Home Blog Page 6

ஊரடங்கு: கோவில் பூசாரியை முஸ்லிம் எஸ்.பி தாக்கினாரா?

மத்தியப் பிரதேசத்திலுள்ள ஒரு கோவிலில் ராமநவமி நாளென்று தனியாக வழிபாடு செய்துவந்த பூசாரி உபேந்திர குமார் பாண்டே என்பவரை ரேவா எஸ்.பி ஆபித்கான் கொடூரமாகத் தாக்கியதாக வடமாநில வட்டாரங்களில் ஒரு செய்தி வைரலாக உலாவிக்கொண்டிருக்கிறது. இதற்காக ட்விட்டரில் #aabid_khan_ko_barkhast_karo (ஆபித்கானை பணிநீக்கம் செய்) என்ற ஹேஷ்டேக் மூலம் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இச்செய்தி உண்மைக்குப் புறம்பானது என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஊரடங்கின்போது ராஜ்குமார் மிஷ்ரா எனும் காவல் ஆய்வாளரே பூசாரியைத் தாக்கியுள்ளார்.

பூசாரியைத் தாக்கும் ராஜ்குமார் மிஷ்ரா [படம்: விஜய்குமார்]

இச்செய்தியிலுள்ள பொய்கள்:

1. ராமநவமி விழாவிற்கு பூசாரி தனியாக வழிபாடு செய்ய வந்தார்.
2. திடீரென்று காவல்துறையினர் அவரைத் தாக்கத் தொடங்கினர்.
3. பூஜை செய்யும் இடத்துக்கு காவலர்கள் காலனிகளுடன் வந்து அவமதித்தனர்.
4. இதற்கெல்லாம் உத்தரவிட்டவர் ரேவா எஸ்.பி. அபித்கான்.

ரேவாவின் ஐ.ஜி. சஞ்சல் சேகருடன் விசாரித்து இந்த விஷயங்களை லல்லண்டாப் தளம் வெளிக்கொண்டு வந்துள்ளது.

கோவிலில் கூடியிருந்த பெண்கள் [படம்: விஜய்குமார்]

உண்மை இதுதான்:

1. படத்தில் இருக்கும் நபர் ரேவாவின் எஸ்.பி. அபித்கான் அல்ல. அவர் அந்த இடத்திற்கே செல்லவில்லை.
2. புகைப்படத்தில் இருப்பவர் சிவில் லைன் காவல்நிலைய ஆய்வாளர் ராஜ்குமார் மிஷ்ரா.
3. பூசாரி கோவிலில் தனியாக இல்லை. பெண்கள் கூட்டம் கூடியிருந்தது எனத் தெரியவந்துள்ளது.

ரேவாவில் ஆஜ்தக் பத்திரிகையாளர் விஜய்குமார் கூறும்போது, இந்தக் கோவில் தேகா, பத்மதர் காலனியில் அமைந்துள்ளது. முன்பே மூன்று முறை கூட்டத்தைத் திரட்டக்கூடாது என பூசாரி உபேந்திர குமார் பாண்டேவிடம் போலீசார் அறிவுறுத்தினர். இந்நிலையில்தான், ஏப்ரல் 1ம் தேதி இந்த நிகழ்வு நடத்தப்பது தெரிகிறது என்றார்.

ரேவா நகரின் ஐ.ஜி. கூறும்போது, தற்போது இந்தக் கட்டுப்பாடு அனைத்து மத வழிபாட்டு இடங்களிலும் பின்பற்றப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், மற்ற மத இடங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் தெரிவித்தார். கோகர் மற்றும் பிச்சியாவின் இரண்டு மசூதிகளிலும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். அங்கே 40-50 பேர் தொழுகைக்காக கூடியதற்காக 188 வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எஸ்.பி ஆபித்கான் தலைமையில் மசூதியில் இருந்து 36 பேரும், கல்லறையிலிருந்து 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களின் வெளியான செய்திகள் மூலம் அறிய முடிகிறது.

ஜிப்ஸி: இஸ்லாமோ ஃபோபியாவின் சிபிஎம் வெர்ஷன்

பத்திரிகையாளராக இருந்து ’குக்கூ’ படத்தின் மூலம் திரைப்பட இயக்குநரானவர் ராஜு முருகன். தனது ’ஜோக்கர்’ படத்துக்காக தேசிய விருது வரை பெற்ற அவரின் இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள ’ஜிப்ஸி’ ஒரு நாடோடியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட திரைப்படம். இந்தச் சமூக அமைப்பில் ஒரு நாடோடியாக அவன் எதிர்கொள்ளும் முரண்பாடுகளைப் பேசுவதன் வழியாக சாதி, மதம் கடந்து மனிதம் முக்கியம் என்று சொல்கிறது படம்.

அதில் 2002 குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையை நினைவுபடுத்தும் வகையிலான அவருடைய பதிவு ஒரு துணிச்சலான முயற்சி. அந்தக் கலவரத்தின் புகைப்பட சாட்சியாக இருக்கும் குதுபுத்தீன் அன்சாரியையும் அஷோக் மோச்சியையும் 2014ஆம் ஆண்டு கேரள சிபிஎம் கூட்டத்தில் ஒரே மேடையில் பேச வைத்தார்கள். ஜிப்ஸி படத்துக்கு அந்த நிகழ்வு ஓர் ஆதாரமான அங்கமாக இருக்கிறது.

இத்திரைப்படம் குறித்த நிறைகளைப் பலரும் பதிவு செய்துள்ளனர். நாம் இந்தக் கட்டுரையில் அது பேசும் அரசியலை விமர்சன நோக்கோடு அணுகுவோம்.

ஜிப்ஸியின் கதைக் கரு வித்தியாசமான ஒன்று. எனினும், பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் சுவாரஸ்யமாக அதைத் திரைக்கதை ஆக்குவதை விடவும் இயக்குநர் படம் முழுக்க கருத்துரைக்க முயற்சித்திருப்பதால் பல இடங்களில் நமக்குப் பிரச்சார நெடியேறுகிறது. இன்னும் சரியாகச் சொன்னால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) பிரச்சாரத் திரைப்படமாகவே அது இருக்கிறது.

படத்தின் தொடக்கத்தில் கஷ்மீரில் வன்முறை நடப்பது போன்ற காட்சி. அதில் மதப்பற்றுள்ள கஷ்மீரி முஸ்லிம் பெண் மற்றும் பண்டிட் இந்து ஆண் ஜோடிகள் (முஸ்லிம் பிரிவினைவாதிகளால்) கொல்லப்பட்டுவிடுகிறார்கள். அவர்களுக்குப் பிறந்த குழந்தையை நாடோடி குதிரைக்காரரான சீனியர் எடுத்து வளர்க்கிறார். அந்தக் குழந்தைதான் ஜிப்ஸி. சீனியரை போலவே சாதி, மத அடையாளங்கற்றவன் அவன்.

ஜிப்ஸியைக் கூட்டிக்கொண்டு நாடு முழுக்க அந்தக் குதிரைக்காரர் சுற்றித்திரிகிறார். ஜிப்ஸி இந்திய மொழிகளில், இசையில், பாடலில் கைதேர்ந்தவனாக வளர்கிறான். அவன் வாலிபனானதும் அவனுக்கான துணையைத் தேடிக்கொள்ளுமாறு அறிவுரைத்துவிட்டு மரணித்துவிடுகிறார் சீனியர். நாடோடியான ஜிப்ஸி தனது குதிரை சே உடன் நாகூர் போகும்போது, அங்கு சீனியர் சொன்னது போல ஒரு பெண்ணைப் பார்க்கிறார். உருது பேசும், பர்தா அணியும் ஒரு முஸ்லிம் பெண் அவள். இப்படி காதல் கதை போலத் தொடங்கிய படம் அந்த முஸ்லிம் பெண், ’அடிப்படைவாதியான’ அவளுடைய தந்தையாலும் தன் சமூக சூழலாலும் எப்படியெல்லாம் ஒடுக்குமுறையைச் சந்திக்கிறாள் என்பதில் கவனம் குவிக்கிறது.

அந்த நிமிடத்திலிருந்து, முஸ்லிம்கள் குறித்து பொதுபுத்தியில் இருக்கும் அத்தனை தப்பெண்ணங்களையும் தொகுத்து காட்சிக்குக் காட்சி அடுக்கி வைத்திருக்கிறார் இயக்குநர் ராஜு முருகன். வழக்கமாக திரைப்படங்களில் முஸ்லிம்களை எப்படி எதிர்மறையாகப் பொதுகுணப்படுத்துவார்களோ அவ்வாறே இப்படமும் செய்திருக்கிறது. அதையொரு பரப்புரை போல முன்னெடுத்து, திகட்டத் திகட்ட பார்வையாளர்களுக்குத் தந்திருக்கிறார் ராஜு முருகன்.

முஸ்லிம்களின் சமய, குடும்ப, சமூக வாழ்வு பற்றி குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் அரைகுறையாக ஹோம்வொர்க் செய்து எடுக்கப்பட்ட படம் இது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. தமிழ் முஸ்லிம்கள் வாழும் நாகூரில் உருது முஸ்லிம் குடும்பம், அதிலும் மலையாள தொனியில் தமிழ்ப் பேசும் அப்பா! நாகூரில் பீஃப் பிரியாணி செய்யும் வழக்கமே கிடையாது. ஆனால், படத்தில் அந்தக் குடும்பம் இரவு உணவாக பீஃப் பிரியாணி சமைத்து வைத்திருக்கிறது! தொழுகையில் அல்லாஹு அக்பர் சொல்ல வேண்டிய இடத்தில் சுப்ஹானல்லாஹ் என்பது, திருமண விவாகரத்து நடக்கும்போது சந்தோஷமான சந்தர்ப்பத்தில் சொல்லப்படும் ”மாஷா அல்லாஹ்” என்று சொல்வது, நபி மொழிகளைச் சொல்லும்போதெல்லாம் குர்ஆன் சொல்லுவதாகக் கூறுவது, தாலி சென்டிமன்டை கருகமணிக்குக் கூறுவது போன்ற அசட்டுத்தனம் கடும் அயற்சியைத் தருகிறது.

கிரிக்கெட், குடி, கூத்து என எல்லாவிதமான கேளிக்கைகளிலும் முஸ்லிம் ஆண்கள் திளைத்திருக்க, முஸ்லிம் பெண்கள் அடிமைகளாக வாழ்வது போல சித்தரிக்கிறது படம். தொழுகை, ஹிஜாப் உள்ளிட்ட இஸ்லாமிய அம்சங்களெல்லாம் முஸ்லிம் ஆண்களால் பலாத்காரமாக முஸ்லிம் பெண்கள் மேல் திணிக்கப்படுவதாக தம் முன்முடிவைப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

படத்திலுள்ள பல விஷயங்கள் நம்பும்படியாக இல்லை. படத்தின் தொடக்கம் முதலே ஜிப்ஸி மீது எவ்வித காரணமுமின்றி கதாநாயகி வஹீதாவுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது. ஒரு கட்டத்தில் ஜிப்ஸியின் குதிரை சே முஸ்லிம் இமாம் ஒருவரை உதைத்துவிடுகிறது. அதற்காக ஜிப்ஸிக்கு ’அந்த ஆட்களின்’ அமைப்போடு தொடர்பிருக்கிறதா, அவன் என்ன சாதி, எந்த மதம் என ஆய்வு செய்கிறார்கள் முஸ்லிம்கள். ’ஆய்வு முடிவு’ வரும் வரை தன் வீட்டுக் கொல்லைபுறத்தில் ஜிப்ஸியையும் அவரின் நண்பர்களையும் கட்டிப் போடச் சொல்கிறார் கதாநாயகியின் தந்தை.

அதன் பின் கதை எப்படி நகரும் என்பதை பார்வையாளர்கள் எளிதில் ஊகிக்க முடியும். காதல் பாடல், நடனம் என எல்லாம் செய்து கதாநாயகி வஹீதாவை எளிதாகவும் முழுமையாகவும் தன் பக்கம் ஈர்த்துவிடுகிறார் ஜிப்ஸி. எந்நேரமும் முரட்டுத்தனமாகவும் அன்பற்றவராகவும் இருக்கும் அப்பாவிடம் சிக்கித் தவிக்கும் வஹீதாவுக்கு ஜிப்ஸி மூலம்தான் சிரிப்பு, மகிழ்ச்சி என்பன கிடைக்கின்றன. ஒருநாள் அவள் தன்னுடைய வீட்டு முற்றத்தில் நின்று மழையில் நனைந்து ஆனந்தம் அடைந்த ‘பாவத்துக்காக’ அவளைத் திருமணம் செய்துவைக்க முடிவெடுப்பார் அவளின் தந்தை. அந்தக் காட்சியில் வஹீதா மழையில் நனையும்போது, வில்லத்தனமான இசைப் பின்னணியுடன் எண்ட்ரீ கொடுப்பார் இரும்பு நெஞ்சம் கொண்ட அவர். அடுத்த காட்சியிலேயே அவளுடைய நிச்சயதார்த்தம் காட்டப்படும். அப்போது அந்த வில்லத்தனமான இசை அப்படியே சோகம் ததும்பும் இசையாகப் பரிணமிக்கும்.

கதாநாயகிக்கு நிச்சயம் செய்து வைத்திருக்கும் மணமகனின் தாய் அடுப்பங்கரையில் புழுங்கிக் கிடப்பதைக் காட்டி, கதாநாயகிக்கும் அதேவிதமான ஓர் எதிர்காலம் காத்திருக்கிறது என்பதைக் குறியீடாக உணர்த்துவதன் வழியாக முஸ்லிம் பெண்கள் என்போர் முஸ்லிம் ஆண்களிடமிருந்து விடுவிக்கப்பட வேண்டியவர்கள் என்று இந்தப் படம் நிறுவ முனைகிறது.

திருமண ஏற்பாடுகள் எல்லாம் நடந்து முடிந்த வேளையில், அதில் விருப்பமில்லாத வஹீதா யாருக்கும் தெரியாமல் தன் காதலன் ஜிப்ஸியைக் கூட்டிக்கொண்டு திடீரென ஓடிப்போய்விடுகிறார். முஸ்லிம் பெண்கள் மூச்சு முட்டும்படியான ஒடுக்குமுறையின் கீழ் துன்புற்று வருவது போலவும், கிடைக்கும் முதல் வாய்ப்பில் தங்கள் குடும்பங்களைவிட்டு வெளியேறிவிடத் துடித்துக்கொண்டிருப்பது போலவும் ஒரு கருத்தை இப்படியான காட்சிகள் மூலம் கடத்தியிருக்கிறார் இயக்குநர்.

முஸ்லிம் ஆண்கள் எதிர் முஸ்லிம் பெண்கள் எனக் கட்டமைப்பது, முஸ்லிம் ஆண்களை கொடூரர்களாகச் சித்தரிப்பது, அவர்களை அடிப்படைவாதி என்பது, அவர்களிடம் இருந்து முஸ்லிம் பெண்ணுக்கு இந்து ஆண்தான் விடுதலை தரவேண்டும் எனக் கொக்கரிப்பது போன்றவை இந்து தேசியவாதிகளின் அரசியல். அதற்குத் துணை போகும் வகையிலேயே ஜிப்ஸி படம் அமைந்துள்ளது. இது ராஜு முருகனிடம் இருக்கும் சிக்கல் மட்டுமல்ல சிபிஎம்காரர்களின் கண்ணோட்டத்திலேயே இருக்கின்ற சிக்கல். அதனால்தான், படம் இஸ்லாமோ ஃபோபியாவின் சிபிஎம் வெர்ஷனாக வெளிவந்துள்ளது.

முஸ்லிம் சமூகத்தை இந்து தேசியவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதும், முஸ்லிம் பெண்களை அந்தச் சமூகத்து ’அடிப்படைவாத’ ஆண்களில் இருந்து விடுவிப்பதும் தங்களுடைய கடமைதான் என தம்மைத் தாமே ஒரு மீட்பராகவும் சக்திமானாகவும் கருதும் சிபிஎம் மனநிலையில் இருந்தே ஜிப்ஸி உருவாகியிருக்கிறது. திரைப்படத்தின் இடைஇடையே குர்ஆனில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது, பைபிளில் அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என ஜிப்ஸியும் ஒரு கேரள காம்ரேடும் பாடமெடுக்கும் மேதாவித்தனம் எரிச்சலூட்டுகிறது.

