Home Blog Page 9

‘முர்டோச் மயமாக்கப்படும்’ இந்திய ஊடகங்கள்!

கடந்த இரண்டு பத்தாண்டுகளில் இந்தியாவின் ‘ஊடகப்பரப்பு’ பிரம்மாண்டமான மாறுதல்களைப் பார்த்திருக்கிறது. ஊடகப் பரப்பு என்பது அமெரிக்காவில் வசிக்கும் அர்ஜூன் அப்பாதுரை என்ற இந்திய ஆராய்ச்சியாளரால் முதலில் பயன்படுத்தப்பட்டது. காட்சி ஊடகங்கள் உலகில் எப்படிப்பட்ட தாக்கம் செலுத்துகின்றன என்பதையும், உலகளாவிய பண்பாட்டுப் பாய்ச்சல்களில் பொதுஊடகங்களின் பங்கையும் விவரிக்கவும் பொருத்தவும் பயன்படுத்தப்பட்டது. உலகின் மிகப்பெரிய மக்களாட்சியை வலிமைப்படுத்துவதற்கு ஊடகங்களில் பெரும்பகுதியினர் ஆற்றி வரும் பங்கு பாரட்டப்பட வேண்டிய அதே நேரத்தில் சில செய்தித் தாள்கள், தொலைக்காட்சி ஓடைகள், இணையத் தளங்கள் செயல்படும் முறைகளில் பல மோசமான போக்குகளையும் பார்க்க முடிகிறது. இவற்றில் “பணத்துக்கு செய்தி”யும் பிற வெளிப்படையான வணிகப் போக்குகளும் அடங்கும்.

1990களில் இந்திய பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்ட பிறகு புதிய தகவல் தொழில்நுட்பங்களும் விளம்பரதாரர்களுக்கு ஆதாயம் கொடுக்கும் இலக்காக மாறிய வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தின் நுகர்வுக் கலாச்சரமும் ஊடகங்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வளரச்சியடைய வழிவகுத்தன.

உலகின் எந்த நாட்டுடனும் ஒப்பிடும் போது இந்தியாவின் செய்தித் தாள்கள்/பத்திரிகைகள் மிக அதிகமாக இருக்கின்றன. இந்திய செய்தித் தாள்கள் பதிவாளர் அலுவலகத்தில் தற்போது 60,000க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தி எகனாமிஸ்ட் தகவலின் படி, இந்தியா இப்போது உலகின் அதிவேகமாக வளரும், மிகப்பெரிய செய்தித் தாள்களின் சந்தையாக இருக்கிறது. விலைக்கு விற்கப்படும் பிரதிகளின் எண்ணிக்கையில் சீனாவை முந்தி 11 கோடி பிரதிகள் தின விற்பனையைக் கொண்டிருக்கிறது.

முர்டோச்சின் ஊடக ஏகபோகம். நன்றி – கார்டியன்

தொலைக்காட்சி ஓடைகளின் எண்ணிக்கை வளர்ச்சி பல மடங்காக அதிகரித்திருக்கிறது. 1991ல் ஒரே ஒரு பொதுத்துறை ஒளிபரப்பாளராக தூர்தர்ஷன் இருந்தது. இப்போது 600க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி ஓடைகளுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் நாட்டிலிருந்து ஒளிபரப்ப அனுமதி வழங்கியிருகிகறது. பண்பலை வரிசையில் ஒலிபரப்பும் வானொலி நிலையங்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது. இப்போது இருக்கும் 250க்கும் அதிகமான பண்பலை வானொலிகளின் எண்ணிக்கை இன்னும் 5 ஆண்டுகளில் 1,200 ஆக உயரும். இந்திய பயனாளர்களுக்கென இயங்கும் இணைய தளங்களின் எண்ணிக்கையை யாரும் கணிக்கவில்லை.

ஆனால், எண்ணிக்கை அதிகரிப்பு தர அதிகரிப்பாக மாறவில்லை. முதலாளித்துவ அமைப்பின் பாரம்பரிய நம்பிக்கைகளுக்கு விரோதமாக, ஊடகத் துறையில் அதிகரித்த போட்டி வெளிப்படையாக தரக் குறைவுக்கு வழிவகுத்திருக்கிறது. பார்வையாளர்களைக் கைப்பற்றும் போட்டியின் கூடவே உள்ளடக்கத்தை ‘சிறுமைப்படுத்தும்’ போக்கு வளர்ந்தது. தொலைக்காட்சி ஓடைகள் மிகவும் பொருத்தமற்ற, பிழை மலிந்த தொலைக்காட்சி மதிப்பெண் புள்ளி (TRP) யின் மூலம் பார்வையாளர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் முறைக்கு அடிமைகளாகிப் போனார்கள். 1991ஆம் ஆண்டில் வெளிநாட்டு மூலதனத்தை பெறும் விதிமுறைகள் மாற்றப்பட்ட பிறகு முதலில் இந்தியச் சந்தைக்குள் நுழைந்த பன்னாட்டு ஊடக நிறுவனங்களின் முதல் வரிசையில் இருந்தது பல ஆண்டுகளாக இந்திய சந்தையில் கண் வைத்துக் கொண்டிருந்த ரூபர்ட் முர்டோச்சின் ஸ்டார் (சாட்டிலைட் டெலிவிஷன் ஆசிய மண்டலம்) குழுமமும் ஒன்றாக இருந்ததில் வியப்பு ஏதும் இல்லை.

முர்டோக் நிலவரங்களை தெளிவாக புரிந்து கொண்டவர். அவரது இந்திய பேரரசு இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு மற்றும் வினியோகத்திலிருந்து செய்தி, பதிப்பித்தல் மற்றும் திரைப்படம் வரை பரந்திருக்கிறது. ஸ்டார் இந்தியா குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய (வருமான அடிப்படையில்) ஊடக பெருநிறுனங்களில் ஒன்றாக விளங்குகிறது. அது 8 மொழிகளில் செயல்படும் 32 ஓடைகளில் இருப்பதில் அதிகமான பார்வையாளர்களைக் (வாரத்துக்கு 17 கோடி பார்வையாளர்கள்) கொண்டிருப்பதாக சொல்கிறது. இந்த ஓடைகள் ஸ்டார் பிளஸ், ஸ்டார் ஒன், ஸ்டார் கோல்ட், சேனல் வி, ஸ்டார் ஜல்சா, ஸ்டார் ப்ரவாஸ், ஸ்டார் வேர்ல்ட், ஸ்டார் மூவிஸ், ஸ்டார் உத்சவ் மற்றும் கூட்டு நிறுவனங்களாக ஏசியாநெட், ஸ்கை நியூஸ், FX, பாக்ஸ் கிரைம், ஸ்டார் விஜய், ஸ்டார் நியூஸ், ஈஎஸ்பிஎன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் பிற. ஸ்டார் குழுமம் டாடா குழுமத்துடன் கூட்டு வைத்து ‘நேராக-வீட்டுக்கு’ என்ற டிடிஎச் வினியோக சேவையையும் வழங்கி வருகிறது.

இந்திய செயல்பாடுகள்

“யார் மில்லியனர் ஆக விரும்புகிறீர்கள்” என்ற பிரிட்டிஷ் நிகழ்ச்சியின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு புகழ் பெற்ற “யார் கோடீஸ்வரன் ஆவார்” என்ற விளையாட்டு நிகழ்ச்சியை, தான் ஸ்டார் பிளஸ் சேனலில் நடத்த முடிவு செய்திருப்பதாக 2005ம் ஆண்டு புது தில்லியில் பத்திரிகையாளர்களுக்கு அறிவிக்கிறார், திரைப்பட நடிகர் ஷாருக்கான்.

நியூஸ் கார்ப் நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகள் “அடுத்த தலைமுறை” வாய்ப்பு என்று முர்டோச்சினாலேயே குறிப்பிடப்பட்டது. முர்டோச்சின் இந்திய முயற்சிகளின் வெற்றி கெட்டிக்காரத்தனமான வணிக மற்றும் மேற்கத்திய முறைகளை உள்ளூர் அணுகுமுறையுடன் செயல்படுத்தியதை நம்பியிருக்கிறது. அவர்தான் இந்தியாவின் முதன் முதலில் ஒரு இசைத் தொலைக்காட்சி (சேனல் வி), ஒரு 24×7 செய்தி தொலைக்காட்சி (ஸ்டார் நியூஸ்), பன்னாட்டு விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றின் வெற்றிகரமான இந்திய வடிவம் (“கோடீஸ்வரன் ஆகப்போவது யார்”, இங்கிலாந்தின் “மில்லியனர் ஆக விரும்புவது யார்” என்ற நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.) ஆகியவற்றை உருவாக்கியவர். வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக் கழகத்தில் பன்னாட்டு தகவல் தொடர்பு துறை பேராசிரியாராக இருக்கும் தயா கிஷன், ‘முர்டோக்மயமாக்கப்படும்’ இந்திய ஊடகம் என்பதை “ஊடக வலிமை பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து வினியோக அமைப்புகளையும், உலகளாவிய நிகழ்ச்சி தயாரிப்பு பின்னல்களையும் கட்டுக்குள் வைத்திருக்கும் பன்னாட்டு, பல்ஊடக தனியார் பெருநிறுவனங்கள் கைக்குப் போவதாக” வரையறுக்கிறார்.

பெரு நிறுவன குழுமங்களின் கையில் ஊடக உடைமை குவிதல்; விளம்பர வருமானத்தை நம்பி இருப்பதால் மதிப்பீடுகளுக்காக அதிகரித்துக் கொண்டே போகும் போட்டி; அடிக்கடி தெளிவற்று வரையறுக்கப்பட்ட “உடனடி செய்தி” மீதான மிகையான சார்புநிலை; “எக்ஸ்குளூசிவ்” என்று அழைக்கப்படும் நிகழ்ச்சிகள், “எதுவாயிருந்தாலும் சரி” என்ற செயல்உத்தி; வசதிபடைத்த நடுத்தர மக்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளுக்கு மட்டும் இடம் கொடுத்தல் (விளம்பரதாரர்களுக்கு அதிக ஆதாயம் தரும் பிரிவினர்); செய்தி உள்ளடக்கத்தைக் கவர்ச்சி மயமாக்குதல், மீச்சிறு பொது அறிவு நிலைக்கு பொருந்தும்படி செய்தி அளித்தல்; விற்பனை பிரிவுக்கும் ஆசிரியர் பிரிவுக்கும் இடையிலான நெருக்கமான பொருத்தமற்ற உறவு; செய்தியை விலைபொருளாக மாற்றுவது: இவை அனைத்துமே இந்திய ஊடகத்துறையின் பெரும்பகுதிகளில் காணக் கிடைக்கும் முர்டோச் மயமாக்கலின் வெளிப்பாடுகள்.

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் முதல் டேப்ளாய்டுகளில் ஒன்றான த ஹெரால்டு செய்தித்தாளைத் தொடங்கிய ஜேம்ஸ் பென்னட் எனபவர், “கற்பிப்பதற்காக இல்லை, திடுக்கிட வைப்பதற்காகத்தான் செய்தித் தாள்கள்” என்று சொல்லியிருந்தார். துஸ்சு மற்றும் பிறரின் கருத்துப்படி, ஸ்டார் குழுமத்தின் ஓடைகள் பரபரப்பானதாகவும், நகர, மேற்கத்திய, நுகர்வுக் கலச்சாரத்தைத் தூக்கிப் பிடிப்பதாகவும் இருக்கும் நிகழ்ச்சிகளை உருவாக்குவதில் முன்னணி வகித்தன. குறிப்பாக பாலியல் உள்ளடக்கத்தையும் பிரபலங்களை துதி பாடும் கலாச்சாரத்தையும் இந்தியர்களைப் பிடித்து ஆட்டுவதாகச் சொல்லப்படும் மூன்று Cகளான குற்றம், கிரிக்கெட், திரைப்படம் இவற்றையும் குறி வைத்தார்கள். கூடவே, இந்தியாவின் பெரும்பாலான செய்தித்தாள்கள் வெளிப்படையான பக்கசார்புடன் செயல்படுகின்றன. முர்டோச் நடத்தும் பாக்ஸ் நியூஸ் மற்றும் பிற நியூஸ் கார்ப் ஊடக அமைப்புகளைப் போன்றே வெளிப்படையாக அடாவடியான நிலைப்பாடுகளை எடுக்கின்றன.

ஸ்டார் செய்தி நிகழ்ச்சி “சன்சனி” (இந்தியில் பரபரப்பு என்று பொருள்) நகரக் குற்றங்கள், பாலியல் வன்முறை, கொலை போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. அதே போன்று “ரெட் அலெர்ட்” என்ற நிகழ்ச்சி, குற்றங்களை காவல் துறை கையாளுவதைப் பற்றி டேப்ளாய்டுகளின் பாணியில் உண்மை விபரங்களை பின்தள்ளி பேசுகின்றது. செய்திகளை நாடகத்தனமாகவும் பரபரப்பாகவும் மாற்றுவதே நோக்கமாக இருக்கிறது. பெரும்பாலும், ஹாலிவுட் மற்றும் இந்தி படங்களில் சித்தரிக்கப்பட்ட குற்ற நிகழ்ச்சிகளுடன் பொருத்திக் காட்டும் உத்தியையும் பயன்படுத்துகிறார்கள். தி இந்துவின் தலைமை ஆசிரியர் என் ராம் அண்மை காலங்களில் ஊடக செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றி வருத்தப்பட்டு சொல்லும் போது “இது ஒரு கவலைப்படத்தக்க போக்கு” என்று குறிப்பிட்டார். “எங்கும் புகுந்து விடும் உளவு பார்க்கும் ஒளிப்படக்கருவிகள் துப்பறியும் ஊடக உத்திக்கு கெட்ட பெயரை வாங்கிக்கொடுத்திருக்கின்றன”

பிரபலமானவர்களுக்கும் அவர்களின் பாலியல் வாழ்க்கைக்கும் பரவலாக இடம் கொடுக்கும் போக்கு ஸ்டார் நியூசில் மட்டும் இல்லை. ஊடக விமர்சகர் சேவந்தி நீனன் சொல்வது போல “திரு எம் தயவால் நாம் எப்போதையும் விட அதிகமாக தொலைக்காட்சி பார்க்கிறோம்” “அவரது நிகழ்ச்சிகள் மேம்படுத்துவையாகவோ, அறிவூட்டுபவையாகவோ இல்லை என்பது பொருட்டே இல்லை. வேறு யாருடையதும் அப்படி இல்லைதான்”

உதாரணமாக டிவி டுடே குழுமத்தின் ஆஜ் தக் நிறுவனம் “கபரேன் படாபட்” (உடனடி செய்திகள்) என்ற முழக்கத்துடன் தேஜ் (வேகம் என்று பொருள்) என்ற ஒரு தொலைக்காட்சியை ஆரம்பித்தது. இந்த தொலைக்காட்சி “நீளமான விவாதங்கள், தேவையற்ற அலசல்களில்” ஈடுபடாது என்று உறுதியளித்தார் அதன் தலைமை அலுவலர் அரூண் பூரி. விற்பனை/பார்வையாளர் எண்ணிக்கையை அதிகரிப்பதையே வணிக முறையாக கொண்டிருக்கும் ஊடக நிறுவனத்திற்கு செய்தியின் திடுக்கிடச் செய்யும் மதிப்புதான் அதிமுக்கியமாகப் போய் விடுகிறது. செய்திகளை முந்தித் தருவதற்காக கழுத்தை அறுக்கும் உத்திகளைப் பயன்படுத்தும் இந்திய ஊடகத் துறையின் சில பிரிவினர் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் ஜூன் 2007-ல் ஊடகங்களை காட்டு மிருகமாக உருவகித்து, பத்திரிகையாளர்களை கட்டுப்பாடற்ற பசியுடன் அலையும் விலங்குகளுடன் ஒப்பிட்டதை நினைவூட்டுகிறார்கள்.

