தமிழ் இதழியல் வரலாறு இன்னும் முழுமைபெறாத ஒன்றாகவே இருந்தாலும் குறிப்பிடத்தக்க சில புத்தகங்கள் வெளிவந்துள்ளன. தமிழ் இதழியல் வரலாற்றுக்கான ஆதாரப்பூர்வமான நூல்களாக பல ஆண்டுகளாக அவை இருக்கின்றன. இவற்றில் அ.மா.சாமி, மா.ரா.அரசு, பெ.சு.மணி ஆகியோரின் புத்தகங்கள் தமிழ் இதழியல் வரலாற்றிற்கான மேற்கோள் அதிகாரத்தைப் பெற்றுள்ளன. இவற்றில் தலித் இதழ்கள் குறித்து அறிவதற்கு சிறு குறிப்புகளே உள்ளன. உதாரணமாக, அ.மா.சாமியின் ‘19ஆம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள்’ மற்றும் ‘திராவிட இயக்க இதழ்கள்’ ஆகிய இரண்டு நூல்களிலும் பறையன், ஒரு பைசா தமிழன், பஞ்சமன், திராவிடப் பாண்டியன் போன்ற பத்திரிகைகள் குறித்த மேலோட்டமான தகவல்களைப் பெற முடிகிறது. பெ.சு.மணியின் ‘விடுதலைப் போரில் தமிழ் இதழ்கள்’ புத்தகத்திலும் தலித் இதழ்கள் குறித்து ஆசிரியரின் பெயர், இதழ் தொடங்கப்பட்ட வருடம் போன்ற ஒரு சில தகவல்கள் மட்டுமே கிடைக்கின்றன. தலித் இதழியல் குறித்து ரவிக்குமார் எழுதிய ‘எழுதா எழுத்து’ (தலித், 2002) எனும் கட்டுரையில் கூறப்பட்ட எட்டு தலித் இதழ்களும் எம்.சி.ராஜா எழுதிய ‘ஒடுக்கப்பட்ட இந்துக்கள்’ (ளிஜீஜீக்ஷீமீssமீபீ பிவீஸீபீus) புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட இதழ்களேயாகும்.
அலாய்சியஸின் பண்டிதர் அயோத்திதாசர் தொகுப்பிலுள்ள அன்பு பொன்னோவியத் தின் முன்னுரையில் தமிழன் பத்திரிகை மற்றும் எம்.சி.ராஜாவின் புத்தகத்திலிருந்து சில தலித் பத்திரிகைகளைப் பட்டியலிடுகிறார், ஜி.றி.கமலநாதனின் “விக்ஷீ. ரி. க்ஷிமீமீக்ஷீணீனீணீஸீவீ, வி.கி, ஙி.லி. வீs ஸிமீயீutமீபீ ணீஸீபீ tலீமீ பிவீstஷீக்ஷீவீநீணீறீ திணீநீts கிதீஷீut tலீமீ ஷிநீலீமீபீuறீமீபீ சிணீstமீ’s ஷிtக்ஷீuரீரீறீமீ யீஷீக்ஷீ ணினீணீஸீநீவீஜீணீtவீஷீஸீ வீஸீ ஷிஷீutலீ மிஸீபீவீணீ” புத்தகத்திலும் எம்.சி.ராஜா புத்தகத்திலிருந்த தலித் பத்திரிகைகளே குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தலித் இதழ்கள் குறித்த முழுமையான வரலாறு நமக்குக் கிட்டவில்லை. அதை நேர்செய்யும் ஒரு முயற்சியாக பூலோகவியாசன் எனும் தலித் இதழ் குறித்த வரலாற்றை காலனிய ஆவணங்கள், தலித் இதழ்கள் ஆகியவற்றின் துணைகொண்டு இக்கட்டுரை அமைகிறது. பரவலாக அறியப்படும் இரட்டைமலை சீனிவாசனின் பறையன் இதழின் ஒரு நறுக்கு மட்டுமே கிடைக்கும்போது பூலோகவியாசன் இதழின் ஒருவருடத் தொகுப்பு கிடைத்திருப்பது தலித் இதழியல் ஆய்வை மேலும் ஒருபடி நகர்த்தியிருக்கிறது. இதுவரை தொகுப்புகளாக வந்திருக்கக்கூடிய தலித் இதழ்களில் தமிழன் (1907-1914) முழுமையாகவும் இலங்கையிலிருந்து வெளிவந்த ஆதிதிராவிடன் இதழின் ஒருவருட (1919-1920) தொகுப்பு வெளிவந்துள்ளது. இந்த வகையில் பூலோகவியாசன் தலித் இதழ்களின் தொகுப்பு வரிசையில் மேலும் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறது.
பூலோகவியாசன் இதழ் 1903ம் வருடம் அக்டோபர் மாதம் சென்னையில் தசாவதானம் பூஞ்சோலை முத்துவீரன்பிள்ளை என்பவரால் தொடங்கப்பட்டு 1917 வரை வெளிவந்தது. இந்த இதழ் எண்.16, ஆனைக்கார கோனான் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னை என்னும் முகவரியில் ஜி.வேதமாணிக்கம் பிள்ளை (முத்துவீரன் பிள்ளையின் மைத்துனர்) என்பவருக்குச் சொந்தமான பூலோகவியாசன் அச்சகத்தில் அச்சிடப்பட்டது. இந்த அச்சகத்தின் அப்போதைய மதிப்பு ரூ.700 ஆகும். மேலும் அச்சகத்திலிருந்து மாதம்தோறும் ரூ.25 வருவாய் கிடைத்ததாக அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் பண்டிதரான பூஞ்சோலை முத்துவீரன் பிள்ளையிடம் எம்.சி.ராஜா மற்றும் ஏ.எஸ்.சகஜானந்தர் ஆகியோர் தமிழ் இலக்கியம் கற்றுள்ளனர். இவர் சகஜானந்தரின் இலக்கிய ஆசிரியருள் ஒருவர் என்பதை சகஜானந்தர் தனது நான்காவது ஹரிஜன மாநாட்டின் வரவேற்பு பிரசங்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வள்ளுவர் சாதியில் பிறந்த முத்து வீரன்பிள்ளை 1910ஆம் வருடம் இந்து மதத்திலிருந்து புத்த மதத்தைத் தழுவினார். இதே காலக்கட்டத்தில் தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கத்தைத் தோற்றுவித்து செயல்பட்டுவந்த அயோத்தி தாசருக்கும் பூஞ்சோலை முத்துவீரன் பிள்ளைக்குமான தொடர்புகள் குறித்த சில ஆதாரங்கள் இந்தத் தொகுப்பில் கிடைக்கின்றன. பிற தொகுப்புகளும் கிடைக்கும்போது அவர்களுக் கிடையிலான முழுமையான தொடர்புகள் தெரியவரும்.
பூலோகவியாசன் இதழில் ‘பறையர் மகாஜன சபை’ கூட்ட நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டன. இரட்டைமலை சீனிவாசன் 1900-ல் தென்னாப்பிரிகா சென்றவுடன், அவர் தொடங்கிய பறையன் பத்திரிகை முடிவுக்கு வந்தது. இந்தச் சூழலில் பறையர் மகாஜன சபைக்கான ஆதரவு பத்திரிகையாக பூலோகவியாசன் வெளிவந்தது. பர்மா தொழிலதிபரும் பர்மா முனிசிபல் சேர்மனாகவும் இருந்த ஆதிதிராவிட செல்வந்தர் பெ.மா.மதுரைப்பிள்ளை குறித்த செய்திகள் இந்த இதழில் தொடர்ச்சியாக வெளிவந்தன. ரங்கூனில் மதுரைப்பிள்ளைக்குச் சொந்தமான மதுரை பிரதர்ஸ் அண்டு கம்பெனி எனும் அச்சகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த அச்சகத்தில் அச்சிடப்பட்ட வருட காலண்டர் குறித்த விளம்பரம், ரங்கூனில் மதுரைப் பிள்ளை வெகுவிமரிசையாகக் கொண்டாடிய மதுரைவீரன் சுவாமி பூஜை குறித்த செய்தி போன்றவை இடம்பெற்றுள்ளன. மதுரைப்பிள்ளையின் மனைவி ஆதிலெட்சுமியம்மாளின் மரணச்செய்தியும் பூலோகவியாசனில் வெளியிடப்பட்டது. இந்தச் செய்திகள் மதுரைப்பிள்ளைக்கும் பூலோகவியாசனுக் குமிடையே இருந்த நெருக்கத்தைக் காட்டுகின்றன. இந்த நெருக்கத்தின் மேலும் ஒரு ஆதாரமாக 1907-ம் ஆண்டு பூலோகவியாசன் ஆசிரியர் பூஞ்சோலை முத்துவீரனுக்கு நாவலர் பட்டமும் பணமுடிப்பும் வழங்கி கௌரவித்தார் மதுரைப்பிள்ளை. இதன் பிறகு அவர் பூஞ்சோலை முத்துவீரன் நாவலர் என்றே அறியப்பட்டார்.
அயோத்திதாசர் நடத்திய தமிழன் இதழில் தொடர்ந்து பங்களிப்பு செய்து வந்த ஏ.பி.பெரியசாமி புலவர், தமிழ்மாது இதழை நடத்திய சொப்பணேஸ்வரி அம்மாள் ஆகியோர் பூலோகவியாசன் இதழிலும் எழுதி வந்தனர். ஏ.பி.பெரியசாமி புலவர் ‘சாக்கைய பவுத்தர்கள்’ எனும் தொடரையும், சொப்பணேஸ்வரி அம்மாள் ‘இளவயதில் கலியாணம் செய்தல்’ எனும் கட்டுரையையும் எழுதினார். தலித் அறிவுக் குழுக் களுக்கிடையே நிகழ்ந்துவந்த கருத்து மோதல்கள் குறித்த சில குறிப்புகள் இத்தொகுப்பில் கிடைக்கின்றன. குறிப்பாக பத்தொன்பதாம் நூற் றாண்டின் இறுதியில் ‘பறையன்’ எனும் சொல் குறித்து நிகழ்ந்த முக்கியமான கருத்து மோதலில் அயோத்திதாசரை தலைமையாகக் கொண்ட அறிவுக்குழு திராவிடப் பாண்டியன் இதழ் மூலம் ‘பறையன்’ எனும் சொல் பூர்வ பவுத்தர்களை இழிவுபடுத்தி கீழ்நிலைப்படுத்துவதற்காக சாதியை தோற்றுவித்தவர்களால் பரப்பப்பட்ட ஒன்று எனும் கருத்தைக்கொண்டிருந்தனர். இரட்டைமலை சீனிவாசனை தலைமையாகக் கொண்ட அறிவுக்குழு (பறையர் மகாஜனசபை) ‘பறையன்’ எனும் சொல்லை வெளிப்படையாக ஒவ்வொருவரும் அறிவித்துக் கொள்வதன் மூலமே இம்மக்கள் மீதான மற்றும் அச்சொல்லின் மீதான இழிவைப் போக்க முடியும். அதாவது இழிவு-கீழான-அசுத்தமான என்று அர்த்தம் கற்பிக்கப்பட்ட ‘பறையன்’ என்ற சொல்லுக்கான மரியாதையான அர்த்தத்தை நாமே உருவாக்கிக் கொள்ளவேண்டும் எனும் கருத்தைக் கொண்டிருந்தனர். இதன் வெளிப்பாடாகவே இரட்டைமலை சீனிவாசன் தொடங்கிய இதழுக்கு ‘பறையன்’ என்று பெயரிட்டார். இந்தப் பிரச்சினை நீதிமன்றம்வரை சென்று இரட்டைமலை சீனிவாச னுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பூலோகவியாசன் ஆதரித்த இரட்டைமலை சீனிவாசன் காங்கிரஸ் இயக்கம் குறித்து கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தபோதும் இந்த இதழ் காங்கிரஸ் இயக்கத்தின் கூட்ட நடவடிக்கைகளை எவ்வித விமர்சனமுமின்றி பதிவுசெய்துள்ளது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் பூலோகவியாசன் சுதேசிய எதிர்ப்பு இதழாக வெளிவந்தது. டெமி அளவில் வெளிவந்த இவ்விதழின் விற்பனை ஆரம்பகாலங்களில் 300 ஆக இருந்தது. இதன் விற்பனை 1910களுக்குப் பின்பு சிறிது குறைந்து பின்பு 1917ல் இதன் ஆசிரியர் பூஞ்சோலை முத்துவீர நாவலரின் மறைவைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. இதற்கெனத் தொடங்கப்பட்ட பூலோகவியாசன் அச்சகத்தை முத்துவீர நாவலரின் மனைவி முருகம்மாளின் பெயருக்கு மாற்றம் செய்யக்கோரி அரசுக்கு மனு செய்யப்பட்டது. அச்சகச் சட்டப்படி அச்சகத்தின் பெயர் மாற்றத்திற்கு வைப்புத்தொகையாக ரூ.500 கட்டவேண்டும், இதை முருகம்மாள் கட்டத்தவறியதால் அச்சகமும் முடிவுக்கு வந்தது.
நமக்குக் கிடைத்த ஒரு வருடத்தொகுப்பு மற்றும் அரசு ஆவணங்கள் சிலவற்றின் துணை கொண்டு இதுவரை வெறும் பெயரளவில் மட்டுமே தெரிந்திருந்த பூலோகவியாசன் இதழின் வரலாற்றை ஓரளவு கட்டமைக்க முடிந்துள்ளது. பூலோகவியாசனில் அரசியல், கல்வி, சமூகம், மதம், விவசாயம், புதினங்கள், விளம்பரங்கள் என அனைத்து விசயங்களும் வெளிவந்து ஒரு முழுமையான இதழாக வெளிவந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் வெளிவந்த பெரும்பாலான தமிழ் இதழ்கள் அனைத்து விசயங்களும் கலந்த ஒரு கலவையாகவே வெளிவந்தன. ஒரு சில தீவிர இதழ்கள் (தமிழன்) மட்டுமே கருத்தியல் சார்ந்த விசயங்களுக்கு மட்டும் அதிகம் இடம் தருபவையாக இருந்தன.
பூலோகவியாசன் – தமிழன் உறவு
தமிழன் (18, ஜனவரி,1911) இதழில் ‘சாதி பேதமற்ற திராவிடர்கள்’ எனத் தலைப்பிட்டு, “பூலோகவியாசனுள் வரைந்துள்ளக் கருத்தை அசத்தியர்களாலும், அசப்பியர்களாலும், துன்மார்கர்களாலும் பொறாமை கொண்டு பூர்வ பௌத்தர்களுக்களித்துள்ள சாதிப்பெயர்களை யகற்றி சுயம்பில் (சென்செஸ் காலத்தில்) வெளிவருவதுடன் மதக் களிம் பேறியுள்ள மற்றவர்களுக்கும் விளக்கி பௌத்த காலத்தில் சேர்க்க வேண்டுமென்னும் கோரிக் கையால் வரைந்ததென்பது கருத்தாம். அன்னோரோதனும் பிறர்க்குரைத்தனுமாகியச் செயலில் நிகழ் வாராயின் அழகும் ஆனந்தமுமேயாம்” என்ற செய்தியின் மூலம் பௌத்த அடையாளத்திற்காக பூலோகவியாசனின் பங்களிப்பு தெரிய வருகிறது. அயோத்திதாசப் பண்டிதரோடு நெருக்கமாக செயல்பட்டு வந்த ஏ.பி.பெரியசாமி புலவர் ‘சாக்கைய பௌத்தர்கள்’ எனும் தொடரை மூன்று தொடராக எழுதியுள்ளார். மேலும் தமிழகச் சூழலில் இதுவரை பௌத்தத்தின் வீழ்ச்சியில் தீண்டாமையின் தோற்றத்தை விளக்கும் சான்றாக அயோத்திதாசரின் தமிழன் இதழ் மட்டுமே அறியப்பட்டு வந்த சூழலில் பூலோகவியாசனின் பௌத்தத்திற்கும் இந்து ஆரியருக்குமான முரண் நோக்கில் சாதி மற்றும் தீண்டாமையின் தோற்றத்தை விளக்குவது என்பதெல்லாம் தமிழனுக்கும் பூலோக வியாசனுக்குமான கொடுக்கல் வாங்கல்கள். இதிலிருந்து அயோத்திதாசப் பண்டிதரின் தமிழன் இதழுக்கு அடுத்தபடியாக பூலோகவியாசன் மற்று மொரு பௌத்த இதழ் என்ற முடிவுக்கு வரமுடிகிறது.
பூலோகவியாசன் இதழின் கடிதங்கள் பகுதி யில்; “விகடனும் பாஷிதனும்” என்று தலைப் பிட்ட ஒரு கடிதத்தை பொதுநலப்பிரியன் என்பவர் எழுதியிருந்தார். இக்கடிதத்தைப் பிரசுரிக்க முடியாது என ஆசிரியர் அறிவித்துள்ளார். இதற்குக் காரணமாக அவர் “சில காலம் முன் நடந்து மறைந்த ‘திராவிடப்பாண்டியன்’ ‘பறையன்’ எனும் பத்திரிகைகளும் ‘மஹாவிகடனும்’ ஒன்றுக்கொன்று தூற்றித்தூறி அடைந்த அவமா னத்தையுலகம் மறந்துவிடவில்லையே” என்று பத்திராதிபர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் திராவிடப்பாண்டியனுக்கும் பறையனுக்குமிடையில் நடந்த கருத்து மோதல் உறுதிப்படுகிறது. இதையே பெரியசாமி புலவர் குறிப்பாக தமிழனா? பறையனா? என்ற தலைப்பில் “அந்தோ பறையரென்றாலும் பழி, தமிழனென்றாலும் பழி இவ்விதக் கோளரிகள் நமக்குள்ளேயச் செய்து கொண்டால் ஜெயம் பெறுவதெங்ஙனம்? என்று சீர்படப்போகிறோம்” என்று எழுதுகிறார். இங்கே ‘தமிழன்’ என்பது அயோத்திதாசர் முன்வைத்த அடையாளம், ‘பறையன்’ என்பது இரட்டைமலை சீனிவாசன் முன்வைத்த அடையாளம் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. இதில் பெரியசாமி புலவர் பௌத்தம் குறித்து தொடர்ந்து செயல்பட்டு வந்தவர் என்றும் அவர் இந்த பறையன் ஜ் தமிழன் விவாதத்தில் நடுநிலைமையே வகித்தவந்தார் என்பதும் தெளிவு.
வாசகர்கள்
பூலோகவியாசன் இதழுக்குக் கடிதம் எழுது வோரின் புனைப்பெயரைக் கொண்டு அவர்களின் அரசியல் சார்பு மற்றும் விழிப்புணர்வைப் புரிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக, உண்மை ஞானப் பறையன், ஆத்மநேசன், அவதானியார், செந்தமிழ் பாநு, தேசிகன், கருப்பண்ணாச்சாரி, சோதரப்பிரியன், அஷ்டவதானியார், ஓர் பரோபகார சிந்தையான், கண்டுகளித்தோன் ஆகிய புனைப்பெயர்களில் பூலோகவியாசனில் கடிதம் எழுதி வந்தனர்.
ஒவ்வொரு பறையர் மகாஜன சபைக் கூட்டத்திலும் இரட்டைமலை சீனிவாசன் தென் னாப்பிரிக்காவிலிருந்து எழுதிய கடிதத்தை வாசித்துக் காண்பித்தனர். மேலும் பறையர்கள் குறித்த செய்திகள், கட்டுரைகள் எந்தச் செய்தித்தாள்களில் வந்தாலும் அதைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாசித்துக்காட்டும் வழக்கம் இருந்துள்ளது. உதாரணமாக பூலோகவியாசனின் ஏப்ரல் மாத இதழில் வெளியான பறையர் மகாஜனசபை கூட்ட அறிக்கையில் மைசூரிலிருந்து வெளியான ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்த செய்தியை ஜி.ஸி.றி. தீனதயாளம் பிள்ளை சங்கத்தின் முன் வாசித்துக் காட்டியதும், கனம் சுபேதார் மாரிமுத்தாப்பிள்ளை விஜயா பத்திரிகையில் வெளிவந்த பஞ்சமர் விசயத்தையும் வாசித்தனர் என்பதும் தெரியவருகிறது. பறையர் குறித்த செய்தி, கட்டுரை எந்தப் பத்திரிகையில் வந்தாலும் பறையர் மகாஜனசபை கூட்டத்தின்போது அதை வாசித்துக் காட்டுவது எனும் மரபு இம்மக்கள் பத்திரிக்கை வாசிப்பு எனும் அறிவுச் செயல்பாட்டில் கொண் டிருந்த விடாப்பிடியான நம்பிக்கையைக் காட் டுகிறது.
மேலும் எந்தப் பத்திரிகையில் தாழ்த்தப்பட்டோர் குறித்த கருத்துகள் வெளியிடப்பட்டாலும் அதற்கு எதிர்வினை யாற்றும் செயல்பாடும் வரலாற்றில் துலக்க மாகத் தெரிகிறது. வாசகர்கள் என்பவர்கள் செயலற்ற வாசகர்களாக இல்லாமல் எதிர்வினை யாற்றக் கூடிய வாசகர் களாக இருந்துள்ளனர்.
‘அயோத்திதாசர் சிந்தனைகள்’ தொகுப்பிற்கான முன்னுரையில் அன்பு பொன்னோவியம் “ஆதிதிராவிடன், மஹாவிகடதூதன், பூலோகவியாசன், பறையன், ஆதிதிராவிட மித்திரன் போன்ற பல பத்திரிகைகள் கிடைத்திருக்குமாயின் இன்னும் பல செய்திகள் தெரிய வந்திருக்கும். அவை இன்று கிடைப்பனவாக இல்லை” (பக்.ஙீஙீக்ஷி) என்று கூறுகிறார். அவரின் கவலையை முழுமையாகப் போக்க முடியாவிட்டாலும் அவர் குறிப்பிட்ட இதழ்களில் ஒன்றான பூலோகவியாசன் குறித்து கட்டுரை வெளியிடுவது அன்பு பொன்னோவியத்திற்கு அர்ப்பணிப்பதாகும். ட
பிரதிலிபி எனும் பதிப்பகத்தின் யூ டியூப் சானல் பத்திரிகையாளர் பாரதி தம்பியிடம் நடத்திய சிறிய நேர்காணல் இது.
நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகள் இவை:
சமூகம் சார்ந்து எழுதக்கூடிய பத்திரிகையாளர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ளும் முறை பற்றி
சமூகம் சார்ந்த பத்திரிக்கையாளர், செயற்பாட்டளராக இருக்க வேண்டுமா என்பது பற்றி
மக்களுக்காக எழுதும் கட்டுரைகளுக்கு தரவுகள் சேகரிப்பது குறித்து
கட்டுரை எழுதுவதற்கு எழுத்தாளர் வைத்திருக்கும் டெம்ப்ளேட்
கட்டுரையின் முடிவு அறைகூவலாக இருக்க வேண்டுமா என்பது குறித்து
சமூகம் சார்ந்து எதும்போது நடுநிலைமையோடு எழுதுவது பற்றி
ஊடகங்கள் பெருகவிட்ட காலத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் பிரபலமாவதில்லை. அப்படி ஆனவர்களில் கணிசமானோர் பிற்போக்கு சக்கரவர்த்திகளாகவே இருக்கின்றனர். இது தனிப்பிரச்சினை.
மக்கள் நலன் சார்ந்து எழுதும் பத்திரிகையாளர்கள் பொதுவில் அரிது. அப்படியே அரிதாக நிலைபெற்று தொடர்ந்து எழுத முடியுமா என்பது அதனினும் அரிது. இது போக வேலை நிரந்தரமில்லாமல் இருப்பது, நிர்வாக அழுத்தங்கள், பொருளாதார பிரச்சினைகள் என்று ஒரு மக்கள் பத்திரிகையாளராக தமிழ்ச்சூழலில் நிலைபெறுவதில் பல தடைகள்.
எனினும் சிலராவது நம்பிக்கை அளிக்கின்றனர். மக்கள் நலனுக்காக எழுதுவது என்பது இயல்பாக இருக்க வேண்டும், பிரபலத்திற்காக எழுதக் கூடாது, அறிவுப்பகட்டை காட்டும் வண்ணம் எழுதக்கூடாது என்றெல்லாம் எளிய முறையில் விளக்குகிறார் பாரதிதம்பி.
சமூக மாற்றம் குறித்து களத்தில் பணியாற்றும் களப்பணியாளர் போல ஒரு பத்திரிகையாளர் எழுதுவதில் பணியாற்றுகிறார் என்கிறார் பாரதி தம்பி. எப்போதும் சமூகம் சார்ந்து சிந்திக்கும் போதுதான் எழுத்தில் அது இயல்பாக வரும்; மாறாக ஒரு எட்டு மணி நேர ஷிப்டில் மட்டும் சமூகம் சார்ந்து சிந்தித்தால் அப்படி எழுத முடியாது என்கிறார். இதை பிரபலம், புகழுக்காகவும் எழுத முடியாது என்று வலியுறுத்தவும் செய்கிறார்.
சமூகம் சார்ந்து ஒரு பத்திரிகையாளர் எழுதுவது என்பது உண்மையில் சமூக மாற்றம் வேண்டும் என்ற கருத்து இருக்க வேண்டும். அது தொடர்பான படிப்பு, கள அனுபவங்கள், முன்னோடிகளது அனுபவங்களை அறிதல் மூலம் அந்த பத்தரிகையாளர் தன்னை தயார் படுத்திக் கொள்ள முடியும் என்கிறார். நாம் என்ன கண்ணோட்டத்தில் எழுத விரும்புகிறோமோ அதற்கு தேவையான தரவுகளை தேடி எடுக்க முடியும் என்கிறார்.
இந்த நேர்காணலில் பத்திரிகையாளர்களின் நடுநிலைமை குறித்து அவர் விளக்குவது முக்கியமானது. மெரினா போராட்டத்தை ஒட்டி நடந்த போலீசு வன்முறையில் சூறையாடப்பட்ட நடுக்குப்பத்தை எழுதும் போது இரு தரப்பில் அதாவது மீனவ மக்கள், போலீசு ஆகியோரிடம் கருத்துக்களைப் பெற்று எழுதுவதுதான் நடுநிலைமையா என்று கேட்கிறார் பாரதி தம்பி. அப்படி எழுதினால் அதுதான் வன்முறை என்று கூறுபவர் ஒரு விசயம், பிரச்சினையில் உண்மையை தெரிவிப்பதே நடுநிலை என்கிறார். வார்த்தையில் நடு என்று இருப்பதால் அது நடுநிலையாக எழுதுவது என்று பொருளல்ல என்கிறார்.
பாண்டே பள்ளியில் படித்த நெறியாளர்கள் நிகழ்ச்சி நடத்தும் போது சூரியன் எனும் நட்சத்திரமே இல்லை என்று பா.ஜ.கவினர் கூறுகிறார்களே அது பற்றி உங்களது கருத்து என்ன என்றெல்லாம் கேட்டு கொடுமைப்படுத்துவார்கள். ஒரு விசயத்தில் மக்கள் நலனோடு பார்ப்பதும், அதற்காக உண்மையைத் தேடுவதுமே ஒரு பத்திரிகையாளனின் கடமை. அதை விரும்பி செய்யும் போது அவர் ஒரு மக்கள் பத்திரிகையாளராக உருவெடுப்பார்.
இந்த நேர்காணலில் கட்டுரையை முடிக்கும் போது போராட அழைப்பு விடுப்பது குறித்த கேள்வி கொஞ்சம் சிறு பத்திரிக்கை வாடை அடிக்கிறது. ஒரு கட்டுரை படிக்கும் வாசகரை செயலுக்கு அழைக்கும் வண்ணம் அது ஆழமாகவம், ஈர்ப்பாகவும் இருப்பது சரியானதே. அதை பாரதி தம்பியும் பிரச்சார நெடியோடு முடிக்க வேண்டியதில்லை என்கிறார். உண்மையில் இப்படி செயற்கையாக எழுதும் போது உண்மையில் வாசகரை போராட தூண்ட முடியாது என்பதே சரியான பார்வையாக இருக்கும். மற்றபடி இந்த உலகில் அனைத்து எழுத்துக்களும் ஏதோ ஒரு பிரச்சாரத்திற்காகத்தான் எழுதப்படுகின்றன. பிரச்சாரங்களில் மலிவான பிரச்சாரம், உணர்வு- உணர்ச்சிப் பூர்வமான பிரச்சாரம் என்று பிரிக்கலாமே ஒழியி பிரச்சராமின்றி ஏதுமில்லை.
நேர்காணல் செய்பவர் கேட்ட கேள்விகளும் ஒரு திட்டமிட்ட டெம்பிளேட் வகையாகவே இருக்கிறது. மக்கள் நலன் சார்ந்து எழுதும் பத்திரிகையாளர்களுக்கு என்ன தடைகள் இருக்கும், உங்களது தனிப்பட்ட அனுபவம் என்ன, நிர்வாகத்தோடு முரண்பட்டால் என்ன செய்வீர்கள் என்றெல்லாம் கேட்கவில்லை. மாறாக நேர்மறையில் எப்படி எழுதுவீர்கள் என்று கொஞ்சம் “உன்னால் முடியும் தம்பி” வகையில் (இதுதான் கொஞ்சம் செயற்கையான பிரச்சாரம்) கேள்விகள் இருக்கின்றன.
