அபத்தம். ஆனால், உலக ஊடகங்கள் அனைத்தும் முஸ்லிம்களை அப்படித்தான் சித்திரிக்கின்றன. சில முஸ்லிம் நாடுகளில் இன்றும் சில பகுதிகளில் கோலோச்சும் நிலப்பிரபுத்துவத் தண்டனைக் கலாச்சாரத்தை எல்லாம் முஸ்லிம்களின் பொதுப் பண்பாகப் படம் பிடித்துக் காட்டுவது நமது மேலை, கீழை முஸ்லிம் வெறுப்பு ஊடகங்களுக்கு மிகப் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு. ஈரானில் ஒரு கணவன் தன் மனைவியின் மூக்கை அறுத்துத் தண்டித்தாலோ, ஆப்கானிஸ்தானத்தில் நடத்தை ‘தவறியவள்’ என ஒரு பெண் குற்றம் சாட்டப்பட்டு கல்லால் அடித்துக் கொல்லப்பட்டாலோ, வட இந்திய நகரொன்றில் மாமனாரால் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணின் விவாகம் முறிந்ததாக ஃபத்வா விதிக்கப்பட்டாலோ அடுத்த சில மணி நேரங்களில் அது உலக அளவிலுள்ள அனைத்து முஸ்லிம்களின் பண்பாடாகச் சித்திரிக்கப்பட்டுப் பரப்பப் படுவதையும், அதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் கண்டிக்கப் படுவதையும் நாம் அறிவோம்.

இன்று முஸ்லிம் நாடுகள் பெரிய அளவில் மாற்றம் அடைந்து வருகின்றன. காலத்திற்கு ஒவ்வாத ஷரிஅத் சட்டங்கள் பல நாடுகளில் மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளன. பெண்கள் பொதுப் பணிகளில் ஈடுபடுவது, அமைச்சர் பதவிகள் வகிப்பது எல்லாம் பரவலாகியுள்ளன. பொது இடத்தில் தலையை வெட்டி மரண தண்டனை நிகழ்த்துவதை வழமையாகக் கொண்டிருந்த சவூதியில் கூடக் கடந்த சில ஆண்டுகளாக அது நிறுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம் நாடாகிய மலேசியாவில் ஊரெங்கும் அமைந்துள்ள சீனக் கடைகளில் எந்நேரமும் மதுவும் பன்றிக்கறியும் கிடைக்கின்றன. சென்ற ஆண்டு நிகழ்ந்த அரபு வசந்தத்தின்போது பொதுச் சதுக்கங்களில் பல மில்லியன் பேர்கள் கூடியதில் மட்டுமல்ல, கூட்டியதிலும் முஸ்லிம் இளம் பெண்களுக்குப் பெரும் பங்குண்டு. பாரம்பரியமான மத அடிப்படையிலான கட்சிகளும் இடதுசாரிச் சாய்வுடைய கட்சிகளும் அவர்களுக்குப் பின்னால் அணி திரள வேண்டிய அவசியம் ஏற்பட்டதோடன்றி, இவ்விரு சாராரும் தத்தம் உச்சபட்ச நிலைபாடுகளிலிருந்து (maximalist positions) சற்றே இறங்கி வர வேண்டிய சூழலும் ஏற்பட்டது. இன்று அங்கே உருவாகியிருக்கக் கூடிய அரசுகள், தூக்கி எறியப்பட்ட முந்தைய சர்வாதிகாரிகளின் அளவிற்கு அமெரிக்க அடிவருடிகளாக இல்லாமலும், சவூதி அளவிற்கு மத இறுக்கமும் அடிப்படைவாதத் தன்மை அற்றவைகளாகவும் உள்ளது கண்கூடு. இவையெல்லாம் முஸ்லிம் சமூகங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள். இந்த மாற்றங்களின் ஊடாக சலஃபிகள் போன்ற மத அடிப்படைவாதிகள் ஓரங்கட்டப்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதையும் நாம் காணத் தவறக் கூடாது.

எப்படி வடநாட்டில் எங்கோ ஒரு இந்து உயர்சாதியில் எப்போதோ ஒரு உடன்கட்டை (சதி) நிறைவேற்றப்படுவதை வைத்து இந்தியாவிலுள்ள நூறு கோடி இந்துக்கள் மத்தியிலும் இன்றும் உடன்கட்டை ஏறும் பழக்கம் உள்ளது எனச் சொல்வது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம்தான் ஒட்டுமொத்தமான முஸ்லிம் சமூகத்தையும் ஒருபடித்தான பழக்கமுடையவர்களாகப் பார்ப்பதும். இப்படிச் சொல்வதால் மதங்களுக்குள் பொதுமைப் பண்புகளே இல்லை என்றாகிவிடாது, சிலை வணக்கத்தை ஏற்பது இந்து, பவுத்த, கத்தோலிக்க மதங்களின் பொது நம்பிக்கை என்றால்  சிலை வணக்கத்தை ஏற்காதது முஸ்லிம் மதத்தின் பொதுப் பண்பு. ஆனால் இந்த அடிப்படையில் உலகளாவிய ஒரு மதத்தை எல்லா அம்சங்களிலும் ஒருபடித்தானதாகப் (homogeneous) பார்த்துவிடக் கூடாது என்பதே.

அமெரிக்கத் திரைப்படத்திற்கெதிரான இன்றைய எழுச்சியயைக் கண்டிப்பவர்களில் முஸ்லிம் மேல்தட்டினருக்கும் ஒரு பங்குண்டு. இந்திய, தமிழ்ச் சூழல்களிலும் இதைக் காண முடியும். சமூகத்தில் ஏதோ ஒரு வகையில் பாரம்பரியமாகவோ, இல்லை சொந்த முயற்சியில் முன்னேறியோ இருப்பவர்கள் இத்தகைய கருத்துடையவர்களாக உள்ளதைக் காண இயலும். முஸ்லிம்கள் இதுபோன்ற பிரச்னைகளைக் கண்டுகொள்ளாமல் படிப்பு, தொழில் ஆகியவற்றில் கவனம் செலுத்தி முன்னேறுதல் வேண்டும் என்பது இவர்களின் கருத்து. இந்தப் படத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டிருந்தால் எந்தத் தகுதியும் இல்லாத இப்படம் தானாகவே யார் கண்ணிலும் படாது மறைந்து போயிருக்கும் என்பதும் இதுபோன்ற கிளர்ச்சிகளில் ஈடுபடுவது முஸ்லிம்கள் எல்லோரும் வன்முறையாளர்கள் என்கிற கருத்துக்கு வலுசேர்க்கும் என்பதும் இவர்களின் கருத்து. சமீபத்தில் சென்னையில் நான் கலந்து கொண்ட, பெரும்பான்மையும் மேல்தட்டு முஸ்லிம்களே பங்குபெற்ற ஒரு கூட்டத்தில் இப்படியான பேச்சுக்கள் இடம் பெற்றன.