மும்பையில் ஜூலை 13 ஆன்று நிகழ்ந்த மூன்று குண்டு வெடிப்புகள் தொடர்பான ஒளிபரப்பின் ஒரு பகுதி முர்டோக் நிறுவனங்களில் அடிக்கடி குழப்பமாக வரையறுக்கப்படும் பிரேகிங் நியூஸ் மீதான மிகையான சார்புநிலை; எக்ஸ்குளூசிவ் என்று அழைக்கப்படும் நிகழ்ச்சிகள், எதுவாயிருந்தாலும் சரி என்ற உத்தி;

நவம்பர் 2008ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களைப் பற்றிய ஊடக செய்திகள் இது போன்ற பல பிரச்சனைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தன. அதிகமாக திடுக்கிட வைக்கும் காட்சிகளையும் ஒலித்துணுக்குகளையும் தேடும் இடிபிடியில், மிக மோசமான உணர்வுகளை மதிக்காத முறைகள் பின்பற்றப்பட்டன, பல நேரங்களில் சரிபாரக்கப்படாத தகவல்கள் உண்மை என வழங்கப்பட்டன. இந்திய ஊடகங்களின் ஒரு பகுதியினர் தர்மத்துக்கு மாறாக நடந்து கொண்டதற்கு இன்னொரு வெளிப்படையான உதாரணம் 2008 மே மாதம் நடந்த 14 வயதான் ஆரூஷி தல்வார் கொலை வழக்கைப் பற்றி செய்தி அளித்த முறைகளும், அதை கதை போல மாற்றுவதற்கு செய்த முயற்சிகளும் ஆகும். ஊடக நிறுவனங்களின் செயல்பாட்டில் அதிகரித்து வரும் விளம்பரதாரர்களின் செல்வாக்கின் விளைவாக, விற்பனை பிரிவுக்கும் ஆசிரியர் பிரிவுக்கும் நடுவில் ஒரு காலத்தில் இருந்த சீனப் பெருஞ்சுவர் உடைவதைப் பார்க்க முடிகிறது. 2003-ல், பென்னட் கோல்மன் நிறுவனம் (பிசிசிஎல், டைம்ஸ் ஆப் இந்தியா, எகனாமிக் டைம்ஸ், மகராஷ்டிரா டைம்ஸ் போன்ற அவற்றின் பிரிவுகளில் சந்தையின் முதல் இடத்தில் இருக்கும் பத்திரிகளை வெளியிடும் நிறுவனம்) “பணத்துக்கு செய்தி” தருவதற்கு மீடியா நெட் என்ற சேவையை ஆரம்பித்தது. அதன் மூலம் விற்பனை நிகழ்வுகளுக்கும் பிரபலமானவர்களின் நிகழ்வுகளுக்கும் கட்டணம் வாங்கிக் கொண்டு பத்திரிகையாளர்கள் அனுப்பப்பட்டார்கள். அதன் போட்டியாளர்கள் ‘இந்த செயல்முறை பத்திரிகையாளர் தர்மத்தை வெளிப்படையாக மீறுவது’ என்று புகார் சொன்ன போது, பிசிசிஎல் நிர்வாகம், ‘இந்த விளம்பரதலையங்கங்கள் நாளிதழின் முக்கிய பகுதியில் இல்லாமல், குறிப்பிட்ட நகரத்துக்கு மட்டுமான சமூக துணுக்குகளடங்கிய பலவண்ண துணைப் பகுதியில் மட்டுமே வெளியாவதால் இது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்’ என்று பதிலளித்தது.

பணத்துக்குச் செய்தி

மீடியாநெட் நல்ல விதமாக செய்தி வெளியிடப்படுவதற்காக நாளிதழ்களுக்கும் ஒளிபரப்பாளர்களுக்கும் காசு கொடுக்கும் ‘பணத்துக்கு செய்தி’ வெளியீட்டை நிறுவனமயாமாக்கியது. செய்தி போல வேடம் பூண்டிருக்கும் இது, சாதாரண விளம்பரங்களை விட தாக்கம் அதிகமானது. வாசகர் அல்லது பார்வையாளர் இதில் சொல்லப்படும் தகவல்கள் பத்திரிகையாளரால் தன்னிச்சையாக திரட்டப்பட்டது என்று எண்ணுவார்.

மற்ற ஊடக நிறுவனங்களும் பிசிசிஎல்லின் அடிச்சுவடுகளை ஒற்றி பின் தொடர ஆரம்பித்து விட, இந்த நிழல் வழிமுறை அரசியல் செய்திகளுக்கும் பரவி 2009 மக்களவை தேர்தலில் பரவலாக கையாளப்பட்டது. குறிப்பிட்ட வேட்பாளரை பாராட்டி அல்லது ஆதரித்து அல்லது அவரது அரசியல் எதிரிகளைக் குறை சொல்லி எழுதுவதற்கு உரிய ‘விலைப்பட்டியல்’ அல்லது ‘பொதிகள்’ வினியோகிக்கப்பட்டன. இந்த நிபந்தனைகளுக்கு உட்பட மறுத்த வேட்பாளர்களுக்கு இடம் மறுக்கப்பட்டது.

நிறுவனமாக இல்லாத வடிவத்தில் (ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமின்றி சட்ட விரோதமானதுமான), இந்த செயல்பாடுகளை நிரூபிப்பது மிகவும் கடினமானது, ஏனெனில் இந்த பண பரிமாற்றங்கள் அதிகாரபூர்வமான பதிவுகள் எதுவும் இல்லாமலேயே நடைபெறுகின்றன. இது பி சாய்நாத் எழுதி தி இந்துவில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் சுட்டிக் காட்டுவது போன்று பல வேடிக்கையான சம்பவங்களுக்கு வழி வகுத்தது . எந்தத் தவறும் நடக்கவில்லை என்று அப்போதைய மகாராஷ்டிரா முதலமைச்சர் அசோக் சவான் மறுத்தாலும், அவரது சாதனைகளையும் திறமைகளையும் பாராட்டும் ஒரே மாதிரியான கட்டுரைகள் இரண்டு போட்டி போடும் நாளிதழ்களில் சில நாட்கள் இடை வெளியில் எப்படி வெளியானது என்பதை அவரால் விளக்க முடியவில்லை.

இந்திய பிரஸ் கவுன்சில், பணத்துக்கு செய்தி பற்றி அறிக்கை எழுதுமாறு ஒரு துணைக் குழுவை பணித்தது (அந்தக் குழுவில் இந்த கட்டுரையாளர்களில் ஒருவரான பரஞ்சோய் குகா தகுராலும் ஒருவர்) அந்த அறிக்கை சந்தர்ப்பம் சார்ந்த சாட்சியங்களை வைத்து முன்னணி செய்தித்தாள்களைக் குறிப்பிட்டு அவர்கள் செய்தி போன்ற உருவில் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட தனிநபர்களுக்கு சாதகமான தகவல்களை வெளியிட்டதை விளக்கியது.

செல்வாக்கு வாய்ந்த பதிப்பாளர்களின் குழு முயற்சிகளால் ஜூலை 31, 2010 அன்று நடந்த கூட்டத்தில் கை தூக்கி வாக்கெடுப்பு மூலம் (முறையான வாக்கெடுப்பு இல்லாமலேயே) முடிவு எடுக்கப்பட்டு பெரிதும் நீர்த்துவிக்கப்பட்ட வடிவத்தில் இந்த அறிக்கை அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருந்தாலும் துணைக்குழுவின் 71 பக்க முழு அறிக்கை கசிய விடப்பட்டு பல இணையதளங்களில் கிடைக்கிறது. சமீபத்தில் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி இந்த நிகழ்வைப் பற்றி கருத்து தெரிவித்தார். ஜூலை 15ஆம் தேதி இந்தூரில் நடந்த மறைந்த பிரபாஷ் ஜோஷி (பணத்துக்கு செய்தியை தீவிரமாக எதிர்த்தவர்)யின் 75வது நினைவு நாளில் பேசிய துணைக் குடியரசுத் தலைவர், “பிரஸ் கவுன்சில் பணத்துக்குச் செய்திகள் பற்றிய தனது அறிக்கையை பொதுவில் வைக்க முடியாமல் இருப்பது ‘ரகசிய கலாச்சாரம்’ மற்றும் சுய ஒழுங்குபடுத்தல் தொடர்பாக முழு துறையில் நிலவும் போக்குகளின் அறிகுறி என்று குறிப்பிட்டார்.
“தனியார் ஒப்பந்தங்கள்”

“தனியார் ஒப்பந்தங்கள்” என்ற திட்டம் இன்னொரு கவலை தரும் போக்காக இருக்கிறது. பிசிசிஎல் ஆரம்பித்து வைத்த இந்த திட்டத்தின்படி பெருநிறுவனங்களின் பங்குகளைப் பெற்றுக் கொண்டு விளம்பர பகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்தத்திட்டத்தின் வெற்றி, பிசிசிஎல்லை இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பங்கு முதலீட்டாளர்களில் ஒன்றாக மாற்றியிருக்கிறது. பிசிசிஎல் பேச்சாளர்கள், செய்திக் கட்டுரைகளின் உள்ளடக்கம் விளம்பரதாரர் மற்றும் பிசிசிஎல் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களால் பாதிக்கப்படுவதில்லை என்று சொன்னாலும், விற்பனை-ஆசிரியர் பிரிவுகளுக்கிடையேயான சுவரின் பலவீனத்தைக் கணக்கில் எடுக்கும் போது பொறுப்புகளுக்கிடையேயான முரண்பாடு வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரு வாடிக்கையாளருக்கு சாதகமான செய்தி வெளியிடப்படுவதாலோ, பாதகமாக செய்தி வெளியிடப்படாமல் இருப்பதாலோ, பத்திரிகை நிறுவனம் விளம்பரதாரர் நிறுவனம் இரண்டுமே ஆதாயம் பெறுகின்றன.

சமீப ஆண்டுகளில் பங்குகளின் விலை வீழ்ச்சியும், பரிவர்த்தனை செய்த போது இருந்த கூடுதல் மதிப்பிலேயே மதிப்பு நிர்ணயிக்கும் வருமான வரித் துறையின் வழிகாட்டல் முறையும் தனியார் ஒப்பந்த திட்டத்தின் கவர்ச்சியை ஓரளவு குறைத்திருக்கிறது. மீடியாநெட்டைப் போலவே, தனியார் ஒப்பந்த முறையும் பிசிசிஎல்லால் ஆரம்பிக்கப்பட்டு உடனடியாகவே மற்றவர்களால் பின்பற்றப்பட ஆரம்பித்தது. ஆகஸ்டு 27, 2010ல் செபி நிறுவனம் (இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை கழகம்) ஒரு ஊடக நிறுவனம், தான் வெளியிட்ட அல்லது ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளுடன் தொடர்புடைய வணிக நிறுவனங்களில் அதற்கு இருக்கும் நலன்களை வெளிப்படையாக தெரிவிக்க வேணுடம் என்ற வழிகாட்டுதலை உருவாக்கியது. ஆனால், இந்த வழிகாட்டுதல் முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.

எதிர்பார்க்கும்படியாக விளம்பரதாரர்கள் வாங்கும் திறன் அதிகமான சமூக பிரிவுகளையே குறி வைக்கிறார்கள். வாசகர்கள்/பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மட்டுமே செய்தி அலசலின் நோக்கமாக இருக்கும் போது, தவிர்க்க முடியாத பின் விளைவாக பன்முகத்தன்மை குறைக்கப்படுகிறது. இதன் விளைவாக ஒரே மாதிரியாள அதுவும் நகர, வசதி வாய்ந்த நடுத்தர வர்க்க நுகர்வோர்களுக்கு சார்பான உள்ளடக்கத்தை மட்டுமே பார்க்கிறோம்.

2008-இல் மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் போது ஊடகங்களின் வர்க்க சார்பு நிலை கண்டனத்துக்குள்ளாகியது. ஐந்து நட்சத்திர தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்களில் நடந்த நிகழ்வுகளுக்கு தேவைக்கதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, சாதாரண மக்கள் கொல்லப்பட்ட சத்ரபதி சிவாஜி முனையத்தில் நடந்த நிகழ்வுகள் புறக்கணிக்கப்பட்டன. வெளிப்படையான ஊழலை விட மோசமான ஊடக உலகத்தைப் பெரும்பான்மையான மக்கள் பிரச்சனைகளிலிருந்து தனிமைப்படுத்தும் போக்கு இதில் இருக்கிறது. நோம் சாம்ஸ்கி, ஊடக பிரநிதித்துவத்தை பெருநிறுவன குழுமங்கள், பத்திரிகை பெருமுதலாளிகள், அரசியல்வாதிகள் இணைந்து அவர்களது நலன்களுக்கு சேவை செய்யுமாறு உருவாக்குவது என்று வரையறுத்த “சம்மதத்தை உற்பத்தி செய்தலை” ஒத்திருக்கிறது இது.

ஒழுங்குபடுத்தல்

இந்தப் பிரச்சனைக்கு ஒழுங்குபடுத்தல் ஒரு தீர்வாக இருக்கலாம், குறிப்பாக, கூட்டு சேர்த்தல், போட்டியைத் தவிர்க்கும் நடவடிக்கைகளுக்கு எதிரான ஒழுங்குபடுத்தல் முக்கியமானது. பிரஸ் கவுன்சிலின் அதிகாரம் அச்சு ஊடகத்தின் மீது மட்டுமே இருக்கிறது, அரை நீதி அமைப்பான அதற்கு தண்டிக்கும் அதிகாரமும் எதுவும் இல்லை.

பிப்ரவரி 2008-ல் இந்திய தொலைதொடர்பு ஒழுங்கு படுத்து ஆணையம் (TRAI) தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்துக்கு “ஊடக உடைமைக்கான பரிந்துரைகள்” என்ற அறிக்கையை சமர்ப்பித்தது. இன்னும் வெளியிடப்படாத இந்த அறிக்கையில் (அறிக்கையின் ஒரு பிரதி இந்த கட்டுரையாளர்களிடம் உள்ளது), “மூன்று ஊடக துறைகளான அச்சு, தொலைக்காட்சி, வானொலி பிரிவுகளில் பன்முகத்தன்மையும் வேற்றுமையும் பராமரிக்கப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்று வாதிடப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள இந்திய நிர்வாக பணியாளர் கல்லூரியின் உதவியோடு தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை குறுக்கு ஊடக உடைமைகளை கட்டுப்படுத்தவும், ஒளிபரப்பாளருக்கும் வினியோகிப்பவருக்கும் இடையே இடைவெளியைப் பராமரிப்பதன் மூலம் போட்டிச் சந்தைக்கு எதிரான நடத்தைகளையும் ஊடக ஏகபோகத்தையும் தடுக்க பரிந்துரைக்கிறது. இந்தியாவின் தற்போதைய ஊடக சட்டங்களின் முக்கிய பிரச்சனை அவை தனிப்பட்ட நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதுடன், ஊடக குழுமங்களையும் பெரு நிறுவனங்களையும் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. பல பெரிய பெருநிறுவன குழுமங்கள் வெவ்வேறு நிறுவனங்களை கையில் வைத்திருப்பதன் மூலம் இந்த கட்டுப்பாடுகளை முழுவதுமாக தவிர்த்து விடுகின்றன. டிராயின் பரிந்துரைகள் மீது இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

யுகே, இந்தியா மற்றும் பிற இடங்களில் இருக்கும் எல்லா அரசாங்கங்களின் முக்கிய பதவிகளில் இருக்கும் நபர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்களுடன் விருப்ப-வெறுப்பு நிலை இருந்தாலும் ஊடக உறவுகளை வளர்ப்பதை விரும்புகிறார்கள். நியூஸ் ஆப் த வேர்ல்ட் தொடர்பான தொலைபேசி ஒட்டுக் கேட்பு நிகழ்வும் முர்டோச்சுகள் மற்றும் நிறுவனத்தின் உயர் ஊழியர்கள் பொதுவில் விசாரிக்கப்பட்டதும், இந்திய ஊடக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விரும்பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

*****

பரஞ்சோய் குகா தாகுர்தா ஒரு சுயேச்சை பத்திரிகையாளர், கல்வியாளர்.