இதையெல்லாம் பெரிய குறையாக சொல்லவில்லை. ஒரு மனிதன் அல்லது எழுத்தாளரிடம் அவர் நேர்மறையாக சாதித்ததோடு அந்த நேர்மறையை தடுக்க முனைந்த எதிர்மறைகள் குறித்து கேட்க வேண்டும் என்றும் கோருகிறோம். ஏனெனில் நேரடியாக ஊழல் குற்றம் சாட்டப்பட்ட முதலாளிகள்தான் இன்றைய ஊடக முதலைகளாக இருக்கும் போது அந்த முரண்பாட்டை ஒரு பத்திரிகையாளர் எப்படி உணர்கிறார் என்று கேட்பது தேவையல்லவா?
குறைகள் போக இந்த சிறிய நேர்காணல் ஒரு இளம்பத்திரிகையாளருக்கு ஒரு எளிய கையேடாக இருக்கும். சமரசமின்றி எழுத விரும்பும் இளைஞர்களுக்கு ஊக்கத்தையும் கொடுக்கும்.
சோ ராமசாமி 7.12.2016 புதன் கிழமையன்று அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். சோ-வைப் போன்றே நகைச்சுவை நாடகத்தால் பிரபலமான எஸ்.வி.சேகர் சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடியைச் சந்தித்த போது “நம்முடைய ராஜகுரு எப்படி இருக்கிறார்?” என்று சோ ராமசாமியைக் கேட்டாராம். அதானி போன்ற குபேர குருக்களின் தயவில் ஆட்சியைப் பிடித்தவருக்கு ராமசாமி போன்ற ராஜகுருக்கள் என்ன உதவி செய்திருக்க முடியும்?
பார்ப்பனியத்தின் விதிப்படி தேவர்களின் சொத்துக்களை நிர்வகிக்கும் குபேரனுக்கு குஜராத்தில்தான் ஆலயமே உள்ளதாம். குஜராத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமே இந்த ஆலயம்தான் என்று ஏதோ ஒரு சாதா ஜோசியர் ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தார். அந்த குபேர ஆலயத்தில் குபேரனுக்கு விக்கிரகம் இல்லையாம். பாதாளம் வரை பாயும் பணத்திற்கு தனிச்சிறப்பாக எதற்கு ஒரு அடையாளம் என்று குபேரன் பெருந்தன்மையாக தவிர்த்திருக்கலாம்.
மோடியின் ராஜகுரு சோ ராமசாமி
இந்திய மன்னர்களைப் பொறுத்தவரை குபேர குரு, ராஜகுரு இருவருமே தேவைப்பட்டனர். ஆள்பவர்களின் செல்வப் பெருக்கிற்கு குபேர குருவும், ஆளப்படுபவர்களின் பக்தி விசுவாத்திற்கு ராஜ குருவும் தேவைப்பட்டனர். ராஜபக்தி, விசுவாசம், அடிமைத்தனம் அனைத்தும் மக்களிடம் வேர்விட்டு செழிக்கச் செய்வதே ராஜ குருக்களின் பணி.
அத்தகைய மக்கள் பக்திதான் பட்டாபிஷேகத்தன்று குருவின் தண்டத்திலிருந்து கிரீடம் வழியாக ராஜாவின் தலையில் அமர்ந்து கொண்டு பாதுகாப்பளிக்கிறது.
இன்றைக்கு கருப்புப் பூனை அதிரடிப்படையின் தயவிலேயே சிறு-குறு-பெரு அரசர்கள் பாதுகாப்பை உணர்ந்தாலும், ராஜ குருக்களின் இடம் அரசவையிலிருந்து, ஊடகம், அதிகார வர்க்கம், மேட்டுகுடியினர் என்று கிளைபரப்பிவிட்டது. ஜெயாவின் இறுதிச் ஊர்வலத்தை திருவில்லிபுத்தூர் கும்பாபிஷேகம் போன்று இருநாட்களும் இடைவெளியில்லாமல் மனமுருகிப் பேசிய பாண்டே அதற்கோர் சான்று.
பாண்டேக்களின் காலத்தில் சோ ராமசாமியின் குருப் பாத்திரம் கொஞ்சம் இத்துப் போயிருந்தது உண்மைதான். மேலும் சோ-வின் தமிழக அரசியல் பாத்திரமென்பது அவாள்களின் நலன்களுக்கான தரகர் பாத்திரமாகவே நசுங்கியிருந்தது. செம்பு நசுங்கினாலும் அதையே பல்வேறு தருணங்களில் பஞ்சாயத்துக்களுக்கு அழைத்து வந்தனர்.
அப்பல்லோ அறை எண்ணில் அம்மா இருந்தபோது அவரது மர்ம உலகில் முன்னணி பாத்திரமாற்றிய சோ-வும் சிகிச்சைக்காக வந்தார். அம்மா போன அடுத்த நாளில் அவரும் போய்விட்டார். இல்லையேல் இன்று மன்னார்குடி மாஃபியாவுக்கு போட்டியாக மயிலாப்பூர் மாஃபியாவின் அணித்தலைவராக அவர் மோடியின் பொருட்டு களமிறங்கியிருப்பார். பரவாயில்லை சுப்ரமணியசாமி, குருமூர்த்தி, ஜெயேந்திர சரஸ்வதி மட்டுமல்ல, தினமணி வைத்தி, பத்ரி சேஷாத்ரி போன்ற நவயுக ராஜ குருக்களும், சமஸ் போன்ற கருப்பு ராஜ குருக்களும் அப்பணியை ஓரளவிற்கேனும் செய்வர்.
ராஜபக்தி, விசுவாசம், அடிமைத்தனம் அனைத்தும் மக்களிடம் வேர்விட்டு செழிக்கச் செய்வதே ராஜ குருக்களின் பணி.
சோ-வின் பாத்திரத்தை எப்படி வரையறுப்பது? அவரது நாடகம், பத்திரிகை, தரகர் வேலை அனைத்திலும் பார்ப்பனியத்தின் நலனே பிரதானமாயிருந்தது. அதற்காக அவர் பொய்யுரைப்பதைக் கூட குற்ற உணர்வின்றி செய்தார்.
பத்திரிகையாளர் ஞாநியும், காலஞ்சென்ற சின்னக்குத்தூசியும் சங்கர மட ஜெயந்திரனை நேர்காணல் செய்தபோது சங்கர்சாரி ஒரு விசயத்தை கூறியிருக்கிறார். இந்த சந்திப்புக்கு முந்தைய துக்ளக் இதழில் சோ – தி.க வீரமணி நேர்காணல் வந்திருந்தது. அதில் சோ ஆவேசமாக பல பார்ப்பனியக் கேள்விகளைக் கேட்கிறார். “ராமசாமிக்கு இன்னின்ன கேள்வி கேக்கணும்னு” தான்தான் சொல்லிக் கொடுத்தேன் என்று ஞாநியிடம் பொய்யுரைக்கிறார் ஜெயேந்திரர். இதைப் பதிவு செய்து ஞாநி உடனே சோவின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார். இருவரும் குடும்ப நண்பர் என்பதால் ஞாநி சொல்வது உண்மை என்பதை சோ அங்கீகரிக்கிறார். எனினும் அடுத்து வந்த துக்ளக்கில் ஜெயேந்திரர் அப்படி கூறியிருக்கமாட்டார், ஞாநி பொய் சொல்வதாக எழுதிவிட்டார். காரணம் என்ன?
இந்தச் செய்தியை கேட்டபோது சங்கராச்சாரி அப்படி பொய் சொன்னதை மறுக்காத சோ என்ன இருந்தாலும் சங்கரமடத்தின் கௌரவம்தான் முக்கியமானது, அது ஜெயேந்திரனது பொய்யை விட முக்கியமானது என்றிருக்கிறார். அதன்படி சங்கராச்சாரியின் பொய்யை ஞாநி-சின்னக்குத்தூசியின் பொய்யாக மாற்றிவிட்டார்.
இந்த நேரத்தில் ஏன் அவர் குற்ற உணர்வுக்கு ஆளாகவில்லை? அதுதான் பார்ப்பனிய நலன். ஒரு பார்ப்பன ராஜகுருவின் தலையாயத் தகுதியே இதுதான். சாவதற்கு முந்தைய துக்ளக்கில் கூட அவர் அப்படித்தான் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் மக்களுக்கு பெரிய பாதிப்பில்லை என்கிறார்.
பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த விவாதம் ஒன்றை அவர் நடத்துகிறார். அதில் தி.க.வின் அருள்மொழி கலந்து கொண்டு எடுத்த எடுப்பிலேயே “உங்கள் பத்திரிக்கையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது என்று எழுதிவிட்ட பிறகு எதற்கு விவாதம்” என்று கேட்கிறார். கிரிக்கெட்டின் ரசிகரான சோ இந்த கிளீன் போல்டை ஒத்துக் கொண்டாலும் நாம் விவாதிப்பதற்காக ஒரு எபிசோடை கொடுத்திருக்கிறார்கள், அந்த 20 நிமிடங்களில் ஏதாவது பேசியாக வேண்டும், பேசுங்கள்” என்று சமாளித்திருக்கிறார். இதுதான் சோ.
எனினும் இப்படி பார்ப்பனியத்தின் பிதாமகராக நெஞ்சார பொய்யுரைத்தாலும் அவரது ‘துணிவு, நேர்மை, நகைச்சுவை’ காரணமாக அனேகமானோர் பாராட்டி நினைவு கூர்கின்றனர். செத்தோரை சிறுமைப்படுத்தக் கூடாது என்று வாழ்பவர்களை வதைக்கும் ஒரு பிரபலமான ‘தத்துவப்படி’ இந்தக் கருத்து “ஆல் பர்ப்பஸ் அங்கிள் மற்றும் ஆண்டிக்களின்’ வாய்களால் அடிக்கடி பிதுக்கப்படுகிறது. மற்றபடி இந்த தத்துவத்திற்க்கென்று குறிப்பான விளக்கமோ, பொருளோ, வாதமோ இல்லை. இந்த முன்வைப்பே இப்போது பேசாதே, அப்போது பேசியிருந்தாலும் செத்த பிறகு பேசாதே என்று கண்காணிப்பதுதான்.
இறுதியில் சோ-விடம் மிச்சமிருப்பது நகைச்சுவை மட்டுமே. உண்மையில் அது நகைச்சுவைதானா? அதற்கு சோ-வின் வரலாற்றுக் காலத்தோடு பயணிப்போம்.
முகமது பின் துக்ளக்
சென்னை மயிலாப்பூர், தமிழக ராஜகுருக்களின் தலைநகரம். பாரதியோ இல்லை ஆழ்வார்பேட்டை ஆண்டவனோ, போயஸ் தோட்டத்து பெருந்தலைகளோ, ஊடக குழுமங்களின் அதிபர்களோ அனைவரும் சங்கமித்திருக்கும் புண்ணிய பூமி. இங்கே 1934-ம் ஆண்டில் பிறக்கும் சோ அறிவியல் பட்டதாரி ஆகி, கிரிக்கெட் ஆடி பிறகு சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல் பெற்றார். பல நிறுவனங்களில் சட்ட ஆலோசகராக பணியாற்றியிருக்கிறார்.
இன்றைக்கும் நமது மக்களுக்கு நீதிமன்றம் என்றால் அது அன்னிய பாஷையில், வெள்ளைத் தோல் மனிதர்கள், காக்கிச் சட்டை காவலர்களுடன் அதிகாரம் செலுத்தும் ஒரு தூரப்பிரதேசம். அந்தப் பிரதேசத்தின் விதிகள், முறைகள், வழிகள், ஆட்டங்கள் எதுவும் நமக்கும் தெரியாது. காலனியாதிக்கத்தின் காலத்தில் உருவாகியிருந்த சமூக மாற்றத்தின் மேல் மட்ட இடங்களில் பணியாற்றுவதற்காக அல்லது ‘வளர்ச்சிக்காக’ நிலங்களைத் துறந்து சென்னைக்கு படையெடுத்தனர் அக்கிரகார கிராமங்களிலிருந்த பாரம்பரிய பார்ப்பனர்கள்.
அரசு அதிகார வர்க்கம், போலீஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பத்திரிகை – நாடகம் – சினிமா போன்ற துறைகளில் அன்றைக்கு இவர்களே பிள்ளையார் சுழி போட்டு ஆக்கிரமித்தனர். அக்கிரகாரத்தின் சோம்பிப் போயிருந்த திரேதாயுக அறிவு நவயுக கலிகாலத்தின் வாய்ப்புக்களால் உப்பத் துவங்கியிருந்தது.
கிராமங்களில் பார்ப்பன புராண புரட்டுக்களால் உழைக்கும் மக்களை விட அறிவிலும், சாமர்த்தியத்திலும் மேலானவர்களாக நம்பியவர்களை பாரிமுனை நீதிமன்ற வளாகம் இன்னும் ஒரு மடங்கு தூக்கி விட்டது. மக்களோடு இணைந்து பணியாற்றி உருவாகும் சமூக அறிவிற்கும், மக்களை அரசியல் அமைப்பால் ஆளும் அதிகாரத்திலிருந்து உருவாகும் அறிவிற்கும் பாரிய வேறுபாடு உண்டு. முன்னது அவர்களின் சிரமங்களை உணர்ந்து மாற்றுவதை நோக்கி பயணிக்கும். பின்னது அவர்களின் கட்டுப்படுதலை ஆராய்ந்து இன்னும் என்ன அதிகம் கட்டுப்பாடு கொண்டு வரலாம் என்று யோசிக்கும்.
சு.சாமியுடன் சோ சாமி
இந்த பார்வைதான் காங்கிரசு, மவுண்டு ரோடு மகா விஷ்ணு போன்ற ஊடக முதலாளிகள், காஞ்சி மடம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றின் செயல்பாட்டை அன்றைக்கும் தீர்மானித்தது. இத்தகைய மயிலாப்பூர் அழகியலில் உருவான இளம் வயது சோ எப்படி இருந்திருப்பார் என்பதை முதிய வயது சோ மூலம் கண்டுபிடிக்கலாம். இந்தப் பின்னணியில் சோ நாடகம், திரைப்படத்துறையில் நுழைகிறார். இவை அந்தப் பார்வையை இன்னும் மலிவான முறை அவதாரமாக்குகிறது.
தருமபுரியில் 2000-ம் ஆண்டுகளின் மே நாள் ஒன்றில் கலந்து கொண்டு ஓசூருக்குச் சென்றோம். அங்கே விவசாயிகள் விடுதலை முன்னணியின் தொடர்பில் இருந்த சில பரிசல் தொழிலாளிகளைச் சந்தித்தோம். அவர்களில் ஒருவர், தான் அமைப்பின் தொடர்பில் வருவதற்கு முன்னர் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே தனது சூழலில் பேசியதாகவும், இப்போதுதான் கேட்கப்படும் ஒரு சில கேள்விகளைப் புரிந்து கொண்டு பதிலளிப்பதாகவும் சுருங்கச் சொன்னால் சகஜமாக பேசுவதையே இப்போதுதான் கற்றுக் கொண்டேன் என்றார்.
காலச்சுவடு நடத்திய தமிழ் இனி 2000-ம் கருத்தரங்கில் பேசிய எழுத்தாளர் பிரபஞ்சனும் இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் நமது தமிழ் மக்கள் பேசிய வார்த்தைகளே சில பத்து எண்ணிக்கைக்குள் முடிந்து விடும் என்றார். பார்ப்பனியத்தால் கல்வி பறிக்கப்பட்ட நமது சமூகத்தின் நிலை இப்போதே இப்படித்தான் எனும் போது மயிலாப்பூர் மாட வீதிகளில் சோ வலம் வந்த போது எப்படி இருந்திருக்கும் என்பதை விரிக்கத் தேவையில்லை.
அவ்வாறாக பேசா மந்தைகளாக நம் மக்கள் இருக்கும் போது இவர்கள் பேசுவதெல்லாம் வியப்புரியதாகவும், அறிவுக்குரியதாகவும் கருதப்படுவதில் வியப்பென்ன?
பகீரதனின் “தேன்மொழி” நாடகத்தில் சோ எனும் பாத்திரத்தில் நடித்த ராமசாமிக்கு அதுவும் இயற்பெயருடன் சேருகிறது. பிறகு அவரே நாடகம் எழுதி இயக்குகிறார். “முகமது பின் துக்ளக்” நாடகம் பிரபலமாகிறது. விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்” எனும் நாடக கம்பெனியை 1954-ம் ஆண்டில் துவங்குகிறார். பிறகு திரைப்படங்களிலும் நகைச்சுவை நடிகராக நடிக்கிறார்.
திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் அ.தி.மு.கவின் ஆஸ்தான வித்வானாகவும் மாறினார். எம்.ஜி.ஆரின் அருகில் அமர்ந்திருக்கிறார் சோ. படம் நன்றி: விகடன்
அவரது நாடங்களில் அரசியல் நகைச்சுவை இருப்பதாக பாராட்டப்படுகிறார். சபா நாடகங்களில் சென்டிமெண்டும், நகைச்சுவையும் இருக்கும் போது சோவின் அரசியல் நகைச்சுவை ஒரு புதிய அடையாளமாக தோன்றுகிறது. அப்போது அதற்கு போட்டியாக இருந்த எம்.ஆர்.ராதாவின் நகைச்சுவை மக்களின் ஆதரவோடு இருந்தது என்றால் சோ போன்றவர்களின் காமடி ஆளும் வர்க்கங்களின் தயவில் பிறந்தது.
ஆங்கிலத்தில் அழைக்கப்படும் காமடி எனும் வார்த்தை வெறுமனே தோற்றப்பிழைகளையோ இல்லை வார்த்தை சேர்க்கைகளையோ வைத்து உருவாக்கப்படும் நகைச்சுவையை குறிக்கிறது. அத்துடன் அதிகாரத்தின் பீடத்தில் இருந்து கொண்டு அப்பாவிகளாக வாழும் மக்களுக்கு உபதேசிக்கும் பார்வை சேரும் போது பழைய கள்ளே என்றாலும் புதிய மொந்தை என்று ரசிக்கப்படுகிறது.
கோவில்களிலும், மண்டபங்களிலும் கதாகலாட்சேபம், மற்றும் புராண உரைகள் என்று மக்களின் ஓய்வு பொழுதுபோக்கை தீர்மானித்தவர்கள், பின்னர் தொழில்நுட்பம் – முதலாளித்துவ வளர்ச்சி காரணமாக நாடகம், சினிமாவை பயன்படுத்துகிறார்கள். சோ-வின் காலத்தில் எளிய மக்களின் குரலை பொது அரங்கிற்கு கொண்டு வந்தது திராவிட இயக்கம். காலனியாதிக்கத்தின் சலுகைகளை அனுபவித்துக் கொண்டே வேத கால பண்பாட்டின் பெருமைகளை பேசித்தீர்த்த பார்ப்பன ஆதிக்க சாதியினர், திராவிட இயக்கம் வளர்ந்த போது கலிகாலத்தின் வருகை குறித்த துக்கத்தை பேச்சிலும், மூச்சிலும், இடைவிடாது வெளிப்படுத்தினர்.
அழிந்து வரும் நிலவுடமைச் சமூகத்தின் மேல் தட்டில்தான் பார்ப்பனர்களும் மற்ற பிற “உயர்” சாதியினர் வருகின்றனர். திராவிட இயக்கம், பெரியாரின் விழிப்புணர்வு பிரச்சாரத்தால் பெண்ணுரிமை, நாத்திகம், அறிவியல் பார்வை, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை, தமிழ் மொழி உரிமை அனைத்தும் பொது அரங்கிற்கு வரும் போது அரசியல் அரங்கில் சத்தியமூர்த்தி, ராஜாஜி போன்றோர் அதை எதிர்கொண்டனர். கலைத்துறையில் சோ உள்ளிட்ட பலர் அதை எதிர் கொண்டனர்.
நிலவுடைமை சமூகத்தின் பணக்கார மாந்தரின் சோகத்திற்காக சிவாஜி கணேசனது படங்கள் கண்ணீர் விடுத்தன. அதையே மாற்றிப் போட்டு ஏழை மக்களின் அறியாமையென காமடியாக்கினார் சோ முதலானோர். அதாவது இந்த அப்பாவிகளின் நலன் பேசிய திராவிட இயக்க அரசியலுக்கு அவர் வில்லனாகினார். சோவின் திராவிட இயக்க வெறுப்பு, ஆணாதிக்கம், ஆர்.எஸ்.எஸ் அபிமானம், பார்ப்பனிய பக்தி அனைத்துமே அவரது நேர்மை, துணவின் இலக்கணமாக மடைமாற்றப்படுகிறது. சாகும் வரை ஹிட்லரோ இல்லை முசோலினியோ கூட தத்தமது கொள்கைகளில் உறுதியாகத்தான் இருந்தனர். ஆனால் அதற்காக மேற்குலகில் அவர்கள் பாராட்டப்படுவதில்லை.
ஜெயா ஆசிபெற்ற ஒரே ராஜகுரு
இந்த நகைச்சுவையில் அரசியலை எடுத்து விட்டால் அது எஸ்.வி.சேகர் – விசு வகையறாக்களின் பிளேடு வகைப்பட்ட சபா நாடக காமடி மட்டுமே. எஸ்.வி.சேகரது நாடகத்திற்கு வரும் உயர் போலீஸ் அதிகாரிகள் முதல் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். நாடகத்தில் “மாப்பிள்ளை எப்படி இருப்பார்?” என்று ஒரு வசனம் வந்தால் சேகர் டைமிங்காக “என்னை என்ன தமிழ்நாடு போலீஸ் மாதிரி தொந்தி கணபதின்னு நினைச்சீங்களா, நான் சிக்ஸ்பேக் ஆர்னால்டு” என்பார். முதல் வரிசை அதிகாரிகளும் கெக்கே பிக்கே என்று சிரிப்பார்கள். இதையே சோவாக இருந்தால் “மாப்பிள்ளைக்கு என்ன, காலையில மந்திரி வீடு, மாலையில கலெக்டர் வீடுன்னு” பிசியா இருக்கார் என்பார்.
மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் எஸ்.வி.சேகர், சென்ற 2015 ஆண்டின் மழை வெள்ள நாட்களில் மளிகைக் கடை அண்ணாச்சிகள் நெருக்கடியை பயன்படுத்தி பொருட்களை பதுக்கினர், அவர்கள்தான் இன்று மோடியின் நடவடிக்கைகளை எதிர்க்கின்றனர் என்று இரக்கமே இல்லாமல் கொடூரமாக எழுதினார். இதில் அண்ணாச்சிகள் யாரும் பதுக்கவில்லை என்பதோடு இன்று பழைய நோட்டுக்களை வாங்கியோ இல்லை கடன் சொல்லியோ மக்களுக்கு சேவை செய்கின்றனர். இதுதான் எஸ்.வி.சேகர் எனும் மயிலாப்பூர் மாஃபியாவின் நகைச்சுவைத் தரம். அதுதான் சோவின் அரசியல் தரம்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை அவர் எப்போதுமே விட்டுக் கொடுக்காமல் ஆதரித்தற்கும், திராவிட இயக்கம் – தி.மு.கவை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து விமரிசித்தத்ற்கும் பார்ப்பனியத்தால் ஊறிப்போன திமிரெடுத்த கொழுப்புதானே காரணமன்றி வேறு அறமோ குறமோ எதுவுமல்ல.
ஜெயாவின் முதல் ஆட்சிக் காலத்தில் ஜெயா-சசி கும்பல் முழு தமிழகத்தையும் கொள்ளையடித்த போது பின்னாளில் மூப்பானரை பிரிந்து வரச் செய்து த.மா.கா ஆரம்பித்து, தி.மு.கவோடு கூட்டணி வைக்க சோ-வே காரணம் என்கிறார்கள். அன்றைக்கு சோ-வோ இல்லை சூப்பர் ஸ்டாரோ இல்லையென்றாலும் ஜெயாவிற்கு செருப்படி கிடைத்தே இருக்கும். பின்னாளில் இரண்டு மூன்று முறைகள் ஜெயா தனது உடன்பிறவாச் சகோதரியை விரட்டிய போதுதான் முந்தைய முரண்பாடுக்கு காரணம் மன்னார்குடி என்ற உண்மை தெரியவந்தது.
பாஜக கூட்டத்தில் ராஜகுரு
பின்னாட்களில் அவர் தனது ‘நடுநிலை’ முக்காட்டை தூற எறிந்துவிட்டு அம்மணமாக அ.தி.மு.கவை ஆதரித்தார். அதன்பொருட்டே பா.ஜ.கவையோ காங்கிரசையோ ஆதரித்தார். பிறகு சசிகலா திரும்பிய பிறகு அவரது மயிலாப்பூர் மாஃபியா பழைய இடத்தை பெறவில்லை என்றாலும் ஜெயாவை விட்டுக் கொடுக்காமல் ஆதரித்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் குன்ஹாவை விமரிசித்ததாக இருக்கட்டும், நேர்மையான ஆச்சார்யாவை திட்டியதாக இருக்கட்டும், அனைத்தும் ஒளிவு மறைவின்றி நடந்தன.
மோடியின் மூலம் இந்தியாவிலும், தமிழகத்திலும் பார்ப்பனியம் மீண்டு வரும் என்ற கனவோடுதான் 2014 தேர்தலில் முன்கூட்டியே மோடியை ஆதரித்தார். துக்ளக் ஆண்டு விழா கூட்டத்திலும் பேச வைத்தார். வைகோ, ரஜினி, விஜயகாந்த, இறந்து போன மூப்பனார், அனைவரும் இந்த செயல்தந்திர நோக்கிலேயே சோவோடு பேசினர், உறவாடினர், இன்று மரியாதையும் செய்கின்றனர். தற்போது இவரால் அர்ச்சிக்கப்பட்ட தி.மு.கவும் சரி, இவரது இந்துத்துவப் பார்வை குறிவைக்கும் தலித் மக்களின் கட்சி என்றழைக்கப்படும் வி.சி.கவும் சோ புகழ் புராணம் பாடுகின்றன. ராஜ குருவின் பவர் அத்தகையதாம்.
சசிகலா கும்பலை மீண்டும் தலையெடுக்க கூடாது என்பதற்காக அவர் மிடாசின் இயக்குநராகவும் பொறுப்பேற்றார். மிடாஸ் என்பது தமிழக மக்களை மொட்டையடித்து சுருட்டப்பட்ட ஒரு சொத்து. அதன் சீமைச்சாராயம் தமிழக மக்களை குடிகாரர்களாகக் கொல்கிறது என்றால் அதன் உரிமையாளர் தமிழக மக்களுக்கு குடியுரிமையே இல்லையென்பதாக ஒடுக்கியபவர். இப்படித் திருட்டுச் சொத்தின் பாதுகாவலராக அறியப்பட்ட சோவின் அடையாளம் என்ன?
மிடாசின் முன்னாள் இயக்குநர் மற்றும் பார்ப்பனியத்தின் பவர் புரோக்கர் மட்டுமே.
கடந்த நவம்பர் 11,12,13 ஆகிய தேதிகளில் ஐதராபாத் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இந்திய பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் 12ஆவது தேசியக் கருத்தரங்கு நடைபெற்றது. இந்தியா முழுவதிலுமிருந்து முக்கியமான பெண் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு தமது அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்தனர். ‘எல்லோருக்குமான ஊடகங்கள், ஊடகங்களில் பெண், மோதல் பகுதிகளில் செய்தி சேகரிப்பு, ஊடகங்கள் எதிர்கொள்ளும் மிரட்டல்கள், தெலங்கானா’ என்று பல தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. 40 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகவியலாளராகச் செயலாற்றி வரும் கல்பனா ஷர்மா, அம்மு ஜோசப் போன்ற சீனியர்கள், சர்வதேச கவனிப்புக்குட்பட்ட அரசியல் கட்டுரைகள் எழுதி வரும் ரோஹினி மோகன், நேஹா தீக்ஷித் போன்ற ஊடகவியலாளர்களும் பங்கேற்று சிறப்புரை வழங்கினர். நிகழ்வின் தொடக்க அமர்வில் எல்லோருக்குமான ஊடகங்கள் தலைப்பில் சிறுபான்மையினர், சாதியம் (தலித்), ஆதிவாசிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஹிந்துஸ்தான் டைம்ஸின் சுதிப்தோ மோண்டல் இந்த அமர்வுக்குத் தலைமை தாங்கினார். இந்த அமர்வில் ‘இந்திய ஊடகங்களில் சாதியம்’ குறித்து தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜெயராணி ஆற்றிய உரை தேசிய அளவிலான கவனத்தைப் பெற்றிருக்கிறது. கருத்தரங்கில் பெரும் வரவேற்பை பெற்ற அந்த உரையை thewire.in இணையதளம் பிரசுரித்துள்ளது.
ஜெயராணி தமிழில் எழுதிய அந்த உரையை பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருந்தார். ஜெயராணி கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் ஊடகக்களத்தில் பத்திரிகையாளராக செயலாற்றி வருகிறார். சாதியம், தலித்கள், சிறுபான்மையினர், பாலின சமத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். சாதியம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘ஜாதியற்றவளின் குரல்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்து விருதுகளை வென்றது.