இந்தக் கருத்தில் உண்மைகள் இல்லாமலில்லை. ஆனால் இதிலுள்ள பிரச்னை என்னவெனில் இந்த எதிர்ப்பை, ஏதோ இந்தப் படத்திற்கு மட்டுமே வந்த எதிர்ப்பாக இவர்கள் முன்வைப்பதுதான். மேற்சொன்ன கூட்டம் நடந்து ஒரு வாரத்தில் திருச்சியில் வேறொரு பிரச்னைக்காக நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் கேட்டார்: “இன்று முஸ்லிம்கள் இந்தத் திரைப்படத்தை எதிர்த்துப் போராடுகிறார்களே, இவர்களில் யாருக்காவது இந்தப் படத்தின் பெயர் தெரியுமா?” இதுவும் உண்மைதான். நிறையப் பேருக்குத் தெரியாதுதான். ஆனாலும் ஏன் இவர்கள் வீதிக்கு வந்தார்கள்? சற்று முன் சொன்ன மேல்தட்டு முஸ்லிம்களின் கருத்துக்கும், மூத்த பத்திரிக்கையாளரின் கேள்விக்கும் ஒரே பதில்தான். பிரச்சினை வெறும் படத்தைப் பற்றியது மட்டுமல்ல என்பதுதான் அது.

சென்னையில் அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பாக நடைபெற்ற ஒரு போராட்டத்தில் கல் வீசப்பட்டு தூதரகக் கண்காணிப்புக் கேமராக்கள், விளக்குகள், கண்ணாடிகள் சில உடைந்தன. இதை ஒட்டி சில முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். செய்தியைப் படித்த நான் அந்த ஆர்பாட்டத்திற்குத் தலைமை ஏற்ற  தலைவரிடம் தொடர்பு கொண்டு விசாரித்தேன். “உங்கள் அமைப்பினர்தான் ரொம்பக் கட்டுப்பாடாக இருப்பார்களே, எப்படி நடந்தது இது?” என்றேன். “ஏழாயிரம் பேர் வருவோம் என நாங்கள் தெரிவித்திருந்தும் உரிய போலீஸ் பாதகாப்பு இல்லை. வெறும் பத்து போலீஸ்கள் தான் அங்கு இருந்தனர்” என்றார் அவர். அது உண்மைதான். இந்தக் காரணத்திற்காகவே அடுத்த இரண்டு நாட்களில் சென்னை நகரப் போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்டார். தலைவர் மீண்டும் சொன்னார்: “இளைஞர்கள் கோபப்படுறாங்க. நாங்க என்ன அமெரிக்கத் தூதரகத்தின் கண்ணாடிகளைத்தானே உடைத்தோம். இந்த அமெரிக்காக்காரன் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களைக் கோடிக் கணக்கில் கொல்லுகிறானே? ஆனால் அவர்களுக்கு ஒரு தண்டனையும் இல்லை. எங்களைக் கைது செய்றாங்களேன்னு கேட்கிறாங்க சார்”.

இப்படிக் கேட்கிற இளைஞர்கள் தீவிரவாதிகளல்லர். சச்சார் அறிக்கை சுட்டிக் காட்டியிருப்பதுபோல படிப்பிலும், இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் உரிய பங்கு பெறத் துடிப்பவர்கள். ஆனால் இந்தத் திசையில் அவர்களின் பாதை அவ்வளவு எளிதானதாக இருப்பதில்லை. முஸ்லிம்கள் என்கிற அடையாளத்தினாலேயே வாய்ப்பு மறுக்கப்படுபவர்கள், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இளமையைத் தொலைப்பவர்கள், சட்டவிரோதக் காவலில் சித்திரவதை செய்யப்படுபவர்கள்தான் ஏராளம். இது குறித்துப் புள்ளி விவரங்களை அடுக்குவதற்கு இங்கு நேரமில்லை.

உலக அளவிலும் முஸ்லிம்களின் நிலைமை இப்படியாக இருப்பதை அவர்கள் பார்க்கிறார்கள். அரசுகளாலும், ஊடகங்களாலும், உளவு மற்றும் காவல் துறைகளாலும், நீதிமன்றங்களாலும் அவர்கள் சந்தேகத்திற்குரிய சமூகமாகக் கட்டமைக்கப்படுவதைக் கண்டு நொந்து போகிறார்கள். உலகளாவிய இந்தச் செயல்பாடுகளில் அமெரிக்கா மற்றும் மேலை ஏகாதிபத்தியங்களின் பங்கை அவர்கள் தினந்தோறும் தம் இரு கண்களாலும் பார்த்துக் கொண்டுள்ளனர். நேரடியான ஆக்கிரமிப்புகள், பதிலி யுத்தங்கள் (proxy wars), ஆளில்லா விமானத் தாக்குதல்கள், பொருளாதாரத் தடைகள் (sanctions)  ஆகியவற்றின் ஊடாக ஈராக், ஆஃப்கானிஸ்தான், சோமாலியா, சூடான், பலூசிஸ்தான், லிபியா, ஈரான் முதலான நாடுகள் மீது அமெரிக்கா மற்றும் நேடோ நாடுகளில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் தொடுத்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்? ஈராக்கில் மட்டும் 10 லட்சம் பேர்களல்லவா? குவண்டனமோ பே போன்ற உங்களின் சட்டவிரோதச் சித்திரவதைச் சாலைகளில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் அத்தனை பேரும் முஸ்லிம்களல்லவா? சதாமும், கடாஃபியும் எத்தனை கொடிய சர்வாதிகாரிகளாக இருந்தபோதும், அவர்களை நீங்கள் பதவி இறக்கம் செய்து கொன்று தீர்த்த முறை மறக்கக்கூடிய ஒன்றா?