அலீஸ் சீபிரைட் இந்தியாவில் பணிபுரியும் ஒரு பிரிடிஷ் பத்திரிகையாளர்.

கட்டுரை-படங்கள: ப்ரண்ட் லைன், தமிழாக்கம்: குமார்

(நன்றி: வினவு)

முதலாளிகளுக்கு மாமா வேலை செய்யும் பத்திரிகையாளர்கள்!

நீரா ராடியாவின் உரையாடற் பதிவுகள் இந்திய அரசியல் அரங்கில் காலம் காலமாக நிலவி வந்த தரகுத்தனத்தின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை அம்பலப்படுத்தியது என்றால், இன்னொரு பக்கம் முதலாளித்துவ ஊடகங்களின் உண்மையான மறுபக்கத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டியது. பன்னாட்டுக் கம்பெனிகள் மற்றும் தரகு முதலாளிகளுக்குச் சாதகமாய் அரசு இயந்திரத்தின் அச்சை சுழற்றும் தரகு வேலை பார்த்து வந்த நீரா ராடியாவுடன் பர்க்கா தத், வீர் சங்வி போன்ற பத்திரிகையாளர்கள் நடத்திய பேச்சுக்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

ஜனநாயகத்தைக் காக்கும் காவல் நாய் என்பது போலச் சித்தரிக்கப் பட்ட முதலாளித்துவ ஊடகங்கள், எதார்த்தத்தில் டாடா அம்பானிகளின் பங்களா நாய்களாக இருந்துள்ளது, இந்த ஜனநாயக அமைப்பை நம்பியவர்களுக்கு ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளர்கள் என்றவுடன் உங்கள் நினைவுக்கு எப்படியானதொரு சித்திரம் தோன்றுகிறது? ஒல்லியான உருவம் ஒன்றில் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்கான பைஜாமா, லேசாகக் குழி விழுந்த கண்கள், ஒட்டிய கன்னங்கள், கனமான கண்ணாடி, அதற்குள் சிவந்த கூர்மையான கண்கள். இவரது ஆளுமை பற்றிய பிம்பமாக, அதிகாரத்தையும் முறைகேடுகளையும் எப்போதும் எதிர்த்துக் கொண்டிருப்பது, மக்களுக்கு உண்மைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற முனைப்பில் உயிரையே கூட துச்சமாக மதிப்பது, நேர்மை… இத்யாதி இத்யாதி.. என்றால், நீங்கள் இன்னமும் என்பதுகளில் வெளியான தமிழ்சினிமாக்களின் தாக்கத்திலிருந்து விடுபடாதவர் என்று பொருளாகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட காரில், பளீரென்ற மேக்கப்பில், டிசைனர் உடைகளோடும் நுனி நாக்கில் புரளும் ஆங்கிலத்தோடும் ஒரு சினிமா நடிகருகருக்கு ஒப்பான தோற்றம் தான் இன்றைய நவீன பத்திரிகையாளர்களின் தோற்றம்! பண்பில் ஏற்பட்ட மாற்றம் தான் தோற்றத்தில் பிரதிபலிக்கிறது. மிகவும் சகஜமாக அதிகார வர்க்கத்தினரிடையேயும் அரசியல் மட்டத்திலும் கிடைக்கும் தொடர்புகள் அவர்களுக்குத் தரகர்களாக ஆகும் வாய்ப்பை எளிதாக்குகிறது. இந்திய அளவிலான பத்திரிகையாளர்கள் இந்திய அளவில் தரகு வேலை செய்கிறார்கள் என்றால், மாநில அளவிலான பத்திரிகைகளின் நிருபர்கள் மாநில அளவிலும், மாவட்ட அளவிலான நிருபர்கள் மாவட்ட அளவிலும் இதே வேலையை வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு விதமாக வெளிப்படுத்தியே வருகின்றனர்.

தமிழகத் தேர்தல் சமயங்களில் போயஸ் கார்டனை விட்டு ஒரு மர்மப் புன்னகையோடு வெளியேறும் துக்ளக் சோவை தவறாமல் தமிழ் செய்தி ஊடகங்களில் பார்த்திருக்கிறோம். சுயேச்சையாய் செய்திகளை அளிக்கும் கடமை உள்ள ஒரு பத்திரிகையாளருக்கு அரசியல் அணி சேர்கைகளுக்காக தரகு வேலை செய்ய வேண்டிய அவசியம் என்னவென்ற கேள்வி இது வரை எழுந்ததில்லை. இலங்கை இந்தியா இடையே இந்து பத்திரிகையின் என்.ராம் செய்து வரும் தரகு வேலைகளும் இலங்கை இனவெறி பாசிஸ்டுகளுக்கு ஆதரவாக இங்கே அவர் செய்து வரும் எத்து வேலைகளும் எவரும் அறியாத இரகசியங்கள் அல்ல.

தற்போது வெளியாகியிருக்கும் நீரா ராடியாவின் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களைத் தொடர்ந்து ஏதோ பர்கா தத்தும் வீர் சிங்வியும் மட்டும் தான் தரங்கெட்டுப் போய் விட்டதைப் போன்றும், “நாங்களெல்லாம் யோக்கிய சிகாமணிகள்” என்பது போலவும் மற்ற முதலாளித்துவப் பத்திரிகைகள் நடிக்கின்றன. இல்லாத புனிதம் கெட்டுப் போய்விட்டதைப் போல் அலறிக் கொள்கின்றன. உரையாடற் பதிவுகள் முழுமையாக கைக்குக் கிடைக்கும் வரையில் பொறுமையாக இருந்து விட்டு, தாம் சம்பந்தப்பட்ட விவரங்கள் வெளியாகவில்லை என்பதை உறுதி செய்து விட்டு இப்போது பர்க்கா தத்தையும் வீர் சிங்வியையும் மட்டும் காவு கொடுத்து விட்டு மற்றவர்கள் தப்பிக்க முடியுமா என்று பார்க்கிறார்கள்.

கவர் வாங்கிக் கொண்டு “கவர்” ஸ்டோரிகள் எழுதுவது முதலாளித்துவ பத்திரிகைகளுக்கு ஒன்றும் புதிய விவகாரம் இல்லையென்றாலும், நேரடியாக ‘இன்னதற்கு இன்ன ரேட்’ என்று நிர்ணயித்துக் கொண்டு மக்கள் தம்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைக் கூறு போட்டு விற்கும் போக்கு சமீப வருடங்களில் பரவலாகி வருகிறது.

தற்போது கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் (ஆதர்ஷ் ஊழல்) முறைகேடுகள் செய்து அம்பலமாகி ஊரே காறித்துப்பிக் கொண்டிருக்கும் மகாராஷ்ட்டிர (முன்னாள்) முதல்வர் அசோக் ராவ் சவாண் பற்றி அம்மாநில சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் “ஆற்றல் மிக்க இளம் தலைவர்” என்று தலைப்பிட்டு லோக்மத் எனும் மராட்டிய இதழ் லஞ்சம் வாங்கிக் கொண்டு செய்தி வெளியிட்டது. அது மட்டுமல்லாமல், அந்தக் காலகட்டத்தில் சவாண் பற்றி பல்வேறு சிறப்பிதழ்களையும் வெளியிட்டது. இவை எதுவும் விளம்பரம் என்று குறிக்கப்படாமல், செய்தியைப் போலவே வெளியிடப்பட்டது பின்னர் அம்பலமாகி நாறியது.

அரிந்தம் சௌத்ரி “இதிலெல்லாம் என்னய்யா பிரச்சினையக் கண்டுட்டீங்க?” என்கிறார். “அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளில் இப்படி பத்திரிகையாளர்கள் அரசியல் கட்சிகளுக்கு சார்பு நிலையெடுப்பதோ லையசன் (தரகு) வேலை பார்ப்பதோ ஒன்றும் புதிதில்லையே? இத்தனைக்கும் நம்மை விட அவர்களோ முன்னேறிய ஜனநாயக நாடு அல்லவா; நாம் மட்டும் ஏன் இன்னும் பழைய பஞ்சாங்கமாகவே இருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள பத்திரிகைகள் இனிமேல் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்கு சார்பு நிலையெடுக்கவோ தரகு வேலை பார்க்கவோ வேண்டாம் – அதை வெளிப்படையாக நேரடியாகவே செய்து விடலாம்” என்று தனது சண்டே இண்டியன் பத்திரிகையில் எழுதியுள்ளார். அரிந்தமின் அந்தக் கட்டுரையை ஒரு வேளை சோ ராமசாமி படித்திருந்தால் “ஹெஹ் ஹெஹ் ஹே.. இவாள்ளாம் இப்பத்தான் எல்கேஜிக்கே வந்திருக்கா… நாமெல்லாம் பிஹெச்டியே முடிச்சுட்டோமே” என்று இந்து ராமைப் பார்த்து சொல்லியிருக்கக் கூடும்.

பத்திரிகைகளின் தரகுத்தனம் என்பது தனியே ஆதாரமில்லாமல் அந்தரத்தில் தொங்கும் அதிசய மாங்காய் அல்ல. “முதலாளித்துவப்” பத்திரிகைகள் என்று நாம் சொல்வது அதன் இயங்கும் விதத்தை வைத்து மாத்திரமல்ல – அவைகள் அடிப்படையிலேயே முதலாளித்துவ குணாம்சங்களைக் கொண்டுள்ளன. அவைகள் தாம் வெளியிடும் “செய்தியை” ஒரு பண்டமாகக் கருதி உற்பத்தி செய்து சந்தையில் திணிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்வதில்லை, தம்மிடம் விலை போகக் கூடிய சரக்கு என்னவெல்லாம் உண்டோ அவையத்தனையையும் பட்டியல் போட்டு விற்கத் தயங்குவதில்லை – நீதி, நேர்மை, நியாயம் என்று இவர்களின் அனைத்திற்கும் ஒரு விலை உண்டு.

Paid News விவகாரம் பற்றி பத்திரிகையாளர் பி.சாய்நாத் எழுதிய கட்டுரையை வைத்துக் கொண்டு பாராளுமன்றத்தில் சில நாட்கள் பஜனைகள் நடத்தி முடித்த பின், பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா அவ்விவகாரம் பற்றி விசாரிக்க சீனிவாச ரெட்டி மற்றும் பரஞ்சோய் குகா தலைமையில் இருநபர் கமிட்டி ஒன்றை அமைத்தது. அக்கமிட்டியின் விசாரணைகளில், இந்தியாவின் மிகப் பெரிய ஊடக நிறுவனங்கள், நேரடியாக பங்குச்சந்தையின் பங்குகளை வாங்குவதும், அப்படி பங்குகள் பெற்ற நிறுவனங்களைப் பற்றிய விளம்பரங்களை ‘செய்தி’ போல வெளியிட்டு ஆதாயம் அடைந்திருப்பது அம்பலமானது.

பங்குச் சந்தை கண்காணிப்பு அமைப்பான செபி, இப்படிப்பட்ட ‘தனி ஒப்பந்தங்கள்’ (private treaties) முறையை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் தாய் நிறுவனமான பென்னட் & கோல்மன் நிறுவனமே அறிமுகம் செய்தது என்றும், தற்போது பல்வேறு ஊடக நிறுவனங்களும் அவ்வாறான நடைமுறையைப் பின்பற்றுவதாகவும் உறுதி செய்தது. பங்குகளை வாங்குவதையும் விற்பதையும் சந்தையின் மனநிலையைப் பொறுத்தும் பங்கு வெளியிட்டுள்ள நிறுவனத்தின் மேல் சந்தையில் நிலவும் ‘நல்லெண்ணத்தையும்’ வைத்தே அதில் முதலீடு செய்வதைப் பற்றி சாதாரண முதலீட்டாளர்கள் முடிவு செய்கிறார்கள் என்கிற நிலையில், இப்படி சந்தையின் மனநிலையையும் பங்குகளை வெளியிட்டுள்ள நிறுவனங்களின் மேலான நல்லெண்ணத்தையும் பங்குகளை கைக்கூலியாகப் பெற்றுக் கொண்டு ஊடகங்கள் ‘உற்பத்தி’ செய்கின்றன.

2005ஆம் ஆண்டு விடியோகான், கைனடிக் போன்ற நிறுவனங்கள் கணக்கற்ற பங்குகளை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு கையூட்டாக அளித்து தமது நிறுவனங்களைப் பற்றி பென்னட் & கோல்மன் குழுமத்தைச் சேர்ந்த டைம்ஸ் ஆப் இந்தியா , டைம்ஸ் நௌ, பிசினஸ் டைம்ஸ் போன்ற எல்லா பத்திரிகைகளிலும் ‘நல்லவிதமாக’ செய்தி வரும்படி பார்த்துக் கொண்டன. டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை, தான் முதலீடு செய்திருந்த நிறுவனங்களைப் பற்றி அதன் தலையங்கங்களிலேயே எழுதத் துணிந்தது. 2007ஆம் ஆண்டு இறுதிவாக்கில், டைம்ஸ் குழுமம் மட்டுமே கிட்டத்தட்ட 140 நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து, தனியார் நிறுவன முதலீட்டாளர்களிலேயே முதலிடத்தைப் பிடித்தது. ஜூலை 2008ம் ஆண்டு பத்திரிகையொன்றிற்கு பேட்டியளித்த பென்னட் & கோல்மன் நிறுவனத்தின் சிவக்குமார், அப்போதைய நிலவரத்தின் படி ‘தனி ஒப்பந்தங்கள்’ (Private treaties) மூலம் சுமார் 200 நிறுவனங்களில் பென்னட் & கோல்மன் முதலீடு செய்திருப்பதாகவும் அதன் அளவு 4000 கோடிகளுக்கு இருக்கலாம் என்றும் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

ப்ரஸ் கௌன்சில் ஆப் இந்தியாவின் அந்த விசாரணை அறிக்கையில், இந்தப் போக்குகளுக்கு எதிராக சில பரிந்துரைகளைச் செய்யப் பட்டிருந்தது. பத்திரிகை நிறுவனங்கள் தாம் பங்குச் சந்தையில் செய்திருக்கும் முதலீடுகள் பற்றிய விபரங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும், விளம்பரமாக வரும் ‘செய்திகளின்’ கீழே அது விளம்பரம் தானென்று குறிக்க வேண்டும் என்பதையும் உள்ளிட்டு செய்திருந்த பரிந்துரைகளை, 12 பத்திரிகைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் எதிர்த்து இறுதியறிக்கையில் இந்த விபரங்கள் ஏதும் வராமல் இருட்டடிப்பு செய்துள்ளனர்.

இவர்கள் தான் இப்போது பத்திரிகைத் தொழிலின் ‘புனிதம்’ கெட்டு விட்டதாக ஓலமிடுகின்றனர்.

மறைக்கப்பட்ட அந்த முழு அறிக்கையை இந்த சுட்டியில் வாசிக்கலாம்.

மக்களுக்கு எதிரான கூட்டணி!