இந்திய பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் 12ஆவது தேசிய கருத்தரங்கில் ஜெயராணி ஆற்றிய உரையின் முழு வடிவம்:
பொறுப்புமிக்க ஊடகவியலாளர்களாக நாம் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை கற்பனை செய்து பார்க்கலாம். இனி இந்திய ஊடகங்கள் அனைத்தும் சாதிய அத்துமீறல்களையும் ஒடுக்குமுறைகளையும் மட்டுமே முன்னுரிமை கொடுத்து பிரசுரிக்கவும் ஒளிபரப்பவும் வேண்டும் என திடீரென ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டால் நிலைமை எப்படி இருக்கும்? இச்சட்டத்தை மீறுகிற அல்லது மதிக்காத ஊடகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற ஒரு எமர்ஜென்சி நிலை உருவாகிறது. கற்பனை தானே! செய்து பார்ப்போம். நொடிக்கு நொடி பிரேக்கிங் செய்தியாக ஒரு தீண்டாமைக் கொடுமையை அம்பலப்படுத்த நேரிடும்; நிமிடத்துக்கு நிமிடம் சாதி அடிப்படையிலான பாலியல் வன்புணர்ச்சியை விவரிக்க வேண்டி வரும்; நாள்தோறும் நடந்தேறும் சாதிய வன்முறைகளை அம்பலப்படுத்தும் சூழல் உருவாகும். 24×7 ஒளிபரப்ப அவ்வளவு செய்திகளுக்கு எங்கே போவது என மிரளவே வேண்டாம். ஏனெனில் இந்நாட்டில் இந்த கொடுமைகள் அனைத்தும் இப்போதும்… இதோ நான் இந்த உரையை நிகழ்த்தும் இந்நொடிகூட நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின், ‘மாற்றங்களுக்கு உட்படாத’ புள்ளி விவரம் என்ன சொல்கிறதெனில் இந்தியாவில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திலும் இரண்டு தலித்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். அதனால் நமக்கு ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு பிரேக்கிங் செய்தி கிடைத்துவிடும். ஒவ்வொரு நாளும் மூன்று தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகின்றனர். எக்ஸ்க்ளூசிவ் என பிராண்ட் செய்து பாதிக்கப்பட்ட பெண்களின் முகத்தை மாஸ்க் செய்தோ மாஸ்க் செய்யாமலோ (தலித் பெண் என்றால் பெரும்பாலும் மாஸ்க் செய்ய வேண்டிய தேவையே உருவாவதில்லை) காட்டிக்கொண்டே இருக்கலாம். ஒரு நாளில் இரண்டு தலித்கள் கொலை செய்யப்படுகின்றனர்; இரண்டு தலித் வீடுகள் எரிக்கப்படுகின்றன. எனவே டி.ஆர்.பிக்கும் பரபரப்புக்கும் சரிவே ஏற்படப் போவதில்லை. போர்ன் வீடியோக்களில் உணரும் கிளுகிளுப்பை விட இந்த நிஜ கொடூர வன்முறைக் காட்சிகளில் பரவசத்தை விதைக்கும்/தேடும் கெடு வாய்ப்பான காலகட்டத்தில் இந்த சரக்கு நன்றாகவே விற்பனையாகும். இந்தியாவின் ஆறு லட்சம் கிராமங்களும் ஊராகவும் சேரியாகவும் பிரிந்திருந்து தீண்டாமையையும் வன்கொடுமைகளையும் உயிர்ப்போடு வைத்திருக்கும் வரை, தலித்களுக்கான வாழ்வியல் நீதிகள் ஆதிக்க சாதியினரின் கரங்களால் பஞ்சாயத்துகளில் எழுதப்படும் அவலம் தொடர்கிற வரை சாதிய அத்துமீறல் குறித்த செய்திக்கு ஒருபோதும் தட்டுப்பாடு வந்துவிடாது.
எனவே நமது கற்பனைப்படி அப்படியொரு சட்டம் கொண்டு வரப்பட்டால் புதிய செய்தியை உடைத்து உடைத்து சேனல் ஜாம்பவான்களின் கைரேகை அழிந்துவிடும். பாகிஸ்தானுடன் போரை ஊக்குவித்து போர் அறைகளை உருவாக்கியது போல சாதிக்கலவர அறை, வன்கொடுமை அறை, வன்புணர்ச்சி அறை, தீண்டாமை அறை, பசு பாதுகாப்பு அறை, கர் வாப்ஸி அறை என பல்வேறு அறைகளை உருவாக்கி புதிய புரட்சியை அவை உண்டாக்கிவிடும். இந்நாட்டில் சாதி ஆதிக்கம் எத்தனை மோசமாக நிலை கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள அப்படியொரு சூழல் உருவாக வேண்டும். இல்லையெனில் யானையை தொட்டுப் பார்த்த பார்வையற்றவர்களின் நிலை போல நம் கண்ணில் படுவதும் காதில் விழுவதும் மட்டுமே சாதியக் கொடுமைகளின் ஒட்டுமொத்த அளவு என்ற நம் (மூட) நம்பிக்கைக்கும் அலட்சிய மதிப்பீட்டுக்கும் முடிவே கிடைக்காது.
நாம் நம் கற்பனையை முடித்துக் கொண்டு நிஜத்துக்கு திரும்புவோம்!
இந்தியாவின் ஆயிரக்கணக்கான அச்சு ஊடகங்களும் நூற்றுக்கணக்கான காட்சி ஊடகங்களும் அலுக்கவோ, சலிக்கவோ முடியாத அளவுக்கு ஒரு செய்திச் சுரங்கமாக, அள்ளக் குறையாத ‘அட்சயப் பாத்திரமாக’ சாதிய அத்துமீறல்கள் நொடிக்கு நொடி நடந்து கொண்டிருக்கையில் இன்றைய ஊடகங்கள் அவற்றுக்குத் தந்திருக்கும் இடமென்ன? ஒரு நாளின், ஒரு வாரத்தின், ஒரு மாதத்தின், ஓர் ஆண்டின் செய்தி தொகுப்பில் எத்தனை சதவிகிதம் சாதிப் பிரச்னைக்காக ஒதுக்கப்படுகிறது? ஒவ்வோர் ஆண்டும் தலித்களுக்கு எதிரான குற்றங்கள் 10-20 சதவிகிதம் அதிகரித்துக் கொண்டே போகின்றன. கொலை செய்யப்படும் தலித்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. நியாயம் இங்கே நிலைநிறுத்தப்பட்டிருக்குமானால் சம அளவில் ஊடகங்களில் அவற்றுக்கான இடமும் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. ஏன்? ஏனென்றால், இந்த சமூகம் எவ்வாறான சாதியப் படிநிலையைக் கொண்டிருக்கிறதோ, பெரும்பான்மைச் சமூகம் எத்தகைய சாதிய சிந்தனையில் ஊறிப் போயிருக்கிறதோ அதேதான் ஊடகங்களிலும் ஊடகவியலாளர்களிடமும் நிலவுகிறது. நீதியின் பொருட்டு கம்பீரமாக நிற்க வேண்டிய ஜனநாயகத்தின் நான்காவது தூண் சாதியின் பொருட்டு சிதைவுற்று சரிந்து கிடக்கிறது.
தமிழில் ஊழிக்காலம் என ஒரு சொற்றொடர் உண்டு. அப்படியெனில் உலகம் அழியும் காலமென்று பொருள். ஓர் ஊடகவியலாளராக இந்த ஊடகக்காலத்தை ஊழிக்காலமென்றே குறிப்பிட விரும்புகிறேன். ஏனென்றால் இச்சமூகத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் எதிர்மறையாக அவை கட்டுப்படுத்துகின்றன. இங்கே என்ன நடக்க வேண்டும், இன்று நான் எதை பற்றி பேச வேண்டும், ஒரு விஷயம் குறித்து எவ்வாறு நான் சிந்திக்க வேண்டும், என்ன முடிவு எடுக்க வேண்டும், எதை நான் உண்ண வேண்டும், எதை நான் வாங்க வேண்டும் என தனி மனிதர்களின் மூளையை இயக்குவதன் மூலம் சமூகத்தின் பன்முகத்தன்மையை சிதறடித்து அதிகார நியாயங்களுக்கு உட்பட்ட ஒருமுகத்தன்மையை நிலைநிறுத்துகின்றன. ஒவ்வொரு நாள் விடியலிலும் அவை விதைப்பதுதான் இச்சமூகத்தின் அறுவடைப் பொருளாகிறது. ஒவ்வொரு நாள் முடிவிலும் அவை எழுதுவதுதான் எல்லாவற்றுக்குமானத் தீர்ப்பாகிறது.
அரசின், ஆளும் வர்க்கத்தின், அதிகாரத்தின், ஆதிக்கத்தின் குரலாக இருந்து உயர நின்று தனி ராஜ்ஜியம் நடத்தும் மைய நீரோட்ட ஊடகங்கள் எளியவர்களுக்கானவை அல்ல, ஒடுக்கப்பட்டோருக்கானவை அல்ல, சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகளுக்கானவை அல்ல. மிக நிச்சயமாக அவை தலித்களுக்கானவை அல்ல. மைய நீரோட்ட ஊடகங்களின் உரிமையாளர்களாக காட்சி / அச்சு பாரபட்சமின்றி ஏறக்குறைய 95 சதவிகிதத்துக்கும் மேல் ஆதிக்க சாதியினரே உள்ளனர். 70-80% வரை அவற்றின் முக்கியப் பொறுப்புகளை ஆதிக்க சாதி ஆண்கள் வகிக்கின்றனர். இந்தியா ஊடகங்களில் ஒரு சதவிகிதம் கூட முடிவெடுக்கும் அதிகாரத்தை தலித்கள் கொண்டிருக்கவில்லை. ஊடகங்களுக்குள் பன்முகத் தன்மை கொலை செய்யப்பட்ட நிலையில், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான நியாயத்தையும் இடத்தையும் அவற்றிடம் எவ்வாறு பெற முடியும்? ஆங்கில ஊடகங்களில் குறிப்பாக பத்திரிகைகளில் அரிதாகவேனும் சாதி எதிர்ப்பு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், மொழிவாரி ஊடகங்களில் அதற்கான சாத்தியம் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் முதல் தலைமுறையாக கல்வி பெற்று வரும் தலித்களுக்கு அவர்களது, குடும்பச் சூழல், வளர்ந்து வந்த சமூகச் சூழல், நிறம், ஆங்கிலம் என பல விஷயங்கள் தடையாக இருப்பதால் மொழிவாரி ஊடகங்களில்தான் தஞ்சமடைகின்றனர். ஆனால், அங்கே அவர்கள் கவுரவமாக நடத்தப்படுவதில்லை. ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ, எழுதுவதற்கான வெளியோ பிற ஆதிக்க சாதியினர் அளவுக்கு வழங்கப்படுவதில்லை. ஊடகத்துறையில் பத்தாண்டு கால அனுபவம் பெற்றிருந்த நிலையில் நான் பணிபுரிந்த செய்திச் சேனலில் எனது சம்பளம் வெறும் ரூபாய் 18,000 தான். ஒரு டெய்லி ஷோவுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டராக இருந்து இரவு பகல் பார்க்காமல் வேலை பார்த்தேன். என் வேலைக்கான நன்மதிப்பையும் பெற்றிருந்தேன். ஆனால், ஊதிய உயர்வுக்கான நேரம் வந்தபோது, எனக்கு ஒரு நூறு ரூபாய் கூட உயர்வளிக்கப்படவில்லை. என்னை விட அனுபவமும் வேலைப் பளுவும் குறைந்த எனது சக ஊழியருக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருந்தது. காரணம் அவரது சாதி. என் ஜூனியரின் சம்பளம் அப்போது ரூபாய் 40,000. இதுதான் ஊடகங்களில் சாதியத்தின் பங்களிப்பு. இந்த சூழலால் வருமானத்துக்காக தன்னை முடக்கிக் கொள்வது அல்லது ஊடகத்துறையை விட்டே போய்விடுவது என இரண்டே வாய்ப்புகள்தான் தலித் ஊடகவியலாளர்கள் முன் இருக்கின்றன.
15 ஆண்டுகளுக்கு முன்னர் பட்டமேற்படிப்பில் இதழியல் மாணவியாக எனது பல்கலைக்கழக பத்திரிகையில் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக இருந்த தலித் மக்களின் கூலி உயர்வு போராட்டம், அதை தொடர்ந்த அரச பயங்கரவாதம் குறித்து எழுதினேன். 17 தலித்கள் கொல்லப்பட்ட கொடுமை அது. எனது கட்டுரையால் சஸ்பெண்ட் செய்யப்படும் நெருக்கடிக்கு ஆளானேன். எனது அந்த முதல் கட்டுரை தந்த அனுபவத்தால் சாதியை புரிந்து கொள்ளவும் தலித் மக்களின் துயரங்களை ஓர் ஊடகவியலாளராக வெளிச்சத்திற்கு கொண்டு வரவும் பேராவல் கொண்டேன். ஆனால் வேலை நிமித்தமாக மைய நீரோட்ட ஊடகங்களுக்கு வந்து சேர்ந்த போது, அங்கிருந்த சூழல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மொழிவாரி ஊடகங்களில் சமூக அரசியல் சார்ந்த செய்தி சேகரிப்பில் ஈடுபடுவது வேண்டாத விஷயமாகப் பார்க்கப்பட்டது. கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்டாலே ஒழிய சாதியப் பிரச்னைகளுக்கு மைய நீரோட்ட ஊடகங்களில் இடம் கிடைப்பதே இல்லை. எடிட்டோரியல் போர்டில் நான் கொடுத்த ஐடியாக்கள் எல்லாம் குப்பைக்குப் போயின. என்னை ஓர் அதிகப்பிரசங்கியாகப் பார்க்கும் சூழல் உருவானது.
பத்திரிகையாளராக வேலையைத் தொடங்கியிருந்த சில மாதங்களில் ஒரு பெண்கள் பத்திரிகையில் செய்தியாளராக பணியில் அமர்ந்தேன். பல்வேறு சவால்களுக்கிடையில் சிறப்பாக செயல்படும் ஊராட்சித் தலைவிகள் குறித்து ஒரு தொடர் எழுதலாம் என ஒரு ஐடியாவை கொடுத்தேன். பெண்கள் பத்திரிகைக்கு உவப்பில்லாத தலைப்பிது என பல முறை நிராகரிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஊராட்சித் தலைவிகளின் பட்டியலை தயார் செய்துகொண்டு முதலில் சந்திக்க வேண்டிய ஐவரை தேர்ந்தெடுத்து அதில் முதல் நபராக காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் பஞ்சாயத்து தலைவியான மேனகாவை சந்திக்க முடிவு செய்தேன். அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என அப்போது எனக்குத் தெரியாது. ஒரு பெண்ணாக அவர் சந்திக்கும் சவால்களை கேட்க போன இடத்தில் அவர் ஆதிக்க சாதியினரால் தான் எதிர்கொள்ளும் கொடுமைகள் குறித்து விரிவாகப் பேசினார். பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள இருக்கையில் தன்னை அமரவிடாமல் அவர்கள் தடுப்பதாகக் குறிப்பிட்டார். பதவியிலிருந்து விலகும்படி தொடர்ச்சியானக் கொலை மிரட்டல்கள் வருவதால் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் ஆனால் தனக்கு மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஒருநாள் முழுவதும் மேனகாவின் சவால்கள் குறித்து எல்லா தகவல்களையும் சேகரித்து முடித்து அலுவலகம் திரும்பினேன். மறுநாளே அதை கட்டுரையாக எழுதி எடிட்டரிடம் கொடுத்தேன். ஆனால் அந்த கட்டுரை ஒரு பெண்கள் பத்திரிகையில் இடம் பெறும் தகுதியைக் கொண்டிருக்கவில்லை என கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையில் சமையல் குறிப்புகள் எழுதி வர தொடர்ச்சியாக நிர்பந்திக்கப்பட்டேன். கடுமையான மன உளைச்சலில் வேலையை விட்டுவிடலாம் என்று எண்ணியபடியே சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த போது மாலை பத்திரிகைகளின் போஸ்டர்களில் என்னை மயக்கமுற செய்யும் செய்தியைக் கண்டேன். ’பஞ்சாயத்துத் தலைவி படுகொலை’. கைகள் நடுங்கத்தான் செய்தித்தாளை வாங்கினேன். நான் பயந்தது சரிதான். மேனகா படுகொலை செய்யப்பட்டிருந்தார். அலுவலக அறையில் இருக்கையில் அமர்ந்தவரை அரிவாளால் வெட்டிக் கொன்றிருந்தார்கள்.
அந்த செய்தித்தாளை எடுத்துக் கொண்டு நேரே எடிட்டரிடம் போய் சண்டை போட்டேன். எந்த வகையில் என் கட்டுரை அதன் தகுதியை இழந்தது என கேட்டேன். அதற்கு அவர் தேவையில்லாமல் பதட்டமடையாமல் அவர் எனக்கிட்ட சமையல் குறிப்பு அசைன்மெண்ட்டை செய்து முடிக்கும்படி கட்டளையிட்டார். அலுவலக அனுமதியில்லாமல் அன்றிரவே ஊரப்பாக்கம் சென்று மேனகாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டேன். மருத்துவமனையில் அவரது சடலத்தைப் பார்த்தபோது என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. நான் வேலை செய்த அதே குழுமத்திலிருந்து வந்த புலனாய்வு பத்திரிகை எடிட்டரிடம் மேனாகாவை பேட்டி கண்ட விஷயத்தைக் கூறி பிரசுரிக்குமாறு கேட்டேன். அது அன்றைய நாளின் பரபரப்புச் செய்தி என்பதால் இறுதிப் பேட்டி என அதை வெளியிட்டார்கள். அதன் பின்னர் என்னால் அங்கு பணிபுரிய முடியவில்லை. எழுதிக் கொடுத்துவிட்டு வெளியேறினேன். எனக்கு வேலையும் வேண்டும், ஆனால் நான் விரும்புகிற வகையில் சாதி எதிர்ப்பு இதழியல் பணியையும் செய்ய வேண்டும்…இரண்டும் ஓரிடத்தில் சாத்தியப்படாது என்பதை புரிந்து கொண்டேன். அதனால் சிறு பத்திரிகைகளை எனக்கானக் களமாக மாற்றிக் கொண்டேன். சாதி ஒழிப்பை ஒற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படும் தலித் முரசு என்ற இதழோடு என்னை இணைத்துக் கொண்டு பயணிக்கத் தொடங்கினேன். வெவ்வேறு புனைப்பெயர்களில் மைய நீரோட்ட ஊடகங்களில் பதிய சாத்தியப்படாத சாதியப் பிரச்னைகளை வெளிப்படையாக எழுதும் வாய்ப்பை நானே உருவாக்கிக் கொண்டேன். 15 ஆண்டுகளாக நான் தலித் முரசு இதழில் எழுதியக் கட்டுரைகள் தான் ஜாதியற்றவளின் குரல் என்ற தொகுப்பாக தற்போது வெளிவந்து கவனத்தைப் பெற்றிருக்கிறது.
இது என் தனிப்பட்டக் கதை. ஆனால் இந்த வாய்ப்பும் சூழலும் என்னைப் போல எல்லோருக்கும் அமைந்துவிடாது. மைய நீரோட்ட ஊடகங்களில் செய்தியாளராக இருந்த வரை ஒவ்வொரு எடிட்டோரியல் மீட்டிங்கில் நிராகரிக்கப்பட்டாலும் நான் சாதிய அத்துமீறல்கள் குறித்து ஐடியாக்களை முன் வைப்பதை ஒரு கொள்கையாகக் கொண்டிருந்தேன். ஆனால் யார் என்னை பற்றி என்ன நினைத்தாலும் அது பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஒரு பத்திரிகையாளராக குரலற்றவர்களின் குரலாக இருக்க வேண்டுமென்ற விதியை எனக்கு நானே விதித்துக் கொண்டேன். ஆனால் பொதுவாக தலித் ஊடகவியலாளர்கள் சாதிப் பிரச்னைகள் குறித்து எழுதவோ பேசவோ விழைந்தால், அது சுயசாதி மோகத்திலிருந்து வருவதாக சக ஊடகவியலாளர்களால் திரிக்கப்படுகிறது. உண்மையில், தலித்களுக்கு சாதி குறித்து பெருமிதம் கொள்வதற்கு ஒரு சின்னப் புள்ளி அளவிற்கான நியாயம் கூட இல்லை. சாதி என்பது அவர்கள் மீது திணிக்கப்பட்ட பேரிழிவு. சாதிய அத்துமீறல்கள் குறித்து எப்படியாவது பதிவு செய்துவிட வேண்டுமென நினைப்பது தலித் ஊடகவியலாளர்களின் சாதி எதிர்ப்பு மனநிலையின் விழைவே தவிர, சுயசாதிப் மோகமல்ல. இந்த பழிக்கு அஞ்சி என்னுடன் பணிபுரிந்த தலித் ஊடகவியலாளர்கள் பொதுவான அரசியல் நிகழ்வுகளில் காட்டுகிற ஆர்வத்தை சாதிப் பிரச்னைகளில் காட்டத் தயங்கினர். பலர் தமது அடையாளத்தையே மறைத்து ஒளித்து அதனால் உண்டாகும் மன உளைச்சலோடு முடங்கினார்கள். தலித்கள் சுதந்திரமாக பணி செய்கிற அளவிற்கான சமத்துவச் சூழல் ஊடக அலுவலகங்களில் இன்றும் கூட உருவாகவில்லை என்பது அவமானகரமானது.
தலித் ஊடகவியலாளர்களின் குரல்வளை நெரிக்கப்பட்ட நிலையில் சமூகத்தில் நடக்கும் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து அவர்கள் பேசுவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ஆதிக்க சாதியை சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு சாதிய அத்துமீறல்கள் ஒரு பிரச்னையே இல்லை. ஏனெனில் அவர்கள் ஊடக அலுவலகங்களுக்கு வெளியே அதை நிகழ்த்துகிறவர்களின் ரத்த உறவாக இருக்கின்றனர். தி ஹூட் இணைய இதழுக்காக ஊடகவியலாளர் அய்ஜாஸ் அஷ்ரப் ஊடகங்களில் தலித்களின் நிலை குறித்து ஆய்வு செய்து விரிவானக் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில், தலித்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட தமது சமூகத்தின் நிலையை ஊடகப் பணியின் மூலம் வலுவாக்கும், தம்மை சூழ்ந்துள்ள சாதியப் பிரச்னைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கத்தைக் கொண்டிருப்பதை உறுதிபடுத்துகிறார். மேலும் ஆங்கில ஊடகங்களை விட இந்தி மற்றும் பிற மொழிவாரி ஊடகங்களில்தான் தலித்கள் அதிகளவில் பணி செய்வதாகவும் ஆனால் அவர்கள் மீது அதிகளவிலான பாகுபாடு காட்டப்படுவதாக குறிப்பிடுகிறார். இதனால் வேலைப் பாதுகாப்போ வளர்ச்சிக்கான உத்திரவாதமோ இல்லாதததால் ஒருகட்டத்தில் ஊடகப் பணியை துறந்து ஏதேனும் ஒரு அரசு வேலையில் அவர்கள் தஞ்சமடைவதை உறுதி செய்கிறார். தலித் ஊடகவியலாளர்களின் பொருளாதாரப் பின்னணி இந்த முடிவுக்கு அவர்களை தள்ளுகிறது.
அய்ஜாஸ் இந்த ஆய்வை மேற்கொண்ட சமயத்தில் என்னை தொடர்பு கொண்டார். அப்போது நான் ஒரு லைப் ஸ்டைல் இதழில் எடிட்டராக இருந்தேன். அவர் மீண்டும் மீண்டும் நம்ப முடியாமல், லைப் ஸ்டைல் இதழின் ஆசிரியராக ஒரு தலித் ஊடகவியலாளர் இருப்பது குறித்து ஆச்சர்யத்தோடு குறிப்பிட்டார். அப்போது இருந்த தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக என்னால் அவரது ஆய்வுக்கு ஒத்துழைக்க முடியவில்லை. ஆனால் அய்ஜாஸின் ஆச்சர்யம் என்னை வியப்புறச் செய்யவில்லை. ஏனெனில் ஒரு லைப் ஸ்டைல் இதழிலோ பெண்கள் இதழிலோ எடிட்டராவது என்னை பொறுத்தவரை எளிதானது. ஆனால் 15 ஆண்டு காலம் நான் சமூக அரசியல் சார்ந்த செய்தியாளராகக் களப்பணி ஆற்றியிருக்கிறேன் ஆனால் அடுத்த பத்தாண்டுகளிலேனும் சமூக அரசியல் சார்ந்த செய்திப் பத்திரிகையில் எடிட்டராகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என நான் நம்பவில்லை. நான் இதை எனது எதிர்மறை எண்ணத்திலிருந்து சொல்லவில்லை. சமூக எதார்த்தத்திலிருந்தே முன் வைக்கிறேன். ஒரு தலித் ஊடகவியலாளரின் கைகளில் சமூக அரசியல் சார்ந்த பிரச்னைகளை வெளிக் கொண்டு வரும் பொறுப்பை ஒப்படைக்கும் துணிவு இன்னும் இச்சமூகத்திற்கு வரவில்லை. ஏனெனில் மிக வெளிப்படையாக சாதிய அத்துமீறல் குறித்த சமூகப் பிரக்ஞை கொண்ட ஒரு நபரிடம் அப்படியொரு பொறுப்பு கொடுக்கப்படுமெனில் இச்சமூகத்தின் சாதி ஆதிக்கம் மைய நீரோட்டத் தளத்தில் அம்பலப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
2006 ஆம் ஆண்டு நடந்த கயர்லாஞ்சி படுகொலை நாம் அறிந்ததே. இரு தலித் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்ச்சியை, அதை தொடர்ந்த சித்ரவதைகளை ஊரே கொண்டாட்டத்தோடு நிகழ்த்திய அக்கொடுமை ஏன் நிர்பயா வழக்கைப் போல, பிற உயர்சாதி பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளைப் போல தலைப்புச் செய்தியாகவில்லை, கவனத்தைப் பெறவில்லை? செய்தி அல்லாத, பிரச்னை அல்லாத விஷயங்களை எல்லாம் கத்திக் கூவி செய்தியாக்கும் ஊடகங்களுக்கு இந்த நாகரிக காலத்திலும் தொடரும், கையால் மலமள்ளும் இழிவு குறித்தோ, பள்ளிகளில் தலித் குழந்தைகளுக்கு சமைக்க மறுக்கும் தீண்டாமை குறித்தோ, நகரங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படும் தலித்களின் குடியிருப்புகள் குறித்தோ எந்த அக்கறையும் இல்லை. முதல் பக்க செய்தியாகும் தகுதியை இது போன்ற செய்திகள் என்றென்றைக்குமாக இழந்து நிற்கின்றன. உலகின் எந்த மூலையிலேனும் இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடைபெற்றால் அதை கண்டித்துக் கதறும் ஊடகங்கள் தன் சொந்த நாட்டில் தினம் தினம் சாதியின் பெயரால் நடந்தேறும் இனவெறித் தாக்குதல் குறித்து துளியளவும் அக்கறைப்படுவதில்லையே ஏன்? 2001 ஆம் டர்பனில் நடந்த இனவெறிக்கு எதிரான மாநாட்டில் சாதியத்தை இனவெறியாக அங்கீகரிக்க வேண்டி ஐ.நாவிடம் தலித் மக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்த இந்திய அரசு, சாதி எங்களது உள்நாட்டு பிரச்னை நாங்களே பார்த்துக் கொள்வோம் என பதில் அளித்தது. இரண்டாயிரம் ஆண்டுகளாக மூர்க்கம் குன்றாமல், மனித உரிமைகள் அனைத்தையும் சிதைத்து இந்திய மண்ணில் பிறக்கிற ஒவ்வொரு தலித் குழந்தையின் முதுகிலும் குத்தப்படும் அடிமை முத்திரையை இன்றும் ஓர் உள்ளூர் பிரச்னையாக மட்டும் சுருக்கிப் பார்ப்பது எத்தனை அயோக்கியத்தனம்?
தமிழகத்தில் மட்டும் நூற்றுக்கணக்கானத் தீண்டாமை முறைகள் இன்றும் உயிர்ப்போடு இருக்கின்றன. இரட்டை டம்ளர் முறை தொடங்கி கவுரவக் கொலை சாதிவெறியின் உக்கிரம் இத்தனை முன்னேறிய காலத்திலும் மட்டுபடவில்லை. நமது கிராமங்கள் இன்றும் ஊராகவும் சேரியாகவுமே பிரிந்து கிடக்கின்றன. அவற்றில் தலித் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் ஆயிரமாண்டு ஒடுக்குமுறையின் நீட்சி என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். கல்வி கற்க விருப்பம் கொண்டதற்காக, நல்ல உடை அணிய முற்பட்டதற்காக, இருசக்கர வாகனம் வைத்ததற்காக, செருப்பு அணிந்ததற்காக, அடிமை வேலைகளை செய்ய மறுத்ததற்காகவெல்லாம் அவர்கள் பலி கொள்ளப்படுகின்றனர். மரணத்தை விட கொடிய தண்டனைகளை மனித உரிமைகள் குறித்த ஓர்மை அதிகரித்திருக்கும் இந்நாட்களில் அனுபவிக்கிறார்கள். தமிழகத்தின் திண்ணியத்தில் தனது கட்டளைக்கு அடிபணிய மறுத்த இரு தலித் ஆண்களின் வாயில் மலத்தைத் திணித்தார் ஓர் ஆதிக்கசாதிப் பெண். இத்தனை வன்மம் நிறைந்த சாதி அதே தன்மையோடு தலைமுறைகளுக்கு கைமாற்றப்படும் போது அதை எப்படி உள்ளூர் பிரச்னையாக நாம் சுருக்கிவிடவோ, ஒதுக்கிவிடவோ முடியும்? சாதி என்பது சிவில் பிரச்னை அல்ல. அதுவொரு தேசிய அவலம். தேசத்தின் ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் கொடிய நோய். ஆனால் சாதிய அத்துமீறல்கள் தனிநபர்களுக்கிடையிலான குற்றச் சம்பவங்களாக, வெறும் நிகழ்வுகளாக சுருக்கப்படுகின்றன. தேசிய ஊடகங்கள் மட்டுமல்ல உள்ளூர் ஊடகங்களின் கவனத்தை பெறும் வலு அவற்றுக்கு இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறது.