உத்தர பிரதேசத்தில் கணவன்-மனைவியாக வாழும் ஜிப்ஸியும் வஹீதாவும் அங்கு இந்து தேசியவாதிகளால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். படுகொலைகள், பொருட் சேதங்கள், பாலியல் வன்கொடுமைகள் என எல்லா அட்டூழியங்களையும் கட்டவிழ்த்துவிடுகிறது அந்த கும்பல். ஜிப்ஸியின் குதிரை சே-வையும் தீயிட்டுக் கொலை செய்கிறது. அந்தச் சமயத்தில் கருவுற்றிருந்த வஹீதாவை ஓர் இந்து பக்திமான் காப்பாற்றுகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், கைக் குழந்தையுடன் வஹீதாவை கேரளாவில் வசிக்கும் அவளின் தந்தையிடம் அவர் ஒப்படைக்கிறார். தன் மகள் ஓடிப்போனதால் ஏற்பட்ட அவமானத்தின் காரணமாக நாகூரில் இருந்து கேரளாவுக்குக் குடிபெயர்ந்திருப்பார் அந்த தந்தை.

ஓராண்டு கழித்து சிறையிலிருந்து நிரபராதி என்று வெளிவரும் ஜிப்ஸி தன்னுடைய மனைவியைத் தேடி கேரளாவுக்கே செல்கிறார். பெரும் வன்முறையைப் பார்த்து மனநலம் பாதிக்கப்பட்டு தம் பெற்றோருடன் வசிக்கும் வஹீதாவைச் சந்திப்பதற்காக வீட்டுக்குச் செல்லும் ஜிப்ஸியை அவளின் தந்தை வசைபாடி திருப்பியனுவிடுவார். பிறகு, அங்குள்ள சிபிஎம் காம்ரேடுகளோடு சேர்ந்து ஜிப்ஸி அந்த ’அடிப்படைவாத’ தந்தையிடம் இருந்து பாவப்பட்ட அந்த கதாநாயகியை எப்படி மீட்கிறார் என்பதுதான் மீதிக் கதை. அதற்காக பாடலின் வழியாக ஜிப்ஸியும் காம்ரேடுகளும் ’புரச்சி’ செய்வது உச்சபட்ச நாடகத்தன்மையுடன் வெளிப்படும்.

கதையின் இறுதிப் பகுதியிலும் இஸ்லாமோ ஃபோபியா பிரச்சாரம் ஓயாமல் தொடர்கிறது. ஜிப்ஸியிடம் வஹீதாவின் தாய் சொல்லுவார், “அவள் வீட்டை விட்டுப் போனப்போ இந்தக் கதவுக்கு வெளியே அவளுக்காவது ஒரு உலகம் கிடைக்கும்னு சந்தோஷப்பட்டேன் பா”. இந்த வசனம் மூலம் இயக்குநர் என்ன சித்திரத்தை மக்கள் மனங்களில் ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்பதை கவனியுங்கள்.

முஸ்லிம் தீவிரவாதம் பற்றிய படங்களில்கூட, ஊறுகாயாகவேனும் ஒரு நல்ல பாய் காட்சிபடுத்தப்பட்டிருப்பார். இப்படத்தில் அதுவும் கிடையாது. இதற்கு முரணாக, ஜிப்ஸியின் அப்பா ஒரு சிவன் பக்தராக இருந்தாலும் தன் மனைவி இஸ்லாமைக் கடைப்பிடிக்க அனுமதிப்பார். அதேபோல, தீவிர ராம பக்தனாக வரும் ஆட்டோ ட்ரைவர் வஹீதாவைக் காப்பாற்றி கரையேற்றுவார். வஹீதா பாதிப்புக்குள்ளாகக் காரணமான இந்துத்துவரும் தவறை உணர்ந்து நல்ல மனிதனாகிவிடுவார். இவற்றையெல்லாம் தற்செயலானது என்று கடந்து செல்ல இயலவில்லை.

கேரளாவில் வஹீதாவை மீட்க ஜிப்ஸிக்கு உதவி செய்யும் காம்ரேட் ஒரு சந்தர்பத்தில், ”வேறெதாவது விஷயம்னா இறங்கி அடிச்சிருப்பேன். மதத்தை வெச்சு சென்சிடிவான அரசியல் பண்ணிடுவாங்க” என்பார். சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் வஹீதாவின் தந்தையை ”அடிப்படைவாதி” என்றுகூட ஓரிடத்தில் முத்திரை குத்துவார். அந்த இடத்தில் சிபிஎம்காரர்கள் தாம் என்ன பேசுகிறோம் என்பதைப் புரிந்துதான் பேசுகிறார்களா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அடிப்படைவாதம் என்பது ஓர் அரசியல் சொல்லாடல். வைதீக (Orthodox) கிறிஸ்தவரையோ அல்லது யூதரையோ சட்டென அடிப்படைவாதி என யாரும் கூறிவிடுவதில்லை. அதுவே முஸ்லிம் என்றால் அடிப்படைவாதம் எனும் கடுமையான அரசியல் சொல்லாக்கத்தைக்கூட ரொம்ப ஈசியாக பயன்படுத்த முடிகிறது. Orthodox முஸ்லிம் என்றாலே அவனொரு செயலூக்கமுள்ள தீவிரவாதியாகக் கொள்ளப்படுகிறான் என்பதே இங்குள்ள சிக்கல். சிபிஎம் ஆட்கள் வைதீக பார்ப்பனர்களை இப்படிச் சொல்வார்களா என்பது சந்தேகமே.

குஜராத் இனப்படுகொலைக்கு இரு புகைப்படங்கள் சாட்சியாக இருப்பது போல, இப்படத்தில் நடைபெறும் உபி இனப்படுகொலைக்கு வஹீதா மற்றும் இந்துத்துவன் ஒருவனின் படங்கள் சாட்சியாக இருக்கும். அவர்கள் இருவரையும் ஒரு இசை மேடையில் சேர்ப்பார் ஜிப்ஸி. கடைசியில், மனநிலை சீராகி கதாநாயகி நாயகனுடன் இணைவதோடு படம் முடிகிறது.

இந்து எனும் வளையத்துக்குள் இருந்துகொண்டு பாதிக்கப்படும் முஸ்லிம் சமூகம் குறித்து தன் மனம் போன போக்கில், பொறுப்புணர்வு கொஞ்சமும் இல்லாமல் படம் எடுத்திருக்கிறார்கள். இந்த லட்சணத்தில்தான் இவர்கள் தங்களை ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மீட்பர் எனக் கருதிக் கொள்கிறார்கள். இவர்கள் தங்களைத் தாங்களே இப்படி சக்திமான்களாகக் கற்பனை செய்துகொள்ளும் முதிராப் பருவத்திலிருந்து வளர்ந்து எப்போது வயசுக்கு வருவார்கள் என்பதுதான் நம் முன்னுள்ள மில்லியன் டாலர் கேள்வி.

அகதிகளை மனிதாய நீக்கம் செய்யும் இரு சொல்லாடல்கள்

Immigrants

செய்திகள் வெளியிடும்போது மையநீரோட்ட ஊடகங்கள் (குறிப்பாக வடமாநில ஊடகங்கள்) பலசமயங்களில் இந்து தேசியவாதிகள் உருவாக்கித் தரும் சொல்லாடல்களை அப்படியே கையாள்கின்றன. இதன் விளைவாக முக்கியமான விவகாரங்கள் பலவற்றை மக்கள் இந்துத்துவ கதையாடல்களின் வாயிலாகப் புரிந்துகொள்வதற்கு வழியமைத்துத் தரப்படுகின்றது.

உதாரணத்திற்கு, சமீபத்தில் ஊடகங்கள் அதிகம் பயன்படுத்தும் ஊடுருவல்காரர்கள் (infiltrators) எனும் பதம் எவ்வளவு பாரபட்சமானது, விஷம் தோய்ந்தது எனப் பாருங்கள். வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்கத்துக்கும் டெல்லிக்கும் குடிபுகுந்த இந்துக்களை அல்லது பிரிவினைக்குப் பின் இங்கு வந்த பஞ்சாபி இந்துக்களை இவர்கள் ஊடுருவல்காரர்கள் என்று அழைப்பதில்லை. ஆனால், வங்கதேச இந்துக்கள் இந்தியாவுக்கு வந்தது போலவே அங்கிருந்து முஸ்லிம்களும் இங்கு வந்து குடிபெயர்ந்தார்கள் என்றபோதிலும், முஸ்லிம்களை மட்டும் ஒட்டுமொத்தமாக “ஊடுருவல்காரர்கள்” எனும் வார்த்தையில் உள்ளடக்குகிறார்கள். இந்துக்களை “அகதிகள்” என்றழைக்கிறார்கள்.

ஊடுருவல்காரர்கள் எனும் சொல்லில் கடுமையான வன்மம் இருப்பதோடு, ஒரு தீய சக்தி வஞ்சகமாக இந்தியாவினுள் நுழைந்திருக்கிறது என்பது போன்ற மனப்பதிவு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால், அகதிகள் எனும்போது அம்மக்கள் பாதிக்கப்பட்ட, அநீதிக்குள்ளாக்கப்பட்ட தரப்பினர் எனக் கொள்ளப்படுகிறது.

ஊடுருவல்காரர்கள் எனும் வார்த்தையை 80களின் பிற்பகுதியில் பாஜக பிரபலப்படுத்தியது என்கிறார் The Wire நிறுவன ஆசிரியரான சித்தார்த் வரதராஜன். மக்களின் அன்றாட உரையாடல்களில் இதுபோன்ற வார்த்தைகளைக் காண முடியும் என்றும் இவற்றின் பிரச்னைகளையோ அர்த்தங்களையோ யோசிக்காமல் இம்மாதிரி சொல்லாடல்களை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

ஊடுருவல்காரர்கள் என்பது போலவே “சட்டவிரோதக் குடியேறிகள்” (illegal immigrants) எனும் பதமும் இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் பிரச்னைக்குரிய ஒன்று. அஸ்ஸாம், மேற்குவங்கம் தொடர்பான சமீபத்திய செய்திகளில் இந்தச் சொற்பிரயோகத்தை நீங்கள் கவனித்திருக்கக்கூடும். NRC, CAA குறித்த விவாதங்களிலும் இந்தச் சொல் தொடர்ச்சியாக இடம்பெறுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்தப் பதம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

வாழ்வாதாரம் அல்லது தம் இருப்பு சார்ந்த தேவைகளுக்காக முறையான ஆவணங்களின்றி ஒரு நாட்டில் குடிபெயர்வோரைக் குறிக்க இந்தச் சொல் சரியானதன்று. இதுபோன்ற எதிர்மறை சொல்லாக்கங்கள் பொது மக்களைத் தவறான திசையில் வழிநடத்தக்கூடும்.

சட்டவிரோதக் குடியேறிகள் என்று கூறுவது குடிபெயர்ந்தோர் குறித்த மக்களின் கண்ணோட்டத்தை எதிர்மறையாய் கட்டமைக்கிறது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் எனும் உணர்வை மக்களிடம் உருவாக்குகிறது. குடிபுகுந்தோரை ஒட்டுமொத்தமாகக் குற்றவாளிக் கூண்டிலேற்றி, அவர்களை மனிதாய நீக்கம் (Dehumanization) செய்கிறது. அவர்களுடைய அடிப்படை மனித உரிமைகளைப் பறிக்கவே இது வழிவகை செய்யும்.

சட்டவிரோதக் குடியேறிகள் என்பதைத் தவிர்த்துவிட்டு, ‘irregular’ அல்லது ‘undocumented’ எனும் பொருள்படும் சொற்களைப் பயன்படுத்துமாறு 2009ல் ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் அறிவித்திருக்கிறார். நியூயார்க் டைம்ஸ் இதழ்கூட “அங்கீகரிக்கப்படாத குடியேறிகள்”, “முறையான ஆவணங்களற்று குடிபெயர்ந்தோர்” போன்ற சொற்களைக் கையாள்கிறது.

ஆனால், நம்மிடையே ஊடகங்கள் மட்டுமின்றி குடியுரிமைச் சட்டமும் சட்டவிரோதக் குடியேறிகள் என்ற சொல்லையே பாவிக்கிறது.

விஸ்வரூபம்: ஒரு போஸ்ட்மார்ட்டம் அறிக்கை

தமிழில் தேவர் சாதிப் பெருமையை விதந்தோதி வந்த படங்களை விட அதிகமான படங்கள் முஸ்லிம் தீவிரவாதம் குறித்துதான் வந்திருந்திருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை அசட்டுத்தனமானவை. இந்நிலையில் இதுபற்றி ஒப்பீட்டளவிலான சிரத்தையோடு வெளிவந்த படம் விஸ்வரூபம். ஆனால் இந்தச் சிரத்தை ஒடுக்கப்படும் மக்கள் சார்பானதாக இல்லை, மாறாக ஆளும் வர்க்கங்களுக்குச் சார்பாக உரையாடி, விவாதித்துப் பழகி, மேலே நாம் விவாதித்திருக்கும் எஸ்டாப்ளிஷ்மெண்ட் கருத்தியல்களின் வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட படம்தான் விஸ்வரூபம். அதனாலேயே மேற்கண்ட விவாதத்தின் பின்னணியில் வைத்து இந்தப் படத்தைப் புரிந்துகொள்வது நமக்கு நலன் பயக்கும்.

விஸ்வரூபம் இரண்டாம் பாகமும் இப்போது வெளிவந்துவிட்டது. வழக்கமாக ஹாலிவுட் படங்கள் பல பாகங்களாக வெளிவரும்போது ஒவ்வொரு பாகமும் தன்னளவில் முழுமையான திரைக்கதையைக் கொண்டதாக இருக்கும். இதற்கு முற்றிலும் முரணாக எடுக்கப்பட்டிருந்தது பாகுபலி படம். பாகுபலி இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டிருந்தது. அதை இரண்டு பாகங்கள் என்று சொல்வதை விட இரண்டு எபிசோட்களாக வெளிவந்த ஒரு படம் என்றுதான் சொல்லவேண்டும். பாகுபலியின் முதலாம் பாகத்திற்கு மட்டும் ஒரு விமர்சனம் எழுதமுடியாது என்று ஒரு விமர்சகர் குறிப்பிட்டிருந்ததன் காரணம் இதுதான். விஸ்வரூபம் அத்தகைய படமல்ல. விஸ்வரூபம் முதல் பாகமே தன்னளவில் முழுமையானதுதான். இரண்டாம் பாகத்தில் சொல்லப்பட்டுள்ள விவரங்களைத் தவிர்த்துவிட்டு பார்த்தாலும் முதலாம் பாகத்திலேயே விஸ்வரூபம் ஒரு ஒத்திசைவு கொண்ட முழுமையான திரைக்கதையாகத்தான் இருந்தது. அதனால்தான் இரண்டாம் பாகம் திரைக்கதை அழுத்தம் இல்லாத, வெறும் சாகசக் காட்சிகளை அடுக்கிய, கதைசொல்லலில் சில புதுமைகளைப் புகுத்திய ஒரு முயற்சியாக மட்டுமே எஞ்சிவிட்டது.

முதலாம் மற்றும் இரண்டாம் பாகங்களில் காலம், வெளி ஆகிய பரிணாமங்களை கலைத்தும் நினைவுக்கும் நிகழ்காலத்துக்கும் மாறிமாறியும் சொல்லப்பட்டுள்ள இத்திரைக்கதையை விமர்சனத்தின் வசதிக்காக நேர்கோட்டில் அடுக்கி முதலில் தொகுத்துக்கொள்வோம். விஸாம் அஹ்மது காஷ்மீரி என்ற பெயர்கொண்ட கதாநாயகன் காஷ்மீரி முஸ்லிம் தந்தைக்கும் கதக் கலைஞரான தாய்க்கும் பிறந்தவன். இந்தக் காஷ்மீரித் தந்தை பற்றியோ தமிழ் மொழி பேசும் அவரது அம்மா பற்றியோ எந்தவொரு தகவலும் பெரிதாக படத்தில் கூறப்படவில்லை. குறிப்பாக இந்தக் காஷ்மீரி முஸ்லிம் தந்தை யார், எதனால் அவர் விஸாமின் தாயை விட்டுச்சென்று விடுகிறார், அவர் காஷ்மீரி என்று குறிப்பிடப்படுவதால் அவரது அரசியல் மற்றும் மதம்சார்ந்த கருத்துகள் என்னவாக இருந்தன, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தாய் (அவரை கதக் கலைஞராக காட்டியுள்ளதால்) முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவரா அல்லது இந்துக் குடும்பத்தில் பிறந்தவரா போன்ற தகவல்களெல்லாம் இல்லை. விஸாமின் தந்தையைக் குறித்து காட்சி வழியாகவோ வசனங்களின் வழியாகவோ எதையும் நம்மால் தெரிந்துகொள்ள இயலவில்லை. ஆனால் ஒரேயொரு தகவல் முதல்பாகத்தில் சொல்லப்படுகிறது. அது விஸாமின் தந்தை ஒரு காஷ்மீரி முஸ்லிம் என்றும் விஸாம் பிறந்தவுடன் அவரது அம்மாவுக்குத் தலாக் கொடுத்துவிட்டு அவர் போய்விட்டார் என்றும் விஸாம் ஒமரிடம் கூறுகிறான். இந்தப் பின்னணி பற்றிய உசாவல் இருந்திருந்தால் இரண்டாம் பாகம் இன்னும் கூட வலுவான திரைக்கதை கொண்டதாக இருந்திருக்கக்கூடும். ஆனால் முதலாம் பாகத்தில் சந்தித்த சர்ச்சைகளைத் தவிர்க்கும் விதமாகவே இரண்டாம் பாகம் பெரிதும் அடையாளங்கள் சம்பந்தப்பட்ட குறியீடுகள், வசனங்கள், அது சார்ந்த பாத்திரவார்ப்பும் அவற்றின் அரசியலும் பெரிதாக இல்லாத சாகசப்படமாக வெளிவந்திருக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. வி-2 இல் உள்ள ட்ரைலரில் காட்டப்பட்டு சிறிய சர்ச்சையைக் கிளப்பிய காட்சியும் இந்தச் சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்துகிறது.