இது ஒரு நுட்பமான வலைப்பின்னல். தரகு முதலாளிகளும், ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளும், பெரும் முதலாளித்துவ பத்திரிகைகளுமாகச் சேர்ந்து மக்களுக்கு எதிராய் அமைத்துள்ள மெகா கூட்டணியே தற்போதைய ராடியா டேப் விவகாரத்தில் அம்பலமாகியுள்ளது. வெளியாகியுள்ள துண்டு துண்டான அந்தப் பதிவுகளினூடே ஜனநாயகம் என்பதைப் பற்றி மெய்யாலுமே இவர்கள் கொண்டிருக்கும் சித்திரம் மிகத் தெளிவாகப் புலனாகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு – மக்களுக்காக அமைக்கப்படும், மக்களுடைய அரசாங்கம் என்று அலங்காரமாகச் சொல்லப்படும் இந்த ஜனநாயக அரசின் யோக்கியதை சிரிப்பாய்ச் சிரிக்கிறது.

இந்த ‘மக்கள்’ பிரதிநிதிகளைத் தேர்தல்களில் தேற்றி விடுவது முதலாளித்துவ பத்திரிகைகள்; அப்படி யாரைத் தேற்றுவதும் வென்றபின் யாருக்கு எந்த பதவி என்பதைத் தீர்மானிப்பதும் முதலாளிகள் எனும் போது இவர்களின் விசுவாசம் யாரிடம் இருக்கும்? ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியாகி ஊரே காறித்துப்பிய நிலையிலும், ரத்தன் டாடா ‘தமிழ் தாத்தா’வுக்கு கைப்பட எழுதியனுப்பும் மடலே அதைத் தெளிவாக்குகிறது. “ஆ.இராசாவின் செயல்பாடுகள் ஒரு புதிய வரலாற்றைப் படைத்து விட்டது” என்று அன்றைக்கு அவர் சொன்னதன் பொருள் என்னவென்பது இன்றைக்குத் தெளிவாகிறது – அந்த வரலாற்றின் பின்னே பத்து சைபர்கள் ஒளிந்து கொண்டிருக்கிறது.

காலனிய ஆட்சிக் காலம் முதல் இந்தியா முதலாளித்துவ நாடுகளுக்கு வளங்களை சல்லிசாக அள்ளிக் கொடுக்கும் பின்நிலமாகவே இருந்துள்ளது என்றாலும் உலகமயமாக்களுக்குப் பின் அதன் வேகம் கூடியுள்ளது. தொண்ணூறுகளுக்கு முந்தைய ஊழல் என்றால் எவருக்கும் உடனே நினைவுக்கு வருவது போபர்ஸ் ஊழல் தான். அதன் மதிப்பே 64 கோடிகள் தான். ஒருவரையும் தண்டிக்க முடியாத – அட குறைந்தது அந்த 64 கோடியையாவது திரும்பப் பெறமுடியாத அளவுக்கு நடந்த அதன் விசாரனைச் செலவு மாத்திரம் இருநூற்றுச் சொச்சம் கோடிகள்!

ஆனால், அதன் பின் கடந்த இருபத்தாண்டுகளில் நடந்துள்ள ஊழல்களின் மொத்த மதிப்பின் முன் போஃபர்ஸ் ஊழல் ஒரு கொசுவைப் போல் தோற்றமளிக்கிறது. புதிய பொருளாதாரக் கொள்கையில் சந்தை மட்டும் திறந்து விடப்படவில்லை – இந்த நாட்டின் எல்லைகளும் பன்னாட்டுத் தொழிற்கழகங்களுக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது.

தேசத்தின் வளங்கள் கொள்ளை போவதை எதிர்த்துப் போராடும் மக்களையும் புரட்சிகர சக்திகளையும் ‘தீவிரவாதிகள்’ போல் சித்தரிப்பதையும், வளங்களைச் சுரண்டிக் கொழுக்கும் பயங்கரவாதிகளை யோக்கியர்கள் போல் சித்தரிப்பதையுமே முதலாளித்துவ பத்திரிகைகள் செய்து வருகின்றன. இந்த மக்கள் விரோதிகளைப் புரிந்து கொள்வதோடு, இவர்களைப் பாதுகாக்கும் இந்தப் போலி ஜனநாயக ஏற்பாட்டிற்கு மாற்றான மெய்யான ஜனநாயக அரசியல் அமைப்பை உருவாக்க, மறுகாலனியாதிக்கத்தை எதிர்த்துப் போரிட ஜனநாயகத்தில் பற்றுள்ள அனைவரும் முன்வர வேண்டும்.

(நன்றி: வினவு)

தினமலர்: மலிவு விலையில் மனுதர்மம்!

தினமலருக்கு ஆகாதவர்களின் பட்டியல் மிக நீளமானது. பெரியார் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டபிறகும் அவரை மட்டம்தட்டி இன்றளவும் செய்திகளை வெளியிடுகிறார்கள். இசுலாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அந்த சமூகத்தையே தமிழ் நாட்டில் அச்சுறுத்தியதில் ஆ.எஸ்.எஸுக்கு அடுத்த இடம் நிச்சயம் தினமலருக்குத்தான். ஈழ ஆதரவாளர்களை புலி ஆதரவாளரென அரசுக்கு ஆள்காட்டி வேலை பார்த்ததில் தொடங்கி விவசாயிகள் உரிமைக்கு போராடுவோரை நக்சலைட்டுக்கள் என பரப்புரை செய்வது வரை தினமலரது திருப்பணிகளின் கணக்கிலடங்காதவை. தங்களின் வாசகர்களின் பெரும் சதவீதமானவர்களாக உள்ள அரசு ஊழியர்களின் போராட்டத்தை அவதூறு செய்து நன்றியுணர்ச்சிக்கு புது இலக்கணம் வகுத்தவர்கள் இவர்கள், முன்னாள் இலங்கை துணைத்தூதர் அம்சாவை பெருந்தன்மையானவர் என சொன்ன ஒரே தமிழ் ஊடகம் தினமலர்தான்.

மேற்கூறிய பிரிவினருக்கு எல்லாம் தினமலர் தங்களுக்கு எதிரானது என்பது தெரியும். ஆனால் பெரும்பாலான தாழ்த்தப்பாட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு தினமலர் தங்களுக்கும் எதிரி என்பது தெரிவதில்லை. அதன் இந்துத்துவா முகம் எல்லா இந்துக்களுக்கும் ஆதரவான பத்திரிக்கையைப்போல ஒரு மாயத்தோற்றத்தை தோற்றுவிக்கிறது. மதமாற்றம் பற்றி ஓலமிடும் செய்திகள், இந்து அமைப்புக்களின் செயல்பாடுகளுக்கு தரப்படும் அதீத முக்கியத்துவம், நிறைந்து வழியும் கோயில் குளம் பற்றிய செய்திகள் என்பன போன்ற செயல்களால் இது இந்துக்களுக்கான பத்திரிக்கையாக பலருக்கும் தோண்றுகிறது.

உண்மையில் அதன் பார்ப்பன சிந்தனை வாரமலர் கதைகளில்கூட பிரதிபலிக்கிறது. டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டி ஒன்று வாரமலரில் நடத்தப்படுகிறது. அதில் சாதிக்கொடுமை, இடஒதுக்கீடு பற்றி வந்த மூன்று கதைகளின் சுருக்கத்தை மட்டும் பாருங்கள்.

1. இடஒதுக்கீட்டில் பலனடைந்த ஒரு குடும்பத்தின் வாரிசுகள் இடஒதுக்கீடு பற்றி தங்கள் குடும்ப நண்பர் ஒருவருடன் விவாதிக்கிறார்கள் (மதிப்பெண் எதிர்பார்த்த அளவு வராவிட்டாலும் தனக்கு இட ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என ஒரு வாரிசு சொல்வதில் இருந்து விவாதம் துவங்குகிறது) .குடும்ப நண்பரோ தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காக அரசு இடஒதுக்கீட்டை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழங்கி வருவதாகவும், இடஒதுக்கீட்டில் பலனடைந்த ஒரு தலைமுறை தங்கள் வாரிசுகளையும் அந்த ஒதுக்கீட்டில் பலனடைய வைப்பதால் பலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போவதாகவும் கவலைப்படுகிறார். உடனே மனம் திருந்துகிறார்கள் அந்த இளைஞர்கள். அந்த குடும்பத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர் தான் இடஒதுக்கீட்டை நாடாமல் பொதுப்பிரிவில் என்ன படிப்பு கிடைக்குமோ அதை படிக்கப்போவதாக சொல்வதுடன் கதை சுபமாக முடிகிறது. (சென்ற ஆண்டில் முதல் பரிசு பெற்ற கதை).

2. ஒரு கிராமப்பள்ளியில் ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களை தொடர்ந்து கழிவறையை சுத்தம் செய்ய சொல்கிறார்கள் ஆசிரியர்கள். மாணவர்கள் தங்கள் வீட்டில் இது பற்றி முறையிடுகிறார்கள். பெற்றோர்கள் திரண்டு சென்று ஆசிரியர்களுடன் வாக்குவாதம் செய்கிறார்கள். மாணவர்கள் படிப்பு பாழாகிவிடுமோ என அஞ்சி பதில் நடவடிக்கையை ஊருக்கு போய் முடிவு செய்யலாமென பெற்றோர்கள் திரும்புகிறார்கள். மறுநாள் தலைமை ஆசிரியர் தங்கள் அலுவலகத்தை திறக்கும்போது சகிக்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது. எல்லா வகுப்பறைகளும் இதே மாதிரி அசிங்கம் செய்யப்பட்டிருப்பதாக மற்ற ஆசிரியர்களும் குற்றம் சாட்டுகிறார்கள். இதை யார் செய்து இருப்பார்கள் என யூகித்த தலைமை ஆசிரியர் காவல்துறைக்கு தகவல் சொல்ல கிளம்புகிறார். முந்தைய நாட்களில் கழிவறையை சுத்தம் செய்யும்படி நிர்பந்திக்கப்பட்ட மாணவர்கள் தானாகவே முன்வந்து தாங்களே பள்ளியை சுத்தம் செய்வதாக சொல்கிறார்கள். பிறகு (இளகிய மனம் படைத்தவர்கள் கண்களை துடத்துக்கொள்ளத்தயாராய் இருக்கவும்) இந்த செயலால் மனம் திருந்திய தலைமையாசிரியர் அவர்களை இனி இந்த வேலையை செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டு, பள்ளியை சுத்தம் செய்ய ஆட்களை அழைத்துவருமாறு தமது ஊழியரை பணிக்கிறார். (இந்த ஆண்டு இரண்டாம் பரிசு)

3. ஒரு கிராமத்தின் சலவைத்தொழிலாளியின் குடும்பம் ஒன்றில் தன் மகளை சலவைத்துணி வாங்கி வருமாறு பணிக்கிறாள் தாய். சலித்தபடியே துணி வாங்கச்செல்லும் மகள் (பள்ளியிறுதி மாணவி) வழியில் தங்கள் மீதான ஒடுக்குமுறையை பற்றி சிந்தித்தபடி செல்கிறார். துணி வாங்கும் வீட்டிலும் அவள் சுயமரியாதையை பாதிக்கும் செயல்கள் நடக்கின்றன. (சலவைகாரப்பெண்னை வெறும் கையோடு அனுப்பாமல் ஏதாவது பட்சணம் கொடுத்தனுப்பு என்று ஒரு பெண் சொல்வதையும் மீதமான உணவை தங்கள் தலையில் கட்டும் தந்திரம் என சரியாக கணிக்கிறாள் அப்பெண் ). வீட்டிற்கு திரும்பியவளிடம் அவள் அம்மா, இன்று உன் அத்தை உன்னை பெண் பார்க்க வருவதாக சொல்கிறார். மனவளர்ச்சியில்லாத அத்தை மகனை மணக்க விரும்பாமல் தான் விரும்பிய இளைஞனை (அவ்வூரில் பிணம் எரிக்கிறார் அவர்) மணந்து அந்த ஊரிலேயே வசிக்கிறார் அப்பெண். கதையின் துவக்கத்தில் குறிப்பிட்ட அவளது வாழ்வியல் சிரமங்களைப்பற்றி மேலதிக தகவல்கள் இல்லாமல் முடிகிறது கதை. (இவ்வாண்டு பிரசுரத்திற்கு தேர்வான ஆறுதல் பரிசுக்கதை).

பரிசுக்கதைகளை கவனியுங்கள். ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட கதை நாயகர்கள் யாரும் தங்களுக்கான நியாயத்தை உரத்துக்கூட கேட்கவில்லை. ஒரு முறைக்கு மேல் இட ஒதுக்கீடு எதற்கு ? என்று தினமலரின் கருத்தை சொல்வதால்தான் இந்த கதை பரிசுக்குரியதாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. மற்ற கதைகளும் விதித்ததை ஏற்றுக்கொள் என நமக்கு பாடம் நடத்துகிறது. கதையை கதையாக மட்டும் பார் என அறிவுரை சொல்லும் ஆட்களை செருப்பால் அடிப்பதுபோல ஒரு கருத்தை சொல்லி தான் யார் என்பதை காட்டியது தினமலர். நவம்பர் எட்டாம் தேதி வாரமலரின் ஞானாந்தம் பகுதியில் ” எந்த ஒரு மனிதனும் தான் பிறந்த குலத்திற்கு தகுந்த குணங்களையே கொண்டிருப்பான். அவரை போட்டால் துவரை முளைக்குமா?” என நேரடியாக மனுதர்ம விஷத்தை கக்குகிறது தினமலர். அதை விளக்க வைரம் ராஜகோபால் சொன்ன ஒரு கதையின் சுருக்கம் கீழே,

ஒரு ஞானியை கைது செய்கிறான் ஒரு அரசன் (அவர் பிச்சையெடுத்த குற்றத்திற்காக). அவர் ஒரு பெரிய ஞானி என அறிந்து அவரிடம் பல விசயங்களைக்கேட்டு தெளிவு பெறுகிறான். அவர் தன் அறிவை நிரூபிக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கு பிறகும் கூடுதலாக ஒரு பட்டை சாதம் தினமும் தர உத்தரவிடுகிறான் அரசன். ஒருநாள் அரசன் தான் எப்படிப்பட்டவன் என சொல்லும்படி ஞானியிடம் கேட்கிறான். ஞானியோ தயங்கியபடி நீங்கள் ஒரு சமயல்காரனுக்கு பிறந்தவர். ராஜாவுக்கு பிறந்தவரல்ல என்கிறார். இதை தன் தாயிடம் கேட்கிறான் அரசன், தாயும் நீ சமையல்காரனுக்குப் பிறந்தவன்தான் என ஒப்புக்கொள்கிறார். அந்த ஞானியிடம் இதை எப்படி கண்டுபிடித்தீர்கள் என கேட்கிறான் அரசன். நீ ராஜகுலத்தில் பிறந்தவனெனில் எனக்கு பொன்னையும் பொருளையும் தரச்சொல்லியிருப்பாய், சமையல்காரனுக்கு பிறந்தவன் என்பதால் பட்டை சாதம் தர சொன்னாய் என்கிறார் ஞானி. (சில விதிவிலக்குகள் இருக்கலாம் எனவும் சொல்கிறார் வைரம்- ஜெயேந்திரனை பார்த்துவிட்டு எல்லா பிராமணனும் ஸ்த்ரீ லோலனோ என நாம் நினைத்துவிடக்கூடாதில்லையா).

இந்து ஆதரவு எனும் போர்வையில் தனது பார்பன சிந்தனையை வாசகர்களுக்குள் திணிக்கிறது தினமலர். இதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது. தினமலரின் நீண்டகால வாசகர்கள் பலர் ‘ இனியும் இடஒதுக்கீடு எதற்கு, திறமைக்கு முன்னுரிமை தரவேண்டும் சாதிக்கு அல்ல, சாதீய வேறுபாடுகள் மறைந்துவிட்டதால் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருப்பவருக்கு இடஒதுக்கீடு கொடு’ எனபன போன்ற சிந்தனையோட்டத்தில் இருப்பதைக்காண முடிகிறது.