ரோஹித் வெமூலாவின் கடிதம் ஆங்கிலத்தில், கவித்துவமான மொழி நடையில் இல்லையென்றால் அவரது (தற்)கொலை தேசிய ஊடகங்களில் இத்தகைய கவனத்தைப் பெற்றிருக்குமா என்பதில் எனக்கு ஐயமுண்டு. ரோஹித் வெமூலாவின் மரணம் பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் ஆசனூரைச் சேர்ந்த அய்யாறு என்ற இளைஞரும் சாதியின் உக்கிரத்தை தாங்க முடியாமல் ஒரு கடிதத்தோடு தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். பஞ்சாயத்து அலுவலகத்தில் ப்யூனாக வேலை செய்த அய்யாறுவை தாழ்த்தப்பட்டவர் என்பதற்காக கழிவறையை சுத்தம் செய்யச் சொல்லி பஞ்சாயத்து தலைவரான சாந்தி மற்றும் அவரது கணவரால் நிர்பந்திக்கப்பட்டார். தனது தற்கொலைக் குறிப்பில், ’’பயம் என்பது சிறுதுளி விஷம்’’ என குறிப்பிடுகிறார் அய்யாறு. ஆனால் ரோஹித்தின் மரணம் உண்டாக்கிய பரபரப்பில் ஒரு சதவிகித்தைக் கூட அய்யாறுவின் மரணம் கிளப்பவில்லை. ஏனெனில் அய்யாறுக்கள் அடிக்கடிக் கொல்லப்படுகிறார்கள். அதுவும் நம்மைப் போன்ற சாமானியர்களால். கிராமங்களில் சாதி இந்துக்களால் சேரிகளில் உழலும் தலித் மக்கள் படும் துன்புறுத்தல்களை எந்த ஊடகமும் பரபரப்பாக்குவதில்லை. அதுவொரு அத்துமீறலாகவே யாருக்கும் தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் அதற்கெதிராக எதிர்வினையாற்றுகிற அளவுக்கு நாம் தூண்டப்படுவதில்லை. ரோஹித்தின் கடிதத்தில் இச்சமூகம் உணர்ந்த அநீதியை அய்யாறுவின் கடிதத்தில் உணரவில்லை. ஏன் இப்படியொரு கடிதம் எழுதப்பட்டு அய்யாறு தற்கொலை செய்து கொண்டதே பலருக்கும் தெரியாது. அய்யாறு சொல்வது போல ஆண்டாண்டுகாலமாக தலித்கள் சுமக்கும் பயமானது சிறுதுளி விஷமே. அதுவே அதிகரிக்கும் போது பலதுளிகளாகி, பெருங்கடலாகிறது. இந்த பயமானது அய்யாறு என்ற தனி நபர் தன் வாழ்நாளின் எதிர்கொண்ட பயமன்று. பல நூற்றாண்டுகளாக தலைமுறைகளுக்கு கைமாற்றப்பட்டு அய்யாறுவிடமும் சேர்க்கப்பட்டது. தன் சாவின் மூலமாக அய்யாறு அதை அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துவிட்டு போகிறார். சுதந்திர இந்தியாவில் நடந்த பல புரட்சிகளில், மாற்றங்களில் குறைந்தபட்சம் தலித் மக்கள் மனதிலிருந்து இந்த பயம் கூட போக்கப்படவில்லையே. இதில் ஊடகவியலாளர்களாக நமது பங்கும் பொறுப்பும் தான் என்ன?
ஊடகங்களின் இரக்கத்தை/கவனத்தைப் பெற தலித்கள் எதில் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும்? சாதிய படுகொலைகளை ஊடகங்கள் எதிர்க்கின்றன என்றால் ஏன் ரோஹித் இடத்தில் அய்யாறு வைக்கப்படவில்லை? நாம் என்று அய்யாறுக்களின் கடிதத்தை படிக்கத் தொடங்குகிறோமோ, நாம் என்று அய்யாறுக்களின் பலிகளுக்கு நியாயம் கேட்கத் தொடங்குகிறோமோ, நாம் என்று நம்மை போன்றவர்கள் நடத்தும் அத்துமீறல்களை எதிர்க்கத் தொடங்குகிறோமோ அன்றுதான் ஊடகங்கள் தன் சொந்த உடலில் படிந்த அழுக்கை கழுவத் தொடங்கியிருக்கின்றன என்று அர்த்தம்.
இந்திய நாட்டில் ஓர் ஊடகவியலாளருக்கு இருக்க வேண்டிய முக்கியத் தகுதியாக நான் கருதுவது சாதித் துறப்பு. ஆம், ஊடகப் பணிக்கு வருவோர் பல விதமான சமத்துவத்தையும் கடைபிடிக்கும் போது சாதியத்திலும் அதை செயல்படுத்த வேண்டும். அதாவது ஜாதியற்றவர்களாக, தீவிர சாதி எதிர்ப்பாளர்களாக இயங்க வேண்டும். பாலின சமத்துவத்தை ஆண்கள் கடைபிடிக்க வேண்டுமென நாம் விரும்புவதை போல, சாதி இழிவை வேரறுக்கும் நற்செயலில் ஆதிக்க சாதியினர் பங்கெடுக்க வேண்டுமென தலித் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மாறாக, சாதிய அத்துமீறல்களை பதிவு செய்ய வேண்டுமானால் ஒரு தலித் ஊடகவியலாளர் வேண்டுமென கருதும் போக்கு நிலவுகிறது. சாதி ஒழிப்பில் தலித்கள் தான் ஈடுபட வேண்டுமென கருதுவது பாலின சமத்துவத்தை பெண்களிடம் கடைபிடிக்கச் சொல்லுவது போல வேடிக்கையானது.
நமது செய்தி அறைகளில் தலித்கள் அதிகளவில் இடம் பெறுவதற்கான செயல்திட்டங்கள் தீட்டப்பட்டு அமல்படுத்தப்பட வேண்டும். அதன் வழியே அவர்களது துயரங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட வேண்டுமென்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அது எப்படி சாத்தியப்படும்? எத்தனை ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான கருத்தியலைக் கொண்டுள்ளனர்? அரசு ஊடகங்களிலேயே இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாத போது தனியார் நிறுவனங்களிடமிருந்து எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? ஊடகவியலாளர்களுக்கு என இயங்கும் அமைப்புகள் தமது உரிமைகளுக்கான கோரிக்கைகளுடன் சரியான பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதையும் தமது கடமையென கொள்ள வேண்டும். தலித் ஊடகவியலாளர்கள் மீது செலுத்தப்படும் பாகுபாட்டை கண்காணிப்பது அதன் மீதான நடவடிக்கையை உறுதி செய்வது என நம்பிக்கையை விதைக்க வேண்டும். தலித் ஊடகவியலாளர்கள் சுய மரியாதையோடும் சுதந்திரமாகவும் இயங்கும் வகையிலான ஊடகக் களத்தை உறுதி செய்து தரும் பொறுப்பை இந்திய பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு (NWMI) மாதிரியான அமைப்புகள் முன்னெடுத்து செயல்படுத்த வேண்டும்.
முதல் தலைமுறையாக கல்வி கற்று, ஆயிரமாண்டு அடிமை வாழ்வின் அத்தனை மனக் குமுறல்களை புறந்தள்ளி, ஆங்கிலம் கற்று, நேர்த்தியாக உடையணிந்து ஒரு சக மனிதராக ஊடக அலுவலகங்களுக்குள் நுழைந்து, அங்கே நிலவும் பாகுபாடுகளை சமாளித்து, வருமானத்திற்காக அந்த வேலையையும் தக்க வைத்து இதற்கிடையில் சாதிய அத்துமீறல்களையும் பதிவு செய்ய வேண்டுமெனில் அது எத்தனை சவாலானது? அய்ஜாஸின் ஆய்வு முடிவுகள் இந்த நெருக்கடியைதான் அம்பலப்படுத்துகின்றன. ஊடகங்களுக்குள் தலித்கள் சுதந்திரமாக செயல்படும் இந்த மாற்றம் நடக்க இன்னும் சில தலைமுறைகள் கடக்க வேண்டியிருக்கலாம்.
அதுவரை மைய நீரோட்ட ஊடகங்களிலும் தேசிய ஊடகங்களிலும் தலித்களுக்கான இடமே இருக்கப் போவதில்லை. அந்த வெற்றிடத்தை சமத்துவத்தில் நம்பிக்கை கொண்ட தலித் அல்லாத சக ஊடகவியலாளர்களால் மட்டுமே நிரப்ப முடியும். நாம் வாழ்கிற இந்நாட்டை சாதியற்றதாக மாற்ற வேண்டிய பொறுப்பு முதன்மையாக தலித் அல்லாதவர்களுடையது. ஒரு குற்றத்திற்கும் வன்கொடுமைக்குமான வேறுபாட்டை புரிந்துகொள்ள, ஆதிக்கம் குடிகொண்டிருக்கும் ஊர்களை விட்டு அவர்கள் அடிமைத்தனத்தின் புழுதிப் படர்ந்த சேரிகளுக்குள் காலடி வைக்க வேண்டும். அங்கே நிலவும் ஒடுக்குமுறைகளும் சாதிய அழுத்தங்களும் வறுமையும் உங்கள் கண்களுக்கு பட வேண்டுமானால் நீங்கள் ஜாதியற்றவர்களாக இருக்க வேண்டும். ஆம் என் இறுதி கோரிக்கை இதுதான். நீங்கள் ஓர் ஊடகவியலாளராக உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள் என்றால் நீங்கள் ஜாதியற்றவர்களாக இருந்தே ஆக வேண்டும். ஏனென்றால் சாதியில் நம்பிக்கைக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், சாதி ஒழிப்பில் நம்பிக்கை கொண்டவராக மாறும் போது, இங்கே நான் எதற்காக பேசிக் கொண்டிருக்கிறேனோ அந்த அற்புதம் நிகழும். நிச்சயமாக நிகழும். என்றோ ஒருநாள்.
மோடியின் நவதாராளவாத இந்துத்துவ அரசு நாட்டையே வாரிச் சுருட்டி பெருநிறுவன முதலாளிகளிடமும் பன்னாட்டு மூலதனத்திடமும் அடகு வைக்கும் வேலையை போர்க்கால அவசரத்தில் செய்து கொண்டிருக்கிறது. மக்கள் நிதானித்து எழுவதற்கு சிறு வாய்ப்பும் அளிக்காமல் சரமாரியாக அடுத்தடுத்து தாக்குதல் தொடுத்து நிலைகுலைய வைத்துக் கொண்டிருக்கிறது.
கருப்புப் பண ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி, ஊழலற்ற நிர்வாகம் போன்ற மோசடியான முழக்கங்களின் கீழ் சாமான்ய மக்களின் எளிய சேமிப்புகளைக் கூட விடாமல் உறிஞ்சி, அம்பானி-அதானி-டாடா-பிர்லா-ஜிந்தால் போன்ற பகாசுரக் கொள்ளைக் கும்பலின் பாதங்களில் சமர்ப்பிக்கும் வெட்கங்கெட்ட தரகு வேலையை மிகுந்த திமிர்த்தனத்துடன் செய்து வருகிறது இவ்வரசு. மோடியின் கார்பரேட் நேச, மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நாட்டு மக்கள் கிளர்ந்து எழுவதற்கான எல்லா நியாயங்களும் கூடிவந்துள்ள நிலையில், மோடியை பின்னாலிருந்து இயக்கும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பல் தனது வழமையான வெறுப்பு அரசியலையும் வேகம் தணியாமல் முன்னெடுத்துச் செல்கின்றது. மக்களின் கோபத்தை மடைமாற்றுவதற்காகவும், அவர்கள் தமக்குள்ளேயே அடித்துக் கொண்டு சாகும்படி செய்வதற்காகவும்.
மக்களைச் சுரண்டிக் கொழுப்பது + அதை ஊழ்வினைப் பயன் என்று ஏற்கப் பழக்குவது + கற்பனை எதிரியை உருவகித்துக் காட்டி சொந்த கிரிமினல் முகத்தை மறைப்பது.
ஆரம்பம் முதலே அவர்களுக்குத் தவறாமல் பலன் ஈட்டிக் கொடுக்கும் வெற்றி ஃபார்முலா இதுதான்.
அக்ஷய முகுலும் அவரின் நூலும்
சரி, அவர்கள்தான் பொய்யையும் புரட்டையும் பரப்பி மக்களை பிரித்தாள முயல்கிறார்கள்; உண்மையான பிரச்சினைகளை விட்டு கவனத்தை திசைதிருப்புகிறார்கள் என்றால், மக்கள் ஏன் அதற்கு காது கொடுக்க வேண்டும்? புழுகு மூட்டைகளுடன் வரும் அவர்களின் முகத்திரையைக் கிழித்து, பிடரியில் அடித்து விரட்டாமல், அவர்களின் பிரச்சார பித்தலாட்டங்களுக்கு பலியாகும் நிலைக்கு பெருந்திரள் மக்கள் எப்படி வந்து சேர்கிறார்கள்?
இக்கேள்விக்கான பதிலின் ஒரு பகுதி, நாம் அறிமுகம் செய்யவரும் நூலில் இருக்கிறது. ‘கீதா பிரஸ்ஸும் இந்து இந்தியாவின் உருவாக்கமும்’ என்ற முக்கியமான நூலை எழுதியுள்ள அக்ஷய முகுல் ஒரு பத்திரிக்கையாளர். பத்திரிக்கைத் துறையில் சிறப்பான பங்களிப்புகளுக்கென ஆண்டுதோறும் வழங்கப்படும் புகழ்பெற்ற ‘ராம்நாத் கோயங்கா விருது’க்கு இவ்வாண்டு அக்ஷய முகிலின் நூலும் தெரிவாகியிருந்தது. இம்மாதம் இரண்டாம் தேதி (2016-11-02) வழங்கப்படவிருந்த அந்த விருதினை மோடியின் கரங்களிலிருந்து தம்மால் பெறமுடியாது என்று மறுத்துவிட்டார் முகுல். “மோடியுடன் ஒரே ஃபிரேமில் நிற்பது பற்றிய நினைவுடன் என்னால் வாழ முடியாது” என்று கூறி மோடியின் முகத்தில் அடர்த்தியான கரியைப் பூசியிருக்கிறார்.
அக்ஷய முகுல் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ‘கீதா பிரஸ்’ பதிப்பகத்தின் வயது நூறை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஆர்.எஸ்.எஸ்ஸின் வயது. உத்தர பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் எனும் ஊரில் 1923-ம் ஆண்டு கீதா பிரஸ் துவங்கப்பட்டது. இதற்குப் பின்னாலிருந்த இரு மூளைகளும் – ஜெயதயால் கோயந்த்கா, ஹனுமன் பிரசாத் போதார் எனும்- இரு மார்வாடி வணிகர்களுடையது. மேற்கத்திய நாகரித்தின் தாக்கத்தால் மார்வாடி-அகர்வால் சமுதாயம் ‘சீரழிந்து’ கொண்டிருப்பதை தடுக்கும் நோக்கத்திலும், சனாதன தர்மத்தையும் அதன் அறவிழுமியங்களையும் மீண்டும் வலுப்பெறச் செய்யும் நோக்கத்திலும் பார்ப்பன இந்து மத புனிதப் பிரதிகளை பெரும் எண்ணிக்கையில் அச்சிட்டுப் பரப்புவதற்கான ஒரு மதப் பிரசுர நிறுவனமாகவே இது ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், 1926-ல் ‘கல்யாண்’ என்ற பெயரில் ஒரு மாத இதழைத் துவங்கியது முதலாகவே அந்நிறுவனம் வலதுசாரி இந்துத்துவ அரசியல் நியாயங்களை பரந்துபட்ட ‘இந்துக்களிடம்’ எடுத்துச் செல்லும் வாகனம் என்றவொரு கூடுதல் பரிமாணத்தையும் தனக்கு வரித்துக் கொண்டது. இப்பணியை அது ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம் மிக வெற்றிகரமாக செய்து வந்திருக்கிறது.
கீதா பிரஸ் இது வரை பிரசுரம் செய்து விற்றுள்ள சனாதன இந்துமத நூற்பிரதிகளின் எண்ணிக்கை அபாரமானது. அது தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ கணக்கின்படி பார்த்தால்,
பகவத் கீதை: 11.4 கோடி பிரதிகள்
ராம் சரித் மனாஸ், துளசி தாசரின் ஆக்கங்கள்: 9.2 கோடி பிரதிகள்
புராணங்கள், உபநிடதங்கள், ஏனைய பண்டைய புனிதப் பிரதிகள்: 2.2 கோடி பிரதிகள்
பெண்களுக்கும் சிறுவர்களுக்குமான குறுநூல்கள்: 10.5 கோடி பிரதிகள்
பக்தி கதைகள், பஜனைப் பாடல்கள்: 12.4 கோடி பிரதிகள்
ஏனையவை: 12.3 கோடி பிரதிகள்
என இதுவரை அது மொத்தம் 58 கோடி 25 இலட்சம் பிரதிகளை பிரசுரித்து ‘இந்து’ மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது. அதன் பிரதான இயங்குபுலம் இந்தி பேசும் வட இந்திய மாநிலங்கள்தான். இந்தியிலும் சமஸ்கிருதத்திலும்தான் அது தனது பெரும்பாலான பிரசுரங்களை வெளியிட்டிருக்கிறது. அதே சமயம் குஜராத்தி, தெலுங்கு, ஒரியா, ஆங்கிலம், வங்காளம், மராத்தி, தமிழ், கன்னடம், அஸ்ஸாமி, மலையாளம், நேப்பாளி, உருது, பஞ்சாபி போன்ற ஏனைய மொழிகளிலும் அது கணிசமான வெளியீடுகளை பதிப்பித்து மலிவு விலைகளில் விற்றிருக்கிறது. அது மட்டுமின்றி, இந்தி மொழியில் அது வெளியிடும் ‘கல்யாண்‘ இதழின் சந்தாதாரர்களது எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 2 இலட்சம்; ‘கல்யாண-கல்பதரு‘ என்ற ஆங்கில இதழின் சந்தாதாரர்கள் 1 இலட்சம். இவை மட்டுமின்றி, இன்றுவரை பலமுறை மறுபிரசுரம் செய்யப்படும் சிறப்பிதழ்களையும் துவக்கம் முதலே ஆண்டுதோறும் வெளியிட்டு வந்துள்ளது.
இவ்வளவையும் பிரசுரம் செய்பவர்கள் நான்கு வேதங்களை மட்டும் பிரசுரம் செய்வதில்லை; ஏன், தமது எழுத்துக்களில் நேரடியாக மேற்கோள் கூட காட்டுவதில்லை. காரணம் கேட்டால் நழுவுகிறார்கள். கீழ்நிலைச் சாதியினர் வேத சுலோகங்களை கேட்கத் துணிந்தால், அவர்களின் காதுகளில் பழுக்கக் காய்ச்சிய ஈயத்தை ஊற்றுவதுதான் அதற்குரிய தண்டனை என்று இவர்களின் வர்ணாஸ்ரம ‘தர்மம்’ போதிக்கிறது. பிறகு எப்படி அதனைச் செய்வார்கள்?!
சரி, கீதா பிரஸ்ஸின் வெற்றிச் சரிதையையிட்டு நாம் துணுக்குற வேண்டுமா? அவர்கள் தங்கள் மதத்துக்குச் செய்யும் ‘ஆன்மீக’ சேவையை பார்த்து வயிற்றெரிச்சல் படுவதாகுமா இது? நிச்சயம் இல்லை. நாட்டை ‘இந்து இந்தியாவாக’ ஆக்கி, தம்முடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சித்து வரும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களின் அச்சு அவதாரக் கதைதான் கீதா பிரஸ்ஸுடைய கதை. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக இந்து மஹா சபை, விஷ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., ஜன சங்கம், பா.ஜ.க., எனப் பலவண்ண முகமூடிகள் அணிந்து அணிவகுத்து வந்து இந்துத்துவ சக்திகள் செய்துவரும் வெறுப்புப் பிரச்சாரங்கள் அனைத்தையும் படித்த நடுத்தர ‘இந்து’ மக்களின் வீடுகள் வரை கொண்டு சேர்த்து, நாடு முழுக்க ஒரு ‘இந்து மனசாட்சியை’ வெற்றிகரமாக கட்டியெழுப்பியது பற்றிய கதை இந்நூலில் விரிகிறது.
‘தேசத்தின் கூட்டு மனசாட்சியை’ திருப்திபடுத்துவதற்கென்று அப்பாவிகளை தூக்கில் போட வேண்டுமென நீதிமன்றத் தீர்ப்புகள் எழுதப்படும் சூழலில், அந்த ‘மனசாட்சி’ கட்டமைக்கப்பட்ட விதத்தை அறிந்து கொள்வது நமக்குத் தொடர்பில்லாத விவகாரத்தில் மூக்கை நுழைப்பதாகி விடுமா?
அக்ஷய முகுல் தனது ஐந்தாண்டு உழைப்பு மற்றும் சளைக்காத ஆய்வின் தொடர்ச்சியாக எழுதியுள்ள இந்நூலில் கீதா பிரஸ்ஸின் கதையை விரிவாகவும், சுவாரஸ்யமாகவும் பதிவு செய்திருக்கிறார். எண்ணிக்கையில் மிகச் சிறுபான்மையான பார்ப்பன-பனியாக் கூட்டம் பெருந்திரளான சூத்திர, அவர்ண மக்களை நயவஞ்சகமாக ‘இந்து’ எனும் ஒற்றை அடையாளத்திற்குள் அடைத்து, போலியான பெரும்பான்மையை உருவாக்கி, முஸ்லிம்களை எதிரிகளாகக் காட்டி, ‘இந்து மனசாட்சி’ என்ற ஒன்றை செயற்கையாகக் கட்டியமைத்து, நாட்டின் மீதான தனது மேலாதிக்கத்தை எவ்வாறு சரிந்துவிடாமல் பாதுகாத்தும் வளர்த்தும் வந்திருக்கிறது எனும் வரலாற்றை, கீதா பிரஸ் எனும் சாளரத்தின் வழியாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் அக்ஷய முகுல். இதற்காக அவரைப் பாராட்டியாக வேண்டும்.
பக்தி இலக்கியங்களை அச்சிட்டுப் பரப்புவதற்கும், பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவுவதற்கும் ஏன் வலிந்து முடிச்சுப் போடுகிறீர்கள் என்று கேட்பீர்கள் என்றால், நீங்கள் கண்டிப்பாக முகுலின் நூலை வாசிக்க வேண்டும்.
பிரிட்டிஷ் காலனியத்தின் கீழ் மார்வாடி பனியா சமுதாயம் வணிகத்தில் வெற்றிகரமாகத் திகழ்ந்தாலும் கூட சாதி அடுக்குமுறையிலும், சமூக அந்தஸ்திலும் போதிய அங்கீகாரம் பெற முடியாததையிட்டு வருந்தி வந்தது. பிறகு படிப்படியாக மேலேறி, ‘பார்ப்பனர்-ஷத்திரியர்’ என்றிருந்த உயர் அடுக்கினை ‘பார்ப்பனர்-வைசியர்’ என எப்படி மாற்றியமைத்தது என்பதை முகுல் நூலின் முன்னுரையில் தொட்டுக் காட்டுகிறார். சனாதன இந்து தர்மத்தை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு மிகத் தாராளமாக செலவளிப்பதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக தாம் விரும்பிய சமூக அந்தஸ்தை அது சம்பாதித்துக் கொண்டது பற்றிய சித்திரம் இதிலிருந்து தெளிவாகின்றது. இப்பின்னணியில் வைத்தே கீதா பிரஸ்ஸின் உருவாக்கத்தையும் வளர்ச்சியையும் நாம் பார்க்க வேண்டும். இன்று நாட்டை சூறையாடி வரும் ‘பார்ப்பன-கார்பரேட்’ நச்சுக் கூட்டணியின் வேர் எங்கிருக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கான சூட்சுமம் இதிலிருக்கிறது.
ஜெயதயால் கோயந்த்கா
கீதா பிரஸ்ஸை நிறுவியது ஜெயதால் கோயந்த்கா என்ற மார்வாடி வணிகர். சிலகாலம் கழித்து ஹனுமன் பிரசாத் போதார் என்ற மற்றொரு மார்வாடி வணிகர் அவருடன் வந்து இணைகிறார். அவர் பிரம்மாண்டமானதொரு இந்துத்துவ வலையமைப்பையும், அச்சு சாம்ராஜ்யத்தையும் எப்படி உருவாக்கினார்? இந்தியாவின் முக்கிய ஆளுமைகள் அனைவரையும் மிகவும் நைச்சியமாக தனது சட்டகத்திற்குள் பொருத்தி, இந்து தேசியத்தின் நோக்கங்களை எவ்வாறு சாதித்துக் கொண்டார்? என்பதன் மீதே முகுலின் நூல் பெருமளவு கவனத்தை குவித்திருக்கிறது. கீதா பிரஸ்ஸின் செல்வாக்குப் புலத்துக்கு வெளியே அதிகம் அறியப்படாத ஹனுமன் பிரசாத் போதாரை, அக்ஷய முகுல் ‘இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் இந்து மிஷனரி’ என்று அடைமொழியிட்டு அழைப்பது ஏன் என்பது நூலை வாசித்து முடிக்கையில் துலக்கமாகி விடுகிறது.
பார்ப்பன பயங்கரவாதிகளால் உருவாக்கப்பட்டு, இன்று நாட்டில் கொழுந்து விட்டெரியும் எல்லாப் பிரச்சினைகளிலும் கீதா பிரஸ், ஹனுமன் போதார் ஆகியோரின் சுவடு வலுவாகப் பதிந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்தி-இந்து-இந்துஸ்தான், வர்ணாஸ்ரம அமைப்பு, பசுப் பாதுகாப்பு, ராம ஜென்ம பூமி, கிருஷ்ண ஜென்ம பூமி, இந்தியாவில் முஸ்லிம்களின் அந்தஸ்து, கர் வாப்ஸி (தாய் மதம் திரும்பல்) என நாட்டின் பாதுகாப்பையும் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் அச்சுறுத்தி வரும் எல்லாப் பிரச்சினைகளிலும் கீதா பிரஸ் ‘சங்கப் பரிவாரத்தின் காலாட்படை’யாகவே செயல்பட்டு வந்திருப்பதை, இதே பெயரில் அமைந்த ஒரு அத்தியாத்தில் நூலாசிரியர் மிக நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறார்.
ஹனுமன் பிரசாத் போதார்
அயோத்தியிலுள்ள பாபரி பள்ளிவாசலினுள் 1949 டிசம்பர் மாதம் 22-ம் தேதி இரவில் திடுமென முளைத்த ராமர் சிலை விவகாரம் தொடர்பாக பிரபல இந்தி பத்திரிக்கையாளரும் ஆர்.எஸ்.எஸ்.காரருமான ராம் பகதூர் ராய், ஆர்.எஸ்.எஸ். தலைவர் நானாஜி தேஷ்முக் தன்னிடம் கூறியதாக ‘அதிர்ச்சியூட்டும்’ உண்மை ஒன்றை சமீபத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதாவது, அந்தச் சிலையை கள்ளத்தனமாக சுவரேறிக் குதித்து பள்ளிவாசலுக்குள் கொண்டு போய் வைப்பதற்கு முன்பாக சரயூ நதியில் அதனை புனித நீராட்டியிருக்கிறது நம்முடைய இந்து மஹா சபை கும்பல். அந்த புண்ணிய காரியத்துக்கு தலைமையேற்று நடத்திக் கொடுத்தது வேறு யாருமல்ல – கீதா பிரஸ்ஸின் உயர்திரு ஹனுமான் பிரசாத் போதார் அவர்கள்தான்.
சனாதன தர்மம் பேசும் இந்துத்துவ கும்பல் கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி இல்லாமல் இக்கயமைத்தனத்தை அரங்கேற்றிவிட்டு, பள்ளிவாசல் இருந்த இடத்தில் கோயில் கட்டுவது ‘ஒட்டுமொத்த இந்துக்களின் விருப்பம்’ என்று சகிக்க முடியாத சுரத்தில் பல்லவி பாடுகின்றது. அந்த இரவில் நடந்தது என்ன, அதன் பின்னணி என்ன என்பது பற்றி கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே. ஜா எழுதியுள்ளவோர் நூல் இவர்களின் அழுகுணி ஆட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. (‘அயோத்தி: இருண்ட இரவு, பாபர் மசூதிக்குள் இராமன் தோன்றிய வரலாறு’ (ஆங்.); தமிழில் இதனை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது). பாபரி பள்ளிவாசல் பிரச்சினை பற்றி கரிசனை கொள்ளும் அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்.
திருட்டுத்தனத்தை செய்துவிட்டு அப்பாவி போல், ‘சுயம்புவாகத் தோன்றிய ராமர் சிலையை அகற்ற முனையக் கூடாது’ என்பதை வலியுறுத்தி நாட்டின் ‘பிரபலங்களுக்கு’ கடிதம் எழுதுவதில் மும்முரமாகிவிட்டார் நம் சனாதன ஒழுக்க சீலர், போதார். ‘அவ்வாறு அகற்றிவிடும் பட்சத்தில், முஸ்லிம்கள் ஆக்கிரமித்துள்ள கோயில்களை மீட்பது சாத்தியமில்லாமல் போய்விடும்’ என்ற பதைபதைப்பு வேறு அவருக்கு. இக்கயவர்கள் அன்று கொளுத்திப்போட்ட நெருப்பு, இன்றும் நாட்டை எரித்துப் பொசுக்கிக் கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியுமா? இந்த அழகில் ‘இந்துக்களுக்கு’ ஒழுக்கப் பாடம் எடுப்பதற்காக இவர்கள் பதிப்பகம் நடத்துகிறார்களாம்.