ஹிலாரி கிளின்டன் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் உதவியுடனேயே கடாஃபியை இறக்கியவர்கள் கூட அங்கு உங்களின் தொடர்ந்த இருப்பை ஏற்கத் தயாராக இல்லை என்பதுதான் அது. அரபு வசந்தத்தின் ஊடாக இன்று மாறியுள்ள முஸ்லிம் சமூகங்களையும் அரசுகளையும் முன்னைப்போல அவ்வளவு எளிதாக உங்களின் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்பதுதான் அது. ‘முஸ்லிம்களின் அப்பாவித்தனம்’ என்கிற இந்தத் திரைப்படத்திற்கெதிரான இந்த எதிர்ப்பைச் சரியாகப் புரிந்துகொள்வதில்தான் உங்களின் எதிர்காலம் இருக்கிறது. இன்று உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் உங்கள் மீது கொண்டுள்ள ஆத்திரம் உங்கள் கலாச்சாரத்தில் காணப்படும் கருத்துச் சுதந்திரம் என்கிற அம்சத்தின் மீது கொண்ட காழ்ப்பால் உருவானதல்ல. மாறாக அது உங்கள் அரசியலின் மீது கொண்ட காழ்ப்பின் விளைவு. ஏகாதிபத்தியச் செயல்பாடுகளை தேச அரசுகள் என்கிற வரையறையைத் தாண்டி மத அடையாளத்துடன் நீங்கள் இணைத்தீர்கள். ‘கம்யூனிச ஆபத்து’ என்கிற உங்களின் எழுபதாண்டு காலப் பூச்சாண்டி காணாமல் போனபின் அந்த இடத்தில் ‘இஸ்லாமியப் பயங்கரவாதத்தை’க் கட்டமைத்தீர்கள். இதன் விளைவு இன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதும்கூட மதப் பிரச்னைகளின் ஊடாக வெளிப்பட வேண்டியதாக ஆகிவிட்டது.

இந்தப் படத்தைத் தயாரித்தவர்களின் காப்டிக் கிறிஸ்தவ மற்றும் இஸ்ரேலிய அமெரிக்க யூதப் பின்னணிகள், பெருகி வரும் கிறிஸ்தவ அடிப்படைவாதம் மற்றும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளுடன் இவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தெல்லாம் நிறையச் செய்திகள் வந்தாயிற்று. உலகெங்கிலும் இந்தப் படத்தை எதிர்த்து ஆர்பாட்டம் செய்து கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு இந்தப் பின்னணியெல்லாம் எந்த அளவிற்குத் தெரியுமோ தெரியாதோ, எல்லாவற்றிற்கும் பிண்ணணியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இருக்கிறது என்பது நன்றாகவே தெரிந்திருக்கிறது.

24×7களின் உண்மை முகம்!

செய்தி தொலைக்காட்சிகளின் வியாபார போட்டி எந்த எல்லை வரை போகும்? கீழே உள்ளது கடந்த வார உதாரணம்…

அமெரிக்காவின் போனிக்ஸ் (Phoenix) நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் ஒரு தம்பதியினர் சாப்பிட்டுக்கொண்டிருக்க… அவர்களின் காரை ஒருவன் திருடிக்கொண்டு போகிறான். விஷயம் அறிந்து அவர்கள் போலீஸுக்குத் தகவல் சொல்கின்றனர். போலீஸ் காரை துரத்துகிறது. போலீஸை நோக்கி திருடன் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே செல்கிறான். திடீரென வானத்தில் ஒரு ஹெலிகாப்டரும் இந்த சேஸிங்கில் இணைந்துகொள்கிறது. அந்த ஹெலிகாப்டர், Fox News சேனலின் லைவ் வாகனம்.

அந்த பரபரப்பான திருடன் & போலீஸ்’ காட்சியை மேலும் பரபரப்புக் கூட்டி, ஹெலிகாப்டரில் இருந்தபடியே லைவ் செய்கிறார் தொகுப்பாளர் ஷெப்பர்டு ஸ்மித். செப்டம்பர் 28 காலை 11 மணிக்கு கார் திருடு போன அடுத்த ஒரு மணி நேரத்தில் இது நடக்கிறது. லைவ் என்பதால் பார்வையாளர்கள் ஒரு ஆக்ஷன் படத்துக்கான த்ரில்லுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இடையிடையே விளம்பர இடைவேளைகளும் உண்டு. ஏறத்தாழ 90 நிமிடங்களை கடந்து கலிபோர்னியா எல்லையில் ஒரு பாலைவனத்தில் திருடன் ஓட்டிய கார் நிற்கிறது.

பின்னால் துரத்திச் சென்ற போலீஸ் வாகனம் சற்று எச்சரிக்கையுடன் வண்டியை நிறுத்த… காரில் இருந்து இறங்கிய திருடன் முன் பக்கம் போகிறான். “என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலை.. நமக்கு நெர்வஸா இருக்கு..’” என பதற்றத்துடன் விவரித்துக்கொண்டிருக்கிறார் ஸ்மித். யாரும் எதிர்பாராத வகையில், திருடன் துப்பாக்கியை தன் தலையில் வைத்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொள்கிறான். இரத்தம் தெறிக்கும் காட்சிகள் திரையில் விரிந்த உடனேயே, சட்டென நேரடி ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டு விளம்பர இடைவேளை விடப்படுகிறது.

இடைவேளை முடிந்ததும், ‘நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை. இதற்காக மன்னிப்புக் கேட்கிறோம்’ என்று சொன்னார் ஸ்மித். சேனல் நிர்வாகமும், “லைவ் என்பதால் காட்சிகள் 5 முதல் 10 விநாடிகள் தாமதமாகவே வந்து சேரும். அதனால் எங்களால் அப்படி நடக்கும் என யூகிக்க முடியவில்லை. பார்வையாளர்கள் மன்னிக்க வேண்டும்’” என்று சொல்லியிருக்கிறது. இந்தக் கூற்றுக்கு பின்னே உண்மை இல்லை என்பதை ஃபாக்ஸ் தொலைக்காட்சியின் வரலாற்றை அறிந்தவர்கள் ஒப்புக் கொள்வார்கள்.

ஹெலிகாப்டரில் இருந்து துரத்துவதும் போலீஸ்தான் என்று நினைத்து பீதியடைந்து அந்த திருடன் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம்’ என்ற கோணத்தில் பார்த்தால் இந்த தற்கொலையில் ஃபாக்ஸ் நியூஸுக்கும் ஒரு பங்கு இருக்கிறது. இதைக் கடந்து, அனைத்தையும் பரபரப்பான செய்தியாக’ மாற்றத் துடிக்கும் செய்தி தொலைகாட்சிகளின் வியாபாரப் போட்டியைதான் நாம் இங்கே பேச வேண்டும். மேலே உள்ள ஃபாக்ஸ் நியூஸ் டி.வி.யின் லைவ் நிகழ்ச்சி தற்செயலாக நிகழ்ந்தது.

ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஒன்றும் நமக்கு புதிதல்ல. ஏ.எக்ஸ்.என்., ஸ்டார் வோர்ல்டு, டிஸ்கவரி, ஹிஸ்டரி உள்ளிட்ட பல ஆங்கில சேனல்களில் இத்தகைய நிகழ்ச்சிகள் ஏராளமாக வருகின்றன. அவை அனைத்தும் அந்தந்த நாட்டு காவல்துறையின் கூட்டணியுடனேயே படம் பிடித்து ஒளிபரப்பப்படுகின்றன. கற்பனை பொழுதுபோக்கில் சுவாரஸ்யம் குறைந்துவிடுவதால், அரசாங்கமும், தனியார் தொலைகாட்சிகளும் கூட்டாக உழைத்து மக்களுக்கு இத்தகைய உண்மையான அதிரடிக் காட்சிகளை வழங்கி வருகின்றன.

அப்படி வழங்கப்பட்ட சேவை’களில் ஒன்றுதான் 1998-ல் நடந்த டேனியல் ஜேம்ஸின் லைவ் தற்கொலை. அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தை சேர்ந்த டேனியல் 40 வயதை கடந்துவிட்டாலும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு எய்ட்ஸ், கேன்ஸர் உள்ளிட்ட பல நோய்கள் இருந்தன. டேனியல், ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்தார். நோய்களுக்கு சிகிச்சை எடுக்க போதுமான பணம் அவரிடம் இல்லை. அவர் HMO (Health maintenance organization) என்ற நிறுவனத்தில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தார். அது ஒரு ப்ரீபெய்டு சர்வீஸ். பணம் இருக்கும் வரைதான் சிகிச்சை. மேற்கொண்டு சிகிச்சை தேவை எனில் ‘டாப்&அப்’ செய்ய வேண்டும். டாப்-அப்புக்கு டேனியலிடம் பணம் இல்லை. ஆகவே அவருக்கு சிகிச்சையும் இல்லை.

நோய்களின் கொடுமையில் சிக்கி துயருற்ற டேனியல், வேதனையின் உச்சத்தில் இருந்த ஒரு நாள்… தன் காரை ஒரு தெருவில் நிறுத்திவிட்டு துப்பாக்கியை வெளியே எடுக்க… ஏரியா பரபரப்பானது. பாதைகள் அடைக்கப்பட்டு போலீஸ் வந்தது. தொலைகாட்சிகளில் ‘லைவ்’ தொடங்கியது. பேச்சுவார்த்தைகள் எடுபடவில்லை. அவர் காருக்குள் ஏறிக்கொன்டு தீ வைத்துக்கொண்டார். உடம்பு எங்கும் எரியும் தீயுடன் வெளியில் விழுந்து உருண்டு புரண்டார். பிறகு தன் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அனைத்தும் ‘லைவ்’ செய்யப்பட்டது.

***

1980-ல் அமெரிக்காவில் ஒளிபரப்பாகத் துவங்கிய சி.என்.என்&தான் உலகின் முதல் 24 மணி நேர செய்திச் சேனல். அதைத் தொடர்ந்து மீடியா முதலை ரூபர்ட் முர்டோச்சால் ஃபாக்ஸ் நியூஸ் சேனல் துவங்கப்பட்டது. பிறகு இந்த 24×7 அலை உலகம் எங்கும் ஒரு மேனியாவாக பரவி செய்திச் சேனல்கள் பல்கிப் பெருகின. தம்ழிநாட்டில் சன் நியூஸ்தான் முதல் 24 மணி நேர செய்திச் சேனல். இப்போது புதிய தலைமுறை, என்.டி.டி.வி. இந்து, கலைஞர் செய்திகள், ராஜ் நியூஸ், கேப்டன் நியூஸ், ஜெயா ப்ளஸ், ஜிடி.வி.எஸ்.பி.வி’வி, சத்யம் டி.வி. போன்றவையும் இணைந்திருக்கின்றன. விரைவில் பாலிமரில் இருந்தும், தினமலரில் இருந்தும் ஒவ்வொரு நியூஸ் சேனல்கள் வரப்போகின்றன. ஏ.சி.சண்முகம் ‘வானவில்’ என்ற பெயரில் ஒரு செய்தி சேனல் கொண்டு வரப் போகிறார். ஆக, தமிழ்நாட்டில் மட்டுமே பன்னிரண்டு, 24×7 செய்தி தொலைகாட்சிகள்.

இந்திய அளவில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகம். இந்தியில் 32 நியூஸ் சேனல்கள், அஸ்ஸாமி மொழியில் 19, ஆங்கிலத்தில் 19, கன்னடத்தில் 7, மலையாளத்தில் 10, மராத்தியில் 7, ஒரிய மொழியில் 8, தெலுங்கில் 25 என நாடு முழுவதும் செய்தி தொலைகாட்சிகளின் எண்ணிக்கை மலைக்க வைக்கின்றது. இவை அனைத்தும் சாட்டிலைட் சேனல்களின் எண்ணிக்கை மட்டுமே. அந்தந்த மாவட்ட, வட்டார அளவில் வரும் லோக்கல் சேனல்களையும் கணக்கில் கொண்டால் இந்திய செய்தி தொலைகாட்சிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தொடலாம். இவர்கள் அத்தனை பேருக்கும் எல்லா நாளும், எல்லா நேரமும் எப்படி செய்தி கிடைக்கும்? “ஒரு நாள் நியூஸ் கிடைக்கலேன்னா என்ன பண்ணுவீங்க?’” என ஊடகங்களில் பணிபுரிபவர்களிடம் அவ்வப்போது கேட்கப்படுவதுண்டு. இது ஒரு சுவாரஸ்யமான விடைக்கான கேள்விதான்.

ஒரு பொருளை, ஒரு ரசனையை, ஓர் உணர்ச்சியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக நுகர்ந்து அதை சக்கையாக்கிவிட்டு, அடுத்ததை நோக்கி நகர்வதே நுகர்வுக் கலாச்சாரத்தை பரப்பி வரும் உலகமயத்தின் பண்பு. இது கொள்கையின் குணம் மட்டுமல்ல… அதை அனுபவிக்கும் மக்களின் குணமாகவும் மாறுகிறது. உதாரணமாக, உச்சகட்ட விளம்பரங்களுடன் வெளியிடப்பட்டு ஒரே வாரத்தில் முடிந்தவரை கல்லா கட்டும் சினிமாக்கள், தன்னிடம் இருப்பது நன்றாக இயங்கிக் கொண்டிருந்தாலும் புதிய மாடல் செல்போனை வாங்க அலையும் மக்கள்… என இரு உதாரணங்கள் சொல்லலாம். இதன் சாரத்தை செய்தி தொலைகாட்சிக்கும் நீட்டிக்க முடியும். ஆற அமர உட்கார்ந்து ஆய்வு செய்து உண்மையை கண்டறிவது எல்லாம் அவர்களுக்கு தேவை இல்லாதது. அந்த நேரத்தில் மக்களை பார்க்க வைக்க ஒரு காட்சி பதிவு வேண்டும். அது நித்தி-ரஞ்சி வீடியோவாக இருக்கலாம். சிவகாசி வெடிவிபத்தாக இருக்கலாம். அவர்களை பொருத்தவரை அது பிரைம் டைம் புல்லட்டின் பரபரப்பு மட்டுமே. மக்களும் இந்த ‘பெட்டிக்கு வெளியே’ சிந்தித்து அறிந்துகொள்ள விரும்பவில்லை என்பதால் இந்த வியாபாரம் தொய்வின்றி தொடர்கிறது.