தான் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண் என புதியவர்களுடன் அறிமுகமாகும்போதே சொல்லிவிடுவேன் என்கிறார் என் தோழி ஒருவர் (பிற்பாடு தெரிந்துகொண்டால் பழகுவதில் வேறுபாடு காட்டுவார்களோ என அஞ்சி). தாழ்த்தப்பட்டவர் என சுலபமாக அடையாளம் காட்டும் தன் பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார் நான் அறிந்த ஒரு பொறியியல் பட்டதாரி. இவை எல்லாம் எங்கோ ஒரு மூலையில் நடப்பவை அல்ல, தொழில் நகரமான கோவையில் நடந்தவை. தனிக்குவளை போய் டிஸ்போசபிள் கப் வந்ததுதான் சாதிவேறுபாட்டை களைவதில் நாம் கண்ட முன்னேற்றம். கிராமப்பகுதிகளில் முரட்டுத்தனமாக வெளிப்படும் ஜாதீயம் நகர் பகுதிகளில் நாசூக்கான வழிகளில் வெளிப்படுகிறது அவ்வளவுதான்.

இந்த வெளிப்பூச்சு சமத்துவத்தை இடஒதுக்கீட்டிற்கு எதிரான ஆயுதமாக்கும் தினமலர்தான் பக்தியின் பின்னால் நின்று வர்ண வேறுபாட்டை நியாயப்படுத்துகிறது. பாம்பையும் பார்பானையும் கண்டால் பார்பானை முதலில் அடி என்றார் பெரியார், அப்போது எத்தனை பிராமணர்கள் தாக்கப்பட்டார்கள்? ஆனால் பசு ஒரு தெய்வம் என செய்யப்பட்ட பிரச்சாரத்தால் செத்த மாட்டை அறுத்த தலித்துகள் எரித்துக்கொல்லப்பட்டார்கள் வடக்கே. வார்த்தைகளின் பின்னால் இருப்பவனின் நோக்கம்தான் பின்பற்றுபவனின் செயல்பாட்டைத் தீர்மானிக்கிறது. ராஜராஜனுக்கு பிறகு வந்த சோழ அரசர்கள் பிராமணரல்லாத மக்களை படிப்படியாக தஞ்சை நகரை விட்டு வெளியேற்றினார்கள், இது வரலாறு. இதற்காக யாரும் சமகால பிராமணரிடம் வாக்குவாதம் செய்தால் அது நியாயமில்லை என்று சொல்லலாம். ஆனால் இன்றைக்கும் எம் மக்களையும் எங்கள் மொழியையும் வழிபாட்டில் தொடங்கி இசை வரை ஒதுக்கிவைக்கும் வழக்கத்தை என்ன செய்வது ? போராடு என்றனர் பெரியாரும் அம்பேத்கரும், அடுத்த ஜென்மம் வரை காத்திரு என்கிறது தினமலர்.

I.I.T. இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ”இரண்டாயிரம் ஆண்டு காத்திருந்தவர்களால் ஒரு வருடம் காத்திருக்கமுடியாதா” என ஒரு நீதிபதியை கேட்க வைத்தது எது? மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆலய நுழைவுப்போராட்டம் நடந்தபோது மீனாட்சி செத்துவிட்டாள் எனக்கூறி அர்ச்சகர்களை வெளிநடப்பு செய்யவைத்தது எது?. சிறீரங்கம் உஷாவைத்தவிர மற்ற எல்லா சௌபாக்கியங்களும் சிறையில் ஜெயேந்திரனுக்கு தரப்பட்டது. தன்னை எதிர்த்தவனை கொல்ல சூத்திரனை நியமித்த ஜெயேந்திரன் சிறையில் தனக்கு சமைக்க மட்டும் பிராமணனை நியமிக்க சொன்னது ஏன் ? எல்லோரும் சமமென்றாகிவிட்டபிறகு (தினமலர் கணிப்பின்படி) அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை தடுப்பது எது ? கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலைவரானபொழுது திருப்பதி தேவஸ்தானம் இனி தாங்கள் விரும்புபவர்களுக்கு மட்டும்தான் முதல் மரியாதை தருவோம் என முடிவெடுத்த திமிரின் அடித்தளம் எங்கிருக்கிறது ?

தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தினமலர் வாசகர்கள் அல்லது தினமலரது கருத்துடன் உடன்படுபவர்கள் மேலே உள்ள கேள்விகளுக்கு விடைகாண முற்படுங்கள். அதுதான் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான முதல் படி. அதைவிட்டுவிட்டு வாரமரலரின் கதை நாயகர்களைப்போல கையைக்கட்டிக்கொண்டு நானே கக்கூசை கழுவுறேன் சாமி என்றால் நம் பிள்ளைகளுக்கும் துடைப்பம்தான் மிஞ்சும்.

(நன்றி: வினவு)

இஸ்லாமியத் தமிழ் இதழியல் வரலாறு

முன்னுரை

புதிய தகவல் தொடர்பு ஊடகங்கள் பல முகிழ்த்துப் பரவலாகி விட்ட நிலையிலும் இதழ் தனது செல்வாக்குக் குறையாமல் இன்னமும் ஆற்றலுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. பல தளங்களில் கிளைத்துப் பரவியிருக்கும் தமிழ் இதழ்த் துறையின் தொடக்கம் சமயம் சார்ந்தே அமைந்திருந்தது. இன்றும் பல்வேறு சமயச் சார்பு இதழ்கள் தமிழில் வெளிவந்து கொண்டிருப்பது அறியத்தக்கது. ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றை உடைய இஸ்லாமியத் தமிழ் இதழ் வளர்ச்சிப் போக்கில் பல இதழ்கள் தமது பயணத்தைத் தொடர முடியாமல் குறைந்த காலத்திலேயே மறைந்து விட்டன. ஆயின் ஒரு சில இதழ்கள் உருத்தும் தடைகளை உடைத்துப் பல்லாண்டுக் காலம் எழுச்சியுடன் இயங்கின; இயங்கிக் கொண்டிருக்கின்றன. இஸ்லாமியக் கொள்கைகளையும் வாழ்வியல் நெறிமுறைகளையும் எடுத்துரைக்கும் வகையில், முஸ்லிம் சமுதாய முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டதாக, முஸ்லிம் வாசகர்களை முன்னிறுத்தி அமைந்த இஸ்லாமியத் தமிழ் இதழ் வரலாற்றில் நிகழ்ந்த சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை அறியச் செய்யும் நோக்கில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

முதல் இஸ்லாமியத் தமிழ் இதழ்

1869–ஆம் ஆண்டில் துவான் பாபா யூனூசு என்பவரால் வெளியிடப் பெற்ற அலாமத் லங்காபுரி என்ற இதழையே முஸ்லிம்களால் நடத்தப் பெற்ற தமிழ் இதழ்களுள் காலத்தால் முந்தியதாக அறிய முடிகிறது. அரபுத் தமிழில் கையெழுத்து இதழாக வெளிவந்த இவ்விதழ், இஸ்லாமியக் கொள்கைகளை அறியச் செய்யும் நோக்கில் இயங்கியதாக அறிய இயலவில்லை. எனவே இதனையும் 1875 –இல் சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த சிங்கை வர்த்தமானியையும், 1876- இல் இலங்கையிலிருந்து வெளிவந்த புதினா லங்காரியையும், 1878- இல் சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த தங்கை நேசனையும் இஸ்லாமியத் தமிழ் இதழ்கள் என்று கூற இயலவில்லை. இந்நிலையில் 1882-ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் 21- ஆம் நாள் இலங்கையிலுள்ள கண்டியிலிருந்து தொடங்கப் பெற்ற முஸ்லிம் நேசன் என்ற இதழ் இஸ்லாமியத் தமிழ் இதழ் என்ற வரைவு இலக்கணத்திற்கு இயைய அமைந்திருப்பதால் இவ்விதழையே முதல் இஸ்லாமியத் தமிழ் இதழ் என்று குறிப்பிட இயல்கிறது.

முஸ்லிம் நேசன் இஸ்லாமியத் தமிழ் இதழ் வரலாற்றில் முதலாவதாக மட்டும் அமையாது முதன்மையானதாகவும் திகழ்ந்துள்ளது. தமிழ்ப் புதின வரலாற்றில் இரண்டாவதாகவும், தமிழ்த் தொடர்கதை வரலாற்றில் முதலாவதாகவும் விளங்குகின்ற ‘அசன்பே சரித்திரம்’ என்னும் புதினத்தைப் படைத்த சித்தி லெப்பை முகம்மது காசிம் மரைக்காயரே முஸ்லிம் நேசனின் ஆசிரியர் என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழ்நாட்டின் முதல் இதழ்கள்

முஸ்லிம் நேசனைத் தொடர்ந்து சில இதழ்கள் வெளிநாட்டிலிருந்து வெளிவந்துள்ளன. 1883 –இல் குலாம் காதிறு நாவலரை ஆசிரியராகக் கொண்டு வித்தியா விசாரிணி என்னும் இதழ் பினாங்கிலிருந்து வெளி வந்துள்ளது. அ.லெ.கா. முகிய்யித்தீனை ஆசிரியராகக் கொண்டு 1886 –இல் சர்வ ஜன நேசன் என்னும் இதழ் கொழும்பிலிருந்து வெளி வந்துள்ளது. 1887 –ஆம் ஆண்டில் அ.மு. மரைக்காயரை ஆசிரியராகக் கொண்டு உலகநேசன் என்னும் இதழ் பினாங்கிலிருந்தும் அதே ஆண்டில் சி.கு. மகுதூம் சாயபுவை ஆசிரியராகக் கொண்டு சிங்கை நேசன் என்ற இதழ் சிங்கப்பூரிலிருந்தும் வெளிவந்துள்ளன.

1888–ஆம் ஆண்டில் தான் தமிழ்நாட்டில் இஸ்லாமியத் தமிழ் இதழ்கள் தோற்றம் பெற்றுள்ளன. அவ்வாண்டில் முஹம்மது யூசுபை ஆசிரியராகக் கொண்டு சம்சுல் ஈமான் என்ற திங்கள் இதழ் சென்னை யிலிருந்தும், காசிம் முகைதீன் இராவுத்தரை ஆசிரியராகக் கொண்டு முகமது சமதானி என்ற கிழமை இதழ் காரைக்காலிலிருந்தும், குலாம் காதிறு நாவலரை ஆசிரியராகக் கொண்டு வித்தியா விசாரிணி என்ற கிழமை இதழ் நாகூரிலிருந்தும் வெளிவந்துள்ளன.

முதல் நாளிதழ்

1893- ஆம் ஆண்டு இலங்கையில் மு.அ. சாகிபு மரைக்காயரால் திங்கள் இருமுறை இதழாகத் தொடங்கப் பெற்ற இஸ்லாம் மித்திரன் 1897 ஜூலைத் திங்கள் 20- ஆம் நாளிலிருந்து நாளிதழாக 1906 –ஆம் ஆண்டு வரை நடத்தப் பெற்றது. எனவே இஸ்லாம் மித்திரனே இஸ்லாமியத் தமிழ் இதழ் வரலாற்றில் முதல் நாளிதழாக விளங்குகிறது. இவ்விதழின் ஆசிரியராகிய உதுமான் முஸ்லிம் நேசன் இதழிலும் எட்டு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார் என்பது சுட்டத்தக்கது.

முதல் கிழமை மும்முறை இதழ்

1897- இலிருந்து நாளிதழாக நடைபெற்ற இஸ்லாம் மித்திரன் 1906 –இல் கிழமை மும்முறை இதழாக வெளிவந்தது. இதுவே முதல் கிழமை மும்முறை இதழாகும். இவ்விதழ் செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாள்களில் வெளிவந்தது. இஸ்லாமியத் தமிழ் வரலாற்றில் இஸ்லாம் மித்திரனைத் தவிர வேறு எவ்விதழும் கிழமை மும்முறை இடைவெளியில் நடைபெறவில்லை என்பது சுட்டத்தக்கது.

முதல் கிழமை இருமுறை இதழ்

1915 –ஆம் ஆண்டில் கிழமை இருமுறை என வெளிவந்த இஸ்லாம் மித்திரனே இப்பருவ வகையில் அமைந்த முதல் இஸ்லாமியத் தமிழ் இதழாக அமைகிறது. இவ்விதழ் புதன், சனி ஆகிய இரு நாள்களில் வெளிவந்தது. இஸ்லாமியத் தமிழ் இதழ் வரலாற்றில் இவ்விதழ் மட்டுமே கிழமை இருமுறை இடைவெளியில் வந்த ஒரே இதழ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் கிழமை இதழ்

முதல் இஸ்லாமியத் தமிழ் இதழாகிய முஸ்லிம் நேசன் கிழமை இடைவெளியில் நடைபெற்றுள்ளது. எனவே 1883 – ஆம் ஆண்டில் வெளிவந்த இவ்விதழே முதல் கிழமை இதழ் என்பது உறுதியாகிறது. இவ்விதழ் திங்கட்கிழமை தோறும் வெளிவந்தது.

முதல் திங்கள் இருமுறை இதழ்

நாள், கிழமை மும்முறை, கிழமை இருமுறை ஆகிய பருவ இதழ்களின் வரலாற்றில் முதலாவதாக வெளிவந்த சிறப்பினைப் பெற்றுள்ள இஸ்லாம் மித்திரன் 1893 –இல் தொடங்கப் பெற்ற போது திங்கள் இருமுறை இதழாகவே வெளிவந்தது. இவ்விதழுக்கு முன்னர் வேறு எவ்விதழும் திங்கள் இருமுறை இடைவெளியில் வெளிவராததால் இஸ்லாம் மித்திரனே இஸ்லாமியத் தமிழ் இதழ்களில் முதலாவதாகத் தோற்றம் பெற்ற திங்கள் இருமுறை இதழ் எனத் துணியலாம்.

முதல் திங்கள் இதழ்

இதுவரை வெளிவந்துள்ள இஸ்லாமியத் தமிழ் இதழ்களுள் திங்கள் இடைவெளியில் வந்த இதழ்களே மிகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றுள் 1888 –ஆம் ஆண்டில் சென்னையில் தொடங்கப் பெற்ற சம்சுல் ஈமான் என்ற இதழ் முதல் திங்கள் இதழாகத் திகழ்கிறது.

முதல் இரு திங்கள் இதழ்

காதியானிக் கொள்கைகளைக் கடுமையாக எதிர்த்த ஹிபாஜத்துல் இஸ்லாம் 1930 –இல் தொடங்கப் பெற்ற போது திங்கள் இதழாக வெளி வந்தது. 1937 –இல் இரு திங்கள் என மாறியது. அதற்கு முன்னர் இரு திங்கள் இடைவெளியில் இதழ் எதுவும் வெளிவந்ததாக அறிய இயல வில்லை. எனவே ஹிபாஜத்துல் இஸ்லாம் இதழே இப்பருவ வகையில் தோன்றிய முதல் இதழ் என்பது வெளிப்படை.