இவ்வாறு தந்தையால் புறக்கணிக்கப்பட்ட விஸாம் அஹ்மது காஷ்மீரி தனது கதக் பயிற்றுநரான அம்மாவுடன் வளர்கிறான். கிருஷ்ணர் வேடமிட்டு அவன் ஆடும் கதக் நடன அரங்கேற்றமும் நடக்கிறது. பின்னர் அவன் அவனது தாயின் ஆட்சேபத்தைப் பொருட்படுத்தாது இராணுவத்தில் போய் சேருகிறான். இதை அவனது தாயால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுபோன்ற விவரங்களை ஆங்காங்கே துண்டுதுண்டாக நாம் காண்கிறோம். இராணுவத்தில் சேரும் அவனை இந்திய அரசின் சர்வதேச உளவுத்துறையான RAW ஒரு இரகசியச் செயற்திட்டத்துக்காகத் தேர்ந்தெடுக்கிறது. அமெரிக்கர்கள் சிலரைப் பிணைக்கைதிகளாகப் பிடித்துவைத்திருக்கும் ஆஃப்கன் தாலிபானுக்குள் ஊடுறுவி அவர்களின் விடுதலைக்கும், தாலிபானை வீழ்த்த அமெரிக்க அரசு அவர்களின் மீது நடத்தும் போருக்கும் உதவுவதும்தான் அச்செயற்திட்டம் ஆகும். இதற்கு முஸ்லிம் காஷ்மீரி தந்தையின் பின்னணியைக்கொண்ட விஸாம் பொருத்தமாக இருப்பான் என்று அவனைத் தேர்கிறார்கள். இதற்காக விஸாம் தன்னுடன் பணியில் இருந்த சக பெண் அதிகாரியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினான் என்ற நாடகத்தை வேண்டுமென்றே அரங்கேற்றி அவனது பதவியைப்பறித்துச் சிறைக்கு அனுப்புகிறார்கள். மேலும் சிறையில் இருந்து தப்பி அவன் எல்லை தாண்டிப் பயங்கரவாதிகளுடன் சேர்ந்துகொள்ள வழிவகுக்கிறார்கள். இதற்குப்பின் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான கர்னல் ஜகன்னாதனின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால், விஸாம் ‘இந்தியாவின் பார்வையில் தீவிரவாதியாகவும், பாகிஸ்தானின் பார்வையில் மாண்புமிகு தீவிரவாதியாகவும்’ மாறிவிடுகிறான்.

இவ்வாறு தாலிபானுக்குள் ஊடுறுவிய விஸாம் அதன் முக்கியத் தலைவர்களில் ஒருவனான ஒமரின் நன்னம்பிக்கையைப் பெற்று அவர்களின் உள்வட்டங்கள் வரை இயங்கக்கூடிய வாய்ப்பைப் பெறுகிறான். அல்காயிதாவுக்கே பயிற்சி கொடுக்கும் அளவு வீரதீர சாகசங்களில் தேர்ச்சிபெற்றவனாக இருக்கிறான் விஸாம். ஒமரின் இல்லத்துக்குச் செல்வது, அவனது மகன் நாசருடன் விளையாடுவது, அவன் குடும்பத்துடன் கூட்டுப்புகைப்படம் எடுத்துக்கொள்வது என்று ஒமரின் வலதுகரமாக மாறுகிறான் விஸாம். இப்படத்தில் ஒமர் ஒரு கண் இல்லாதவனாகக் காண்பிக்கப்படுகிறான். இது ஒற்றைக்கண்ணனாகச் சொல்லப்படும் தாலிபான் தலைவர் முல்லா ஒமரை நினைவூட்டுகிறது. இங்கு விஸாமோடு இன்னொரு முஸ்லிமல்லாத இந்திய உளவாளியும் இம்தியாஸ் என்னும் பாத்திரத்தை ஏற்று அங்கு செல்கிறான். இருவரும் சேர்ந்து ராவுக்கும் சிஐஏவுக்கும் தாலிபான் பிடியில் உள்ள அமெரிக்கப் பிணைக்கைதிகள் இருக்கும் இடம், உசாமா பின்லேடன் வருகை தரவிருக்கும் ஜிஹாதிகளின் கலந்தாலோசனை எப்போது எங்கு நடக்கிறது ஆகியவை குறித்த தகவல்களை எல்லாம் அவ்வப்போது அனுப்புகிறார்கள்.

ஜிஹாதிகள் மற்றும் அவர்களுடன் உறவில் இருக்கும் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளும் விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் தவ்ஃபீக் என்ற அரபிய உடை உடுத்தியிருக்கும் ஒரு செல்வந்தனும் அவனது தாயும் விஸாமுக்கு அறிமுகமாகிறார்கள். தவ்ஃபீக்கின் தாய் விஸாமிடம் தாயுள்ளத்தோடு நடந்துகொள்வதாகக் காட்டுகிறார்கள். செல்வந்தனான தவ்ஃபீக் ஜிஹாதி இல்லை, ஆனால் மிகவும் உபயோகமானவன் என்று ஒமர் விஸாமிடம் சொல்கிறான். இந்த தவ்ஃபீக் இரண்டு ஏக்கர்களில் ஓபியம் பயிரிட ஆரம்பித்து இப்போது இரண்டாயிரம் ஏக்கர்கள் வரை வைத்திருக்கிறான் என்று விஸாமிடம் கூறப்படுகிறது. இவ்வசனத்துக்குப் பிறகு ஓபியம் பயிரிடப்பட்ட வயல்வெளிகள் மங்களான இரவுவெளிச்சத்தில் காட்டப்படுகின்றன. இவ்வாறு தாலிபான் அரசு ஓபியம் பயிரிட்டு அதைக் கள்ளச்சந்தையில் விற்பதன் மூலம் தங்களது பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறார்கள் என்ற சித்தரிப்பைத் திரைப்படம் நிகழ்த்துகிறது. இத்தகைய வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் தவ்ஃபீக் தனது நண்பனுக்கு ‘இந்த எளிய விவசாயியின் எளிய பரிசு’ என்று கூறி ஒரு சிறிய பாக்கெட் ஓபியத்தை பரிசளிக்கிறான். அதை மறுத்துவிடும் விஸாம் அதை தவ்ஃபீக்கின் பைக்குள்ளேயே சென்று வைத்துவிடுகிறான். பைக்குள் வைக்கும்போது சிஐஏ தங்களிடம் கையளித்திருக்கும் GPS கருவி ஒன்றையும் அந்த ஓபியம் பாக்கெட்டுக்குள் வைத்து மறைத்துவிடுகிறான். இந்த GPS கருவி தரும் சிக்னலை வைத்து அமெரிக்க ராணுவம் இரண்டு முறை தாக்குதல் நடத்துகிறது. இந்த இரண்டாவது முறைத் தாக்குதலில் ஒமரின் குடும்பம் கொல்லப்பட்டதாக ஒமர் விஸாமினால் நம்ப வைக்கப்படுகிறான்.

இதன்பின்னர் தவ்ஃபீக்குக்கும் இன்னொரு ஜிஹாதிக்கும் ஒரு பிரச்சினை வருகிறது. தவ்ஃபீக்கின் பையில் ஏதோ ஒன்று இருப்பதாக அந்த ஜிஹாதி குற்றம்சாட்டுகிறான். பையைச் சோதிக்கும் ஒமர் அதிலிருக்கும் GPS கருவி மறைத்துவைக்கப்பட்டிருக்கும் ஓபியம் பாக்கெட்டைக் காண்கிறான். இதனால் தவ்ஃபீக் துரோகம் செய்துவிட்டான் என்று குற்றம்சாட்டப்பட்டு அவனுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. தவ்ஃபீக் தனது தவறினால் அநியாயமாகக் கொல்லப்பட்டுவிட்டான் என்று குற்றவுணர்வு கொள்கிறான் விஸாம். “நான் அந்தக்கருவியை எடுத்து அழித்துவிடச் சொன்னபோதே அதைச் செய்திருக்கலாமே? ஏன் நீ என்னுடைய கட்டளைகளுக்கு எப்போதுமே கீழ்ப்படிய மறுக்கிறாய். நம்மை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டார்” என்று தனது சக உளவாளி இம்தியாஸைக் கடிந்துகொள்கிறான் விஸாம். அதற்கு இம்தியாஸோ, “இம்தியாஸ் என்பது எனது புனைப்பெயர்தான், எனது மதம் அல்ல” என்று பதிலுரைக்கிறான். இருந்தாலும் விஸாமின் மீது எப்போதுமே ஒரு கண் வைத்திருந்த ஒமர் அவனைச் சோதித்தறிய அன்று மாலை நடக்கும் கூட்டத்தில் ஒசாமா வருகிறார் என்று கூறுகிறான். ஒசாமா வருவதை சிஐஏவுக்கு அறிவித்துவிட்டு அங்கிருந்து தப்பத் தயாராகிக்கொண்டிருக்கும் விஸாம் ஒமரிடம் கையும் களவுமாகப் பிடிபடுகிறான். ஆயினும் ஒமரைத் தாக்கிவிட்டு ஒரு துப்பாக்கிக் குண்டுக் காயத்துடன் உயிருக்குப் போராடும் நிலையில் அமெரிக்க ஹெலிகாப்டரில் தப்புகிறான் விஸாம்.

இதற்குப்பிறகு நடப்பதெல்லாம் அமெரிக்காவிலும், லண்டனிலும், டெல்லியிலும் ஒமரின் குழுவினர் வைக்கும் வெடிகுண்டுகளும் அதை விஸாம் எவ்வாறு செயலிழக்கச்செய்து இந்த மூன்று நகரங்களையும் காப்பாற்றுகிறான் என்பதும்தான். படத்தில் இக்காட்சிகள்தான் நிகழ்காலத்தைச் சேர்ந்தவை. நியூயார்க்கில் ஒரு கதக் கலைஞனாக அறிமுகமாகிறான் விஸ்வநாத். ‘உன்னைக் காணாத நாள் ஒரு நாளில்லையே’ என்ற பக்தி ரசம் சொட்டக்கூடிய பாடலுக்கு தனது மாணவிகளோடு ஆடக்கூடிய காட்சிதான் படத்தின் தொடக்கக்காட்சிகள். கடவுளிடம் அடிபணிதலைக் கோராத, மாறாக பிரபஞ்சவடிவான கண்ணனுக்குள் சங்கமித்துவிடுவது குறித்து இராதை பாடும் பக்திப்பாடலாக அப்பாடல் அமைந்திருக்கிறது. பெண்பாலுக்குரிய அத்தனை நளினங்களுடனும் பாவனைகளுடனும் அப்பாடலுக்கு ஆடுகிறான் விஸ்வநாத்.

அவனது மனைவி நிருபமா ஒரு அணு விஞ்ஞானி. அவள் தீபக் நடத்தும் அணு ஆராய்ச்சியில் ஈடுபடும் நிறுவனத்தில் வேலை செய்கிறாள். ஒரு கதக் கலைஞன் என்பதால் நடை மற்றும் பாவனையில் பெண்பால் குணாம்சம் அதிகமாக வெளிப்படும் விஸ்வநாத்தோடு அவளுக்கு நல்ல உறவு இல்லை. இதனால் தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் தீபக்குடன் ஒரு காதல் உறவு ஏற்படுகிறது. இதன் காரணமாக குற்றவுணர்ச்சிக்கு ஆளாகும் நிருபமா தன்னைப்போன்றே தனது கணவன் விஸ்வநாத்துக்கும் ஏதாவது திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு இருக்குமா என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு துப்பறிவாளனை நியமிக்கிறாள். விஸ்வநாத்தைப் பின் தொடரும் அத்துப்பறிவாளன் விஸ்வநாத் தொப்பி அணிந்துகொண்டு ஒரு மசூதிக்குள் நுழைந்து தொழுவதைக் காண்கிறான். மேலும் அதைப் படம் எடுத்து நிருபமாவுக்கும் அனுப்புகிறான். இதை அறிந்துகொண்ட நிருபமாவும் அவளது காதலன் தீபக்கும் இதுகுறித்து விஸ்வநாத்துடன் விவாதிக்கிறார்கள். அணு ஆராய்ச்சியில் ஈடுபடும் நிறுவனத்தை நடத்திக்கொண்டிருக்கும் தீபக் யாரெனில் அவன் பணத்துக்காக ஒமரின் ஆட்களுக்கு சீசியம் என்ற அபாயகரமான அணுக்கூறை விற்பனை செய்தவன். இவனிடமிருந்து வாங்கிய சீசியமை வைத்துதான் நியூயார்க்கில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருக்கிறான் ஒமர். இந்நிலையில் தீபக் விஸ்வநாத்தின் வீட்டுக்கு ஒமரின் ஆட்களை வரவழைக்கிறான். அதிலொருவன் விஸ்வநாத்தை படம்பிடித்து ஒமருக்கு அனுப்புகிறான். இவன் தனது பழைய நண்பன் விஸாம் என்பதை அறிந்துகொண்ட ஒமர் அவனைக் கால்களில் சுட்டு, தான் வரும்வரை கொல்லாமல் வைத்திருக்கும்படி ஆணையிடுகிறான்.

அங்கு நடக்கும் உரையாடல்களும் முக்கியமானது. தனது பெயர் வினவப்படும்பொழுது சில முஸ்லிம் பெயர்களை மாற்றி மாற்றிச் சொல்கிறான் கதாநாயகன். இதனால் கோபமுற்று அவனை அடிக்கும்பொழுது கிருஷ்ணா என்று கதறுகிறான். இதுபற்றிக் கேட்கும்பொழுது தான் ஒரு முஸ்லிம்தான், ஆனாலும் ஒரு கதக் கலைஞனும் கூட என விடைபகர்கிறான். இதற்குப் பிறகு விஸ்வநாத் விஸ்வரூபம் எடுத்து அவனைக் கட்டி வைத்திருக்கும் தீவிரவாதிகளை துவம்சம் செய்கிறான். இங்கிருந்து கதை துவங்குகிறது. தனது நம்பிக்கையை வென்று தனக்கே துரோகம் செய்து தனது குடும்பம் அழிக்கப்படுவதற்கும் காரணமான விஸாமைக் கொல்ல ஒமர் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறான். இவனது கொலைமுயற்சிகளிலும் தப்பித்துக்கொண்டு மூன்று வெவ்வேறு நகரங்களில் செய்யப்பட்ட குண்டுவெடிப்பு முயற்சிகளையும் தடுத்துக்கொண்டு இறுதியில் அந்த உண்மையை வெளிப்படுத்துகிறான் விஸாம். இறுதியில் தனது உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒமரிடம் அவனது குடும்பம் சாகவில்லை, உயிருடன்தான் இருக்கிறார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறான். அமெரிக்கத் தாக்குதலின் சமயத்தில் ஒமரின் குடும்பத்தை ஒத்த ஏராளமான தீவிரவாதிகளின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களையும், குழந்தைகளையும் அமெரிக்க இராணுவம் காப்பாற்றிய காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.