உண்மையில், அனைத்தையும் அந்தந்த நேரத்து பரபரப்பாக மாற்றத் துடிக்கும் செய்தி தொலைகாட்சிகளின் இந்த வியாபாரப் போட்டி, இன்றைய நவீன உலகின் மிகப்பெரிய அபாயம். 24 மணி நேரமும் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் மிகுந்த தீனி இவர்களுக்கு தேவை. யதார்த்தத்தில் ஒவ்வொரு நிமிடமும் அப்படியான சுவாரஸ்யங்கள் நிகழ்வதில்லை. ஆகவே ஒரு செயற்கையான பரபரப்பு திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. அது, மத்திய பிரதேசத்தின் சிறு கிராமத்தில் ஒரு சிறுத்தைப்புலி கிணற்றுக்குள் விழுந்துவிட்ட செய்தியாக இருக்கும். கிணற்றை சுற்றி பதினைந்து லைவ் வாகனங்கள் நின்றுகொண்டு, ஒவ்வொரு டி.வி. ஸ்டுடியோவிலும் இரண்டிரண்டு பேர் அமர்ந்துகொண்டு… தங்கள் முகங்களை மிகுந்த பதற்றத்துடன் மெயின்டெய்ன் செய்து… நடிகர் திலகங்களாகவே மாறி விடுகின்றனர்.

ஒரு சராசரி மனிதனை அறைக்குள் பூட்டி, தொடர்ந்து ஒரு வாரத்துக்கு செய்தி தொலைகாட்சிகளை மட்டுமே பார்க்க வேண்டும் என்று சொன்னால், நிச்சயம் அவர் நாடே கடும் பதற்றத்தில் பற்றி எரிவதாகதான் நினைத்துக் கொள்வார். அந்த அளவுக்கு இந்த செய்தி தொலைகாட்சிகள், ஒட்டுமொத்த தேசமும் பதற்ற நிலையில் இருப்பதை போல செயற்கையான தோற்றத்தை உண்டு பண்ணுகின்றன. டைம்ஸ் நவ்வில் அருணாகோஸ்சுவாமியும், சி.என்.என்.ஐ.பி.என்’னில் ராஜ்தீப் சர்தேசாயும் கொடுக்கும் சவுண்டுக்கு இந்நேரம் புரட்சி முடிந்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் மக்களின் நலனில் இருந்து அல்லாமல் ஒரு சண்டை படத்தின் விறுவிறுப்புடன் மட்டுமே செய்திகளை வழங்குகின்றனர். ஆகவே இந்திய நடுத்தர வர்க்கத்துக்கு அது ஒரு சிறந்த பொழுதுபோக்காக இருக்கிறது. அதனால்தான் கூடங்குளம் லைவ் காட்சிகளின் விளம்பர இடைவேளையில் “உலகத்தரம் மிக்க எஸ்.ஆர்.எம். ஹாஸ்பிட்டலின்’” மேன்மை குறித்து முரண்படாமல் பார்க்க முடிகிறது. “ஸ்பைஸ் ஜெட் பயணக் கட்டண தள்ளுபடி”யை மனம் குறித்துக்கொள்கிறது.

எண்ணிக்கையில் பெருகிவிட்ட இந்த செய்தி சேனல்களுக்கு ஒவ்வொரு நாளும் ‘எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோரி’ கொடுக்க வேண்டிய நிர்பந்தம். ‘மற்ற டி.வி.யை விட நாங்கதான் பெஸ்ட்’ என நிரூபிக்கத் துடிக்கிறார்கள். அரசியல் தலைவர்களின் பிரஸ் மீட்டின் போது மைக் நீட்டுவதில் அடித்துக் கொள்வதில் இருந்தே இது தொடங்குகிறது. கோரமான மும்பை தாக்குதலின் போது இந்திய சேனல்கள் அனைத்தும் பற்றி எரியும் ஹோட்டலின் முன்பு நின்றபடி, அந்த வன்முறை காட்சிகளை பரபரப்பான சண்டை படத்தை போல வர்ணித்ததை கண்டோம். அத்தனை பேரும் மறக்காமல், ‘ஒன்லி ஆன் ….. டி.வி.’ என்று கூச்சமே இல்லாமல் இழவு வீட்டில் பெருமை தேடுவதில் குறியாய் இருந்தார்கள்.

இப்படி முதலில் செய்திகளை தருவதில் போட்டிப் போடும் இவர்கள், உண்மையை தருவதில் போட்டிப் போடுவது இல்லை. கூடங்குளத்தில் காவல்துறையின் அடக்குமுறையை ஏற்றுக்கொள்ளும் வகையில் நியாயப்படுத்துவதில்தான் இவர்களிடையே போட்டியேத் தவிர, மக்கள் போராட்டத்தின் நியாயத்தை வெளியே கொண்டு வருவதில் அல்ல. இலங்கையில் நடந்த இன அழிப்பின் போதும் இதுதான் நடந்தது. இந்திய அயலுறவு கொள்கையை ஏற்றுக்கொண்டு ‘இலங்கையா…? அது எங்கேயோ ஆப்பிரிக்கா பக்கத்துலல்ல இருக்கு’ என்பது மாதிரிதான் நடந்துகொண்டன ஊடகங்கள். இல்லாத செய்திகளை ஊதிப் பெரிதாக்கும் 24 நேர செய்தி தொலைகாட்சிகள் எதுவும் இலங்கை இன அழிப்பை கண்டுகொள்ளவே இல்லை.

