சமூக வலைதளங்களில் பிற மதத்தை அல்லது சாதியைப் பற்றி இழிவாகப் பேசுவதன் வழியாக மக்களிடையே குழப்பத்தையும், கலவரத்தையும் ஏற்படுத்த வேண்டும் எனும் குரூர நோக்கத்துடன் சில சமூக விரோதிச் சக்திகள் செயல்பட்டு வருகின்றன.
ஒரு ஆன்ட்ராய்ட் மொபைலும், இன்டெர்நெட் வசதியும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் நான் பேசுவேன்; அதை யாரும் கேள்விக்கேட்க முடியாது என்பது போலவே பலரின் பதிவுகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் பார்க்கும்போது நமக்கு கோபம் வரலாம். அது இயல்பு. ஆனால் அந்த கோபத்தின் வெளிப்பாடாக ஆபாச வார்த்தையைக் கொண்டு திட்டுவது, அவர்களுக்கு கொலை மிரட்டல் கொடுப்பது என சிலர் பின்னூட்டமிடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இதுவொரு மிகத் தவறான, கண்டிக்கத்தக்க வழிமுறை. எனவே ஒருவர் சமூக ஊடகங்களில் மோசமாகக் கருத்துரைக்கும்போது அந்தத் தளத்திலேயே அது குறித்து ரிப்போர்ட் செய்வதும், பிறகு சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்பதுமே சரியான வழிமுறை.
ஆன்லைன் வசதி இருப்பதால் காவல்துறையில் உடனடியாக புகார் அளிப்பது முன்பைக் காட்டிலும் இப்போது எளிதாகிவிட்டது. சரி, எப்படி ஆன்லைன் மூலமே புகார் கொடுப்பது என்று கேள்வி உங்களுக்கு எழலாம். அதற்கான வழிமுறையை இங்கு பார்ப்போம்.
eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?0 எனும் இந்த லிங்கைப் பயன்படுத்தி உள்நுழைந்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவலை ஒன்றன் பின் ஒன்றாகப் பதிவு செய்ய வேண்டும். மாவட்டம், இடம், ஆகியவை தாங்கள் எங்கு வசிக்கிறீர்களோ அந்த விலாசத்தை மையமாகக் கொண்டு பதிவு செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்யவேண்டிய படிவம்.
உங்கள் விலாசம் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை சரியாகப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். ஏனெனில் அந்த எண்ணுக்குத்தான் பதிவு செய்யப்பட்ட புகார் சம்பந்தமான குறுந்தகவல் கிடைக்கும். மேலும் அதன் மூலமே உங்களைத் தொடர்புகொள்ளவும் முடியும்.
Subject என்று உள்ள இடத்தில் Cyber Offences இணையதளக் குற்றங்கள் என்பதைப் பதிவு செய்து கொள்ளுங்கள். Description-ல் உங்களுடைய புகாரை சுருக்கமாகவும் தெளிவாகவும் புரியும்படி பதிவு செய்யுங்கள். பேஸ்புக் பதிவாக இருந்தால் அந்தப் பதிவின் லிங்கை காபி செய்து அங்கு பேஸ்ட் செய்து விடுங்கள்.
அதன் கீழே உள்ள அட்டாச்மன்ட்டில் அந்த சமூக வலைதள பதிவின் ScreenShot புகைப்படம் மற்றும் அந்தக் குற்றம் சாட்டப்படக்கூடிய நபரின் தகவல்களைப் பதிவேற்றம் செய்துக்கொள்ளுங்கள்.
அதன் பிறகு உங்கள் அலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் கிடைக்கும். அந்தப் புகார் எண்ணை வைத்து உங்கள் புகார் எந்த நிலையில் உள்ளது என்பதை அதில் உள்ள லிங்கை சொடுக்கி அறிந்துகொள்ளலாம்.
சாதாரண ஒரு சமூக வலைதளப் பதிவு என்று எண்ணாமல் நாம் முயற்சிக்கும் இதுபோன்ற புகார் நடவடிக்கைகளில் விசாரணை செய்து வழக்குப் பதிவு செய்தால், அந்த நபருக்கு IPC இ.பி.கோ. பிரிவு 153(A) அடிப்படையில் இரு பிரிவினருக்கு மத்தியில் கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்தமைக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். அல்லது, பிரிவு 295(A), 298 அடிப்படையில் மத நம்பிக்கையை இழிவுபடுத்தினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, பிரிவு 499 அவதூறு தெரிவித்தல், Information Technology Act Section 66(A) அடிப்படையில் 3 ஆண்டுகளை வரை சிறை தண்டனை போன்ற நடவடிக்கை ஏதேனும் எடுக்கப்படலாம்.
கெடு நோக்குடன் செயல்படுவோரை சட்டரீதியாக தண்டிப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பல புகார்கள் குவிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது இதுபோன்ற தவறான சமூக வலைதளப் பதிவுகள் நிச்சயம் குறையும்.
குறிப்பு: இந்த இணையதளப் புகார் எனும் வசதியை நேரில் சென்று கொடுக்க இயலாத நிலையில் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், நம்முடைய புகாரை வாங்க காவல்நிலையத்தில் மறுக்கிறார்கள் எனும் பட்சத்தில் இந்தப் புகார் எண்ணை நீங்கள் கூடுதல் நடவடிக்கை எடுக்க ஆதாரமாகவும் பயன்படுத்தலாம். ஆனாலும் அவசரமான சூழ்நிலைகள், குற்றவாளியை உடனே பிடிக்க வேண்டிய தருணங்கள், பெரிய குற்றங்கள் சம்பந்தப்பட்ட உடனடி நடவடிக்கை தேவைப்படும் இடங்களில் புகார்களை காவல்நிலையத்திற்கே சென்று கொடுப்பது சிறந்தது.
சமீபத்தில் இயக்குநர் அருண் கார்த்திக் இயக்கிய நசீர் என்ற திரைப்படம் யூட்யூபில் ஒரு நாளுக்கு மட்டுமாக வெளியிடப்பட்டிருந்தது. இந்தக் குறுகிய கால எல்லை என்ற வரம்பையும் தாண்டி இப்படம் பலராலும் காணப்பட்டு உடனடியான கருத்துகள், மதிப்புரைகள் மற்றும் விமர்சனங்களை ஈர்த்ததையும் காணமுடிந்தது. அவற்றில் ஏராளமான பாராட்டுரைகளும் விமர்சனங்களும் அடக்கம். இப்படம் நிகழும் களம் கோவையாகும். கோவையின் சந்தைகள், முஸ்லிம் குடியிருப்புகள், பள்ளிவாசல்கள், உணவகங்கள், பேருந்து நிலையம் என்று திரைப்படம் கோவையின் நிலப்பரப்புகளில் அலைவுறுகிறது. இக்களத்தில் நசீர் என்னும் சாமானிய முஸ்லிம் ஒருவனின் ஒருநாள் அக-புற வாழ்க்கையை அணுக்கமாகப் பார்க்க முயல்வதே படத்தின் முயற்சி. அதன் மூலம் ஒரு முஸ்லிமின் சாதாரண மானுடத்தன்மையை வெட்டவெளிச்சமாக்குவதும் அதே முஸ்லிம் எவ்வாறு மற்றமையாக்கப்பட்டு மானுட நீக்கம் செய்யப்பட்டு இறுதியில் அழித்தொழிக்கப்படுகிறான் என்பதை விவாதிப்பதும்தான் படம் ஏற்றுக்கொண்டிருக்கும் சவால். அதில் படம் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியடைந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
இந்துத்துவம் முஸ்லிம்களை மாந்தநீக்கம் செய்து அவர்களை அழித்தொழிக்கிறது என்றும், அதற்கு எதிராக இப்படம் முஸ்லிம்களை எவ்வாறு மனிதாயப்படுத்துகிறது என்பதைக் குறித்தும் பார்ப்பதற்கு முன் மாந்தநீக்கம் (Dehumanization) என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் பேசிவிடுவோம். தமிழில் zombieகளை மையமாக வைத்து மிருதன் என்றொரு படம் வெளிவந்தது. அப்படத்தில் ஏதோ ஒரு நோய்த்தொற்றினால் பாதிக்கப்படும் மனிதர்கள் உருச்சிதைவுக்கெல்லாம் ஆளாகி வெறிப்பிடித்து அலைவார்கள். அவர்களால் தாக்குதலுக்குள்ளாகி கடிபடும் மனிதர்களும் அவர்களைப் போன்ற ஜோம்பிகளாகிவிடுவார்கள். காவல்துறையில் பணியாற்றும் கதாநாயகன் தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள கண்ணில் படும் ஜோம்பிகளையெல்லாம் வேட்டையாடி வருவான். ஒருகட்டத்தில் நாயகனுக்கும் மருத்துவரான அவனது காதலிக்கும் இடையில் ஜோம்பிகளைக் கொல்வது குறித்து ஒரு கருத்து வேறுபாடு வரும், அவள் அவர்களைக் கொல்லக்கூடாது, அவர்களெல்லாம் நோயாளிகள் என்று வாதிடுவாள். ஒரு கட்டத்தில் அவளே ஜோம்பிகளின் பிடியில் மாட்டிக்கொள்ளும்போது, அவர்களைக் கொன்று தன்னை விடுவிக்கும்படி நாயகனிடம் இறைஞ்சுவாள்.
மிருதன்
அரசதிகாரங்கள் தங்களுக்கு எதிராகக் கருதும் மக்கள் குழுமங்களைப் பற்றி எத்தகைய சொல்லாடல்களை உருவாக்கிறார்கள் என்பதை மேற்கண்ட இந்த ஜோம்பி பட சித்தரிப்புகளோடு கொஞ்சம் பொருத்திப் பார்ப்போம். அரசதிகாரங்கள் தங்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் அல்லது தங்களது அதிகாரத்துக்கு ஆபத்து எனக் கருதும் மக்களைக் கொன்றொழிப்பதற்கு அம்மக்கட்குழு தேசத்துக்கும் தேசத்தின் நலவாழ்வுக்கும் ஆபத்தானவர்கள், தேசம் எத்தகைய நல்விழுமியங்களுக்காகவெல்லாம் செயல்படுகிறதோ அதற்கு எதிரானவர்கள் என்பது போன்ற சொல்லாடல்களை உருவாக்கும். இத்தகைய மக்கட்குழுவை நாம் X மற்றவர் என்ற எதிர்மையை உருவாக்கும். இவர்களெல்லாம் நம்மைப் போன்ற மனிதர்கள் இல்லை, தீயவர்கள், நாட்டின் வளர்ச்சியை விரும்பாதவர்கள், பிரிவினை சக்திகள் என்றெல்லாம் வரையறுக்கும். வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து இந்த நவீன காலம் வரைக்கும் தங்களுக்கு எதிரான மக்களைக் கொன்றொழிப்பதற்கு அரசதிகாரங்கள் முதலில் அவர்களை மாந்தநீக்கம் செய்யும்.
நாம் மனிதர்கள், அவர்கள் அசுரர்கள், நாம் நாகரிகமானவர்கள், அவர்கள் காட்டுமிராண்டிகள், நாம் சுதந்திரத்திலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கையுடைய நாகரிகர்கள், அவர்கள் மதவெறிப்பிடித்த வன்முறையாளர்கள். இத்தகைய இருமை எதிர்வுகளுக்கான அடிப்படையே யாரது உயிர் புனிதமானதாகப் போற்றத்தக்கது, யாருடைய உயிரெல்லாம் அழிக்கப்படத்தக்கது என்பதற்கான எல்லைக் கோட்டைக் கிழிப்பதே. புராண காலத்தின் அரக்கர் சித்தரிப்பிலிருந்து நவீன தேசியத்தின் கொரோனா ஜிஹாதிகள் என்ற சித்தரிப்பு வரை இந்தச் செயற்போக்கு வரலாறு முழுவதும் நீடித்து வருவதையும் பகுத்தறிவின் பகலொளி வீசுவதாக தம்பட்டம் அடிக்கப்படும் நவீன காலத்திலும் அது மறைவதாக இல்லை என்பதையும் நாம் காணலாம். அதனால்தான் ஏராளமான மனிதர்களை தீவிரவாதிகள் என்று கொன்றொழித்துக்கொண்டே டூயட் பாடும் நாயகர்களையும், கண்ணில் படும் நோய்த்தொற்றுக்கு ஆட்பட்டவர்களையெல்லாம் (ஜோம்பிகள்) சுட்டுத்தள்ளிக்கொண்டே நாயகன் தனது முன்னாள் காதலியை நினைத்து உருகி பாடுவதையும் நம்மால் எந்த மனநெருக்கடியும் முரண்பாடும் இல்லாமல் பார்த்து ரசிக்க முடிகிறது.
இங்கு தீவிரவாதிகள், ஜோம்பிகள் என்பன போன்ற சித்தரிப்புகள் இத்தகைய சித்தரிப்புக்கு ஆளாக்கப்படுவோரை எந்தக் குற்றவுணர்வும் அறச்சிக்கலும் இல்லாமல் கொன்றொழிப்பதோடு அவ்வாறு கொன்றொழிப்பதே அறம் என்று கருதும் தன்னிலைகளையும் உருவாக்கிவிடுகிறது. தூத்துக்குடியில் கொல்லப்பட்டவர்களை ‘சமூக விரோதிகள்’ என்று அடையாளப்படுத்துவதன் நோக்கம் என்ன? அந்தக் கொலைகளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு மாறாக இசைவு தெரிவிப்பவர்களாக மாற்றுவதற்குத்தானே. இத்தகைய தன்னிலைகளைக் கொண்டவர்களாக நாம் ஆகிவிட்ட பிறகு, நாம் நமது குடும்பத்தோடும் குழந்தைகளோடும் மகிழ்ந்திருந்துகொண்டு நமது வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்ளும் அதேவேளை, காஷ்மீரிகளின் மீதான இந்திய அரசின் ஒடுக்குமுறைகளை நமது அபிமானத்துக்குரிய கிரிக்கெட் அணியை ஆதரிப்பதுபோன்று ஆதரிக்கவும் முடியும்.
ஆக, வழக்கமான சினிமாப் படங்கள் எல்லாமே ஜோம்பிகளையும் தீவிரவாதிகளையும் சமூக விரோதிகளையும் தேச விரோதிகளையும் கொன்றொழிப்பதைக் கொண்டாடும் படங்கள்தான். இப்போது அரசதிகாரத்தால் கொன்றொழிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக, அரசதிகாரத்தை விமர்சித்து எடுக்கப்படும் படங்கள் எவ்வாறு அமையவேண்டும்? அரசதிகாரம் தங்களுக்கு எதிரானவர்களைக் கொன்றொழிக்க மாந்தநீக்கம் செய்தல் என்ற ஆயுதத்தைக் கையில் எடுக்கும்போது, அதைக் கவிழ்க்க விரும்புபவர்கள் ஏற்கெனவே மாந்தநீக்கம் செய்யப்பட்டிருக்கும் அரக்கர், அசுரர், கொரோனா ஜிஹாதிகள், சமூக விரோதிகள், தேச துரோகிகள் ஆகியோரது மானுடத்தன்மையை வெளிப்படுத்தும் கலையை உருவாக்குவதன் மூலம் அதைச் செய்யவேண்டும். அவர்களது அன்றாடத்தை, அதிலிருக்கும் அன்பை, அழகை, அறிவை, துன்பங்களை, வெறுமையை என எல்லாவற்றையும் சித்திரமாக்குவதே ஒடுக்குமுறைகளுக்கெதிரான விடுதலைக்கான கலையாக மிளிர முடியும்.