இவர்களின் லட்சணத்தை நாட்டு மக்களிடம் வீச்சான பிரச்சாரங்களின் மூலம் எடுத்துச் சென்று, இந்துத்துவ கிரிமினல்களின் முகத்திரையை கிழித்தெறியத் துணிவில்லாமல், ‘விட்டுக் கொடுத்துவிட்டால் எல்லாம் சரியாகி விடுமே’ என்று புழுவென நெளிகிறார்கள் சில ‘அறிவுஜீவிகள்’. நியாயத்துக்காகப் போராடும்படி மத-மொழி-இன வேறுபாடின்றி பரந்துபட்ட அளவில் வெகுமக்களை அணிதிரட்டுவதில்தான் உண்மையான சமூக நல்லிணக்கம் பிறக்க முடியுமேயோழிய, சமூக விரோதிகளின் கால்களில் விழுந்து, விட்டுவிடச் சொல்லி கெஞ்சுவதால் அல்ல.
கீதா பிரஸ்ஸின் பின்னணி, தொடர்புகள், கூட்டாளிகள், ஆசிரியக் குழு நிலைப்பாடுகள் ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்துவதன் ஊடாக அக்ஷய முகுல் இந்த வரலாற்று ஆய்வு நூலை, இந்துத்துவ அரசியலில் பங்காற்றும் சமூக, கலாச்சார, பொருளாதார, தனிமனித சக்திகள் பற்றிய நுட்பமான ஆய்வு நூலாக உருவாக்கியிருக்கிறார். பனியா மூலதனத்தால் முட்டுக் கொடுக்கப்படும் பார்ப்பன மேலாதிக்க செயற்திட்டத்துக்கு துலக்கமானவொரு எடுத்துக்காட்டுதான் கீதா பிரஸ்ஸின் பிறப்பும் வளர்ச்சியும். இச்செயற்திட்டத்தில் டால்மியாக்கள், திவேதிகள், கோயங்காக்கள், குப்தாக்கள், பிர்லாக்கள், ஜெயின்கள், சதுர்வேதிகள், முகர்ஜிக்கள் என ஒவ்வொருவரும் அவரவர்க்கு விதிக்கப்பட்ட பாத்திரத்தை எப்படி கனகச்சிதமாக நிறைவேற்றுகிறார்கள் என்பது படம்பிடித்துக் காட்டப்படுகிறது.
கல்யாண் மற்றும் கல்யாண-கல்பதரு இதழ்களுக்காக கட்டுரைகள் எழுதாத அன்றைய முக்கிய ஆளுமைகள் எவருமில்லை என்று சொல்லுமளவு மிகப் பிரம்மாண்டமானதொரு வலையமைப்பை போதார் கட்டியெழுப்பினார். காந்தி, மதன் மோகன் மாளவியா, எஸ். சத்தியமூர்த்தி, இராஜாஜி, எஸ். இராதாகிருஷ்ணன், பட்டாபி சீத்தாராமையா, சம்பூராணந்த், கைலாஷ்நாத் கட்ஜூ, புருஷோத்தம்தாஸ் தாக்கூர்தாஸ், ரபீந்திரநாத் தாகூர், எம்.எஸ். கோல்வால்கர், வீர் சாவர்க்கர், லால்பஹதூர் சாஸ்திரி, டாக்டர் ராஜேந்திரபிரசாத், சியாமா பிரசாத் முகர்ஜி, ஸ்வாமி கர்பத்ரி மஹராஜ், பிரபுதத் பட்டாச்சார்ஜி, அன்னிபெசன்ட், வினோபா பாவே, காகா கலேல்கர், ஷிதிமோகன் சென் என்று முடிவில்லாமல் நீளும் ஒரு பட்டியலையும் அவர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்புகள் பற்றிய அறிமுகத்தையும் தருவதற்காக ஐம்பதுக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட தனியொரு அத்தியாயத்தையே ஒதுக்கியிருக்கிறார் முகுல். காந்திக்கும் கீதா பிரஸ்ஸுக்கும் நடுவே நிலவிய நிலையான -அதேவேளை சிக்கலான- உறவு பற்றி நூல் தரும் தரவுகள், ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் காந்திக்கும் நடுவில் நிலவிய முரணை விளங்கிக் கொள்வதை எளிதாக்குகின்றன.
கீதா பிரஸ்ஸின் இதழ்களுக்காக கட்டுரைகள் எழுதிய அனைவரும் அதன் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுடன் கருத்துடன்பாடு கொண்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது. எனினும், கீதா பிரஸ்ஸின் திசைவழி சனாதன தர்மத்தை நிலைநிறுத்துகின்ற, பார்ப்பன மேலாதிக்கத்தையும் அதன் குறியீடுகளையும் வலுப்படுத்துகின்ற தடத்திலேயே திடமாக நடைபோட்டு வந்துள்ளது என்பதே இங்கு கவனிக்க வேண்டியது. போதார் இதனை மிகவும் சாணக்கியத்துடனும், விடாப்பிடியான உழைப்பின் மூலமும் சாதித்த நிகழ்ச்சித் தொடரை இந்நூல் வழியாக அறிந்துகொள்ள முடிகிற அதே வேளை, பார்ப்பன இந்து ராஷ்டிரத்துக்கான விதைகள் தூவப்பட்ட விதத்தையும் நம்மால் விரிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
வர்ணாஸ்ரம அமைப்பை எதிர்த்து ஓயாது கலகக்குரல் எழுப்பிய அம்பேத்கர், ‘இந்து சட்ட மசோதாவை’ நிறைவேற்றிய நேரு ஆகிய இருவர் மட்டும்தான் கீதா பிரஸ்ஸின் இதழ்களுக்காக ஒருபோதும் கட்டுரைகள் எழுதியதில்லை என்ற விடயம் நமக்கு ஆச்சர்யத்தை தரவில்லை. இவர்கள் இருவரையும் கீதா பிரஸ் கங்கணம் கட்டிக் கொண்டு எதிர்த்தது. வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் அவர்களுக்கெதிராக அவதூறையும் நஞ்சையும் கக்கியது.
கீதா பிரஸ் வெளியிட்ட நூல்கள், இதழ்களை மட்டுமின்றி அது ஆண்டுதோறும் வெளியிட்டு வந்துள்ள சிறப்பிதழ்களையும் முகுல் விரிவாக பகுப்பாய்வுக்கு உட்படுத்தியுள்ளார். இன்றைய இந்துத்துவ செயற்திட்டத்தை அவை எப்படி காலந்தோறும் வலுப்படுத்தி வந்துள்ளன என்பதை சிறப்பாக படம்பிடித்துக் காட்டுகிறார். மனாஸ் ஆங்க் (சிந்தனை), கௌ ஆங்க் (பசு), நாரி ஆங்க் (பெண்கள்), இந்து சன்ஸ்கிரிதி ஆங்க் (இந்துக் கலாச்சாரம்), பாலக் ஆங்க் (சிறுவர்), சிக்ஷா ஆங்க் (கல்வி), பக்தி ஆங்க் (பக்தி), உபாசனா ஆங்க் (வழிபாடு), தர்மா ஆங்க் (மதம்), பர்லோக் ஆவ்ர் புனர்ஜன்மா ஆங்க் (பரலோகமும் புனர்ஜென்மமும்), சதச்சார் ஆங்க் (நல்லொழுக்கம்), மாளவியா ஆங்க் (மதன் மோகன் மாளவியா) என அவற்றின் பட்டியல் நீளுகின்றது. சனாதன பக்தியோடு கலந்து பார்ப்பன மேலாதிக்க அரசியலை மக்களின் மனங்களில் திணிப்பதில் இவை ஆற்றிய பங்கு குறைவானதல்ல என்பது பற்றிய நிறைவானதொரு சித்திரம் முகுலின் பகுப்பாய்வை வாசிக்கையில் நம் மனங்களில் விரிகின்றது.
இந்துத்துவ முகாமை பிரதிநிதித்துவம் செய்யும் கீதா பிரஸ், ‘இந்துக்கள்’ அனைவரையும் ஓர் குடையின் கீழ் ஒருங்கிணைக்க வேண்டுமென்று தொடர்ந்து முழங்கி வருகின்றது. ஆனால், அது அனைவருக்கும் சுயமரியாதையுடன் கூடிய சம இடத்தை உறுதிசெய்யும் அமைப்பிலானவோர் ஒருங்கிணைவு அல்ல. மாறாக, வர்ணாஸ்ரம சாதிப் படிநிலையமைப்பில் பார்ப்பன-பனியா கூட்டணி ஒதுக்கித் தரும் இடத்தை, அது போட்டுத் தரும் நிபந்தனைகளின் பேரில், மற்றெல்லோரும் தாழ்பணிந்து ஏற்றுக்கொள்வதையே அது வலியுறுத்துகிறது.
சுதந்திர இந்தியாவுக்கென போதார் முன்வைத்த திட்டவரைவில் இடம்பெற்ற சில ‘சமூக நல்லிணக்க கருத்துக்கள்’ பின்வருமாறு:
“இராணுவத்தில் இந்துக்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும்”, “உயர் பதவிகள் எதிலும் முஸ்லிம்கள் நியமிக்கப்படக் கூடாது”, “அரசுக் கொள்கை என்ற அளவிலேயே பசுக் கொலை முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும்”, “காவிக் கொடியே தேசியக் கொடியாக அறிவிக்கப்பட வேண்டும்”, “தேவனகிரி வரிவடிவம் கொண்ட கலப்பற்ற இந்தி மொழியே தேசிய மொழியாக ஆக்கப்பட வேண்டும்”, “இந்துக் கலாச்சாரத்தின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்படும் கலப்பற்ற இந்து தேசமாகவே இந்தியா இருக்க வேண்டும்”,…
கீதா பிரஸ் பிரதிநிதித்துவப் படுத்தும் இந்து ராஷ்டிரத்தில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இலட்சிய வாழ்வு பற்றி அது கூறுவதைக் கேட்கும் எவருக்கும் ஆத்திரம் பொத்துக் கொண்டு வருவதை தவிர்க்க முடியாது. கீதா பிரஸ் இந்துப் பெண்களுக்காக பரிந்துரைக்கும் ‘உன்னத ஒழுக்க விழுமியங்கள்’ பற்றி என்னுடன் வேலை செய்யும் வட இந்தியப் பெண்ணிடம் சொன்ன போது, “அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள்; தேடிப் போய் செருப்பாலடித்து விட்டு வருகிறேன்” என்று கொதித்தார்.
உதாரணத்திற்கு, மரணமடைந்து விட்ட கணவனோடு சேர்த்து மனைவியைக் கொளுத்தும் ‘சதி’ (உடன்கட்டை ஏறுதல்) எனும் சனாதன தர்ம ‘பண்பாட்டை’ கூட அது வெட்கமின்றி இன்றுவரை உயர்த்திப் பிடிக்கிறது. கல்யாண் இதழின் தற்போதைய ஆசிரியர் ராதேஷ்யாம் கேம்கா, சதி எனும் சம்பிரதாயத்தின் சிறப்புகளை விரிவாகப் பட்டியலிடுவது மட்டுமின்றி, பண்டைய காலங்களில் கணவனை இழந்த மிக இளம் பெண்கள் கூட மனமுவந்து தம்மை எரியூட்டிக் கொண்டார்கள் என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார். 2011-ம் ஆண்டு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் சொல்வதைக் கேளுங்கள்:
“இந்தக் காலத்தில் அது (உடன்கட்டை ஏறுதல்) சாத்தியமில்லை. எனவே, விதவையானவர் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதற்கு இணங்க ஒரு சந்நியாசியைப் போல் தனது எஞ்சிய வாழ்வை கழிக்க வேண்டும். விதவை மறுமணம் என்பது சாஸ்திரங்களில் அனுமதிக்கப்பட்ட ஒன்றல்ல. காரணம் என்னவென்றால், ஒரு பெண் தனது பூர்வ ஜென்ம பாவங்களின் காரணமாகவே விதவையாகிறார். பாவங்களே துன்பம், துயரம், கஷ்டத்திற்குக் காரணம். அவற்றை மகிழ்ச்சியுடன் சகித்துக் கொள்வதன் மூலம் மட்டுமே ஒருவரால் தனது பூர்வ ஜென்ம பாவங்களிலிருந்து விமோச்சனம் பெற முடியும். சாஸ்திரங்களின் தீர்ப்புகளுக்கு எதிராக ஒரு விதவை மறுமணம் செய்து கொள்வாரெனில், ஏற்கனவே செய்த பாவங்கள் கழிவதற்கு முன்பே புதிய பாவமொன்று அவளுடைய கணக்கில் சேர்ந்து கொள்கிறது. எதிர்காலத்தில் அவள் அதற்கும் சேர்த்து விலை கொடுக்க வேண்டிவரும்.”
கீதா பிரஸ் வெளியீடான “இல்லற வாழ்வை எப்படி வாழ வேண்டும்?” என்ற நூலில் ஸ்வாமி ராம்ஷுக்தாஸ் கூறுவதைக் கேளுங்கள்:
“கணவனின் பிணத்தோடு சேர்த்து மனைவியை எரியூட்டுவது வெறுமனேயொரு சம்பிரதாயம் அல்ல. அவள் மனதிற்குள் உண்மையும் உணர்ச்சிப் பெருக்கும் நுழையும் போது அவள் நெருப்பின்றியே எரிகிறாள். அவ்வாறு எரியும்போது வலியால் அவள் துன்புறுவதில்லை. அவள் இவ்வாறு செய்ய வேண்டும் என்பது வெறுமனேயொரு சம்பிரதாயம் அல்ல; அது அவளின் உண்மை நிலை, கற்பொழுக்கம், வேதப் பண்பாட்டின் மீதான நம்பிக்கை ஆகியவற்றின் பாற்பட்டது… அது அவளுடைய மதப்பற்றினால் விளைவது. இது சம்பந்தமாக பிரபுதத்தா பிரம்மச்சாரிஜி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதன் தலைப்பு, “கணவனின் பிணத்துடன் சேர்த்து மனைவியை எரியூட்டுவது இந்து மதத்தின் முதுகெலும்பு” என்பதாகும். அதனை கட்டாயம் படிக்க வேண்டும்.”
உடன்கட்டை ஏறுவதை ஆதரிப்பது மட்டுமல்ல; “வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டால் வெளியில் சொல்லக்கூடாது”, “கணவன் அடித்துத் துன்புறுத்துவதற்குக் காரணம் மனைவியின் பூர்வ ஜென்ம பாவங்கள்தான்” என்பது போன்ற சனாதன நல்லுரைகள் கீதா பிரஸ்ஸின் வெளியீடுகள் அனைத்திலும் குமட்டுமளவு நிரம்பி வழிகின்றன.
இவை எதுவும் பெரும்பான்மை ‘இந்து’ மக்களின் மத நம்பிக்கை சார்ந்தவை அல்ல; பார்ப்பன சனாதன மதத்தின் கருத்துக்கள் மட்டுமே. இவற்றைக் கட்டிக்கொண்டு அழுவதற்கு சனாதனவாதிகளுக்கிருக்கும் உரிமையை நாம் மதிக்கிறோம். ஆனால், இந்து என்று சொல்லி இவற்றை எல்லோர் தலையிலும் கட்டப் பார்க்கிறார்கள் இந்த ஃபாசிஸ்டுகள். இதைச் சரியாகப் புரிந்து கொண்ட அம்பேத்கர், பெரியார் போன்றோர் பார்ப்பனக் கொடுங்கோன்மையை சமரசமின்றி எதிர்த்தார்கள். பார்ப்பனப் புரட்டை சரியாகப் புரிந்து கொள்ளாதோர் மட்டுமே, “இது இந்து மதத்தின் உள்விவகாரமாயிற்றே; நாம் எப்படி அதில் தலையிடுவது?!” என்று தடுமாறுகிறார்கள். இதில் நாம் எந்த வகை?
பார்ப்பன பயங்கரவாதம் பற்றி, சனாதன அதர்மம் பற்றி, வர்ணாஸ்ரம இழிவு பற்றி பேசினால் ‘இந்துக்கள்’ மனம் புண்படும் என்று ஒதுங்கிக் கொள்வது பச்சை சந்தர்ப்பவாதமின்றி வேறு என்ன? அப்படியே இந்துத்துவ வாதிகளை எதிர்க்கக் கிளம்பினாலும், அவர்கள் ‘முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள்’ என்பதை தாண்டி அந்த எதிர்ப்பின் பரப்பு நீளுவதில்லை. இவ்வாறு செய்வதால், அவர்கள் நாடுகின்ற ‘இந்துக்கள் vs. முஸ்லிம்கள்’ என்று எளிமைப்படுத்தப்பட்ட இருமை நிலைதான் வலுவடைகின்றது. மாற்றமாக, ‘இந்துக்கள்’ என்று சொல்லி பெருந்திரள் மக்களின் பின்னால் ஒளிந்துகொள்ளும் பார்ப்பனிய அறிவுக் கூலிப்படையை கரத்தை பிடித்திழுத்து எதிரில் நிறுத்தி முறியடிக்க வேண்டும். ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து அதைச் செய்யும்போது, பார்ப்பனியத்தால் ஒடுக்கப்படும் பெரும்பான்மை மக்கள் உண்மையைப் புரிந்து கொள்வார்கள். அதே போல், பார்ப்பனியத்துக்கு முதலாளித்துவத்துடனும் நவ தாரளாவாதத்துடனும் இருக்கும் கள்ள உறவை அம்பலப்படுத்தாமல் நம்முடைய எதிர்ப்பு முழுமை பெறாது என்பதையும் நாம் மனதிலிருத்த வேண்டும்.
எனவே முஸ்லிம்கள், தலித்துகள், மதச்சார்பின்மை வாதிகள், ஜனநாயகவாதிகள் என அனைவரும் -பார்ப்பனியத்தால் ஒடுக்கப்படும் சாதி, இன, மத, மொழி மக்கள் அனைவரும்- தமது ‘சமுதாயம்’, ‘இயக்கம்’ போன்ற வேறுபாடுகளைக் கடந்து, அநீதியின் ஊற்றுக் கண்ணான பார்ப்பனிய பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தி, அதன் அடித்தளத்தை தகர்த்தெறிவதில் கவனத்தைக் குவிப்பது அவசியம்.
அநியாயம் இழைப்பவர் – இழைக்கப்படுபவர் இருவருக்குமே உதவ வேண்டும் என்றார்கள் நபிகள் நாயகம். அநியாயம் இழைக்கப்படுபவருக்கு உதவ வேண்டுமென்பது புரிகிறது; அநியாயம் இழைப்பவருக்கு எப்படி உதவ முடியும்? அநியாயம் செய்பவரின் கரத்தைப் பிடித்து, அநீதி செய்யவிடாமல் தடுத்து, சுயஅழிவுப் பாதையிலிருந்து அவரைக் காப்பாற்றுவதே நாம் அவருக்கு செய்யத்தக்க உதவி.
இந்த வகையில், பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு நம் உதவி தேவையாயிருக்கிறது! செய்வோமா?
கல்லூரி அட்மிஷன் கனஜோராக நடக்கும் இந்த சூழலில் உலகின் உள்ள எல்லாத் துறைகளைப் பற்றியும், அதில் எப்படி விற்பன்னராவது என்பது பற்றியும் பெரும் விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றிய ஆலோசனைகள் யாராலும் தரப்படுவதில்லை.
முன்னேறும் வழி தெரியாமல் ஆண்டுக் கணக்கில் சென்னை வீதிகளை ஓட்டை டூவீலரில் சுற்றி சைனஸ் வந்து அல்லலுறும் பத்திரிகையாளர்கள், வாடகை கட்டுப்படியாகாமல் வீட்டை வருடா வருடம் மாற்றிக் களைத்துப் போகும் பத்திரிகையாளர்கள் என ஒரு கூட்டம் துன்பப்படுவதைப் பார்த்து கண்களில் ரத்தக்கண்ணீர் வருகிறது. எதேச்சையாக சந்தித்த பிழைக்கத் தெரியாத ஓரிரு பத்திரிக்கையாளர்களுக்கு டீயும் பன்னும்கூட வாங்கித்தராத குற்ற உணர்வு இன்றைக்குவரை என்னை வாட்டுகிறது.
அவர்களும் ஏசி ரூமில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும். அவர்களும் தென்னகத்து அர்னாபாக, பர்கா தத்தாக மாற வேண்டும் எனும் உயர்ந்த நோக்கத்தோடு இந்த பயிற்சிக் கையேடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவர்களிடம் தற்சமயத்துக்கு பைசா இருக்காது என்பதால் இந்தப் பயிற்சியை இலவசமாகவே தருகிறோம்.
முதலில் உறுதிமொழி,
1. ரங்கராஜ் பாண்டேவாக விரும்பும் நான், காக்கி டவுசருக்கு எதிராக ஒரு போதும் சிந்திக்க மாட்டேன். கருப்பு சட்டைக்கு ஒரு போதும் துணைபோக மாட்டேன்.
2. ரங்கராஜ் பாண்டேவாக விரும்பும் நான், சிறுபான்மை மக்களையும் தலித் மக்களையும் முடிந்தவரை இழிவுபடுத்துவேன்.
3. ரங்கராஜ் பாண்டேவாக விரும்பும் நான், RSS-ன் அபான வாயுவாக மாறி எட்டுத்திசைக்கும் அதன் ’கொல்’கைகளைப் பரப்புவேன். தேவைப்பட்டால் RSS-ன் ஆயுதமாக மாறி ஒரு தரப்பை மட்டும்கூட தாக்குவேன்.
4. ரங்கராஜ் பாண்டேவாக விரும்பும் நான், அதிகாரத்துக்கும் மக்களுக்கும் இடையேயான முரண்பாடுகளில் அதிகாரத்தின் பக்கம் மட்டுமே நிற்பேன்.
5. ரங்கராஜ் பாண்டேவாக விரும்பும் நான், அதிகாரத்துக்கும் RSS-க்குமான முரண்பாடுகளில் RSS பக்கம் மட்டுமே நிற்பேன்.
வளர்த்துக் கொள்ள வேண்டிய சில தகுதிகள்:
1. பா.ஜ.க.காரனிடம் பேட்டி எடுக்கையில் ஒரு பா.ஜ.க.காரனைப் போலவே பேச வேண்டும்.
2. எதிர்க்கட்சிகளிடம் கேள்வி கேட்கையிலும் ஒரு பா.ஜ.க.காரனைப் போலவே கேள்வி கேட்க வேண்டும். ‘நீ மட்டும் யோக்கியமா’ வகை கேள்விகள் சாலச்சிறந்தது.
3. இது மிக முக்கியமானது, உடல்மொழி ஒரு ஆகப்பெரும் தகுதி. நீங்கள் உரையாடுகையில் வெறும் 7 சதவிகிதச் செய்தியை மட்டுமே வார்த்தைகள் மூலம் புரியவைக்கிறீர்கள். மீதமுள்ள 93 சதம் செய்தியும் உங்கள் உடல்மொழி வாயிலாகவே எதிராளிக்குச் சென்று சேர்கிறது ஆகவே பா.ஜ.க.வுக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் எதிராக யார் பேசினாலும் அவர்களிடம் மிக சாதாரண கேள்விகளையும் ஒரு நக்கலான, மட்டம் தட்டும் வகையிலான உடல் மொழியில் கேட்கப் பழக வேண்டும்.
இதனால் எதிராளி உங்கள் உடல்மொழிக்கு பதிலளிக்க முயல்வார், பதற்றமடைவார்.
இதன்மூலம் விவாதத்தை திசை திருப்பலாம், பா.ஜ.க.வுக்கு எதிரான குற்றச்சாட்டை வலுவிழக்க வைக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக உங்களை ஒரு மேதாவியாக எல்லோரையும் மடக்கும் வாதத் திறமையுள்ளவனாக உலகம் நம்பும்.
4. இந்துத்துவ பரிவாரங்கள் செய்யும் எந்தக் கலவரத்தையும் நினைவில் வைத்திருக்கவே கூடாது. ஐ.எஸ், அல்காயிதா ஆகிய இயக்கங்கள் நடத்திய தாக்குதல்களில் 5 செய்திகளையாவது தினமும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அதனை சமையல் நிகழ்ச்சி நடத்தினாலும் குறிப்பிட மறக்கக் கூடாது.
5. மனிதாபிமானம், நியாய உணர்வு ஆகியவை அரை பர்செண்ட் கூட இருக்கக் கூடாது. இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு உங்கள் மனைவிக்கு ஒரு ஹேர்பின்கூட வாங்க முடியாது. பிறகெதற்கு இந்தக் கருமங்களைக் கட்டிச் சுமக்க வேண்டும்? (சுஷ்மா ஸ்வராஜுக்கு உள்ள மனிதாபிமானம் இந்த லிஸ்டில் வராது).
பாண்டே ஆவதற்கான தொழில்நுட்பங்கள் (உதாரணங்களுடன்):
1. விவாதத்துக்கான தலைப்பு பிரச்னையின் தீவிரத் தன்மையைக் கணிசமாக குறைப்பதாக இருக்க வேண்டும். தந்தி பேப்பரின் தலைப்புச் செய்திக்காகவா அது விற்பனையாகிறது? மூன்றாம் பக்க கள்ளக்காதல் செய்திதான் பேப்பரின் பலம். அதுபோல விவாதத்தின் தலைப்பும் செய்தியைச் சுட்டிக் காட்டவேண்டும், ஆனால் அதன் பொருள் எதிர்த்தரப்பை குற்றம் சாட்டுவதாக அமைய வேண்டும்.
ஆர்.கே நகர் தேர்தல் விதிமீறல்கள் பற்றிய விவாதங்களின் தலைப்பு இப்படி இருக்கலாம்.
ஆர்.கே நகரில் தேர்தல் விதிமீறல் இருப்பதாக எதிர்கட்சிகள் சொல்வது, வழக்கமான அரசியலா அல்லது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டா?
ஆர்.கே நகர் தேர்தலை எதிர்கட்சிகள் புறக்கணிக்கக் காரணம், தோல்வி பயமா அல்லது அக்கறையின்மையா?
இத்தகைய தலைப்புகள் எதிர்த்தரப்பை பெருமளவு தடுப்பாட்டம் ஆட வைக்கும். அதன்மூலம் ஆளும் தரப்பின் வேலையை எளிதாக்கலாம்.
2. நீங்கள் ஆய் போக ஆகும் நேரம் பத்து நிமிடமாக இருக்கலாம். ஆனால் அதற்காக உங்கள் வயிறு நாளெல்லாம் உழைக்கிறது. அதுபோலவே காவி சேவைக்கான காலம் ஒன்றிரண்டு மணிநேரமாக இருக்கலாம். ஆனால் அதற்காக நம் மூளை நாளெல்லாம் உழைக்கவேண்டும். ஆகவே இந்துத்துவாவை ஒரு வேலையைக் காப்பாற்றிக் கொள்ளும் உத்தியாகக் கருதாமல் ஒரு வாழ்க்கை நெறியாகக் கொள்ள வேண்டும். இந்துத்துவா என்றதும் ஏதோ பெரிய ஃபார்முலாவோ என நினைத்து பயப்படவேண்டாம். வலியவனின் காலை நக்கு, எளியவனை எட்டி உதை என்பதுதான் அதன் ஒட்டுமொத்த சாரம்சம். இது தெரியாமல்தான் பச்சமுத்து ஃபவுண்டேஷன் டிவி தொகுப்பாளர்கள் சிலர் மஹா சந்நிதானத்தின் சீற்றத்துக்கு ஆளானார்கள்.
ஆர்.எஸ்.எஸ்சை ஏன் எதிர்க்கிறீர்கள் எனும் கேள்வியை பின்வருமாறு கேட்கலாம்.
சுப்ரீம் கோர்ட்டே RSS ஒரு தீவிரவாத இயக்கமல்ல என்று சொல்லிவிட்ட பிறகும் நீங்கள் ஏன் அந்த இயக்கத்தை எதிர்க்கிறீர்கள்? உங்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கையில்லையா? இல்லையேல் உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயுமே?
நைஜீரியாவில் தாக்குதல் நடத்தும் போகோ ஹாரம் இயக்கத்தை எதிர்க்காத நீங்கள் RSSஐ மட்டும் எதிர்ப்பதன் மர்மம் என்ன?
3. ஒருத்தனையும் முழுசாக பேசவிடாதீர்கள். பாஜக ஆட்கள் முழுசாக பேசிவிட்டால் நம் கொள்கைகள் அம்பலமாகி நாறிவிடும். அந்த மேன்ஹோல்கள் முழுசாகத் திறக்கப்பட்டுவிட்டால் அது எந்த செண்ட்டுக்கும் அடங்கமறுக்கும். எதிர்த்தரப்பை முழுமையாகப் பேசவிட்டாலும் இதுதான் கதி. அவர்களும் நம் சுயரூபத்தை அம்பலப்படுத்த முனைவார்கள்.
ஒரு விவாதம் என்பது நாம் சொல்ல விரும்பிய கருத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வழியேயன்றி அரங்கத்தில் பேசுபவர்கள் கருத்தைக் கொண்டுசேர்க்கும் நிகழ்ச்சியல்ல!