வேளச்சேரி ஐந்து பேர் என்கவுண்டர் முதல் தஞ்சாவூர் தமீம் அன்சாரி கைது வரை அனைத்து பிரச்சினைகளிலும் போலீஸுக்கும், அரசாங்கத்துக்கும் பி.ஆர்.ஓ. வேலை பார்ப்பதையே முதன்மை பணியாக செய்கின்றன செய்தி தொலைகாட்சிகள். சுருங்கச் சொன்னால் இவர்களின் போட்டி எல்லாம் ஆளும் வர்க்கத்துக்கு யார் அதிகமாக அடிபணிந்து சேவகம் செய்வது என்பதில்தானே ஒழிய, மக்களின் நலன் அல்ல. ஆனாலும் இந்த ஜனநாயகத்தின் நான்காவது தூண்களுக்கு நடுநிலை வேடம் போட வேண்டிய அவசியம் இருப்பதால், அவ்வப்போது கோட்டை தாண்டி வந்து இந்தப் பக்கம் வந்து நான்கு வரி டயலாக் பேசிக்கொள்வார்கள். ஊடகங்களின் இந்த விழாக்கால சமூக அக்கறை’யில் மனம் மகிழும் காரியவாத போராளிகள் பலர், இவர்களின் பச்சையான வியாபாரத்துக்கு கொள்கை சாயம் பூசுகின்றனர்.

உண்மையில் ஒரு நாளின் 24 மணி நேரமும், ஒரு வாரத்தின் 7 நாட்களும் இடைவிடாமல் ஊடகங்களில் வெளிக்கொண்டு வர வேண்டிய மக்கள் பிரச்சினைகள் ஏராளம் இருக்கின்றன. காவிரி பிரச்னையில் அரசியல் கட்சிகளின் துரோகங்கள், அழிக்க வரும் அந்நிய முதலீடு, பாடாய்படுத்தும் பவர் கட், உணவுப் பொருட்களின் விலை உயர்வு, கேஸ், மளிகை, வீட்டுவாடகை, கல்வி கட்டணம், மருத்துவச் செலவுகள், ரியல் எஸ்டேட், பொருளாதார மோசடிகள், வரதட்சணை, சாதி, அதிகரிக்கும் வேலைநேரம், சீரழியும் சுற்றுச்சூழல்… என அனுதினமும் ஆயிரமாயிரம் புதிய பிரசிச்னைகள் மக்களை அச்சுறுத்துகின்றன. இந்தப் பிரச்சினைகளின் அடிப்படைகளை மறைத்து வெறுமனே சென்சேஷனாக மாற்றுவதை மட்டும் சேனல்கள் செய்து வருகின்றன.

இந்த தொலைகாட்சிகள் ஏன் மக்கள் பிரச்சினைகளில் அக்கறை காட்டுவது இல்லை என்ற கேள்விக்கு அவற்றின் உரிமையாளர் யார் என்று பார்த்தால் விடை தெரிந்துவிடும். தனியார் கல்வியில் பெரும் சூறையாடலையே நிகழ்த்தும் எஸ்.ஆர்.எம். குழுமம், ‘புதிய தலைமுறை’’யின் முதலாளி. கட்சியிலும், ஆட்சியிலும் கொள்ளையடித்த மக்கள் பணத்தில் உருவானதே ‘சன் நியூஸ்’’. ரியல் எஸ்டேட் ஊழல் குற்றச்சாட்டால் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்ட மடிப்பாக்கம் வேலாயுதம், ‘ஜிடி.வி.எஸ்.பி.வி’வி’யின் உரிமையாளர். கிறிஸ்தவ மக்களிடம் இயேசுவின் பெயரை சொல்லி சுரண்டும் நாலுமாவடி மோகன் சி.லாசரஸ் ‘சத்யம் டி.வி’’யின் முதலாளி. இப்படி அனைத்து ஊடக உரிமையாளர்களுமே சுரண்டு கொழுத்த பண முதலைகள்தான். இவர்கள் தங்களின் சுரண்டல் முகத்தை மறைத்துக்கொள்ளவும், ஊழல் பணத்தை பாதுகாக்கவும், பெருக்கவுமே ஊடகத் தொழிலை செய்கிறார்களே அல்லாமல் மக்களின் நலன் சார்ந்து அல்ல!

மேலும் படிக்க:

As It Followed a Car Chase, Fox News Showed a Suicide
Man Kills Self as City Watches
Health maintenance organization
இந்திய 24×7 லைவ் தொலைக்காட்சிகள்

(நன்றி: வினவு)

அமெரிக்கத் திரைப்படத்திற்கு எதிரான உலக முஸ்லிம்களின் போராட்டம்

உலகெங்கிலுமுள்ள முஸ்லிம் மக்கள் அமெரிக்கத் திரைப்படம் ஒன்றை எதிர்த்துக் கிளர்ந்துள்ளனர். முஸ்லிம்கள் தம் உயிரினும் மேலாக மதிக்கும் இறைத்தூதர் நபிகள் நாயகத்தை இழிவு செய்யும் ‘முஸ்லிம்களின் அப்பாவித்தனம்’ (The Innocence of Muslims) என்கிற அந்தத் திரைப்படத்தைத் தயாரித்தவர் அமெரிக்கக் குடியுரிமை கொண்ட ஒரு இஸ்ரேலிய யூதர். பெயர் சாம் பாசில். ஃப்ளோரிடாவைச் சேர்ந்த கிறிஸ்தவ அடிப்படைவாதியும் இஸ்லாம்-வெறுப்பாளருமான கிறிஸ்டியன் டெர்ரி ஜோன்ஸ் என்பவர் இத்திரைப்படத்தைப் பரப்பி வருகிறார்.

படத்தைத் தயாரித்த சாம் பாசிலின் உண்மைப் பெயர் நகவ்லா பேசிலி நகவ்லா எனவும் அவர் யூதரல்ல எகிப்திய காப்டிக் கிறிஸ்தவர் என்றும் இன்னொரு கருத்து உள்ளது. இவர் கலிஃபோர்னியாவை மையமாகக் கொண்ட ஒரு ரியல்எஸ்டேட்காரர் எனவும் நிதி மோசடிக்காகத் தண்டிக்கப்பட்டவர் எனவும் ஒரு தகவல் உள்ளது. பாசில் வேறு, நகவ்லா வேறு என்றும் சிலர் சொல்கின்றனர். ஆக படத்தின் பின்னணி மர்மமாக உள்ளது. ஒன்று நிச்சயம். இஸ்லாமோ ஃபோபியாவைத் தூண்டும் அடிப்படைவாதிகள் இப்படத்தை எடுத்துள்ளனர். 5 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு முஸ்லிம் வெறுப்பைக் கக்கும் ஆயிரம் அமெரிக்க யூதர்கள் நிதி உதவி செய்துள்ளனர். படத்தில் நடித்துள்ள நடிகர்கள் இது இப்படியான படம் எனச் சொல்லப்படாமலேயே தாம் இதில் நடிக்க வைக்கப்பட்டோம் என்கின்றனர்.