மேற்கண்ட மிருதன் படத்தில் திருப்புமுனை நிகழ்வாக அமைவது நாயகனின் உயிருக்குயிரான தங்கை ஜோம்பி தாக்குதலால் பாதிக்கப்படும் நிகழ்வாகும். இதுவரை ஜோம்பிகளை எந்தத் தயக்கமும் இன்றி சுட்டுத்தள்ளிக்கொண்டு வந்த நாயகன் முதன்முறை தன்னுடைய வாழ்வோடு பிணைக்கப்பட்டிருக்கும் ஓர் உயிர் பாதிக்கப்பட்டவுடன் துயருருவான். அவளை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று துடிப்பான். இங்கு அவன் மட்டுமல்லாது அப்படத்தைக் காணும் நாமும் நாயகனின் சோகத்தில் பங்கெடுக்கச் செய்வது போன்றே அக்காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அவனுக்கும் அவனது தங்கைக்குமான ஆழமான உறவை நமக்கு அறிமுகப்படுத்தியதன் மூலமாகத்தான் அதைச் சாதிக்க முடியும். இல்லையென்றால் எத்தனையோ ஜோம்பிகளில் ஒருத்தியாக அவளும் ஆகியிருப்பாள்.
சில ஆண்டுகளுக்கு முன் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்திய விதத்தை சில மேற்கத்திய ஊடகங்கள் கவர் செய்த விதம் குறித்து பேசிய தாரிக் அலி, ”இப்போதுதான் மேற்கத்திய ஊடகங்களுக்கு பாலஸ்தீனர்களுக்கும் பெயர்கள் உண்டு, அவர்களுக்கும் குடும்பங்கள் உண்டு, அவர்களுக்கும் குழந்தைப்பருவ புகைப்படங்களெல்லாம் உண்டு என்று புரிந்துகொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார். இஸ்ரேலில் ஒருவர் இறந்தால் அவரது பெயர், படிப்பு, அவரது மனைவி, குடும்பம் என்று அவரை மனிதாயப்படுத்தும் ஊடகங்கள் பெரும்பாலும் போரில் இறப்பைத் தழுவும் பாலஸ்தீனர்களை வெறும் எண்ணிக்கைகளாக, கதைகளற்றவர்களாகச் சித்தரிக்கும் அரசியல் குறித்தே அவர் மேற்கண்டவாறு பேசினார்.
இதே போன்று ஈரானிய மெய்யியலாளர் ஹமீத் தபாஷி தனது Brown Skins White Masks என்ற நூலில், நிறைய மேற்கத்திய திரைப்படங்கள் மத்தியக் கிழக்கிலிருந்து குடியேறிய சமூகத்தைச் சேர்ந்த கதாபாத்திரங்கள் உணவு உண்ணுவது போன்றோ குடும்பத்தோடு நேரம் செலவிடுவது போன்றோ பெரிதாக சித்தரிப்புகளே இல்லாமல் வருகின்றன என்பது குறித்தும் பேசியிருப்பார். ஆக, ஒரு சமூகத்தை மற்றமையாக்கம் செய்வதற்கு அந்தச் சமூகத்தைக் குறித்த இயல்பான அன்றாடச் சித்தரிப்புகள் அற்ற ஓர்படிவார்ப்புகளைச் செய்வது அவசியமானதாக இருக்கிறது. இந்த மற்றமையாக்கம் அரசியல் அடர்த்திபெறும்போது அழித்தொழிக்கப்பட வேண்டிய ஒரு பிம்பமாக அது உருவாகிவிடுகிறது.
முஸ்லிம்கள் பற்றிய தமிழ் சினிமா ஓர்படிவார்ப்புகளை (stereotypes) ‘அந்நியச் சமூகமாகக்’ கருதப்படும் ஒன்றின் சமூக இருப்பு பற்றிய ஓர்படிவார்ப்புகள் என்றும் அரசியல் ரீதியான கதையாடல் என்றும் இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம். முஸ்லிம்கள் தமிழர் அல்லாதோர் என்பதோடு தமிழையும் நிம்பள்கி நம்பள்கி என்று பேசக்கூடியவர்கள், ஜுப்பா தொப்பி கைலி சகிதம் திரியக்கூடியவர்கள், நெற்றியில் நீண்டகாலம் தொழுததால் ஏற்பட்டிருக்கும் தழும்பு பெற்றிருப்பவர்கள், ஹவாலா மற்றும் கள்ளக்கடத்தல் போன்ற தொழில்களில் ஈடுபடுபவர்கள் என்பதாக அவர்களது சித்திரம் வரையப்பட்டிருக்கும். மேற்கண்ட சமூக இருப்பு சார்ந்த ஓர்படிவார்ப்புகளுக்கு அப்பால் அரசியல் ரீதியாக முஸ்லிம்களை சித்தரிப்பது எவ்வாறெனில் முஸ்லிம்களில் ஒரு பிரிவினரை தேச விரோதியாகவும், பகை நாட்டுக்கு விசுவாசமானவர்களாகவும் மற்றும் சொந்த நாட்டு அப்பாவி மக்களை பேதமில்லாமல் கொன்றொழிப்பவர்களாகவும், இன்னொரு பிரிவினரை நாட்டுப்பற்றோடு இத்தகைய கெட்ட முஸ்லிம்களை எதிர்த்து தேசத்தைக் காப்பாற்ற உறுதிபூண்டவர்களாகவும் காண்பிப்பது. அரசியல் ரீதியாக அவர்களை தேசவிரோத-தீவிரவாத-கெட்ட முஸ்லிம்களாகவும் இத்தகைய கெட்ட முஸ்லிம்களை சமரசமற்று எதிர்ப்பவர்களாக தேசப்பற்றுமிக்க நல்ல முஸ்லிம்களையும் காட்சிப்படுத்துவது.
முதலாவது வகை ஓர்படிவார்ப்புகள் மலையாளிகள், தெலுங்கர்கள் போன்ற மையநீரோட்டத்தில் இல்லாத ’அந்நியச் சமூகங்கள்’ குறித்த தேய்வழக்குகளோடு ஒப்பிட்டத்தக்கவை என்றால், இரண்டாவது வகை பின் – காலனிய இந்தியாவின் முஸ்லிம் மற்றமையாக்கத்தோடும் (தேச விசுவாசம் குறித்த வினா, பாகிஸ்தான் ஆதரவு) பனிப்போர் காலத்துக்கும் 9/11 க்கும் பின்பான இஸ்லாமோ ஃபோபியாவோடும் (தீவிரவாதம், தேசப் பாதுகாப்பு, ‘You are either with us, or with the terrorists, நல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம்) தொடர்புடையது. இத்தகைய பின்னணியில் நசீர் என்ற படம் எத்தகைய இடையீட்டைச் செய்கிறது, அது எவ்வாறு மேற்கண்ட சித்தரிப்புகளிலிருந்து வேறுபடுகிறது, முஸ்லிம்கள் – இந்துப் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு சாதி, வர்க்க மட்டங்கள் – இந்து தேசியவாதம் ஆகியவற்றைப் பற்றிய எத்தகைய கதையாடலை முன்வைக்கிறது, முஸ்லிம் கதாபாத்திரங்கள் வார்க்கப்படும் சட்டகங்கள், அதன் பின்னணியில் உள்ள மேலாண்மை பெற்ற சொல்லாடல்கள், அவை இப்படத்தில் மறு உறுதி செய்யப்படுகின்றதா அல்லது கவிழ்க்கப்படுகின்றதா என்பது போன்ற கரிசனைகளையெல்லாம் முன்வைத்துதான் இப்படத்தை நாம் புரிந்துகொள்ள முடியும் என்று கருதுகிறேன்.
இப்படத்தின் தொடக்கக் காட்சியே வெளியூருக்குக் கிளம்பிப்போகும் மனைவியை பிரிய மனமில்லாத நசீர், அவளை ஆவலோடு அணைத்து உதட்டில் முத்தமிடும் காட்சியோடு தொடங்குகிறது. வீட்டை விட்டு வெளியேறும் முன்னர் புர்கா அணிந்துகொள்ளும் மனைவிக்கு பொத்தான்களை மாட்டிவிட்டு உதவுகிறான் நசீர். உள்ளபடியே இது மிகவும் முக்கியமான சித்தரிப்பாகும். இது முஸ்லிம் குடும்பங்களில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் ஏதோ பண்ணையடிமை முறை நிலவுகிறது என்பது போன்ற சித்தரிப்பிலேயே சிந்திக்கக் கற்றிருக்கும் ஓர்படிவார்ப்புக்களை (stereotypes) வெற்றிகரமாகக் களைத்துப்போடுகிறது.
தமிழ்ப் படங்களில் மட்டுமல்ல, தமிழ் முற்போக்கு பொதுமன்றங்களிலேயே இத்தகைய சித்தரிப்புகள் எல்லாம் இயல்பாக இருக்கின்றன. தனது குடும்பத்தையும் சாதியையும் பற்றி எழுதும்போது வெளி, வரம்பு, எல்லைக்கோடுகள், பெண்களின் முகமை, எல்லைகளை மதித்தும் மீறியும் அவற்றோடு negotiate செய்வது என்றெல்லாம் எழுதும் உயர்சாதி மென் இந்துத்துவ ஃபெமோ-தேசியவாதியான அம்பை, தமிழின் முதல் முஸ்லிம் பெண் நாவலாசிரியரான சித்தி ஜுனைதா பேகத்தைக் குறித்து எழுதும்போது, அவரது குடும்பம் மற்றும் சமுதாயத்து ஆண்களை விஷப்பாம்புகள் என்று கட்டுரையின் தலைப்பிலேயே விளிக்கிறார். ஆக, முஸ்லிம் பெண்கள் மீதான இவரைப் போன்றவர்களின் கரிசனை என்பது உண்மையிலேயே முஸ்லிம் சமூகத்தில் உள்ள கட்டமைப்பு ரீதியான அசமத்துவத்தைக் கேள்விகேட்பதல்ல. மாறாக, தங்களது பார்ப்பன மேலாண்மையை திடப்படுத்திக்கொள்ளும் அரசியலுக்கு ‘முஸ்லிம் பெண்’ என்ற திணையை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்வதே.
முஸ்லிம் குடும்பங்களிலும் கணவர்கள் அன்பாக இருப்பார்கள், தனது முப்பதுகளின் இறுதியில் இருக்கும் முஸ்லிம் மனைவியும் ஆரத்தழுவி முத்தமிடும் தனது கணவனை ‘கிழவா!’ என்று கூறி விளையாட்டாகச் சீண்டுவார் என்பது போன்று யோசித்திருப்பதே ஒரு பெரும் முன்னகர்வாகும். இதற்குப் பொருள் முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் கட்டமைப்பு ரீதியான அசமத்துவத்துவங்கள் பற்றி பேசக்கூடாது என்பதல்ல. உயர்சாதி அல்லது பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் சமூகத் திணைகள் தங்களிடம் முதலீடு செய்திருக்கும் தனிச்சலுகைகள் (Privilege) மற்றும் அதிகாரம் குறித்த போதுமான விமர்சனமில்லாமல், சிறுபான்மைச் சமூகத்தின் மீதான கற்பிதங்களையும் ஓர்படிவார்ப்புகளையும் விமர்சனச் சிந்தனையோடு பார்க்கும் பயிற்சியோ அறிவு நாணயமோ ஒப்புறவோ இன்றி முஸ்லிம் ஆணாதிக்கம் என்று பேசுவது முஸ்லிம் பெண்களின் முன்னேற்றத்துக்கு ஒருபோதும் உதவுவதில்லை. அத்தோடு, அவர்களை முகமையற்றவர்களாக்கி தங்களது அரசியல் நலன்களுக்கு கருவியாக்கிக் கொள்கிறது என்பதே இங்குள்ள சிக்கல்.
சமீபத்தில் இந்துத்துவத்தை எதிர்ப்பது என்ற பாவனையோடு வெளியான ஜிப்சி என்ற போலி முற்போக்குப் படமும் இவ்வாறுதான் செய்திருக்கிறது. ஒடுக்கப்படும் மக்கள் மீதான சகோதரத்துவ வாஞ்சையோடு, அவர்கள் எவ்வாறு தங்களது வாழ்க்கைச் சூழ்நிலைகளில் இருந்துகொண்டு எதேச்சதிகாரங்களை எதிர்க்கிறார்கள் என்பதைப் படமாக்குவதற்கு முன்பு ஒருவர் தன்னை இம்மக்களின் ரட்சகராகக் கற்பித்துக்கொள்ளும் சுயமோகத்திலிருந்தும், ‘பெருந்தன்மைமிக்க பெரும்பான்மை’ என்ற மேட்டிமைவாதச் சிந்தனையிலிருந்தும் வெளிவரவேண்டும். அவ்வாறு செய்வதற்கு இயலாத ராஜு முருகன் போன்ற இயக்குநர்களால் தங்களது இந்து ஆண் ஃபேண்டசிகளைத் தவிர்த்து வேறு எதனையும் படமாக எடுக்க முடியாது.
தனது மனைவி ஊருக்குச் செல்வதே தனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லும் நசீர் வேறுவழியின்றி அவளை பஸ் ஏற்றிவிட்டு கடைக்குச் செல்கிறான். கடையில் அவன் ஒவ்வொரு நாளும் செய்யும் பணிகள் காட்சிகளாக விரிகின்றன. துணிகளை அடுக்குவது, பொம்மைகளுக்கு துணி மாட்டிவிடுவது போன்றவற்றையெல்லாம் காட்டுகிறார்கள். தனது மனைவியைப் பிரிந்து ஏக்கத்தோடு வரும் நசீர் ஏதோ மனதில் அசைபோட்டுக்கொண்டே பொம்மையின் மூக்கைப்பிடித்து திருகி தனக்குள்ளாகச் சிரித்துக் கொள்கிறான். தனது சைவ வெள்ளாள முதலாளியின் வீட்டுக்கு சாப்பாடு எடுக்கச் செல்கிறான். அங்கிருந்து முதலாளியின் மகனுக்கு மதிய உணவு கொண்டுபோய் கொடுப்பதற்கு அவனது பள்ளிக்குச் செல்கிறான். இடையே வெள்ளைச் சட்டை, கைலி சகிதம் தாடியெல்லாம் வைத்துக்கொண்டு ஒரு முஸ்லிம் பெரியவரைச் சந்திக்கிறான். அவரோடு ஒரு ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடுகிறான். அப்போது வெளிநாடு சென்று சம்பாதிப்பதன் சாதக பாதகங்கள் பற்றி இருவரும் பேசிக்கொள்கிறார்கள். அதன்பிறகு பாங்கொலி, பள்ளிவாசல், லுஹர் தொழுகை வேளை. ஓர்மையோடு அங்கசுத்தி செய்துவிட்டு தொழுகைக்காக தியானத்தோடு காத்திருக்கிறான். பிறகு வீட்டிற்குச் சென்று கொஞ்ச நேரம் இளைப்பாறுகிறான். இளைப்பாறுதலைச் சுகமாக்கும் கஸல் சிறிதுநேரம். பின்னர், கர்பப்பையில் புற்றுநோய் வந்திருக்கும் தனது அம்மாவைக் காண்கிறான். உள்ளே இருக்கும் வேதனையால் அவள் கூனிக்குறுகி படுத்துக்கிடக்கிறாள்.