முசாபர் நகர் கலவரத்தில் ஏழை முஸ்லிம்கள் கொல்லப்பட்டு அகதிகளாக விரட்டப்படக் காரணம் என ஒருவர் பேசும்போது இடைமறித்து, ‘அப்போ பணக்கார முஸ்லிம்கள் கொல்லப்பட்டால் பரவாயில்லையா? இவ்வளவு மனிதாபிமானம் பேசும் நீங்கள் சிரியாவில் ஐ.எஸ் இயக்கம் கிறிஸ்தவர்களைக் கொல்லும்போது எங்கே போயிருந்தீர்கள்?’ எனக் கேட்கலாம்.
4. ஓரளவுக்கு தரவுகளையும், நியாயத்தையும் முன்வைத்து பேசுவோருக்கு எதிராக கோமாளித்தனமும் திமிரும் கலந்து பேசும் RSS கல்யாணராமன் போன்ற சல்லிக் கிராக்கிகளை அமர வையுங்கள். இதன் மூலம் ஐன்ஸ்டீனையே தெருச்சண்டைக்காரனாக மாற்றிவிடமுடியும். ஒரு திமிர் பிடித்த முட்டாளுடன் யாராலும் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை நடத்த முடியாது.
மேலும் இப்படியான கோளாறான விவாத அமைப்பின் மூலம் நல்ல முறையில் விவாதம் செய்பவர்கள் எனும் பெயரைப் பெற்ற நபர்களின் நன்மதிப்பைக் கணிசமாகச் சிதைக்க முடியும். அப்படிப்பட்ட ஆட்கள் பா.ஜ.க கூடாரத்தில் இருக்க மாட்டார்கள் என்பதால் நம் நாக்பூர் நாதாரிகள் சங்கத்துக்கு எந்த சங்கடமும் வராது. ஆரோக்கியமான விவாதத்தில் ஒரு தொகுப்பாளரால் தனது மேதாவித்தனத்தை நிரூபிக்க முடியாது, விவாதத்தில் இருக்கும் எல்லோரையும் முட்டாளாக காட்டினால்தான் தொகுப்பாளனால் புத்திசாலியாக முடியும் என்கிறது பாண்டேயிசம்.
5. விவாதம் ஒரு சரியான முடிவை நோக்கி செல்லாமலிருப்பதை உறுதி செய்யுங்கள். விவாதத்தைப் பார்க்கும் பல ஆண்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு மட்டுமே (பெண்களுக்கு சீரியலைப் போல). அதனைக் கெடுக்கக்கூடாது. ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அவசியமில்லை, அதனைப் பழக்கப்படுத்தினால் போதும். முடிவற்ற விவாதங்கள் எப்போதும் மக்களைப் பிரச்னைக்குப் பழக்கப்படுத்தும் கருவியாக மட்டுமே இருக்கும். நாய்க்கு எதிர்ப்புணர்வு என்றால் என்னவென்று தெரியாது அதனால்தான் அது கொடுமைக்கார எஜமானனுக்கும் வாலாட்டுகிறது. மக்களையும் அப்படிப்பட்ட நாயாகத்தான் பாண்டேயாக விரும்புபவன் கருதவேண்டும்.
மேலும் சரியான விவாதம் ஒரு முடிவை நோக்கி செல்லும். அந்த முடிவு செயலாக மாறும. செயல் புரட்சியை நோக்கிச் செல்லும் வாய்ப்பிருக்கிறது. கலாச்சாரம் பேசும் பாண்டேயிசத்தில் புரட்சி என்பது விலக்கப்பட்ட வார்த்தை என்பதை நினைவில் வையுங்கள்.
6. கூமுட்டைகளையும், அறிவுபூர்வமான விவாதம் எப்படியிருக்கவேண்டும் என்பதை தெரிந்து கொள்ளக்கூட அக்கறையற்ற ஆஃப் பாயில்களையும் ஊக்குவியுங்கள். இதன் மூலம் பா.ஜ.க கூடாரத்து நபர்களின் தாழ்வு மனப்பான்மையை நீக்க முடியும். ஆதாரங்களோடு பேசமுடியாவிட்டாலும் நாமும் அறிவுஜீவியாகலாம் எனும் நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படும். அதனைக் கொண்டு ஒரிஜினல் அறிவுஜீவிகளுக்குப் பழிப்பு காட்ட முடியும்.
7. விவாதத்தில் ஒரு பொதுப் பிரச்னையைத் தனிப்பட்ட பிரச்னையாகவும், தனிப்பட்ட பிரச்னையைப் பொதுப் பிரச்னையாகவும் மாற்ற வேண்டும். இரண்டுக்குமான வெவ்வேறு அளவீடுகள் மக்களிடையே உண்டு. அதனால் பேசுவோரிடையே ஒரு குழப்பம் உருவாகும். அந்த கேப்பில் நான் ஒரு மீடியா டான் என பெயர் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கலாம்.
குஜராத் கலவரம் ஒரு பொதுப் பிரச்னை. அதனை இரண்டு தரப்புக்கு இடையேயான கலவரமாக சித்தரித்து கேள்வி கேளுங்கள். மாட்டுக்கறி தின்பதும் திங்காததும் ஒருவனது தனிப்பட்ட பிரச்னை. ஆனால் மாட்டுக்கறி தின்றால் காயப்படப்போகும் கோடிக்கணக்கான இந்துக்களுக்கு என்ன பதில் எனக் கேட்கலாம். இதனால் இந்துன்னா மாட்டுக்கறி தின்பதை எதிர்க்க வேண்டும் எனும் செய்தி பார்க்கும் வாசகன் மனதில் உருவாகும்.
8. விவாதத்தின் இடையே RSS ஒரு பண்பாட்டு அமைப்பு, அதற்கும் காந்தி கொலைக்கும் சம்பந்தம் இல்லை; பெரும்பான்மை இந்துக்கள் கோபப்பட்டால் சிறுபான்மையோர் கதி என்னாகும் தெரியுமா?; மதம் மாறிய தலித் மக்கள் இஸ்லாம் கிறிஸ்தவ மதங்களில் மோசமாக நடத்தப்படுகிறார்கள் தெரியுமா? என்பன போன்ற கருத்துகளை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.
ஒரு பிச்சைக்காரனைப் பார்த்தாலே அவன் பிச்சைக்காரன் என்பது தெரிந்துபோகும். ஆனாலும் அவன் அம்மா தாயே என இறைஞ்சிக் கொண்டே இருக்கிறான், ஏன்? பிழைக்க வேண்டுமானால் உங்கள் இருப்பை உலகத்துக்கு உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் தட்டில் தட்சணை விழும்.
9. எதிரணியானாலும் ஆள் பார்த்து பேசவேண்டும். குடியாத்தம் குமார், ஜெயராஜ் போன்ற ஆட்கள் சிக்கினால் அவர்களிடம் தி.மு.க மீதான மொத்த கடுப்பையும் இறக்கலாம். ஆனால் ஸ்டாலினிடம் பேசுகையில் அந்த சாயலே தெரியக்கூடாது.
ஒரு பாண்டேயிச மாணவனுக்கு இந்துத்துவச் சிந்தனை ஜட்டி போன்றதென்றால் ஆளும்வர்க்க ஆதரவு வேட்டி போன்றது. வெறும் ஜட்டியோடு நீங்கள் ஒருக்காலும் பணியாற்ற முடியாது. ஆகவே தராதரம் பார்த்து வாலைக்காட்டவோ அல்லது நூலைக் காட்டவோ செய்யலாம்.
10. அனைத்துக்கும் மேலாக கர்மா என்றொன்று இருக்கிறது என்பதை நம்ப வேண்டும். நீங்கள் என்னதான் மல்லாக்கப் படுத்து குட்டிக்கரணம் போட்டாலும் மீடியாவில் பிராமணன் அடையக்கூடிய உயரம் என்றொன்று உண்டு; பிற்படுத்தப்பட்டவன் அடையக்கூடிய உயரம் என்றொன்று உண்டு. அவ்வாறே தாழ்த்தப்பட்டவன் அடையக் கூடிய உயரம் என்றொன்று உண்டு. அந்த விதிப்படி உங்கள் குலத்துக்கு உண்டான உயரத்துக்கு மட்டுமே நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.
இதற்கு மேலும் உங்கள் மனதில் தொழில் தர்மம்னு ஒன்னு இருக்கில்லையா எனும் எண்ணம் எழுந்தால் உடனடியாகப் பயிற்சியை விட்டு வெளியேறுங்கள். உங்களுக்கெல்லாம் பாண்டேவின் பெயரை உச்சரிக்கும் தகுதிகூட கிடையாது.
பாண்டே ஒரு பொய் சொன்னா அது நூறு உண்மைகளைக் கொல்லணும்.
பாண்டே ஒரு உண்மையைச் சொன்னா அது உலகமே காறித்துப்பற மாதிரி இருக்கணும்.
பாண்டே ஒரு சேதி சொன்னா காதுல ரத்தம் வரணும்.
தென்னாட்டின் ஆர்னாப்,
முடி உள்ள துக்ளக் சோ,
சுப்ரமணியம் சாமியின் ஆல்டர் ஈகோ
பரம பூஜனிய ரங்கராஜ் பாண்டேஜிக்கு ஜே ஜே!
தமிழ்ப் படங்களில் பட்டாபட்டி வேட்டி கட்டிய கிரிமினல்கள் அளவுக்கு, கோட்டு சூட்டு கிரிமினல்களை பார்க்க முடியாது. ஆள் பாதி ஆடை பாதி எனும் இமேஜை மூலதனமாகக் கொண்டே இன்றைய கிரிமினல்கள் ‘தொழில்’ செய்கிறார்கள்.
கோட்டு சூட்டு உளவியலை சாதகமாக பயன்படுத்தியே தமிழ் இந்து தினசரி தனது சந்தர்ப்பவாதத்தை வணிகம் செய்கிறது. இருப்பினும் எந்த ஒரு குற்றவாளியும் குற்றச் செயல் செய்யும் போது கண்டிப்பாக தடயங்களை மறந்து விட்டே செல்கிறான். அவற்றை இங்கே தொகுத்து தருகிறோம்.
“தி இந்து” மட்டும் தனது தோற்றத்திலேயே போயஸ் தோட்டத்தின் ஆசீர்வாதத்தோடு பிறந்தது. முதல் இதழ் அன்றே இவர்கள் அம்மாவின் விஷன் 2020 கனவுத் திட்டத்தை இலவச இணைப்பாக பக்தியுடன் வெளியிட்டார்கள். அ.தி.மு.க அமைச்சர்களே வெட்கப்படும்படியான புள்ளிவிவர துதிகளை வாழ்த்தாக வண்ணங்களில் இறைத்திருந்தார்கள்.
அதன்படி குமாரசாமி தீர்ப்பு இவாளுக்கு ஏற்படுத்திய குதூகலத்தை எழுத்தில் கொண்டு வருவது சிரமம்.
“ஜெயலலிதா வழக்கில் இன்று தீர்ப்பு: பெங்களூருவில் போலீஸ் குவிப்பு; காலை 11 மணிக்கு மேல் வெளியாகும்” என்று மே 11 தலைப்புச் செய்தியில் தி இந்து ஆரம்பிக்கிறது. இதில் வழக்கின் வரலாற்றை தொகுத்துக் கூறுகிறார்களாம்.
நீதிபதி குமாரசாமி குறித்த செய்தியில், “அனைத்து ஆவணங்களையும் சாட்சியங்களையும் வாதங்களையும் ஆராய்ந்து தீர்ப்பு எழுதியுள்ளார்.” என்று கூறுகிறார்கள். அவரது ஆய்வு, எழுத்து, திறன் அனைத்தும் தீர்ப்பு வருவதற்கு முன்பே “தி இந்து”வுக்கு எப்படி தெரியும்?
இவ்வளவிற்கும் ஏற்கனவே தீர்ப்பு எழுதிய குன்ஹா பகுதி வரும்போது “இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார்” என்றே குறிப்பிடுகிறார்கள். வெளி வந்த தீர்ப்பில் ஆய்வு, எழுத்தை எதையும் பார்க்காதவர்கள் வெளிவராத தீர்ப்பில் மட்டும் அதை எப்படிக் கண்டுபிடித்தார்கள்?
“உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி: பெங்களூருவில் கூடுதல் பாதுகாப்பு- பட்டாசு, இனிப்புகளுடன் காத்திருக்கும் அதிமுகவினர்” என்ற தலைப்பில் 11-ம் தேதி ஒரு செய்தி. அதில் ஓசூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பட்டாசு, 2 இலட்சம் மதிப்பில் அ.தி.மு.க செய்யும் இனிப்புகள், தலைவர்கள் போக வேண்டாம் என்று ஜெயா உத்திரவிட்டது எல்லாம் இருக்கிறது. தீர்ப்பு மாறி வந்தால் குன்ஹாவை அசிங்கப்படுத்தியது போல இப்போதும் செய்வார்களா என்று தி இந்து கேட்கவில்லை. முக்கியமாக இந்தத் தீர்ப்பிற்கு அ.தி.மு.க பட்டாசு வெடிக்கும் படத்தினை கோப்புக் காட்சி என்று போட்டு சேர்த்திருக்கிறார்கள். தீர்ப்பு வருமுன்னே கொண்டாட்டம் என்று எப்படி போட முடியும்? இதயத்தில் அம்மா விசுவாசம் இருந்தால் இறந்தகாலம், நிகழ்காலம் பேதமில்லை போலும்.
அதே நாளில் “ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: 900 பக்கங்களுக்கு மேல் தீர்ப்பு” என்று மற்றுமொரு செய்தி. எதற்கு? நீதிபதி குமாரசாமி ஆய்வு செய்துதான் எழுதினார் என்ற பில்டப்பை நம்ப வைப்பதற்காக இந்த 900 என்ற எண்ணை தலைப்பில் போட்டிருக்கிறார்கள். உள்ளே 11 மணிக்கு தீர்ப்பு, 144 தடை, 1000 போலீசு, மோப்ப நாய்கள் என்று நிறைய எண்கள் இருக்கின்றன.
மேலும், பொறுமை காக்குமாறு ஜெயலலிதா கூறிய அறிக்கை, கர்நாடக எல்லையில் சுமூக சூழல், ‘அதிமுக நகரமான’ ஐ.டி சிட்டி பெங்களூரு’ என்றெல்லாம் மாறாத விசுவாசத்துடன் சில பல செய்திகளை போட்டிருக்கிறார்கள். இது அன்றி, “ஊழல் குறித்த வழக்குகளில் முக்கிய பதவியில் இருப்போர் தவறிழைத்தால் சட்டம் தண்டிக்குமா” போன்ற மேலோட்டமான பேச்சுகள் கூட அன்றைய தி இந்துவின் பக்கங்கள் எதிலும் இல்லை.
தீர்ப்பு வரும் நேரத்தில் நிகழ் நேரப் பதிவாக நேரலையில் செய்திகளை தருகிறார்கள். தீர்ப்பு வந்த பிறகு ஜெயாவுக்கு ஆதரவாக பிற கட்சி தலைவர்களது அறிக்கைகள் அதிகம் காட்டப்படுகின்றது. அன்று மாலை தீர்ப்பு குறித்து இவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பு கேள்வியும் அதற்கான பதில்களையும் பாருங்கள்!
“சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூலம் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி குறித்து எழும் கருத்துகளில் முதன்மை வகிப்பது…
விடாப்பிடி சட்டப் போராட்டத்தின் வெற்றி
பொய்வழக்குக்குக் கிடைத்த தோல்வி
தொண்டர்களின் விசுவாசமான பிரார்த்தனை
ஒரு நடுநிலைமை பத்திரிகையின் அம்மா விசுவாசம் துளியூண்டு வெட்க மானமின்றி அம்மணமாக ஆடுவதற்கு இதை விட எடுப்பான சான்று ஏது?
“ஜெ. தண்டனை உறுதியானால் அடுத்தது என்ன?- டெல்லியில் தயார் நிலையில் வழக்கறிஞர்கள்” என்ற தீர்ப்புக்கு முந்தைய செய்தியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்துவிடம் ஆஜராகி பிணை வாங்குவதற்கு தயாராக இருந்த வழக்கறிஞர் படை பற்றிய அறிவிப்பு இருக்கிறது. ஆனால் இதே போன்று தீர்ப்பு ஜெயாவை விடுதலை செய்தால் கர்நாடக அரசு மற்றும் தி.மு.க தரப்பு என்ன செய்வார்கள் என்பது குறித்து எந்த செய்தியும் இல்லை.
“பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியே: வழக்கறிஞர் ஆச்சார்யா”………. இந்த செய்தியில் ஆனானப்பட்ட ஆச்சார்யாவே தீர்ப்பை வரவேற்றது போன்ற தோற்றத்தை தருகிறார்கள். “தீர்ப்பை முழுமையாக படித்து விட்டு எனது கருத்துக்களை சொல்வேன்” என்கிறார் ஆச்சார்யா. செய்தியின் கடைசியில் ஆச்சார்யாவுடன் நேர்காணல் குறித்த தலைப்பு: “ஒரு தலைபட்சமான விசாரணை, தீர்ப்பு: அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து” என்று இணைப்பு கொடுத்திருக்கிறார்கள். ஆச்சாரியா சொல்லும் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு குறித்து இந்து அறிவாளிகள் இந்த நாட்களில் எங்கேயும் எழுதவில்லை, விளக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
தீர்ப்பு குறித்து “தர்மத்துக்கும் நேர்மைக்கும் இறுதி வெற்றி: ஜெயலலிதா” என்று செய்தி போடுபவர்கள், “ஜெயலலிதா விடுதலை: கருணாநிதி கருத்து” என்று போடுகிறார்கள். அதாவது ஜெயலலிதா அறிக்கையில் தர்மம், நேர்மையைக் கொண்டு வந்தவர்கள், கருணாநிதியின் அறிக்கை தலைப்பில் எதையும் கொண்டு வரவில்லை. என்ன ஒரு நுட்பமான செய்தியாளர் வேலை! இத்தகைய தொழில் நேர்த்தியை மேல் மருவத்தூர் அருகே மனைகளை விற்கும் புரோக்கர்களிடமும் பார்க்கலாம் என்றாலும் மவுண்ட் ரோடு மஹா விஷ்ணுவின் டச் அற்பத்தனமானது.
“ஜெயலலிதா விடுதலை சாத்தியம் ஆனது எப்படி?- 919 பக்க தீர்ப்பில் புரிதலுக்கு உதவும் ‘எண்கள்’”
இந்தத் தலைப்பில் ஏதோ கணித மேதை போல தீர்ப்பில் உள்ள ஏகப்பட்ட எண்களின் முக்கியத்துவத்தை அல்ஜிப்ரா ஆச்சரியத்தோடு விளக்குகிறார்கள். ஆனால் ஓரோன் ஒண்ணு எனும் சாதா வாய்ப்பாட்டையே கோட்டை விட்டிருக்கிறார்கள் என்ற உண்மை வெளிவந்த பிறகே இந்த ராமானுஜ பில்டப்பின் சூட்சுமம் புரிகிறது.
“திருப்புமுனை தீர்ப்பின் முக்கிய விவரங்கள்” என்ற செய்தியில் நீதிபதி குன்ஹா செய்த “மாபெரும்” தவறுகளை நீதிபதி குமாரசாமி எப்படி ஷெர்லாக் ஹோம்ஸ் போல ஆய்வு செய்து கண்டுபிடித்தார் என்பதாக விவரங்களையும், எண்களையும் எடுத்து வைக்கிறார்கள். முக்கியமாக தீர்ப்பின் முக்கிய விவரங்கள் என்று போடுவதற்கு பதிலாக திருப்புமுனை தீர்ப்பு என்று போட்டிருப்பதன் பொருள் என்ன?
“சொத்து குவிப்பு வழக்கு: கடந்து வந்த பாதை” என்ற செய்தியில் 96-ம் ஆண்டில் சு.சாமி போட்ட வழக்கில் ஆரம்பத்தில் இருந்து, 2015- குமாரசாமி தீர்ப்பு வரைக்கும் ஆண்டு வாரியாக ‘முக்கிய’ நிகழ்வுகளை தொகுத்திருக்கிறார்கள். சரிங்க சார், அந்த முக்கிய நிகழ்வுகளில் வாய்தா ராணி வாய்தாவைப் பறித்த பல்வேறு போங்காட்டங்களில் ஒன்று கூடவா தெரியாது?
ஒருக்கால் நாளையே ஜெயா இல்லை மோடியோ தி இந்து அறிவாளிகளை இந்திய வரலாறோ இல்லை தமிழக வரலாறோ எழுத ஆணையிட்டால் எப்படி இருக்கும்? இட்டுக்கட்டி உருவாக்கும் வரலாற்று முயற்சிக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஒரு தொழிற்முறை போட்டியாளரை சந்திப்பது உறுதி.
இது போக அ.தி.மு.கவினரின் ஆட்டம் பாட்டம், படங்கள், அம்மா மீண்டும் முதல்வராவதற்கு தடையேதும் இல்லை, எங்கே போட்டியிடுகிறார் இன்னபிற விட்டைகளுக்கு குறைவில்லை. எல்லாம் அதே ஜால்ரா விட்டைதான் என்பதால் கூறியன கூறி கூறி கூறி உங்களை வெறுப்பேற்ற விரும்பவில்லை.
“ஜெ. வழக்கும்.. தீர்ப்பும்..: இணையத்தில் எதிரொலித்த வாசகர் கருத்துகள்” இந்தச் செய்தியில் இணையவாசிகள் கருத்து என்று ஆறு பேர் எழுதியதை போட்டிருக்கிறார்கள். அதில் நான்கு பேர் நேரடியாகவும், இரண்டு பேர் மறைமுகமாகவும் தீர்ப்பை ஆதரிக்கிறார்கள். ஐந்து பேர் நேரடியாக கருணாநிதி, தி.மு.க ஊழலை குறிப்பிட்டு எதிர்த்துவிட்டு ஜெயா மீதான தீர்ப்பை ஆதரிக்கிறார்கள். தீர்ப்பு குறித்து இணையத்தின் கருத்து இதுவென்றால் குமராசாமியின் கணக்கில் மட்டும் என்ன தவறு காண முடியும்?
“ஜெ. வழக்கும்.. தீர்ப்பும்..: பொதுமக்கள் கருத்து” இதில் ஐந்து பேர் ஜெயலலிதாவை ஆதரித்தும், ஒரு திருநங்கை மட்டும் ஜெயாவை எதிர்த்தும் கூறுகிறார்கள். ஆக இணையம் மட்டுமல்ல, மெய்யுலகத்திலும் அதேதான் என்று ‘நிறுவுகிறார்களாம்’. இதை உண்மையிலேயே கேட்டுத்தான் எழுதினார்கள் என்பதற்கு அந்த ஆறு பேர் படங்களை வெளியிட்டிருக்கிறார்கள். சரி,சரி, அமீர்கானின் சத்யமேவ ஜயதே நிகழ்ச்சியில் லைவாக வந்து அழுதுவிட்டு போகும் துணை நடிகர்களை நம்புவர்கள் தி இந்து சேகரித்துதான் மக்கள் கருத்து என்று நம்பமாட்டார்களா என்ன?
மே 12 வாக்கில் குமாரசாமியின் கூட்டல் சதி எல்லா வகைகளிலும் வெளியே வந்தாலும் தி இந்துவின் எந்த பொந்திலும் அது குறித்த நேரடி செய்தி இல்லை. ஆக்ஸ்போர்டிலும், ஹார்வர்டிலும் கல்வி பயின்ற கனவான்கள் அந்த தீர்ப்பின் கூட்டல் பக்கங்களை படித்து இதுதான் உண்மை என்று மூச்சு கூட விடவில்லை. மாறாக அதைச் சொன்ன எதிர்க்கட்சி தலைவர்களின் அறிக்கைகளை மட்டும் வேண்டா விருப்பாக அவ்வப்போது போட்டுக் கொண்டார்கள்.
கூடவே பா.ஜ.க மோடி, தமிழிசை பிற கட்சி தலைவர்கள், வேல் முருகன், சே.கு தமிரசன் போன்ற அடிமைகளின் வாழ்த்துக்களை முக்கிய செய்திகளாக வெளியிட்டார்கள்.
“மறுவருகை நல்லதாக அமையட்டும்!” என்று மே 13 தலையங்கம் தீட்டுகிறார்கள். அதில் எதிர்க்கட்சி தலைவர்களை வீழ்த்தி வென்ற ஜெயா வின் நல்லாட்சியை மாநிலமே எதிர்பார்த்து ஏங்கி நிற்பதாக எழுதுகிறார்கள்.
“அவர் பதவியில் இல்லாத காலகட்டத்தில் தமிழக நிர்வாகத்தில் பெரும் உறைநிலை ஏற்பட்டிருக்கிறது. எப்போதும் வளர்ச்சி ஓட்டத்தில் முன்வரிசையில் இருக்கும் தமிழகம், இப்போது பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் அவருடைய வருகைக்காகக் காத்திருக்கின்றன. அடுத்த ஆண்டு சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல் வரவிருக்கும் சூழலில், சுணங்கியிருக்கும் நிர்வாக வண்டியின் சுக்கானை இறுக்கிப் பிடித்து, அடித்து ஓட்டுவது எவருக்கும் சவாலான காரியம். ஆனால், ஜெயலலிதாவிடம் இப்போது மாநிலம் அதைத்தான் எதிர்பார்க்கிறது.”
ஆசிரியர் அசோகனின் அயோக்கியத்தனத்திற்கு சிறப்பான விளக்கம் ஏதும் தேவையா?
“ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் உட்பட பலரது மேல்முறையீட்டு வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா மீதான வழக்கில் விரைந்து தீர்ப்பு வெளியானது எப்படி என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் லில்லி தாமஸ் (82) கேள்வி எழுப்பியுள்ளார்.”
என்ற செய்தியை வெளியிட்ட தி இந்து அறிவாளிகளுக்கு மட்டும் அந்தக் கேள்வி ஏன் எழாது, நமக்குத் தெரியும். ஆனால் அதை மறைத்து விட்டு மாநிலமே மறு வருகைக்கு காத்திருக்கிறது என்று எழுதுவதற்கு உடல் முழுக்க கரைக்க முடியாத கொழுப்பு நிரம்பி வழிய வேண்டும்.
“இணையகளம்: ‘ஓபிஎஸ் அவர்கள் விடுதலை!’” மீண்டும் இணையத்தை வைத்து நகைச்சுவையாக காட்டுகிறார்களாம்.
இதில் ஓ.பி.எஸ்-ஐ கிண்டல் செய்யும் கருத்துக்கள் அல்லது அரசியலற்ற முறையில் இத்தீர்ப்பு குறித்து எழுதப்பட்ட கருத்துக்கள் அதில் அதிஷா, பாலபாரதி, மாலன், அராத்து என்று பலரையும் எடுத்துக் கொள்கிறார்கள். எதிர்த்து எழுதப்பட்ட ஓரிரண்டு கருத்துக்கள் கூட நேரடியாக புரியாத வண்ணம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இணையம் என்றால் அம்மா ஜால்ராதான் என்று சொல்வது தி இந்துவுக்கு ஓகே. உண்மையான இணைய மக்களுக்கு எப்படி?
“ஜெயலலிதா விடுதலை எதிரொலி: மெட்ரோ ரயில் விரைவில் தொடக்கம்?- அதிகாரிகள் நம்பிக்கை” என்ற செய்தியைப் பாருங்கள்! ஒருவேளை ஜெயலலிதா குற்றவாளி என்று மீண்டும் தீர்க்களிக்கப்பட்டால் மெட்ரோ ரயில் வரவே வராதா? ஜெயா விடுதலை ஆனால்தான் தமிழகத்தில் மெட்ரோ ரெயில் ஓடுமென்றால் அது கடுமையான விமரிசனத்திற்குரியதே அன்றி தி இந்து பார்வையின் படி அம்மா விடுதலையாகும் போதே ஒரு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார் என்று பொய்யுரைப்பதல்ல.
“மீண்டும் முதல்வர் பதவி: ‘நிதானம்’ காட்டுகிறாரா ஜெயலலிதா?” மே 14-ம் தேதி இந்த செய்தியை வெளியிடும் போது கூட்டல் பிரச்சினையில் போயஸ் தோட்டமே சோகத்தில் இருந்தது. அந்த சோகத்தையே ஜெயாவின் மதி நுட்பமாக மாற்றி எழுதுகிறார்கள். எதிர்க்கட்சியினருக்கு போகும் முன்னரே ஜெயா இந்த பிரச்சினையை கண்டு பிடித்து விட்டாராம். அதனால்தான் அவர் பால்கனியில் நின்று டாடா காட்டவில்லையாம். கர்நாடக அரசு மேல் முறையீடு செய்யுமா என்ற முடிவுக்கேற்பவே அவரது ராஜந்திர அசைவுகள் இருக்குமாம். இந்த செய்தி அச்சு நாளிதழில் அல்ல, இணையத்தில் மட்டும். இங்கேதான் முதன்முறையாக அந்த கூட்டல் அபத்தத்தை வரை படமாக போட்டிருக்கிறார்கள். இருப்பினும் ஜெயா கும்பலின் கொண்டாட்டத்தை கேலி செய்ய வேண்டிய செய்தியில் குமாரசாமியின் அபத்தத்தை அம்மா கண்டுபிடித்தார் என்று தத்துவஞானி போல காட்டுவதற்கு இவர்கள் தினசரி என்ன லேகியம் சாப்பிடுகிறார்கள் தெரியவில்லை.