ஒரு நல்ல திரைப்படத்துக்குரிய எந்த அம்சமும் இல்லாத இந்த மூன்றாந்தரத் திரைப்படம் இப்போது இணையத் தளங்களில் கிடைக்கிறது. “ஒரு மாபெரும் மதத்தை இழிவு செய்து, முஸ்லிம்கள் மத்தியில் ஆத்திரத்தைத் தூண்டும் நோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கும் அமெரிக்க அரசிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என ஹிலாரி கிளின்டன் அறிவித்துள்ள போதிலும் படத்தைத் தயாரித்த சாம் பாசில் எந்த வருத்தத்தையும் தெரிவிக்கத் தயாராக இல்லை. இறைத்தூதர் நபிகள் நாயகத்தை ஒரு “ஏமாற்றுப் பேர்வழி” எனவும் “இஸ்லாம் ஒரு புற்று நோய்” எனவும், இஸ்லாம் மதத்தின் அபத்தங்களைத் தோலுரிக்கவே இந்தப் படத்தைத் தாம் தயாரித்துள்ளதாகவும் அவர் பேட்டியளித்துள்ள செய்திகள் பத்திரிக்கைகளில் வந்துள்ளன.

அவர் மேலும் கூறியுள்ளவற்றையும், படத்தில் இறைத்தூதர் முகம்மதும் இஸ்லாமும் சித்திரிக்கப்பட்டுள்ள விதங்களையும் இங்கே பதிவு செய்வது முஸ்லிம் மக்களின் மனத்தைப் புண்படுத்தும் என்பதால் தவிர்க்கிறேன்.

எதிர்பார்த்ததைப் போலவே மிகப்பெரிய எதிர்வினைகளை இப்படம் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. லிபிய நகரமான பெங்காசியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன் நிகழ்ந்த ஆர்பாட்டம் தாக்குதலாக மாறி அமெரிக்கத் தூதர் கிறிஸ்டபர் ஸ்டீவன்சும் இதர மூன்று அமெரிக்க அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். எகிப்து, ஏமன், துனீசியா, பாகிஸ்தான், வங்கதேசம் என முஸ்லிம் உலகெங்கிலும் அமெரிக்கத் தூதரகங்கள் முன் ஆர்பாட்டங்கள் நடந்துள்ளன. கார்ட்டூமில் நடைபெற்ற போலீஸ் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலும் காஷ்மீர் உள்ளிட்ட பல இடங்களில் அமெரிக்கத் தூதரகங்கள் முன் ஆர்பாட்டங்கள் நடந்துள்ளன. சென்னையில் நேற்று (14.9.12) ‘தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்’ நடத்திய ஆர்பாட்டத்தில் அமெரிக்கக் கொடிகள் எரிக்கப்பட்டதோடு கல்வீச்சில் கண்காணிப்புத் தொலைக்காட்சி ஒன்றும் மின் விளக்குகளும், கண்ணாடிகளும் சேதமடைந்துள்ளன. இதையொட்டி முஸ்லிம் இளைஞர்கள் பலர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 7000 பேர்கள் வரை ஆர்பாட்டத்தில் கலந்துகொள்வோம் என முன்னதாகவே அறிவித்திருந்தும் காவல்துறை போதிய காவலர்களை அங்கு நிறுத்தாததோடு, ஆர்பாட்டக்காரர்களைக் கைது செய்து அகற்றுவதற்குப் போதிய வாகனங்கள் கொண்டு வரப்படாததும்தான் நடந்த வன்முறைகளுக்குக் காரணம் என ஆர்பாட்டத்திற்குத் தலைமை ஏற்ற தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

ஆர்பாட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்கா அந்தந்த நாட்டு அரசுகளை வற்புறுத்தியுள்ளது. லிபியாவை நோக்கி அமெரிக்கப் போர்க் கப்பல்கள் இரண்டு வந்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. லிபியாவில் செப்டம்பர் 11ஐ ஒட்டி அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டிருப்பதால், இது ‘ஜிஹாதிகள்’ நடத்திய பயங்கரவாதத் தாக்குதல் என்பதாக ஒரு கருத்தையும் அமெரிக்கா உருவாக்கி வருகிறது. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள சூழலில் திட்டமிட்டு முஸ்லிம்களைக் கோபம் கொள்ளச் செய்வதற்கான ஒரு சதி இது என்றொரு கருத்தும் உள்ளது. முஸ்லிம் கோபத்திற்கு எதிர்வினை ஆற்றுவதன் மூலம் வேட்பாளர்கள் தம் ஆதரவுத் தொகுதியை அதிகரித்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பாக இப்படிச் செய்யப்பட்டது என்பது இதன் உட்பொருள்.

லிபியாவில் நடந்துள்ளது பயங்கரவாதத் தாக்குதலா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, இன்று உலகெங்கிலும் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த எதிர்ப்பை வெறுமனே இந்தத் திரைப்படத்தை நோக்கிய எதிர்ப்பாகக் கருத முடியாது. இந்த எதிர்ப்பிற்குப் பின்னணியாக இரண்டு அம்சங்கள் உள்ளன. இறைத் தூதர் முகம்மதையும் இஸ்லாம் மதத்தையும் மேற்குலகு இன்று நேற்றல்ல, கடந்த பல நூற்றாண்டுகளாகவே தொடர்ந்து இழிவு செய்து வருகிறது.

13ஆம் நூற்றாண்டில் ஃப்ரான்சை ஆண்டவரும் முஸ்லிம்கள் மீது சிலுவைப் போரைத் தொடங்கியவருமான பதினாலாம் லூயி பின்னர் கிறிஸ்தவ மதத்தால் புனிதராக அறிவிக்கப்பட்டார். “இறுதி நாட்களில் எதிர் கிறிஸ்து ஒருவர் தோன்றி ஆட்சி செய்வார்” எனக் கிறிஸ்தவர்களின் புதிய ஏற்பாட்டில் உள்ள வாசகத்தைச் சுட்டிக்காட்டி அந்த எதிர் கிறிஸ்து முகம்மது நபிதான் என மேலைச் சமூக அறிவுஜீவிகள் தொடர்ந்து கூறிவந்தனர். நபிகள் நாயகத்திற்குப் புனித குர்ஆன் இறை அருளால் இறக்கப்பட்டது என்கிற முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கையும் கேலி செய்யப்பட்டது. அப்படிச் சொல்லி நபிகள் மக்களை ஏமாற்றி வந்தார் எனவும், இறை வசனம் இறங்கியபோது நபிகள் அடைந்த பரவசமும் வேதனைகளும் வெறும் காக்காய் வலிப்பே எனவும் நூல்கள் எழுதப்பட்டன. நபிகள் வாழ்ந்த வரலாற்றுச் சூழலைக் கணக்கில் கொள்ளாமல் அவரின் பலதார மணங்களும், சிறுமி ஆயிஷாவை அவர் திருமணம் செய்ய நேர்ந்ததும் இழித்துரைக்கப்பட்டன.