இதன்பிறகு மறுபடியும் கடைக்குச்செல்வது, விற்பனை என்று அவனது அந்த நாள் தொடர்கிறது. இந்த எல்லா வாழ்க்கைச் சூழல்களிலும் பங்குபெறும் உற்றதுணைவனாக புகைப்பழக்கமும் அவனோடே பயணிக்கிறது. போதுமான அளவு வருமானம் இல்லாததால் தங்களது உறவினருக்கு மத்தியில் சரிசமமாக மதிக்கப்படுவதில்லை என்ற ஆற்றாமை, தன்னை வளர்த்து ஆளாக்கி இந்தச் சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ உழைத்து ஓடாய்த்தேய்ந்த தன் அம்மாவின் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாத அளவு கழுத்தை நெறிக்கும் பொருளாதார நெருக்கடிகள், இந்த நிலையிலும் தான் வாழ்க்கையில் அன்றாடம் எதிர்கொள்ளும் வாய்ப்புகளைத் தட்டித் திறந்து பார்த்து இன்றில்லாவிட்டாலும் நாளை நம் கஷ்டங்கள் தீரும் என்ற நம்பிக்கையோடு ஒவ்வொரு நாளையும் கடப்பது என்ற ஒரு சாமானிய முஸ்லிமின் அன்றாடத்தை, அதன் இருத்தலியல் யதார்த்ததை சித்திரமாக்குகிறது இப்படைப்பு. இவ்வாறு மற்றமையின் அன்றாடத்தையும் இருத்தலியல் யதார்த்தத்தையும் சித்தரித்ததன் வழி பல்லாண்டு காலங்களாக தமிழ்த் திரையில் நிலவி வந்த மற்றமையாக்கல் பதிவுகளையும் அதன் அரசியலையும் தலைகீழாக்குகிறது. இதுதான் இப்படத்தின் முக்கியமான பங்களிப்பாகும்.
இந்த மைய கதாப்பாத்திரமும் அதன் வாழ்வும் எவ்வாறு அழித்தொழிப்புக்கு ஆளாகிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. இந்த அழித்தொழிப்பு என்பது ’மதவெறி’ கொண்ட சில குழுக்களால் நடத்தப்பட்ட தனித்ததொரு குற்றச்சம்பவம் கிடையாது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இப்படம். மாறாக, முஸ்லிம் விரோத வன்முறை என்பது ஒரு சமூக செயற்பாடாகவும் ஒரு பண்பாடாகவும் இருக்கிறது என்பதையும் இப்படம் பதிவு செய்கிறது. ஜவுளிக்கடை முதலாளி கோவையில் இருக்கும் உணவகங்கள் பற்றிக் கூறும்போது, ”அங்க ஒருத்தன் கருகருன்னு தாடி வெச்சுட்டு இருப்பான், அதனால் அங்க போறதில்ல” என்று கூறுகிறார். கடைக்கு வரும் வாடிக்கையாளர் ஒருவர், “ஊர்வலம் அவனுக தெருவுல வரக்கூடாதா… துலுக்கனுக லொள்ள பாத்தியா, நம்ம கட்சிப் பசங்க கிட்ட சொல்லி அவனுக தெருவுல கல்லெறியச் சொல்லு, போலீஸ் என்னடா போலீசு கத்த கத்தையா வாங்கிக்குறுவானுக… நாம செய்றத பாத்தும் பாக்காத மாதிரி குரங்கு பொம்மையாட்டம் முழிச்சுட்டு நிக்கல… அதெல்லாம் நம்ம ஏண்டா பயப்படனும்… மயிறு.. அவனுகளுக்கு நம்ம மேல பயம் இருக்கனும்” என்கிறார். இதைக் கேட்டு துணுக்குறுகிறான் நசீர். அவன் அருகிலிருக்கும் பெண் ஊழியருக்கோ இதெல்லாம் காதிலேயே விழுவதில்லை.
இது தொடர்பாக சமூக ஊடகங்களில் சிலர் இப்படி படத்தில் வரும் எல்லாப் பாத்திரங்களையும் எதிர்மறையாகக் காட்டியிருக்கவேண்டுமா என்று கேட்கிறார்கள். படத்தில் வரும் இந்துக்கள் எல்லோரையும் கும்பல் படுகொலை செய்யும் இந்து நாஜிக்களாக சித்தரித்துவிடவில்லை. கடையின் முதலாளிக்கு முஸ்லிம்கள், குறிப்பாக அவர்கள் உணவுக் கடைகளில் ஊழியர்களாக இருப்பது குறித்து ஒவ்வாமை இருக்கிறது. கடையில் வேலை செய்யும் பெண் ஊழியருக்கு அது அவருக்குச் சம்பந்தம் இல்லாத பிரச்னை. ஆனால், நசீருக்கு இது எளிதாகப் புறந்தள்ளிவிடக்கூடிய ஒரு பிரச்னையல்ல. அவன் அரசியல் ஈடுபாடும் செயற்பாடும் உடையவனாக இருக்கிறானோ இல்லையோ, அரசியல் அவனது வாழ்வில் தலையிட்டே தீரும். அதுவும் சாதாரண அரசியல் அல்ல. அவன் முஸ்லிமாக இருப்பதனாலேயே அவன் கொல்லப்பட்டு விடும் அரசியல். தனது தாய், மனைவி, மகன், பிழைப்பு, கொஞ்சம் கஸலும் கவிதையும், நிறைய சிகரெட்டுகளும் என்று தனக்கென ஒரு உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்போது, அதை எந்தவித இரக்கமோ குற்றவுணர்வோ இல்லாமல் வன்மமாகக் கலைத்து அழித்தொழிக்கும் அரசியல்.
நசீரின் சக ஊழியர்களோ முதலாளியோ வழக்கமாக ஒரு யதார்த்தவாத நல்லிணக்கத்தைப் பேணுபவர்கள்தான் என்றாலும், அவர்களுக்கு வராத ஓர் அச்சுறுத்தலை அங்கு நசீர் மட்டுமே சந்திக்கவேண்டும் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியது. இங்கு மற்றவர்கள் நேரடியாக இந்தப் படுகொலையில் சம்பந்தமில்லாதவர்களாக இருந்தாலும் இங்கு சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் செயற்படும் முஸ்லிம் மற்றமையாக்கம் என்ற நிகழ்வுப்போக்கின் விளைபொருளாக இறுதியாக நடக்கும் வன்முறை நடவடிக்கை நிகழ்கிறது. போலீஸ்காரர்கள் நாம் செய்வதையெல்லாம் சும்மா வேடிக்கைதான் பார்ப்பார்கள் என்ற கருத்தின் மூலம் அரசும் அதன் உறுப்புகளும் இங்கு எவ்வாறு பெரும்பான்மைவாதத்தை உற்பத்தி செய்பவர்களாகவும் அதைப் பாதுகாப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதும் சொல்லப்படுகிறது.
இத்தகைய ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளைச் செய்த இப்படத்தில் எதிர்மறை அம்சங்களும் இருப்பதை பேசித்தான் ஆகவேண்டும். இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம் சிவில் உரிமைகளுக்கான இயக்கங்கள், அரசியல் கட்சிகள், முஸ்லிம் மத நிறுவனங்கள், முஸ்லிம் மதச் சிந்தனைப் பிரிவுகள் இவையெல்லாம் வழக்கமாக இந்துத்துவ அரசியலுடன் சமப்படுத்தும் லிபரல் அரசியல் பற்றி இயக்குநரிடம் போதுமான அளவு விமர்சனப் பார்வை இருக்கிறதா என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டி இருக்கிறது. படத்தின் ஒரு காட்சியில் நசீர் முஸ்லிம் தெருவின் வழியாக நடந்துவரும்பொழுது, பள்ளிவாசல் ஒலிப்பெருக்கியில் மதப்பிரசங்கம் நடந்துகொண்டிருக்கும் ஒலித்துணுக்கு பின்னணியில் கேட்கும். அப்பிரசங்கத்தில் முஸ்லிம்கள் மார்க்கத்தைப் பற்றிய சிறுசிறு கருத்து வேறுபாடுகள் காரணமாகத் தங்களுக்குள் பிரிந்துக் கிடப்பதைப் பற்றியும் அவ்வாறு கருத்துவேறுபட்டு பிரியாமல் எல்லோரும் நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் ஆட்சியில் இருந்ததுபோல் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று கேட்கும். அக்காட்சியின் உடனடித் தொடர்ச்சியாக சந்தைப் பகுதியில் ஓர் இந்துத்துவப் பிரச்சாரம் நடந்துகொண்டிருக்கும். அதில், ”பாரத நாடு பழம்பெரும் நாடு, தெய்வத் தமிழ் வாழ்ந்த பூமி, ஆழ்வார்களும் நாயன்மார்களும் வாழ்ந்த பூமி, இந்த ஆன்மிகப் பூமியைக் கூறுபோடுவதற்கு அந்நிய சக்திகளும் அவர்களது அடிவருடிகளும் காலங்காலமாக முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள்” என்ற இந்துத்துவ பிரச்சாரம் கேட்கும். இதில் சில விஷயங்கள் தெளிவாக இல்லை.
முதலாவதாக முஸ்லிம் தெருக்களில் கேட்கும் பிரச்சாரத்தின் உள்ளடக்கம் முஸ்லிம்களுக்கு நேர்மறையான ஒன்றாகத்தான் கேட்கும். நான் சில முஸ்லிம் நண்பர்களிடம் இது குறித்து விவாதிக்கும்போது அவர்களும் இதைத்தான் சொன்னார்கள். அப்பிரசங்கம் முஸ்லிம்கள் சமய கிரியைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றில் கருத்துவேறுபட்டு பிரிந்துக் கிடப்பதை விமர்சிக்கிறது. இதுவொரு மதத்தைப் பின்பற்றும் சமூகத்திற்குள் தோன்றும் குறுங்குழுவாதத்தின் மீதான விமர்சனமாகவும் சமூக ஒற்றுமைக்கான குரலாகவும்தான் கேட்கிறது. இது அடிப்படையிலேயே தேசியப் பண்பாடாக இந்துப் பண்பாட்டை முன்னிறுத்துதல், தேசிய எல்லையையும் பண்பாட்டு எல்லையையும் ஒன்றாக வரையறுத்தல், இந்துப் பண்பாட்டுக்கு வெளியில் இருப்போரை தேசத்துக்கு எதிரானவர்களாக அடையாளங்காணுதல், அத்தகைய எதிரிகளுக்கு எதிராக இந்துக்கள் எல்லோரையும் இராணுவம் போன்று படையணியாக வலியுறுத்தல் என்னும் அரசியலை முன்வைக்கும் இந்து தேசியவாதத்துக்கும் பண்பளவிலேயே வேறுபாடு இருக்கிறது. ஆனால், இப்படி ஒன்றன் பின் ஒன்றாக முஸ்லிம் சமயப் பிரச்சாரத்தையும் இந்து தேசியவாத இனக்கொலை அரசியல் பிரச்சாரத்தையும் சமமானது என்பது போன்ற சித்திரத்தை உருவாக்குவது மேற்கத்திய திரைப்பட விழா பார்வையாளர்களுக்கும் தமிழ்நாட்டின் முஸ்லிம் அல்லாத பெரும்பான்மைச் சமூகத்தின் பார்வையாளர்களுக்கும் எத்தகைய மனப்பதிவை ஏற்படுத்தும்?
தங்களது பெண்களை புர்கா அணியச் செய்வது, தங்களது வெளிகளில் பாலினக்கலப்பு ஏற்படா வண்ணம் எச்சரிக்கையோடு இருப்பது, நீண்ட தொப்பியும் தாடியும் வைத்துக்கொள்வது, சனிக்கிழமை மிகவும் கண்டிப்பான முறையில் ஓய்வுநாளை அனுசரிப்பது என்றெல்லாம் இருக்கும் வைதீக யூதச் சமூகங்களின் மத அனுஷ்டானத்தையும் ஜெர்மானிய ஆரிய இன மேன்மை பேசும் நாஜிக்களின் அரசியலையும் சமப்படுத்திப் பார்க்க முடியுமா? அவ்வாறு சமப்படுத்திப் பார்ப்பதற்கு ஒருவர் ஜெர்மானிய பொதுச் சமூகத்தைச் சேர்ந்த லிபரல் ராஜூ முருகனாகத்தான் இருக்க முடியும். இந்துத்துவம் என்பது மத வைதீக அமைப்பு அல்ல, அது தேசியம்-பண்பாடு-எல்லைகள்-நம்பகமான சுயங்கள்-எதிரிகள் என்ற கட்டமைப்பைக் கொண்டுள்ள ஒரு ஃபாசிஸ்ட் கருத்தியல். இத்தகைய ஃபாசிஸ்ட் கருத்தியல்களைக் கட்டமைக்க இராமாயணம் போன்ற மதக் கதையாடல்கள் போன்று சமூக-டார்வினியம், Eugenics போன்ற மதச்சார்பற்ற விஞ்ஞானவாதக் கதையாடல்களும் கூட உதவலாம். ஆனால், இத்தகைய ஒன்றுக்கொன்று பண்பளவிலேயே வேறுபட்ட இரு நிகழ்வுப்போக்குகளை வெறுமனே ‘மதவாதம்’ என்ற சொல்லாடலில் சமப்படுத்துவதுதான் இன்று முற்போக்கு வட்டாரங்களிலும் கூட நாம் அதிகம் கண்ணுறுவதாக இருக்கிறது. இன்னும் தீவிரமாக இதைச் சொல்லவேண்டுமென்றால் சிறுபான்மை-பெரும்பான்மை என்ற அளவு வேறுபாடு சார்ந்ததாக இதைப் பேசுவார்கள். ஆனால், இவற்றினிடையே இருக்கும் பண்பு வேறுபாட்டை அங்கீகரிப்பது மிகவும் அரிதாக இருக்கிறது. இதனால்தான் கம்யூனிஸ்ட் கட்சிகளால் பம்பாய் போன்ற ஓர் உயர்சாதி மென் இந்துத்துவப்படத்துக்கு வக்காலத்து வாங்க முடிந்தது.