ஊழலை மறைப்பதுதான் அறம் – தி இந்துவின் இலவச இணைப்பு ஆசிரியர் அரவிந்தன்
“அறம் சார்ந்த கனவு பலிக்குமா?” இந்தக் கட்டுரையின் தலைப்பே மிரட்டலாக உள்ளதா? தி இந்துவின் இலவச இணைப்புகளின் இன்சார்ஜ் ஸ்ரீமான் அரவிந்தன் என்பவர் எழுதிய நடுப்பக்க கட்டுரை இது. ஆர்.எஸ்.எஸ்-ல் தேசபக்தியையும், காலச்சுவடில் இலக்கியத்தையும் கண்டு கொண்டவர் தீர்ப்பு குறித்து என்ன சொல்கிறார்?
முதலில் ஓ.பன்னீரின் பரிதாபத்தை படிமாக்குகிறார். அது எந்த அளவுக்கு போகிறது என்றால் ராமனின் பாதுகையை வைத்து ஆட்சி புரிந்த பரதன்தான் ஓ.பி என்கிறார். இதைக் கம்பன் கேட்டிருந்தால் கதறக் கதற தீக்குளித்து செத்திருப்பான். அடுத்து இந்த வழக்கோடு ஜெயாவை குளோஸ் செய்து தமிழக அரசியலை மையம் கொள்ளலாம் என்று மனப்பால் குடித்த தலைவர்கள் மண்ணைக் கவ்வியதாக, ஏதோ அமர்த்யா சென் போல ஆய்வு செய்கிறாராம். அம்மாவை புகழணும் என்று ஆரம்பித்தாலே அது ஒரு ரத்தத்தின் ரத்தத்திற்கே இப்படித்தான் ஆரம்பிக்கும் என்று இந்த அறிவாளிக்கு தெரியவில்லை.
பிறகு தீர்ப்பு குறித்த கேள்விகள், கூட்டல் பிரச்சினைகள், குன்ஹா-குமாராசமி முரண்பாடு என்று விருப்பு வெறுப்பு இல்லாதது போல கவனமாக வார்த்தைகளை போட்டு என்னமோ கேள்விகள், வினாக்கள், கேள்விக்குறிகள் என்று தீட்டுகிறார். அய்யா சாமி இந்த விவகாரத்தில் உமது அபிப்ராயம் அல்லது மதிப்பீடு என்ன என்று விளக்கெண்ணெயில் மூழ்கி பார்த்தாலும் ஒன்றும் கண்டுபிடிக்க முடியாது.
கடைசியாக சட்டத்தின் விநோதமான சாத்தியக் கூறுகள் சார்ந்த பல கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்க வேண்டும் என்று கூறி இந்திய வெளியில் அறம், அறம் சார்ந்த கனவு, அதை இழக்க முடியாது, அறம்தான் நமது மீட்சிக்கு வழி என்று ஒருவாக்கியத்தில் ஏகப்பட்ட அறங்களை போட்டு ஜெயமோகனது கின்னஸ் சாதனையை (அதிகம் அறம் போட்டு எழுதுவதில்) முறியடிக்கிறார்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஜெயாவின் ஊழல் சொத்து, அவரை விடுதலை செய்த குமாரசாமி, உதவிய உச்சநீதிமன்றம் என்ற எளிய விசயத்தில் கம்பெனியின் எடிட்டோரியில் பாலிசியை அதாவது சொம்பு தூக்குவதை கலந்து எழுதுவதை இப்படி கண்றாவியாகவா செய்ய வேண்டும்?
அரவிந்தனே இப்படி படாதபாடுபடும் போது அவரைக் காப்பாற்ற தி இந்துவின் நடுபக்க மேனேஜர் சம்ஸ் அடுத்து ஆஜராகிறார்.
“இந்திய நீதித் துறையின் மிகப் பெரிய சாபக்கேடு அதன் தாமதம் என்றால், இந்திய நீதித் துறை மிகக் கடுமை காட்ட வேண்டியவர்கள் அல்லவா வாய்தாவாலாக்கள்? நீதித் துறைக்குச் சவால் விடும் வகையில், வாய்தாக்களால் வழக்கை இழுத்தடிப்பவர்களில் ஆகப் பெரும் பான்மையினர் செல்வாக்குள்ளவர்கள். ஆனால், அப்படி இழுத்தடிப்பவர்களின் வழக்குகளே தண்டனைத் தீர்ப்புக்குப் பின் சீக்கிரமாக மேல்முறையீட்டுக்கு எடுக்கப்படுகின்றன; தீர்க்கப்படுகின்றன. இங்கே நீதித் துறை சமூகத்துக்குக் கொடுக்கும் சமிக்ஞை என்ன?”
என்ன சமஸ் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் என்று அதிர்ச்சியாக இருக்கிறாதா? அவசரப்படாதீர்கள். பசி வந்து விட்டது என்பதற்காக ஆடுகள் வேட்டைக்கு கிளம்புவதில்லை. இந்த வார்த்தைகள் ஜெயாவின் வழக்கு குறித்து அல்ல. சல்மான்கான் வழக்கிற்காக திருவாளர் சம்ஸ் பொங்கியது.
சட்டமும், நீதியும் மேட்டுக் குடியினருக்குத்தான், சாமானியருக்கு அல்ல என்று சல்மான்கானையும், பேரறிவாளனையும் ஒப்பிட்டு பாதுகாப்பாக எழுதிய அண்ணன் சமஸ் ஜெயா வழக்கு குறித்து என்ன எழுதினார்?
பேனை பெருமாளாக்கும் நாங்கள் ஊழல் குற்றத்தை மக்கள் செல்வாக்காக மாற்ற மாட்டோமா? ஆசிரியர் அசோகனுடன் சமஸ்
“இனியாவது அரசியல் நடக்குமா?” என்று மே 16-ல் அவர் எழுதியிருப்பது சாராம்சத்தில் அரவிந்தன் எழுதியவையே! எடிட்டோரியல் பாலிஸி எனும் போது அதில் வடக்கு தெற்கு பேதம் மட்டுமல்ல, சுவாரசியமும் இல்லை என்பது சம்ஸ் எழுத்தில் சலங்கை கட்டி ஆடுகிறது.
என்றாலும் காவடி தூக்குவதில் ஒரிஜினல் பார்ப்பனர்களை விட புதுப்பார்ப்பனர்கள் தலை சிறந்தவர்கள் என்பதால் இங்கே சமஸ் நேரடியாகவே அம்மான்னா சும்மாவா என்று எகிறுகிறார்.
இதைப்பற்றி தனியாக எழுதவேண்டும் என்றாலும் சிற்சில. பாராளுமன்றத்தின் பணித்திறனில் மாற்றம் வந்திருக்கிறது என்று பூரிக்கும் சமஸ் (நில அபகரிப்பு சட்டத்தின் அமலாக்கம் போன்ற பணித்திறன்) மோடிக்கு ஜே போட்டு விட்டு தமிழகத்திற்கு திரும்புகிறார். இங்கே எதிர்க்கட்சிகள் எவையும் ஒரு தெருமுனைக்கூட்டம் கூட நடத்த வக்கற்று இருப்பதாக கேலி செய்கிறார்.
நீதிமன்றத்தில் மட்டுமல்ல மக்கள் மன்றத்திலும் ஜெயாவை வீழ்த்த முடியாது என்று ஒரு தேர்ந்த பூசாரி போல குறி சொல்கிறார். ஸ்ரீரங்கத்தில் ஒரு வாக்கிற்கு 5 அல்லது 10 ஆயிரங்கள் அள்ளிக் கொடுத்து பறித்த வெற்றி போல அடுத்த பொதுத்தேர்தலில் அம்மா பெறப்போகும் வெற்றியை எதிர்க்கட்சிகள் ஈட்ட முடியுமா என்று சவால் விடுகிறார்?
இதன் படி அம்மா மாதிரி அனைவரும் சுருட்டினால்தான் செலவழிக்க முடியும் என்பதை மறைப்பதற்கு கொள்கை, செல்வாக்கு, திறமை, நேர்மை என்று எழுதுவதை நிச்சயமாக உப்பு போட்டு தின்னும் ஒரு மனிதனால் முடியவே முடியாது. சமஸிற்கு முடிந்திருக்கிறது. வாழ்த்துக்கள்!
ஜெயாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் சாதனை என்ன? ஜெயா சசி கும்பல் இறக்கிய பல கோடி பணம், பல முன்னணி வழக்கறிஞர்கள், பா.ஜ.க மற்றும் நீதித்துறை கவனிப்புகள் என்று பச்சையான அயோக்கியத்தனத்தின் மூலமே பல்வேறு வாய்தாக்கள், வாதங்கள் என்று இறுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
ஆனால் இந்த வில்லத்தனத்தையே “சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: ஜெயலலிதாவின் விடுதலைக்கு வித்திட்டவர்கள்” என்று எழுதுவற்கு எவ்வளவு கற்பனை வளம் வேண்டும்?
இதை தொடராக இரா.வினோத் எனும் அடிப்பொடி அய்யாதான் எழுதுகிறார். இவர்தான் இந்த ஊழல் வழக்கின் இறுதி நாட்களை சுடச்சுட அனுப்பியவர். சூடு இருப்பதால் அது ஊசிப்போன கெட்டுப்போன உணவு எனும் உண்மையை மாற்ற முடியாது.
தினமணி வைத்தியுடன் தி இந்துவின் சமஸ் – ஜெயாவின் ஊடக பூசாரிகள்!
இந்த தொடரில் அ.தி.மு.க வக்கீல்கள் அங்கே எப்படி ஆண்டுக் கணக்கில் ஓட்டலில் தங்கி, வீட்டை பிரிந்து, எடுப்பு சாப்பாடு சாப்பிட்டு பயங்கரமாக வேலை செய்து இந்த வழக்கில் வெற்றி பெற்றார்கள் என்று கொஞ்சம் கூட வெட்கம் மானம் சூடு சுரணை இல்லாமல் எழுதுகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் சீ…………. என்று சொல்லிவிட்டு மேலே போகலாம்.
இன்னொரு கட்டுரையில் குமாரசாமியின் கூட்டல் தவறு உண்மை என்று வைத்துக் கொண்டாலும் மற்ற வாதங்கள், விவரங்களின் அடிப்படையில் பார்த்தாலும் ஜெயாவை விடுதலை செய்தது செல்லுமாம். இதை அறிந்த உடன்தான் எதிர்க்கட்சிகள் அடக்கி வாசிக்கின்றன என்று நம்பியாரே யோசித்திராத கோணத்தில் அடித்து விடுகிறார்கள்.
ஜெயா சசி கும்பல் தமிழகத்தை ஆண்டு ஊழல் செய்து சம்பாதித்து அதை சட்டப்பூர்வமாகவும் தவறு இல்லை என்று நிலை நாட்டியிருக்கிறார்கள் என்றால் அது அவர்களது தனிப்பட்ட சாதனை அல்ல.
நாட்டின் அனைத்துத் துறைகளும் இவர்களுக்கு சேவை செய்திருக்கின்றன. குமாரசாமி தீர்ப்பால் நீதித்துறை மட்டுமல்ல, தி இந்துவின் செய்திகளை தொகுத்து பார்க்கும் போது ஊடகத்துறையும் ஊழல் மயமாகிவிட்டதை எவரும் அறிய முடியும்.
அவுட்லுக் இதழ் துவங்கிய காலம் முதல் அதன் ஆசிரியாக நீண்டகாலம் செயல்பட்ட வினோத் மேத்தா மார்ச் 8-ம் தேதி காலமானார். அவுட்லுக் ஒரு கார்ப்பரேட் ஊடகம் என்றாலும் இந்தியா டுடே போன்ற அக்மார்க் கார்ப்பரேட் ஊடகங்களின் அறமற்ற பார்வையிலிருந்து சற்றே வேறுபட்டது. சரியாகச் சொன்னால் இந்த வேறுபாட்டின் அடிப்படை வினோத் மேத்தா என்பதே சரி.பரபரப்பான செய்திகள், நுகர்வுக் கலாச்சாரம், மசாலா சினிமா என்று அநேக விசயங்களில் அவுட்லுக்கும் மற்றுமொரு வணிக ஊடகம்தான். ஆனால் பல்வேறு தருணங்களில் அவ்விதழ் அரசியல் பிரச்சினைகளில் அதிகார மட்டங்களை கேள்வி கேட்டும், ஆளும் வர்க்கத்தின் அலை வரிசையிலிருந்து ஓரளவு விலகி நின்றும் பல கட்டுரைகளை வெளியிட்டிருக்கின்றது.
இந்துமதவெறிக்கு எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டு வரும் மையநீரோட்ட ஊடகங்களில் அவுட்லுக் முதன்மையானது. இன்று மோடியின் ஆட்சியிலும் கூட அத்தகைய பெருமையை அவுட்லுக் தக்கவைத்து வருகிறது. இதனால் இன்றும் அவ்விதழை இந்துமதவெறியர் மட்டுமல்ல அதன் வாசகர்களில் பலர் கூட எதிர்க்கின்றனர். வசைமாரி பொழிகின்றனர்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் இந்துமதவெறி எதிர்ப்பு சக்திகளுக்கு பெரும் ஊக்கசக்தியாக திகழும் அருந்ததி ராயின் கட்டுரைகள் பல அவுட்லுக்கில் வெளியாயின. இவற்றை வெளியிடும் தைரியம் வேறு எந்த ஆசிரியருக்கு இருக்கிறது என்றால் பதில் இல்லை. ஒருக்கால் இந்தக்கட்டுரையில் அருந்ததி ராய் கூறியிருப்பதைப் பார்க்கும் போது இன்றைய அவரது இடத்தை உருவாக்கிய பாதையில் அவுட்லுக்கின் பங்களிப்பும் இருக்கிறது.
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட போது, அதற்கு எதிரான அருந்ததி ராயின் ஆணித்தரமான கட்டுரையை அவுட்லுக் வெளியிட்டது. மாவோயிஸ்ட் தோழர் ஆசாத் பேச்சுவார்த்தைக்கு என்று அழைக்கப்பட்டு பின்னர் நயவஞ்சகமாக கொன்றழிக்கப்ப்பட்ட போது, அந்த போலி மோதல் கொலையை அம்பலப்படுத்தி அவுட்லுக் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது.
மிக சமீபத்தில் கூட பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா சம்பந்தப்பட்ட போலி மோதல் கொலைகள் பற்றிய விரிவான கட்டுரை அவுட்லுக்கில் இடம்பெற்றது. அந்தக் கட்டுரை பா.ஜ.க.வின் தலைவர் அமித்ஷா எப்பேர்பட்ட கிரிமினல் என்பதை ஒளிவுமறைவின்றி அம்பலப்படுத்தியது.
வினோத் மேத்தா முதலாளித்துவ ஜனநாயகத்தையே அதிகபட்ச சாத்தியமாக சரி என்பதாக ஏற்றுக் கொண்டவர். எனினும் சொல்லிக் கொள்ளப்பட்ட இந்த ஜனநாயகம் சந்தி சிரிக்கும் போது அவற்றை கேள்வி கேட்க அவர் தயங்கியதில்லை. இத்தகைய குறைந்தபட்ச நேர்மை கூட இன்றைய ஊடக ஜாம்பவான்கள் பலரிடம் இல்லை. இந்த அளவாவது அவரிடம் ஒரு சமூகப்பார்வை இருந்தது.
அவுட்லுக் இதழை தொடங்கிய போது தனது பத்திரிக்கையின் அரசியல் மைய இடதுசாரி (left of centre) நிலை என்று அறிவித்தார். ஆனால் அப்படி ஒதுங்க ஒரு இடம் இல்லை என்பது பிற்பாடு அருந்ததி ராய்-க்கு அவர் அளித்த ஊடக முக்கியத்துவம் உணர்த்தியது. தனது வாழ்வின் இறுதிக் காலத்தில் அவரது பார்வைக்கு எதிர்திசையிலான டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் கருத்து சொல்லி வந்தார். அர்னாபின் குறுக்கீடுகளுக்கு நடுவே இருமிக் கொண்டும், மூச்சிரைத்துக் கொண்டும் அவர் தெரிவித்த கருத்துக்கள் மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்தன. தற்செயலாக அவரது மறைவின் போது அதே அர்னாப்பை திரைகிழித்து அவுட்லுக்கில் ஒரு அட்டைப்படக் கட்டுரையே வெளிவந்தது.
அருந்ததி ராய் தனக்கும் வினோத் மேத்தாவுக்கும் இடையே இருந்த அரசியல் உறவையும், அழகிய நட்பையும் குறித்து எழுதிய நினைவஞ்சலியின் தமிழாக்கம் இது. அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டு இந்துத்துவம் மேலும் மேலும் தனது இருப்பை உறுதி செய்து வருகின்ற நேரத்தில் அதன் பேராபத்தை மக்களுக்கு இடைவிடாமல் நினைவுபடுத்திக் கொண்டிருந்த ஒரு சிறந்த ஊடகவியலாளரின் மரணம் குறித்த அருந்ததி ராயின் இந்த அஞ்சலிக் குறிப்பை படிக்கும் போது நமது இதயம் மேலும் கனக்கிறது.
– வினவு
நீரா ராடியா தொலைபேசி உரையாடல் பதிவுகளை அவுட்லுக்கில் வெளியிட்டு ஒரு நல்ல பத்திரிகை ஆசிரியர் செய்ய வேண்டியதை செய்தார், வினோத் மேத்தா. அதன் மூலம், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், ஊடக புரோக்கர்கள் மற்றும் அவர்களது கார்ப்பரேட் புரவலர்களுக்கு இடையேயான கூட்டுப்புணர்ச்சியின் இழிந்த டைரிக்குறிப்புகளை அம்பலப்படுத்தினார். அவ்வாறு, நாட்டை ஆளும் குற்றக் கும்பல் தங்கள் நலனுக்காக உருவாக்கி வைத்திருந்த மேட்டுக்குடி மன்றத்தின் விதிகளை மீறினார். அந்த நாடகம் முடிவுக்கு வந்து திரை விழுந்த போது, அதில் பங்கேற்ற பாத்திரங்களின் மேல் நோக்கிய உத்வேகத்தில் அது ஒரு சிறு அசௌகரியமான தேக்கமாக மட்டும் முடிந்தது என்பதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஆனால், அதற்காக வினோத் மேத்தா எதிர்கொண்ட பின்விளைவுகள் தீவிரமானவை. அவரது வாழ்வை வேகமாக முடித்து வைக்க அவையும் ஒரு பங்காற்றியிருந்தன என்பதில் எனக்கு ஐயமில்லை.
எப்படியோ அவர் சென்று விட்டார். அவரோடு தடுமாற்றமில்லாத, ஊகிக்க முடியாத, விசித்திரமான பத்திரிகை ஆசிரியரின் சகாப்தமும் போய் விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவரைப் போன்ற விசித்திரமான நபர்கள் யாரும் இனிமேல் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால், அப்படிப்பட்டவர்கள் செயல்படுவதற்கான வாய்ப்புகள் சுருங்கிப் போன ஒரு சூழலில் நாம் வாழ்கிறோம்.
சுதந்திரமான பத்திரிகை ஆசிரியர் என்ற கருத்தாக்கத்தின் மறைவு.
அவரது மறைவை ஒட்டி பெருமளவில் வெளியான இரங்கல் செய்திகள் பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்தன. அவர்களில் அவருடன் தொழில்ரீதியாக எதிர்துருவங்களாக இருந்தவர்களும் உண்டு. அவை அவரது மறைவுக்காக மட்டுமின்றி, அவரைப் போன்ற சுதந்திரமான பத்திரிகை ஆசிரியர் என்ற கருத்தாக்கத்தின் மறைவுக்கானதாகவும் இருந்தன.
ஒரு வகையில் வினோத் மேத்தா மாதிரியான கலகவாதிக்கு இடம் கொடுத்ததன் மூலம் அவுட்லுக் இதழின் உரிமையாளர்கள் தமக்குத் தாமே சிறப்பு சேர்த்துள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களது அலுவலகங்கள் பலமுறை தாக்கப்பட்ட போதும், பழிவாங்கும் வகையிலான சோதனைகளுக்குள்ளாக்கப்பட்ட போதும் அவர்கள் வினோத் மேத்தாவை விட்டுக் கொடுக்கவில்லை. வினோத்துக்கு இரங்கல் தெரிவிக்கின்ற நம்மைப் போன்றவர்களைப் பொறுத்தவரை, சுதந்திரமான பத்திரிகை ஆசிரியர்கள் எதிர்காலத்தில் தோன்றுவார்கள் என்ற நம்பிக்கையை விட்டு விட முடியவில்லை.
நான் வினோத்தின் இழப்பை மிகவும் அதிகமாக உணர்வேன். ஒரு எழுத்தாளராக எனது வாழ்க்கையில் மிகமுக்கிய பங்கை ஆற்றியவர் அவர்.
எங்களுக்கு எல்லா விஷயங்களிலும் ஒத்த கருத்து இருந்ததில்லைதான்; பல கருத்து வேறுபாடுகள் இருந்தன. காங்கிரஸ் குறித்து, காஷ்மீர் குறித்து (அது இல்லாமலா!), சாதிய அரசியல் குறித்து, வினோதமானதும் சமீபத்தில் மீள எழுதப்பட்டதுமான அவரது “மீனா குமாரியின் வாழ்க்கை வரலாறு” புத்தகம் என்று வேறுபடும் புள்ளிகள் நிறைய இருந்தன. ஆனால், இப்போதைய கருத்து வேறுபாடு நிரந்தரமானது; தீர்க்கமுடியாதது. அவர் போயிருக்கக் கூடாது என்கிறேன் நான்; இன்னும் கொஞ்ச காலம் அவர் நம்மோடு இருந்திருக்கலாம். ஆனால், அவர் நான் கருதுவதை ஏற்றுக் கொள்ளாமல் போயே விட்டிருக்கிறார். இது அபத்தமானது; அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.
என்னுடைய படைப்புகளுக்கும் வினோத் மேத்தாவுக்கும் என்ன தொடர்பு? மிக அதிகமான தொடர்பு இருக்கிறது என்பதே உண்மை.
1997-ல் என்னுடைய ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ வெளியான பிறகு, மேற்கத்திய ஊடகங்களுக்கு கிழக்கு உலகைப் பற்றி விளக்கிச் சொல்லும் முகவராக மாறிவிடும் அபாயத்தில் நான் இருந்தேன். அத்தகைய பங்களிப்பு செய்வதில் எனக்கு துளியும் விருப்பமில்லை. நான் என்ன எழுதினாலும், எந்த வகையான விவாதங்களுக்குள் சிக்கிக் கொள்வதாக இருந்தாலும், எந்த களேபரத்தில் ஈடுபட விரும்பினாலும் அதை இங்கே செய்ய விரும்பினேன். எந்த ஒரு தேசியப் பெருமிதத்துக்கான காரணத்தாலோ, இது என்னுடைய நாடு என்ற உணர்வாலோ இல்லை; நான் வாழும் இடம் இது என்ற எளிமையான காரணத்தால் மட்டுமே. வினோத் மேத்தா என்னுடைய இந்த முயற்சியின் கூட்டாளி ஆனார். 1998-க்கு பிறகு நான் எழுதிய அனைத்தும் முதலில் அவுட்லுக்கில் தான் வெளியாகின.
எங்கள் உறவின் மிகத் தொடக்கத்திலே, இதற்கு மாறாக பல கருத்துகள் சொல்லப்பட்டாலும் (அப்படி நிறைய உள்ளன), நாங்கள் யாரும் மற்றவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று புரிந்து கொண்டிருந்தோம். எந்த உறவிலும் இது அபூர்வமான, அழகான ஒன்று என்று கருதுகிறேன். நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றிய போதும், நீண்டகாலமாக ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவேயில்லை. தொலைபேசியில் மட்டுமே அதிகம் உரையாடி வந்தோம். நான் அவர் வீட்டுக்கு சென்றதே இல்லை. என்னை பார்க்க ஒரே ஒருமுறை மட்டும் சமீபத்தில் வந்தார்.
என்னைப் பார்க்க வந்தார் என்று சொல்வதைக் காட்டிலும் என் வீட்டை பார்வையிட வந்தார் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். நான் எப்படி வாழ்கிறேன் என்று தனது மனதில் உருவாக்கிக் கொண்ட சித்திரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வந்தது போன்று இருந்தது, அவரது வருகை. அலட்டிக் கொள்ளாமல் தனது முதுமையின் தடுமாற்றத்துடன் வந்தவர் ஒரு முறை சுற்றி பார்த்து விட்டு மறைந்து விட்டார். விருந்தினர் பாத்திரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவருக்கு தெரிந்திருக்கவில்லை; விருந்து உபச்சாரம் செய்யும் பாத்திரம் எனக்கும் பொருந்தவில்லை; நாங்கள் எந்த வகையிலும் அதற்கு பொருத்தமற்றவர்கள். எங்கள் இருவரிடையேயான சமூக உறவாடல் இந்த அளவுக்குத்தான் இருந்தது.
நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றிய போதும், நீண்டகாலமாக ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவேயில்லை. தொலைபேசியில் மட்டுமே அதிகம் உரையாடி வந்தோம்.
இருப்பினும், இந்த வினோதமான, உரையாடலற்ற, குறைந்தபட்சமான உறவுமுறையிலிருந்துதான் ஐந்து பகுதிகளாக வெளியிடப்படும் அளவிலான கட்டுரைகளும், நேர்முகங்களும் படைக்கப்பட்டன. அவை இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பல்வேறு மொழிகளில் செய்தித் தாள்களிலும், செய்தி இதழ்களிலும் வெளியிடப்பட்டன. இவற்றின் படைப்புக்கும் வினோத் மேத்தாவுக்கும் என்ன தொடர்பு? மிக அதிகமான தொடர்பு இருக்கிறது என்பதே உண்மை. கட்டுரைகளை நான்தான் எழுதினேன். ஆனால், “நான் என்ன எழுதினாலும், அதை வரையறுக்கப்பட்ட ஒரு இதழியல் வடிவத்துக்குள் மட்டுறுத்தாமல் வினோத் மேத்தா வெளியிடுவார்” என்ற நம்பிக்கைதான் எழுதுவதற்கான சுதந்திரத்தையும், வேகத்தையும் எனக்குக் கொடுத்தது. இது எளிதில் கிடைத்து விடுவது அல்ல. இப்போதும், எப்போதும் ஒரு வெகுஜன வாசகப்பரப்பை குறிவைக்கும் பெரிய வணிக இதழ், அவுட்லுக். அதன் பலம் அதுதான். இருப்பினும், என்னுடைய, மரபை மீறுகின்ற, மிக நீண்ட, எல்லோராலும் ஏற்றுக்கொள்ள இயலாத, பெரும்பாலும் புயலைக் கிளப்பும் கட்டுரைகளை பிரசுரிக்கும் தன்னம்பிக்கையும், நெகிழ்வுத் தன்மையும் வினோதிடம் இருந்தன.
இதற்கான விதிகள் ஆரம்பத்திலேயே வகுக்கப்பட்டு விட்டன. 1998-ல் நடத்தப்பட்ட அணுகுண்டு வெடிப்பு சோதனைக்கு எதிர்வினையாக நான் எழுதி அனுப்பிய ‘சிந்தனையின் முடிவு’ கட்டுரையில் “‘யார் இந்த நாசமாப் போன பிரதமர், அணுகுண்டுக்கான பொத்தானில் கை வைக்கும் உரிமையைப் பெற’” என்ற வரியைப் படித்து விட்டு, “இப்படி உண்மையிலேயே சொல்ல விரும்புகிறீர்களா? அல்லது அதை ‘யார் இந்தப் பிரதமர்?’ என்று மாற்றிக் கொள்ளவா?” என்று கேட்டார். “அப்படி மாற்றுவதில் எனக்கு ஒப்புதல் இல்லை” என்றேன், நான். எனவே ‘யார் இந்த நாசமாப் போன பிரதமர்?’ என்ற வாக்கியம் அப்படியே வெளிவந்தது.
இப்போது, உதவி கேட்க வேண்டியது என்னுடைய முறை. அந்தக் கட்டுரை வெளியாவதை ஒட்டி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட பாதையில் நடப்பதைப் போல உணர்ந்த நான், “இந்தக் கட்டுரை வெளியாகும் இதழின் அட்டையில் என்னுடய புகைப்படத்தை போடுவதை தவிர்க்க இயலுமா?” என்று வினோதிடம் கேட்டேன். “என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறேன்” என்றார் அவர். அவரது மொழியில் அதற்குப் பொருள், “அதுக்கு வேறு இடம் பார்த்துக்கோ”. இதழ் வெளியானபோது, அதன் அட்டையில் என் புகைப்படமும், அதன் மேல் கட்டுரையின் மிக விவகாரமான வரி கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டிருந்தது : “நான் பிரிந்து செல்கிறேன்”. அதன் பிறகு எல்லா வகையான கலாட்டாக்களும் அவிழ்த்து விடப்பட்டன.