முதல் காலாண்டு இதழ்

1911 ஜூலை இஸ்லாம் நேசன் இதழ்த் தலையங்கத்தில் “இஸ்லாம் நேசன் 1909 வருடம் செப்டம்பர் மாதத்தில் தொடங்கிற்று. அம்மாதத் திலிருந்து 1910 வருடம் ஜூன் மாதம் முடிய மட்டும் மூன்று மாதத்துக்கு ஒரு முறை விகிதம் நான்கு பத்திரிகைகளே வெளிவந்தன… மாதாந்திரப் பத்திரிகையின் முதல் சஞ்சிகை 1910 ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பமாயிற்று” என்ற குறிப்பு காணப் பெறுகிறது. இவ்விதழுக்கு முன் வேறு இதழ் எதுவும் காலாண்டு இடைவெளியில் வெளிவரவில்லை. எனவே இஸ்லாம் நேசனே இவ்வகையில் அமைந்த முதல் இதழாக விளங்குகிறது. இஸ்லாமியத் தமிழ் இதழ் வரலாற்றில் சமுதாயம், இஸ்லாமியச் சிந்தனை, நிதாவுல் இஸ்லாம், அல் ஜம் இய்யத், செளத்துல் உலமா, அல்ஹுதா, நமது முற்றம் ஆகிய மேலும் ஏழு இதழ்களும் காலாண்டு இதழ்களாக வெளிவந்துள்ளதை அறிய முடிகிறது.

முதல் அரையாண்டிதழ்

சிங்கப்பூர் வக்ஃப் வாரிய இதழாகிய செய்திச்சுடர் 1991- ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் தொடங்கப் பெற்று ஆறு திங்களுக்கொரு முறை வெளிவந்து கொண்டிருக்கிறது. இதுவே அரையாண்டு இடைவெளியில் நடைபெறும் முதல் இஸ்லாமியத் தமிழ் இதழாகவும் இவ்வகையிலமைந்த ஒரே இதழாகவும் விளங்குகிறது.

முதல் எதிர் இதழ்

ஓர் இதழின் கருத்துக்களை மறுத்துரைப்பதற்காகவே சில பக்கங்களை ஒதுக்கிய இதழ்களையும் இஸ்லாமியத் தமிழ் இதழ் வரலாற்றில் காணமுடிகிறது. இவ்வகை இதழ்களை எதிர் இதழ்கள் எனலாம்.

முதல் இஸ்லாமியத் தமிழ் இதழாகிய முஸ்லிம் நேசன் சமுதாயத்தில் புரையோடிப் போயிருந்த மூடப்பழக்க வழக்கங் களையும் இஸ்லாத்திற்கு முரணான கருத்துகளையும் மக்களுக்கு உணர்த்தி அவற்றைக் களைகின்ற பணியினைச் செய்தது.

முஸ்லிம் நேசன் தோன்றி மூன்றாண்டுகளுக்குப் பின்னர்த் தொடங்கப் பெற்ற சர்வஜன நேசன் அவ்விதழின் கருத்துக்களை மறுத்து எழுதி வந்தது. முஸ்லிம் நேசனும் உடனுக்குடன் தகுந்த பதிலளித்து வந்தது. ஒன்றனது கருத்தை மற்றொன்று மறுக்கின்ற எதிர்மைப் போக்கு இவ்விரு இதழ்களிலிருந்தே தொடங்குகின்றதெனலாம்.

திருக்குறளை முகப்பில் இடம் பெறச் செய்த முதல் இதழ்

‘தமிழ் இதழ்களின் முகப்பில் திருக்குறள்’ என்ற கட்டுரையை எழுதிய வீ. கோபால், 1897- இல் வெளிவந்த ஞான போதினி என்ற இதழை முகப்பில் திருக்குறளை இடம் பெறச் செய்த முதல் இதழ் என்கிறார் (’வள்ளுவம்’ இதழ் மே, ஜூன் 1999, ப. 68). ஆயின் இவ்விதழ் வெளிவருவதற்குப் பதினோராண்டுகளுக்கு முன்னரே, அஃதாவது 1886- ஆம் ஆண்டிலேயே சர்வஜன நேசனில் திருக்குறள் இடம் பெற்றுள்ளதால் இவ்விதழே திருக்குறளை முகப்பில் வெளியிட்ட முதல் இதழ் என்று துணிந்து கூறலாம்.

இவ்விதழின் முகப்புப் பக்கத்தில்,

“ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார்”

என்னும் குறள் இடம் பெற்றுள்ளது. இது தமிழ் இதழியலில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தகவல் என்பது ஈண்டுச் சுட்டிச் சொல்லத் தக்க செய்தியாகும். அது மட்டுமல்லாது, 1887- ஆம் ஆண்டில் வெளிவந்த சிங்கை நேசனில்,

“தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.”

என்ற திருக்குறள் காணப் பெறுவதால், திருக்குறளை முகப்பில் வெளியிட்ட இரண்டாவது இதழ் என்ற பெருமையைச் சிங்கை நேசன் பெறுகிறது. அதற்கு அடுத்த நிலையிலேயே வீ. கோபால் குறிப்பிடும் ஞான போதினி அமைகிறது.

பெண் ஆசிரியர் பொறுப்பேற்ற முதல் இதழ்

இஸ்லாமியத் தமிழ் இதழ் வரலாற்றில் தொடக்கம் முதல் இன்று வரை ரமீஜா, அனீஸ் பாத்திமா, ஆயிஷா பீவி, அலீமா ஜவகர், பானு நூர் மைதீன் ஆகிய பெண்டிர் ஐவர் மட்டுமே இதழாசிரியராகப் பொறுப் பேற்றுள்ளமையை அறிய முடிகிறது. இவர்களுள் 1961- இல் முஸ்லிம் முரசின் ஆசிரியர் பொறுப்பேற்ற ரமீஜா, முதல் பெண் ஆசிரியர் என்னும் பெருமையைப் பெறுகிறார். முஸ்லிம் முரசு, பெண் ஒருவர் ஆசிரியர் பொறுப்பேற்ற முதல் இதழ் என்ற சிறப்பைப் பெறுகிறது.

முதல் மகளிர் இதழ்

பெண்களுக்கான அறிவுரைகள், மருத்துவச் செய்திகள், சமையல் குறிப்புகள் ஆகியவற்றுடன் இஸ்லாமியக் கருத்துக்களைத் தாங்கித் தற்போதும் வெளிவந்து கொண்டிருக்கும் இதழான நர்கிஸ் 1972- இல் திருச்சியில் தொடங்கப் பெற்றது. இவ்விதழே முதல் மகளிர் இதழாக விளங்குகிறது.

முதல் ஆய்விதழ்

இலங்கையிலுள்ள நளீமிய்யா இஸ்லாமிய்யா வெளியீட்டுப் பணியகத்தின் சார்பில் 1979- ஆம் ஆண்டில் தொடங்கப் பெற்ற இதழ் இஸ்லாமியச் சிந்தனை. இவ்விதழில் இடம் பெறும் கட்டுரைகள் அடிக் குறிப்புகளுடனும் துணைநூற்பட்டியலுடனும் ஆய்வுப் போக்கில் அமைந்திருக்கின்றன. இவ்வகையிலான இதழ் வேறு எதுவும் இதுவரை வெளிவராததால் இதுவே முதல் ஆய்விதழாகவும் ஒரே ஆய்விதழாகவும் தனித்துத் திகழ்கிறது.

பிற சமயத்தவரையும் கருத்திற் கொண்ட முதல் இதழ்

இஸ்லாத்தை அனைத்துத் துறைகளிலும் நிலை நாட்டும் நோக்கத்துடன் முஸ்லிம் அல்லாத பிற சமயத்தாரிடம் இஸ்லாத்தை எடுத்துரைக்கும் வகையில் தொடங்கப் பெற்ற முதல் இதழாகச் சமரசம் திகழ்கிறது. இவ்விதழ் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இயக்கத்தின் சார்பில் 1980- ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 15- ஆம் நாள் தொடங்கப் பெற்று இன்று வரை தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. எழுத்தாளர் சுஜாதா 2006- ஆம் ஆண்டில் சிறந்த பக்தி இதழாகச் சமரசத்தைத் தேர்ந்தெடுத்துள்ளமை (ஆனந்த விகடன், 03.01.07) இவ்விதழின் சிறப்பை உணர்த்தும்.

முனைவர் பட்ட இதழியல் ஆய்வு மேற்கொள்ளப் பெற்ற முதல் இதழ்

மிகுதியாக இல்லையெனினும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவிலாது பிற தமிழ் இதழ்கள் இதழியல் ஆய்வுக்கு உட்படுத்தப் பெற்றிருக்க, இஸ்லாமியத் தமிழ் இதழ் எதுவும் அவ்வகை ஆய்விற்கு மேற்கொள்ளப் பெறா நிலையில் பேரா. மு.இ. அகமது மரைக்காயர் “சமரசம் இதழின் கருத்தியல் நிறுவல் உத்திகள்” என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி முனைவர் பட்டம் பெற்றுள்ளார். எனவே இதழியல் நோக்கில் முனைவர் ஆய்வு மேற்கொள்ளப் பெற்ற முதல் இஸ்லாமியத் தமிழ் இதழாக சமரசம் விளங்குகிறது.

முடிவுரை

இஸ்லாமியத் தமிழ் இதழ் வரலாற்றின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் சில கண்டறியப் பெற்று இக்கட்டுரையில் சுட்டப் பெற்றுள்ளன. இலக்கிய ஆய்வுகளில் ஆர்வம் மிகக் கொண்டுள்ள ஆய்வாளர்கள் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பரப்பினை உடைய இஸ்லாமியத் தமிழ் இதழியலில் ஆய்வு முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினால் சமயம், சமுதாயம் மட்டுமல்லாது இலக்கியம் தொடர்பான அரிய உண்மைகள் பலவற்றைக் கண்டறிய இயலும் என்பதில் ஐயமில்லை.

(நன்றி : சமரசம், ஜனவரி 16 –31, 2009)

நவீன இலக்கியத்தின் காலியிடத்தில் உடைத்த அழுகிய கோழி முட்டை

சமீபத்தில் நாலைந்து நாட்களாக கடுமையாக முயன்று நான் படித்து முடித்த நாவல் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை. எனக்குள் சில கேள்விகள் தவிர்க்க முடியாமல் எழுந்தன. ஆனால், “இந்நாவல் குறித்து எழக்கூடிய கேள்விகளுக்குப் பதில் எதையும் சொல்லக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்” (பக். 9) என்று ‘மெளனத்தைப் பேசுதல்’ என்று தலைப்பிடப்பட்ட தனது முன்னுரையில் கூறுகிறார் சல்மா. போகட்டும். அவர் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. வாசகர்களுடன் எனது கேள்விகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று அவர் தடை விதிக்கவில்லையே! எனவே அவற்றை இங்கே உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

பெண்களால் நிரப்பப்பட்ட ஒரு உலகத்தை விரிக்கிறது நாவல். அவ்வப்போது ஆண்களும் வந்து போகிறார்கள். கதை நடப்பது ஒரு கிராமம் (என்பதாகத்தான் தெரிகிறது). ஆறு முஸ்லிம் குடும்பங்களையும் அக்குடும்பங்களின் மனிதர்களாக, கணவர்கள், மனைவிகள், சகோதர சகோதரிகள், குழந்தைகள் என கிட்டத்தட்ட 42 பாத்திரங்களையும், மாரியாயி, உமா, சிவா, முருகன் போன்ற சில முஸ்லிமல்லாத பாத்திரங்களையும் சுற்றி நடக்கிறது இந்த நாவலின் கதை.

கதை என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒன்றுமில்லை. இது பின்நவீனத்துவ எழுத்தின் தன்மையாக இருக்கலாம். வயதுக்கு வராத அல்லது வயதுக்கு வந்து கொஞ்ச காலமே ஆன சின்னப் பெண்களை அடாவடித்தனமாக, மனைவிகளைப் பொருட்படுத்தாத குடும்பத் தலைவர்களாக இருக்கும் ஆண்கள், அதாவது தகப்பன்மார்கள், மகளைவிட 15 அல்லது 20 வயது மூத்த ஆண்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பது, பொருத்தமில்லாத கல்யாணத்திலிருந்து துணிச்சலாக சில பெண்கள் விவாகரத்து கேட்டு ஒதுங்கி வாழ்வது, உடல் தாகத்தையும் தனிமையையும் பொறுக்க முடியாமல் அவர்கள் வேறு ஆண்களோடு சோரம் போவது, இதையொட்டி நிகழும் மரணங்கள், ஊர் விலக்கல்கள், சண்டைகள், இந்த எல்லாவற்றிலும் கலந்து கொள்ளும் பெண்களின் வாய்வழி புறப்படும் கருத்துக்கள், நம்பிக்கைகள், ஆண்களைப் பற்றிய அவர்களது எண்ணங்கள், பொதுவான நம்பிக்கைகள், மூடப்பழக்கவழக்கங்கள் — இவற்றையெல்லாம் பதிவு செய்கிறது இந்த நாவல்.

ஒரு உதாரணம் : திருமணம் முடித்த 15 நாட்களுக்குப் பிறகுதான் பீவி வயதுக்கே வந்தாள் (பக். 96).

இந்த கதையினூடே இரண்டு விதமான பதிவுகளைப் பார்க்க முடிகிறது. அவற்றை சல்மா ஸ்பெஷல் என்று சொல்லலாம்: 1. போலித்தனமான பெண்ணியக் குரல். துணிச்சல் என்ற போர்வையில் வெளிப்படுத்தப்படும் வக்கிரங்களும் இதில் அடக்கம். 2. மதம் குறித்த சந்தேகங்களை, கேள்விகளாகவும், கிண்டலாகவும் அவர் வெளிப்படுத்தியிருக்கும் விதம். ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ என்பதால் இந்த இரண்டையும் ஜாமத்துக்கு ஒன்றாக வைத்துக்கொள்ளலாம்.

முதலில் பெண்களின் பாத்திரப்படைப்புக்கு வருவோம். ராபியா என்ற சின்னப்பெண்ணின் இயற்கை ரசனையில் தொடங்கி மரப்பாச்சி பொம்மையை அஹ்மது என்ற தன் காதலனாக நினைத்துக்கொண்டு அவள் அணைத்துக்கொள்வதில் முடிகிறது நாவல். சின்னப் பெண் என்றால் ரொம்பச் சின்னப்பெண் அல்ல. வயதுக்கு வரும் நிலையில் இருப்பவள். அவளுடைய உயிர்த்தோழி அவளைவிட கொஞ்சம் பெரியவளான மதினா.

இந்த இருவரும் என்ன செய்கிறார்கள்? ஊர் சுற்றுகிறார்கள். ஆண் தோழர்களோடு விளையாடுகிறார்கள். குறிப்பாக அஹ்மது என்பவனோடு. நோன்பு நாட்களில் சினிமாவுக்குப் போகிறார்கள். அதுவும் பலான படத்துக்கு. “‘ஏ’ படத்துக்கா போயிட்டு வர்றே நாயே” என்று அவளை அவள் அம்மா கண்டிக்கிறாள்.

சின்னப் பெண்களோ அல்லது பெரிய பெண்களோ பலான படங்களுக்கு எந்த நாளும் செல்வதில்லை. அதுவும் ஜமாஅத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு சின்ன கிராமத்தில் இருக்கும் முஸ்லிம் பெண்கள். இது வலிந்து செய்யப்பட்ட ஒரு பதிவாகும்.

இதன் மூலம் சல்மா சொல்ல விரும்புவது என்ன? ஆண்கள் பலான படம் பார்க்கலாம் என்றால் பெண்களும் பார்க்கலாம் என்றா? பலான படம் பார்ப்பது எந்த வகையிலும் மன ஆரோக்கியத்தை பாதிக்காது, மாறாக வலுப்படுத்தவே செய்யும், எனவே அதை அனுமதிக்க வேண்டும் என்றா? எப்படி இருப்பினும் இது நடப்பு நிஜங்களில் காணமுடியாத ஒரு கற்பனை நிகழ்வு.