இந்த எதிர்மறை அம்சம் தவிர்த்து ‘நசீர்’ முஸ்லிம் வாழ்க்கையின் மானுடத்தன்மையையும் அன்றாடத்தையும் படம் பிடித்திருப்பது, இஸ்லாமோ ஃபோபியாவை ஒரு கட்டமைப்பு ரீதியான யதார்த்தமாகக் காட்டியிருப்பது, இந்து முஸ்லிம் கலவரம் என்றெல்லாம் மையவாதம் பேசாமல் முஸ்லிம் விரோத இந்து வன்முறையைப் படம்பிடித்திருப்பது, இந்து வன்முறையை சில மத வெறியர்களின் செயல் என்று சுருக்காமல் சமூகத்தின் பல மட்டங்களிலும் நிலவும் தேசியவாத-முஸ்லிம் மற்றமையாக்கக் கதையாடல்கள் மற்றும் நிகழ்த்துதல்களின் விளைபொருளாகக் காட்டியிருப்பது போன்றவை எல்லாம் மிக முக்கியமான பங்களிப்புகள். அதற்காகவே நாம் இந்தப் படத்தைக் கொண்டாட வேண்டும்.
தமிழ் சினிமாவின் நூறாண்டு தாண்டிய வரலாற்றில், புர்கா அணிந்த மனைவியை அழைத்துக் கொண்டு, பூ மார்க்கெட்டில் இரண்டு முழம் பூ வாங்கித் தரும் முஸ்லிம் ஆண் குறித்த காட்சி அமைப்பு இதுவரை வந்திருக்கிறதா? தமிழ்நாட்டில் வாழும் சுமார் 6 சதவிகித முஸ்லிம் மக்களின் தனி வாழ்க்கை குறித்த படைப்புகள் தமிழ் சினிமாவை இன்னும் பெரிதாக எட்டவே இல்லை. அதே வேளையில், முஸ்லிம்கள் குறித்த எதிர்மறையான சித்தரிப்புகள் நிறைந்த திரைப்படங்களுக்கு இங்கு பஞ்சம் இல்லை.
கோவையைச் சேர்ந்த இயக்குநர் அருண் கார்த்திக் ‘நசீர்’ படத்தை இயக்கியிருக்கிறார். கோவையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி ஒன்றில் இரண்டு ஆண்டுகள் தங்கி, இந்தப் படத்தைத் தந்திருக்கிறார். மதக்கலவரங்களாலும், குண்டுவெடிப்பாலும் பிளவுண்ட கோவை நகரத்தின் முஸ்லிம் ஒருவனின் ஒரு நாள் வாழ்க்கையைப் பேசுகிறது இந்தப் படம். நசீர் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவன். துணிக்கடை ஒன்றில் சேல்ஸ்மேனாகப் பணிபுரிபவன். தன்னைச் சுற்றி நிகழும் வகுப்புவாத உரையாடல்களுக்கும், அறிவிப்புகளுக்கும் செவிசாய்க்காதவன். இந்தக் காலத்திலும் மனைவிக்குக் காதல் கடிதம் எழுதும் அளவுக்குத் தன் மனைவியை நேசிப்பவன். தனிமை குறித்து கவிதை எழுதும் கவிஞன். அப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு இந்தச் சமூகம் தரும் பரிசு என்ன என்பதைப் பொட்டில் அடித்தாற்போல் பதிவு செய்திருக்கிறது ‘நசீர்’.
நசீர்
படம் பார்க்க விரும்புபவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு, இதற்குக் கீழே இருப்பவற்றைத் தேவை இருப்பின் படிக்கவும்… (SPOILERS AHEAD)
’நசீர்’ படம் முழுவதும் வன்முறையையோ வெறுப்பையோ நாம் முழுவதுமாக பார்ப்பதில்லை. ஆனால், நசீருடன் பலவற்றைக் கேட்கிறோம். படம் முழுவதும் ‘ஒலி’ என்ற அம்சத்தின் அடிப்படையில் நசீரின் சூழலைப் புரிந்துகொள்ளச் செய்வதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. முதல் காட்சியில், அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்கான பாங்கு சொல்லப்படும் வேளையில், உறங்கிக் கொண்டிருக்கும் நசீரின் அறிமுகம் பார்வையாளர்களுக்குக் கிடைக்கிறது. மற்றொரு காட்சியில், நசீரும் அவரது மனைவி தாஜும் முஸ்லிம்கள் வாழும் தெருக்கள் வழியாகவும், அதன்பின்பு இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் பூ மார்க்கெட்டிற்கும் செல்கின்றனர்.
முஸ்லிம் தெருக்கள் வழியாகச் செல்லும்போது, முஸ்லிம்கள் ஒன்றிணைதல், ‘தொப்பி போடலாமா, வேண்டாமா?’ போன்ற விவாதங்களில் முஸ்லிம்கள் ஈடுபடாமல் இருத்தல், இஸ்லாமிய அரசு இருந்த காலகட்டத்தின் பெருமை முதலானவை குறித்து ஒலிபெருக்கி வழியாகக் கேட்க நேர்கிறது. அந்தப் பகுதியைக் கடந்த பிறகு, ’இந்து தர்மத்திற்கு எழுச்சி தேவைப்படுகிறது; பாரதம் இந்து நாடு. அதற்குத் தற்போது வெளியில் இருந்து வந்தவர்களால் ஆபத்து வந்திருக்கிறது. இந்து தர்மத்தின் அடிப்படையில் நாம் ஒன்றிணைய வேண்டும்’ என்ற ரீதியிலான அறிவிப்பைக் கேட்க முடிகிறது. இதன் மூலம் முஸ்லிம்களை ஒன்றிணையக் கோரி ஒரு பக்கமும், இந்துக்களை ஒன்றிணையக் கோரி மற்றொரு பக்கமும் நிகழ்த்தப்படும் பிரசாரங்கள் நசீரைச் சீண்டவில்லை என்றும், நசீர் வாழும் இடத்தின் அரசியல் குறித்த சித்திரமும் பார்வையாளர்களிடம் வரையப்படுகிறது.
மத ரீதியான திரட்சிக்கான அழைப்பு என்றபோதும், இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவில் இந்துத்துவ அமைப்புகள் இந்துக்களை ஒன்றிணைவதற்காக அழைப்பதற்கும், முஸ்லிம்கள் அழைப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. ஓநாய் கூட்டமாக வாழ்வதற்கும், ஆடுகள் கூட்டமாக வாழ்வதற்குமான வித்தியாசம் அது. தமிழ் சினிமாவில் மணிரத்னம், கமல்ஹாசன் போன்றோரால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்த ‘சமன்படுத்தும்’ அரசியல் நசீரில் இடம்பெற்றிருப்பது வருத்தத்திற்குரியது.
நசீர்
நசீர் படத்தின் இறுதிக் காட்சியை ஒட்டியே மொத்த கதையும் நகர்கிறது. இந்துத்துவ கும்பலால் வீழ்த்தப்பட்டு சாலையில் உயிரற்றுக் கிடக்கும் நசீரைப் புரிந்துகொள்வதற்காகவே முந்தைய அனைத்துக் காட்சிகளும் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் ‘நல்ல முஸ்லிம்’ என்ற பொதுச் சமூகத்தின் வரையறைக்குட்பட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன. வழக்கமாக தன் மனைவியை அடிமைப்படுத்தும் முஸ்லிம் ஆண் வேடமாக இல்லாமல், மனைவி மீது அதீத நேசம் கொண்ட கணவனாக நசீர் இருக்கிறான். அதிகாலை பாங்குச் சத்தம் கேட்டும், தொழுகைக்குச் செல்லாதவன். தான் பணியாற்றும் கடையில் கிருஷ்ணர் சிலையைத் தூய்மைப்படுத்தி, அங்கிருக்கும் இந்துக் கடவுள் படங்களுக்கு மாலையிடுபவன். சைவப் பிள்ளையின் வீட்டு வேலைக்கு ஒத்தாசை செய்பவன். தன்னுடன் பணியாற்றுபவன் முஸ்லிம்களைப் பற்றி அவதூறாகப் பேசும்போதும் அதனைக் கண்டும் காணாதிருப்பவன். தனது பெயரையோ, தான் வாழும் பகுதியையோ தவிர நசீர் எந்தவித இஸ்லாமிய அடையாளங்களையும் தாங்கியிருப்பவன் அல்ல.
இப்படிப்பட்ட ஒரு ‘நல்ல முஸ்லிம்’ கொல்லப்படும்போது, ‘அட, இவனப் போய் கொன்னுட்டீங்களே!’ என்ற ரீதியில் பார்வையாளர்களிடம் பரிவை உருவாக்குவதாக அமைந்திருக்கிறது நசீர். நசீரை மேலும் ‘ஐயோ, பாவம்!’ என்று கருதுவதற்கு, அவனுக்கு மாற்றுத்திறனாளி வளர்ப்பு மகன் ஒருவனும், புற்றுநோயால் அவதிப்படும் அம்மாவும் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துக்கொள்ளும் நசீருக்குப் பொருளாதார நெருக்கடியும் இருக்கிறது. இந்தப் படத்தை அர்ஜுன் சம்பத் பார்த்தால் கூட, ‘ச்சே, இப்படி ஒரு நல்லவனை இப்படி பண்ணிட்டாங்களே!’ என்று பேசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த அளவுக்குப் பார்வையாளர்களிடம் பரிவைக் கோருகிறது ‘நசீர்’.
நசீர்
மணிரத்னத்தின் ‘பம்பாய்’ படத்தைக் கொண்டாடுபவரும், கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்தில் முஸ்லிம் தீவிரவாதிகளை மனிதர்களாக கமல் சித்தரித்துவிட்டார் என்று விமர்சனம் எழுதியவருமான பிரபல தமிழ் சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் ‘நசீர்’ படத்தைக் கொண்டாடுகிறார். சமூக வலைத்தளங்களில் மூர்க்கமாகவும் மென்மையாகவும் இஸ்லாமிய வெறுப்பை வெளிப்படுத்துபவர்களாலும் ‘நசீர்’ கொண்டாடப்படுகிறது. இவற்றை மேற்கூறிய விமர்சனத்தில் வழியாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
இந்த அரசியல் புரிதல் குறித்த பிரச்னைகளைத் தாண்டி, ‘நசீர்’ ஓர் அபூர்வமான படைப்பாக உருவாகியிருக்கிறது. இயக்குநரின் Hindu gaze இந்த அரசியல் பிரச்னைகளுக்கு ஓர் காரணமாக இருந்திருக்கலாம். படத்தில் பணியாற்றியவர்களிலும் பெரியளவில் முஸ்லிம்கள் யாரும் இல்லை. இதற்கு முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இருக்கும் மத ரீதியான சினிமா புறக்கணிப்பு முக்கியக் காரணம். அதை மாற்றுவதற்குரிய பணிகளை முஸ்லிம்கள் செய்வதற்கான காலம் இது.
’நசீர்’ முஸ்லிம் படைப்பாளிகளிடம் இருந்து வெளிப்பட்டிருக்க வேண்டும். எனினும் அருண் கார்த்திக் அதனைத் திறம்படச் செய்திருக்கிறார். ’பிரபஞ்சத்திற்கு நான் ஒரு நொடி… எனக்கு இந்தப் பிரபஞ்சம்?’ என்று நசீரின் தனிமையில் இருந்து பிறக்கும் கவிதையை யாராலும் அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது.
தற்போது விகடன் குழுமத்தில் நடைபெறும் ஆட்குறைப்பின் மூலம் சமூகம், அரசியல் சார்ந்த படைப்புகள் எழுதி வரும் பத்திரிகையாளர்கள் குறிவைக்கப்பட்டு வருகின்றனர். நிர்வாக நலனிற்கேற்ற அரசியலைப் பின்பற்றாத காரணத்தால் பத்திரிகையாளர்கள் பலர் கடந்த 3 ஆண்டுகளில் வெளியேறியுள்ளனர் / வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நான் கடந்த மார்ச் மாதம் விகடன் நிறுவனத்தின் பணிகளில் இருந்து விலகினேன். அதற்கான காரணத்தை, கடிதமாக விகடன் குழுமத்தின் ஆசிரியர் ச.அறிவழகனுக்கும், அதன் நகலை நிர்வாக இயக்குநர் பா.ஸ்ரீனிவாசனுக்கும் அனுப்பியிருந்தேன். தற்போது அதனைப் பொதுவெளியில் வெளியிடுகிறேன்.
வணக்கம் சார்,
கடந்த மார்ச் 16 அன்று, தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட எனது பணி விலகல் தொடர்பான கடிதத்திற்குத் தாங்கள் அளித்த பதில் கடிதத்தின்படி, கடந்த ஏப்ரல் 15 அன்று விகடன் குழுமத்தின் பணிகளில் இருந்து முழுமையாக விலகிவிட்டேன். ஊடகத்துறையில் எனது முதல் அனுபவமாக அமைந்தது விகடன். கடந்த ஒன்றரை ஆண்டுகளில், பல்வேறு அனுபவங்களை இந்தப் பணியில் கற்றுக் கொண்டேன். விகடன் குழுமத்தின் ஊழியராக ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே பணிபுரிந்திருந்த போதும், இந்த நிறுவனத்திற்கும் எனக்குமான உறவு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
கடந்த 2009ஆம் ஆண்டு, சுட்டி விகடன் இதழின் ‘பேனா பிடிக்கலாம்; பின்னி எடுக்கலாம்’ திட்டத்தின் கீழ் சுட்டி ஸ்டாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டு, நான் முயன்றும் என்னால் இந்தத் திட்டத்தில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது இருந்தே ஊடகத்துறை மீதான ஈர்ப்பினால், எனது இளங்கலை, முதுகலை ஆகியப் பட்டப்படிப்புகளில் இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தேன். 2018ஆம் ஆண்டு மாணவப் பத்திரிகையாளர் திட்டத்திலும், அதன்பிறகு விகடன் ஊழியராகவும் பணிபுரிந்தேன். ஊடகத்துறை மீதும், இதழியல் மீதும் எனது சிறுவயதிலேயே ஈர்ப்பை உருவாக்கிய விகடன் குழுமத்தில் பணியாற்றியது என் வாழ்நாளின் மிகப்பெரிய சாதனையாக எனக்குத் தெரிந்தது.
தற்போது மிகுந்த மன வருத்தத்துடன் நான் மிகவும் நேசித்த ஊடகத்துறையை விட்டும், அதுகுறித்த விதையை என்னுள் விதைத்த நிறுவனத்தை விட்டும் வெளியேறுகிறேன். எனது பணிவிலகல் தொடர்பாகத் தங்களிடம் பேசிய போது, Freelance செய்யுமாறு அறிவுறுத்தினீர்கள். அதை நானும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டேன். அதன்பிறகு, நீங்கள் சொன்னவற்றை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘ர.முகமது இல்யாஸ்’ என்ற எனது பெயரை, கட்டுரைகளில் இடம்பெறச் செய்தால் ’வாசகர்கள் முன்முடிவோடு கட்டுரையை அணுகக் கூடும்; பி.ஜே.பிக்கு எதிரான கட்டுரை என்று வாசகர்கள் உங்கள் பெயரை வைத்து முடிவு செய்துவிடுவார்கள்’ என்று கூறினீர்கள். மேலும், எனது பெயருடன், மற்றொரு நிருபரின் பெயரையும் சுட்டிக்காட்டி, அவரது கட்டுரைகளுக்கும் இந்தப் பிரச்னை பொருந்தும் என்றும் நீங்கள் சொன்னது வருத்தத்தை ஏற்படுத்தியது. நான் ஏப்ரல் 15 அன்று பணியில் இருந்து விலகும் போது, தங்களிடம் இதுகுறித்து பேசிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். எனினும், கொரோனா லாக்டௌன் பிரச்னையால் அது நடைபெறவில்லை. அதனால் எனது கருத்துகளை எழுத்து வடிவில் பதிவு செய்கிறேன்.