நபிகளைப் பொய்யராகச் சித்திரித்து எழுதப்பட்ட மான்டி குரூசின் ‘டிஸ்புடேஷியா’ எனும் நூலை சீர்திருத்தக் கிறிஸ்தவத்தைத் தோற்றுவித்த மார்டின் லூதர் மொழிபெயர்த்து ஒரு முன்னுரையும் எழுதினார். மகாகவி தாந்தே தனது புகழ்பெற்ற ‘தி டிவைன் காமெடி’ எனும் நூலில் நபிகளை நரகத்தின் ஏழாவது குழியில் உழல்வதாக எழுதினார். ‘ரோம சாம்ராஜ்யத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்’ எனும் முக்கிய நூலை எழுதிய கிப்பன், “கொள்ளைகளின் மூலம் அழகிய பெண்களையும் நிறைய சொத்துக்களையும் அடையலாம் என ஆசையூட்டி இஸ்லாத்தை வளர்த்தார்” என நபிகள் பற்றி எழுதினார்.

இப்படி மேலைச் சமூகம் இஸ்லாத்தை இழிவு செய்து வந்ததற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும். முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் நபிகள் நாயகம் ‘ஓர் அழகிய முன்மாதிரி’. எதை ஏற்றுக் கொண்டாலும் அவரை இழிவு செய்வதை அவர்களால் தாங்க முடியாது. மேலைச் சமூகம் தொடர்ந்து செய்து வந்த இழிவுகளினால் முஸ்லிம்கள் மனம் புண்பட்டுக் கிடந்த பின்னணியை மறந்து விட்டு சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் வசனங்கள்’ நூலுக்கு ஏற்பட்ட எதிர்ப்பை (1989) நாம் புரிந்து கொள்ள முடியாது. நபிகளை இழிவு செய்த அந்நூலுக்கு ஆயத்துல்லா கொமைனி விதித்த ஃபத்வாவை நாம் ஏற்றுக் கொள்ள இயலாது என்பது உண்மைதான். ஆனாலும் ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கொமைனியின் இந்த ஃபத்வாவை 44 முஸ்லிம் நாடுகளும் எதிர்த்தன. 2005ல் டென்மார்க் நாட்டு இதழ் ஒன்றில் நபிகளின் கேலிச் சித்திரம் வெளியிடப்பட்டபோது ஏற்பட்ட எதிர்ப்பும் இத்தகையதே.

முஸ்லிம்கள் எல்லோரும் ஜிஹாதிகள், சகிப்புத்தன்மை அற்றவர்கள். அதனால்தான் ஒரு திரைப்பட்டத்தைக்கூட அவர்களால் சகித்துக் கொள்ள இயலவில்லை என்கிற ஒரு கருத்தைக் கட்டமைப்பதும் கூட இத்தகைய திரைப்பட வெளியீடுகளின் நோக்கமாக உள்ளது. ஆனால், இப்படியான எதிர்ப்புகளை ஏதோ முஸ்லிம்கள் மட்டுமே மேற்கொள்கின்றனர் என்பதல்ல. டான் பிரவுனின் ‘டாவின்சி கோட்’ திரைப்படத்திற்கும், ‘தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் கிரைஸ்ட்’ படத்திற்கும் கிறிஸ்தவ சமூகம் காட்டிய எதிர்ப்பை நாம் மறந்து விட முடியாது. டாவின்சி கோட் திரைப்படத்தைத் தமிழக அரசு தடை செய்தது. இந்துத்துவ அமைப்புகள் இதுபோல நடத்திய போராட்டங்களை நாம் அறிவோம். ஓவியக் கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஏன் ‘வாட்டர்’ போன்ற படத்தின் படப்பிடிப்புகளையும் கூட அவர்கள் எதிர்த்துள்ளனர். மிகச் சமீபத்தில் ‘டாம் 999’ திரைப்படத்திற்குத் தமிழகத்தில் ஏற்பட்ட எதிர்ப்பையும் அறிவோம்.

எனினும் இன்று இந்தத் திரைப்படத்தின் மீதான கோபம், அந்தப் படத்தோடு நின்று விடாமல் அமெரிக்காவின் மீது திரும்பியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் முஸ்லிம் நாடுகளின் மீது அமெரிக்கா தொடுத்து வரும் அநீதியான ஆக்கிரமிப்புகள், போர்கள், நாட்டெல்லைகளைத் தாண்டி மேற்கொள்ளப்படும் ட்ரோன் தாக்குதல்கள் ஆகியன அதன் மீது உலக முஸ்லிம்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவின் கர்னல் கடாஃபியும், ஈராக்கின் சதாம் உசேனும் நேட்டோ மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளால் கொல்லப்பட்ட முறைகள் அவர்கள் மனத்தில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியுள்ளன, ‘ஆட்சி மாற்றம்’ (regime change) என்கிற பெயர்களில் அவர்கள் முஸ்லிம் நாடுகளுக்குள் அத்துமீறிப் புகுந்து அரசுகளைக் கவிழ்ப்பதும், ஷிஆ- சன்னி சகோதரப் போர்களை உருவாக்குவதும் நிலையற்ற ஆட்சிகளுக்குக் காரணமாவதும் எப்போதையும் விட முஸ்லிம்கள் மத்தியில் அமெரிக்க எதிர்ப்பை அதிகரித்துள்ளது.

லிபியா, ஆஃப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்க ஆக்கிரமிப்பு ஏற்படுத்திய குழப்பங்களின் விளைவாக இன்று அங்கெல்லாம் ஆயுதம் தாங்கிய தீவிரவாத அமைப்புகள் சுதந்திரமாக நடமாடுகின்றன. பெங்காசியில் கொல்லப்பட்ட அமெரிக்கத் தூதர் கிறிஸ்டஃபர் ஸ்டீவன்ஸ் கடாஃபிக்கு எதிரானவர்களின் துணையோடு அங்கு அமெரிக்க இருப்பை உறுதி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா தான் விதைத்த வினைகளை இப்போது அறுவடை செய்யத் துவங்கியிருக்கிறது.

நன்றி: சமகாலம் (கொழும்பு).