இவைதான் எங்கள் உறவினுடைய எழுதாத சட்டங்கள். என்னுடைய கட்டுரை எதிலும் எனது சம்மதம் பெறாமல் சிறு மாற்றத்தைக் கூட வினோத் செய்ய மாட்டார். அதே போன்று, என்னுடையது அட்டைப்படக் கட்டுரையாக வருவதாக இருந்தாலும், அதன் உள்ளடக்கம் மற்றும் அட்டை வடிவமைப்பு பற்றி கருத்து சொல்வதை நான் தவிர்க்க வேண்டும். பதினைந்து வருடங்களுக்கு இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
அவரது இறுதிச் சடங்கின் போது, ஒரு கட்டத்தில் நிகழ்ந்த ஆச்சரியமான, சோகமான சூழலை என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த வினோதின் உயிரற்ற உடலின் நீளத்துக்கு, ஒரு புறம் எல்.கே அத்வானி, மறுபுறம் நான் நின்றிருந்தோம். அத்வானி ஒரு மலர் வளையத்தை அவர் காலடியில் வைத்துக் கொண்டிருந்தார். நான் வினோத்துக்கு என் மனதிலிருந்து பிரியாவிடை கொடுக்கும் (அல்லது கொடுக்க மறுக்கும்) முயற்சியில் போராடிக் கொண்டிருந்தேன். வினோத் எனக்கு எச்சரிக்கை விடுத்த ஒரே சந்தர்ப்பம் அப்போது என நினைவில் ஓடியது. அது 2006-ம் வருடம். “டிசம்பர் 13, 2001 அன்று நிகழ்ந்த பாராளுமன்றத் தாக்குதலில் ஆற்றிய பாத்திரத்துக்காக தண்டனை வழங்கப்பட்ட அப்சல் குரு இன்னும் சில நாட்களில் தூக்கிலடப்படலாம்” என்று பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருந்தன.
அந்த வழக்கு தொடர்பான நிகழ்வுகளை பல ஆண்டுகளாக தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்து, தொடர்பான சட்ட ஆவணங்கள் அனைத்தையும் படித்திருந்த எனக்கு அது கடும் அதிர்ச்சியளித்தது. அப்சல் குருவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆதாரங்களில் பெரும்பாலானவை மிகவும் பலவீனமானவை அல்லது புனையப்பட்டவை என்பதை அறிந்திருந்தேன். (அந்தத் தாக்குதல் போலி அடையாளத்துடன் நடத்தப்பட்டது என்று கூறுவதற்கு ஏராளமான காரணங்கள் இருந்தன.) அப்சல் தூக்கிலிடப்படுவது சில சங்கடமான கேள்விகளுக்கு ஒருபோதும் விடை கிடைக்காமல் செய்து விடும். எந்த நேரடியான ஆதாரமும் இல்லா விட்டாலும் ‘சமூகத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்துவதற்காக’ அப்சலுக்கு மரண தண்டனை விதிப்பதாக கூறி உச்சநீதிமன்றம் அதிர்ச்சியளித்தது.
அதே நேரத்தில், பா.ஜ.க தாக்குதல் நடந்த 2001-ல் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியின் தலைமையில் “தேஷ் அபி ஷர்மிந்தா ஹை, அப்சல் அபி பீ ஜிந்தா ஹை” (தேசத்துக்கு அவமானம், அப்சல் இன்னும் உயிரோடு இருப்பது) என்ற முழக்கத்தோடு ஒரு உரத்த பிரச்சாரத்தை நடத்தியது. “எனக்கு அவ்வளவு தெரிந்திருந்தும், அவற்றை எல்லாம் இப்போது வெளிப்படுத்தவில்லை என்றால் என்னை என்னாலேயே மன்னிக்க முடியாது” என்று தோன்றியது. வினோத்தை அழைத்து அது குறித்து நான் எழுதப் போவதாக கூறினேன். முதல் முறையாக, ஒரே தடவையும் அவர், ”அருந்ததி வேண்டாம். நிலைமை மிக மோசமாக உள்ளது. அவர்கள் நம் மீதே பாய்வார்கள். உனக்கு தீங்கு விளைவிப்பார்கள்” என்று சொன்னார்.
மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த வினோதின் உயிரற்ற உடலின் நீளத்துக்கு, ஒரு புறம் எல்.கே அத்வானி, மறுபுறம் நான் நின்றிருந்தோம் (படம் : நன்றி அவுட்லுக்)
“இது தொடர்பாக அமைதியாக இருக்கலாகாது” என்று அவரை ஏற்க வைக்க எனக்கு நீண்ட நேரம் ஆகவில்லை. “அவரது வாழ்க்கை இல்லாமல் போக வேண்டும்” என்ற தலைப்பில் நெடிய கட்டுரை ஒன்றை எழுதினேன். கட்டுரையின் தலைப்பு உச்சநீதிமன்றத் தீர்ப்பிலிருந்தே உருவப்பட்டது. அவுட்லுக் அட்டைப்படம், “அப்சலை தூக்கிலிடாதே என்று கொட்டை எழுத்துக்களில் முழங்கியது. உண்மையில் பா.ஜ.க. அல்ல காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசு தான் கோழைத்தனமாக, சட்டத்துக்கு புறம்பாக, அருவருப்பான முறையில் அப்சலை சில ஆண்டுகளுக்குப் பிறகு 2013-ல் தூக்கிலிட்டது.
அந்த இதழ் வெளிவந்த பிறகு மடை திறந்தாற் போன்ற வசைமழையில் அவுட்லுக் பல வாரங்கள் குளித்தது. ஆனால், இது எங்கள் ஒப்பந்த விதிகளின் இன்னொரு பகுதி. நான் எழுதியதை வினோத் வெளியிடுவார். பின்னர், அதற்கு எதிர்வினையாக கெட்ட வார்த்தைகளில் திட்டும் வாசகர் கடிதங்களால் பல வாரங்கள் இதழை நிறைப்பார். (வினோத்தின் உதவியாளராக 25 வருடங்கள் பணியாற்றிய சாஷி, 2008 மும்பை தாக்குதல்களுக்கு பிறகு அதைப் பற்றி நான் எதுவும் எழுதுவதற்கு முன்பே அவுட்லுக் இதழுக்கு வரத் துவங்கியிருந்த கோப எதிர்வினைகளை காட்டினார்). நானறிந்த வரையில் வேறெந்த பத்திரிகையும், தனது ஆசிரியரையும், விருந்தினர்களையும் நிந்திக்கும் கடிதங்களை அவ்வளவு மகிழ்ச்சியுடன் வெளியிடுவதில்லை. வினோத் அந்த கடிதங்களிலிருந்து முடிவற்ற கேளிக்கையை பெற்றுக் கொண்டிருந்தார். சில சமயம், தனக்கு பிடித்தமான கடிதங்களை எடுத்துக் கொண்டு என்னை தொலைபேசியில் அழைத்து வாய்விட்டு சிரித்துக் கொண்டிருப்பார். அப்சல் குரு தொடர்பான கடிதங்களில் அவருக்குப் பிடித்த கடிதம் இது தான். “அப்சல் குருவை விட்டுவிடுங்கள்; அருந்ததியை தூக்கிலிடுங்கள்”. சந்தேகத்திற்கிடமின்றி, அதை வெளியிடவும் செய்தார்.
ஆனால், இப்போது, எதிர்பாராத விதமாக, அத்வானியும், நானும் அவரது இறுதிச் சடங்கில் ஒன்றாக கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறோம். நான் ஆடிப் போயிருந்தேன். அத்வானியின் தரப்பில் பெருந்தன்மையையும், ஆனால் என் தரப்பில் அது சுத்தமாக இல்லாமலும் இருந்திருக்கலாம். எனக்கு தெரியவில்லை. இத்தகைய சூழலைப் பற்றி வினோத் என்ன நினைத்திருப்பார் என்று என்னால் கற்பனை செய்ய முடியவில்லை.
அவுட்லுக் இதழின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து வினோத் ஓய்வு பெறுவதற்கு முன்பாக, கடைசியாக அவுட்லுக் வெளியிட்ட எனது கட்டுரை “தோழர்களுடன் ஒரு நடைப்பயணம்”. பஸ்தரின் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் கொரில்லாக்களுடன் பல நாட்கள் நான் கழித்தது பற்றிய எனது அனுபவங்களை அதில் பதிவு செய்திருந்தேன். சமீபத்தில் மரணித்த பி.ஜி. வர்கீஸ் கூட அதற்கு எதிர்வினையாற்றி இருந்தார். வினோத் ஒரு அசாதாரண செயலாக பி.ஜி. வர்கீஸின் எதிர்வினைக்கு மாவோயிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் ஆசாத் என்றழைக்கப்படும் செருகுரி ராஜ்குமாரின் மறுமொழியை வெளியிட்டார். அப்படி செய்தது வினோதின் மிகவும் குறிப்பிடத்தகுந்த பணியாக இருந்தது. எவ்வளவு நிதானமாகவும், தர்க்கரீதியாகவும் ஆசாத் எழுதியிருந்தார் என்று வினோத் என்னிடம் மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் குறிப்பிட்டார். அந்த கட்டுரை வெளியாகும் போது ஆசாத் உயிருடன் இருக்கவில்லை. நாக்பூரில் சாதாரண உடையில் வந்த போலீஸ்காரர்களால் கடத்தப்பட்டு ஆந்திரா-சத்தீஸ்கர் எல்லையில், தண்டகாரண்யா காட்டுப் பகுதியில் வைத்து எந்த விசாரணையும் இன்றி சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
அவர் நோய் வாய்ப்படுவதற்கு முன்பாக கடைசியாக ஒருமுறை என்னை தொலைபேசியில் அழைத்தார். “கவனியுங்கள் அருந்ததி; நான் உங்களிடம் இதுவரை எதையும் கேட்டதில்லை; இப்போது கேட்கிறேன். சரியாக சொல்வதென்றால், நான் இதனை கோரிக்கையாக வைக்கவில்லை; செய்யும்படி கூறுகிறேன். என்னுடைய புதிய நூல் “கட்டவிழ்க்கப்பட்ட – பத்திரிகை ஆசிரியர்”-ஐ நீங்கள்தான் வெளியிட வேண்டும். இது போன்ற வேலைகளை செய்ய நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் இதைச் செய்தே ஆக வேண்டும்’ என்றார். நான் சிரித்து விட்டு ஒத்துக் கொண்டேன்.
சில நாட்கள் கழித்து மீண்டும் அழைத்தார். “ஆங்! நான் சொல்ல மறந்து விட்டேன். நம்முடன் மேடையில் இருக்கப் போகும் மற்றொரு விருந்தாளி அர்னாப் கோஸ்வாமி” என்று குறும்புடன் கூறினார். அர்னாபிடமும் இது தொடர்பான முழு விபரங்களையும் வினோத் சொல்லியிருக்க மாட்டர் என்று நினைக்கிறேன். அந்த கிழட்டு நரி எங்கள் இருவரையும் எதிரெதிராக விளையாடியிருக்கிறது.
நாங்கள் மூவரும் ஒரே மேடையில். அதை நினைத்துப் பார்க்கவே வேடிக்கையாக இருக்கிறது. இருந்த போதிலும், வினோத் மேத்தாவுக்காக நான் அதை செய்திருப்பேன்; மகிழ்ச்சியாகவே. ஆனால் அவரோ எங்கோ மறைந்து போய் விட்டார். அவர் போயிருக்கக் கூடாது. அவருடன் நான் பேச வேண்டியிருக்கிறது.
கருப்புப் பண விவகாரத்தில் மோடி அரசு அடித்த பல்டியை முட்டுக் கொடுக்க முன்வந்த துக்ளக் சோ, “இவ்விவகாரத்தில் முந்தைய காங்கிரசு அரசு கூறியதையெல்லாம் நம்பாமல், அக்கட்சிக்கு நாம் அநீதி இழைத்துவிட்டதாக”த் தனது ஏட்டில் தலையங்கமே எழுதி முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார். இதேபோல நரேந்திர மோடியின் ஊதுகுழல்களுள் ஒன்றான இந்தியா டுடே இதழ், 2ஜி, நிலக்கரி ஊழல்களையும், கருப்புப் பண விவகாரத்தையும் ஆர்வக்கோளாறின் காரணமாக ஊடகங்கள் ஊதிப்பெருக்கிவிட்டதாகக் குறிப்பிட்டு கட்டுரையொன்றை வெளியிட்டிருக்கிறது. பார்ப்பன-பாசிச கும்பல் தனது சுயநலனுக்காக எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் பேசும் தன்மையும் வரலாறும் கொண்டது என்பதற்கு இவை மற்றுமொரு ஆதாரமாக அமைந்துவிட்டன.
காங்கிரசு தலைமையில் நடந்துவந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கே.ஜி. எண்ணெய் வயல் முறைகேடு, ஏர்-இந்தியா ஊழல், டெல்லி விமான நிலைய ஊழல், 2ஜி முறைகேடு, நிலக்கரி வயல் முறைகேடு உள்ளிட்டுப் பல முறைகேடுகளும் ஊழல்களும் நடந்திருந்தபோதும், பார்ப்பன ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலும் 2ஜி அலைக்கற்றை முறைகேடை மட்டுமே உள்நோக்கத்தோடு உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டன. அலைக்கற்றை ஊழலை தி.மு.க.வைத் தாக்கித் தனிமைப்படுத்துவதற்குக் கிடைத்த ஆயுதமாகக் கண்ட அக்கும்பல், இதனை மற்ற ஊழல்களைவிடப் பிரம்மாண்டமானதாக ஊதிப் பெருக்கியது. அதனாலேயே, சி.ஏ.ஜி. அறிக்கையில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழப்பு குறித்து மூன்றுவிதமான மதிப்பீடுகள் சொல்லப்பட்டிருந்தாலும், 1.76 இலட்சம் கோடி ரூபாயை முன்வைத்துப் பிரச்சாரம் நடத்தியது.
மன்மோகன் சிங்கின் பரிசுத்த பிம்பத்தை உடைப்பதற்கு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளைக் கையில் எடுத்துக் கொண்ட பா.ஜ.க., இந்த ஒதுக்கீடு குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என மைய ஊழல் கண்காணிப்பு கமிஷனரிடம் புகார் கொடுத்தது. மேலும், மன்மோகன் சிங் அரசு பதவி விலக வேண்டும் என்றும் கோரி, தொடர்ந்து 13 நாட்களுக்கு நாடாளுமன்றத்தை முடக்கியது.
2ஜி ஊழலை ஊடகங்களை ஊதிப் பெருக்கி விட்டதாக ஒப்புக் கொண்டுள்ள இந்தியா டுடே குழுமத்தின் துணைத்தலைவர் சேகர் குப்தா : காலங்கடந்த ஞானோதயத்தின் காரணமென்னவோ?
2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப் பட்ட அத்வானி, கருப்புப் பண விவகாரத்தை முன்வைத்து இரத யாத்திரை நடத்தினார். அத்தேர்தல் சமயத்தில் பா.ஜ.க. சார்பாக அமைக்கப்பட்ட பொருளாதார வல்லுநர் குழு, இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் குறித்து அறிக்கையொன்றை தயாரித்து வெளியிட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தல்களின்பொழுது கருப்புப் பணத்தை மீட்கும் கதாநாயகனாக மோடி முன்னிறுத்தப்பட்டார். ஊழலுக்கு எதிராகவும் கருப்புப் பணத்தை மீட்பது தொடர்பாகவும் அவரும் பா.ஜ.க.வும் அடித்த பஞ்ச் டயலாக்குகள், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களைக்கூட கூச வைத்தன.
பா.ஜ.க. மற்றும் மோடியின் இந்த ஊழல் எதிர்ப்பு, கருப்புப் பண மீட்பு சவடால்களெல்லாம் ஓட்டுப் பொறுக்கும் சுயநல உள்நோக்கத்திற்கு அப்பாற்பட்டு, வேறு எதையும் சாதிக்காது எனப் புரட்சியாளர்களும் ஜனநாயக சக்திகளும் அம்பலப்படுத்தினாலும், மோடிக்காக கார்ப்பரேட் ஊடகங்கள் முனைந்து நடத்திய மிருகத்தனமான பிரச்சாரத்தின் மூலம் இவையெல்லாம் அமுக்கப்பட்டன.
எனினும், கார்ப்பரேட் ஊடகங்களால் மோடிக்குப் பூசப்பட்ட அரிதாரமெல்லாம் ஆறே மாதங்களில் கலைந்துபோனது. கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரசே கேலிபேசும் அளவிற்கு மோடி கும்பல் படுகேவலமான பல்டி அடித்திருக்கிறது. நிலக்கரிச் சுரங்க விவகாரமோ விநோதமான முடிவை எட்டிவிட்டது. வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட சுரங்கங்களையும் உள்ளிட்டு 214 சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த மறுநிமிடமே, அச்சுரங்கங்களை உடனடியாக மறுஏலம் நடத்தித் தனியாருக்கு கைமாற்றிவிடுவதற்கு ஏதுவாகப் புதிய சட்டமொன்றையே இயற்றிவிட்டது, மோடி அரசு. பா.ஜ.க. மட்டுமல்ல, 2ஜி, சுரங்க வயல் ஒதுக்கீடுகளில் நடந்த முறைகேடுகள் மற்றும் கருப்புப் பண விவகாரத்தை முன்வைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியைக் கிழிகிழியென கிழித்துவந்த ஊடகங்களும் தட்டைத் திருப்பிப் போட்டு தட்டத் தொடங்கிவிட்டன.
அன்னா ஹசாரே தலைமையில் நடத்தப்பட்ட ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தைத் தயாரித்து வழங்கியதில் ஆர்.எஸ்.எஸ்.-க்கு இணையான பங்கு கார்ப்பரேட் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கும் உண்டு. அந்த நாடகத்திற்கு மிகப்பெரும் விளம்பரத்தை அளித்த ஊடகங்களுள் ஒன்றான இந்தியா டுடே குழுமம், காங்கிரசு ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை ஆர்வக்கோளாறு காரணமாக ஊடகங்கள் மிகைப்படுத்திவிட்டதாக இப்பொழுது ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.-இன் அதிகாரபூர்வமற்ற பத்திரிகையாகச் செயல்பட்டுவரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முன்னாள் தலைமை ஆசிரியரும், இந்தியா டுடே குழுமத்தின் துணைத் தலைவருமான சேகர் குப்தா இந்த ஊழல்களை தற்பொழுது இப்படி மதிப்பீடு செய்கிறார்:
“2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.ஏ.ஜி. ரூ.57,000 கோடி முதல் ரூ.1.76 இலட்சம் கோடி வரை பல்வேறு எண்ணிக்கையை, ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பாகக் குறிப்பிட்டபோது, எல்லோரும் அதிகபட்ச தொகையைத் தேர்வு செய்தனர். மீடியா இதிலிருந்து கொஞ்சம் விடுபடத் தொடங்கிவிட்டது.” (இந்தியாடுடே, நவ.12)
ஆ.ராசா பதவி விலகிய பிறகு நடந்த அலைக்கற்றை ஏலங்களின் மூலம் அரசுக்குக் கிடைத்த வருமானமே, மீடியாக்கள் அலைக்கற்றை ஊழல் குறித்து உருவாக்கி வைத்திருந்த 1.76 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு என்ற அனுமான பூதத்தை அடித்து நொறுக்கிவிட்டது. ஆனாலும், ஊடகங்கள் தங்களது குட்டு உடைந்து போனதை கமுக்கமாக மூடிமறைத்ததோடு, 2ஜி ஒதுக்கீடில் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டதைப் போலவே நாடாளுமன்றத் தேர்தல்கள் முடியும் வரை பிரச்சாரம் செய்துவிட்டு, இப்பொழுது யோக்கியவானைப் போல, “2007-ல் ரூ.1.76 இலட்சம் கோடி என்பது ஜிடிபியில் 4.4 சதவீதம். சிறிய அளவு ஸ்பெக்ட்ரம்மின் மதிப்பு இந்த அளவுக்கு இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள்” என எழுதுகின்றன.
இந்தியா டுடேயின் இந்த திடீர் ஞானோதயம் 2ஜி-யோடு மட்டும் நின்றுவிடவில்லை. நிலக்கரியும் நல்ல உதாரணம். “2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் போட்டிகள் மற்றும் இதர விசயங்களில் நடந்தது போல நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிலும் ஐ.மு.கூ. அரசில் ஊழல் இருந்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு ஒதுக்கீடும் முறைகேடானதா? மீண்டும் கொஞ்சம் பூஜ்யங்களைச் சேர்த்துக் கொள்வதால் என்ன தப்பு என்பது போல சி.ஏ.ஜி. சொன்ன சில இலட்சம் கோடி தொகை கற்பனையானதா? தே.ஜ.கூ., குறிப்பாக பா.ஜ.க. அதிகபட்ச தொகையைத் தேர்வு செய்தது. இதன் விளைவாக, நிலக்கரி வயல் ஒதுக்கீடு வழக்கில் 1993 முதல் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படுவதைச் செய்வதறியாமல் பார்த்துக் கொண்டிருந்தது” என பிலாக்கணம் பாடுகிறார், சேகர் குப்தா.(இந்தியா டுடே, நவ.12)
ஊழல் விவகாரம் போலவே கருப்புப் பண விவகாரமும் மிகைப்படுத்தப்பட்டதாக ஒப்புக் கொண்டுள்ள சேகர் குப்தா, “கருப்புப் பணம் தொடர்பான எண்ணிக்கையை நடைமுறை சாத்தியம் எனும் சோதனைக்கு (யாரும்) உட்படுத்தவில்லை. இது ஜிடிபியைவிட பல மடங்கு அதிகமானது என்றும், சுவிஸ் வங்கியில் இவை முடங்கிக் கிடக்கிறது என்றும் பாபா ராம்தேவ் மட்டுமே கூறமுடியும். இதைத் தனது தேர்தல் பிரச்சாரத்தின் மையமாக்குவதற்கு முன்பாக, ஆட்சிக்கு வரும் வாப்பு உண்மையில் இருக்கிறது என்றும், இது உருவாக்கிய பூதத்தை சமாளித்தாக வேண்டிய நிலை ஏற்படும் என்றும்நினைவில் கொள்ள யாரேனும் பா.ஜ.க.விற்கு அறிவுறுத்தியிருக்கலாம். உங்கள் சொந்த கற்பனையில் சிக்கித் தவிப்பதைவிட தர்மசங்கடமானது வேறில்லை” என அடக்கி எழுதுகிறார்.
கருப்புப் பண விவகாரத்தில் சேகர் குப்தாவைவிட துக்ளக் சோவின் மழுப்பல்கள், மோடியின் ‘தர்மசங்கடத்தை’ நமக்கு இன்னும் தெளிவாக விளங்க வைக்கின்றன.
“கருப்புப் பணத்தை அயல்நாட்டு வங்கிகளில் வைத்திருப்போரின் பட்டியலை மத்திய காங்கிரஸ் அரசு பெற்றும்கூட, அதை வெளியிடாமல் இருந்ததற்குச் சில காரணங்களை அந்த அரசு கூறியது. அவை பொய்கள் என்று தீர்மானித்து, அந்த அடிப்படையில் அப்போது மத்திய அரசை விமர்சனம் செய்தவர்களில் நாமும் அடங்குகிறோம்.
“கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரசு மீது வீணாகச் சந்தேகப்பட்டு, அதற்கு அநீதி இழைத்து விட்டோம்” எனக் கூறி பா.ஜ.க.வின் பல்டியை நியாயப்படுத்துகிறார், துக்ளக் சோ
இப்போது அந்தக் காரணங்களில் சிலவற்றை பா.ஜ.க. அரசும் கூறுகிறபோது – இன்றைய சூழ்நிலையில் நமக்கு அந்தக் காரணங்களை ஏற்கத் தோன்றுகிறது. காங்கிரஸ் சரியாக விளக்காததாலோ, விவரங்கள் சரியாக வெளியாகாததாலோ, காங்கிரஸ் கூறுகிற எதுவுமே நிஜமாக இருக்காது என்ற நமது சந்தேகத்தினாலோ – அன்று காங்கிரஸ் கூறிய காரணங்களை நாம் நிராகரித்தோம். அந்தப் பட்டியலில் காங்கிரஸுக்கு வேண்டியவர்கள் – காங்கிரஸ்காரர்களேகூட – இருக்கலாம்; ஆனால் அதனுடன் கூடவே அயல்நாட்டு ஒப்பந்தங்கள் என்ற சிக்கலும் இருந்திருக்கிறது. அதைக் காங்கிரஸ் கூறுகிற நொண்டிச் சாக்காக நினைத்து ஒதுக்கியது நமது தவறு; நம்மால் காங்கிரஸுக்கும், அன்றைய மத்திய அரசுக்கும் இழைக்கப்பட்ட அநீதி அது.”
(துக்ளக், 12.11.2014)
“காங்கிரசு சரியாக விளக்கவில்லையாம், விவரங்கள் சரியாக வெளியாகவில்லையாம்” – ராமஸ்வாமி அய்யர் எப்படியெல்லாம் நாக்கூசாமல் பொய் சொல்கிறார் பாருங்கள். கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரசுக்கு இழைக்கப்பட்ட அநீதி கிடக்கட்டும். இதில் மக்களுக்குச் சாத்தப்பட்ட பட்டை நாமத்தைப் பற்றியல்லவா யோக்கியவான் சோ ராமஸ்வாமி பேசியிருக்க வேண்டும்; மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும். மாறாக, கருப்புப் பண விவகாரத்தில் இரட்டை வரி விதிப்பு போன்ற நடைமுறை ‘சிக்கல்கள் ’ இருப்பது இப்பொழுதுதான் தெரியவந்தது போல நடிக்கிறார்கள்.
முன்னாள் தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராய்தான், 2ஜி விவகாரம் குறித்து பேட்டிகள் அளித்து, அதனை பா.ஜ.க.விற்கும் ஊடகங்களுக்கும் பெருந்தீனியாகக் கொடுத்தார். இதற்குக் கைமாறாக பா.ஜ.க.வும் ஊடகங்களும் விநோத் ராயை ஊழலை ஒழிக்க வந்த ஹீரோவாகத் தூக்கி வைத்துக் கொண்டாடின. அப்படிபட்ட ஊடக வெளிச்சத்தில் மிதந்த விநோத் ராய், “தணிக்கை துறை பல முறைகேடுகள் குறித்து அறிக்கை அளித்திருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள்தான் திட்டமிட்ட நோக்கத்தோடு ஒன்றிரண்டை மட்டும் எடுத்துக்கொண்டு பெரிதுபடுத்துகின்றன” என சம்பந்தமில்லாத மூன்றாவது நபர் போல இப்பொழுது 2ஜி குறித்து கருத்துத் தெரிவிக்கிறார். (என்.டி.டிவி பேட்டி)
2ஜி ஒதுக்கீட்டு விவகாரத்தில் மன்மோகன் சிங்கை ஆ.ராசா ஏமாற்றி விட்டதைப் போல அவதூறு செய்து ஊடகங்கள் வெளியிட்ட கேலிச்சித்திரப் படத்தின் ஒரு வகை மாதிரி.
நிதியமைச்சர் நாற்காலியைப் பிடித்துவிட்ட அருண் ஜேட்லி, “கணக்கு தணிக்கை அதிகாரிகள் கணக்குகளை மட்டுமே தணிக்கை செய்ய வேண்டும். அவை பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளிவர வேண்டும் என்பதற்கு முயற்சிக்கக் கூடாது” என இப்பொழுது எச்சரிக்கிறார். (துக்ளக், 19.11.2014)
இந்தப் பித்தலாட்டத்தனங்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “நாம் ஆட்சிக்கு வந்தால் இந்தப் பிரச்சினையில் என்ன அணுகுமுறையைக் கையாள்வோம் என யோசித்துவைத்துக் கொண்டா ஒரு எதிர்க்கட்சி செயல்படுகிறது. இது எல்லா ஜனநாயக நாடுகளிலும் நடக்கிற தமாஷ்தான்” எனப் பதில் அளிக்கிறார், துக்ளக் சோ. (துக்ளக், 19.11.2014)
“அரசியலில் ஓரளவு மிகைப்படுத்தலை, அதிலும் குறிப்பாக தேர்தல் நேரத்தில் இந்தச் செயலை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இவை நினைத்துப் பார்க்க முடியாத அளவை அடையும்போதுதான் சிக்கல் வருகிறது” எனத் தந்திரமாக எழுதி, ஊடகங்களையும் பா.ஜ.க.வையும் விடுவிக்க முயலுகிறார், சேகர் குப்தா. (இந்தியா டுடே, நவ.12)
முன்பு தாங்கள் சொன்னவற்றுக்கு, நடந்து கொண்டதற்குப் பொறுப்பெடுத்துக் கொள்ளாமல், அதனைத் தமாஷாகப் பார்க்க வேண்டும் என அத்துவிட்டுப் பேசுவதற்கு எத்துணை கொழுப்பு இருக்க வேண்டும்! இப்படிபட்ட இரட்டை நாக்கு கொண்ட பார்ப்பனக் கும்பல், தம்மை தார்மீகப் பொறுப்பின் காவலனாகச் சித்திரித்துக்கொண்டு ஊருக்கு உபதேசம் செய்வதுதான் உண்மையிலேயே தமாஷானது. ஆட்சியைப் பிடித்த பிறகு ஊழல், கருப்புப் பணம் என்பனவற்றையெல்லாம் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமுமில்லை. கார்ப்பரேட் முதலாளி வர்க்கமும் அதனை விரும்பப் போவதில்லை என்பதால்தான் சோவும், சேகர் குப்தாவும் அவை குறித்து புதிய பொழிப்புரையை எழுதுகிறார்கள். ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்கவந்த மாவீரனைப் போலக் காட்டப்பட்ட மோடியும், அவரது பரிவாரங்களும் அடிப்படையிலேயே நாணயமற்றவர்கள்; இரட்டை நாக்குப் பேர்வழிகள் என்பதுதான் இந்தப் பொழிப்புரையிலிருந்து ஓட்டுப்போட்ட பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டிய விடயமாகும்.