உங்கள் வாதப்படி, முஸ்லிம் பெயரில் நான் எழுதும் கட்டுரைகளில் வாசகர்கள் ‘பி.ஜே.பி எதிர்ப்புக் கட்டுரை’ என்று முன்முடிவு செய்தால், இந்துப் பெயரில் பிறர் எழுதும் கட்டுரைகளை வாசகர்கள் ‘பி.ஜே.பி ஆதரவுக் கட்டுரை’ என்று முன்முடிவு செய்வார்களா என்று தெரியவில்லை. பி.ஜே.பியின் 40 ஆண்டு குறித்து கடந்த ஏப்ரல் 6 அன்று, நான் எழுதிய கட்டுரையில் எனது பெயரைச் சேர்ப்பதும், நீக்குவதுமாக இருந்தார்கள். எனது கட்டுரைகளில் இந்தியா மதப் பெரும்பான்மைவாதத்தை நோக்கி நகர்வதைக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அதில் இருந்து எனது பெயரை நீக்கி, பெரும்பான்மைவாதத்திற்கு ஆதரவாக செயல்படவே விரும்புகிறீர்கள். தங்களைப் போன்ற நீண்ட கால அனுபவம் ஏதும் எனக்கு இல்லையென்ற போதும், இதுதான் நீங்கள் அடிக்கடி வலியுறுத்தும் நடுநிலைமையா என்று கேட்கத் தோன்றுகிறது.
நடுநிலைமை குறித்தும் எனது கட்டுரைகளில் தங்களுக்கு விமர்சனம் இருப்பதாக எனக்கு தோன்றியது. சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனக் குழு தொடர்பாக ஜூ.விக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் இந்தப் பிரச்னை வெளிப்பட்டது. “The job of the newspaper is to comfort the afflicted and afflict the comfortable” என்ற இதழியல் தொடர்பான பிரபல வாசகத்தை, முதுகலைப் பட்டப்படிப்பின் போது, எனது ஆசிரியர்கள் எனக்குக் கற்பித்தனர். என்னால் இயன்ற வரை, அதன்படி செயல்படுகிறேன். சர்வ வல்லமை பொருந்திய, நிறுவனமயமாக்கப்பட்ட அரசுக் கட்டமைப்பையும், உதிரிகளாகப் எந்த நிறுவனப் பிடிப்பும் இல்லாமல், பல்வேறு காரணங்களால் பிரிந்து கிடக்கும் எளிய மக்களையும் என்னால் ஒரே தராசு கொண்டு அணுக முடியவில்லை. பாதிக்கப்பட்டவனிடமும், பாதிப்பை ஏற்படுத்தியவனிடமும் கருத்து கேட்டு பதிவுசெய்வது மட்டுமே இதழியல் என்று நான் கற்றுக்கொள்ளவில்லை.
நான் மேலே குறிப்பிட்டவற்றுள், தங்களுக்கு விமர்சனங்கள் இருக்கலாம்; இவை மிகச் சாதாரண ஒன்றாகத் தோன்றலாம். எனினும், இது என்னுடைய ஆதங்கத்தின் வெளிப்பாடு. ஒரு மனிதனாக, சக ஊழியனாகத் தங்களுடன் நான் பணியாற்றிய போதும், எனது மதிப்பு என்பது முதலில் எனது கருத்தாகவும், பிறகு எனது பெயராகவும், எனது பெயரில் இருக்கும் சிறுபான்மை மத அடையாளமாகவும் சுருக்கப்பட்ட பிறகு என்னால் இங்கு தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. பிற ஊடகங்களிலும், எனக்கு இதே பிரச்னைகள் எழும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், இந்தத் துறையை விட்டு தற்போது தற்காலிகமாக விலகுகிறேன். நான் கற்றுக்கொண்ட இதழியல் பண்புகளை எனது தலைமுறை இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் பொருட்டு, தனியார் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்துள்ளேன்.
தங்களுக்குக் கீழ் பணியாற்றியதில் பலவற்றைக் கற்றுக் கொண்டேன். பணியில் சேர்ந்த முதல் நாளில், நான் வேலை செய்த முதல் கட்டுரை infograph ஒன்றை அச்சிடச் செய்து, அதில் நீங்கள் செய்து தந்த பிழைதிருத்தங்களை இன்றுவரை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் என்பதையும் இந்தக் கடிதத்தில் குறிப்பிட விரும்புகிறேன். இதழியல் துறை பெரும்பான்மைவாதத்திற்குப் பலியாகியுள்ளது. எனது பணிவிலகல் அதற்கு ஓர் சான்று.
மிகுந்த மன வருத்ததுடன், ர. முகமது இல்யாஸ். (இது மட்டுமே எனது பெயர்; எனக்கு வேறு புனைப்பெயர்கள் கிடையாது) 20/04/2020
”இந்தப் பிரபஞ்சத்தில் மூன்று உலகங்கள் இருக்கின்றன. கடவுள்கள் வசிக்கும் சொர்க்க உலகம்; மனிதர்கள் வசிக்கும் பூமி உலகம்; பூச்சிகளும் பிற ஊர்வனவும் வசிக்கும் பாதாள உலகம். இவை நமது புனித நூல்களில் இருக்கின்றன. ஆனால் நான் இதனை வாட்சாப்பில் படித்தேன்”.
இரவுநேர ரோந்துக்குச் செல்லும்போது, தனக்குக் கீழிருக்கும் காவல் அதிகாரியிடம் இதைச் சொல்கிறார் உயரதிகாரியான ஜெய்தீப் அஹ்லாவத். ஹாத்தி ராம் சௌத்ரி என்ற கதாபாத்திரம் அவருக்கு. சில்லறை வழக்குகளாலும், பணி உயர்வு பெற்ற தனது ஜூனியருக்குக் கீழ் பணியாற்றுவதாலும் அவருக்குத் தாழ்வு மனப்பான்மை. ஏதேனும் பெரிய வழக்கு கிடைத்துவிடாதா என்ற ஏக்கம். அப்படியாக அவருக்குக் கிடைக்கிறது ஒரு வழக்கு.
Paatal Lok poster
டெல்லியின் பாலம் ஒன்றில், பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நால்வரைத் துரத்திக் கைது செய்கிறது புலனாய்வுத் துறை. அந்தப் பாலம், ஹாத்தி ராம் சௌத்ரியின் காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது. வழக்கு விசாரணை அவருக்கு அளிக்கப்படுகிறது. நால்வரும் கைது செய்யப்படுகின்றனர். கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அவர்கள் கொலை செய்ய முயன்றதாகச் சுட்டிக்காட்டப்படும் நபர், தேசிய ஊடகம் ஒன்றின் மூத்த ஊடகவியலாளர், சஞ்சீவ் மெஹ்ரா. கடந்த கால ஆட்சியின் மிகப்பெரிய ஊழல் ஒன்றை வெளிக்கொண்டு வந்தவர். ஆதலால் அவர் மீது கொலை முயற்சி நடந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.
வழக்கு விசாரணையைத் தொடங்குகிறார் ஹாத்தி ராம் சௌத்ரி. அவருக்கு உதவியாக இருப்பது, அவருக்குக் கீழ் பணியாற்றும் இம்ரான் அன்சாரி. ஐ.பி.எஸ் தேர்வுக்காகத் தயாராகும் அன்சாரி, தான் பணியாற்றும் இடத்தில், தான் முஸ்லிம் என்பதால் பல்வேறு விதமான பாகுபாடுகளுக்கு உள்ளாகிறார். விசாரணையின் கோணம், அரசுத் தரப்புக்குத் தோதாக அமையாததாலும், பல்வேறு குறைபாடுகளாலும் சி.பி.ஐக்கு மாற்றப்படுகிறது. ஹாத்தி ராம் சௌத்ரி பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். ஆனாலும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. சி.பி.ஐ தன் விசாரணையில், சஞ்சீவ் மெஹ்ரா கொலை முயற்சி வழக்கைப் பாகிஸ்தான் சதி என்று அறிவிக்க, தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் ஊடகவியலாளரான சஞ்சீவ் மெஹ்ரா இதனைப் பயன்படுத்திக் கொண்டு தன்னை வளர்த்துக் கொள்கிறார். பிடிபட்ட நால்வரும் யார் என்பதைத் தேடி, ஹாத்தி ராம் சௌத்ரி பயணிக்கிறார். விடையைத் தெரிந்து கொண்டாரா என்பது மீதிக்கதை.
Paatal Lok
ஏறத்தாழ 7 மணி நேரங்கள் கவனம் சிதறவிடாமல், தொடர்ந்து பார்வையிடும் அளவுக்கு சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கிறது ‘பாதாள் லோக்’. இதனை முன்னின்று எழுதியிருப்பவர் சுதீப் ஷர்மா. இவர் ஏற்கனவே எழுதிய திரைக்கதைகளான ’உட்தா பஞ்சாப்’, ‘NH10’, ‘சோன்சிரியா’ ஆகியவை இதே பாணியிலான கதைகள். ‘உட்தா பஞ்சாப்’ பஞ்சாப்பில் போதைக்கு அடிமையாகும் இளைஞர்களைப் பற்றி பேசியது; ‘NH10’ ஆணவப்படுகொலையை முன்வைத்து நகர்ந்தது. ‘சோன்சிரியா’ இந்திரா காந்தி காலத்தில் மத்தியப் பிரதேசம் – பிஹார் எல்லையில் வாழ்ந்த கொள்ளைக்காரர்கள், சாதி, வன்கொடுமை முதலானவற்றைத் தொட்டது. வட இந்தியாவின் நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையிலான மாபெரும் இடைவெளியைத் தனது படைப்புகளில் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார் சுதீப் ஷர்மா. அதன் நீட்சியாக, தற்போது வெளிவந்திருக்கிறது ‘பாதாள் லோக்’.
கடந்த காலங்களில் திரையரங்குகளில் வெளியான பாலிவுட் திரைப்படங்கள் பெரும்பாலும் மக்களுக்கான அரசியலைப் பேசத் தயங்கின. அரசு தலையீடு, சென்சார் பிரச்னை, வணிக சமரசங்கள் முதலானவை இதன் காரணிகளாக முன்வைக்கப்பட்டன. இணையம் உருவான பிறகு, இதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. இயக்குநர் அனுராக் காஷ்யப் கடந்த ஆண்டு, ஒரு பேட்டியில் “எனது தொழில் பெருகியதற்குக் காரணம், மக்கள் எனது திரைப்படங்களை இணையத்தில் டவுன்லோட் செய்ததால்தான்; எனது படங்கள் டவுன்லோட் செய்யப்படாமல் இருந்திருந்தால், நான் இந்தத் தொழிலில் இருந்திருக்க மாட்டேன்” என்றார். இணையத்தில் திரைப்படங்கள் பைரசி செய்யப்படக்கூடாது என்று பெரும்பான்மையான படைப்பாளிகள் கூறியபோது, இப்படியொரு கருத்தை அனுராக் முன்வைத்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. ஓ.டி.டி தளங்களுக்கான வணிகம் இந்தியாவில் பெருகிய பிறகு, அனுராக் உள்ளிட்ட படைப்பாளிகள் தணிக்கைக்குப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லாமல், சுதந்திரமாக செயல்படத் தொடங்கினர். அதன் விளைவாகத் தற்போது பல்வேறு திரைப்படங்கள், தொடர்கள் முதலானவை வெளிப்படையாக அரசியல் பேசி வருகின்றன.
Sacred Games
அனுராக் காஷ்யப் – விக்ரமாதித்ய மோட்வானே ஆகியோர் இயக்கிய ‘சேக்ரெட் கேம்ஸ்’ இதற்குத் தொடக்கமாக அமைந்தது. மும்பையின் நிலம், சமகால அரசியல் முதலானவற்றைத் தொட்ட கேங்க்ஸ்டர் கதை. அதன் இரண்டாம் பாகம் இன்னொரு படி மேலே சென்று, இந்திய அரசு நலன்களுக்காகப் பகடையாக்கப்படும் கேங்க்ஸ்டர், அவனைத் தீவிரவாதியாகப் பயன்படுத்திக் கொள்ளும் இந்து சாமியார் என்ற கதையைப் பேசியது. ‘நெட்ஃப்ளிக்ஸ்’ தளத்தில் இந்தத் தொடர் வெளியான சில மாதங்களுக்குள், இதே பாணியில் இந்துத்துவ எதிர்ப்பை எதிர்கால டிஸ்டோப்பியன் உலகம் வழியாக முன்வைத்தன ‘கௌல்’, ‘லேலா’ ஆகிய தொடர்கள். ’அமேசான் ப்ரைம்’ தளம் அரசியலைத் தொட்டது, ‘தி பேமிலி மேன்’ தொடரின் வழியாக. மனோஜ் பாஜ்பாய் நடிப்பில், வீட்டில் சாதாரணமாகவும், அலுவலகத்தில் மிகப்பெரிய உளவாளியாகவும் வாழும் ஒருவனின் கதை. காஷ்மீர், தீவிரவாதம் முதலானவற்றைத் தொட்டுச் சென்ற கதை. இவை அனைத்துமே, இந்திய அரசு என்னும் கட்டமைப்பில் இருக்கும் பிரச்னைகளை ஓரளவுக்குப் பேசியவை.
அதே வேளையில், அதிகார வர்க்கத்தின் முகங்களாக இருப்பவர்களுக்கும், மக்களுக்குமான இடைவெளி, வழக்கு விசாரணை முதலானவற்றைக் கதைக்களங்களாக கொண்ட ‘டெல்லி க்ரைம்’, ‘பஞ்சாயத்’, ‘சோனி’, ‘She’ ஆகிய படைப்புகளும் சமீப காலங்களில் கவனம் பெற்றவை. இப்படியான இரண்டு தளங்களையும், நேர்த்தியாகக் கையாண்டு, திரைக்கதையில் ஆச்சர்யம் அளித்திருக்கிறது ‘பாதாள் லோக்’.