ஆனால் பலான படம் என்று தெரியாமல்தான் ராபியா சென்றதாக ஒரு சப்பைக் கட்டும் உள்ளது. ஆனால் எந்த இடத்திலும் அப்படிச் சென்றது தவறு என்பதான குறிப்பு கிடையாது. சரி, தெரியாமல் போனதாகவே வைத்துக்கொள்வோம். ஆனால் சின்னப் பெண்கள், முஸ்லிம் பெண்கள், அதுவும் நோன்புடைய காலத்தில் படத்துக்குப் போவது நடக்காத ஒன்று. ஆனால் இந்த ராபியாவுக்கு திருட்டுத்தனமாக சினிமா பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. அவளுடைய தொடர்ந்த பழக்கமாகவே அது இருந்து வந்திருக்கிறது. “அவள் வருவாளென்று நிச்சயமாகத் தெரியும்” என்று அஹ்மது நினைக்கிறான் (பக். 81).

இதுமட்டுமா? வஹீதா என்ற பெண்ணுக்கு திருமணமானபோது சொந்தக்காரப் பெண்களில் சில விவரமானதுகள் உடல் உறவுக் காட்சிகளை வெளிப்படுத்தும் நீலப்புத்தகங்களை மதினாவிடம் கொடுத்து அனுப்புகிறார்கள். அதில் ஒன்றை ‘சுட்டு’ மதினா ராபியாவிடம் காண்பிக்கிறாள் (பக். 386). புது மணப்பெண் வஹீதாவுக்கு நீலப்பட கேசட்டுகளை போட்டுக் காட்டுகிறார்கள் மும்தாஜும் நபிஸாவும் (பக். 108 & 368). இதனாலெல்லாம் ஏற்படும் விளைவுகள் என்ன? ஒரு நாள் அம்மா அப்பா விளையாட்டு விளையாடும்போது அஹ்மதுவுக்கு ராபியா தன் மார்பைச் சுவைக்கக் கொடுத்து மகிழ்கிறாள் (பக்.177). ராபியா மதினாவுக்கிடையில் ‘லெஸ்பியன்’ ஈர்ப்பு வேறு ஏற்படுகிறது. அணைத்தல் முத்தமிடல் என (பக். 352).

சினிமா பார்க்கும் பழக்கம், அதுவும் தடைசெய்யப்படும் நோன்பு காலத்தில் பார்ப்பது பல பெண்களுடைய பழக்கமாக இருக்கிறது இந்த கிராமத்தில். முடியாதவர்கள் வருத்தப்பட்டுக் கொள்கிறார்கள். “அதுசரி, நோன்பு நாள்ல தியேட்டருக்குப் போயி படம் பாக்கச் சொல்றியாக்கும். அந்தப் பாவத்தெ என்னா செய்யிறது ? சலிப்புடன் சொல்லிய சொஹ்ராவுக்கு படம் பார்க்க முடியாத வருத்தம் இழையோடியது” (பக். 105).

சினிமா பார்ப்பதோ, பெண்கள் பார்க்க விரும்புவதோ தவறல்ல. ஆனால் முஸ்லிம் பெண்கள் நோன்பு காலத்தில் தொடர்ந்து தவறாமல் படம் பார்க்கச் செல்கிறார்கள் என்பதும், அதை ஆண்கள் எதிர்ப்பதால் அவர்களுக்கு பிரச்சனைகள் வருகின்றன என்பதும் ஒரு கற்பனையான பிரச்சனையின் பதிவு. பெண் சுதந்திரம் என்ற கருத்தின் முட்டாள்தனமான வெளிப்பாடு.

சரி, அந்தக் கிராமத்து பெண்கள் பொதுவாக எப்படிப்பட்டவர்கள்?

நபிஸாவின் கணவன் பஷீர். ஆனால் அவளுக்கு அஜீஸோடு தொடர்பு. ரமேஷ் அம்மாவுக்கு ரெண்டு புருஷன். தலாக் சொல்லப்பட்ட மைமூன் யாருக்கோ குழந்தை உண்டாகிறாள். அக்கா ஆமினா ஒரு கிராமத்து மருத்துவச்சி மூலம் கருக்கலைப்புக்கு ஏற்பாடு செய்கிறாள். அந்த கலைப்பு விஷயம் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வர்ணிக்கப்படுகிறது. கிராமத்து தொழில்நுட்ப கருக்கலைப்பில் மைமூனும் சிசுவும் இறந்துபோகிறார்கள் (பக். 65). நூர்நிஷா வேற்று ஆண்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளவும் ஆரம்பித்தாள் (பக். 213).

பாத்திமாவின் கணவன் ஓடிப்போய்விடுகிறான். பதிலுக்கு பாத்திமாவும் முருகனோடு ஓடிப்போய்விடுகிறாள் (பக். 269). சபாஷ். கணவன் ஓடிப்போவதற்கு மனைவி கொடுக்கும் தக்க பதிலடி அவளும் இன்னொருத்தனோடு ஓடிப்போவதுதான்! அடடா, இதுவன்றோ புதுமைப் பெண்மை!

சிவா என்ற எதிர்வீட்டு இளைஞனிடம் கெட்டுப் போன தன் மகள் பிர்தெளஸை வற்புறுத்தி விஷம் குடிக்க வைத்துக் கொல்கிறாள் அம்மா ஆமினா (பக். 417).

பிர்தெளவ்ஸ் விஷயத்தில் அவள் வழிதவறிச் செல்வதுவரைதான் யதார்த்தம் இருக்கிறது. பெற்ற மகளை விஷம் குடித்துச் சாகச்சொல்லும் தாய், நாவல் தாயாக மட்டுமே இருக்க முடியும். எனக்கு ஜெயகாந்தனின் ‘அக்கினிப் பிரவேசம்’ கதை ஞாபகத்துக்கு வருகிறது. கல்லூரிக்குச் சென்று ஒரு பணக்கார இளைஞனிடம் கற்பை இழந்து திரும்பும் தன் ஏழை மகளின் தலையில் தண்ணீரை ஊற்றிக் குளிக்க வைத்துவிட்டு, நடந்ததை மறந்து விட்டு அவளை புது வாழ்வு தொடங்கச் சொல்லும் தாயின் கதை அது. அதுதான் தாயுள்ளம்.

வறுமையின் காரணமாக சில தாய்மார்கள் பிறந்த உடனேயே பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்துக் கொல்வதை நாம் அறிவோம். ஆனால் தாயையும் மகளையும் பிணைக்கின்ற எந்தவிதமான உணர்ச்சிப் பூர்வமான உறவுச் சூழ்நிலைகளும் ஏற்படாத காலகட்டம் அது. பருவ வயது வரை வளர்ந்து, ஒருவனுக்குக் கட்டியும் கொடுத்து, பின் அவள் அவனைப் பிரிந்து, வாழாவெட்டியாக தனிமையில் வாடி, தாயோடு இருக்கும் காலகட்டத்தில் தவறு இழைத்துவிடுவாளேயானால், அவளை விஷம் குடித்துச் சாகு என்று சொல்வது தாயுள்ளத்துக்குப் பொருந்தாத பதிவு.

கதை பூராவும் பல பெண்கள் ஒழுக்கமற்றவர்களாக இருப்பதை சரிக்கட்டும் ஒரு முயற்சியாகவே இதை நாம் பார்க்க முடிகிறது.

பிர்தவ்ஸ் யூசுபுடன் வாழ விரும்பாததற்கு அவள் சொல்லும் காரணமும் இந்த போலித்தன்மையை உறுதிப்படுத்துகிறது. அவள் தன் கணவனை விரும்பாதற்கு இரண்டு காரணங்களாம். ஒன்று அவனது தோற்றம். “அவனது தோற்றம் மட்டும் காரணமில்லை”, அவனை கணவனாகத் தேர்ந்தெடுத்த தனது மச்சான் “கரீமைத் தோற்கடிக்க வேண்டும் என்ற வெறி அவளிடம் இருந்தது” (பக். 37). ஒரு பெண் தன் கணவனுடனான உறவை முறித்துக்கொண்டு வாழாமல் இருப்பதற்கான காரணங்கள் இவை!

பெண்களைப் பற்றிய பதிவு இது. இதற்கு சப்பைக் கட்டு கட்டுகிறது ரவிக்குமாரின் முன்னுரை. அவர் சொல்கிறார். “திருமண உறவு, குடும்ப அமைப்பு ஆகியவை எந்த அளவு இறுக்கமானவையாக உள்ளனவோ அந்த அளவு விபச்சாரத்தின் தேவையை அதிகரிக்கச் செய்கின்றன” (பக். 15). குடும்பம் கட்டுக்கோப்பாக இருந்தால் பெண்கள் விபச்சாரிகளாக மாறுவார்கள் என்ற இந்த ‘ஆராய்ச்சி முடிவை’ ஒத்துக்கொள்வீர்களா?

ஷெரிபாவின் கடிதம்

ஷெரிபா என்பவள் தன் கணவனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள் (பக். 344). இலக்கணப் பிழைகள் மலிந்த தமிழில் அது இருக்கிறது. படிப்பறிவில்லாத ஒரு பெண்ணின் அன்பை வெளிப்படுத்தும் ஒரு பதிவாம் அது. இதில் விஷேஷம் என்னவெனில், இது ஷெரிபாவுக்குத் தெரிந்த தமிழ் அல்ல. சல்மாவால் ஷெரிபாவுக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட கடிதம். நான் இப்படிச் சொல்வதற்குக் காரணம் உள்ளது. கடிதத்தை ஊன்றி வாசித்தால் ‘தொழில்நுட்பம்’ புரிந்துவிடும். அடைப்புக் குறிகளுக்குள் பேசுவது நான்.

அன்புல்ல மச்சனுக்கு,

அஸ்ஸலமு அலைக்கும். …இன்றொடு நிங்கள் எண்ணை விட்டு போய் முப்பத்திரன்டு நாட்களாகிறது.

(நெடிலுக்கு பதிலாக குறில். இது ஒரு டெக்னிக். பெரிய எழுத்துக்கு பதிலாக சின்ன எழுத்து. இது ஒரு டெக்னிக். ‘ள்’க்குப் பதிலாக ‘ல்’. ‘ன்’க்குப் பதிலாக ‘ண்’. ஆனால் ‘நாட்கள்’ என்பதில் மட்டும் நெடிலும் ‘ந’வும் சரியாக இருக்கிறது கவனிக்கவும்). ஒவ்வொரு நாலும்…திணமும் துங்கும் நேரத்திள் முலித்திருந்து உங்கலை…நிணைத்துக்கொள்வேன். இருந்திருப்பார்கலோ தெரியவிள்ளை. பிள்லைகளை…நிணைக்க நேரமிள்லாமல் எனக்கும் பிள்லை பிரந்து விட்டாள். உங்கலை நினைத்து கொண்டிருக்க (இங்கே ‘நினைத்து’ என்று சரியாக எழுதுகிறாள் ஷெரிபா. ‘அன்புல்ல’ என்று ‘ள்’, ‘ள’ இரண்டையும் தவறாக எழுதியவள், ‘பிள்ளை’ என்பதில் ஒரு ‘ள்’ சரியாகப் போடுகிறாள்). நேரமிறுக்காதோ…நேட்று…திரந்தபோது…கண்ணிள்..நற்பது நாளிலேயே (‘நாலும்’ என்று மேலே உள்ளது. ஆனால் இங்கே ‘நாளிலேயே’ என்று சரியாகப் போடப்பட்டிருக்கிறது) நிங்கள் உருக்கு போய்விட்டது கண் மரந்தார்போல இருக்கிரது…ஒட்டியிருக்கிறேன்…(‘ஓ’வுக்குப் பதிலாக ‘ஒ’) மீதி 23 மாதத்தை (இங்கே நெடில் சரியாக வந்துள்ளது) எப்படி ஓட்டப்போகிறேன் (இங்கே ‘ஓ’ சரியாக போடப்பட்டிருக்கிறது) தெரியவிள்லை. நினைக்கையிலேயே (‘னை’ சரியாக உள்ளது. ஆனால் மேலே ‘ணை’ உள்ளது). மளைப்பாக இருக்கிரது. எங்க வீட்டிளும் உங்க வீட்டிளும் அணைவரும் நலம். உரில்…முடியும்போது போணில் பேசுங்கல். உங்க குரலை கேட்டலாவது ஆருதலாக இருக்கும்.

முத்தங்கலுடன்

ஷெரிபா

‘There is method in his madness’ என்று பைத்தியக்காரனாக நடிக்கும் ஹேம்லட் என்ற பாத்திரத்தைப் பற்றி ஷேக்ஸ்பியரில் ஒரு வரி வரும். முறைப்படி இழைக்கப்பட்ட தவறுகளுடன் கூடிய ஷெரிபாவின் கடிதம் எனக்கு அதைத்தான் ஞாபகப்படுத்தியது. நாவலின் ஒட்டுமொத்த போலித்தனத்தையும் அடையாளம் காட்டும் பகுதியாக இது மாறிப்போகும் என்று சல்மா நினைத்திருக்க மாட்டார் பாவம்.

ஆண்களைப் பற்றிய பதிவும் இதைப்போன்ற மிகைப்படுத்தப் பட்டதேயாகும். ஆண்கள் அனைவரும் அயோக்கியர்கள். பொம்பளைப் பொறுக்கிகள். பெண்களை அவர்கள் பெண்கள் என்ற காரணத்துக்காகவே மதிக்காதவர்கள். சில உதாரணங்கள்.

சொஹ்ராவின் கணவன் கரீம் மாரியாயியை வைத்துக்கொண்டிருக்கிறான். கனி ராவுத்தர் அரசமரத்தடியில் அமர்ந்து இஸ்மாயிலிடம் தன் பத்துவயது மகளை வைத்து சீட்டாடித் தோற்கிறார் (பக். 59). இரண்டாம் தாரமாக தன் மகளைத் தர ஒத்துக்கொள்கிறார். இந்த மகாபாரத அல்லது ‘கிழக்குச் சீமையிலே’ கிராமம் எங்குள்ளது சகோதரி?

தன் மகள் வஹீதாவைவிட 15 வயது பெரியவனும் தன் அக்கா மகனுமாகிய சிக்கந்தருக்கு வஹீதாவை மணமுடிக்க காதர் முடிவெடுக்கிறார். அதில் அவர் மனைவி றைமாவுக்கு விருப்பமில்லை. ஆனால் அவர் நினைக்கிறார். “அவளிடம் சம்மதம் கேட்பது தேவையில்லாமல் அவளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக மாறக்கூடும். திருமண வேலைகளைத் தொடங்கிவிடுவதன் மூலமே அவளது கருத்துக்கு மதிப்பில்லை என்பதை அவளே உணரும்படிச் செய்யலாம்” (பக். 89).

“ஊர்ல எவன் தான் ஒழுங்கு சொல்லு பாப்பம்? ஆம்பள அப்படித்தான் இருப்பான். பொம்பள அப்பிடி இருந்தாத்தான் தப்பு” கரீம் சொஹ்ராவிடம் (பக். 181).

“ஆண்களில் எவனும் யோக்கியன் இல்லைதான்” றைமா நினைக்கிறாள் (பக். 197).

“இறந்த நூர்நிஷாவின் கணவனுக்கு ஏதோ பெண் நோய் என்று ஊரில் பேசிக்கொண்டார்கள்” (பக். 213).

இறந்து போன வீட்டுக்குச் செல்பவர்கள் பொதுவாகத் திரும்பி வரும்போது ‘போயிட்டு வர்றோம்’ என்று சொல்வதில்லை. ஆனால் இந்த நாவலில் இறப்புக்குச் செல்லும் பெண்கள் அத்தனை பேரும் திரும்பும்போது ஸலாம் சொல்லிவிட்டுத்தான் திரும்புகிறார்கள் (பக். 29).

முஸ்லிம் இளைஞர்கள் பொதுவாக வேஷ்டி கட்டுவதே இல்லை. அதுவும் கல்யாண மாப்பிள்ளை என்றால் சூட்டு கோட்டுதான் பெரும்பாலும். ஆனால் இந்த நாவலில் வரும் மாப்பிள்ளை பட்டு வேட்டி சரசரக்க வருகிறார் (பக். 36).