ஷேக்ஸ்பியரை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கும் கையேடுகளில் ஒவ்வொரு நாடகங்களிலும் இடம்பெறும் பாத்திரங்களின் பெயர்கள், அவர்களது பணி மற்றும் அவர்களுக்கிடையிலான உறவுகள் ஆகியவற்றை வரைபடமாகக் கொடுத்திருப்பார்கள். இத்தகையதொரு கையேடு ஒன்றில் Merchant of Venice என்ற ஷேக்ஸ்பியர் நாடகத்துக்கு வழங்கப்பட்டிருந்த பாத்திர வரைபடம் ஒன்றைக் கண்டேன். அதில் பாத்திரங்களின் பெயர்கள் மற்றும் அவர்களுக்கிடையிலான உறவுகளோடு அவர்களின் மதமும் வழங்கப்பட்டிருந்தது. Merchant of Venice இன் பாத்திரங்களைப் பொறுத்த வரை அவர்களில் யார் யூதர்கள், யார் கிறிஸ்தவர்கள் என்று அறியாது அந்நாடகத்தைக் கண்டு ரசிக்க முடியாது.

அதுபோல விஸ்வரூபம் படத்தில் யார் முஸ்லிம்கள், யார் பார்ப்பனர்கள் என்று அறியாமல் அது பேசும் அரசியல் நமக்கு புரியாது. விஸ்வரூபம் படத்தின் மையக் கதாபாத்திரமான விஸாம் அஹ்மது காஷ்மீரி என்பவர் முதலில் பார்ப்பனக் கொச்சையில் தமிழ் பேசும், கதக் ஆடும் பார்ப்பன விஸ்வநாத்தாகவே அறிமுகமாகிறார். மேலும் படத்தின் முடிவில் பாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர்களின் பெயர்ப்பட்டியலில் ‘விஸாம்/விஸ்வநாத் – கமல்ஹாசன்’ என்றுதான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அணுவியல் விஞ்ஞானியும் விஸாமை விஸ்வநாத் என்று கருதி திருமணம் செய்துகொள்ளும் நிருபமாவும் பார்ப்பனச் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். விஸாமின் உயரதிகாரியாகவும் நிருபமாவின் மாமாவாகவும் வரும் கர்னல் ஜகன்னாத்தும் பார்ப்பனர். விஸாமுடன் சக உளவாளியாக வரும் அஷ்மிதா மயிலாடுதுறை பார்ப்பனர். ஏனையோர் வெள்ளைக் கிறிஸ்தவர்கள். இந்தப் படத்தில் காண்பிக்கப்படும் அரபி, பஷ்தூ, உருது, தமிழ், ஆங்கிலம் என்று வெவ்வேறு மொழிகளைப் பேசும் இஸ்லாமியர்கள் யாவரும் ஒன்று ஜிஹாதிகளாகவோ அல்லது ஜிஹாதுக்கு ஏதாவதொரு வகையில் உதவக்கூடியவர்களாகவோதான் இருக்கிறார்கள், முஸ்லிம் பெண்களையும், குழந்தைகளையும் தவிர. அவர்கள் அமெரிக்க வாழ்க்கை முறையை விரும்பக்கூடியவர்களாகவும், அவர்களின் கணவர்களிடமிருந்து விடுவிக்கப்பட வேண்டியவர்களாகவுமே காட்சிப்படுத்தப்படுகிறார்கள்.

ஒமரின் மனைவி கதீஜா தனது மகன் நாசரை டாக்டர் ஆக்க விரும்புகிறாள். ஆனால் அவளது கணவனோ ‘டாக்டர்களெல்லாம் ஜிஹாதி ஆகுறாங்க ஆஃப்கானிஸ்தான்ல’ என்று பேசுகிறான். ஒமர் தனது மகனின் கண்ணைக் கட்டி தோட்டாக்களை தடவிப்பார்த்து அது என்னவகை தோட்டா என்று கண்டறியப் பயிற்சி கொடுக்கிறான். ஆனால் ஒமர் சென்றபிறகு அவனது மனைவி தனது குழந்தையிடம் ஸ்டெதஸ்கோப் கொடுத்து டாக்டர் போன்று விளையாடச்செய்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறாள். இறுதியில் ஆஃப்கானிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்துதான் கதீஜா மற்றும் நாசரின் ஆசை நிறைவேறுகிறது. ஆக ஆஃப்கானிஸ்தான் மீதான அமெரிக்கப்போர் என்பது கதீஜா மற்றும் நாசர் போன்ற ஓராயிரம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றும் போரே. இங்கு ஆஃப்கனின் முஸ்லிம் ஆண்களிடமிருந்து முஸ்லிம் பெண்களை விடுவிக்கும் இரட்சகர்களாக அமெரிக்க இராணுவம் காட்டப்படுகிறது. இத்தகைய ஏகாதிபத்திய நோக்கங்களுக்காகவும், உள்நாட்டில் குடியேறிய முஸ்லிம் சமூகங்களுக்கெதிரான வெறுப்பைப் பரப்பவும் எவ்வாறு பெண்ணுரிமை பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி சாரா ஃபாரிஸ் என்ற மார்க்சிய இடதுசாரி அறிஞர் ‘ஃபெமோநேஷனலிசம்: பெண்ணுரிமையின் பெயரால்’ (Femonationalism: In the name of Women’s rights) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

ஒமர் விஸாமின் பூர்விகம் குறித்து வினவும்பொழுதும் இந்தப் பிரச்சினை பேசப்படுகிறது. ஒமரிடம் தனக்கு காஷ்மீரி தெரியாது என்று சொல்லும் விஸாமிடம் பிறகு காஷ்மீரி என்று பெயர் வைத்திருக்கிறாயே என்று கேட்கிறான் ஒமர். அதற்கு விஸாம் தனது தந்தை ஒரு காஷ்மீரி என்றும் தாய் தமிழர் என்றும், தான் பிறந்தவுடனேயே தந்தை தனது தாய்க்கு தலாக் கொடுத்துவிட்டுப் பிரிந்துவிட்டதாகவும் கூறுகிறான். இது முத்தலாக் பற்றிய சமீபத்திய விவாதங்களோடு ஒத்துவருகிறது. மோடி அரசு தன்னை முஸ்லிம் பெண்களின் பாதுகாவலனாக முன்வைக்கிறது. முத்தலாக்கினால் முஸ்லிம் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அந்தப்பிரச்சினையை நேர்மையாக அணுகும் தகுதி பிற போலி மதச்சார்பற்ற கட்சிகளுக்கு இல்லையெனவும், அந்த நேர்மை இந்துத்துவ முகாமுக்கே இருக்கிறது எனவும் வாதிடுகிறது பாஜக. ராகுல் காந்தி சமீபத்தில் முஸ்லிம் அறிவுஜீவிகளுடன் நடத்திய கலந்தாலோசனையில் காங்கிரஸை முஸ்லிம் கட்சி என்று கூறியதாக ஒரு பொய்ச்செய்தி பரப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் மோடி காங்கிரஸ் முஸ்லிம் ஆண்களுக்கான கட்சி மட்டும்தானா, முஸ்லிம் பெண்களுக்கானது இல்லையா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். இவ்வாறு இந்திய அளவில் முஸ்லிம் சமூகத்தை ஒடுக்கும் முஸ்லிம் ஆண்கள் X ஒடுக்கப்படும் பெண்கள் என்று மிகு எளிமைப்படுத்தி, இதனூடே வேறெந்த intersectionalities உம் இல்லாமல் ஒரு இருமையை கட்டமைத்து, முஸ்லிம் விரோத வலதுசாரி சக்திகளையே முஸ்லிம் பெண்களின் இரட்சகனாக கட்டமைப்பதே இந்த ஃபெமோ தேசியவாத அரசியலாகும்.

‘நல்ல முஸ்லிம் X கெட்ட முஸ்லிம்’ அரசியல் இப்படத்தில் எவ்வாறு சித்தரிக்கப்படிருக்கிறது என்பதையும் கேள்விக்குள்ளாக்குவது நலன் பயக்கும். இப்படத்தில் வரும் ஒரே நல்ல முஸ்லிம் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவனாக, இந்திய இராணுவத்தில் பெரிய பொறுப்பில் இருப்பவனாக, பார்ப்பனப் பெண்ணை கலப்பு மணமுடித்தவனாக, கதக் கற்றவனாக, இறையியல்களின் இரும்புவேலியைத் தாண்டிய பிரபஞ்சமயமான ஆன்மிகத்தை உணர்ந்தவனாக, தமிழ் அறிவுச்சூழலின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் ‘வஹ்ஹாபி அல்லாத சூஃபியாக’ சித்தரிக்கப்படுகிறான். இதற்கு எதிரே ஏனைய எல்லா முஸ்லிம்களும் தூய்மைவாதிகளாகவும், கெடுபிடியுடன் இஸ்லாமியச் சட்டதிட்டத்தைப் பின்பற்றுபவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். மேற்கண்ட நல்ல முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக மேலாண்மைக் கருத்தியலை ஏற்பவர்களாகவும், ஏகாதிபத்தியத்தைச் சரிகாண்பவர்களாகவும் இருக்கும்போது ஏனைய எல்லா கெட்ட முஸ்லிம்களும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாகக் காட்டப்படுவதோடு அவர்கள் எல்லோருமே எந்தவகையான அரசியல் வன்முறையையும் மேற்கொள்ளத் தயங்காதவர்களாகவும், அணுகுண்டு வெடிக்கவைத்து இலட்சக்கணக்கான சிவிலியன்களைச் சாகடிப்பதற்குத் தயங்காதவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். இங்கு இஸ்லாமிய வைதீகம் என்பது நவீனத்துவ எதிர்ப்பு, அரசியல் வன்முறை, அழித்தொழிப்பு ஆகியவற்றோடு சேர்த்துப் பேசப்படும்பொழுது அவைதீகம் என்பது அரசு ஆதரவு நிலைப்பாடு, மேலாண்மைக் கருத்தியல்களை அகவயப்படுத்துதல் ஆகியவற்றோடு சம்பந்தப்படுத்தப்படுகிறது. இங்கு இன்னொரு விஷயமும் இருக்கிறது, ஒருவர் நல்ல முஸ்லிமாக நிரூபிக்கப்படாதவரை அவன் கெட்ட முஸ்லிம்தான். இவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமும் கெட்ட முஸ்லிம்களுக்கு எதிரான போரில் கலந்துகொண்டு தங்களது ‘நல்ல முஸ்லிம்’ தன்மையை உறுதிசெய்துகொள்ள வேண்டும். மம்தானியின் வார்த்தைகளை அப்படியே தரவேண்டுமானால், “Unless proved to be “good”, every Muslim was presumed to be “bad”. All Muslims were now under obligation to prove their credentials by joining in a war against “bad Muslims”.

இத்தகைய சித்தரிப்பில் அரசியலற்ற வைதீக முஸ்லிம், அரசியல் வன்முறையை மறுக்கும் வைதீக முஸ்லிம், தேசிய-அரசுகளை ஏற்கும் மற்றும் தேர்தல் ஜனநாயகத்தில் பங்கேற்கும் முஸ்லிம்கள், அரசு சார்ந்த மாற்றத்தை மறுத்து தனிநபர் மாற்றத்தை மட்டுமே முன்வைக்கும் (தப்லீக் ஜமாத் போன்ற) மதப்பரப்புரை அமைப்புகள், பழமைவாதிகள், இஸ்லாமியச் சிந்தனையில் விமர்சன மரபை ஆதரிக்கும் அதேவேளை முஸ்லிம்களுக்கு எதிரான பொது விவாதங்கள் குறித்த நுண்ணுணர்வோடும் விமர்சனத்தோடும் இருக்கும் க்ரிட்டிகல் முஸ்லிம்கள், அரசு சார்ந்த மாற்றத்தை விழைந்தாலும் அதை வெறுமனே கருத்தியல் பிரச்சாரத்தின் மூலமாக மட்டுமேயல்லாமல் அரசியல் வன்முறையைப் பிரயோகிக்காத இஸ்லாமிஸ்ட் அமைப்புகள், இவ்வாறு எந்தப் பெரிய புரிதலும் இல்லாது ஆனாலும் ஒருவகை இஸ்லாமிய வாழ்க்கையைக் கடைபிடித்துக் கொண்டிருக்கும் ‘அன்றாட முஸ்லிம்கள்’ என்று இத்தனை வகையான வேறுபாடுகளுடனும், இதற்கு அப்பாலும் பல வேறுபாடுகளைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தை அடிப்படைவாத கெட்ட முஸ்லிம் X பன்மைத்துவ நல்ல முஸ்லிம் என்று பிரித்து அவர்களை ‘பிரதியாக்கம்’ (textualize) செய்வதுதான் அவர்களை மற்றமையாக்கம் செய்வதற்கான அடிப்படை. தமிழ்ச்சூழலில் முஸ்லிம் முற்போக்காளர்களாக அறியப்படுபவர்களும் இந்த இருமை எதிர்வைத் தொடர்ந்து கட்டமைத்துக்கொண்டே செல்கிறார்கள். ஒரு கல்விப்புலப் பிரதி சூஃபியிசத்தை உருவாக்கி அதற்குள் அடைபடாத முஸ்லிம்கள் எல்லோரையும் அடிப்படைவாதிகள் என்றும், எல்லா அடிப்படைவாதிகளும் ‘உறங்கு நிலை ஜிஹாதிகள்’ (sleeper cells) என்றும் தீர்க்கிறார்கள். இத்தகைய ‘முஸ்லிம் முற்போக்காளர்களை’ பார்ப்பன அறிவுற்பத்தி மையங்களும் முஸ்லிம் சமூகத்துக்கான தங்களது Native Informer களாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

தமிழ்ச்சூழலில் தலித் கருத்தியலாளர்கள், பெண் கருத்தியலாளர்கள் போன்று முஸ்லிம் முற்போக்காளர்களும் ஒரு கருத்தியல் தரப்பாக அங்கீகரிக்கப்படுகிறார்கள். இந்த ‘முஸ்லிம் முற்போக்கு/சீர்திருத்த எழுத்து’ என்ற திணையே முஸ்லிம்களின் பிரச்சினைகளெல்லாம் அடிப்படையாக முஸ்லிம் சமூகத்துக்குள்ளிருக்கும் காரணங்களால் வருகிறது என்ற பார்ப்பனிய முற்சாய்விலிருந்துதான் வருகிறது. இத்தகைய அறிவுற்பத்தியானது முஸ்லிம்களின் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் அடிப்படைக்காரணம் அவர்களேதான், முஸ்லிம் பிரச்சினை என்பது முஸ்லிம் சமூகத்துக்குள் இருக்கும் நல்ல முஸ்லிம்கள் மற்றும் கெட்ட முஸ்லிம்களுக்கிடையிலான போராட்டம்; அதில் நல்ல முஸ்லிம்கள் வெல்வதற்கு பொதுச்சமூகம் உதவிகரமாக இருக்கவேண்டும் என்ற இந்த முற்சாய்வு பார்ப்பனியக் கருத்து மேலாண்மையிலிருந்துதான் வருகிறது. இத்தகைய கருத்து மேற்கத்திய லிபரல்களிடமும் இருப்பதை மஹ்மூத் மம்தானி தனது ‘நல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம்’ நூலில் சுட்டிக்காட்டுவார். முஸ்லிம் பிரச்சினை பிற பிரச்சினைகளுடன் தொடர்புபடுத்தப்பட்டதும், ஒன்றிணைந்ததும்தான். அந்த வகையில் ஒரு முஸ்லிம் அறிவுஜீவி முஸ்லிம் நோக்குதளத்திலிருந்து இந்தியத் தேசியம், தேசிய அரசு, பார்ப்பனிய அரசியல், இந்திய-இந்து மையவாத அறிவுற்பத்தி ஆகியவை மீதான விமர்சனத்திலிருந்துதான் தொடங்க முடியும். அந்த விமர்சனத்தினூடே முஸ்லிம் சமூகத்திற்குள் சாதி, வர்க்க மற்றும் பாலின ரீதியாக ஒடுக்குமுறைக்குள்ளாகும் பிரிவுகளின் நோக்குதளங்களை அங்கீகரிக்கும் ஏற்பை முஸ்லிம் சமூகத்திற்குள் உருவாக்க இயலும். நிற்க.

முதலாம் பாகத்தில் முஸ்லிம் விரோதப் படம் என்று முஸ்லிம்களிடம் எதிர்ப்பைச் சம்பாதித்த கமல்ஹாசன், அதை சமநிலைப்படுத்தும் வகையில் மத்திய அரசில் பணிசெய்யும் ஒரு ஐயரைத் தேசத்துக்கு எதிராகத் தீவிரவாதிகளுக்கு உதவுபவராகக் காண்பித்துள்ளார் (பணத்துக்காக? எவ்வாறிருப்பினும் மதத்துக்காக இருக்காது, ஏனெனில் அவர் இஸ்லாமியர் அல்ல). அந்த அதிகாரி ஒருமுறை விஸாமிடம் “என்ன இருந்தாலும் நீ ஒரு முஸ்லிம்தானே” என்று கூறுவார். அதற்கு விஸாம் “நான் முஸ்லிம்தான். தேசத்தை நேசிக்கிற முஸ்லிம். நாட்டு மக்களுக்காக உயிரைக் கூடக் கொடுக்கத் தயாரா இருக்கிற முஸ்லிம். எந்த மதத்தையும் சேர்ந்தவனா இருக்கிறது தப்பில்லை, தேசவிரோதியா இருக்கிறதுதான் தப்பு” என்பார். இது முஸ்லிம்களுக்காகப் பேசுகிறது என்ற தொனி இருந்தாலும் அடிப்படையில் முஸ்லிம்களை மேலும் மற்றமையாக்கம் செய்வதாகவே இதுவும் அமைகிறது. முகநூலில் இண்டியன் லிபரல்ஸ் என்ற பக்கத்தில் ஒரு மீம்ஸில் “நாங்கள் அப்துல் கலாம் மாதிரியான முஸ்லிம்களை விரும்புகிறோம், அஜ்மல் கசாப் மாதிரியான முஸ்லிம்களைத்தான் வெறுக்கிறோம்” என்று சொல்லப்பட்டிருந்தது. இதுதான் இந்திய லிபரல் தன்னிலைகள் இயங்கும் முறைமை. இதனது தர்க்கபூர்வ நீட்சியாகவே இந்துத்துவ வெறுப்பு கட்டமைக்கப்படுகிறது.

இந்தப் படத்தில் நல்ல முஸ்லிமைப் பிற கெட்ட முஸ்லிம்களிடமிருந்து பிரித்துக் காட்ட மதக் கடைப்பிடிப்பு சார்ந்த வேறுபடுத்திக்காட்டல்கள் நிறைய வருகின்றன. விஸாமின் வீட்டில் இருக்கும் வாமனரின் படத்திலிருந்து, ராதாவாக மாறி கண்ணனுக்கு உருகுவதிலிருந்து, அல்லாஹூ அக்பர் சொல்லிவிட்டு உடனேயே கிருஷ்ணா என்றும் அழைப்பது வரை நிறைய குறிப்புகள் வருகின்றன. முதலாம் பாகத்தின் இறுதிக்காட்சியில் வெடிகுண்டை வெடிக்க வைப்பதற்கு முன் தீவிரவாதிகளும், அம்முயற்சியைத் தடுக்க இருக்கும் விஸாமும் தொழுகை நடத்துவது மாறி மாறிக் காண்பிக்கப்படும். விஸாம் தொழுவதைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு FBI அதிகாரி சக அதிகாரியிடம் விஸாம் என்ன செய்துகொண்டிருக்கிறான் என வினவுவான். அதற்கு அந்த அதிகாரி “அவன் உனக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறான்” என்ற பதிலுக்கு “கர்த்தரிடமா?”என்ற பதில் கேள்வி வரும். அதற்கு அந்த அதிகாரி “ஆம், அது அரபிக் வெர்ஷன் என்பது மட்டும்தான் ஒரே வேறுபாடு” என்று பதில் வரும். இங்கு நாம் கவனிக்கவேண்டியதெல்லாம் இதுதான். நவீன மதிப்பீடுகளை அகவயப்படுத்திக்கொள்ளாத எந்தவொரு இஸ்லாமியச் சிந்தனாமுறைமைகளையும் தீவிரவாதத்துக்கான potential ஐக் கொண்டதாக காண்பது. நவீன உலகின் அரசியல் வன்முறைகளுக்கான தோற்றுவாயாக மத நம்பிக்கையை, குறிப்பாக நவீன-எதிர்ப்பு மற்றும் நவீனத்தை அழித்தொழிக்கும் மனப்பான்மையும் கொண்டதாக இஸ்லாமிய நம்பிக்கையைக் காண்பதிலிருந்துதான் இத்தகைய சித்தரிப்புகள் வருகின்றன. இதை மறுத்துதான் மஹ்மூத் மம்தானி மேற்குறிப்பிட்ட நூலில், நவீனமே எவ்வாறு வன்முறையோடு பிறந்து தனது இருப்புக்கு வன்முறையையே சார்ந்திருக்கிறது என்று விளக்குவார்.

மேலும் இந்தப்படத்தில் ‘நீதிமிக்க போரிலிருந்து’ ‘தீவிரவாதத்தைப்’ பிரித்துக்காட்டுதல் எவ்வாறு நடக்கிறது என்பதும் முக்கியமான பகுதியாகும். தலால் அசத் தனது ‘தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் பற்றி’ (On Suicide Bombing) என்ற நூலில் இதுகுறித்து தெளிவாகப் பேசுகிறார். அந்நூலில் அவர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலைப் பற்றி குறிப்பாக விவாதித்திருந்தாலும், தீவிரவாதம் குறித்த மேற்கத்திய பொது விவாதத்தையும் கோட்பாட்டுருவாக்கம் செய்கிறார். தீவிரவாதம் மற்றும் நீதிமிக்க போரை எவ்வாறு வித்தியாசப்படுத்திப் புரிந்துகொள்வது, மற்றும் முன்னதுக்கு எதிராகப் பின்னதை ஏன் ஆதரிக்கவேண்டும் என்பது வால்ஸர் என்ற தத்துவவியலாளரின் கோட்பாட்டை பிரச்சினைக்குட்படுத்துவதன் மூலமாக தனது கோட்பாட்டுருவாக்கத்தைத் தொடங்குகிறார் தலால் அசத். இவற்றுக்கிடையில் இருக்கும் வேறுபாடுகளாக வால்ஸர் குறிப்பிடுவனவற்றுள் சில இவை: ‘தீவிரவாதத்தின் சாராம்சமே கண்டிக்கத்தக்கது, போரின் அதீதம்தான் கண்டிக்கத்தக்கது’, ‘தீவிரவாதிகள் கொன்றதை விட அதிகமான சிவிலியன்களைப் போரில் ஒரு இராணுவ வீரன் கொல்ல நேரலாம், ஆனால் அவன் அதற்காக மனம் வருந்துகிறான், அதுதான் அவனுக்கும் தீவிரவாதிக்குமான வித்தியாசம்’. இங்கு தீவிரவாதத்திற்கும் போருக்கும் இடையில் இருக்கும் வேறுபாடாக இராணுவ வீரனுக்குள் தோன்றும் குற்றவுணர்வைக் குறிப்பிடுகிறார் வால்ஸர். இதுபற்றிய வால்ஸரின் கூற்றை மேற்கோள்காட்டுவது பொருத்தமாக இருக்கும்: “அறவலிமை கொண்ட தலைவன் (Morally strong leader) யாரெனில் குற்றமற்றவர்களைக் கொல்வது எதனால் தவறு என்பதை அவன் அறிவான், அதனால் அவர்களைக் கொல்ல மறுப்பான், அவர்களைக் கொல்வதற்கு மீண்டும் மீண்டும் மறுப்பான், இறுதியாக வானமே இடிந்து விழக்கூடிய உச்சகட்ட நிலையில், தான் என்ன செய்யவேண்டுமோ அதைத் தன்னால் செய்யவே முடியாது என்ற நினைத்து, வேறு வழியில்லாமல் இறுதியாக அதைச் செய்துவிடுவான்.” இங்கு தீவிரவாதியையொத்த நடவடிக்கையில் ஈடுபடும் போர் வீரனின் “குற்றவுணர்ச்சி” அவனைத் தீவிரவாதியாக்காமல் “அறவலிமைகொண்ட தலைவன்” ஆக்குகிறது.

இப்படத்தின் நாயகனான விஸாம் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றும் ஏனைய தமிழ்சினிமா நாயகர்கள் போன்று ஒரு கொசுவை அடித்துக்கொல்லும் மன அமைப்போடு தீவிரவாதிகளை வேட்டையாடுவதில்லை. தனது கவனக்குறைவின் காரணமாக ஜிஹாதி அல்லாத தவ்ஃபீக் கொல்லப்படும்போது அதற்காகக் கண்ணீர் விடுகிறான். “நீ ஏன் நான் சொன்னப்பவே அந்தக் கருவியை அவன் பேக்கில் இருந்து எடுக்கல… அல்லாஹ் நம்மள மன்னிக்கவே மாட்டார்” என்கிறான். “நான் நிறைய நல்லதும் செஞ்சிருக்கேன், கெட்டதும் செஞ்சிருக்கேன்… நான் செத்தாலும் அழிக்கமுடியாத பாவம் என் நெத்தில எழுதியிருக்கு” என்று நிருபமாவிடம் உணர்ச்சிவசப்படுகிறான். சலீமைக் கொன்றுவிட்டு உணர்ச்சிபொங்க அவன் முகத்தைப் பார்க்கிறான். உமரை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு கடைசி நேரத்திலும் அவனது மனமாற்றத்திற்காகப் பேசுகிறான். குறிப்பாக தவ்ஃபீக் ஜிஹாதி இல்லை என்று குறிப்பிடப்படுவதே இந்தக் குற்றவுணர்ச்சியை இன்னும் அழுத்தமாக நிகழ்த்துவதற்கே, இதன் மூலம் விஸாம் இன்னும் அறவலிமையோடு மிளிர முடியும். இங்கு வன்முறை தாண்டி அது எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது (குற்றவுணர்ச்சியுடனா, அது இல்லாமலா) என்பது இரண்டையும் வேறுபடுத்திப் பார்ப்பதற்கான உரைகல் ஆகிறது. இவ்வாறு விஸ்வரூபம் திரைப்படம் அமெரிக்க மற்றும் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கான மேலாண்மைக் கருத்தியலின் மீது நின்று முஸ்லிம்களை மற்றமையாக்கும் அரசியலின் தமிழ் திரைச் சாட்சியாக உருவாகியிருக்கிறது.

புதிய தலைமுறை: ஊடகங்களை மிரட்டும் காவிக் கும்பல்

‘மாதவிடாய் காலத்தில் பெண் தெய்வங்கள் கோயிலை விட்டு வெளியேறிவிடுகின்றனவா?’ – என பொருள்படும் கவிதையை நிகழ்ச்சி ஒன்றில் மேற்கோள் காட்டியதற்காக, புதிய தலைமுறை தொலைக்காட்சி நெறியாளர் கார்த்திகேயன், பா.ஜ.க., இந்து முன்னணி மதவாத கும்பலால் மிக வெளிப்படையாக மிரட்டப்பட்டு வருகிறார். கார்த்திகேயன் சொன்ன வார்த்தைகளில் எவ்வித தவறும் இல்லை எனினும், அவர் அதற்காக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இருந்தபோதிலும், ‘அவரை பணி நீக்கம் செய்யும் வரையிலும் விடப்போவதில்லை’ என்று மிரட்டுகிறது இந்த காவிக் கும்பல்.

வளர்த்துவிட்ட நச்சுப்பாம்பு தன்னையே கொத்த வருகிறது என்பதை இப்போதேனும் தமிழ் ஊடகங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் அமைப்பு பலமோ,மக்கள் செல்வாக்கோ துளியும் இல்லாத, வெறும் வாய்ச்சவடால் கும்பலான பாரதிய ஜனதா கட்சியை, எப்போதும் பரபரப்பு செய்தியில் இடம்பெறும் வகையில் பராமரித்தவர்கள் இந்த 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகள்தான். தலைப்புக்கு தொடர்பு இருந்தாலும், இல்லை என்றாலும் பா.ஜ.க. சார்பாக ஒருவரை அழைத்துவந்து விவாத நிகழ்ச்சிகளில் கத்தவிடும் கலாசாரத்தை வளர்த்து எடுத்தவர்கள் இவர்கள்.

தெரிந்தே பொய் சொல்வது, பொய் அம்பலப்படும்போது கூச்சமே இல்லாமல் கூச்சலிடுவது, சரக்கே இல்லாமல் சர்வரோக நிவாரணியாக அனைத்துப் பிரச்னைகளிலும் அடித்துவிடுவது, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், ‘நீ மட்டும் யோக்கியமா?’ என திசைதிருப்பல் கேள்விகளில் தந்திரமாக ஒளிந்துகொள்வது… – இவைதான் பா.ஜ.க. ஊடகப் பேச்சாளர்களின் தகுதிகள். இருந்தும் இவர்களை விவாத நிகழ்ச்சிகளுக்கு அழைத்து பாரதிய ஜனதா கட்சி என்ற செத்துப்போன பாம்புக்கு உயிர்த்தண்ணீர் ஊற்றும் வேலையை செய்து வந்தன ஊடகங்கள். இப்போது அந்த பாம்புகள் கொத்த தொடங்கியிருக்கின்றன.

இது கார்த்திகேயன் விவகாரத்தில் தொடங்கவில்லை. ஏற்கெனவே இதே புதிய தலைமுறையில் தீபாவளி தொடர்பான ஒரு விவாதத்திலும் வேண்டும் என்றே சர்ச்சை கிளப்பினார்கள். தாலி தொடர்பான ஒரு விவாதத்தில் புதிய தலைமுறை மீது டிபன்பாக்ஸ் வெடிகுண்டு வீசினார்கள். நியூஸ் 7 விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட பா.ஜ.க-வை சேர்ந்த எஸ்.வி.சேகர், ’நியூஸ் 7 விவாதங்களுக்கு வே.மதிமாறனை அழைக்கக்கூடாது’ என நியூஸ் 7 உரிமையாளர் வைகுண்டராஜனுக்கே போன் போட்டு பேசினார். அதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார்.

தினமணியில் வைரமுத்து எழுதிய ஆண்டாள் கட்டுரைக்கு, தமிழக பார்ப்பன கும்பல் தங்கள் இயல்புக்கு பொருந்தாத வகையில் பல போராட்டங்களை நடத்தியது. தமிழ் இதழியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில், வைரமுத்து எழுதிய கட்டுரையை வெளியிட்டதற்காக தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் திருவில்லிபுத்தூருக்கே நேரில் சென்று மன்னிப்புக் கேட்டார். திருப்பதி நாராயணன் போன்ற பா.ஜ.க. ஊடகப் பேச்சாளர்கள் ஸ்டுடியோவில் அமர்ந்துகொண்டு சக பங்கேற்பாளர்களையும், நெறியாளரையும் நேரடியாக மிரட்டுவதையும் பார்க்கிறோம். இது ஒரு லைவ் நிகழ்ச்சி; மக்கள் பார்க்கிறார்கள் என்ற அச்சமோ, பதற்றமோ இல்லாமல் இவர்கள் துணிந்து பொய் சொல்கிறார்கள்.

கர்நாடகாவில் கவுரி லங்கேஷையும், எம்.எம்.கல்புர்கியையும், மஹாராஷ்டிராவில் நரேந்திர தபோல்கரையும், கோவிந்த் பன்சாரேவையும் கொலை செய்த மரபு கொண்டவர்கள் இவர்கள். ஊடகங்களில் பா.ஜ.க.வை விமர்சித்தும், அந்தக் கட்சியின் பொய்களை அம்பலப்படுத்தியும், இந்த ஆட்சியின் அவலங்களை தோலுரித்தும் எழுதி வரும்; இயங்கி வரும் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகின்றனர்; கொல்லப்படுகின்றனர். வட இந்தியாவில் நிகழ்ந்துவரும் இந்த கருத்துலக அடாவடியின் மற்றுமொரு வடிவம்தான் இப்போது தமிழ்நாட்டில் நடக்கிறது.

சபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவது தொடர்பான விவாதத்தில்தான் கார்த்திகேயன் அந்த கவிதையை மேற்கோள் காட்டினார். மாதவிடாய் நாட்கள் காரணமாகத்தான் பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை என்றால், பெண் தெய்வங்களை என்ன செய்வீர்கள் என்ற அந்த கேள்வி மிக இயல்பானது; நியாயமானது. இதை பாரதிய ஜனதாவினர் எதிர்க்கும்போது, நியாயமாக, சபரிமலைக்கு பெண்கள் செல்வதை தடுத்து வைத்திருக்கும் இந்து மதத்தின் அடிப்படை விவாதப் பொருளாக மாறியிருக்க வேண்டும். கோயிலின் கருவறைக்குள் சூத்திரர்கள் செல்லக்கூடாது; கோயில் வளாகத்துக்குள் தலித்துகள் செல்லக்கூடாது; கோயில் இருக்கும் பக்கமே பெண்கள் செல்லக்கூடாது என்ற இந்து மதத்தின் இழிவான படிநிலை அமைப்பு பேசப்பட்டிருக்க வேண்டும். மாறாக காவிக்கும்பலின் மிரட்டலுக்கு பதில் சொல்வதாக மற்றவர்களின் பணி சுருங்கிவிட்டது.

இந்த ’தடுப்பாட்ட’ எல்லைக்குள் நம்மை நிறுத்தி வைத்து காவிக்கும்பல் தாக்குதல் ஆட்டத்தை ஆடி வருகிறது. நாம் மீண்டும், மீண்டும் இவர்களுக்கு விளக்கம் சொல்வோராகவும், இவர்களின் பொய்களை அம்பலப்படுத்துவோராகவும் இருந்து வருகிறோம். அவர்கள் நம்மை மூச்சிரைக்க ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு அடுத்த வதந்தியை ஆற, அமர தயார் செய்கிறார்கள்.

‘கார்த்திகேயனை பணி நீக்கம் செய்ய வேண்டும்’ என்ற இந்த பச்சையான மிரட்டலை புதிய தலைமுறை நிர்வாகம் நேரடியாக எதிர்கொண்டிருக்க வேண்டும். முன் எப்போதும் அப்படி நடைபெறாததைப்போலவே இப்போதும் நடைபெறவில்லை. நெருக்கடியான சந்தர்ப்பங்களில் பத்திரிகையாளர்கள் நிர்வாகங்களால் கைவிடப்படும் தமிழ் இதழியலின் மரபு இப்போதும் தொடர்கிறது. இதன்மூலம், இனிமேல் ’அடக்கி வாசிக்கும்படி’ பத்திரிகையாளர்கள் நேரடியாகவும்; மறைமுகமாகவும் நிர்பந்திக்கப்படுகின்றனர். இந்த அவலமான சூழலில் நிறுவனம் என்ற குடையின் கீழ் அல்ல… பத்திரிகையாளர்கள் என்ற பணியின் பொருட்டு நாம் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். இந்த எதிர்ப்பு காவிக் கும்பலின் அடாவடிக்காக அல்ல… பத்திரிகையாளர் என்ற வேலையை மனசாட்சியுடன் செய்வதற்கே அவசியமானது.

(நன்றி: குரல்)

“தி இந்து”த்துவாவின் நோக்கம்தான் என்ன?

Teesta Setalvad addressed a press conference at Prashant in Ahmedabad on Monday. Setalvad along with Fr Cedric Prakash and ... talked about Naroda Patiya petition. February 18, 2013. Photo : Dhaval Bharwad

நான் ‘தி இந்து’த்துவாவைப் படித்துத் தேவை இல்லாமல் மூல வியாதியை வரவழைத்துக் கொள்ள விரும்புவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

‘என்னா கொடுமை சார் இது’ எனச் சொல்லி நேற்று ஒரு நண்பர் நேற்றைய (ஜூலை 2, 2018) ‘தி இந்து’த்துவா இதழின் ‘வணிக வீதி’யில் வெளிவந்துள்ள ‘இவர்களின் நோக்கம்தான் என்ன?’ என்கிற கட்டுரையை அனுப்பி இருந்தார். எம்.ரமேஷ் என்பவர் எழுதிய கட்டுரை அது.

‘தொண்டு நிறுவனங்கள்’ அல்லது NGO-க்கள் எனப்படும் அரசு சாரா நிறுவனங்கள் பற்றிய கட்டுரை அது.

இந்தியாவில் செயல்படும் ஏராளமான NGO-க்களின் நோக்கம் ‘இந்திய வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கம் கொண்ட அந்நிய சக்திகளுக்குத் துணை போவதுதான்’ எனச் சொல்வது இக்கட்டுரையின் நோக்கம்.

நாங்கள் அப்படிச் சொல்லவில்லை. அப்படியான குற்றச்சாட்டுகள் வந்துள்ளன என்றுதான் சொன்னோம்…ஹி..ஹி என அந்த ‘இந்து’த்துவா ஆசிரியக் கும்பல் வழிந்தால் அதைப் போல ஒரு அயோக்கியத் தனம் ஏதும் இருக்க இயலாது.

ஏனெனில் அக்கட்டுரை முழுவதும் சொல்லப்படுவது இதுதான். இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அனல்மின் நிலையம், நிலக்கரிச் சுரங்கங்கள், அணு உலை மி்ன்திட்டம் போன்ற வளர்ச்சித் திட்டங்கள் எல்லாவற்றையும் எதிர்த்து முடக்கி, இந்திய வளர்ச்சியைத் தடுக்கச் சதி்செய்கின்றன சில அந்நிய சக்திகள். NGO-க்களின் மூலம் அதை அவை நிறைவேற்றுகின்றன. NGO-க்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவது இதன் விளைவுதான் என இக்கட்டுரை ஆரம்பம் முதல் இறுதிவரை சொல்லிச் செல்கிறது.

சுரங்கத் தொழில் வளர்ச்சி 2.2 சதமும், அனல் மின் உற்பத்தி 8000 மெகாவாட் அளவும் பாதிக்கப் பட்டுள்ளதாம். இவற்றுக்கு எதிராக NGO-க்களால் தூண்டிவிடப்பட்ட போராட்டங்களின் விளைவுதான் இந்த இழப்பாம். இதனால் எற்பட்ட நிலக்கரிப் பற்றாக் குறையினால் 2013 -14 ஓராண்டில் மட்டும் ரூ 26,400 கோடி இந்தியாவுக்கு இழப்பாம்.

சுருங்கச் சொல்வதானால்,

  1. ”வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களால் தேசத்திற்கு இழப்பு ஏற்படுகிறது.
  2. இந்தப் போராட்டங்களின் பின்னின்று இயக்குவது NGO-க்கள்.
  3. அந்நிய சக்திகள் NGO-க்கள் மூலம் இதைச் செய்கின்றன.

இந்தக் கருத்து அந்த இதழில் ‘வணிகம்’ பற்றிப் பேசுகிற பக்கம் ஒன்றில் இன்று அவசர அவசரமாக வெளியிடப்படுவதன் நோக்கம் என்ன?

இந்தியாவில் செயல்படும் எந்த அமைப்பின் கருத்து இது?

இதை இப்போது யார் அதிகம் பேசிக் கொண்டுள்ளனர்?

ஸ்டெர்லைட் எதிர்ப்பு, எண்வழிச் சாலை எதிர்ப்பு, கூடங்குளம் எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு முதலான “வளர்ச்சித் திட்டங்களை” எதிர்க்கிறவர்கள் யார்? எதிர்க்கிறவர்களைச் சமூக விரோதிகள் எனச் சொல்பவர்கள் யார்?

சற்று யோசியுங்கள். மக்கள் எதிர்த்தார்கள்.

பா.ஜ.க, அர்ஜுன் சம்பத் போன்ற இந்துத்துவ அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ் முதலான இயக்கங்களும் அவற்றின் அடிவருடி அதிமுக அரசும்தான் எதிர்த்த மக்களைச் சமூக விரோதிகள் என்றன.

மக்கள் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றனர். போராடுகின்றனர். இந்நிலையில் NGO-க்களின் காசில் இந்தப் போராட்டங்கள் நடக்கின்றன என ஊளையிட உன்க்கெத்தனை திமிர்?

NGO-க்கள் மீதான எதிர்ப்பு என்பது இன்று நேற்று தொடங்கியதல்ல. முதன் முதலில், 1980களில் NGO-க்கள் மீது விமர்சனம் வைத்தது நக்சல்பாரி இயக்கங்கள்தான். அவர்கள் சொன்ன காரணம் வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் செய்யும் தொண்டுகள் என்பன மக்களின் துயர்களைத் தற்காலிகமாகத் தீர்த்து அவர்களின் போராட்ட குணத்தை நீர்க்கச் செய்கிறது. இதன் மூலம் புரட்சிகர எழுச்சிகள் தடுக்கப்படுகின்றன என்பதுதான்.

பின் இந்தக் கருத்தாக்கம் பெரிய விவாதங்களுக்கெல்லாம் உட்படுத்தப்பட்டு அந்த அடிப்படையில் நக்சல்பாரி இயக்கங்களுக்குள் பிளவுகளும் வந்தன, ஒரு சில நக்சல் இயக்கங்கள் தொண்டு நிறுவனங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கும் வந்தன. இந்த சர்ச்சை தொடர்கிறது.

ஆனால் இன்று தி இந்துத்துவா ஆட்கள் அந்த அடிப்படையில் இதை எதிர்க்கவில்லை. நக்சல்பாரி இயக்கங்கள் சொன்னது போல போராட்டங்களை மழுங்கடிக்க NGO-க்கள் செயல்படுகின்றன எனச் சொல்லவில்லை. போராட்டங்களைத் தூண்டிவிட NGO-க்கள் செயல்படுகின்றன; அதனால் இந்திய வளர்ச்சி பாதி்கப்படுகிறது எனச் சொல்கிறது திஇந்துத்துவா!

இவர்கள் இந்திய வளர்ச்சி எனச் சொல்வது கார்பொரேட் வளர்ச்சியைத்தான். கார்பொரேட் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது எனத்தான் தமிழிசை. பொன் இராதாகிருஷ்ணன், எடப்பாடி, இப்போது ‘தி இந்து’ த்துவா எல்லாம் கூவுகின்றனர்.

அது சரி. இதில் RSS மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் நிலைபாடு என்ன?

ஒரு பக்கம் NGO-க்களைக் கிறிஸ்தவத்தைப் பரப்பச் செய்யும் சதி எனச் சொல்லிக் காய்வது. இன்னொரு பக்கம். அதே கிறிஸ்தவ நாடுகளில் இருந்து பல்லாயி்ரம் கோடிக் கணக்கான ரூபாய்களை பல்வேறு இந்துத்துவ NGO-க்கள் மூலம் திரட்டி இங்கே அனுப்புவது. இதுதான் இந்துத்துவாவின் NGO பற்றிய கொள்கை. அப்படியான பல NGO க்கள் சில பற்றிய விவரங்களை எனது ‘இந்துத்துவமும் சியோனிசமும்’ முதலான கட்டுரைகளிலும், ‘ஆட்சியில் இந்துத்துவம்’ நூலிலும் விளக்கியுள்ளேன். குஜராத் பூகம்ப நிவாரணம் எனத் திரட்டப்பட்ட நிதி மத வெறித் தாக்குதகலுக்கு இவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை வெளி நாட்டு மனித உரிமைப் போராளிகளும் வெளிப்படுத்தியுள்ளனர். இதைப் பற்றி எல்லாம் தி இந்துத்துவா மூச்சு விடுமா?

இந்தக் கட்டுரையில் தி இந்துத்துவா கெட்ட NGO-க்களுக்கு ஒரே ஓர் எடுத்துக்காட்டைத்தான் விரிவாகக் கொடுத்துள்ளது.

அது புகழ் பெற்ற மனித உரிமைப் போராளியும், ஆர்.எஸ்.எஸ், பாஜக கும்பல்களால் மோடி ஆட்சியின்போது குஜராத்தில் கொல்லப்பட்ட, துரத்தப்பட்ட ஆயிரக் கணக்கான முஸ்லிம்களுக்காக நீதி வேண்டிக் கடந்த 16 ஆண்டுகளாகப் போராடி வருபவருமான டீஸ்டா செதல்வாடின் ‘சப்ரங் ட்ரஸ்ட்.

அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கான 1.4 கோடி ரூபாயை தன் சொந்த அக்கவுன்டுக்கு அந்த அமைப்பு மாற்றிவிட்டது என இன்று பாஜக அரசு அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டை, ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை போலக் கட்டம் கட்டி, பெட்டிச் செய்தியாய்க் கக்கி உள்ளது ‘தி இந்து’த்துவா. வெட்கக் கேடு.

கொல்லப்பட்டவர்களுக்கு எந்த நீதியும் கிடைக்காதபோது தன்னந்தனியாக நின்று போராடிய இயக்கம் டீஸ்டா செடல்வாடின் இயக்கம். மோடி அரசு டெல்லியில் பதவி ஏற்றவுடன் மேற்கொண்ட முதல் பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஒன்று டீஸ்ட்டாவின் மீதான் தாக்குதல். அவரை எப்படியாவது உள்ளே தள்ள வேண்டும் என வெறித்தனமாக இன்று பாஜக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஏதோ அவர் மீதான குற்றச்சாட்டு நிறுவப்பட்டுவிட்டது போல கட்டம் கட்டிச் செய்தியா வெளியிடுகிறாய்? என்ன இரும்பு இதயமடா உனக்கு!

ஆசிஃபா படுகொலைக்கும் உனாவில் நடந்த பாலியல் கொடுமைக்கும் நீதிவேண்டி கடந்த 14.4.2018 அன்று சங்கர்ஷ் எனும் என்ஜிஓ ஒன்று மகாராஷ்டிராவின் தானேவில் மக்களை ஒன்றுதிரட்டி போராடியது. படம்: விபவ் பிர்வேட்கர்.

அந்நிய சக்திகளாலும் NGO-க்களாலும் தூண்டிவிடப்பட்டு நடத்தப்படும் வளர்ச்சிக்கு எதிரான போராட்டம்தான் இன்றைய போராட்டங்கள் எல்லாம் என்கிற கூற்றிற்கு ஒரு புகைப்பட எடுத்துக்காட்டை முன்வைக்கிறது தி இந்துத்துவா. அது என்ன போராட்டம்?

அந்த எட்டு வயதுச் சிறுமி ஆசிஃபா காஷ்மீரில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கசக்கி எறிந்து கொல்லப்பட்டாளே… அதற்கு எதிராக இந்தியாவே தன்னெழுச்சியாகத் திரண்டு போராடியதே, அந்த ஆசிஃபா படுகொலை எதிர்ப்புப் போராட்டத்தை NGO சதி எனச் சொல்லும் நீங்கள் மனிதர்களாடா!

‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பது இல்லையே, ஏன்?

“லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா” எனும் (இந்தித்) திரைப்படம் “பார்ப்பனர்களால் பார்ப்பனர்களுக்காகவே” எடுக்கப்பட்ட ஒன்று. “ஒடுக்கப்பட்ட பெண்” என்பதற்கான சவர்ண வரையறைகளைக் கொண்ட பிரச்சாரத் திரைப்படம் அது. பார்ப்பன ஆணாதிக்கக் கதையாடல்களின் வழியே தனிப்பட்ட சுதந்திரத்தையும் பாலியல் விடுதலையையும் உறுதிபடுத்திக் கொள்ளும் பெண்களின் கதையை படம் சித்தரிக்கிறது. அத்தோடு அதில் இஸ்லாமோ ஃபோபியாவையும் நிரப்பிவிடுவதன் மூலம் முஸ்லிம் ஆண்களை ஒடுக்குமுறையின் குறியீடாகவும், பெண் வெறுப்பின் குறியீடாகவும் காட்டியிருக்கிறது.

பெண்கள் தொடர்பான இந்த சர்ச்சைக்குரிய திரைப்படத்தை உங்களில் பலர் பார்த்திருக்கலாம். போபாலில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் வாழும் நான்கு பெண்களின் வாழ்க்கை சம்பந்தமான படம் இது. அவர்களின் தனிப்பட்ட மற்றும் பாலியல் சுதந்திரம் சார்ந்த வேட்கைகளையும், அவற்றுக்கான தடைகளைத் தகர்ப்பது குறித்தும் அது பேசுகிறது. அந்த நான்கு கதாப்பாத்திரங்களில் ஒன்று, ரெஹானா அபிதி. பர்தா உடையணிந்த ஒரு கல்லூரி மாணவி; தையல்காரரின் மகள். இன்னொன்று, ஷிரீன் அஸ்லம். மூன்று குழந்தைகளுக்குத் தாயாக இருப்பவர்; கணவருக்குத் தெரியாமல் கடை ஒன்றில் விற்பனைப் பெண்ணாகப் பணிபுரிபவர். ஒப்பனை நிலையம் வைத்திருக்கும் லீலா, தன் அன்றாட வாழ்க்கைக்குப் போராடிவருவதற்கு மத்தியில் பாலியல் சார்ந்த கற்பனையில் வாழ்பவர். மற்றொரு கதாப்பாத்திரம் உஷா பர்மார். 55 வயதான விதவை. ஓர் இளம் நீச்சல் பயிற்சியாளர் மீது காதல் கொள்வதோடு தன் பாலியல் வேட்கையையும் அவரிடம் வெளிப்படுத்துகிறார்.

ஆணாதிக்கம், பெண் விடுதலை ஆகியவற்றில் நாம் அக்கறைகொள்வது மிகவும் அவசியம்தான். ஆனால், இதுபோன்ற விவகாரங்களை எப்படி அணுகுவது? இவற்றுக்கு எதன் அடிப்படையில் முகங்கொடுப்பது? என்பது முக்கியமானது. இந்தச் செயல்பாடு கண்ணியம், மனித உரிமைகள், பாலின சமத்துவம் அல்லது பெண் விடுதலை முதலான மதிப்பீடுகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளதா? ஆணாதிக்கச் சிந்தனைப் போக்கிலிருந்து முற்றிலும் விலகி நிற்கிறதா? போன்ற சில அடிப்படைக் கேள்விகள் கவனிக்கத்தக்கன.

முதலில் படத் தயாரிப்பாளர்கள் முஸ்லிம்கள் பற்றியும் இதர விலக்கப்பட்ட சமூகங்கள் பற்றியும் கொண்டுள்ள பார்ப்பனிய முற்சாய்வுகளில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும். வழக்கம்போல அவர்கள் பெண்களின் பாலியல் விடுதலை என்கிற பெயரில் தலித்-பகுஜன் பெண்களுடைய உடலில் விளையாடியிருக்கிறார்கள். படத்தயாரிப்பாளர் பிரகாஷ் ஜாவும் இயக்குநர் ஆலன்க்ரிதா ஸ்ரீநிவாஸ்தவாவும் தங்களுடைய நோக்கத்தை அடைய பெரும் சிரத்தை மேற்கொண்டுள்ளனர் என்பது தெரிகிறது. ‘கொடூரமான ஒடுக்குமுறையில்’ அகப்பட்டுள்ள அடித்தள சாதி/வர்க்க/முஸ்லிம் பெண்களின் போராட்டத்தைத் தங்களின் பல முன்முடிவுகளின் அடிப்படையில் சித்தரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஓர் அடித்தள வர்க்க/சாதி/முஸ்லிம் பெண் தன் மேட்டுக்குடி, உயர்சாதி நண்பர்களைக் கவர்வதற்கு ஜீன்ஸ் அணியவும், அவர்களுடன் விருந்தொன்றில் கலந்துகொள்வதற்காக ஒரு நல்ல ஆடையைத் திருடவும் வேண்டியிருக்கிறது. இன்னொரு முஸ்லிம் பெண், தான் பணிபுரிவதை மறைக்கிறாள்; ஒவ்வொரு இரவும் உறங்குவதற்கு முன் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறாள்; குழந்தைகளை உற்பத்தி செய்யும் இயந்திரமாக மட்டுமே நடத்தப்படும் ஒடுக்குமுறை சூழலில் வாழ்கிறாள். கிட்டத்தட்ட முஸ்லிம் குடும்பங்கள் குறித்த இந்து வலதுசாரிகளின் வழக்கமான பிரச்சாரம்தான் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படம், ஒடுக்குமுறையின் வடிவம் எனும் மோசமான சித்திரத்தை முஸ்லிம் ஆண்களுக்கு வழங்குகிறது. மனைவியை வல்லுறவுக்கு உள்ளாக்குவது தவிர்த்த வேலைகள் எதுவும் இல்லாதவராக, ஆணுறை பயன்படுத்தக்கூட தெரியாதவராக, பல பெண்களுடன் தொடர்பில் இருப்பவராக முஸ்லிம் ஆண் கதாப்பாத்திரம் காட்டப்படுகிறது. ரெஹானா அபிதியின் அப்பாகூட ரொம்பவும் அதிகாரம் செலுத்தக்கூடியவராகவும் அன்பையும் பாசத்தையும் தராதவராகவும் இருக்கிறார். அதாவது, ஒரு முஸ்லிம் பெண்/குடும்பம்கூட நல்ல வாழ்க்கை வாழவில்லை. என்னவொரு பரிதாபகரமான கதை!

படத்தில் எல்லோரும் நல்லபடியாக நடித்திருக்கிறார்கள். அதை நான் விளக்க விரும்பவில்லை. அது எனக்கு முக்கியமும் இல்லை.

இத்திரைப்படத்தில் கவனமாக இஸ்லாமிய வெறுப்புக் கருத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை சராசரி இந்தியப் பார்வையாளர்களிடம் (குறிப்பாக இன்றைய அரசியல் சூழலில்) நல்ல வரவேற்பைப் பெற்றுத்தரக் கூடியவை. இப்படத்தில், ஷிரீன் அஸ்லமின் கணவர் ‘சவுதியிலிருந்து வந்திருப்பது’ அவரை ‘முரடர்’ ஆக்கியிருக்கிறது. ஒரு காட்சியில், தன் பையிலிருந்து ஷிரீன் கைத்துப்பாக்கியை வெளியில் எடுக்கும் சந்தர்ப்பத்தில் அவருடைய புர்கா அவருக்குத் தீவிரவாத சாயலைக்கூட ஏற்படுத்துகின்றது. முஸ்லிம் ஆண்களை பெண் அடக்குமுறையின் குறியீடாய்ச் சித்தரிப்பதன் மூலம் படத்தயாரிப்பாளர்கள் எந்த அளவுக்கு ஒடுக்குமுறைக்கான சவர்ண வரையறைகளை உள்வாங்கியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

சமூக ரீதியில் பார்த்தால் மேற்குறிப்பிட்ட நான்கு பெண் கதாப்பாத்திரங்களும் உயர்சாதி எனும் வகைப்பாட்டின் கீழ் வருவதில்லை. லீலா அநேகமாக ஒரு அடித்தள சாதி/வர்க்க பின்புலமுள்ளவரே. தன் பாலியல் கற்பனைகள் சார்ந்த உலகில் உழல்பவர், பொய் சொல்லி சம்பாதிப்பவர், அவரின் அம்மா வாழ்வாதாரத்துக்கு வழியின்றி பல ஆண்டுகளாக உடல் ஓவியத்துக்கு நிர்வாணமாக அமர்ந்து வருகிறார். உண்மையில் இவையெல்லாம் பகுஜன் பெண்களைப் போகப் பொருளாய் அணுகும் பார்ப்பன ஆணாதிக்கக் கருத்தோட்டங்களையே வலியுறுத்துகின்றன. ஆனால், துரதிருஷ்டவசமாக பாலியல் விடுதலை என்கிற பெயரால்!

அதேசமயம், முஸ்லிம் பெண்களின் அவஸ்தைகளை மதத்தோடு தொடர்புபடுத்திவிட்டு, ஏனைய சமூகத்துப் பெண்களின் அவஸ்தைகளை வெறும் சமூக வழக்கங்களின் (Tradition) பகுதியாக மட்டுமே ஆக்கிவிடுவது இஸ்லாமோ ஃபோபியாவின் உச்சத்தை எடுத்துக்காட்டுகின்றது.

படத்தின் தலைப்பே அதனளவில் முன்முடிவுகளைக் கொண்டதுதான். அது புர்காவை அடக்குமுறைக்கும் உதட்டுச்சாயத்தை விடுதலைக்கும் அடையாளப்படுத்துகின்றது. இந்தக் கருத்தும்கூட பார்ப்பன ஆணாதிக்கத்தின் உற்பத்திதான். முழுப் படமும் பாலியல் விடுதலையைப் பற்றி பேசுவதை விடவும் பெண்களைப் போகப் பொருளாகவும் அழகின் வடிவமாகவுமே காட்சிபடுத்துகின்றது.

தலித்-பகுஜன்களுக்கு ‘பெண் விடுதலை’ என்பது அதனளவில் ஆழமான அர்த்தத்தைத் தரக்கூடியது. பார்ப்பன உயர்சாதிப் பெண்ணியவாதிகள் தங்களின் சமூக நிலையிலிருந்து இறங்கிவந்து விளிம்புநிலைப் பெண்களின் நிலைப்பாடுகளையும் அவர்களின் பெண்ணியம் சார்ந்த புரிதலையும் கற்றுணர வேண்டும். சவர்ண பெண்ணியவாதிகளுக்கு உதட்டுச்சாயத்தைப் பயன்படுத்துவது புரட்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் இதுவே விளிம்புநிலைப் பெண்களுக்கு முற்றிலும் முரணாக ஆகிவிடலாம்.

கடத்திச் செல்லப்பட்டு சந்தையில் விற்கப்படும் விளிம்புநிலைப் பெண்கள் (தேவதாசிப் பெண்கள் உட்பட) வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு வலுக்கட்டாயமாகப் பூசிக்கொள்ளும் உதட்டுச்சாயம் எப்படி அவர்களுக்கு விடுதலையின் குறியீடாய் ஆகமுடியும்? அது அவர்களுக்கு ஒடுக்குமுறையின் குறியீடு இல்லையா? இப்படி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உங்கள் தரப்பிலிருந்து என்ன கருத்தைக் கொண்டுசெல்ல முனைகிறீர்கள்?

இது பெண்ணியத் திரைப்படமா? உண்மையில் பார்ப்பன கதையாடல் ஆணாதிக்கத்துக்கு முகங்கொடுப்பதில்லை. ஏனெனில் பார்ப்பனியம் என்பதே ஆணாதிக்கத்தையும் உள்ளடக்கமாகக் கொண்டதுதான். கவனமாக அடித்தள சாதி/வார்க்க பெண் கதாப்பாத்திரங்களைத் தேர்வு செய்வதோடு, வெறுப்பூட்டும் வகையில் இஸ்லாமோ ஃபோபியாவையும் கலந்துகட்டுவது என்பதுகூட ஓர் ஆணாதிக்கப் பிரயத்தனம்தான்.

இது ஒரு துணிச்சலான படமா? துணிச்சல் என்று சொல்லிக்கொள்ள படத்தில் ஒன்றுமில்லை. உயர்சாதியினருக்கு தலித், பகுஜன் பெண்கள் வாழ்வின் பக்கம் தங்கள் கேமராவைத் திருப்புவது எளிதான காரியம்தான். ஒடுக்குமுறையாளர்கள் ஒடுக்கப்பட்டவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர்களுடைய வாழ்வை வரையறுக்கலாம், அவர்களைப் பற்றி என்ன தீர்ப்பு வேண்டுமானாலும் வழங்கலாம். உண்மையில், சவர்ண பெண்ணியவாதிகள் ஒருநாளும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வை வாழ்ந்திருக்க மாட்டார்கள். ஆனால் தங்களின் பார்ப்பன ஆணாதிக்கத்தை மறைத்துக்கொண்டு விளிம்புநிலைச் சமூகத்துப் பெண்களின் வாழ்க்கை குறித்து விளக்கமளிக்கவும், வரையறுக்கவும், தீர்ப்பளிக்கவும் சலுகை பெற்றிருக்கிறார்கள்.

எனது அடுத்த கேள்வி இதுதான்: உயர்சாதிப் பெண்கள் பாலியல் விடுதலை அடைந்துவிட்டார்களா? அல்லது ஒடுக்கப்படுகிறார்களா? பிறகு ஏன் இவர்கள் மோசமான பார்ப்பன ஆணாதிக்கத்தை மறைக்க முயல்கிறார்கள்? ஏன் ஒரு உயர் சாதி/வர்க்க பெண்ணின் வாழ்க்கையும் இப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை? எதற்காக இந்த சவர்ண லிபரல் பெண்ணியவாதிகளின் கேமராக்கள் தலித், முஸ்லிம் பெண்களின் வாழ்வின் பக்கமே கவனம் குவிக்கின்றன? அருவருக்கத்தக்க வகையில் முஸ்லிம் பெண்கள் உடலில் ஆட்டம்போட அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது? உயர்சாதிப் பெண்களின் பாலியல் வாழ்வை அவர்கள் ஏன் கண்டுகொள்வதில்லை? காப் பஞ்சாயத்துக்குக் கீழும், பிருந்தாவனத்திலும் உள்ள பெண்களைப் பற்றி பேச அவர்களுக்கு ஏன் துணிவில்லை?

உயர்சாதிப் பெண்களில் அன்றாடம் தாக்கப்படுபவர்கள், தங்கள் வீட்டு ஆண்களின் பாலியல் இன்பத்துக்காக பலமுறை கருக்கலைப்புச் செய்தவர்கள், தாய் வீட்டுக்குப் போக அனுமதிக்கப்படாமல் தங்களுடைய சமூக அந்தஸ்தைக் காத்து நிற்கும் பெண்களெல்லாம் இருக்கிறார்கள். தங்களின் கணவர் பல பேரிடம் தொடர்பில் இருந்ததன் விளைவால் HIV-க்கு ஆட்பட்டவர்களும்கூட இருக்கவே செய்கிறார்கள். அண்டை வீடுகளிலுள்ள உயர்சாதிப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் அழுகுரல்களை பலமுறைக் கேட்டிருக்கிறேன்.

ஆனால், ஏன் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களின் கதைகள் மட்டுமே இங்கே உலாவுகின்றன? அதிலும் வல்லுறவுக்கு ஆட்பட்ட முஸ்லிம் பெண்கள், காஷ்மீரின் பாதி விதவைகள், கலவரக்காரர்களால் தாக்கப்பட்டு கணவரை இழந்த அபலைகள் என யாருடைய கதைகளும் படமாக்கப்படுவதில்லையே. ஏன்? அதற்கு என்ன காரணம்?

வகுப்புக் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இராணுவத்தினரால் வன்முறைக்கும் ஆட்கடத்தலுக்கு ஆளானவர்களுக்கும் உதட்டுச்சாயத்தால், ஜீன்சால் விடுதலை சாத்தியமா? முஸ்லிம்கள் மீதான தப்பெண்ணம், வன்முறை, பாரபட்சம் போன்றவற்றில் இருந்து அவர்களுக்கு எப்போது விடுதலை?

இறுதியாக ஒன்று. ஏற்கனவே பெருமளவில் இஸ்லாமோ ஃபோபியாவும் வெறுப்பும் நிலவும் இன்றைய சூழலில் இந்தப் படம் முஸ்லிம் ஆண்கள் மீதான பாகுபாட்டையும் பகையையும்தான் கூர்மைபடுத்தும். யூடியூபில் இந்தத் திரைப்படதுக்கான விமர்சன வீடியோக்களுக்கு வந்துள்ள பின்னூட்டங்களைச் சற்று பாருங்கள். முஸ்லிம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எதிரான வசைகளால் அவை நிரம்பியிருக்கின்றன. இப்படம் என்ன கருத்தை பெருவாரியான மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளது என்பதை இதன் மூலம் எளிதில் உணர முடியும்.

மூலம்: Why Not Janeu Under My Kurta?

தமிழில்: நாகூர் ரிஸ்வான்.

காலச்சுவடு இதழின் இந்துத்துவ அரசியல்

ஹாதியா வழக்கு தொடர்பான தலையங்கத்தை முன்வைத்து ஒரு விசாரணை

சிறுபான்மையினர், தலித்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் சந்திக்கும் முக்கியப் பிரச்னைகளிலெல்லாம் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே பார்ப்பன அறிவுஜீவிகளும் லிபரல்களும் கொண்டிருப்பார்கள். இந்துத்துவவாதிகள் எந்தக் கருத்தை நிறுவ முனைகிறார்களோ அதே ‘திருப்பணியைத்’தான் இவர்களும் செய்வார்கள். ஆனால் இந்த இருசாராருக்கும் இடையில் ஒரு வேறுபாடு உண்டு. இதைப் பார்ப்பன அறிவுஜீவிகள் மதச்சார்பற்றவர்கள், முற்போக்காளர்கள் என்கிற போர்வைக்குள் இருந்து கொண்டு லாவகமாகச் செய்வதுதான் அந்த வேறுபாடு. கடந்த டிசம்பர் மாத காலச்சுவடு இதழின் தலையங்கம் இதற்கோர் உதாரணம்.

ஹாதியா வழக்கு தொடர்பான தலையங்கம் அது. “லவ் ஜிகாத்தும் கர் வாபஸியும்” என்கிற தலைப்பில் அது எழுதப்பட்டிருந்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வாக்கியத்தை இங்கே சுட்டிக்காட்ட நினைக்கிறேன். “‘லவ் ஜிஹாத்’ ஒரு குற்றமாகச் சொல்லப்பட்டால், அதற்குச் சற்றும் குறையாதது ‘கர் வாபஸி.’” இங்கே லவ் ஜிஹாத் எப்படி மோசமானதோ அதேபோல்தான் கர் வாபஸியும் என்று குறிப்பிடப்படுகிறது. இது எந்த அளவுக்கு அபத்தமான கூற்று என்று நாம் பார்க்கவேண்டியிருக்கிறது.

‘லவ் ஜிஹாத்’ என்பதை முஸ்லிம்கள் மறுக்கிறார்கள். எந்தவொரு இஸ்லாமிய அமைப்பும் தாங்கள் லவ் ஜிஹாத் செய்வதாகச் சொன்னதில்லை. அது ஒரு பொய்ப் பிரச்சாரம் என்றுதான் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றன. நடப்பில் இல்லாத ஒரு விஷயத்தைக்கூட, இல்லை என்று நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் இன்று முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது அப்படி நடப்பதாக அவதூறு செய்பவர்களும்கூட இதுவரை அதை நிரூபித்ததும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் ‘கர்வாபஸி’ என்பதை இந்துத்துவவாதிகள் பெருமையோடு சொல்லிக் கொள்கிறார்கள். அதைத் தங்களின் கொள்கையாகப் பிரகடனப்படுத்துகிறார்கள். பொது நிகழ்ச்சிகளை நடத்தி அதற்கு சமூக ஏற்பைக் கோரி அதில் வெற்றியும் அடைகிறார்கள். காலச்சுவடு இந்த வேறுபாட்டை மிக நுணுக்கமாக அழிப்பதை நாம் கவனிக்க வேண்டும். இங்குதான் பார்ப்பன அறிவுஜீவிகளின் வில்லங்கம் ஒளிந்திருக்கிறது.

‘லவ் ஜிஹாத்’ எனும் போலியான சொல்லை ‘கர்வாபஸி’ என்னும் உண்மையான நடவடிக்கையுடன் சமப்படுத்தி முன் வைப்பதன் மூலம் காலச்சுவடின் தலையங்கம் ‘லவ் ஜிகாத்’ என்ற சொற்பிரயோகத்துக்கு ஏற்பு வழங்கிவிடுகிறது. அதை ‘மதச்சார்பற்ற’ மொழியிலும் வாசகர்களுக்கு முன்வைக்கிறது.

காலச்சுவடின் தலையங்கத்தில் ஹாதியாவோடு இன்னொரு பெண்ணின் விவகாரத்தையும் ஒப்பிட்டுள்ளனர். கேரளாவைச் சார்ந்த ஆதிரா என்பவர் முஸ்லிமாகி, பிறகு மீண்டும் இந்துவாக மாறிய சம்பவத்தைக் குறிப்பிடுகின்றனர். அத்தோடு, “இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகள் ‘மார்க்கத்துக்குத் துரோகமிழைத்த குற்றத்துக்காக’ ஆதிராவைத் தண்டிக்கக் காத்திருகின்றன” என்றொரு அபாய மணியும் அடித்துள்ளனர். ‘கர் வாபஸி’ மையத்தின் மூலமாக ஆதிரா மதம் மாற்றப்பட்டுள்ள நிகழ்வும் அதில் கூறப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ‘கர் வாபஸி’ என்பது உண்மையாக நடத்தப்படும் ஒரு நிகழ்வு என்பது கேள்விக்கு இடமில்லாமல் உறுதியாகிவிடுகிறது. இங்கே நாம், ‘கர் வாபஸி’ என்பதை உண்மையா அல்லது பொய்யா என கேள்விக்கு உட்படுத்தவேண்டிய தேவையே இல்லாமல் போய்விடுகிறது.

இந்தத் தலையங்கத்தில் இன்னொரு அம்சத்தையும் நாம் கவனிக்க வேண்டும். தனிமனித உரிமையை வலியுறுத்தும் பாணியில் அந்த தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது. அதே வேளை மத மாற்றத்துக்கு எதிரான கருத்தும் அங்கே முன்வைக்கப்படுகிறது. ஆம், இரண்டும் ஒருசேர அரங்கேறுகிறது! அதிலும் குறிப்பாக, பெண்கள் மதம் மாறினால் அது அவர்கள் மீதான அடக்குமுறையாம். நீதிமன்றம் அதை ஆதரித்தால், அது அவர்களை சட்ட ரீதியில் ஒடுக்குவதாம். ஒருபக்கம், தனிமனித உரிமை கோரல், மறுபக்கம் அதற்கு முற்றிலும் எதிரான கருத்து. ரொம்பவும் தந்திரமாகவும் நுட்பமாகவும் இந்தத் தலையங்கத்தை எழுதியிருக்கிறார்கள்.

இதில் மற்றொரு அம்சமும் உள்ளது. ஹாதியா விவகாரத்திலுள்ள சிக்கல் வெறும் தனிமனித உரிமை சார்ந்தது மட்டுமல்ல. இச்சமூக அமைப்பில் நிலவி வரும் பார்ப்பனிய ஆணாதிக்கமும், இஸ்லாமிய வெறுப்பும் (Islamophobia) எப்படி நிறுவனமயப்பட்டு இயங்குகின்றன என்பதையும் நாம் இதன் மூலம் விளங்கிக்கொள்ள வேண்டும். உண்மையில், இப்பிரச்னையின் அடிநாதமும் இவைதாம்.

பிளவுவாத சக்திகள் உற்பத்தி செய்த இஸ்லாமிய வெறுப்புச் சொல்லான லவ் ஜிஹாத் இன்று பொதுச் சொல்லாக மாற்றப்பட்டிருக்கிறது. இதை நீதிமன்றம், ஊடகம், உளவுத்துறை முதலான அனைத்து நிறுவனங்களும் முன்வைக்கின்றன. இதன் மூலம் எப்படி எல்லா நிறுவனங்களிலும் இஸ்லாமிய வெறுப்பு வேரூன்றி இருக்கிறது என்பது தெரிகிறது. அத்தோடு குடும்ப அமைப்பு குறித்து இந்த சமூக நிறுவனங்கள் யாவும் பார்ப்பனிய மதிப்பீட்டைதான் கொண்டுள்ளன என்பதும் தெளிவாகிறது. ஹாதியாவின் தேர்வு சுதந்திரம் பறிக்கப்படுவதை இந்தப் பின்னணியில் இருந்தே நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

ஹாதியா பிரச்சினையில் மற்றுமொரு கவனிக்கத்தக்க அம்சமும் உள்ளது. சஃபீன் ஜகானின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது பற்றியோ அவரின் உரிமைகள் பறிக்கப்படுவது பற்றியோ இங்கு போதிய அளவு பேசப்படவில்லை. ஹாதியாவும் தனிமனித சுதந்திரமும் என்கிற மையத்தைச் சுற்றியே எல்லா விவாதங்களும் நடந்தன.

இந்தச் சிக்கல்களையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், ஹாதியாவுக்கு ஆதரவாகப் பேசும் தொனியில் இந்துத்துவவாதிகளின் கருத்துகளை அப்படியே கக்கியிருக்கிறது காலச்சுவடின் தலையங்கம்.

இறுதியாக ஒன்று. ஹாதியா முஸ்லிமாக இருந்து இந்துவாக மாறி, வேறு மத ஆணைத் திருமணம் புரிந்தால், அதை முஸ்லிம் சமூகம் தடுக்காதா என்று சிலர் கேட்கின்றனர். சாமானிய மனிதர்களுக்கு இந்தக் கேள்வி எழுவது இயல்பானது. இப்படியான திருமணங்களெல்லாம் இங்கே நடந்துகொண்டுதான் உள்ளன என்பது சுட்டிக்காட்டத்தக்கது. அதுபோக, அப்படி ஒரு முஸ்லிம் பெண் தீர்மானித்து, அவள் தடுக்கப்படுகிறாள் என்றே வைத்துக்கொள்வோம். யாரால் அவளின் தேர்வு சுதந்திரம் பறிக்கப்படும்? அவளின் குடும்பம், அதற்கு அப்பால் அவளின் உறவினர்கள். மிஞ்சிப் போனால் ஊர் ஜமாஅத்கள். ஆனால் ஹாதியா விஷயத்தில் என்ன நடந்தது? ஹாதியாவின் குடும்பம் என்பதைத் தாண்டி, இந்திய மக்களின் நம்பிக்கைக்குரிய இடமான நீதிமன்றம், உளவுத்துறை, ஊடகங்கள் என அனைத்தும் கங்கணம் கட்டிக்கொண்டு ஹாதியாவின் உரிமையைப் பறிக்கின்றன. இப்படியொரு அவலமான நிலைமை சிறுபான்மைச் சமூகத்தினரால் எப்போதுமே இந்தியாவுக்கு ஏற்பட்டதில்லை. ஏற்படப் போவதுமில்லை.

தலித் இதழியலின் வரலாறு

முதல் தலித் இதழ் சூரியோதயம் தொடங்கப்பட்டது 1869ம் ஆண்டு. உதய சூரியன் இதழ் வெளிவந்தது 1943ம் ஆண்டில். இந்த இரண்டோடும் சேர்த்து பஞ்சமன், சுகிர்தவசனி, இந்துமத சீர்திருத்தி, ஆன்றோர் மித்திரன், மஹாவிகடதூதன், பறையன், திராவிடப் பாண்டியன், இல்லற ஒழுக்கம், திராவிடப் பாண்டியன், பூலோகவியாஸன், ஒருபைசாத் தமிழன், திராவிட கோகிலம், மதுவிலக்கு தூதன், ஆல்காட் கிண்டர்கார்டன் ரிவியூ, விநோதபாஷிதன், வழிகாட்டுவோன் என்று மொத்தம் 42 தலித் இதழ்கள் குறித்த அறிமுகத்தை அளிக்கிறது ஜெ. பாலசுப்பிரமணியம் எழுதிய சூரியோதயம் முதல் உதய சூரியன் வரை என்னும் நூல்.

தீண்டாமை எதிர்ப்பு, தலித்துகளுக்கான கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகள், அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை தொடங்கி அறிவுசார் விவாதங்கள், சமூக அரசியல் தர்க்கங்கள், தத்துவ விசாரணைகள் என்று பல செழுமையான உரையாடல்கள் இந்த இதழ்களில் முன்னெடுக்கப்பட்டிருப்பதை ஜெ. பாலசுப்பிரமணியன் தகுந்த மேற்கோள்களோடு பதிவு செய்திருக்கிறார்.

சென்னை மாகாணசபை உறுப்பினராகவும் பறையர் மகாஜன சங்க நிறுவனராகவும் இருந்த இரட்டைமலை சீனிவாசன் அம்பேத்கருடன் வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொண்டு அரசியல் முக்கியத்துவம் பெற்றார் என்றால் அயோத்திதாசர் பண்பாட்டு அரசியலை முன்வைத்து தலித் வரலாற்றியலைச் செழுமைப்படுத்தினார். அயோத்திதாசருக்கும் இரட்டைமலை சீனிவாசனுக்கும் இடையில் மோதல்கள் நீடித்தபோதிலும் அவர்கள் நடத்திவந்த தமிழன், பறையன் இதழ்கள் இரண்டும் ஒரே அரசியல் பார்வையைத்தான் கொண்டிருந்தன என்பதை அறியமுடிகிறது.

*******

15 மார்ச் 1922 அன்று எம்.சி. ராஜாவின் முயற்சியால் பல்வேறு தீண்டப்படாத சாதிகளுக்கு (பறையன், பள்ளன், வள்ளுவன், மாலா, மாதிகா, சக்கிலியன், தோட்டியன், செருமான், ஹொலையா மற்றும் பரிந்துரைக்கப்பட்ட பிற சாதிகள்) ஆதிதிராவிடர் என்ற பொதுப்பெயர் வழங்கப்பட்டது. இந்த அடையாளம் சென்னை மாகாண அளவில் ஓர் அரசியல் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியது. அம்பேத்கரின் வரவுக்குப் பிறகு தலித் என்னும் அடையாளம் வலுபெற ஆரம்பித்தது. இந்திய அளவில் ஒரு பரந்துபட்ட ஒருங்கிணைப்பை உருவாக்க இந்தப் புதிய அடையாளம் உதவியது.
1930ல் நாக்பூரில் அகில இந்திய ஒடுக்கப்பட்ட வகுப்பார் காங்கிரஸ் அமைப்பை ஏற்படுத்தி காங்கிரஸைக் கடுமையாக விமரிசிக்க ஆரம்பித்தார் அம்பேத்கர். அதன் விளைவாக தலித்துகளுக்காக ஏதேனும் செய்தாகவேண்டிய அழுத்தத்துக்கு உள்ளானார் காந்தி. அகில இந்திய அளவில் ஹரிஜன சேவா சங்கத்தை ஆரம்பித்தார். ஹரிஜன் என்னும் பெயரில் பத்திரிகை ஒன்றையும் தொடங்கினார். சென்னை மாகாணத்தில் எம்.சி.ராஜா ஹரிஜன சேவா சங்கத்தின் செயற்குழு உறுப்பினரானார்.

1937ல் எம்.சி. ராஜா சென்னை சட்டசபைக்குப் போட்டியிட்டபோது காங்கிரஸ் அவருக்கு எதிராக ஒருவரையும் நிறுத்தாமல் ராஜாவை வெற்றிபெறச் செய்தது. காங்கிரஸின் தாழ்த்தப்பட்டோர் பிரநிதிகளாக வி.ஐ. முனுசாமி பிள்ளை, சுவாமி சகஜானந்தா, ஆர். வீரையன் ஆகியோர் சென்னை மாகாண சட்டசபை உறுப்பினர்களானார்கள். நீதிக்கட்சியிலும் காங்கிரஸிலும் தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதிகளாகத் தலித் தலைவர்கள் நேரடியாகவும் ஆதரவு நிலைப்பாட்டோடும் செயல்பட ஆரம்பித்தார்கள். இதனால் தலித்துகளின் தனித்த அரசியல் செயல்பாடுகள் முடிவுக்கு வந்தன.

இரட்டைமலை சீனிவாசனின் பறையர் மஹாஜன சபை தேர்தல் அரசியலில் கவனம் பெறவில்லை.1940களுக்குப் பிறகு தலித் இதழியல் சரிவடையத் தொடங்கிவிட்டது.

நாற்பதுக்கும் மேற்பட்ட தலித் இதழ்கள் வெளிவந்துள்ளபோதும் பெரும்பாலானவை இன்னமும் கண்டறியப்படவில்லை. சுவாமி சகஜானந்தர் நடத்திய ஜோதி இதழ் குறித்து அதிகம் தெரியவில்லை. ‘நந்தனார் கல்விக் கழகத்தை உருவாக்கியது, ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்தியது, மாகாண சபை உறுப்பினராக (காங்கிரஸ்) செயல்பட்டது போன்றவை இவரின் பணிகளாக அறியப்படுகின்றன.’ (காண்க : ரவிக்குமார் தொகுத்திருக்கும், சுவாமி சகஜானந்தா மேலவையிலும் பேரவையிலும் ஆற்றிய உரைகள்). அதேபோல் வீரையன் நடத்திய ஆதிதிராவிடப் பாதுகாவலன் என்னும் இதழும் கிடைக்கவில்லை. ‘சென்னை மாகாண சபையின் உறுப்பினராக இருந்ததால் சபைக்குறிப்புகள்மூலம் அவரின் அரசியல் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ளமுடிகிறது.’

ஒரு பக்கம் தலித் அரசியல் தீவிரமடைந்தபோது மற்றொருபக்கம் நீதிக்கட்சியின் பிராமணரல்லாதோர் அரசியலும் தீவிரமடைந்துவந்தது. இந்த இரண்டுக்கும் இடையிலான உறவையும் முரண்பாடுகளையும் ஜெ. பாலசுப்பிரமணியத்தின் தொகுப்பிலிருந்து தெரிந்துகொள்ளமுடிகிறது. ‘அயோத்திதாசரின் எழுத்துகள் வெளிவந்த பின்னர் தலித் தரப்பிலிருந்து திராவிட அரசியல் விமர்சனமும், பெரியார் மீதான விமர்சனமும் எழுந்தன. தலித் சமூகத்தில் இதுபோன்ற ஒரு அறிவார்ந்த மரபு பிராணமரல்லாதோர் அரசியல் தோன்றுவதற்கு முன்பே இருந்துள்ளது என்ற புரிதல் அயோத்திதாசர் மூலம் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டிருக்கிறது.’

தலித் இதழியில் வரலாற்றில் மட்டுமல்ல தமிழ் இதழியல் வரலாற்றிலும் முக்கியமான வரவு, சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை. மேலதிக ஆய்வுக்கான பல புதிய வாசல்களை இந்நூல் திறந்துவைக்கிறது. இரண்டாவது நூல், பூலோகவியாஸன் இதழில் வெளிவந்த சில சுவையான, முக்கியமான கட்டுரைகளின் தொகுப்பு.

சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை : தலித் இதழ்கள் 1869-1943
ஜெ. பாலசுப்பிரமணியம்
184 பக்கம், விலை ரூ.195
காலச்சுவடு

பூலோகவியாஸன் : தலித் இதழ்த் தொகுப்பு
ஜெ. பாலசுப்பிரமணியம்
பக்கம் 128 விலை ரூ.125,
காலச்சுவடு

பூலோகவியாஸன் | ஆழி. செந்தில்நாதன் உரை

தலித் செயல்பாட்டிற்கான சிந்தனையாளர் வட்டம் – காலச்சுவடு
ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா

பூலோகவியாஸன் : தலித் இதழ்த் தொகுப்பு
பதிப்பாசிரியர் : ஜெ. பாலசுப்பிரமணியம்
வெளியிட்டு உரை : ஆழி. செந்தில்நாதன்
பெறுவோர் : கு. உமாதேவி, எ. பாலாஜி

(நன்றி: Shruti TV)