Paatal Lok
தெஹல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலின் ‘The Story of my Assassins’ நூல் தான் இந்தத் தொடருக்கான காரணம் எனக் கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் ஒடுக்கப்படும் சமூகங்கள், அதிகார வர்க்கத்தில் under represented ஆக இருப்பதும், இதே சமூகங்கள் இந்திய சிறைச்சாலைகளில் over represented ஆக இருப்பதும் தற்செயலானவை அல்ல. இந்த உண்மையைக் கதைக்கருவாக்கி, அதன் மூலம் படைக்கப்பட்டிருக்கிறது ‘பாதாள் லோக்’. இந்தக் கதையின் வழியாக, இந்தியச் சமூகத்தில் தலித்கள் மீதான சாதி ஆதிக்கம், முஸ்லிம்கள் மீதான கும்பல் படுகொலைகள், திருநங்கைகள் மீதான ஆணாதிக்க வன்கொடுமை முதலானவை எப்படி நிறுவனமயமாகியிருக்கின்றன என்பதையும், இதில் அரசு எப்படி தலையிடுகிறது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது இந்தத் தொடர். இந்திய அரசு இயங்குவதற்கும், தேர்தல் கட்சிகள் வெற்றி பெறுவதற்கும் (பாஜக குறித்து குறியீடுகள் உள்ளன), வட இந்திய ஊடகங்கள் மக்களிடையே தங்கள் இருப்பைப் பெற்றுக் கொள்வதற்கும் இஸ்லாமிய வெறுப்பு நிறுவனமயப்பட்டிருப்பதை அம்பலப்படுத்துகிறது ‘பாதாள் லோக்’.
உயர்சாதி – தலித், இந்து – முஸ்லிம், ஆணாதிக்கம் – பால்புதுமை, கிராமம் – நகரம் , ஆண் – பெண், மனிதன் – விலங்கு, அரசு – சாமான்யர்கள் முதலான பல்வேறு முரண்கள் இதில் பேசப்பட்டிருக்கின்றன. தலித் வீட்டில் உணவருந்தி விட்டு, கங்கை நீரினால் கைகளைக் கழுவும் பார்ப்பன அரசியல்வாதி இதில் இருக்கிறார். கும்பல் படுகொலைகளையில் முதல் மகனை இழந்த பயத்தில், இரண்டாவது மகனை முஸ்லிமாக வளர்க்காதபோதும், அரசு அவனை ஜிஹாதியாக அறிவித்துவிட்டதே என்று வேதனைப்படும் முஸ்லிம் தந்தை இருக்கிறார். தான் திருநங்கை என்பதை வெளியில் கூறுவதற்கும், சமூகத்தால் தன்னை எப்படி அணுகும் என்று அஞ்சுபவர் இருக்கிறார். அதே வேளையில், திரைக்கதையிலும் அது பேசிய அரசியலிலும் சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன.
சாதிய வன்முறை குறித்த காட்சியில் உயர்சாதி சீக்கியர்களைக் காட்டியிருப்பது, தலித் ஆண் பார்ப்பன பெண்ணை ஒடுக்குவதான சித்தரிப்பு முதலானவை சிக்கல்களாக வெளிப்பட்டன. இப்படியான பிரச்னைகள் சமூகத்தில் நிகழ்வது உண்மை என்றபோதும், பார்ப்பன மதத்தில் நிகழும் எண்ணிக்கையை விட மிகக் குறைவானவை. சீக்கிய சமூகம் இனப்படுகொலையை எதிர்கொண்ட சமூகம். ஓர் அரசைக் குற்றம் சாட்டும்போது, அதில் நிறுவனமயமாகியிருக்கும் பார்ப்பன நலன்களை ஒதுக்கி, அனைத்து சமூகங்களின் தலையிலும் பாரத்தை வைத்திருக்கிறது ‘பாதாள் லோக்’. மோடி பக்தரான விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா ஷர்மா இந்தத் தொடரைத் தயாரித்ததற்கான காரணம் இதில் புலப்படுகிறது.
Paatal Lok
ஹாத்தி ராம் சௌத்ரி கதாபாத்திரத்தைப் போலவே, சினிமா வாழ்க்கையைக் கொண்டவர் ஜெய்தீப் அஹ்லாவத். தனக்குக் கிடைத்த வாய்ப்பில், பின்னியெடுத்திருக்கிறார் ஜெய்தீப். ஊடகவியலாளர் சஞ்சீவ் மெஹ்ராவாக நீரஜ் கபி நடித்திருக்கிறார். ஓ.டி.டி காலங்களிலும் மாற்று சினிமாவிலும் வெளிப்படும் திறமையான நடிகர் நீரஜ் கபி. ’ஹத்தோடா’ தியாகியாக மிரட்டியிருக்கிறார் அபிஷேக் பானர்ஜி. இந்தத் தொடரின் casting director இவர்தான்.
‘பாதாள் லோக்’ தொடரை இணையத்தில் இருக்கும் வலதுசாரி இந்துத்துவ ட்ரோல்கள், ஹிந்து ஃபோபியாவை உற்பத்தி செய்வதாகக் கூறி, புறக்கணிக்க அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். ‘சேக்ரெட் கேம்ஸ்’ தொடர் முதல் ஒவ்வொன்றிற்கும் அவர்களின் எதிர்வினை இதுவாகவே இருக்கிறது. இணையத்தில் இருக்கும் இந்துத்துவ எதிர்ப்புச் சந்தையை ஓ.டி.டி நிறுவனங்கள் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கின்றன. கடந்த பிப்ரவரி மாதம், தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ’ஓ.டி.டி தளங்கள் தங்களைத் தாங்களே தணிக்கை செய்துகொள்ள முன்வர வேண்டும்’ என்றார். Digital Content Complain Council என்ற அரசு அமைப்பின் விதிமுறைகளைப் பின்பற்றி, படைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இந்துத்துவ ட்ரோல்களின் எதிர்ப்பையும் மீறி, சிறப்பான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது ‘பாதாள் லோக்’.
Zee news ஆசிரியர் சுதிர் சவுத்ரி மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது கேரள காவல் துறை.
சுதிர் சவுத்ரி கடந்த மார்ச் 11ம் தேதி Zee news தொலைக்காட்சியில் இஸ்லாம்-அச்சத்தை பரப்பும் வகையில் ஜிஹாதின் வகைகள் என விளக்கப் படத்துடன் செய்தித் தொகுப்பு ஒன்றை வெளியிட்டார். அதன் அடிப்படையில் புகார் எழுந்ததால், மத விரோதத்தைப் பரப்பியது, முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைக் காயப்படுத்தியது ஆகியவற்றின் அடிப்படையில் கேரளாவின் கோழிக்கோட்டிலுள்ள காவல் நிலையமொன்றில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவாகியுள்ளது. ஜாமினில் வெளிவர முடியாத ஐபிசி 295 A பிரிவும் அவர் மிது போடப்பட்டிருக்கிறது.
காவல்துறைக்குப் புகாரளித்த அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பின் (AIYF) மாநிலத் துணைச் செயலாளரும் வழக்கறிஞருமான கவாஸ் கூறியதாவது, அந்த நிகழ்ச்சி மதச்சார்பற்ற விழுமியங்களுக்கும் அரசமைப்புக்கும் முரணாக இருப்பதாகத் தெரிவித்த அவர், ஒரு குறிப்பிட்ட மதப் பிரிவினருக்கு அது எதிராக இருப்பதாகத் தெரிவித்தார்.
கவாஸ் மார்ச் 17 புகார் அளிபதற்கு முன்னர் AIYF வின் தலைமையிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அதன் பிறகு அப்புகாரை கேரள மாநில டிஜிபி லோகநாத் பெஹெராவிடமும் அதன் நகலை கோழிக்கோடு காவல் ஆணையரிடமும் உள்துறை அமைச்சருக்கும் அனுப்பியதாகக் கூறினார்.
அவர் அளித்த புகாரில், இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களைக் குறிவைத்து ‘ஜிஹாத் விளக்கப்படம்’ போடுவதன் வழியாக வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்தியதோடு இரு பிரிவினரிடையே பிளவை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் (MIB) வழிகாட்டுதல் 2 (ii) என்பது வகுப்புவாத மனப்பான்மையை ஊக்குவிக்கும் அல்லது மதக்குழுக்களை இழிவுபடுத்தும் காட்சிகள் அல்லது சொற்களைப் பயன்படுத்துவதை தடுக்கிறது என்று கவாஸ் தனது புகாரில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் FIR பதிவு செய்ததைத் தொடர்ந்து, ZEE நிர்வாகத்திடம் இருந்து, டெல்லி மற்றும் பெங்களூரில் உள்ள பத்திரிக்கையாளர்களிடம் இருந்து உட்பட தொடர் அழைப்புகள் வந்ததாகக் கூறியுள்ள அவர், புகார் அளித்ததன் பின்னணியில் உள்ள எனது நோக்கங்களையும் நான் ஏன் கேரளாவில் புகார் அளித்தேன் என்பதையும் கேட்டார்கள் என்றார். அதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தனக்கு இல்லாததால் தனது நிலைப்பாட்டை அவர்களுக்கு விளக்க தயாராக இல்லை என்றும் கவாஸ் தெரிவித்தார்.
AIYF தலைவர் கூறும்போது, புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி ஒரு சேனலில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டதும் அது பொதுவானது. ஒரு பார்வையாளர் அந்நிகழ்ச்சியுடன் முரண்பட்டால் அதற்கெதிராக அவர் எங்கு வேண்டுமானாலும் வழக்குப் பதிவு செய்யலாம். நான் கேரளாவில் வழக்கறிஞராக பணியாற்றுவதால் இங்கேயே புகார் தாக்கல் செய்துள்ளேன் என்று கூறினார்.
அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்கள் முழுவதும் பேராதரவைப் பெற்று வருகிறது அனுபவ் சின்ஹாவின் ‘தப்பட்’. கடந்த ஆண்டு அவர் இயக்கிய ‘ஆர்டிகிள் 15’ திரைப்படமும் இப்படியான வரவேற்பைப் பெற்றது. 2018ஆம் ஆண்டு வெளியான அவரது ’முல்க்’ திரைப்படமும் இதே வரிசையில் அமைந்திருந்தது.
மதம், சாதி, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் வட இந்தியச் சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளை அனுபவ் சின்ஹாவின் சமீபத்திய மூன்று திரைப்படங்களும் பேசின. இந்த மூன்று திரைப்படங்களுக்கு முன், ஷாரூக் கானை வைத்து ‘ரா ஒன்’ போன்ற கமர்சியல் மசாலா திரைப்படங்கள் இயக்கிக் கொண்டிருந்த அனுபவ் சின்ஹா, தனது படைப்புகளில் அரசியல் பேசத் தொடங்கியது வரவேற்புக்குரியது.
அனுபவ் சின்ஹா ஒரு முஸ்லிம் அல்ல; ஆனால், அவரது ‘முல்க்’ இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான பரப்புரைகளைக் கண்டிக்கும் திரைப்படமாக அமைந்தது. அவர் தலித் அல்ல; ஆனால், அவரது ‘ஆர்டிகிள் 15’ உத்தரப் பிரதேசத்தில் வாழும் தலித்கள் மீதான சாதி இந்துக்களின் அடக்குமுறையைக் கண்டித்தது. அவர் ஒரு பெண் அல்ல; ஆனால், அவரது ‘தப்பட்’ இந்தியக் குடும்பங்களில் பெண்கள் மீதான வன்முறையைக் கண்டித்தது. இந்தியச் சமூகத்தில் ஓர் இந்துவாக, உயர்சாதியைச் சேர்ந்தவராக, ஆணாக அவர் இயக்கிய திரைப்படங்கள் பாராட்டுக்குரியவை என்ற போதும், அவரது படைப்புகள் அவரது அடையாளங்களின் வழியான பார்வையில் வெளியாகி, அவரது அரசியலின் போதாமையையே வெளிபடுத்தியிருக்கின்றன.
இயக்குநர் அனுபவ் சின்ஹா
2018ஆம் ஆண்டு வெளியானது ‘முல்க்’. ரிஷி கபூர், டாப்சி ஆகியோர் முன்னணி நடிகர்கள். வாரணாசியில் வாழும் முஸ்லிம் குடும்பம் ஒன்றின் உறுப்பினர் தீவிரவாதச் செயலில் ஈடுபட, அதுவரை நல்லிணக்கத்தோடு அந்தக் குடும்பத்தை அணுகிய பெரும்பான்மைச் சமூகம், மொத்த குடும்பத்தையும் தீவிரவாதிகளாகக் கருதத் தொடங்குகிறது. தங்கள் தேசப்பற்றை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு, அந்தக் குடும்பத்தின் மீது விழுகிறது. இதன் வழியாக, இந்தியச் சமூகத்தில் நிலவும் இஸ்லாமிய வெறுப்பைக் கண்டிக்கிறது ‘முல்க்’. பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதியைக் கதைக்களமாகக் கொண்டு, பாஜக ஆட்சியில் இப்படியான திரைப்படம் பாலிவுட்டில் வெளியாகியது நல்லிணக்கத்தை விரும்புவோரிடையே நம்பிக்கையை விதைத்தது.
2019ஆம் ஆண்டு வெளியான ‘ஆர்டிகிள் 15’ இந்தியா முழுவதும் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. தலித்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் குறித்து பாலிவுட் திரைப்படங்கள் பெரிதும் பேசியிராத சூழலில், ஆயுஷ்மான் குரானா நடிப்பில், படாவுன் கிராமத்தில் நிகழ்ந்த வன்கொடுமை நிகழ்வின் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. கூலி உயர்வு கேட்டதற்காக இரண்டு தலித் சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட, கிராமத்திற்குப் புதிதாக வரும் காவல்துறை அதிகாரி அந்த வழக்கின் பின்னணியை விசாரிப்பதாக உருவாக்கப்பட்டிருந்தது ‘ஆர்டிகிள் 15’.
2020ஆம் ஆண்டு வெளியான ‘தப்பட்’, இந்தியக் குடும்பங்களில் நிலவும் பெண்களுக்கு எதிரான வன்முறையைப் பேசியது. உயர்சாதி எலைட் குடும்பம் ஒன்றில் மகிழ்ச்சியாக வாழும் தம்பதி. ஒருமுறை கோபத்தில் மனைவியைக் கணவர் அறைந்துவிட, அதனை எதிர்த்து விவாகரத்துப் பெறும் மனைவி என்ற ஒன்லைனின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்த இந்தக் கதையில் வீட்டு வேலைக்காரப் பெண், பெண் வழக்கறிஞர், கதாநாயகியின் தாய், மாமியார், பக்கத்து வீட்டு சிங்கிள் பேரண்ட் பெண் முதலான பாத்திரங்களின் வழியாகவும் ஆணாதிக்கத்தை விமர்சனம் செய்திருந்தது ‘தப்பட்’.
‘தப்பட்’ படப்பிடிப்பில் நடிகை டாப்சி, இயக்குநர் அனுபவ் சின்ஹா
மேலோட்டமாகப் பார்க்கையில், இந்த மூன்று திரைப்படங்களும் பேசாப் பொருளைப் பேசியவை. இஸ்லாமோ ஃபோபியா குறித்தோ, தலித்துகள் மீதான ஒடுக்குமுறை குறித்தோ, பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்தோ பாலிவுட் திரைப்படங்கள் பேசாமல் இருந்ததன் விளைவாக உருவானவை இந்தப் படங்கள். அவற்றின் போதாமைகளாக, கதை நிகழும் களங்களும், அவற்றிற்கு இயக்குநர் முன்வைக்கும் தீர்வுகளுமே அமைகின்றன.
மூன்று திரைப்படங்களிலுமே ’எதிர்வினை’ என்ற அம்சத்தின் அடிப்படையில் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. ‘முல்க்’ படத்தில் ஷாஹித் தீவிரவாதியாகாமல் இருந்திருந்தால், இஸ்லாமிய வெறுப்பு அந்தக் குடும்பத்தைத் தீண்டாமல் இருந்திருக்குமா? ‘ஆர்டிகிள் 15’ படத்தில் கூலி உயர்வு கேட்டதற்காகத் தூக்கிலிடப்படுகின்றனர் தலித் சிறுமிகள். கூலி உயர்வு கேட்காமல் இருந்தால், சுரண்டலை நியாயப்படுத்திவிட முடியுமா? ‘தப்பட்’ படத்தில் அம்ரிதா அறையப்படாமல் இருந்திருந்தால், ஆணாதிக்கம் கேள்விக்குள்ளாகியிருக்குமா?
இந்தியாவில் 1947ஆம் ஆண்டு, அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்டபோது, காவல்துறையின் பொறுப்பு ‘சட்ட ஒழுங்கு’ என்பதைக் காப்பதாக அமையப்பெற்றது. இந்தியாவில் ஒழுங்கு என்பது பார்ப்பனியம் நிகழ்த்தும் சுரண்டலில், ஆதிக்கத்தில், உருவாக்கும் வெறுப்பின் அடிப்படையில் இருக்கிறது. இந்த ஒழுங்கு மீதான எதிர்வினையே சட்ட ஒழுங்கை மீறுவதாக இருக்கிறது. இதன் வழியாக, அனுபவ் சின்ஹாவின் மூன்று திரைப்படங்களையும் புரிந்துகொள்ள முடியும்.
‘முல்க்’ போஸ்டர்
‘முல்க்’ திரைப்படம், முஸ்லிம் குடும்பங்களில் தீவிரவாதிகள் இருப்பதாகவும், தோன்றும் போதெல்லாம் எந்தக் காரணமும் இன்றி குண்டுவெடிப்பில் ஈடுபடுவதாகவும் காட்டியிருக்கிறது. மேலும், படம் முழுவதும் ‘நல்ல முஸ்லிம் – கெட்ட முஸ்லிம்’ என்ற வாதம் மென்மையாக முன்வைக்கப்படுகிறது. ‘நாம் – அவர்கள்’ என்ற இந்துத்துவக் கொள்கையைச் சாடும் அதே வேளையில், ’கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வென்றால் கொண்டாடாதீர்கள்!’ போன்ற கருத்துகளையும் முஸ்லிம்களிடம் கூறுகிறது. முஸ்லிம் குடும்பத்தின் தேசப்பற்றை நிரூபிக்க, அதே குடும்பத்தில் இந்துவாக வாழும் மருமகளும், வழக்கறிஞருமான ஆர்த்தி முகமது (டாப்சி) கதாபாத்திரத்தை நாடுகிறது அந்தக் குடும்பம்.
இவை அனைத்திற்கும் நீட்சியாக, நீதிமன்றம் ஓர் தீர்வாக முன்வைக்கப்படுகிறது. கடந்த காலங்களில், நீதிமன்றங்கள் நிகழ்த்திய கால தாமதமான விசாரணைகளால் தன் பாதி ஆயுளை இழந்த முஸ்லிம்களைக் கண்டிருக்கிறது இந்தியச் சமூகம். உலக அரங்கின் கண்முன் இடிக்கப்பட்ட பாபர் மசூதி நிலத்தின் மீது, ராமர் கோயில் கட்டச் சொல்லித் தீர்ப்பளித்தது நீதிமன்றம். சிஏஏ விவகாரங்களில் நீதித்துறையின் மெத்தனம் நாம் அனைவரும் அறிந்தது. நீதிபதி லோயோ தொடங்கி, சமீபத்தில் டெல்லி வன்முறையைக் கண்டித்த நீதிபதி முரளிதர் வரை என்ன ஆனார்கள் என்பதும் வெளிச்சம். இந்த வேளையில், இந்தக் கட்டமைப்புக்குள்ளேயே தீர்வைத் தேடச் சொல்கிறது அனுபவ் சின்ஹாவின் ‘முல்க்’.
’ஆர்டிகிள் 15’ திரைப்படமும் உயர்சாதியில் இருந்து வரும் மீட்பரைத் தேடுவதாக அமைந்திருக்கிறது. பார்ப்பனியத்தை விமர்சிக்காமல், அதன் வழியாக எழும் வன்முறைகளை மட்டுமே அது விமர்சனம் செய்கிறது. மேலும், உயர்சாதி மிட்பர் வரும் வரை, பாதிக்கப்பட்ட தலித்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தலித் அரசியலை முன்வைத்து, மக்களைத் திரட்டும் பாத்திரமும் காவல்துறையால் என்கவுண்டரில் கொல்லப்பட்டு, ‘உச்’ கொட்டுகிறது இந்தத் திரைப்படம். அரசுக் கட்டமைப்பின் அதிகாரிகளால் நிகழ்த்தப்படும் சாதிய வன்முறைகளை அரசியலமைப்பின் வழியாக நிறுத்தக் கோரி மன்றாடல் விடுக்கிறது ‘ஆர்டிகிள் 15’. இதனைத் தன் தோளில் போட்டு, சாக்கடையில் இறங்கி, தலித் சிறுமியைக் கையில் சுமந்துவந்து காக்கிறார் அயன் ரஞ்சன் (ஆயுஷ்மான் குரானா).
‘ஆர்டிகிள் 15’ போஸ்டர்
இந்தப் படம் குறித்த சர்ச்சைகளின்போது, இயக்குநர் அனுபவ் சின்ஹா ட்விட்டரில், “நான் பிராமணச் சமூகத்தை விமர்சிக்கவில்லை. எனது நண்பர்களில் பலரும் பிராமணர்கள் இருக்கிறார்கள். எனது மனைவியே பிராமண குடும்பத்தில் பிறந்தவர்தான். அதனால் எனது மகனும் ஒருவகையில் பிராமண அடையாளம் கொண்டிருக்கிறான்” என்றார். பார்ப்பனியத்தை விமர்சிக்காமல், சாதிய வன்முறையை சட்ட ஒழுங்குப் பிரச்னையாகக் கையாண்டிருக்கிறது ‘ஆர்டிகிள் 15’.
’தப்பட்’ அனுபவ் சின்ஹாவின் கடந்த திரைப்படங்களில் இருந்து மாறுபட்டிருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஆண் மீட்பர்களைப் பயன்படுத்தாதபோதும், அனைத்து பெண்களுக்குமான குடும்ப வன்முறை சிக்கலை எலைட் பெண்களின் வழியாக வெளிப்படுத்தியிருக்கிறது. வேலைக்காரப் பெண்ணின் கதை கூட படத்தில் முழுமை பெறவில்லை. மேலும், குடும்ப வன்முறையை எதிர்ப்பது வரவேற்புக்குரியது என்றபோதும், அதனின் வேரான பார்ப்பனியத்தை அசைத்துப் பார்க்கவில்லை ‘தப்பட்’.
இந்தியாவின் பார்ப்பன அரசு-சமூகக் கட்டமைப்பில், பெண்களின் பங்கு என்பது வாரிசு பெறுவதும், அதன் மூலம் குடும்பத்தின் பெயரை, சாதியின் பெயரை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதாகவும் சுருக்கப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டாயிரம் ஆண்டுக்கால நடைமுறை என்பது இதுதான். ‘தப்பட்’ படத்தின் அம்ரிதாவோ, விவாகரத்து பெற்ற பின்பும், குடும்பத்தின் பெயரைக் காக்க குழந்தை பெற்றுக்கொள்ள முடிவுசெய்கிறார். இதன்மூலம், பார்ப்பன சமூகத்தின் ‘அடக்கமான பெண்’ வேடம் தானாக அவரை வந்து ஒட்டிக்கொள்கிறது. மேலும், வழக்கறிஞராக வரும் பெண் கதாபாத்திரம் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் வெற்றிபெற்று வருவதாகக் காட்டப்பட்டு, மீண்டும் நீதித்துறையின் புனிதத்தைக் காப்பாற்றியிருக்கிறார் அனுபவ் சின்ஹா. பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதே இந்தியாவின் நீதித்துறையின் பரிதாபத்திற்குரிய நிலைமை.
‘தப்பட்’ போஸ்டர்
அனுபவ் சின்ஹா ’கேசரி; ‘பாட்லா ஹவுஸ்’ முதலான இஸ்லாமிய வெறுப்புத் திரைப்படங்கள் வெளியான காலத்தில் ‘முல்க்’ திரைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். பெரும்பாலான பாலிவுட் திரைப்படங்கள் தொடாத சாதிய வன்முறை என்ற களத்தைத் தொட்டது அனுபவ் சின்ஹாவின் ‘ஆர்டிகிள் 15’. ‘கபீர் சிங்’ வெளியாகி வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றி பெரும் காலகட்டத்தில், அவரின் ‘தப்பட்’ வெளியாகியிருக்கிறது. இந்தத் துணிச்சல் போற்றுதலுக்குரியது என்றபோதும், அவை முன்வைக்கும் தீர்வுகள் நேருவிய காலத்தைச் சேர்ந்தவை. பார்ப்பனியம் நாஜித்தனத்துடன் அரசு நிர்வாகத்திலும், சமூக யதார்த்தத்திலும் நிறுவனமயப்பட்டிருக்கும் காலத்தில் மக்கள் திரட்சியையும், அரசியல்மயப்படுவதையும், அதனால் நிகழவிருக்கும் பார்ப்பனிய ஒழிப்பையும் பின்னுக்குத் தள்ளுகின்றன. சமூகத்தில் நிலவும் இந்தப் பிரச்னைகள் குறித்து பேசப்படாததால், அவை வணிக ரீதியில் முக்கியத்துவமும் பெற்றுவிடுகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது ‘வரனே ஆவஷ்யமுண்டு’. துல்கர் சல்மான் தயாரிப்பில், ஷோபனா, சுரேஷ் கோபி, துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷன், ஊர்வசி முதலானோர் நடிப்பில், அனூப் சத்யன் என்ற அறிமுக இயக்குநரின் படைப்பாக வெளிவந்திருந்தது. பிப்ரவரி மாதம் வெளியானபோதும், ஏப்ரல் இறுதியில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானபோதும் சர்ச்சைக்குள்ளாகாத இந்தத் திரைப்படம், துல்கர் சல்மானின் ஒரு ட்வீட்டால் பெரும் சர்ச்சையை எதிர்கொண்டது. படத்தின் ஒரு காட்சியில், சுரேஷ் கோபி வளர்க்கும் செல்ல நாயின் பெயர் ‘பிரபாகரன்’ என்று சூட்டப்பட்டிருந்தது. அந்தக் காட்சியைப் ப்ரோமோவுக்காக துல்கர் சல்மான் வெளியிட்டதும் சர்ச்சை தொடங்கியது.
இணையத்தில் தமிழ்த்தேசியத்தை முன்வைத்து இயங்கும் நபர்கள் இதனைக் கடுமையாக எதிர்க்கத் தொடங்கினர். நாய்க்கு மம்மூட்டியின் பெயரைச் சூட்டுமாறு ட்ரெண்டிங் செய்யப்பட்டது. தொடர்ந்து துல்கர் சல்மான் குறிவைத்துத் தாக்கப்பட்டார். இறுதியாக, துல்கர் சல்மான் மன்னிப்புக் கேட்டு, அந்த ட்வீட்டை அழித்தபோதும், அவர் மீதான தாக்குதல் தொடர்ந்தபடியே இருந்தது. ‘வரனே ஆவஷ்யமுண்டு’ சர்ச்சைக்குரிய திரைப்படமாக அந்தப் புள்ளியில் மாறியது.
திருமண வயதில் மகளைக் கொண்டிருக்கும் ஷோபனாவுக்கும், திருமணம் ஆகாத ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி சுரேஷ் கோபிக்கும் இடையிலான காதல் கதை. வயது முதிர்ந்தவர்களிடையிலான காதல் குறித்து கடந்த ஆண்டுகளில், ’சில்லுக் கருப்பட்டி’, ‘பவர் பாண்டி’ முதலானவை மேலோட்டமாகத் தொட்டுச் சென்றிருந்தன. ‘வரனே ஆவஷ்யமுண்டு’ அப்படியாக வெளியாகியிருந்தது. இதே கதைக்கருவை கொண்ட மற்ற படங்களைப் போலவே, இதுவும் எலைட் மனிதர்கள் குறித்த திரைப்படமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், சென்னையில் வாழும் மலையாளிகளின் கதையாக எழுதப்பட்டிருந்தது.
வரனே ஆவஷ்யமுண்டு
’நாட்டில் எவிடேயா?’ – சென்னையில் மலையாளிகளுடன் வாழ்ந்தால், இந்தக் கேள்வியை அடிக்கடி உங்களால் எதிர்கொள்ள முடியும். சென்னை முழுவதும் வாழும் மலையாளிகளின் மக்கள்தொகை மிகப்பெரிது. தமிழ் மக்களின் எண்ணிக்கைக்கு ஈடில்லை என்றபோதும், மலையாளம் பேசும் கணிசமான மக்கள் சென்னை மாநகரத்தில் வாழ்ந்து வருகிறார்கள். பெசண்ட் நகர் பீச்சுக்கும், காஃபி ஷாப்புக்கும் செல்லும் மலையாளக் குடும்பம், பார்ப்பனர்களால் வாடகைக்கு விடப்படும் அபார்ட்மெண்ட் என்ற எலைட் அம்சங்களுக்கிடையில், சென்னையில் மருத்துவர், போக்குவரத்து ஆய்வாளர் முதலான கதாபாத்திரங்களும் மலையாளிகளாகவே சித்தரிக்கப்பட்டிருந்தனர். சேரியில் தங்கும் வேலைக்காரப் பெண்மணி கூட மலையாளம் பேசுகிறார். மேஜர் சுரேஷ் கோபி சண்டையிட்டு, தனது வீரத்தை வெளிப்படுத்துவதற்கும், அடி வாங்குவதற்கும், சென்னை பறக்கும் ரயில் பாலங்களின் ஓரத்தில் வாழும் சேரி மக்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
சுரேஷ் கோபியின் கதாபாத்திரம், தன்னால் முடியும் போதெல்லாம் தன்னைப் பெருமையாகப் ‘பட்டாளக்காரன்’ என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறது. ‘மனிதர்களைக் கொல்லும் அதிகாரம் கடவுளிடம் மட்டுமே இருக்கிறது; அதனால் ஒரு ராணுவ வீரன் என்பவன் கடவுளுக்கு ஒப்பானவன்’ என்று சொல்கிறார் சுரேஷ் கோபி. முதல் காட்சியில், ஆம்புலன்ஸில் இருந்து இறக்கி வைக்கப்படும் அந்தக் கதாபாத்திரம், இறுதிக் காட்சியில் ராணுவத்தில் பெற்ற பதக்கங்களுடன் அடுத்த தலைமுறைக்கு அட்வைஸ் தருகிறது. தன்னை இந்திய ராணுவத்தின் பெருமைமிகு வீரனாக அடையாளப்படுத்தும் சுரேஷ் கோபி கதாபாத்திரம், தனது செல்ல நாய்க்கு வைக்கும் பெயர் – ’பிரபாகரன்’.
சென்னையைக் கதைக்களமாகவும், தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளையும் பேசும் கதாபாத்திரங்களாகவும் கொண்டுள்ள இந்தப் படத்தில் இப்படியான பெயர்சூட்டல் நிச்சயமாக வன்மமாகவே பார்க்கப்படும். மேலும், சுரேஷ் கோபி இதற்கு முன், விடுதலைப் புலிகள் குறித்த கதைகளில் நடித்தவர். இதில் இருந்துதான் இதனை அணுக முடியும்.
துல்கர் சல்மான் வெளியிட்ட ட்வீட்
துல்கர் சல்மான் மன்னிப்பு கோரியபோது, ‘பிரபாகரா’ என்பது ‘பட்டணப் பிரவேஷம்’ என்ற 1988ஆம் ஆண்டுத் திரைப்படத்தில் வரும் பிரபலமான வசனம் என்று குறிப்பிட்டிருந்தார். எனினும், 1988ஆம் ஆண்டு, இந்தியாவின் அமைதிப்படைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலம். ‘பட்டணப் பிரவேஷம்’ படத்தின் வில்லனின் பெயர், ‘பிரபாகரன் தம்பி’. இந்தப் பெயரில் இருக்கும் தம்பி என்பது, கேரளாவில் நாயர்களில் ஒரு சாதிப் பிரிவினரைக் குறிக்கிறது.
துல்கர் சல்மான் மன்னிப்புக் கேட்டபோதும், இது ‘வரனே ஆவஷ்யமுண்டு’ படக்குழுவினரின் பொறுப்பின்மையாகவே பார்க்கப்பட வேண்டும். ஒரு காட்சியில் ‘LDF வெல்லும்’ (சி.பி.எம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி) என்றும், மற்றொரு காட்சியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்றும் அரசியலைத் தொட்டுச் செல்லும் பாத்திரங்களை உருவாக்கியவர்கள், தமிழ் மக்களின் உணர்வுகளைக் கணக்கில் கொண்டிருக்க வேண்டும்.
சமீப காலங்களில் திரைப்படங்களில் இடதுசாரி அரசியல் என்பது மக்களை அரசியல்படுத்தும் நோக்கில் இல்லாமல், கைத்தட்டல் பெறுவதற்கான அரசியல் நீக்கப்பட்ட பண்டமாக மாற்றப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன. துல்கர் சல்மான் நடித்த ‘காம்ரேட் இன் அமெரிக்கா’, விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘டியர் காம்ரேட்’, தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான ‘ஜிப்ஸி’ முதலானவை இப்படியான திரைப்படங்கள். இதில், துல்கர் சல்மான் நடித்த ’காம்ரேட் இன் அமெரிக்கா’ படத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பிரபாகரன் படம் வைக்கப்பட்டிருக்கும். தற்போது அவர் நடித்த மற்றொரு படத்தில், பிரபாகரனின் பெயர் இந்திய ராணுவ அதிகாரியின் நாய்க்குச் சூட்டப்பட்டிருக்கும்.
தமிழ் சினிமாவின் பழைய திரைப்படங்களின் பல்வேறு கதாபாத்திரங்கள் இன்றும் மக்களிடம் மதிப்பைப் பெற்றவை. உதாரணமாக, ‘பட்டணப் பிரவேசம்’ வெளியான அதே காலத்தில் வெளியான ‘நாயகன்’ படத்தின் வேலு நாயக்கர். கமல்ஹாசனின் ‘நாலு பேருக்கு நல்லதுன்னா..’ வசனத்தைக் கைத்தட்டலுக்காகத் தற்போதைய திரைப்படங்கள் பயன்படுத்துவதைப் போல, ‘பிரபாகரா’ என்று நாய்க்குப் பெயர்சூட்டியிருக்கிறது இந்தப் படம். மலையாள இணைய உலகின் பிரபலமான மீம் வசனம் அது என்றும் கூறியிருக்கிறார் துல்கர் சல்மான். தமிழ்நாட்டில் நடைபெறும் கதை என்பதால், பொறுப்புணர்வு அதிகம் இருந்திருக்க வேண்டும்.
வரனே ஆவஷ்யமுண்டு
அதே வேளையில், துல்கர் சல்மான் மீது பொழியப்பட்ட வசவுகள் பி.ஜே.பியின் மாநிலங்களவை எம்.பியான சுரேஷ் கோபியின் பக்கம் திரும்பவில்லை. மேலும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதியில் கேரளாவுக்குட்பட்ட வனப்பகுதிகளில் 4 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த என்கவுண்டர் இருதரப்பு மோதலாக கேரள அரசால் அறிவிக்கப்பட்டபோதும், அது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதாக கேரளாவின் ஆளும் கூட்டணியில் அங்கம்பெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியே குற்றம் சாட்டியது. சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரும் தமிழர்கள். கொல்லப்பட்டவர்களுள் ஒருவரான தோழர் மணிவாசகத்திற்கு இறுதி அஞ்சலி நிகழ்வை முன்னின்று நடத்தியதற்காகத் தமிழகக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறது மணிவாசகத்தின் தங்கையின் குடும்பம்.
மனித உரிமைகள் மறுக்கப்பட்டு கொல்லப்பட்ட தமிழர்களுக்காகவும், கைதுசெய்யப்பட்ட தமிழர்களுக்காகவும் குரல்கொடுக்க முன்வராத தமிழ் ட்ரோல்களால் துல்கர் சல்மான் மீது எதிர்வினையாற்ற முடிந்தது. அவரை அடிபணிய வைக்க முடிந்தது.
திரைப் படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரம் என்பது பொறுப்புணர்வோடு அமையப் பெற வேண்டும்; அதே வேளையில், இணைய ட்ரோல்களின் செலக்டிவ் எதிர்வினையையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.
மற்ற எல்லா துறைகளைப் போலவும் ஊடகத்துறையும் கொரோனா விளைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அச்சு ஊடகம் ஏற்கெனவே தள்ளாட்டத்தில் இருந்தது. இப்போது அந்த வீழ்ச்சி ஒரு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.
காட்சி ஊடகங்களைப் பொருத்தவரை டி.வி. பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், விளம்பர வருமானம் இல்லை. அதேபோலதான், டிஜிட்டல் மீடியாவிலும் பார்வையாளர் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் விளம்பர வருவாய் இல்லை. இந்த நிலைமையில், இந்தியாவில் புகழ்பெற்ற பல ஊடகங்கள் ஊதியவெட்டு, ஆட்குறைப்பு என்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய வெட்டின்படி, ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு சிக்கலில்லை. 5 முதல் 7.5 லட்சம் ஆண்டு சம்பளம் வாங்குவோருக்கு 10% சம்பள வெட்டு. 10 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 15% சம்பள வெட்டு. 20 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 20% சம்பள வெட்டு… என்று போகிறது.
’’தற்போதைய நிலைமையில் நாள் ஒன்றுக்கு 3.5 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக’’ குறிப்பிடும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு, ஆண்டு ஊதியம் 6 லட்சம் வரை வாங்குவோருக்கு சம்பள வெட்டு செய்யவில்லை. அதைவிட அதிக ஊதியம் வாங்குவோருக்கு 5% முதல் 15% சதவிகிதம் வரை ஊதியவெட்டை அறிவித்துள்ளது. News Nation Network நிறுவனம், தனது இங்கிலிஷ் டிஜிட்டல் டீம் 15 பேரை மொத்தமாக வேலையை விட்டு அனுப்பி, அந்த பிரிவையே கலைத்துவிட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் போலவோ, ஹிந்துஸ்தான் டைம்ஸ் போலவோ இவர்கள் அதிக ஊதியம் பெற்றவர்கள் அல்ல. பெரும்பாலும் 25 ஆயிரம், 30 ஆயிரம் சம்பளம் வாங்கியவர்கள். அந்த வேலையும் போய்விட்டது.
புகழ்பெற்ற டிஜிட்டல் செய்தி ஊடகங்களில் ஒன்றான The Quint, தனது 45 ஊழியர்களை காலவரையற்ற; ஊதியமற்ற கட்டாய விடுப்பில் அனுப்பியிருக்கிறது. இவர்களுக்கு ஒரு மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. நிலைமை சரியான பிறகு மீண்டும் வேலை வழங்கப்படலாம். அது அப்போதைய சூழலை பொருந்தது. இப்போதைக்கு வேலை இல்லை.
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின், ஞாயிறு இணைப்புகளில் ஒன்றான The Life பிரிவில் பணிபுரிந்த 3 ஊழியர்கள் வேலையை விட்டு அனுப்பப்பட்டுள்ளனர். தி இந்து குழுமத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய வெட்டின்படி, ஆண்டு ஒன்றுக்கு 10 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 8%, 15 லட்சம் வரை சம்பளம் வாங்குவோருக்கு 12%, 25 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 16%, 35 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 20%, 35 லட்சத்துக்கும் அதிகமாக சம்பளம் வாங்குவோருக்கு 25% என்ற ஊதிய வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஊடகங்களின் நிலைமை தெரியவில்லை. நிச்சயம் அங்கும் இத்தகைய கெட்டசெய்திகளை எதிர்பார்க்கலாம்.
கோவையில் சிம்ப்ளிசிட்டி என்ற டிஜிட்டல் ஊடகத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டிருப்பதை ’மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம்’ கண்டித்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: கோவையிலிருந்து செயல்படும் சிம்ப்ளிசிட்டி என்ற டிஜிட்டல் ஊடகத்தின் உரிமையாளர் சாம் ராஜா பாண்டியன் என்பவரை கோவை ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாநகராட்சியைச் சேர்ந்த துணை ஆணையர் சுந்தரராஜன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிம்ப்ளிசிட்டி டிஜிட்டல் ஊடகத்தில், கோவை அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் முதுநிலை மாணவர்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கப்படுவதில்லை என்று வெளியான செய்தியையும், மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை, ரேஷன்கடை ஊழியர்கள் திருடுவதாக வெளியான செய்தியையும் தனது புகாரில் சுட்டிக்காட்டியுள்ள சுந்தரராஜன், இந்த இரண்டு செய்திகளும் அரசு ஊழியர்களை அரசுக்கு எதிராகப் போராடுவதற்குத் தூண்டும் வகையில் இருப்பதாக கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, நேற்று (23.04.2020) காலை, சிம்ப்ளிசிட்டி டிஜிட்டல் ஊடகத்தின் செய்தியாளர் ஜெரால்ட் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலஜியை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் அவர்களை பெரும் குற்றம் செய்த குற்றவாளிகள் போல், யாரையும் சந்திக்கவிடாமல் பல மணிநேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து காவல்நிலையத்திற்குச் சென்ற கோவை பத்திரிகையாளர்களிடம் கூட அவர்கள் எதற்காக விசாரணைக்காக அழைக்கப்பட்டார்கள் என்ற காரணத்தை காவல்துறையினர் கூற மறுத்துள்ளனர். இறுதியாக, இரவு 7 மணியளவில், ஜெரால்ட் மற்றும் பாலாஜியை விடுவித்துள்ள காவல்துறையினர், சிம்ப்ளிசிட்டி ஊடகத்தின் உரிமையாளர் சாம் ராஜா பாண்டியனைக் கைது செய்துள்ளனர். அவர் மீது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (IPC 188) மற்றும் பொதுமக்களை அரசுக்கு எதிராகத் தூண்டிவிடுதல் (IPC 505(1)(b)) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தலுக்கிடையில் பணியாற்றும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் அர்ப்பணிப்பிற்கு இணையானது பத்திரிகையாளர்களின் பணி. ஏனென்றால், மக்களுக்குச் சேவை செய்வதற்காக பணியாற்றும் இந்தத் துறையினரின் செயல்பாடு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் சென்று சேர்ப்பது பத்திரிகைத்துறை. அதேபோல், அவர்களில் யாரேனும் தவறு செய்தால் அதைச் சுட்டிக்காட்டும் மிகப்பெரிய பொறுப்பு பத்திரிகைத்துறைக்கு உள்ளது. அதனால்தான் பத்திரிகைத்துறையை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கிறோம். ஒரு பெருந்தொற்று மக்களின் அன்றாட வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ள இந்த நேரத்தில், பத்திரிகைத்துறை மிகவும் விழிப்புடன் செயல்பட்டால்தான், மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவைகள் முழுமையாக அவர்களைச் சென்றடைவது உறுதி செய்யப்படும். அதேநேரம், மக்கள் பணியில் ஈடுபட்டுவரும் அரசு ஊழியர்களுக்கு, அரசு தரவேண்டிய அடிப்படையான விஷயங்கள் அவர்களுக்குக் கிடைக்காதபட்சத்தில் அதையும் அரசுக்குச் சுட்டிக்காட்டும் பொறுப்பு பத்திரிகைகளையே சாரும்.
இதன் அடிப்படையிலேயே, மருத்துவ மாணவர்களுக்கு ஏற்பட்ட வசதி குறைபாட்டைச் சுட்டிக்காட்டி சிம்ப்ளிசிட்டி செய்தி வெளியிட்டுள்ளது. தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்று மருத்துவ மாணவர்கள் சங்கம், கோவை மருத்துவ கல்லூரியின் தலைவருக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையிலேயே இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், மக்களுக்கு சென்று சேரவேண்டிய ரேஷன் பொருட்கள் திருடுபோவதையும் சுட்டிக்காட்டி சிம்ப்ளிசிட்டி டிஜிட்டல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆகவே, இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்தின்படி, தனது பணியைச் செய்த பத்திரிகையாளரைக் கைது செய்துள்ளது, அரசியல்சாசனத்தை மாதிக்காத செயலாகும். இது ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் மறைமுகமாக மிரட்டும் செயலாகும். அடிப்படையில் இது அப்பட்டமான கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறையாகும்.
ஆகவே, சாம் ராஜா பாண்டியன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை திரும்பபெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது. சாம் ராஜா பாண்டியன் மீது மாநகராட்சி துணை ஆணையர் சுந்தரராஜன் கொடுத்துள்ள புகாரில் உள்நோக்கம் இருப்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. ஆகவே, அவரை விசாரித்து உண்மையை அறிய அரசு தரப்பில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். விசாரணை என்ற பெயரிலும், கைது நடவடிக்கையாலும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள சாம் ராஜா பாண்டியன், ஜெரால்ட், பாலாஜி ஆகியோருக்கு அரசு தரப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.