இப்படிப்பட்ட பதிவுகளின் இன்னொரு பரிமாணமாக, உச்சகட்டமாக, யதார்த்தம் அல்லது துணிச்சல் என்ற நினைப்பில் இன்னொரு காரியத்தையும் சல்மா செய்திருக்கிறார். வெளிப்படையாகப் பேச நாம் கூசும் பச்சையான வார்த்தைகளையும், நிகழ்வுகளையும் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். முக்கியமாக, பெண்களின் உரையாடல் மொழி உடல் தொடர்பானதாகவும், மர்ம உறுப்புகளைச் சுற்றியும், உடலுறவு பற்றியுமே அடிக்கடி நிகழ்கிறது. அதுவும் மரண வீட்டில் குழுமியிருக்கும்போதும். சில உதாரணங்கள்.

“ஏன், சின்ன வயசா இருந்தா படுக்கத் தெரியாதாக்கும்?” (பக். 108).

மும்தாஜைப் பார்த்து ஒருத்தி: “என்னம்மா மாப்பிள்ளை வர்றாராமே? சத்து ஊசி போடுறதுக்கு. தயாரா இரு. உடம்பை தேத்திவை” (பக். 219).

“நீ புள்ளைக்கு தாய்ப்பால் குடுத்தியா, குடுக்கலையா? ஒன்னோட பால்கோவாவைப் பார்த்தா குடுத்தது மாதிரியே தெரியலயே” (பக். 220).

“நீ பிள்ளைக்கி மட்டும் பால் குடுத்திருந்தா அது இப்புடி ஓடுமா ? பாலை நீ மச்சான் கிட்ட குடுத்திருப்ப. அவரு ராத்திரியெல்லாம் தஸ்பீஹ் உருட்டியிருப்பாரு. அதுதான் ஒன்னோடது தொங்கிப் போயிருச்சு” (பக். 220).

கணவன் வருவதைப் பற்றி ஒருத்தி: “(புருஷன்) வந்தாலும் என் சாமானுக்குத்தான் கேடு…ஒரு வாரம் படுக்கலைன்னா, சாமான் நகச்சுத்தி வந்த மாதிரி விண்விண்ணுன்ணு தெறிக்க ஆரம்பிச்சுடுமுல்ல” (பக். 221).

“நாலு திருமணம் செய்து கொள்ளும் அப்துல்லா என்ற ஒரு பணக்கார கிழவனைப் பற்றி நபிஸா: அந்தாளு வயசுக்கு எந்திரிக்கிதா? ஆச்சரியமாவுல்ல இருக்கு” (பக். 240).

பாத்திமாவின் அம்மா நூரம்மா: “வீணாப்போன முண்டை, ஒரு பள்ளப்பய சுண்ணிதானா இவளுக்குக் கெடைச்சிச்சு, துலுக்கப் பயலுது கெடைக்கலயா?” (பக். 272).

அஹ்மது தன் தோழி ராபியாவின் சின்ன மார்பைச் சுவைப்பதை சல்மா இப்படி விவரிக்கிறார்:

“அவள் (ராபியா) ஒன்றும் சொல்லவில்லை. அவன் (அஹ்மது) மெதுவாகத் தவழ்ந்து வந்து அவளது சட்டையைத் தூக்கிவிட்டு மார்பைப் பார்த்தான்…பொம்மையை எடுத்துக் கீழே வைத்துவிட்டு அவளது மார்பை மிருதுவாக வருடினான்…தன் விரல்களால் அதைப் பற்றிக் கைகளில் எடுத்துக்கொள்ள முயற்சிப்பதுபோல் செய்துவிட்டு பிறகு தன் தலையைச் சாய்த்து உதடுகளால் மெதுவாக முத்தமிட்டான். பின் அதனைப் பற்றி உறிஞ்சத் தொடங்கினான் ஒரு குழந்தையைப் போல” (பக். 177).

இதெல்லாம் காட்டுவது என்ன? ‘எல்லா அறிதல்களுடன் விரிகிறது என் யோனி’ என்ற சல்மாவின் கவிதை வரி பிரபலமானது. மாலதி மைத்ரி போன்றவர்கள் இந்த மாதிரி மனித உடலின் மர்ம உறுப்புகள் பற்றிய கவிதைகளை காப்பாற்றும் பொருட்டு ‘யோனி’ என்பதல்லாம் ஒரு குறியீடுதான் என்று கட்டுரை கட்டுரையாக எழுதுகிறார்கள். எனக்கு இந்த விஷயத்தில் வேறு கருத்துள்ளது. யோனி என்பது குறி என்பதுவரை எனக்குத் தெரியும். அது எப்படி குறியீடாகிறது என்பது விளங்கவில்லை. சரி, அந்த விவாதத்துக்கு இப்போது போகவேண்டாம். கவிதை என்பது எதையுமே விரிப்பது அல்ல. திரையை விலக்கிவிட்டுப் பார்த்தால் ஏற்படும் தெளிவைவிட தெளிவாக திரைகளினூடே காட்டவல்லது கவிதை. எல்லாவற்றையும் விரித்துக்கொண்டே போவது இலக்கியமாகாது என்பது அடியேனுடைய மூடிய நம்பிக்கை. ஆனால் இந்த நாவலின் பெண்கள் பேசும் மொழியும் அஹ்மது ராபியா நிகழ்ச்சியும், மதினா ராபியா நிகழ்ச்சியும் காட்டுவது என்ன?

“பின்நவீனத்துவப் பிரதியொன்றில் காணக்கிடைக்கும் சாதகமான பண்புகள் இவை” என்று முன்னுரையில் ரவிக்குமார் சொல்கிறார். யாருக்குச் சாதகமான பண்புகள் என்று அவர் குறிப்பிடவில்லை. போகட்டும். சாருநிவேதிதா சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். தமிழுக்கு இன்னொரு சாருநிவேதிதா கிடைத்துவிட்டார் என்று. ஆனால் பைத்தியக்காரன் வழித்துக் காட்டுகிறான் என்றால் அதே போல செய்துகாட்டித்தான் அடுத்தவருக்குப் புரியவைக்க வேண்டும் என்ற நினைப்பை என்னவென்று சொல்வது? இதுதான் பின்நவீனத்துவமோ!

இனி சல்மாவின் பிரதியின் அடுத்த பக்கத்துக்கு வருவோம். இது மதம் சார்ந்த கேள்விகளை எழுப்பும் பகுதி. ஆங்காங்கு பாத்திரங்கள், குறிப்பாக பெண் பாத்திரங்கள் மூலமாக மதம், சட்டதிட்டங்கள் சார்ந்த கேள்விகளை சல்மா எழுப்புகிறார். சில உதாரணங்கள்.

“இந்த மாசம் பூராவும் நன்மையை மட்டும்தான் சம்பாதிக்கணுமாம்” (பக். 80). “ஜும்ஆவுக்குக் கோடி உடுத்தித் தொழுவது நன்மையாம்” (பக். 98). ‘யாம்’களாகவும் ‘மாம்’களாகவும் மத நம்பிக்கைகளின் மீதான கிண்டல் நாவல் முழுவதும் விரவிக் கிடக்கிறது.

“காதருக்கே தெரியாமல் கருத்தடை செய்துவிட்டு வந்தபொழுது ஷரியத்தை மீறி நடந்து கொண்டதாகக் கூறி கொஞ்சகாலம் றைமாவிடம் பேசாமலிருந்தான்…அவளுக்குத் தெரியும் ஷரியத்தை மீறி ஒரு அடிகூட எடுத்து வைக்க அவனால் முடியாது” (பக் 97).

ஷரீயத்தை மீறுவதுதான் சரி என்ற தொனி இதில் கிடைக்கிறது.

அஹ்மது ராபியாவிடமும் மதினாவிடமும் சவால் விடுவான், “எங்கே, எங்களை மாதிரி உள்ளே வந்து தொழுங்கடி பாப்பம்” (பக். 169). “ஏன் நாமும் போய் பள்ளிவாசலுக்குள்ளேயோ கொத்வா பள்ளியிலோ ஆண்களோடு சேர்ந்து தொழுக கூடாது?” ராபியா (பக். 189).

“இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது? இரண்டு பேர் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினால் யாருக்கென்ன? சிவா முஸ்லிமாக இருந்தால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாமாம். இந்துவாக இருப்பதால் முடியாதாம்” (பக். 283).

“எல்லாவற்றையுமே படைத்த அல்லாவை யார் படைத்திருப்பார்கள்?” (பக். 317).

இத்தகையை கேள்விகளும் இதற்கான பதில்களும் பல முறை கேட்கப்பட்டு பதில்களும் சொல்லப்பட்டு நீர்த்துப் போயாச்சு. ஒரு மதத்தைப் பின்பற்றும் ஒருவர் அதன் சட்டதிட்டங்கள் தொடர்பான சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்துகொள்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால் அப்படிக் கேள்வி கேட்பதே முற்போக்கு என்றும் ஆதிக்கத்துக்கு எதிரான நியாயமான குரலென்றும் எழுத்தில் பதிவு செய்வது, அதுவும் சீரியஸாக அல்ல, ஒரு ஓரமாக, எந்த வகையில் சரி என்று எனக்கு விளங்கவில்லை. திருக்குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்லி ஈரான் போன்ற நாடுகளில் விபச்சாரம் குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி ஏழைப் பெண்களை பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் அடித்துக் கொலை செய்கிறார்கள். இதை எதிர்த்து என்றைக்காவது சல்மா போன்றவர்கள் குரல் கொடுத்துள்ளார்களா? (பார்க்க எனது கட்டுரை கற்காலம்). அதெல்லாம் இவர்களுக்கு முக்கியம் அல்ல. பள்ளிவாசலில் போய் ஆண்களை இடித்துக்கொண்டு தொழவேண்டும். மிக அவசியமான தேவை அதுதான். அதற்காக ஒரு நாவல் எழுதவும் அவர்கள் தயார்.

எந்தக் கேள்விக்கும் சல்மா பதில் சொல்லப்போவதில்லை. ஆனால் raasathi@yahoo.com என்று தன் மின்னஞ்சல் முகவரியை மட்டும் ஏன் கொடுத்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை பாராட்டுக் கடிதங்களை மட்டும் ஒரு நூலாக வெளியிடும் எண்ணமிருக்கலாம்.

கடைசியாக

500 பக்கங்களுக்கு மேல் இருக்கும் இந்த நாவலில் எனது அனுபவத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒரு வாக்கியம்கூட இல்லை. இலக்கியத்தின் சுவை என்பது மருந்துக்குக்கூட இல்லாத மொன்னையான, தட்டையான, முனை மழுங்கிப்போன அல்ல, முனையே இல்லாத, மிக மிகச் சாதாரணமான எழுத்தில் ஒரு நாவல். ஒரே விதமான சம்பவங்கள். பெயர்கள் மட்டும்தான் மாறுகின்றன. ஒரே ஒப்பாரியையே பலகுரலில் பாடுவது மாதிரி. ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாவல் வந்திருந்தால் ஒரு வேளை நவீன இலக்கிய படைப்பாக இது கருதப்பட்டிருக்க வாய்ப்புண்டு. நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்றெல்லாம் இதற்கு ஜால்ரா போடுவதிலிருந்தே இது இலக்கியக் கலப்பில்லாத சுத்தமான அரசியல் என்று தெரிந்துவிடுகிறது.

மோகத்தையே மைய இழையாக வைத்து ‘மோகமுள்’ என்ற அற்புதமான நாவலை ஜானகிராமன் படைக்கவில்லையா? உடலைப் பேசவேண்டுமென்றால் அதற்கு சரோஜாதேவித்தனம்தான் வழியா? அதுதான் பின்நவீனத்துவம் என்றால் அப்படிப்பட்ட பின்நவீனத்துவம் தூக்கி எறியப்பட வேண்டியது.

எழுத்து என்பது நடப்பதையெல்லாம் நடப்பதுபோல சொல்வதல்ல. இருப்பதை எழுதுவதுதான் மிக உயர்ந்த இலக்கியம் என்று சொல்வோமேயானால் நாளிதழ்களும், மற்ற பத்திரிக்கைகளும்தான் இலக்கிய இதழ்களாக இருக்கும். இலக்கியம் என்பதே சொல்முறையில்தான் உள்ளது. நிஜம் ஏற்படுத்தும் பாதிப்பைவிட அதிகமான பாதிப்பை, நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்த வல்லது இலக்கியம். எழுதுமுறையில்தான் ஒரு விஷயம் இலக்கியமாகவோ அல்லது அரசியலாகவோ மாறுகிறது. (பெற்றோர் பெயர், கணவர் பெயர், பிள்ளைகள் பெயர்களெல்லாம் குறிப்பிட்ட சல்மா, சகோதரர் மனுஷ்யபுத்திரன் பற்றி குறிப்பிடாததற்கு ஏதேனும் காரணம் இருக்கலாம். அதையும் அரசியலில் சேர்க்க முடியாது என்று நினைக்கிறேன்).

சல்மா அவர்கள் ஏற்கனவே ஊராட்சி மன்றத் தலைவியாக இருக்கிறார். அரசியல் அவருக்கு வெற்றிகரமாக வருகிறது. அதிலேயே அவர் தொடர்ந்து சேவையாற்ற வாழ்த்துகிறேன். இலக்கியத்தில் அவர் அரசியலைக் கொண்டுவரச் செய்த இந்த மகா முயற்சி கடுமையான தோல்வியாகிவிட்டது. ஏனெனில் உண்மையை நாவலாக்க வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு இல்லை. அதை அவரே முன்னுரையில் எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடுகிறார்:

“நவீன இலக்கியத்தில் காலியாகக் கிடக்கும் பக்கங்களை நிரப்ப வேண்டும் என்கிற ஆர்வமும் கூட, வளர்ந்து கொண்டிருந்தன பக்கங்கள்”. (பக். 9, மெளனத்தைப் பேசுதல்). ஆக, நிறைய பக்கங்கள் எழுதியதன் காரணம் இதுதான்.

ஆனால் காலியாக உள்ள இடம் தூங்கும் இடமா துப்பும் இடமா என்று தெரியாமல் அந்த இடத்தில் யாரும் கால் வைக்க முடியாதபடியும், மூக்கைப் பொத்திக்கொண்டு கடக்கும் படியும் நிரப்பியிருக்கிறார்.

“ஏதேனும் ஒரு கட்டத்தில் வாசகர்களுக்கு அலுப்புண்டாக்கக் கூடிய நீளமான நாவல்தான் இது என்றாலும் பெண்களின் உறைந்து போன காலத்தை உணர்த்த வேண்டிய கட்டாயத்தோடு…” என்று மறுபடியும் இலக்கிய முட்டுக் கொடுக்கிறார். அவருடைய மன உறுத்தலின் விளைவாக இந்த அலுப்பை எடுத்துக்கொள்ளலாம். அவர் சொல்ல வருகின்ற காலம் உறைந்து போயிருப்பதே நல்லது என்று தோன்றுகிறது.

“ஒரே நேரத்தில், மானுடவியல் ஆவணமாக, வரலாற்றுப் பதிவாக, படைப்பு குணம் நிரம்பிய புனைவாக விளங்குகின்ற இந்தப்பிரதியின் ஒளி, நம்மை மேலும் மனிதப்பண்பு கொண்டவர்களாக மாற்றுகிறது. இந்த ஆக்க சக்தி பெண்களுக்கே உரியது” (ரவிக்குமார், பக். 20).

நல்லது. எனது நோக்கம் இலக்கியம் மட்டுமே. இப்படி இமயமலையில் உச்சியின் சல்மாவை வைப்பதற்கு ரவிக்குமாரின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை.